070 திருசாளக்ராமம்-Mukthinath

ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார் ஸமேத ஸ்ரீ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி !!

திவ்யதேசம் திருசாளக்ராமம் முக்திநாத் முக்தி நாராயண க்ஷேத்திரம்
மூலவர் ஸ்ரீ மூர்த்தி
உத்ஸவர்
தாயார் ஸ்ரீ தேவி நாச்சியார்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசை வடக்கே திருமுகமண்டலம்
பாசுரங்கள்12
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
பெரியாழ்வார் 2
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம். நேபாளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முக்திநாத் க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதிக உயரம் மற்றும் வானிலை காரணமாக, இங்கு செல்வது மிகவும் கடினமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது.  எனவே இந்த திவ்ய தேசத்தை வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்.

Google Map

திருசாளக்ராமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திவ்யதேசம் பற்றி

முக்திநாத் (Muktinath), நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த புனித தலமாகும். கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டு அல்லது சீதாமரி சென்று அங்கு இருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது தரை வழியாக ஜாம்சம் அடைந்து, பின்னர் ஜீப் மூலம் முக்திநாத் சென்று அதன் பிறகு சுமார் அரை மைல் தூரம் மலையில் ஏறி முக்திநாதரை  தரிசிக்கலாம். பொக்காராவில் இருந்து விமானத்தில் 20 நிமிடம் அல்லது தரைவழியாக செல்ல 9 முதல் 10 மணி நேரம் வரையில் ஆகும். சுமார் 160 கிலோமீட்டர் தூரம் மலை பிரதேசத்தில், கடினமான சாலைகளில் பயணிக்க வேண்டும். ஜாம்சம் என்ற இடத்தில இருந்து முக்திநாத் சுமார் 1 மணி நேர பயணம்.

காத்மாண்டு போகரா 201 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழிசாலை பயணம் 6 மணி நேரம், வான்வழி 30 நிமிடம்
சீதாமரி ( பீகார் இந்தியா)போகரா 358 கிலோமீட்டர் சாலை சுமார் 8 மணி நேரம்
போகரா ஜோம்சம் 160 கிலோமீட்டர் சாலை அல்லது வான்வழி (வானிலையை பொறுத்து) வான்வழி 20 நிமிடம், சாலை 8 முதல் 10 மணி நேரம் வரை
ஜோம்சம் முக்திநாத் 25 கிலோமீட்டர் சாலை 1 மணி நேரம்
முக்திநாத் முக்திநாத் கோவில் 2 கிலோமீட்டர் சாலை நடை பயணம் 30 நிமிடம்

இந்த திருத்தலம், நேபாளத்தில் ஓடும் கண்டகி நதி பகுதியில் உள்ளது. அதாவது கண்டகி நதி முழுவதுமே சாளக்கிராமப் பகுதியாகும். கண்டகி ஆறு, 8000 மீட்டருக்கும் அதிக உயரத்தில் உள்ள அன்னபூர்ணா, தவுளகிரி மலை சிகரங்களிலில் இருந்து உற்பத்தி ஆகிறது. நேபாளத்தின் தலைநகரான காட்மண்டு நகரிலிருந்து சுமார் 375 கிலோமீட்டர் தூரத்தில் கண்டகி நதிக்கரையில் முக்திநாத் எனப்படும் இந்த திவ்யதேசம் அமைந்து உள்ளது. இங்கிருந்து 15 மைல் தூரத்தில் முக்தி நாராயண க்ஷேத்திரம் என்று ஒரு இடம் உள்ளது. இந்த முக்தி நாராயண க்ஷேத்திரத்தை சாளக்கிராமம் என்று சொல்வாரும் உண்டு. இமயத்தின் அடிவாரத்தில் ஹரிபர்வதம் என்ற மலை உள்ளது. இங்கு சக்ரதீர்த்தம் என்னும் பகுதியில் கண்டகி நதி உற்பத்தி ஆகின்றது. இந்தப் பகுதி தான் சாளக்கிராமம் என்று அழைக்க படுகிறது. நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து சுமார் 65 மைல் தூரத்தில் தாமோதர குண்டம் என்னும் ஓர் இடம் உள்ளது. அதுவும் சாளக்கிராமம் என்ற ஓர் கருத்துண்டு. இதுவும் கண்டகி நதிக் கரையில் தான் அமைந்துள்ளது.

இரண்டு சிறு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு சக்கரம், கதை என்ற ஆயுதங்களுடன் எம்பெருமானும், ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியருடன் தரிசனம் தருகிறார். பல ரிஷிகளும், முனிவர்களும், ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் பற்பல எடுத்தாலும் தரிசனம் கிடைப்பதற்கு அறிய எம்பெருமானான நாராயணன், தம்மைத் தரிசிப்பவர்களுக்கு முக்தி அளிப்பதால், அவருக்கு ‘முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் தரிசித்து, நாமே வஸ்திரம், பூ மாலை போன்றவற்றை அணிவித்து பூஜை செய்யலாம். கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் (108 பசுமாட்டின் தலை கொண்ட சிலை) கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது, 108 திவ்யதேசங்களில், 106 திவ்யதேசங்கள் தான் இந்த பூவுலகில் உள்ளன, இருந்தாலும், திருப்பாற்கடல் மற்றும் பரமபத திவ்யதேச தீர்த்தங்களும் இங்கு கோமுக தீர்த்தத்தில் உள்ளன என்பது ஆகும். இந்த கோமுக தீர்த்தங்களிலும் நீராடலாம்.

108 வைணவ திவ்ய தேசங்களில், பரமபதம், திருப்பாற்கடல் நீங்கலாக, பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு திவ்யதேசம் தான்.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சாளக்ராமங்கள்

இந்த ஹரி க்ஷேத்திரத்தில் விஷ்ணுவின் சகல அம்சங்களோடு பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த திருத்தலத்தில் உள்ள மூர்த்தியும் சாளக்கிராம வடிவத்தினர்தான். சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒரு வகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகளில் எம்பெருமான் மிகவும் உகந்து தானாகவே இங்கு வந்து வசிக்கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. இவைகள் பல வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன. தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ர கீடம் என்ற பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராமத்தைக் குடைந்து பலவிதமான சுருள் ரேகையுடன் பலவித ரூபங்களில் தனது அவதாரங்களை, பல மூர்த்திகளை, பல வடிவங்களில் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. விஷ்ணுவின் பற்பல நாமங்களிலும், அவதார மூர்த்திகளாகவும் 68 வகை சாளக்ராமங்கள் உள்ளன என்று சொல்வர்.

இந்த சாளக்ராமங்கள் நாம் சேவிப்பதற்கு உகந்தவை ஆதலால், விஷ்ணு கோவில்களிலும், வீடுகளிலும் இவை வணங்கப்படுகின்றன. இவைகளில் ஸ்ரீமந் நாராயணன் இருப்பதாக ஐதீஹம். இந்நிகழ்ச்சி (சாளக்கிராம உற்பத்தி) தொடர்ந்து தினமும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் ஐதீஹம். சில சாளக்ராமங்கள் தங்க அல்லது வெள்ளி ரேகைகளுடன் கிடைக்கும்; அவை மிக உயர்ந்த பலன்களை அளிக்கவல்லது.

சாளக்ராமங்கள் பல நிறங்களில் கிடைக்கின்றன. அவைகளை,

  • வெண்மை நிற சாளக்கிராம வாசுதேவ க்ஷேத்திரம்
  • கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு க்ஷேத்திரம்
  • பச்சை நிற சாளக்கிராமம் ஸ்ரீநாராயண க்ஷேத்திரம்
  • மஞ்சள் சற்று மஞ்சள்-சிகப்பு நிற சாளக்கிராமம் ஸ்ரீநரசிம்ம க்ஷேத்திரம்
  • மஞ்சள் நிற சாளக்கிராமம் வாமன க்ஷேத்திரம்
  • கருநீல நிறசாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ண க்ஷேத்திரம்

இன்றும் சில திவ்யதேச பெருமான்கள் சாளக்ராமங்களால் உருவானவர் என்று சொல்லப்படுகிறது. திருவரங்கம், திருவனந்தபுரம் திவ்யதேச பெருமான்கள் பல்லாயிர கணக்கான சாளக்ராமங்களால் உருவானவை என்றும் முக்திநாத் என்ற இந்த திவ்யதேச எம்பெருமான் ஒரே சாளக்ராமத்தால் உருவானவன் என்றும் சொல்லப்படுகிறது.

விற்பனை செய்யும்  சாளக்கிராமம் வாங்குவதற்கு, சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வர்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள், ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது ஆலோசனையின் பேரில் வாங்குதல் சிறப்பு. சாளக்ராமம் குளம்படி உள்ளதாகவும், கருமை நிறத்துடனும், குளிர்ச்சி உள்ளதாகவும் வாங்க வேண்டும். பூஜை செய்யப்பட்ட சாளக்கிராமங்களை சாஸ்திர ஞானம் பெற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி. பொதுவாக ஆண்கள் மட்டுமே சாளக்ராமத்தை தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று நம் நூல்கள் உபதேசிக்கின்றன. அதே போல், இனிமேல் நம்மால் சரிவர பூஜை செய்ய இயலாது என்ற நிலை வரும் போது, அவைகளை பூஜை செய்ய முடிந்த மற்றவர்களுக்கோ, சரியாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கோ கொடுப்பது நலம் என்று மாத்வாச்சார்யாரும் இன்னும் சில ஆச்சார்யர்களும் செய்ததாக சரித்திரம் சொல்கிறது.

சாளக்கிராமங்கள் அறிவியல் நோக்கில் அம்மோனைட் (AMMONITES) என்ற வகையைச் சார்ந்த கற்படிவம் ஆகும்.

சாளக்ராம பூஜா பலன்கள்

இதே போல், இந்த சாளக்ராமங்கள் நிறத்திற்கு ஏற்ப பூஜைகளும், பலன்களும் வேறுபடும் என்றும் சொல்வார்கள்; நீலநிறம், செல்வத்தையும், சுகத்தையும் கொடுப்பதாகவும், பச்சை பலம், தைரியம் கொடுப்பதாகவும், வெண்மை, ஞானம், பக்தி, மோட்சம் கொடுப்பதாகவும், கருப்பு, புகழ், பெருமை கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்.

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பதாகவும், சாளக்ராமங்கள், துண்டிக்கப் பட்டிருந்தாலும் அல்லது விரிந்து போனதாய் இருந்தாலும் உடைந்திருந்தாலும் எரிந்து இருந்தாலும், தோஷம் இல்லை என்றும், அவற்றில் சக்கர ரேகைகள் இருந்தால் அது மிகவும் சிறப்பம்சமாகும் என்றும் சொல்வார்கள்.

சாளக்ராமங்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு / ஆராதித்து, புனிதமான பொக்கிஷமாக குடும்பங்களில் பாதுகாக்கப்படுகிறது. பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்கும்போது, இதுவும் ஒரு அரிய சீதனமாக தருவதும் உண்டு.

சாளக்ராமங்களை பூஜை செய்யும் போது புருஷ சூக்தம் கொண்டு பூஜிப்பார்கள்; வீட்டில் சாளக்ராமம் இருந்தாலே புனிதமானது. சாளக்ராமம் உள்ள வீடு வைகுந்தத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. சாளக்ராம தத்துவ முக்தாவளி, சாளக்ராம திருமஞ்சன தீர்த்தம், கங்கை நதி தீர்த்தத்தை விட புனிதமானது என்று கூறுகிறது.

சாளக்ராம துவாரங்களில் எல்லா பித்ருக்களும் வசிக்கிறார்கள் என்றும், சாளக்ராம பூஜையினால் அவர்கள் மனம் உகக்கிறார்கள் என்றும், அதனால் ஒருவருக்குள்ள பித்ருக்கள் சாபமும், தோஷமும் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல், ஸ்ரார்த்த காலங்களில் அவை பிதுர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க வல்லது.

தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) மற்றும் பூஜை செய்து, சாளக்ராமத்திற்கு நிவேதனம் கொடுத்து வந்தால், அதுவே மோக்ஷம் என்ற வைகுண்ட வாசம் கொடுக்க வல்லது. மரண காலத்தில் சுய நினைவோடு சாளக்ராமத்தை மனத்தால் நினைத்தால், எல்லா பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார் என்றும் சொல்வர். ஸ்ரீதேவி பாகவதமும் ஸ்ரீ நரசிம்ம புராணமும் சாளக்ராம வழிபாட்டினை புகழ்கின்றன; சாளக்ராமங்களை, துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பு என்கிறது. துவாரகா சிலா என்பது, துவாரகையில், கோமதிநதி கடலில் கலக்கும் இடத்தில கிடைக்கும் சாளக்ராமத்திற்கு நிகரான புண்ணிய கற்களாகும்.

எந்த இல்லத்தில் சாளக்ராமங்கள் உள்ளதோ, அங்கு, பேய், பூதங்கள் நடமாடாது, அது ஒரு தபோவனம். தினமும் சாளக்ராமத்தை பூஜிப்பவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது. சாளக்ராம தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷம் உட்பட, எல்லா பாவங்களில் இருந்தும் போக்க வல்லது. சாளக்ராம பூஜை செய்பவனின் இல்லத்தை சுற்றி அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் நிற்கும். அந்த இல்லம் காசியை விட உயர்ந்தது, அந்த இல்லத்தில் செய்யும் தானம் காசியில் செய்யும் தானத்தை விட 100 மடங்கு உயர்ந்தது. தினசரி சாளக்ராம ஆராதனையானது, பற்பல உயர்ந்த யாகங்கள் செய்த பலனையும், கோ தானங்களையும் செய்த புண்ணியம் கிடைக்கும். எம பயம் வராது, இருந்தால் விலகிவிடும்.

சாளக்ராம பூஜை செய்பவன், விஷ்ணுவாகவே ஆகிவிடுகிறான், விஷ்ணு லோகத்தில் நிரந்தரமாக வாழ்வான். 12 சாளக்ராமங்கள் ஒரு இல்லத்தில் இருந்தால், அது ஒரு திவ்ய தேசமாக கருதப்படும். 12 சாளக்ராமங்களை ஆராதனை செய்பவனுக்கு கிடைக்கும் பலன் ஆனது, 12 கோடி சிவலிங்கங்களை 12 கல்ப காலம் பூஜை செய்த பலனுக்கு நிகர் ஆகும். சாளக்ராமத்திற்கு நிகரானது, இவ்வுலகத்திலும் பாதாளத்திலும் ஸ்வர்கத்திலும் எதுவும் இல்லை. விக்கிரக பூஜையை விட, சாளக்ராம பூஜையே உயர்ந்தது என்றும், பரிபூரணமான பலன்களை கொடுக்க வல்லது என்றும் சொல்லப்படுகிறது.

முன்காலங்களில், சாட்சி சொல்லும் போது, ‘ சாளக்ராமம் சாட்சியாக‘ என்று சாளக்கிராமத்தை கையில் வைத்து கொண்டு சாட்சி சொல்வது வழக்கம். சாளக்ராம சந்நிதியில் ஒரு புழு இறந்தால் கூட அது மோக்ஷத்தை அடையும்.

ஸ்தல வரலாறு

வடநாட்டில் உள்ள முக்கிய நதிகள் எல்லாம் விஷ்ணு சம்மந்தம் பெற்றிருப்பதைக் கண்ட கண்டகி நதியானவள் மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்து மஹாவிஷ்ணு தன்னிலும் அவதாரம் செய்ய வேண்டுமென தவமிருக்க அதை ஏற்று எம்பெருமான் இந்த நதியில் நித்ய அவதாரம் செய்கிறார் என்று தினம் தினம் சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து கண்டக நதிக்கு சிறப்பளிக்கிறார்.

ப்ரம்மனது வியர்வையில் தோன்றியவள், கண்டகி. அவள் கடுந்தவம் புரிந்ததை கண்ட தேவர்கள் அவளுக்கு வரம் அளிக்க வந்தபோது, அவள் அவர்களை அவளுக்கு பிள்ளைகளாகும்படி வேண்டினாள்; அது முடியாது என்றதனால், அவள் அவர்களை புழுக்களாக மாறும்படி சாபம் இட்டாள். கோபம் அடைந்த தேவர்கள், அவளை ஒரு ஜடமாக சபித்தனர். இதனால், பிரம்மன், ருத்ரன், இந்திரன் ஆகியோர் விஷ்ணுவை அணுகினார்கள். விஷ்ணு இரண்டு சாபங்களையும் நீக்க முடியாது என்றும், தான் சாளக்ராம க்ஷேத்திரத்தில் சக்ரதீர்த்தத்தில் வாசம் செய்வதாகவும், அங்கு தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக தோன்றி, அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழ வேண்டியது என்றும் கண்டகி நதி வடிவமாக அந்த கற்களில் பாய்ந்து வருவாள் என்றும் சொன்னார். இதனால் கண்டகியின் ஆசையும் நிறைவேறும், தேவர்களும் அப்படியே, தேவா அம்சமும் விஷ்ணு அம்சமும் பொருந்திய சாளக்ராமங்கள் ஆவார்கள் என்றும், எம்பெருமான் திருவுள்ளபடி அவைகளை வழிபட்டவர்களும் எம்பெருமானுடன் நித்யவாஸம் செய்யும் வைகுண்ட பிராப்தி அடைவார்கள் என்றும் கூறி மறைந்தார்.

கஜேந்திர மோக்ஷம் நடந்த இடமாகவும் இதனை சொல்வர். பிரம்மன் முதலானவர்கள் எம்பெருமானை அணுகியபோது, அப்போது அவர், முதலை ஒன்றும், யானை ஒன்றும் இங்கு மோக்ஷம் அடைய போகின்றன என்றும், அவை இறந்தபின், அந்த உடல்களில் தேவர்கள் வஜ்ரகீடம் என்ற பூச்சிகளாக வாழவேண்டும் என்றும் அறிவித்தார். கஜேந்திர மோக்ஷ சரித்திரத்தின்போது, எம்பெருமான் முதலையின் வாயினை சக்கரம் கொண்டு அறுத்து மோக்ஷம் அடைவித்ததினால், அந்த நதியில் உள்ள எல்லா கற்களும் விஷணுவின் சக்ர சின்னம் கிடைக்கப்பெற்று துவாரகாசிலா என்ற பெயரும் பெற்றது. இந்த பிரதேசம் ஹரி க்ஷேத்திரம் என்றும் இங்குள்ள சாள மரங்கள் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு கற்களாக மாறி, சாளக்ராமங்கள் ஆயின என்று சொல்வர்.

கண்டகி நதியில் ஸ்நானம் செய்து முக்திநாதனை பக்தியுடன் வழிபடுபவர்கள், இந்த பூமியில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுந்தத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுகிறார்.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மொத்தம் 12 பாசுரங்களில்
மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை
கண்ணனாக தலைக் கட்டுகிறார். திருமங்கையாழ்வார் ராமனாக காண்கிறார். ஸ்ரீ இராமானுஜர் இங்கு எழுந்தருளியுள்ளார்.

பாசுரம் விளக்கம்
பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல்வளையாள் என் மகள் இருப்ப மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன், சாளக்கிராம உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனைக் கூவாய். (பெரியாழ்வார் திருமொழி, 2.9.5)கண்ணபிரான் தன் தாய் வியக்கும்படி சில செய்கைகளைச் செய்து அவற்றால் அவளை மகிழ்வித்து, மீண்டும் முன்பு போல் பிறர் வீடுகளில் புகுந்து, பால் வெண்ணை முதலியவற்றை எடுத்து குறும்புகள் செய்ய, மேற்கு பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த ஒரு ஆயர் குலத்து பெண், யசோதை அருகிலே வந்து, தன் வீட்டில் கண்ணன் செய்த குறும்புகளைச் சொல்லி முறை இடுகின்றாள்; இங்கு ஆழ்வார் கண்ணனை குறிப்பிடும் போது, சாளக்ராமத்தில் நித்யவாஸம் செய்பவன் என்கிறார். இங்கு ஆழ்வார் சொல்லும் கண்ணனின் குறும்பு, ஆயர் குலத்துப் பெண் வீட்டில், அவள் பாத்திரத்தில் பாலை எடுத்து, அடுப்பின் மேல் வைத்து, பக்கத்து வீட்டிற்கு சென்று நெருப்பு வாங்கி வருவதற்குள், கண்ணன் பாலை குடித்து, பாத்திரத்தை உருட்டி விட்டு சென்று விட்டான் என்பதாம்.
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென் னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9)தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.
திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி 1.5ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்திலே தான் எழுந்தருளியதை, எம்பெருமான் ஆழ்வாரது ஞானக் கண்ணுக்குத் தோற்றுவிக்க, ஆழ்வாரும், இத்திருமொழியில், தமது திருவுள்ளத்தை அழைத்து ‘நெஞ்சே! சாளக்கிராமத்தைச் சென்று சேருவோம், வா’ என்கிறார்.
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய், சிலையும் கணையும் துணையாகச்  சென்றான் வென்றிச் செறுக்களத்து, மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன், தலை பத்தறுத்து உகந்தான் சாளக்கிராமமடைநெஞ்சே. (1)தன்னுடைய அடியவர்களின் விரோதிகளை அழிப்பதற்காக, எம்பெருமான், பலபல மிருகங்கள் நிறைந்து கிடந்த கொடிய காட்டைக் கடந்து, மலைகளைக்கொண்டு கடலிலே பாலம் கட்டி, கடலைக் கடந்து, இலங்கை வந்து, யுத்த பூமியில், வில்லையும் அம்புகளையும் துணையாகக் கொண்டு இராவணனது தலைகள் பத்தையும் அறுத்து உகந்த இராமபிரானுடைய ஸ்ரீஸாளக்ராமம் என்னும் திவ்யதேசத்தை அடைந்திடு என்று தன்னுடைய நெஞ்சிற்கு சொல்கிறார்.
கடம் சூழ்க் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும், உடன் சூழ்ந்தெழுந்த கடி இலங்கை பொடிய வடிவாய்ச்சரம் துரந்தான், இடம் சூழ்ந்தெங்கும், இரு விசும்பில்  இமையோர் வணங்க மணம் கமழும், தடம் சூழ்ந்தெங்கும் அழகாய சாளக்கிராமமடை நெஞ்சே. (2)விசாலமான மேலுலகத்தில் உள்ள தேவர்கள் பூமியெங்கும் வந்து பரவி ஆச்சர்யத்தக்க புஷ்ப வாஸனைகள் வீசுகின்ற நீர்நிலைகளால் சூழப்பட்டு எல்லாப் பக்கங்களிலும் அழகை உடைய சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று இங்கும் ஆழ்வார் தன் நெஞ்சினை அழைக்கிறார். அந்த சாளக்ராமம், மத ஜலம் வழிகின்ற, மலைகள் வடிவெடுத்து நடந்தது போல் உள்ள யானை கூட்டங்களும், குதிரை கூட்டங்களும், மிகுந்த சப்தத்தை உண்டாக்கும் பெரிய தேர்களும் காலாட்களும் ஆகிய இவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பெரிய கிளர்ச்சியோடு தோன்றின இலங்கை, சுடுகாடு ஆகும்படி கூர்மையான அம்புகளை உபயோகித்த சக்ரவர்த்தி திருமகன் எழுந்தருளி இருக்கும் இடம் ஆகும்.
உலவுதிரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும் * நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான், வென்றி விறல் ஆழி வலவன் * வானோர் தம் பெருமான், மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன் * சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடைநெஞ்சே! (3)உலாவுகின்ற அலைகளையுடைய கடலும், மலைகளும், காலம் முதலாக எல்லா பொருட்களும், எட்டுத்திசைகளும், சந்திரனும் ஸூர்யனும், இருட்டும் ஆகிய இப்பொருள்கள் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனும், வெற்றியையும், மிடுக்கையும் திருவாழியை வலத் திருக்கையிலே உடையவனும், தேவாதி தேவனும் தன்னுடைய அடியவர்களை எதிர்க்கும் ராக்ஷஸர்கள் விஷயத்தில் எப்போதும் நன்மை செய்யாதவனுமாகிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம், நீர் நிலங்களால் சூழப்பட்டு அழகு பொருந்தி சாளக்கிராமம் ஆகும் அதை அடை நெஞ்சே! என்று ஆழ்வார் சொல்கிறார். “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம” என்று வேதம் சொல்வது போல், எம்பெருமான் ஜகத்ஸ்வரூபி என்பதை சொல்லும் பாடல். பகவத் பாகவத விஷயம் என்றால் பொறுக்கமாட்டாத ராக்ஷசர்களுக்கு எப்போதும் தீங்கு செய்பவன் என்றும் ஆழ்வார் சொல்கிறார்.
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய, தேரா அரக்கர்த் தேர் வெள்ளம் செற்றான்  வற்றா வரு புனல் சூழ் பேரான், பேர் ஆயிரம் உடையான்  பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான், தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. (4) திருஊரகம் என்ற திவ்யதேசத்தை இருப்பிடமாகவுடையவனும், திருக்குடைந்தையிலே எழுந்தருளியிருக்கிற புருஷோத்தமனும், ஸ்ரீராமாவதாரத்தில், வில்லினுடைய இரண்டு நுனிகளையும் வளைத்து, ‘பரமபுருஷனான பெருமானோடு நாமோ எதிரிடுவது’ என்று விவேகம் இல்லாமல் அறிவு கெட்டு போரிட்ட அரக்கர்களையும் அவர்களது சேனை படைகளையும் வெற்றி கொண்டவனும், ஒருநாளும் வற்றாமல் மேன்மேலும் பெருகி வருகின்ற காவிரிநீர் சூழ்ந்த திருப்பேர்நகரில் கண் வளர்ந்தது அருள்பவனும், ஆயிரம் ஆயிரம் நாமங்களை யுடையவனும், நெருங்கி இருக்கிற சிறகுகளை உடைய வண்டுகள் ஆரவாரிக்கின்ற திருத்துழாய் மாலையை உடையவனுமான எம்பெருமான், தாரா என்னும் நீர்ப்பறவைகள் நிறைந்திருக்கிற வயல்களாலே சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அதனை அடை நெஞ்சே என்று ஆழ்வார் சொல்கிறார்.
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான், விளங்கு சுடர் ஆழி விண்ணோர்ப் பெருமான் நண்ணார் முன் கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக் காத் தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. (5)
மேல் விழுந்து வந்து ஆரவாரம் செய்தவளான சூர்ப்பணகையின் பிலம் போன்ற பெரிய வாயைத் திறந்து கொண்டு கதறும்படியாக, அவளுடைய மூக்கை, இளையவனைக் கொண்டு, கூர்மையான வாளாலே அறுத்தவனும், பிரகாசிக்கின்ற ஒளியையுடைய சக்கரத்தாழ்வானை திருக்கரங்களில் ஏந்தியவனும், நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், வேகத்துடன் ஆரவாரம் செய்து வந்த  கன மழையை, எதிரிகளான இந்திரன் முதலானவர்களின் கண்ணெதிரில் பசுக்கூட்டங்களை காப்பதற்காக, கோவர்த்தனம் என்கிற ஒரு மலையை ஏந்தித் தடுத்தவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற தடாகங்களால் சூழப்பெற்று அழகாயிருக்கிற ஸாளக்ராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் பாடுகிறார்.
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி உருவிற் குறளாய்ச் சென்று  மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகேழும்  தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (6)தாய் போல் வந்த பூதனையின் உயிரையும், தயிரையும் வெண்ணெயையும் ஒன்று போலவே அமுது செய்தவனும், யாசிப்பதற்குத் தகாதவனான எம்பெருமான், பரிசுத்தமும் மிக அழகிய வடிவத்தை உடைய வாமனனாக வந்து மாவலி சக்ரவர்த்தியிடம் இப்பொழுதே தனக்கு மூன்று அடிநிலம் வேண்டும் என்று யாசித்து, அவன் நீர் வார்த்து கொடுத்தவுடன், எல்லா உலகங்களையும் தாவி அளந்தவனும், காயாம் பூப் போன்ற நிறம் உடையனுமான எம்பெருமான் எழுந்தரு ளியிருக்கிற ஸாளக்கிராமத்தை சென்று அடை நெஞ்சே என்று தன்னுடைய நெஞ்சத்திற்கு உபதேசிக்கிறார்.
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள், அரியாய்ப் பரிய இரணியனை, ஊன் ஆர் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இரு சுடராய், வானாய்த் தீயாய் மாருதமாய், மலையாய், அலை நீர் உலகனைத்தும் தானாய்  தானும் ஆனான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (7) எதிரிகளான அசுரர்கள் பயப்படும்படியாக, நரசிங்கமூர்த்தியாகி, மிக பெருத்த உடலையுடைய ஹிரண்யனை கடுமையான சண்டையில், சதை, எலும்பு, நிறைந்த மார்பு கிழியும்படி செய்த ஒருவனும், இப்படி செய்தவன் தானே, சந்திர, சூரியர்களாய், நெருப்பாய், வானாய், காற்றாய், மலைகளாய் அலையாய் எல்லா உலகங்களுமாய் இருப்பவனும், ஆச்சர்யமான திவ்ய மங்கள விக்கிரகத்தை உடையவனுமான எம்பெருமான் எழுந்தருளி உள்ள சாளக்கிராமத்தை அடை நெஞ்சே என்று ஆழ்வார் உரைக்கிறார்.
வெந்தார் என்பும் சுடுநீறும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர் சந்தார் தலை கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று, என் எந்தாய்! சாபம் தீர் என இலங்க அமுதநீர்த் திருமார்பில் தந்தான், சந்தார்ப் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடைநெஞ்சே! (8)செத்து வெந்துபோன ப்ரேதங்களின் எலும்புகளையும் சுட்ட சாம்பலையும் உடம்பில் பூசிக்கொண்டு, ஓட்டைகள் நிறைந்த ஒரு மண்டையோட்டைக் கையிலே எடுத்துக்கொண்டு எல்லாவுலகங்களிலும் திரிந்தவனான பரமசிவன் எம்பெருமான் அருகே வந்து, தன்னுடைய ப்ரஹ்மஹத்தி சாபத்தை தீர்த்து கொடுக்குமாறு வேண்டியபோது, தனது திருமார்பில் இருக்கின்ற அம்ருத ஜலத்தை  அளித்தவனான எம்பெருமான், வாசம் செய்யும் சந்தனமரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த ஸாளக்ராமத்தை சென்று அடை என்று தன் நெஞ்சுக்கு சொல்கிறார்.
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும், அண்டா எமக்கே அருளாய் என்று அணயும் கோயில் அருகு எல்லாம், வண்டார்ப் பொழிலின் பழனத்து  வயலின் அனயலே கயல் பாய, தண்டாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (9)தொண்டு செய்பவர்களான பாகவதர்களும், நித்யஸூரிகளும், பூணுலுடன் கூடின மார்பை உடைய பிராமணர்களும் ‘தேவனே, எங்களுக்கே அருள் புரிய வேணும்’ என்று சொல்லிக்கொண்டு வந்து சேர்ந்து நிற்கிற கோவிலிலும், சுற்றுப்பிரதேசங்களெங்கும் வண்டுகள் நிறைந்திருக்கப்பெற்ற சோலைகளிலுண்டான நீர்நிலங்களில் கழனிகளிடத்துள்ள கயல் மீன்கள் வந்து துள்ள, அதனால் குளிர்ந்த தாமரை மொக்குகள் முகம் மிளிரும் ஸாளக்ராமத்தை நெஞ்சே!,  அடை என்று ஆழ்வார் சொல்லும் பாடல்.
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை, காரார்ப் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஓலி செய் தமிழ் மாலை, ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நல் நாடு அரசு ஆள, பேர் ஆயிரம் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே. (10)இவ்வுலகத்திலே விவேகம் உள்ளவர்கள் எல்லோரும், நித்யஸூரிகளுடைய கைங்கர்யம் செய்யும் ஸ்ரீவைகுண்டத்தை அரசாளும் ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய ஆயிரந் திரு நாமங்களையும் ஓதுங்கள்: அல்லது, மேகங்கள் படிந்துள்ள தோட்டங்களையுடைய திருமங்கை நாட்டுக்குத் தலைவரான திருமங்கையாழ்வார் ஸாரஸ பறவைகள் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட ஸ்ரீஸாளக்ராமத்திலே எழுந்தருளி இருக்கும் எம்பெருமான் விஷயமாக அருளி செய்த தமிழ் மாலையாகிய இப்பாசுரங்களையே வாயில் வந்த படி சொல்லுங்கள். எம்பெருமானுடைய ஸஹஸ்ரநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுவதும் இந்தத் திருமொழியைக் கற்பதும் சம பலன் தரும் என்கிறார். இப்பாசுரங்களை வாயில்வந்தபடி தப்புந்தவறுமாகச் சொன்னாலும் பலன் தரும் என்று ஆழ்வார் கூறி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

காட்மண்ட் , பொக்ரா, மற்றும் முக்திநாத் சென்ற போது எடுத்த சில புகைப்படங்கள்


திருவேங்கடமுடையான் பேய்ஆழ்வார்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம்.  பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.

இங்கே சுருக்கமாக அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காண்போம். நன்றி.

பேய்ஆழ்வார் மூன்றாம் திருவந்தாதி

1. மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு, நூற்பால் மனம் வைக்க நொய் விதாம்,- நாற்பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பணிந்து. (14)

நான்கு வேதங்களால் சொல்லப்பட்டவனும், விண்ணோர்கள் வந்து பணிந்து அவர்களின் கிரீடத்தில் உள்ள துகள்கள் பதியும் திருப்பாதங்களை உடையவனுமுமான திருவேங்கடமுடையானின் திருவடிகளை பற்றுவது, நம் ஐம்புலன்களை அடக்கி வைப்பதால் எளிதாகும் என்று சொல்லும் பாடல். மங்கையர் தோள் கைவிட்டு, அதாவது நம் புலன்களை முழுவதுமாக அடக்கிய பிறகு, நூற்பால் மனம் வைக்க , அதாவது வேதத்தினிடம் நாம் மனம் வைக்க முடியும் என்று சொல்வது கூரத்தாழ்வார் போன்ற ஒரு சிலருக்கே சாத்தியம் என்றும், பலருக்கு மங்கையர் தோள் பற்றி மனம் நினைக்காத போது, பகவத் விஷயத்தைப்பற்றி சிந்தித்து, சிறுது சிறிதாக அதனை அதிகப்படுத்தி, பின்னர் மங்கையர் தோளை முழுவதுமாக கைவிட்டு விடலாம் என்று சொன்ன முதலியாண்டான் போன்ற சில ஆச்சார்யார்களும் உண்டு என்று சுவாரசியமாக சொல்வதுண்டு.

2. சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும், நிறைந்த சீர் நீள்கச்சி யுள்ளும், – உறைந்ததுவும், வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப் பாடியுமே, தாம் கடவார் தண்டுழாயார். (26)

குளிர்ந்த திருத்துழாய் மாலை அணிந்த எம்பெருமான் உகந்து இருக்கும் இடங்களாக சிலவற்றை இங்கே சொல்கிறார். ஆழ்வாரின் மனதினுள், அனந்தாழ்வான் (பாம்புப்படுக்கை), காஞ்சிபுரத்தில் உள்ள திவ்யதேசங்கள், திருமலை, திருவெக்கா, திருவேளுக்கை மற்றும் திருவாய்ப்பாடி. இவற்றுள், தன் மனதை எம்பெருமான் மிகவும் விரும்பி உறையும் இடமாக சொல்கிறார். அதற்கு சிறந்த என்ற அடைமொழி காரணம். இன்னொரு விளக்கத்தின்படி, ஆழ்வார் சிந்தைக்குள் வருவதற்காக எம்பெருமான் இப்படி பற்பல திவ்யதேசங்களில், காத்துகொண்டு இருந்தான் என்று சொல்வதுண்டு.

3. சேர்ந்த திருமால் கடல், குடந்தை, வேங்கடம், நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு, வாய்ந்த மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி, இறைபாடி ஆய இவை. (30)

ஆழ்வார், அழகிய திருத்துழாய் மாலை அணிந்த திருமால் நித்யவாஸம் செய்கின்ற ராஜதானிகளாக (ஸ்தலங்களாக) திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருவேங்கடம், ஆழ்வாரின் சிந்தை, பரமபதம், வேதங்கள், திருபாடகம், ஆதிசேஷன் ஆகியவற்றை சொல்கிறார். நிறை விசும்பு என்று சொன்னது, மற்றவைகள் போல் குறைவில்லாத வைகுந்தம் என்பதற்காகும். இந்த திவ்யதேசங்களில் ப்ரத்யக்ஷமாக (நேரடியாக) தெரிவதுபோல், ஆழ்வாருக்கு வேதங்களின் ஒலிகளிலும் எம்பெருமான் தெரிகிறார். இருந்தாலும், வாய்ந்த என்ற ஒரு சிறப்பு சேர்த்து மறை என்ற வேதத்தை சொல்கிறார்.

எம்பெருமான் வேதம், அனுமானம் மற்றும் பிரத்யக்ஷம் என்ற மூன்றின் மூலமாகவும் அறியப்படுகிறார். அனுமானம் மற்றும் பிரத்யக்ஷத்திற்கு உள்ள குறை வேதத்திற்கு கிடையாது ஆகையால் வேதத்திற்கு சிறப்பு சேர்க்கப்பட்டது. அகல்விளக்கில் ஒரே ஓரு தீபம் போல் பிரத்யக்ஷமாய் தெரிவது தொடர்ச்சியாக ஒளிவிடுகிற பல தீபங்கள் என்று நிரூபிக்க முடிவதால், பிரத்யக்ஷம் தவறாகிவிடுகிறது. (நேரம் செல்லச் செல்ல, திரி முழுவதும் எரிந்து விடுவதாலோ, விளக்கில் எண்ணெய் குறைவதாலோ விளக்கில் தெரிவது பல தீபங்கள் என்று நிரூபணம் ஆகிறது). அதே போல், ஆகாயம் மேலே உள்ளது, தாமரை நீரில் உள்ள மலர் என்பதால், ஆகாய தாமரை என்பது ஆகாயத்தில் நீரில் உள்ள தாமரை போன்ற மலர் என்று அர்த்தம் கொள்வது பொருத்தமான வாதம் ஆக இருந்தாலும், அது போல் ஒன்று நிஜத்தில் கிடையாது என்பதால், அனுமானங்களால் உருவான ஒன்று பிரத்யக்ஷத்தில் இல்லாமல் போகக்கூடிய குற்றம் உள்ளது. இந்த குற்றங்கள் எதுவும் இல்லாது வேதம் ஆகும்.

4. பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், நூற் கடலும் நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான், குருந்தொசித்த கோபா லகன். (32)

எம்பெருமானின் இருப்பிடங்களாக, திருப்பாற்கடல், திருவேங்கடம், திருவனந்தாழ்வான், ஸ்ரீவைகுண்டம், வேதவேதாதங்கள், யோகிகளின் உள்ளக் கமலம் ஆகியவற்றை ஆழ்வார் சொல்கிறார். பனிவிசும்பு என்பதால், ஸம்ஸாரத்தில் பட்ட தாபங்களை எல்லாம் ஆற்றிக் குளிரப்பண்ணும் பரமபதம் என்று கூறுகிறார். நூற்கடல் என்பதால், கடல் போன்று இருக்கிற ஸ்ருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் முதலிய சாஸ்த்ரங்களை குறிப்பிடுகிறார். நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனம் என்பதால், கவிழ்த்து வைக்கப்பட்டு இருக்கும் தாமரை மலர் போல் உள்ள ஞானிகளின் ஹிருதய கமலம் என்று சொல்கிறார்.

இங்கு எம்பெருமானின் ஐந்து நிலைகளும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பாற்கடல் என்பதால், இரண்டாவது நிலையான திருப்பாற்கடலும், பனிவிசும்பு என்பதால் முதல் நிலையான பரமபதமும், வேங்கடம் என்பதால் அர்ச்சை என்ற நான்காவது நிலையும், குருந்தொசித்த கோபாலகன் என்பதால் மூன்றாவது நிலையான விபவமும் நுண்ணுல தாமரைமேல், பாற்பட்டிருந்தார் மனமும் என்பதால் ஐந்தாவது நிலையான அந்தர்யாமியும் சொல்லப்பட்டு உள்ளன.

எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை,

  • பரத்வம் – ஆவரணநீர், அண்டகடாகம் என்ற ஓட்டின் மேல் உள்ள நீர்
  • வியூகம் – திருப்பாற்கடல் – பாற்கடல்
  • விபவம் – அவதாரங்கள் – காட்டாறு வெள்ளம்
  • அர்ச்சை – திவ்யதேசங்கள் – காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் மடுக்களில் சேர்ந்த நீர்
  • அந்தர்யாமி – பூமிக்குள் மறைந்து கிடைக்கும் நீர் – சரஸ்வதி நதி, அந்தர்வாகினி

இந்த நிலைகளை ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது’ என்றும் சொல்வதுண்டு.

5. இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், மறையாய் மறைப்பொருளாய் வானாய் – பிறைவாய்ந்த, வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான், உள்ளத்தின் உள்ளே உளன். (39)

பூமிக்கு அந்தர்யாமியாய் எட்டு திசைகளிலும் இருக்கும் எல்லா பொருட்ளிலும் வியாபித்து இருப்பவனாகவும், தனக்குள் வைத்து இருப்பவனும், வேதங்களாகவும் வேதங்களுக்கு பொருளாகவும், இந்த உலகத்தை நிர்வகிப்பவனும், சந்திர மண்டலம் அளவு உயர்ந்தும், மிக்க தண்ணீர் உள்ள அருவிகள் போடும் சப்தத்துடன் கூடிய நீரையுடையதுமான திருவேங்கடமலையில் வாழ்பவனான எம்பெருமான் தன்னுடைய நெஞ்சினுள்ளே இருக்கின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

  • பூமிக்கு அந்தர்யாமியாய் இருப்பது தன்னை வந்து சேர்வதற்கு என்றும்,
  • எட்டு திசைகளிலும் வியாபித்து இருப்பது தன்னை வளைத்து பிடிப்பதற்காக என்றும்
  • வேதங்களைப் படைத்தது, தனக்கு நன்மை தீமைகளை காட்டுவதற்காக என்றும்
  • வேதிப்பொருளை இருந்து தனக்கு உண்மை பொருளை உணர்த்தினான் என்றும்
  • வானாய் என்று சொல்லி, தான் வருவதற்காக பரமபதத்தை அலங்கரித்தான் என்றும்
  • பரமபதம் சேரும்வரை தான் அனுபவிக்க எளியவனாய் திருமலையில் நின்றான் என்றும்
  • அப்படி அங்கு நிற்பதும் தன் நெஞ்சில் வந்து சேர்வதற்காக என்று சொல்கிறார்.

6. உளன் கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன் கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய், விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான், மண்ணெடுங்கத் தான் அளந்த மன். (40)

ஆழ்வார், தன் நெஞ்சத்திற்கு சொல்வது :

  • அவன் உளன் என்று சொன்னபோது, ஆமாம் என்று சொல்லி, அவனை உண்மை பொருள் ஆக்கியதால் நல்ல நெஞ்சம்,
  • நாம் இப்போது உளன் என்று இசைந்தபோதோ, இல்லை என்று பலபிறவிகளாக சொல்லித்திரிந்து கொண்டு இருந்தபோதோ, என்றும் நம்மை காப்பாற்றுவதற்காக பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு வரும் புருஷர்களில் உத்தமனான எம்பெருமான்
  • பிறரால் வரும் தீமைகளை விட நம்மால் நமக்கு வரும் தீமைகளை காட்டிக்கொடுத்து அவைகளில் இருந்து காப்பாற்றவும் அவனே வழி என்ற உண்மையை மனதிற்கு புரிய வைத்தவன்
  • தன்னுடைய உள்ளத்தில் புகுவதற்கு இசைந்தவர், பிறகு உள்ளத்தை விட்டு நீங்க மாட்டேன் என்று மனிதில் வாழும் எம்பெருமான்
  • வான்உலகங்கள் எல்லாம் ஒர்இடத்தில ஒடுங்கும்படி உள்ள சிகரங்களைக்கொண்ட திருமலையில் உறைபவன்
  • நிறைந்த அருவிகள் உடைய திருவேங்கடத்தில் உறைபவன்
  • இப்படி பல பெருமைகளை, பூமியெங்கும் தன்னுடைய திருவடிகளால் அளந்த த்ரிவிக்ர அவதாரத்தின் போது காட்டி நமக்காக காத்துகொண்டு இருக்கும் இடம் திருவேங்கடம்
  • இப்படிப்பட்ட எம்பெருமான் நெஞ்சினில் வந்து புகுந்த பின்பு, ஒரு குறையுமில்லை

7. புரிந்து மதவேழம் மாப்பிடியோடு ஊடித், திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர் வெண்கோட்டு, முத்து உதிர்க்கும் வேங்கடமே, மேலொரு நாள், மண்கோட்டுக் கொண்டான் மலை. (45)

யானை தன் பேடையுடன் ஊடல் கொண்டதால், அதனை விட்டு, இங்கும் அங்கும் திரிந்து தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, தனது தந்தத்தை திருமலையில் உள்ள பாறைகளிலே முட்டி குத்துவதானால் அந்த உயர்ந்த ஜாதி யானைகளின் தந்தங்களில் இருந்து வெண்முத்துக்கள் உதிர்கின்றன. இத்தகைய திருமலை, முன்பு வராக அவதாரம் செய்த எம்பெருமானுடைய இருப்பிடம் என்கிறார். திருமலையிலுள்ள பளிங்குப் பாறைகளிலே யானை தன் நிழலைக்கண்டு, தன் எதிரே இன்னொரு யானையா என்று கோபம் கொண்டு அதனோடு போர் செய்வதாகவும் கொள்ளலாம்.

8. தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, அளிந்த கடுவனையே நோக்கி, – விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடமே, மேலொருநாள், மண்மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு. (58)

திருமலையின் சிகரம் சந்திர மண்டலத்தையும் தாண்டி நீண்டு உள்ளது என்றும், அத்தகைய சிகரத்தில் மேல் இருந்த பெண் குரங்கு தன்னுடைய முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘ என்று ஆண் குரங்கிடம், ‘குறையில்லாத பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘ என்று கேட்கிறது. அத்தகைய திருமலை, கேட்பவர் கேட்டபடியே தானம் செய்வது என்று விரதம் பூண்ட மாவலி சக்ரவர்த்தியிடம் யாசகம் கொண்டே காரியம் ஸாதிக்க வேண்டும் என்று புத்தி சாதுரியம் கொண்ட எம்பெருமான் உறையும் இடம் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வார் மனஓட்டத்தில், எம்பெருமானிடம், பிராட்டியார், சந்திரன்போல் இருக்கும் ஜீவாத்மாக்களாகிய நம்மை உயர்த்திவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக எழுதப்பட்டுள்ள பாசுரம் இது. சந்திரனை விட உயரத்தில் இருக்கும் தாயார் அதில் உள்ள குறைகளை பொருட் படுத்தாமல், அதனை உயர்த்த சிபாரிசு செய்கிறார். இந்த பாடலில், பிராட்டி நமக்காக சிபாரிசு செய்வதும், எம்பெருமான் பிராட்டியிடமும் ஜீவாத்மாக்களிடமும் காட்டும் பரிவும் தெரிகின்றன.

9. பண்டெல்லாம் வேங்கடம், பாற்கடல், வைகுந்தம், கொண்டு அங்கு உறைவார்க்குக் கோவில் போல், வண்டு வளம் கிளறும் நீள் சோலை, வண் பூங்கடிகை, இளம் குமரன் தன் விண்ணகர் (61)

ஸ்ரீவைகுந்ததை(பரமபதம்) உறைவிடமாக கொண்டு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானுக்கு, திருப்பாற்கடல், திருமலை, வண்டுகளின் கூட்டம் நிறைந்து உள்ள இனிமையான கடிகை என்னும் சோளிங்கர், என்றும் இளமையுடன் இருக்கும் அவன் தன்னது என்று விரும்பும் திருவிண்ணகர் என்ற ஒப்பிலியப்பன் கோவில் ஆகியவை ஆழ்வாரின் நெஞ்சத்திற்கு வருவதற்கு முன்பு கோவில்களாக இருந்தன. இப்போது ஆழ்வார் நெஞ்சமே அவனுக்கு கோவில். தன்னுடைய நெஞ்சத்தில் புகுவதற்காக, ஸ்ரீவைகுந்ததில் இருந்து புறப்பட்டு, திருப்பாற்கடல், திருமலை போன்ற திவ்யதேசங்களில் எழுந்தருளி காத்து இருந்தான் என்பது ஆழ்வார் வாக்கு.

10. விண்ணகரம், வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், மாநகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென் குடந்தை, தேனார் திருவரங்கம், தென்கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு (62)

திருவிண்ணகரம், திருவெஃகா, விரிந்து அலைகளை கொண்ட நீர்வளம் உள்ள திருவேங்கடம், பெரிய மாடங்களை உடையதான வேளுக்கை, பூமியில் நடுநாயகமாக திருக்குடந்தை, தேன் வெள்ளம் பெருகுகின்ற சோலைகளை உடைய திருவரங்கம், தெற்கே உள்ள திருக்கோட்டியூர், என்ற இந்த திவ்யதேசங்களில், ஒரு காலத்தில், மாவலி சக்ரவர்த்தியிடம் யாசகம் செய்து, அவனிடம் இருந்து நீர் பெற்று தன்னுடைய உடமைகளான இந்த உலகத்தை எல்லாம் வசப்படுத்திய நீர்மை/எளிமை என்னும் உயரிய கல்யாண குணத்தை காட்டி உறைகிறான். ஒரு காலத்தில், விபவத்தில், யாசகம் செய்ததைப் போல், இந்த ஆத்மாக்களை பெறுவதற்கு எளிமை/ நீர்மை (சௌலப்யம், சௌசீல்யம்) போன்ற குணங்களை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டு உறைகின்ற திவ்யதேசங்கள் இவை, என்று ஆழ்வார் சொல்கிறார்.

11. தாழ்சடையும் நீண்முடியும் ஒண் மழுவும் சக்கரமும், சூழ் அரவும், பொன் நாணும் தோன்றுமால், சூழும் திரண்ட அருவி பாயும், திருமலைமேல் எந்தைக்கு, இரண்டு உரு ஒன்றுமாய் இசைந்து. (63)

கீழே இறக்கி கட்டின ஜடையும், நீண்ட திருமுடியும், அழகிய மழு என்ற ஆயுதமும், சுதர்சனாழ்வான் என்னும் சக்கரமும் சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும் தங்கத்தினாலான அரைநாணுமாய் கொண்டு, ஒன்றுக்கு ஒன்று சேராததை சேர்த்து சங்கர நாராயணன் என்ற இரண்டு வடிவும், நாற்புறமும் திரள் திரளாக அருவிகள் பெருகி உள்ள திருமலை மேல் உள்ள எம்பெருமானுக்கு ஒரு வடிவமாய் பொருந்தி இருப்பது ஆச்சர்யம்.

நரம் கலந்த சிங்கம் போல், அரன் கலந்த அரி உருவாய் தோன்றிய சங்கர நாராயண அவதாரம் சாஸ்திரங்களில் பேசப்படுகிறது. அதில் பிரதானமாக உள்ள வலது பக்கத்தில் ஹரி உள்ளார். சங்கு என்று சொல்லாமல், சக்கரம் என்று சொல்லி இடது பக்கம் அரனுக்கு என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானுக்கு எப்போதும் வலது திருக்கரத்தில் சுதர்சன் சக்கரம் உள்ளது. முன் பாசுரத்தில், த்ரிவிக்ர அவதாரத்தின் சிறப்பு குணமான சௌலப்யத்தை த்ரிவிக்ரமனின் விக்ரகம் இல்லாத பல திவ்யதேசங்களை குறிப்பிட்டது போல், இந்த பாடலிலும், திருவேங்கடமுடையானுக்கு சங்கர நாராயண அவதாரத்தின் போது காட்டிய சௌசீல்யம் உள்ளது என்றே பொருள் படும். திருவேங்கடமுடையானிடம், நீண்முடியும், சக்கரமும், பொன்னாணும் உள்ளனவே தவிர, தாழ்சடையும், ஒண்மழுவும், சூழரவும் இல்லை. ஆழ்வார் இந்த பாடலில் அரியும் அரனும் ஒன்று என்ற அபத்த கொள்கையை ஆதரிக்கவில்லை என்பதை இவருடைய 97 பாசுரத்தின்படி நிலை நிறுத்துகிறார்.

12. பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர் கடுவன் என பேர்ந்து கார்த்த களங்கனிக்கு கை நீட்டும், வேங்கடமே, மேனி விளங்கனிக்கு கன் எறிந்தான் வெற்பு. (68)

ஆழ்வார் திருமலையில் விலங்கு, மரம், கனி என்று எதைப்பார்த்தாலும் எம்பெருமானின் திருவிளையாடல்கள் தான் நினைவிற்கு வருகிறது என்கிறார். சுனைநீரில் தன் உருவதைப் பார்த்து வேறு ஒரு குரங்கு என்று பயந்து, மரக்கிளையை விட்டு, மெதுவாக நகரும் போது, அந்த நிழல் குரங்கிற்கு அருகில் இருக்கும் களங்கனியை பறித்துத் தா என்று சபல புத்தியுடன் கேட்கும் செயலைப் பார்த்து, ஆழ்வார் முன்னொரு காலத்தில், ஒரு கன்றினைப் பிடித்து விளாமரத்தின் மேல் தூக்கி ஏறிந்து கன்றாகிய வத்ஸாசுரனையும், விளாமரமாகிய கபீத்தாசுரனையும் ஒன்றும் அறியாதாவனைப்போல் ஒரே நேரத்தில் முடித்த சரித்திரத்தை இங்கு நினைவு கூறுகிறார்.

13. வெற்பென்று வேங்கடம் பாடும், வியன் துழாய்க் கற்பென்று சூடும் கருங்குழல்மேல், மற்பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான், பூண்ட நாவெல்லாம் புகும். (69)

இந்த பாசுரத்திற்கு இரண்டு வித விளக்கங்கள் உள்ளன. ஒன்று ஆழ்வார் தன்னிலை மறந்து, தாய் பாசுரம்போல் விளக்கம், மற்றொன்று ஆழ்வார் நமக்கு உபதேசிப்பது போல் விளக்கம். இந்த பிரபந்தத்தில் வேறு எங்கும் ஆழ்வார் தன்னிலை மறந்து பாடியது இல்லை என்கிறபடியால், ஆழ்வார் உபதேசம் என்ற இன்னொரு விளக்கமும் சொல்லப் படுகிறது. பிற்பட்ட ஆழ்வார்கள் தாய் பாசுரமாகவும், மகள் பாசுரமாகவும், தோழி பாசுரமாகவும் பாட, இது ஒரு முன்னோடி என்று தெளிவாக சொல்லும்படியான பாசுரம்.

தாய், தன் மகள் மலை என்றால் வேங்கடம் என்றும், திருத்துழாய் மாலையை தலையில் சூடிக்கொண்டு, அதுவே தன் தகுதிக்கு உகந்தது என்றும், மல்லர்களை வீழ்த்திய திரண்ட தோள்களை உடைய எம்பெருமான் சயனித்து இருக்கும் திருப்பாற்கடலில் நீராடுவேன் என்றும் ஒவ்வொரு நாளும் சொல்கிறாள் என்பது தாயார் பாசுரமாக கொண்ட விளக்கம்.

உலகத்தீரே, பயன்கொடுக்காமல் இருக்கும் மற்ற மலைகளைப் பாடாமல், பெரும்பலன்களை கொடுக்கும் திருமலையை பாடுங்கள், என்றும், ஏதோ ஒரு பூவை சூடாமல், அவன் உனக்கும் திருத்துழாயை சூடுங்கள் என்றும், ஏதோ ஒரு நீர்நிலையில் நீராடாமல், திருப்பாற்கடல் போன்ற எம்பெருமான் சம்பந்தம் உள்ள நீர்நிலைகளில் நீராடுங்கள் என்றும், சொல்வது ஆழ்வார் உபதேசிப்பது போல் உள்ள விளக்கம்.

14. புகுமதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து, அருவி உகுமதத்தால் கால் கழுவி கையால், மிகு மதத்தேன் விண்ட மலர்கொண்டு, விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு (70)

திருமலையில் உள்ள யானையானது, தன்னிடம் பெருகி வரும், மத்தகத்தில் இருந்தும் வாயில் இருந்தும் வழிகின்ற நீரினால், வாய் கொப்பளித்து, ஆசமனம் செய்து, மேல் இருந்து கீழ் வரை வருகின்ற மத நீரினால் கால் கழுவி, சுத்தம் செய்து, தேன் மிகுந்த பூக்களைக் கொண்டு மிகவும் மிடுக்குடன், விளங்கும் திருவேங்கடவனை வணங்குகின்றன. அவனை வணங்க யோக்கியதை வேண்டாமா என்று கேட்பவர்களுக்கு, அவை வேண்டாம் என்றும், அறிவற்ற யானை போன்ற விலங்குகளுக்கு தன்மேல் அன்பையும் பக்தியையும் அறிவையும் தூண்டுகிற சக்தி மிக்க மஹாபலத்துடன் இருக்கும் வேங்கடவன் அவைகளையும் ஏற்று கொள்கிறான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

15. களிறு முகில் குத்தக் கையெடுத்து ஓடி, ஒளிறு மருப்பொசி கையாளி, பிளிறி விழ, கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள், குழக்கன்று கொண்டு எறிந்தான் குன்று. (71)

யானையானது மேகத்தைப் பார்த்து இன்னொரு யானை என்று கோபம் கொண்டு தன்னுடைய தந்ததால் குத்த, ஒரு யாளி அந்த யானையின் ஒளிவிடுகின்ற கொம்பினை உடைக்க அந்த யானை வாய்விட்டு அலறி விழும் திருவேங்கடம், ஒரு காலத்தில் வத்ஸாசுரன் என்ற அசுரன் கன்றுக்குட்டியாக இருந்தபோது அதனை தூக்கி எறிந்து கபீத்தாசுரன் என்ற அசுரனையும் கொன்ற கண்ணனுடைய திருமலை ஆகும். எம்பெருமானின் இயல்பான குணங்களில் ஒன்றான விரோதி நிரஸனத்தை இந்த திருமலையில் வாழும் விலங்குகளும் கொண்டு இருக்கின்றன என்று ஆழ்வார் சொல்கிறார்.

16. குன்று ஓன்றினாய குறமகளிர் கோல்வளைக்கை * 
சென்றுவிளையாடும்தீங்கழைபோய் * – வென்று 
விளங்குமதிகோள்விடுக்கும் வேங்கடமே * மேலை 
இளங்குமரர்கோமானிடம். (72)

திருமலையை விட்டு கீழே இறங்குவது தங்கள் குடிக்கே இழுக்கு என்று நினைக்கும் குறத்திகள், திருவேங்கடத்தையே பதி என்று வாழ்பவர்கள். அவர்களின் கைகள் வளைகளை கொண்டதாகவும், பசுமையானதாகவும், நீளமாகவும் உள்ளதால், அவை மூங்கில்களை தள்ளி அவற்றின் மேல் உள்ள பூரண சந்திரனை பிடிக்க வந்த ராகுவை விரட்டி கிரகணத்தை விலக்கிய திருமலை என்று ஆழ்வார் பாடுகிறார். இன்னொரு பொருள், மேல் சொன்னாற்போல் உள்ள கைகளை உடைய குறத்திகள், செறிந்து உயர்ந்து வளர்ந்து இருக்கும் மூங்கில்களை பிரித்து விட்டதால், சந்திரனின் ஒளி கிரணங்கள் திருமலையில் விழ, சந்திரன் தன்னுடைய துன்பம் நீங்கியதை சொல்லி, திருமலையின் நில வளத்தை சொல்வதாகவும் கொள்ளலாம். மூன்றாவது பொருள், மேலே சொன்னாற்போல் உள்ள கைகளை உடைய குறத்திகள் தங்களுடைய கைகளினால் நன்றாக வளர்ந்து உள்ள மூங்கில்களை விலக்கி, தங்களுடைய வளைகளின் ஒளியால், சந்திரனிடத்தில் உள்ள மறுவாகிய குறைகளை நீக்கிய பெருமை உடைய திருமலை என்றும் கொள்ளலாம். இவை யாவும்,, அப்பிள்ளை என்ற ஆச்சாரியாரின் உரை.

இனி பெரியவாச்சான்பிள்ளையின் பொருள். இப்படிப்பட்ட கைகளைக்கொண்ட குறத்திகள், விளையாடும் கழக்கோடிகள் (கழற்கொடிகளை உயர எறிந்து விளையாடும் ஆட்டம்) சந்திரனை பிடிக்க வரும் ராகுவை அடித்து அவனை வென்று சந்திரனை கிரகண துன்பத்தில் இருந்து மீட்ட திருமலை என்று சொல்லி திருமலையின் உயர்வையும் அங்குள்ள குறத்திகளின் வலிமையையும் ஆழ்வார் சொல்கிறார் என்கிறார். இவ்வளவு உயரமான இடத்தில இருப்பது யார் என்று கேட்டுக்கொண்டு, எல்லாவற்றிக்கும் மேலாக இருக்கும் பரமபதத்தில் எப்போதும் எம்பெருமானையே அனுபவித்து இளஞர்களாக என்றும் இருக்கும் நித்யஸூரிகளுக்கு தலைவனான இளங்குமரன் வாழுமிடம் இதுவென்றோ என்று திருமலையை கொண்டாடுகிறார்.

17. இடம்வலமேழ்பூண்ட இரவித்தேரோட்டி * 
வடமுகவேங்கடத்துமன்னும் * – குடம்நயந்த 
கூத்தனாய்நின்றான் குரைகழலேகூறுவதே * 
நாத்தன்னாலுள்ளநலம். (73)

இடப்புறமும் வலப்புறமும் ஏழு குதிரைகளை பூண்ட சூரியனுடைய தேரை அவனது அந்தர்யாமியாக இருந்து நடத்துகிறவனும், வடதிசையில் உள்ள வேங்கடத்தில் நித்யவாஸம் செய்பவனும், ஆசையோடு குடக்கூத்து ஆடினவன கண்ணபிரானாக அவதரித்தவனுமான எம்பெருமானுடைய ஆபரண ஒலி பொருந்திய திருவடிகளைத் துதிப்பதே நாவினால் கொள்ளகூடிய பயன் என்று ஆழ்வார் சொல்கிறார். சூரியனின் ஏழு குதிரைகள், ஏழு சந்தஸ்கள்; அவை, காயத்திரி, ப்ருஹதி உஷ்ணிக், ஜெகதீ, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி. ஆய் மேரு மலையின் வடக்கும் தெற்கும் சஞ்சரிப்பதை, இடம் வலம் என்று கூறுகிறார்.

18. சார்ந்தகடுதேய்ப்பத் தடாவியகோட்டுச்சிவாய் * 
ஊர்ந்தியங்கும்வெண்மதியினொண்முயலை * – சேர்ந்து 
சினவேங்கைபார்க்கும் திருமலையே * ஆயன் 
புனவேங்கைநாறும்பொருப்பு. (75)

திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றது; ஆகாசத்திலே பயணிக்கின்ற சந்திரன் திருமலையில் உள்ள சிகரங்களின் உச்சியில் பட்டு செல்லும்போது அங்கும் இங்கும் தேய்கிறது. அப்போது சந்திரனில் உள்ள மருவை, முயல் எனக்கருதி, திருமலையில் திரிகின்ற வேங்கைப்புலி, அதனைத் தனக்கு உணவாக பிடிக்க எண்ணி, பிடிக்கவும் முடியாமல், விட்டுப் போகவும் மனம் இல்லாமல் கோபத்துடன் உற்றுப் பார்த்தபடி நிற்கின்றது. இப்படிப்பட்ட திருமலை, வேங்கைமலர்களின் வாசம் வீசப் பெற்றதாய், கண்ணபிரான் எழுந்து அருளி இருக்கும் இடம் என்று ஆழ்வார் முடிக்கிறார்.

19. முடிந்தபொழுதில் குறவாணர் * ஏனம் 
படிந்துழுசால் பைந்தினைகள்வித்த * – தடிந்தெழுந்த 
வேய்ங்கழைபோய் விண்திறக்கும்வேங்கடமே * மேலொருநாள் 
தீங்குழல்வாய்வைத்தான்சிலம்பு. (89)

மரணமடையும் நிலையில் உள்ள வயதானவர்களாக குறவர்கள் தலைவர்கள், வேட்டைக்கு செல்ல முடியாததால், காட்டுப்பன்றிகள், தங்கள் செருக்காலே மூங்கில்களை வேர்பறிந்து விழும்படி, ஊன்றி உழுத விளைநிலங்களிலே புதிய தினை விதைகளை விதைக்க, வெட்டிப்போட்ட பின்பும், நிலவளத்தினால் ஓங்கி வளர்ந்த மூங்கில்களானவை, மேலும் வளர்ந்து ஆகாயத்தை தொடும் திருவேங்கடம். முன்பு ஒரு நாள், இனிய புல்லாங்குழலை திருப் பவளத்தில் ஊதிய கண்ணனுடைய திருமலை.

97ம் பாசுரம்

இந்த பாசுரம், திருவேங்கடவனுக்கு என்று சொல்லப்பட்ட பாசுரம் அன்று. மேலே சொன்னதற்கு ஒரு சிறு விளக்கம் மட்டுமே, நன்றி.

அலர்எடுத்த உந்தியான்*  ஆங்குஎழிலஆய,* மலர்எடுத்த மாமேனி மாயன்,* – அலர்எடுத்த வண்ணத்தான் மாமலரான்*  வார்சடையான்*  என்று இவர்கட்கு  எண்ணத்தான் ஆமோ இமை? 

தாமரைப்பூ உடைய நாபியை கொண்டவனும், காயம் பூவின் நிறத்தினபோல் கரிய திருமேனியை உடையவனும், மாயன் என்ற பெயருடன் ஆச்சர்யமானவன எம்பெருமானை, வேதங்களால் சிறப்பித்து கூறப்பெற்ற, காஞ்சி மலர் நிறம் கொண்ட இந்திரன், தாமரைப்பூவில் பிறந்த பிரம்மன், தாழ்ந்த சடையை உடைய சிவன் போன்ற தேவர்கள் அவர்களாக முயன்று சற்றேனும் (கண் இமைக்கும் நேரம்) நெஞ்சால் சிந்திக்க / அறிய முடியமோ என்கிறார். எம்பெருமானின் அருளாலே அவனை பெற முடியுமே தவிர, தமது முயற்சியால் இந்த பிரம்மாதி தேவர்கள் கூட அவனை அறிய முடியாது என்கிறார்.

திருவேங்கடமுடையான் பூதத்தாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திரு அரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திரு அரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திரு அரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி சொல்வதை இங்கே சுருக்கமாக காண்போம். நன்றி.

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

  1. சென்றது இலங்கைமேல் செவ்வே தன் சீற்றத்தால்,
    கொன்றது இராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும்
    வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
    வாயோங்கு தொல்புகழான் வந்து (25)

இராமன் சென்றது இலங்கை, (தொல் புகழோன் வந்து) நின்றது திருவேங்கடம் ;
கொன்றது இராமன் அல்ல, அவன் சீற்றம்; பக்தர் – குணமும் குறையும் கொண்டவர்கள்; முக்தர் – இப்போது குணம் மட்டும் கொண்டவர்கள், முன்பு குறையும் இருந்தவர்கள்; நித்யர் – குறை என்றும் இல்லாதவர்கள்; எப்போதும் குணம்; ஆனால் அதனை வேண்டி பெற்றவர்கள்; பரமாத்மா – எப்போதும், குணம் மட்டும் சர்வ சாதாரணமாகவே எப்போதும் குணம் உள்ளவர் (தொல் புகழ்); இராணவனை கொன்ற பிறகு விண்ணவர் வாய் ஓங்கியது ; வேங்கடவன் இராமன்.

2. வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய், உந்திப் படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த, படி அமரர் வாழும் பதி. (26)

திருவேங்கடமுடையான் என்று நேரடியாக ஆழ்வார் சொல்லவில்லை, இருந்தாலும் இதற்கு முந்தய பாசுரம் வேங்கடமே என்று சொன்னதாலும் இதில் பதி என்று சொன்னதாலும் நம் பெரியோர்கள் இந்த பாசுரத்தையும் திருப்பதிக்கே என்று சொல்வார்கள். தேவர்கள் நான் முன்னே, நீ பின்னே என்று தள்ளிக்கொண்டு திருப்பாற்கடலில், எம்பெருமானை வணங்குவது போல், இந்த உலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களும் வணங்கும் இடமான திருவேங்கடத்தை, நித்யஸூரிகளுக்கும் தந்தான் என்பது கருத்து.

3. பதி அமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை, மதி உரிஞ்சி வான்முகடு நோக்கி – கதி மிகுத்து அங்கு கோல்தேடி ஆடும் கொழுந்து அது போன்றதே, மால்தேடி யோடும் மனம். (27)

இந்த பாசுரத்திலும் ஆழ்வார் நேரடியாக திருவேங்கடம் என்று சொல்லவில்லை என்றாலும், இதற்கு முந்தய பாசுரம் போல், இதில் பதி என்று சொன்னதால் நம் பெரியோர்கள் இந்த பாசுரத்தையும் திருப்பதிக்கே என்று சொல்வார்கள். ஆழ்வாரது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி இருக்கும் திருமாலைத் தேடி, அவன் எங்கேயெங்கேயென்று தன் நினைவு மேலும் சிந்திக்க, மிகவும் வளர்ந்து, மேலே மேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடி, பரமபதத்தில் வந்து நின்றது; ஆழ்வார், இது, அழகிய கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது என்கிறார்.

4. மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும், நினைப்பரிய நீள் அரங்கத் துள்ளான், – எனைப்பலரும் தேவாதி தேவன் எனப்படுவான், முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன். (28)

அந்தர்யாமி, அர்ச்சாவதாரம், வியூக நாராயணன், பரமபதம் மற்றும் விபவாவதாரம் என்ற ஐந்து நிலைகளையும் இந்த பாசுரத்தில் ஆழ்வார் கூறுகின்றார். மனத்துள்ளான் என்று முதலில் குறிப்பிட்டு இருந்தாலும், அர்த்த சுவாரஸ்யம் கொண்டு அதனை கடைசியில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவேங்கடம், திருப்பாற்கடல், திருவரங்கம், மற்றும் பரமபத நாதன் என்று எல்லோரும் ஆழ்வாரின் மனத்திற்குள் வந்து குடிகொண்டான் என்று கூறுகிறார். மாவாய் பிளந்த மகன் என்பது கண்ணன், கேசி என்ற குதிரைமுகம் கொண்ட அரக்கனை கொன்ற வரலாறு.

5. துணிந்தது சிந்தை துழாய் அலங்கல், அங்கம் அணிந்தவன் பேர் உள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும் வேய்பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே, வாய்திறங்கள் சொல்லும் வகை. (33)

வேதம் சொல்வது, முதலில் சிந்தை, அதன் பிறகு சொற்கள், இறுதியாக உடல். அதாவது முதலில் சிந்தனையில் வருவது, பின் வார்த்தையாக வருவது, இறுதியில் செயலாக உடம்பு செய்வது. இங்கே ஆழ்வார் சிந்தை, உடல் வார்த்தை என்று வரிசை மாற்றி சொல்வது, அவரது அங்கங்கள் நான் முந்தி, நீ முந்தி என்று திருவேங்கடவனுக்கு சேவை செய்வதற்காக வந்ததால் ஆகும். விறல் வேங்கடவனையே என்று சொல்வதால், அவனை மட்டுமே என்று கொள்ளவேண்டும். துணிந்தது சிந்தை வேங்கடவனையே என்றும், அங்கம் பணிந்தது வேங்கடவனையே என்றும், வாய் திறங்கள் சொல்லும் வேங்கடவனையே என்றும் கொள்ளவேண்டும்.

6. உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று, தளர்தல் அதன் அறுக்கும் சாரார், அளவரிய வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பயின்று. (45)

ஐஸ்வர்யம், கைவல்யம் என்ற இரண்டும் எம்பெருமானிடம் வேண்டக்கூடாது என்றும் அவனிடம் அவனையே கேட்க வேண்டும் என்பதை விளக்கும் பாசுரம். திருவேங்கடமுடையானை வணங்குபவர்கள், செல்வம் உள்ளது என்று பெருமை கொள்ளமாட்டார்கள் என்றும், நேற்று இருந்த செல்வம் இன்று இல்லை என்ற நிலை அடைந்தாலும், தளர்ச்சி அடைய மாட்டார்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இதையே, உளது என்று இறுமாவார் உண்டு என்று பிரித்து பார்த்தால், பகவத் விஷயம் கிடைத்து என்று இறுமாப்பு கொள்வர் என்றும், அந்த பகவத் விஷயம் கிடைக்கவில்லை என்றால், தளர்தல் அடைவார்கள் என்பதை இல்லை என்று தளர்தல் என்ற சொற்தொடர் மூலமும் கொள்ளலாம்.

7. பயின்றது அரங்கம் திருக்கோட்டி, பன்னாள் பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், – பயின்றது அணி திகழும் சோலை அணி நீர் மலையே மணிதிகழும் வண் தடக்கை மால். (46)

பக்தர்கள் திருந்துவதற்காக எம்பெருமான் மகிழ்ந்து பல காலங்களாக இருக்கும் இடங்கள் பற்பல திவ்யதேசங்கள் உள்ளன. திருவரங்கம், திருக்கோட்டியூர், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை மற்றும் தீருநீர்மலை என்பது சில உதாரணங்கள். அணி திகழும் சோலை என்பது திருமாலிருஞ்சோலை குறிக்கும் என்றோ, அணி திகழும் சோலை அணி நீர் மலையே என்று திருநீர்மலைக்கு சிறப்பாக என்றோ கொள்ளலாம்.

8. நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து, அறியாது இளங்கிரியென் றெண்ணி, – பிறியாது, பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும், வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு. (53)

திருமலைக்கு செல்பவர்கள், வழியிலேயே குலசேகராழ்வார் “‘வெறியார்தண்சோலைத் திருவேங்கடமலைமேல், நெறியாய் கிடக்கும் நிலையுடையேனாவேனே” சொன்னது போல், மலை ஏறும் வழியில் எம்பெருமானை சிந்தித்து இருக்கும்போது அவர்களின் நீண்ட முடியினை மனித கேசம் என்று எண்ணாது கொடிகள் அவற்றை பற்றி வளர்கின்றன என்று ஆழ்வார் திருவேங்கட மலையை நேசிக்கிறார்.

9. வெற்பு என்று இருஞ்சோலை வேங்கடம் என்று இவ்விரண்டும், நிற்பென்று நீ மதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்று உளங்கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன், வெள்ளத்து இளம் கோயில் கைவிடேல் என்று. (54)

இளம் கோயில் என்பது திருபாற்கடலைக் குறிக்கும். அங்கிருந்துதான் எம்பெருமான் விபவ மற்றும் அர்ச்சாவதாரங்களை எடுக்கிறான். பெருங்கோவில் என்பது திருநீர்மலை, திருவேங்கடம் போன்ற திவ்யதேசங்களில் வாழும் பக்தர்களின் உள்ளங்கள் ஆகும். ஆழ்வாரின் உள்ளம் கிடைத்தவுடன், எம்பெருமானுக்கு திருப்பாற்கடலை (இளம் கோயில்) விட்டு விடலாம் என்று ஒரு எண்ணம் வந்தது என்று ஆழ்வார் சொல்லி, அதை கைவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுகிறார்.

10. போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த, போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் – போது, மணிவேங்கடவன் மலரடிக்கே செல்ல, அணிவேங்கடவன் பேர் ஆய்ந்து. (72)

திருமலையில் வானரங்கள், திருவேங்கடமுடையானுக்கு அதிகாலையில் பூக்களை பறித்து சமர்பிக்கின்றன என்று பாடுகிறார். முக்கரணங்களாலும் சேவை செய்கின்றன என்றும் ஆழ்வார் சொல்கிறார். பேர் ஆய்ந்து என்பது வாயினால் திருநாமங்களை சொல்வது. ஏத்தும் போது,உள்ளம் என்பது மனத்தினால் ஸ்தோத்திரம் செய்வதை சொல்வது. போது அரிந்து கொண்டு என்பது பூக்களை கைகளால் பறித்துக்கொண்டு வருவதை சொல்வது.

11. பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று, இருகணி இளமூங்கில் வாங்கி, – அருகிருந்த, தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர், வான்கலந்த வண்ணன் வரை. (75)

எம்பெருமான் ‘நீர் நல்ல பெருந்தமிழர் என்பதை நாடுநகரமும் நன்கு அறிய ஒரு கவி சொல்லும், பார்ப்போம்‘ என்று கேட்க அதற்காக அப்போது அருளி செய்த பாடல். மதம்பிடித்து திரிந்துகொண்டிருந்த ஒரு யானையானது பெண் யானையை கண்டு, அதனை அப்பாற் செல்லவிடாமல், மூங்கில் குருத்தைப் பிடுங்கித் தேனிலே தோய்த்து அந்த பெண் யானையின் வாயில் பிழிந்து ஒரு இனிய உணவு அதற்கு கொடுத்து அதனை திருப்தி செய்ததாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இடமான திருமலையானது எம்பெருமான் உவந்து எழுந்தருளி இருக்குமிடம் என்கிறார். எம்பெருமான் பிராட்டியை உவப்பிக்கும்படி இருப்பதை கூறுதல் இந்த பாடலின் உள்ளுறை பொருள்

மீண்டும் இன்னொரு ஆழ்வார் திருவேங்கடமுடையான் பற்றி பாடிய பாசுரங்களில் சந்திப்போம், நன்றி.

திருவேங்கடமுடையான் பொய்கையாழ்வார்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள். ).

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு உள்ள மற்றைய பாசுரங்களையும் கொஞ்சம் பார்க்கலாமே என்ற ஆசையில் இந்த வலைப்பதிவுகள். முதலில் முதல் ஆழ்வார்கள், பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதில் பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்கள்.

பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதி

ஆழ்வார்கள், எம்பெருமானை விட எம்பெருமானோடு ஸம்பந்தம் பெற்ற பொருள்களையும் உகந்தவைகளாகக் கொண்டு, திருவேங்கடமுடையான் வரையில் கூட போகாமல், அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான திருமலையோடே நின்று அநுபவிக்கிறார்.

  1. எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை, வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார், வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை. (26)

கர்ம ஞான பக்தி பிரபத்தி என்ற வழிகளை பற்றி மோக்ஷம் அல்லது எம்பெருமானை அடையலாம். பெருமாளிடம் பெருமாளை மட்டுமே வேண்டுவது (சரணாகதி மூலம் அவனை அடைவது) – அவரை அவர் மூலமே அடைவது, அவரிடம் அவரை தவிர வேறு எதுவும் வேண்டாதது என்பதை விளக்கும் பாசுரம். திருமலை எல்லாருடைய வினைகளையும் போக்கிப் பலன்களை அளிக்க வல்லது. எழுவார் என்றால் ஐஸ்வர்யார்த்திகளையும் விடை கொள்வார் என்றால் கைவல்யார்த்திகளையும் வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் பாகவன்லபார்த்திகளையும் சொல்லி அனைவருக்கும் அருள்பொழியும் இடம் என்கிறார். வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை என்று சொன்னது, பரமபதத்திலே பரத்வகுணத்தை அநுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸூரிகளை , திருமலை வந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உள்ள மலை என்று சொல்லி நித்யஸூரிகளுக்கும் அருளும் மலை என்று முடிக்கிறார்.

2. வகையறு நுண்கேள்வி வாய்வார் கள், நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம் ஊதியவாய் மால் உகந்த ஊர் (37)

அடியார்கள் திருவேங்கடமுடையானை தரிசிக்க எல்லா திசைகளில் இருந்தும் வருவார்கள். வெண்சங்கம் ஊதியது பாரதப்போரில், அந்த கண்ணன் உகந்த ஊர். திருவேங்கடத்தான் கண்ணனே என்றும் எம்பெருமானே உகந்து எழுந்தருளிய திருத்தலம் திருவேங்கடம் என்றும் சொல்கிறார்.

3. ஊரும் வரி அரவம் ஒண்குறவர் மால்யானை, பேர எறிந்த பெருமணியை, – காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேல சுரர் என்னென்ற மால திடம். (38)

குலசேகராழ்வாரைப் போன்ற மஹான்களே திருமலையில் பாம்பாகவும் குறவராகவும் யானையாகவும் புற்றாகவும் பிறந்திருப்பர்கள் ஆகையாலே அப்பொருள்களையும் எம்பெருமானைப் போலவே கொண்டு பொய்கையாழ்வார் தம்முடைய பக்தியை சொல்கிறார். யானையே மேகம் என்றும், அதன் மேல் உள்ள ரத்னமணிகளே மின்னல் என்றும் எண்ணி திருமலையில் உள்ள பாம்புகள் வரப்போகின்ற இடிக்கு அஞ்சி, குகைகளில் ஓடி ஒளியும் என்கிறார்.

4. இடந்தது பூமி எடுத்தது குன்றம், கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே, பேரோத வண்ணர் பெரிது. (39)

ஓயாமல் பிறர் காரியமே போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை / எளிமை வருணிக்க முடியாதது. இதற்காக அவன் எடுத்த பல அவதாரங்களை இங்கு ஆழ்வார் குறிப்பிடுகிறார். மஹாப்ரளயத்தில் பூமியை இடர்ந்து எடுத்த வராகன், இந்திரனுடைய கோபத்தால் பொழிந்த மழையில் இருந்து ஆயர்பாடி மக்களை காப்பதற்கு கோவர்த்தன மலையை எடுத்த வரலாறு, கம்சனை கொன்று ஒழித்தது, என்று சொல்லி இந்த அவதாரங்களுக்கு மூலமான அவன் திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளவதையும் சொல்லி முடிக்கிறார்.

5. பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில் மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேல் அசுரர் கோன்வீழ கண்டுகந்தான் குன்று. (40)

யானைகள், விண்ணில் இருந்து விழும் விண்மீன்களை தவறாக குறவர் எறிந்த தீப்பந்தம் என்று எண்ணி பயந்து இருக்கும் இடம் என்றும், எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பெரியோர் இருக்கும் இடம் என்று ஆழ்வார் சொல்கிறார். நரசிம்ம அவதாரம் திருவேங்கடம். பாகவத விரோதியான இரணியனைத் தொலைத்துப் பரம பாகவதனான ப்ரஹ்லாதனைக் காத்தருளின, அடியவர்களின்பால் ஒரு தலை பக்ஷமாக இருப்பவன் என்ற மஹா குணத்தை இன்றும் வெளியிட்டுக் கொண்டு ஸேவை ஸாதிக்குமிடம் திருமலை என்கிறார்.

6. உணர்வார் ஆர் உன்பெருமை? யூழிதோ றூழி, உணர்வார் ஆர் உன் உருவந் தன்னை?, உணர்வாரார் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீகிடந்த பால்? (68)

பரவாசுதேவன், விபவம் எடுத்து இந்த மண்ணில் அவதாரம் எடுத்தவன், அர்ச்சைக்கு வேங்கடம், திருப்பாற்கடல் என்று நான்கு நிலைகளை சொன்ன ஆழ்வார் அந்தர்யாமியை சொல்லவில்லை. அது பரவாசுதேவனுடன் சேர்ந்து உள்ளதாக கொள்ள வேண்டும். திருமாலை அறிவதே அறிவு என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார், அறிவுக்கு எல்லை நிலம் எம்பெருமானே என்றும் இருந்தாலும், அவன் தன்மை அறிவார் இல்லை என்று சொல்கிறார். அவனே கூட அவன் தன்மை அறிய மாட்டார் என்பது “தனக்கும் தன் தன்மையறிவரியான்” என்பதின் மூலம் தெரியும்.

7. வழிநின்று நின்னைத் தொழுவார், வழுவா மொழிநின்ற மூர்த்தியரே யாவர், பழுதொன்றும் வாராத வண்ணமே விண்கொடுக்கும், மண்ணளந்த சீரான் திருவேங்கடம் (76)

த்ரிவிக்ரம அவதாரமே திருவேங்கடம். பக்திமார்க்கத்திலே நிலைத்து நின்று அவனை பின்பற்றுபவர்கள், உபநிஷத்துக்களில் சொல்லப் பட்டிருக்கிறபடி தங்களையும் தங்கள் குணநலன்களையும் உடையவர்களாகவே இருப்பார்கள் ; உலகளந்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்கிற திருமலையே ஒரு குறையும் இல்லாதபடி மோக்ஷம் அளிப்பதை காண்பதாக ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய திருமலையே தன்னைப் பற்றினவர்க்கு நற்கதியைத் தரும் வல்லமை உடையதாயிருக்கையில், எம்பெருமானைத் தொழுமவர்கள் நற்கதி பெறுவார் என்று நாம் தனியாக சொல்ல வேணுமோ? என்கிறார். அதாவது, மண்ணளந்த சீரானுடைய திருவேங்கடமே பழுதொன்றும் வராதவண்ணம் விண் கொடுக்குமதாயிருக்க, நின்னை வழி நின்று தொழுமவர்கள் வழுவா மொழி நின்ற மூர்த்தியராவர் என்பது விசேஷித்துச் சொல்ல வேண்டிய விஷயமோ என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

எம்பார் இப்பாசுரத்தை நாள்தோறும் காலையில் அநுஸந்திப்பது வழக்கமாம். “எம்பார் விடிவோறே அநுஸந்திக்கும் பாட்டு” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

8. வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும், அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும், – நான்கிடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே, என்றால் கெடுமாம் இடர். (77)

ஆழ்வாருக்கு இடைக்கழியில் எம்பெருமான் தன்னை காட்டிக்கொடுத்த இடம் அதனால் திருக்கோவலூர் மட்டும் அடைமொழிகளுடன் சொல்லப்பட்டது. மற்ற திவ்ய தேசங்களுக்குஅடைமொழி இல்லை. விண்ணகர், என்று சொல்லப்பட்டது ஒப்பிலியப்பன் உள்ள திருவிண்ணகரம் இல்லை, ஏனென்றால் அங்கு எம்பெருமான் நின்ற நிலை. பரமேச்சுர விண்ணகரம் அல்லது நந்திபுர விண்ணகரம் அல்லது பரமபதம் என்ற திவ்யதேசங்களில் ஒன்றை இருந்தானுக்கு என்று சொல்லப்பட்டதாக கொள்ள வேண்டும்.

திருமலையும், வைகுந்தமாநகரும், திருவெஃகாவும், பூ மாறாத நீர் நிலைகளையுடைய சிறந்த திருக்கோவலூரும் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களையும் நிற்பதும் வீற்றிருப்பதும் பள்ளிகொண்டிருப்பதும் நடப்பதுமாக இருக்கிறார் என்று அநுஸந்தித்தால் நமது இடரெல்லாம் நீங்கிவிடும் என்பது கருத்து. நாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் செய்த பாபங்களெல்லாம் போகும் என்பதை குறிக்கும் வண்ணம் எம்பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த மற்றும் நடந்த நிலை கூறியதாக கொள்ளலாம்.

9. படையாரும் வாட்கண்ணார் பாரசிநாள், பைம்பூந்தொடையலோடு ஏந்திய தூபம், இடையிடையின் மீன்மாய மாசூணும் வேங்கடமே, மேலொருநாள் மான்மாய எய்தான் வரை. (82)

கூரான கண்(அறிவு, ஞானம்) – இடை – உறுதியான வைராக்கியம்- மார்பு (பக்தி); எல்லா ஜீவாத்மாக்களும் பெண்களே! இராமன் திருவேங்கடத்தில் உள்ளான் முன்னொரு காலத்திலே ஸ்ரீராமாவதாரத்திலே மாரிசன் என்ற மாயமான் இறந்துபோகும்படி அம்பு விட்ட ஸ்ரீ ராமபிரான், வாசம் செய்யும் மலை திருமலை. பாரசிநாள் என்பது துவாதசி நாளை குறிக்கும். திருவாராதனத்திற்கு உபகாரணமாய் இருக்கும் தூபத்தின் வாசம் திருமலை எங்கும் இருக்கும் என்பதும் இந்த பாடலின் மூலம் சொல்லப்பட்டது.

10. உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும் உளன்கண்டாய், உள்ளூவார் உள்ளத்து உளன்கண்டாய், வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும், உள்ளத்தின் உள்ளான் என்றோர். (99)

அந்தர்யாமி, திருப்பாற்கடல் திருவேங்கடம் முதலிய இடங்கள் எம்பெருமானுக்கு  வசிக்கும் இடங்களாயினும், அவ்விடங்களில் எம்பெருமான் இருப்பதானது, சமயம் பார்த்து ஞானிகளின் மனத்திலே புகுவதற்காகவே ஆகும். ஸ்ரீவசன பூஷணத்தில்— அங்குத்தை வாஸம் சாதனம் ; இங்குத்தை வாஸம் ஸாத்யம்; இது (அடியவர்கள் உள்ளத்தில் புகுந்தால்) நடந்தால், அவற்றில் (மற்ற திவ்யதேசங்களில்) ஆதரம் மட்டமாயிருக்கும் என்று சொல்கிறார். புருஷோத்தமனான எம்பெருமான் எக்காலத்திலும் அடியவர்கள் உள்ளத்தில் இருக்கிறான். திருப்பாற்கடலில் இருப்பவனும், திருமலையில் இருப்பவனும்,  உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் இருப்பது அடியவர்களின் உள்ளத்தில் புகுவதற்காகவே என்றதை தன் மனதிற்கு சொல்கிறார்.

அடுத்து பூதத்தாழ்வார், இரண்டாம் திருவந்தாதியில் இருந்து, அடுத்த பதிவில். நன்றி.

திருமாலை – உம்பரால் அறியலாகா

To read this weblog in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம்.

சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த பாசுரம் போதெல்லாம் போது கொண்டு ( 26).

மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம் குரங்குகள் மலையை நூக்க (27).

குளித்து மூன்று அனலை (25) பாசுரத்தில் மனம், வாய் மற்றும் கை போன்றவைகளைக் கொண்டு சிந்தித்து, பாடி, மலர்களை தூவி, என்ற மூன்று விதமான செயல்களையும் சேர்ந்து செய்து இருக்கிறீர்களா என்று எம்பெருமான் கேட்டதாகவும், அடுத்த பாசுரமான, போதெல்லாம் போது கொண்டு(26) பாடலில், வாயினால் பாடி என்பதை மட்டும் தனியாக கேட்டதாகவும், அடுத்த பாசுரமான குரங்குகள் மலையை நூக்க (27) பாடலில், கை கால் போன்றவற்றைக்கொண்டு சேவை செய்து இருக்கிறீர்களா என்றும், இப்பொழுது பார்க்கப்போகும் பாசுரமான உம்பரால் அறியலாக (28) பாடலில், மனதினால் சிந்தித்து இருக்கிறீர்களா என்பதை தனியாக கேட்பதாகவும் கொள்ளலாம்.

பாசுரம் 28

உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. திருமாலை 28

பிரம்மா போன்ற தேவர்களால் கூட, இப்படிப்பட்டது என்று அளவிட்டு அறியமுடியாதபடி, தேஜோமயமான பரமபதத்தில் உள்ள எம்பெருமான், கஜேந்திரன் என்ற யானைக்காக, சிவந்த மாமிசத்தைச் சாப்பிட்டு வாழும்படியான முதலைமேல், கோபித்துக்கொண்டு வந்து அருளினான். இப்படி தம் அடியவர்களைக் காக்கும் பொருட்டு அவன் இருக்கையில், நம்மை காப்பாற்றிக்கொள்ள நமக்கு என்ன பாரம் ? நாய் போல் இருக்கும் நம்மிடத்தில் உள்ள குறைகளை கருத்தில் கொள்ளாமல், இருக்கும் நம்பெருமானுக்கு தொண்டு செய்யாமல், எதற்காக தான் பிறந்தேன் என்று ஆழ்வார் வருந்தும் பாடல்.

குரங்குகள், அணில்கள் சிறு கைங்கர்யங்கள் செய்த போது, அவைகளிடம் இருந்த நல்ல எண்ணம் கூட தங்களிடம் இல்லையாகில், கஜேந்திர ஆழ்வான் என்ற யானை பொய்கையில் இறங்கிய போது, அதன் காலை, முதலை பிடித்துக்கொண்டதால், தளர்வுற்று, எம்பெருமானை தன்னை காப்பாற்றுபவனாக நினைத்தது போல் தாங்கள் நினைத்தது உண்டா என்று எம்பெருமான் கேட்டதற்கு சென்ற பாசுரங்களில் சொல்லியது போல், இங்கும் அது தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார்.

திருமாலையில் ஒரு சில பாசுரங்களில் திருவரங்கன் திருநாமம் நேரடியாக வருவது இல்லை, அது போல் அமைந்த ஒரு பாசுரம் இது.

ஆழ்வார், கஜேந்திர மோக்ஷம் என்ற இந்த நிகழ்வை கீழ்கண்டவாறு பிரித்துப் பார்த்து எம்பெருமானின் பெருமையை விளக்குகிறார்.

  • உதவி செய்த எம்பெருமான் எப்படிப்பட்டவர்
    • உயர்ந்த பரமபதத்தில் இருப்பவர்; யாராலும் அறிய முடியாதவர்; எவருக்கும் உதவி செய்தே ஆகவேண்டும் என்ற எந்த நிர்பந்தம் எதுவும் இல்லாதவர். நித்யஸூரிகளால் ஆராதிக்கப்பட்டு வருபவர்
  • உதவி பெற்ற கஜேந்திரன் என்ற யானைக்கும், உதவி செய்தவருக்கும் உள்ள சம்பந்தம்
    • ஸ்ரீதேவி தாயாருக்கோ, பூமி பிராட்டிக்கோ, அனந்தாழ்வாருக்கோ, விஷ்வக்ஸேனருக்கோ, கருடனுக்கோ இருக்கும் சம்பந்தம் போல் இந்த யானைக்கு எம்பெருமானிடம் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் கிடையாது
  • உதவி பெற்றவரின் எதிரியின் (முதலையின்) பலம் / திறமை
    • இராவணன், ஹிரண்யகசிபு, சிசுபாலன் போன்ற பலமான எதிரி இல்லை, முதலையை வெறும் நீர்ப்புழு என்கிறார்.
  • உதவி செய்த எம்பெருமான் இந்த தருணத்தில் எப்படி இருந்தார்
    • எப்பொழுதும் சாந்தமாக இருக்கும் எம்பெருமான், கோபத்தை தன் மேல் ஏற்றிக் கொண்டு வந்தார்
  • உதவி எங்கே செய்யப்பட்டது
    • பரமபதத்தில் இருந்து, அதாவது இருந்த இடத்தில இருந்தே சக்கரத்தாழ்வாரை அனுப்பி உதவி செய்து இருக்கலாம்; ஆனால், எம்பெருமான் மடுக்கரைக்கு நேரடியாகச் சென்று உதவி செய்து உள்ளார்.
  • உதவி ஏன் அப்படி, அப்பொழுது செய்யப்பட்டது
    • எம்பெருமானிடம் தனக்கு உள்ள சம்பந்தத்தை ஒப்புக்கொள்ளும் தன்மை உடைய, தன்னை தன்னால் காத்துக்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்த, ஆபத்தில் அல்லது அபாயத்தில் உள்ள தம் அடியவர்களை காப்பதில் உள்ள அவசரம், அன்பு, அவர்களுக்கு காட்டும் பாரபட்சம், அவர்களுக்கு தரிசனம் கொடுப்பதில் உள்ள பிரியம்.

இந்த கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி மற்ற ஆழ்வார்கள் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

இப்போது உம்பரால் அறியலாக என்ற திருமாலை பாசுர விளக்கத்தை கீழே காண்போம்.

உம்பரால் அறியலாகா ஒளியுளார்

உம்பர் என்று சொன்னது சத்தியலோகம் முதலிய மேல் உலகங்களில் வாழும் பிரம்மன் போன்ற தேவர்களை குறிக்கும்.

அறியலாகா என்பது மிகுந்த ஞானம் பெற்ற பிரம்மன் சிவன் போன்றவர்களும் அறிய முடியாதது என்று சொல்கிறது. பகவத் கீதை (16.14), ‘நானே ஈஸ்வரன், நானே எல்லா போகத்தையும் அடைபவன், இயற்கையாகவே சித்தனாக இருப்பவன், இயற்கையிலேயே பலவான் ஆகவும், சுகத்தை அனுபவிப்பவனாகவும் இருப்பவன் நானே” என்று சொல்கிறபடி, தானே ஈஸ்வரன் என்ற நினைப்பிலுள்ள பிரம்மன், சிவன் போன்றவர்களும் அடைய முடியாததாக மட்டும் இல்லாமல், அறிய முடியாததாகவும் உள்ளது பரமபதம் என்று உரையாசிரியர் சொல்கிறார். அதற்கு அவர்கள் தங்களுக்கு அதிகமான ஞானம் இருந்தாலும், தங்களால் செய்ய முடியாது எதுவும் இல்லை என்ற ஆணவத்துடன் இருக்கிறார்கள் என்பதும், ஆணவத்துடன் உள்ளவர்களுக்கு பரமபதம் இடம் இல்லை என்பதுமே காரணம் என்றும் உரையாசிரியர் சொல்கிறார்.

அடுத்து விஷ்ணு புராணம் 1.9.55ல் பிரம்மா, தேவர்களாலும், முனிவர்களாலும், சங்கரனாலும், தன்னாலும் யாதொன்றை அறிய முடியாத இருக்குமோ அதுவே பரமேஸ்வரனான விஷ்ணுவின் பரமபதம் என்று சொல்வது எடுத்துக் காட்டப்படுகிறது.

ஒளியுளார் என்று சொன்னதில் உள்ள ஒளி என்பது பரமபதத்தையும் ஒளியுளார் என்பது அங்கு நித்யவாஸம் செய்யும் எம்பெருமானை குறிக்கும். சந்தோபநிஷத் (3.13.7)ல், பரமபதத்தில், எம்பெருமானால் படைக்கப்பட்டவை மற்றும் அவரின் படைப்புகளால் படைக்கப்பட்டவை என்ற எல்லாவற்றிக்கும் மேலாக உள்ளதும், தனக்கு மேற்பட்டது ஒன்று இல்லாததுமான இடத்தில் இருந்து ஒளிவிடும் பரஞ்சோதி என்றது, ஒளி என்ற சொல்லுக்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.

மஹாபாரதத்தில் ஆரண்ய/வன பர்வத்தில், (136.18.23), மஹாத்மாவான அந்த விஷ்ணுவின் இடம், சூர்யன், அக்னி இவைகளில் ஒளியை விட மிக அதிகமானதும், அந்த ஒளியின் தேஜஸால், தேவர்களும், அசுரர்களும் கூட அதைக் காண முடியாததாக உள்ளது என்றும், அங்கு போனால் மறுபடி இந்த உலகிற்கு திரும்புவதில்லை என்றும் சொல்கிறது.

ஒளியுளார் , என்றது மூன்றாம் திருவந்தாதியில் (51) சொன்ன கலங்காப் பெருநகரம் என்று சொல்லப்பட்ட பரமபதத்தில், நித்யஸூரிகளை அனுபவித்துக்கொண்டு இருப்பவன், சம்சாரத்தில், துன்புற்று இருக்கின்ற ஒரு அடியானை காப்பாற்றுவதற்காக வந்தார்.

ஆனைக்காகி

இப்படி எல்லை இல்லாத மேன்மை உடையவர், அரைகுலைய, தலைகுலைய (அவசரமாக) காரியம் செய்ய வந்தது, பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான், போன்ற உயர்ந்தவர்களுக்காகவோ என்று பார்த்தால், அது இல்லை என்றும், ஒரு விலங்கிற்காக இப்பாட்டு பட்டார் என்கிறார். உதவின எம்பெருமானின் உயர்வையும், துன்புற்ற யானையின் தாழ்வையும் ஒப்பிட்டால், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்யாசம் தெரியும் என்பது கருத்து.

ஒரு அடியானை காப்பாற்ற வேண்டும் என்றால், எம்பெருமான் தன்னுடைய மேன்மையையோ, அடியானின் தாழ்ச்சியையோ பார்ப்பது இல்லை. அவர்களுடைய ஆபத்தையும், அவர்களுக்கு தன்னிடம் உள்ள ஒழிக்க முடியாத சம்பந்தத்தையும் மட்டுமே பார்க்கிறான் என்பது இந்த கஜேந்திர வரலாற்றில் இருந்து தெரிய வரும்.

செம்புலால் உண்டு வாழும் முதலை மேல்

அடியவரின் தாழ்ச்சியைப் பார்க்காவிட்டாலும், அவன் எதிரியையாவது யார் என்று பார்த்தால், அது தன்னை விட தாழ்வான மீன்களை உணவாக கொண்டு ‘வீற்று இருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல ‘ (திருவாய்மொழி 4.5.1) என்கிறபடி, எல்லா உலகங்களையும் ஆழ்கின்ற எம்பெருமானை போல தனக்கு நிறைவு வந்துவிட்டதாக நினைக்கும் ஒரு நீர்ப்புழுவை எதிர்த்து அல்லவோ வந்தார் என்கிறார். விஷ்ணுபுராணம் (1.9.35)ல் பிரம்மன் சொல்வதாவது, தேவர்களுக்கு துன்பம் வந்தபோது, மேலானவர்களுக்கும் கீழானவர்களுக்கும் என்று எல்லோருக்கும் ஈஸ்வரனாகவும், அசுரர்களுக்கு சத்ருவாகவும் இருக்கும் எம்பெருமான் விஷ்ணுவை சரண் அடையுங்கள் என்பதாகும். பிரம்மன் தனக்கும் மற்ற தேவர்களுக்கும் அசுரர்களாலும் அரக்கர்களாலும் துன்பம் வரும் போது, அந்த துன்பங்களைப் போக்க வேறு புகல் இடம் இல்லாமல், எம்பெருமானை சரண் அடைந்தபோது, அவர், ஹிரண்யகசிபு, இராவணன் போன்ற வலிமை மிகுந்த அரக்கர்களோடு போரிட்டு அவர்களை அழியச்செய்தான் என்றால் அதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு ஆனை கூப்பிட்டதால், ஒரு முதலைமேல் கோபம் கொண்டு மிகத் தாழ்மையான அதனை ஒரு எதிரியாக கருதிக்கொண்டு அவசரமாக ஓடி வந்தது ஆச்சரியமே என்று உரை ஆசிரியர் சொல்கிறார்.

சீறி

எம்பெருமான் எப்போதும் சாந்தமானவர். இதை தன் விஷயமாக இருந்தால் எம்பெருமான் சாந்தம் உடையவராக இருப்பர் என்று இராமாயணம், அயோத்தியா காண்டம், 1-10ல் சொல்லப் படுகிறது. ராமாயணம், ஆரண்ய காண்டம், (34-24)ல், இராமன், அரக்கர்களைக் கொல்வதற்காக கடும் கோபத்தை வரவழைத்துக் கொண்டார் என்றும், . அப்படி கோபம் கொண்டவர், பிரளயத்தில் வரும் கோபாக்னியைப் போல் காணவொண்ணாதவராக இருந்தார் என்றும் சொல்கிறது. தன் இயல்பான சாந்தியை மாற்றிக்கொண்டு, தன்னிடம் இல்லாத கோபத்தை வரவழைத்துக் கொள்ளவேண்டும். பிறகு, இராமாயணம் யுத்த காண்டத்தில், (59-136)ல் இராவணனால் காயப்படுத்தப்பட்ட வானரர்களில் சிறந்தவரான ஹநுமானை பார்த்தபோது, இராமன் கோபத்திற்கு வசப்பட்டான் என்று கூறுகிறது. அதாவது அடியார்களிடத்தில் யாராவது அபசாரத்தைக் கண்டால், எம்பெருமான் கோபத்திற்கு வசப்பட்டு விடுவான் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி கோபத்திற்கு வசப்படும் போது, எதிரி எவ்வளவு தாழ்ந்தவன் என்பதை பார்க்க முடியாது என்பது உண்மை என்பதால் இதில் ஆச்சர்யம் இல்லை என்று உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

கொடியவாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு என்று திருமங்கையாழ்வார் தன் பெரிய திருமொழியில் (5.8.3) சொன்ன இந்த பெருங்குணத்தை தங்களுக்கு தஞ்சமாக கொண்டார்கள்.

வந்தார்

இருந்த இடத்தில இருந்து சங்கல்பத்தால் எதிரியை அழிக்கக்கூடிய சக்தியை பெற்ற எம்பெருமான் அவசரம் அவசரமாக மடுக்கரைக்கு ஓடி வந்தது, ஆச்சர்யமே என்று ஆழ்வார் சொல்கிறார். உலகத்தை அழிப்பதாக இருந்தால், இருந்த இடத்தில இருந்து சங்கல்பித்து அழிக்கலாம், ஆனால் அடியவர் ஒருவரின் துயரை துடைக்க, தான் நேரடியாக வந்து தன் கையாலேயே அழிக்காத போது, அவன் சீற்றம் / கோபம் தணியாது என்பது கருத்து. அன்றைக்கு யானைக்கு ஓடி வந்து உதவியது தனக்கே உதவியது போல் ஆழ்வாருக்கு இருந்தது. முதலையின் வாயில் தானே அகப்பட்டது போல், திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 5.8.3ல் கொடியவாய் விலங்கு, என்று சொன்னதும் இன்னொரு மேற்கோள் ஆகும். திருமங்கை ஆழ்வாருக்கு வலிக்காவிட்டால், அவர் கொடிய வாய் விலங்கு என்று பாடி இருக்க மாட்டார். அதே போல் தான் தொண்டரடிபொடி ஆழ்வாரும் எம்பெருமான் யானைக்கு உதவியது தனக்கே உதவியது போல் பாடி உள்ளார். அதாவது அடியார்களில் ஒருவருக்கு உதவியது தமக்கு உதவியது போல் என்று எண்ணிக் கொள்ளாவிட்டால் அது வைஷ்ணவம் ஆகாது என்பது இதில் இருந்து வரும் கருத்து. எம்பெருமான் ஆற்றங்கரைக்கு வந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை, இருந்தாலும் அவன் வந்தான். அதேபோல், அவனிடம் சரண் அடைந்தவர்க்கு துயரம் என்றால் நிச்சயம் வருவான்.

நம் பரமாயது உண்டே

மேலே சொன்னவை, எம்பெருமானுக்கு அடியார்களிடத்தில் எப்பொழுதும் அதீத பிரியமும், கருணையும் இருப்பதும் அவன் அவர்களுக்காக ஒரு தலை பட்சமாகவும் நடப்பான் என்பதும் புரியும். அப்படி நம்மை காப்பாற்ற அவன் இருக்கும்போது நாம் ஏன் நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்று ஆழ்வார் கேட்பதாக இந்த தலைப்பில் உள்ள வார்த்தைகள் அமைந்துள்ளன. மேலும் உரையாசிரியர், எம்பெருமானின் சிறப்பை கீழ்கண்டவாறு எடுத்து சொல்கிறார்.

  • எம்பெருமான் தன்னுடைய மேன்மையை பார்ப்பவனாகவோ
  • அடியார்களின் சிறுமையைப் பார்ப்பவனாகவோ
  • நம்முடைய பாவங்களின் அதிகமான அளவைக் கண்டு, இன்னும் கொஞ்சம் துன்பத்தை அனுபவிக்கட்டும் என்று கால தாமதம் செய்வதனாகவோ

இருந்தால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவன் அப்படி இல்லை என்றும் கூறுவது தான் இந்த ‘நம் பரமாயது உண்டே“.

நாய்களோம்

ஆழ்வார் நம்முடைய தாழ்வான நிலையை பார்க்கையில், கஜேந்திரன் என்ற அந்த யானை மிக உயர்ந்த இடத்தில, அதாவது, சனகர் போன்ற ரிஷிகள் ஸ்தானத்தில் வைக்கும்படி அல்லவோ இருக்கிறது என்கிறார். திறந்து கிடைக்கும் வீட்டில் நுழைந்தாலும் விரட்டி அடிக்கும் நாயின் நிலையில் நாம் இருக்கிறோம் என்கிறார். நாயின் உரிமையாளன் தொட்டாலும் உடனே குளித்து தன்னை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அளவில், நாம், நாயை போன்ற தாழ்வை உடைய நீசர்கள் என்பது கருத்து.

சிறுமை ஓரா எம்பிராற்கு

நாம் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் நம்முடைய தாழ்ச்சியை பார்க்க கண் இல்லாதவன் என்று எம்பெருமானை ஆழ்வார் கூறுகிறார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அவிஞ்ஞாதா சஹஸ்ராம்ஸு என்ற இரண்டு திருநாமங்கள் வருகின்றன. அவைகளுக்கு அர்த்தம் சொல்லும் போது, அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும் குணங்களை ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வார்கள். இதையே சற்று மாற்றி அடியார்களின் குற்றங்களை காண முடியாத அவிஞ்ஞாதாவாக இருக்கிறான் என்றும் அந்த குற்றங்களையே குணங்களாக மாற்றி, அதையும் ஆயிரம் மடங்காக்கி எடுத்து கொள்ளும் சஹஸ்ராம்ஸுவாக இருக்கிறான் என்றும் சொல்வதுண்டு. எல்லாம் அறிந்தவன் என்று அறியப்படும் எம்பெருமானை எதற்காக தோஷங்களை அறியாதவன் என்று ஆழ்வார் சொல்கிறார் என்று கேட்டு கொண்டு, முண்டகோபநிஷத் (1-1-10) சொல்வதை முதலில் சொல்லி உரையாசிரியர் கீழ்கண்ட விளக்கம் தருகிறார். எந்த பரம புருஷன் எல்லா பொருள்களுடைய ஸ்வரூபத்தையும், குணத்தையும் (ஸ்வாபம்) அறிகிறானோ, எவனுடைய சங்கல்பம் ஞானமயமாக இருக்கிறாதோ என்று சொல்வதன் மூலம், பரம்பொருள் எல்லாவற்றையும் அறிகிறான் என்பதே முண்டகோபநிஷத் 1.1.10ல் சொல்லப்பட்டது. எம்பெருமான் அடியவர்களின் தோஷங்களை கண்டு கொண்டு, அவற்றை பொறுத்து உதவி செய்வபனாக தன்னை நினையாமல், தோஷங்களை காண கண்ணிட்டு அவற்றை பாராமலோ, அவற்றை நன்மைகளாக / குணமாகக் கொண்டோ அருள் பாலிக்கிறான் என்று பொருள்.

எம்பிராற்கு

எம்பிராற்கு என்பதை தனியாக எடுத்துக் கொண்டு விளக்கத்தை காண்போம். இப்படி நம் குற்றத்தை கண்டுகொள்ளாமல், ஆபத்தையே காரணமாகக் கொண்டு நம்மை காப்பது என்று நமக்காக வகுத்த எம்பெருமான் என்பதை எம்பிராற்கு என்று சொல்கிறார். எம் என்பது தன் ஸ்வரூபத்திற்கு தகுந்த ஸ்வாமியாக இருப்பதையும், பிராற்கு என்பது உதவி செய்பவன் என்றும் கொள்ளலாம்.

ஆட் செய்யாதே

இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு தொண்டு செய்வது அல்லவோ தகுந்தது. நம்முடைய காரியத்தை எம்பெருமான் தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக்கொண்ட பின்னர், நாம் நம்முடைய சரீரம், உடம்பின் உறுப்புகள் (இந்திரியங்கள்) நமக்கு என்று விதிக்கப்பட்ட பகவத் கைங்கர்யத்திற்கு உட்படுத்துவது அல்லவோ தகுந்த செயல். அப்படி செய்யாமல், இருக்கிறேனே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

என் செய்வான் தோன்றினேனே

இங்கு, ஆழ்வார், பயனற்ற பிறப்பை உடையவன் ஆனேன் என்று சொல்கிறார். பிறவி எடுத்த பயன் எம்பெருமானுக்கு தொண்டு செய்வதே, ஆனால், தான் அதை செய்யாமல், தன்னுடைய பிறப்பு வீணானதே என்று சொல்கிறார். இதற்கு மேற்கோளாக, “லக்ஷ்மணன் வனவாசத்திற்கே பிறந்தவன் என்றும், இராமனுக்கு சேவை செய்யவே பிறந்தவன்” என்றும், லட்சுமணனுக்கு சுமித்ராதேவி சொன்ன வார்த்தைகள் (இராமாயணம் அயோத்திய காண்டம் 40.5) சொல்லப்படுகின்றன. அதே போல் (இராமாயணம் அயோத்திய காண்டம் 31.25) லக்ஷ்மணன் இராமனிடம் “தேவரீர் உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தங்களுக்கு எல்லாவிதமான தொண்டுகளும் செய்வேன்” என்று சொன்னவற்றை ஆழ்வார் நினைவு படுத்தி, அப்படி லக்ஷ்மணனைப்போல் எம்பெருமானுக்கு சேவை செய்ய ஆசை கொண்டு இருந்தால் பிறந்தேன் என்று சொல்லலாம். தம்முடைய பிறப்பு உயிர் இல்லாத, அறிவு இல்லாத ஜடபொருட்கள் போல் ஆனதால், தோன்றினேன் என்று ஆழ்வார் கூறுகிறார். முன் பாடலில் சொன்ன மாதிரி, தீய கோள்கள் வானில் வருவதை, தோன்றின என்று கூறுவது வழக்கம், அதுபோல், தான் பிறந்ததும், தீய கோள் போல், எம்பெருமானுக்கு சேவை செய்யாமல் வீணாகிவிட்டதே என்று கூறி இந்த பாடலை முடிக்கிறார்.

இனி, அடுத்த பாசுரத்தில் மீண்டும் சந்திக்கலாம், நன்றி.

கஜேந்திர மோக்ஷமும் ஆழ்வார்களும்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கிய சரணாகதிகளில், கஜேந்திரன் சரணாகதி, விபீஷ்ண சரணாகதி, திரௌபதி சரணாகதி போன்றவை அதிகம் பேசப்படும் சரணாகதிகள். பாகவத புராணம் இந்த கஜேந்திர மோக்ஷ வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார்.

கஜேந்திர மோக்ஷம் பற்றி சில ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை இங்கே கொடுத்துள்ளேன். திவ்யப்ரபந்த உரையாசிரியர்கள், சில பாடல்களுக்கான விளக்கங்களில், கஜேந்திர மோக்ஷத்தை எடுத்து காட்டியும் உள்ளார்கள். அத்தகைய பாசுரங்களையோ, இன்னும் சில நேரடியான பாசுரங்களை நான் தவற விட்டு இருக்கலாம், அது அடியேனுடைய பிழையாகும், மன்னிக்க வேண்டுகிறேன். அவற்றைப்பற்றி தெரிவித்தால், நன்றி, இங்கே சேர்த்து விடுகிறேன். முதலில் கஜேந்திர மோக்ஷம் பற்றி சில குறிப்புகள்;

கஜேந்திர மோக்ஷம்

இந்திரத்யும்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும்போது இவ்வுலகம் மறந்த நிலையில் இருப்பான்.  இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு நாள் துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இந்திரத்யும்னன் தனது பக்திக் குடிலை விட்டு வெளிவராததால், இறுதியில் அவன் மீது மிகவும் சினங்கொண்ட முனிவர், யானையைப் போலச் செருக்குடன் இருந்ததனால், அவனுக்கு விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாக பிறக்க சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலை பிடிக்க நீ மஹாவிஷ்ணுவை கூவி அழைக்க உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.

கூஹு என்னும் அரக்கன் ஒருவன் ஒரு நாள், அகத்தியர் தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலை பிடித்து இழுத்தான். சினமுற்ற அகத்தியர் அவனை ஒரு முதலையாக பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் அடைவதாக கூறினார்.

பின்னொருநாள், மேலே சொன்ன சாப விமோச்சனைகளை போல், கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடன் மீதேறி அங்கு எழுந்தருளித் தனது  சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையை கொன்று யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருளினான். இதனை கபிஸ்தலம் என்ற திவ்யதேச ஸ்தலபுராணத்திலும் அறியலாம்.

இனி, ஆழ்வார் பாடல்களும், அவற்றின் சிறு விளக்கங்களுடன் :

பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
1பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள் ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் 2.1.9:முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனின் குரல் கேட்டு துயர் தீர்க்க கருட வாகனனாக வந்து வருத்தத்தைப் போக்கியவன் அப்பூச்சி காட்டுகின்றான்.
2ஒரு ஆரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன் தன் ஒரு ஆரணம், உயிருண்டவன் சென்று உறையும் மலை, கரு ஆரணம் தன்பிடி துறந்தோட கடல் வண்ணன், திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே 4.2.5கஜேந்திரன் என்ற யானையின் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்டு, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, எம்பெருமான் கண்ணன் நித்தியவாசம் செய்கின்ற திருமாலிரும்சோலையில், கோபித்துக்கொண்டு சென்ற பெண் யானையை ‘கடல்வண்ணர் மேல் ஆணை, செல்லாதே’, என்ற ஆண் யானையின் சொல் கேட்டு நின்ற திருத்தலம் ஆகும். ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக்கொன்றான்; ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும்  சிசுபாலனும்.); ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.); ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்;  (ஸுக்ரீவனும் வாலியும்); ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக் கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.); ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்) என்று ஒன்றை காத்து ஒன்றை கொன்ற எம்பெருமானின் பெருமையை சொல்லி மகிழலாம்.
3துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே, ஒப்பிலேன் ஆகிலும், நின்னை அடைந்தேன், ஆனைக்கு நீஅருள் செய்தமையால், எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே. 4.10.1திருவரங்கம் கோவிலில் திருஅனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு உள்ளவனே, அடியார்களை காப்பதில் மிகவும் சாமர்த்தியம் உள்ள தங்களை அடைவதற்கு, சர்வ இந்திரியங்களும் அடங்கிய பின்னும் தேவரீர் துணை இருப்பீர் என்ற எண்ணம் தானே காரணம். அப்படி எம்பெருமான் திருஉள்ளத்தில் திட்டமிட்டு இருக்கும் அடியார்களுக்கு தான் நிகரில்லை என்றாலும், கஜேந்திரன் என்ற யானையை காத்தவன் என்ற காரணத்தினால், அதைபோல் அவனுடைய கருணையினால், தன்னையும் காத்து அருள்வார் என்று ஆழ்வார் அவனை சரண் புகுந்ததாக சொல்கிறார். தன்னுடைய முதுமையில், துயர் படும் காலத்தில், இந்திரியங்கள் ஒன்றுக்கும் பயன் பெறாமல் போகும் போது, எம்பெருமானை ஒரு நொடிகூட, நினைக்கமுடியாமல் போகும் காலத்திற்காக (அப்போதைக்கு), இப்போதே, இந்திரியங்கள் நன்றாக உள்ள காலத்தில், சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி ஆழ்வார் சொல்லியதால் இதை எம்பெருமான் நினைத்து வைத்து இருந்து ஆழ்வாரை காக்க வேண்டுமோ எனில், ஆழ்வார், அதற்காகத்தான் ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் ஆழ்வாரின் மனக்கோவிலில், வந்து பள்ளி கொண்டு அருளினது என்று பின்னால் சொல்ல போவதற்கு வகையாய் அமைந்துள்ளது இப்பாசுரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
4குண்டு நீருறை கோளரீ மத யானை கோள்விடுத்தாய் உன்னைக் கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல், வண்டல் நுண் மணல் தெள்ளியாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம், தெண்டிரைக்கடற் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே 1.2.3மிக்க ஆழத்தை உடைய கடலிலே சாய்ந்து அருளுபவனும், சிங்கம் போன்று மிடுக்கை உடையவனும், மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு, முதலையால் நேர்ந்த துன்பத்தைத் தொலைத்து அருளினவனுமான கண்ணபிரானே! அடியார்களின் துயரத்தை தீர்க்க வல்லவனான நீ, உன்னை பார்த்து ஆசைப்படுகின்ற எங்களை கடைக்கண்ணால் பார்த்து துன்பப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார்.
திருமழிசைப்பிரான்
திருச்சந்தவிருத்தம்
5ஆனை காத்து ஓர் ஆனை கொன்றது அன்றி, ஆயர் பிள்ளையாய், ஆனை மேய்த்தி, ஆ நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால், ஆனைகாத்து மையரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயமென்ன மாயமே. 40கஜேந்திர ஆழ்வான் என்ற யானையை காத்தருளி, ஆயர் குல பிள்ளையாக, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, பசுக்களை மேய்த்து, பசுவின் நெய்யை அமுது செய்து, கோவர்தனம் என்ற மலையினை கொண்டு பசுக்களை காப்பாற்றி, நப்பின்னை பிராட்டிக்காக, அவள் எதிரே நின்று, ஏழு எருதுகளை முடித்தது, என்ன ஆச்சர்யம், என்ன ஆச்சர்யம்.
நான்முகன் திருவந்தாதி
6மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ, மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள் விடுப்பான், ஆழிவிடற் கிரண்டும் போயிரண்டின் வீடு.உன்னைச் சிந்தித்து அடிபணியாதவர்கள், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில், வீடு என்ற பரமபதத்தை பெறாமல், மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து துன்புறும்படி மதித்தாய் என்பது ஒரு கருத்து. நான்கு வேதங்களைக் கொண்டு, உன்னை சிந்திக்காதவர்கள் ஒழியும்படி மதித்தாய் என்பது அதே வரிக்கு இன்னொரு கருத்து. கஜேந்திரன் என்ற யானைக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யமும், முதலைக்கு சாபமோக்ஷமும் கொடுத்து அருளினாய் என்றும் ஆழ்வார் எம்பெருமானை நோக்கி பாடும் பாசுரம் இது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
7உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. 28தேவர்களாலும் அறிய முடியாத தேஜோ மயமான பரமபதத்தை உடைய எம்பெருமான், கஜேந்திராழ்வானுக்காக, சிவந்த மாமிசத்தை அப்படியே உண்டு வாழும் முதலையின் மேலே கோபம் கொண்டு, ஆற்றங்கரைக்கே வந்து காத்து அருளினார். அப்படி அடியார்களின் மேல் ஒருதலை பட்சமாக அன்பு காட்டுகிற எம்பெருமான் இருக்கிறது போது, நாம் ஏன் நம்மைப்பற்றி கவலைப்பட வேண்டும். அவனுக்கு தொண்டு செய்து காலத்தை கழிக்காமல் ஏன்தான் தோன்றினேனோ என்று ஆழ்வார் கவலைப்படும் பாடல்.
8பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான், எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா உன்னை யென்னோ களை கணாக் கருது மாறே. 44கங்கா நதியை சடையில் உடைய சிவனும், நான்முக கடவுளும், உன்னை காண்பதற்காக, எண்ணமுடியாத நெடுங்காலமாக காணமுடியாமல் தவம் புரிந்தவர்களாய் வெட்கமடைந்து தலை கவிழ்ந்து இருக்க, அந்த காலத்தில், முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனுக்காக எழுந்தருளி நித்யஸூரிகளும் ஆச்சர்யிக்கும்படி பரம க்ருபையைச் செய்தருளி, சிலருக்காக சிலரை கொன்ற எம்பெருமானை சர்வ ரக்ஷகன் என்று தஞ்சமாக நினைக்கலாகுமோ என்று சில மதிகேடர் கூறுவர் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருப்பள்ளியெழுச்சி
9கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக் கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ, எழுந்தன மலரணைப் பள்ளி கொள் அன்னம், ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி, விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அனுங்கி ,அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே 2கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றானது, முல்லை கொடிகளில் மலர்ந்து கொண்டு இருக்கும் முல்லை மலர்களை தழுவிக் கொண்டு அதன் வாசத்தினால் பெருமாளுக்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்கின்றது. அன்று கஜேந்திர ஆழ்வான் என்னும் யானையை, கொடிய ஆபத்தில் இருந்து வேகமாக வந்து காப்பாற்றியது போல், அடியோங்களையும் காக்க விரைவில் கண் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
10மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த, கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட் டானை, தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. 2.3.9மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும் படியாக முதலையானது அவ் யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின் மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய  திருவல்லிக்கேணி கண்டேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
11கொழுந்து அலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டதற்கு எள்கி, அழுந்தி யமா களிற்றினுக்கு அன்று ஆழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள் செய்தானை, எழுந்த மலர்க் கருநீலமிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட, செழுந்தடநீர்க் கமலம் தீ விகை போல் காட்டும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. 2.10.3சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே  முதலை வாள் போன்ற பற்களினால் காலைக் கவ்வினதற்கு வருந்தின கஜேந்திராழ்வானுக்காக ஆழி கொண்டு வந்து தோன்றி, அந்த யானைக்கு கருணை பொழிந்த பெருமானை செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள் விளங்கும் திருக்கோவலூரதனுள், நான் கண்டேன் என்கிறார்.
12முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய, விதலைத் தலைச் சென்றதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம், விண் அண்ணவும் பதலைக் கபோதம் ஓளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம், மதலைத் தலை மென்  பெடை கூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2முன்பொருகாலத்தில் பொய்கைக் கரையிலே முதலையினால் ஏற்பட்ட மிகப் பெரிய துன்பம் தீருமாறும், கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும், தாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!என்று அஞ்சி நடுங்கியிருந்த காலத்தில், எழுந்தருளி, அந்த யானைக்கு உதவி செய்த எம்பெருமானை, விண்ணுலகு வரை உயர்ந்து இருப்பதும், கலசங்களையும் உடைய திருநாங்கூர் திவ்யதேசத்தில் உள்ள மணிமாடக்கோயில் சென்று, என் மனனே, வணங்கு, என்று ஆழ்வார் தன்னுடைய மனதுக்கு கூறுகிறார்.
13தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி, முன்னு காம்பு உடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை, பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட, எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே. 4.5.1பனை போன்ற துதிக்கையை உடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கி அருள் செய்தவன், மூங்கில்களை கொண்ட கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்து, கடுமையான மழையைத் தடுத்த எம்பெருமான், திருநாங்கூரில் திருமணிக்கூடம் என்னும் திருப்பதியில் நித்ய வாசம் செய்கின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
14தாவளந்து உலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்று ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே. 4.6.1உலகம் அனைத்தும் தேடி பெரிய பூக்களை உடைய குளத்தில் இறங்கியபோது, முதலையினால் கவ்வப்பட்டதால், நாவுக்கு அலங்காரம் போல் இருக்கும் திருநாமங்களை சொல்லி துதிக்க, கஜேந்திரனின் அச்சத்தை போக்கியவனே, மிக்க செல்வமானது அதிகமான திருக்காவளம்பாடி என்ற திவ்யதேசத்தில் நித்யவாஸம் செய்யும் கண்ணபிரானே நீயே காப்பாற்றவேண்டும் என்று ஆழ்வார் பாடுகிறார்.
15கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே! 5.1.2வாமனனாக அவதரித்து மஹாபலியிடம் இருந்து எல்லா உலகங்களையும் கைப்பற்றியவனும், கஜேந்திரனுடைய துயரத்தை போக்கி அருளினவனும், பரம பவித்திரனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், கழனிகளில் மீன்களானவை துள்ளி விளையாடும் போது, பறவைகள், தங்கள் குட்டிகளுக்கு தேவையான சிறு மீன்களை தேடும் புள்ளம்பூதங்குடி ஆகும்.
16ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடைய தேர் ஓருவனாய் உலகில், சூழிமால் யானைத் துயர்கெடுத்து, இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து, பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவனொளி கெட, பகலே ஆழியால் அன்று அங்கு காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந்தானே. 5.7.8காலம் போன்ற எல்லாவற்றையும் நிர்வகிக்கும், ஹோமம் யாகம் இவற்றுக்கு தலைவனாய், ஒற்றை சக்கர தேர் ஓட்டும் சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும், எம்பெருமான், கஜேந்திரனுடைய துன்பத்தை போக்கியவனும், முன்பு ஒரு காலத்தில், இலங்கை அழியும்படியாக கூறிய அம்புகளை பிரயோகித்தவனும், அர்ச்சுனனுக்கு பின்னொருநாள், பகலில் ஆழிகொண்டு சூரியனை மறைத்து உதவி செய்தவனும் அரங்கமாநகரில் அமர்ந்து உள்ளான் என்று கூறுகிறார்.
17கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம், முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப, கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளதறிந்து, உன் அடியனேனும் வந்தடியிணை யடைந்தேன் அணிபொ ழில் திரு வரங்கத்தம் மானே, 5.8.3நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையில் இருந்த தாமரைமலரை எம்பெருமானுக்காகப் பறித்த யானை ஆபத்தை அடையும்படி, மிக்க வலிமையையுடைய ஒரு முதலையானது பிடித்துக்கொள்ள, யானை தன்னை தன்னுடைய வலிமையினால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், எம்பெருமானை சரண் அடைய, எம்பெருமான் முதலையின் உயிர்போகும் வரை கோபத்தை வரவழைத்து கொண்டது தெரிந்து, அடியேனும் வந்து உன் சரண் அடைந்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
18தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம், மூவாமை நல்கி முதலை துணித்தானை, தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை, நாவாயுளானை நறையூரில் கண்டேனே. 6.8.3பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி வந்து, அருள்புரிந்து, முதலையை ஒழித்தவனை, நித்யஸூரிகளுக்கு தலைவனை, செந்தாமரைப்பூ போன்ற திருக்கண்களை உடையவனை, திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனை, திருநறையூரில் கண்டனே என்று பாடுகிறார்.
19குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று, பொன்றாமை, அதனுக்கருள் செய்த போரேற்றை, அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர், நின்றானை, அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே. 7.6.4கோவர்த்தன மலையைக்கொண்டு மழையை தடுத்தவனும், நல்ல குலத்தில் பிறந்த கஜேந்திரன் என்ற யானை அன்று முதலையின் வாயில் சிக்கி முடிந்து போகாமல் தடுத்து அருள் செய்தவனும், போர் செய்ய வல்ல காளையை போன்றவனும், பசு நெய்யை நன்றாக ரசித்து உண்பவனும், அன்றே தேரழுந்தூரில் அமர்ந்து இருப்பவனை தான் கண்டு கொண்டு விட்டதாகவும், அதனால் குறை ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
20குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று, நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின், மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய, அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3மலையில் இருந்து சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும், திரட்டிக்கொண்டு கழனிகளில் எல்லாம் நீர் பாயும், அலை எறியும் காவிரியினால், செழிப்பும் சிறப்பும் பெற்ற தேரழுந்தூர், எம்பெருமான் உகந்து நின்ற திவ்யதேசம் ஆகும். கஜேந்திராழ்வான் ஆற்றில் இறங்கியபோது, வலிமையான முதலை பிடித்து இழுத்ததினால் அந்த முதலைக்கு அஞ்சி, சந்திரனைப்போன்று குளிர்ந்த ஒளியை உடையவனே என்று ஓலமிட்டு துதித்த யானையின் துன்பத்தை நீக்கியவன் என் குற்றங்கள் இல்லாத எம்பெருமான் ஆவான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
21இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு, கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான், அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி, முன் கலை மாச்சிலையால் எய்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7கஜேந்திரன் என்ற யானை இலைகள், பூக்கள் நிரம்பிய அழகிய குளத்தில், முதலையினால் துன்பம் அடைந்து, கையேந்தி, நிற்கையில் அருள்புரிந்து காத்தவன், கடல் சூழ்ந்த இலங்கைக்கு தலைவனான இராவணனின் தம்பியான விபீஷணனுக்கு, லங்கா அரசை கொடுத்து அருளினவன், அதற்கு முன்பு, மாயமான் வேடத்தில் வந்த மாரீசனை கூறிய அம்பினால் கொன்றவனுடைய ஊர், நாம் தொழும் திருக்கண்ணபுரம் ஆகும் என்கிறார் ஆழ்வார்.
22கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை, மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை, அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. 8.9.1நீண்ட துதிக்கையையுடையதும், மதம் கொள்ளும் இயல்பு உடையதுமான கஜேந்திரனுடைய துயர் போக்கி அருளின காளமேகத்தைப் போன்ற, மை நிறத்தை உடைய, மிகப்பெரிய விலைமதிப்பில்லாத நீல ரத்தினத்தைப் போன்றவனும் மரகத பச்சை போன்றவனும், எனக்கு ஸ்வாமியும், எனக்கு உபகாரம் செய்து அருள்பவனும், சர்வேஸ்வரனும், என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை அடியேன் அடைந்து உய்ந்து போனேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
23கவளமா கதத்த கரி உய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து, துவள மேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஓண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஓண் கழனி திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 9.1.2கவளம் கொள்ளும், மிக மதத்தை உடைய கஜேந்திரன் என்ற யானை, ஒரு குளத்தில் இருந்த முதலையினால் கவ்வப்பட்டு கலக்கம் அடைந்து, எம்பெருமானை நினைத்து, வருந்திய போது, அது உஜ்ஜிவிக்கும் படி, மேல் வழியாக வந்து முதலையை இரு பிளவாக பிளந்து, ஜொலிக்கின்ற திரு ஆழி என்ற சக்கரத்தை உடைய எம்பெருமான், நெய்தல், தாமரை, ஆம்பல், செங்கழுநீர் என்று பலவகை பூக்கள் நிறைந்து இருக்கும் நீர்நிலைகளையும், பிரகாசிக்கின்ற திரு மாளிகைகளையும், அவைகளை சூழுந்துள்ள மதில்களையும் உடைய திருக்கண்ணங்குடியில் நின்றான்.
24 இருந்தான் என் உள்ளத்து இறைவன்,கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த, செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஓளி மன்னும் அன்னே. 11.3.2என் நெஞ்சினுள்ளே வாழ்ந்து இருப்பவனும், ஸர்வ ஸ்வாமியும், கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும், செந்தாமரைக் கண்ணனும், திருத்தோள்களை உடையனும் ஆன ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் பாடிக் கூத்தாட எனது முலைகளானவை வருத்தம் இல்லாமல் ஒளி பெறும் என்று பெண் பாவனையில் ஆழ்வார் பாடி உள்ளார்.
திருவெழுகூற்றிருக்கை
25நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனைஎம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப்பூப் பறிக்கப் போன குளத்தில் முதலை வாயில் அகப்பட்ட ஸ்ரீ கஜேந்திரனுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடன் மேல் விரைந்து வந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளினது பிரசித்தம். நால்திசை நடுங்க என்பதனால், எம்பெருமானின் வேகத்தை கண்டவர்கள், ‘இன்று ஏதோ பிரளயம் விளையப் போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினர் என்பதாகும். தொங்குகின்ற வாயையும் மூவிடங்களில் மதநீர்ப் பெருக்கையும் இரண்டு காதுகளையும் உடைய அழகிய சிறகையுடைய பெரியதிருவடியான கருடன்மேல் ஏறிக்கொண்டு, ஆழமான நீரையுடைய மடுவின் கரையிலே எழுந்தருளி,  பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜேந்திரனுடைய துக்கத்தை போக்கி அருளினாய்.
சிறிய திருமடல்
26போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி, நீரார் மலர்க்கமலம் கொண் டோர் நெடுங்கையால் நாராயணா ! ஓ ! மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய் – என வெகுண்டு – (2694) மிகப் பெரிய மலைபோன்ற மத்தகஜமானது, நீர்நிலத்திலே முதலையின் வாயில் அகப்பட்டு நின்று வருந்தி நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போது அலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு ஓ நாராயணனே! நீலமணி வண்ணனே! என் எஜமானனே ! வந்தருளவேணும், எனது பெருந்துக்கத்தைப் போக்கி யருளவேணும், என்று கூவ, அக்கூக்குரலைக் கேட்டு
27தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடர்க்கடிந்தான் எம்பெருமான் பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர்
உம்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கனுமற்று  (2695)
கஜேந்திரனின் விரோதியின் (முதலை) மேல் கோபித்து அடங்காத கோபத்தோடு பொய்கைக்கரைக்கு எழுந்தருளி முதலயை இருதுண்டமாகப் பிளந்து அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான் இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான ஆயிரம் ஆயிரம் நாமங்களை உடையவன், அவ்வெம்பெருமான் தான், அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு இப்படிப்பட்ட தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று கட்டுவிச்சி சொல்லி முடித்தாள்.
பொய்கையாழ்வார், முதல் திருவந்தாதி
28அடியும் படி கடப்பத், தோள் திசை மேல் செல்ல, முடியும் விசும்பு அளந்தது என்பர் – வடியுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் உலகளந்த நான்று 17இந்த பாசுரத்தில் நேரடியாக கஜேந்திர மோக்ஷம் சொல்லப் படவில்லை என்றாலும், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் என்பதை, நம் ஆச்சார்யர்கள் விளக்கும் போது, ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்த காலத்திலும் நேரில் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லையே என்று அநுதாபப்படுவது தோன்றும் என்பர்.
29இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், அறைபுனலும் செந்தீயும் ஆவான் , பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த, செங்கண்மால் கண்டாய் தெளி. 29ஸ்ரீவைகுந்தநாதன் ஆகவும், பூமி, ஆகாயம், வாயு, நீர், தீ, ஆகிய பஞ்ச பூதங்களாலான இந்த உலகத்தை உடையவனுமான எம்பெருமான், பிறைபோன்ற தந்தத்தையுடையதும் பசுமை தங்கிய கண்களை உடையதுமான பெரிய கஜேந்திரனை, முதலையின் வாயிலே அகப்பட்டு பட்ட துக்கத்தில் இருந்து காத்தவன் புண்டரீகாக்ஷன் என்று நெஞ்சே தெரிந்துகொள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
30வாரி சுருக்கி மதம் களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே, மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல். 47மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற ஐந்து இந்திரியங்களையும் உலக விஷயங்களில் இருந்து இழுத்துப்பிடித்து, கண்டவிடங்களிலும் திரிய வொட்டாமல் நிலைநிறுத்தி, மிகவும் துல்லியமான உண்மையான பக்தியினால், அவனை உள்ளபடி உணர வல்லவர்கள், முன்பொரு காலத்திலே கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய திருவடிகளை கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள் என்பது இந்த பாடலின் கருத்து.
3`இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம் போது கொண்டு. 78கஜேந்திராழ்வானை தொடர்ந்து வந்த கொடுமை பூண்ட முதலையை கொன்றவனும், பசுமை நிறத்தை உடைய திருவனந்தாழ்வானை மெத்தையாக உடையனுமான எம்பெருமானது திருவடிகளை புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு தொழுவோம் என்று தன் மனதிற்கு ஆழ்வார் சொல்கிறார். மேலும் அவனுக்கு அடிமை செய்யாமல் இருக்கும் துயரத்தை தன்னால் அனுபவிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
32பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன், அடிசேர்ந்தருள் பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை என்னும் பேர்ப் பொன். 97புண்ணியமும் பாபமும் அவனிட்ட வழக்காய் இருக்கும் என்று 96 ம் பாட்டில் ஆழ்வார் சொல்லி உள்ளார். அதனை தொடர்ந்து. இந்த பாடலில் கஜேந்திரன் சென்ற ஜென்மத்தில் செய்த புண்ணியம் தொடர, இந்த ஜென்மத்திலும் பக்தியை தொடர்ந்தாலும், மற்ற யானை கூட்டங்களின் சகவாசத்தினால், உலக விஷயங்களிலும் ஈடுபட்டதை, ஆழ்வார் பேடையோடு சேர்ந்து போகங்களை அனுபவிக்கிற கஜேந்த்ராழ்வான் என்பதை பிடி சேர் களிறு என்கிறார். அப்படிப்பட்ட கஜேந்திரனை காத்து அருளினை எம்பெருமான், கங்கைக்கு பாவங்களை போக்கும் சக்தியை தன்னுடைய திருவடிகளை தீண்டியதால் அருளினான் என்றும் கூறி உள்ளார்.
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
33தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சிப் படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு, அன்று இடர் எடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப் பண்டு. 13மதயானையானது, விசாலமாயிருந்த பொய்கையிலே இறங்கி மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் துதிக்கையில் கொண்டு வரும்போது, முதலையின் வாயில் அகப்பட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் பெருந்துன்பம் உண்டாக, இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோ என்று மனம் பதறி, திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை தியானித்து வணங்கியபடியாலே அந்த கஜேந்திரன் பரமபதத்தை அடைந்தது என்று ஆழ்வார் சொல்கிறார்.
34அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர் வெண்கோட்டு மால் யானை வென்று முடித் தன்றே, தண் கோட்டு மாமலரால் தாழ்ந்து. 22முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக் கொண்டு அந்த ஆபத்தைப் போக்கி கொள்ள நினைத்துத் தானே முயற்சி செய்து கொண்டிருந்த வரையில் துன்பம் நீங்க வில்லை ; ‘தன்னாலான மட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமானும் விலகியே நின்றான்; இனி நம்மாலாகாதென்று துணிந்து தன்னுடைய முயற்சியை கைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின், அந்த யானையை காப்பாற்றுவதை, தன் காரியமாகக் கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய  மடுவின்கரையிலே ஓடி வந்து துன்பம் தீர்த்தான். அதேபோல், அடியார்களுக்கு வேண்டிய அத்தனை காரியங்களையும் தானே செய்வதாக என்று எண்ணிக் கொண்டு மிகவும் உற்சாகம் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை கிடைக்கப்பெற்றால், நடப்பதற்கு அரிய காரியமும், எளிதாகும்.
35 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆய் நடு அந்தி வாய், வாய்ந்த மலர் தூவி வைகலும், – ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட் படத் துணிந்த யான். 73எம்பெருமான் கஜேந்திராழ்வானிடத்தில் வெளியிட்ட உபகாரத்தைப் பார்த்தபின், நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட அனுகிரத்திற்கு பாத்திரம் ஆகலாம் என்று எப்பொழுதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய திருநாமங்களை சொல்லிக் கொண்டு இருப்பதுமான தம்முடைய செயல்களை ஆழ்வார் சொல்லி கொள்கிறார். சந்திரகலை போன்ற தந்தரத்தையும் சிவந்த கண்களையு ம் உடைய கஜேந்திரன் என்கிறார். ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமை செய்ய உறுதிகொண்ட காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்களிலும் கிடைத்த புஷ்பங்களை கொண்டு ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை ஆராய்ந்து உரைக்கிறேன் என்கிறார்.
பேய்ஆழ்வார் – மூன்றாம் திருவந்தாதி
36சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணிமுடி மால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த மணிநீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான், அணி நீல வண்ணத்தவன். 50எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும் ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின உதவி, தனிப்பட்டு விளங்குகையாலே, கஜேந்திர மோக்ஷம் பற்றி இந்த பாசுரத்தில் அருளி இருக்கிறார். இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையை சொல்லி, முதலடியிலும் கடைசி வரியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக் கூறியிருப்பதன் கருத்தை உணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும், திருவபிஷேகம் (கிரீடம்) அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்குத் தான். பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டதனால், எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை என்ற குணம்) சற்று குன்றி இருந்தது என்பதை, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி, திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது என்பதாக சொல்வது முதல் அடியில். பிறகு முதலையை கொன்று வேழத்தை வாழ்வித்ததனால் எம்பெருமானின் காப்பாற்றும் குணம் பிரகாசமாக, திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளி கூடியதால், அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல் ‘ என்று கூறுகிறார். பக்தனுடைய விரோதியை ஒழித்தோம் என்ற மகிழ்ச்சியினால் திருமேனி மேலும் ஒளிவிட, ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற கடைசி வரியினால் அருளிச்செய்தார். கஜேந்திரவான் தாமரைப்பூ பறித்த பொய்கை மலை மேல் இருந்ததினால், ‘தடைவரைவாய்‘ எனப்பட்டது.
37அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம் சுழிந்த மொய்ம்பன், – சரணா மேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பு என்னாதே
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
எம்பெருமான் ஸர்வ ரக்ஷகன் என்று பேர் எடுத்துஇருந்தாலும், அவனுடைய ரக்ஷகத்வம் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் தானே அமையாது. தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் தாங்களே முயற்சி செய்யும் போது, அவர்களிடத்தில் அந்த சமயங்களில் அவன் தனது ரக்ஷகத்வத்தை காட்டமாட்டான். இரு கைகளையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று எல்லா சுமைகளையும் அவன் மேல் ஏற்றிவிட்டு, தம் கையாலே ஒரு முயற்சியும் செய்யாத ஞானிகளையே தான் காத்து அருள்வான். “இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துணியை பிடித்துக்கொண்டு தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த போது, அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்தவில்லை. ஸ்ரீகஜேந்திராழ்வானும் தன்னை காப்பாற்ற தானே முயற்சி எடுத்த வரையில் நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தை பற்றி நினைக்கவில்லை. எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக எல்லாக் காலத்திலும் துணையாக இருக்கிறான் என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டால், இதன் உட்கருத்து, நாம் நம்மை காப்பதில் உள்ள முயற்சியை விட்டுவிட்டு, அவன் காப்பான் என்று இருந்தால், அவன் “என் உடம்பில் உள்ள அழுக்கை நானே போக்கிக்கொள்வேன்” என்றபடி நம்மை காப்பான் என்பதே. நம் ஜென்மம் என்ன, ஞானம் என்ன, ஆசாரம் என்ன என்று நம் தாழ்வுகளை பார்க்காமல், அந்த மாயனை மனத்தால் எப்போதும் நினைத்திடு என்று தன் மனதிற்கு உபதேசிக்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
38நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றெவ்வெவையும், நீந்தும் துயரில்லா வீடு முதலாம், பூந்தண் புனல் பொய்கை யானை இடர்க் கடிந்த, பூந்தண் துழாயென் தனி நாயகன் புணர்ப்பே. 2.8.2போக்கிக்கொள்ள முடியாத துக்கத்தை விளைக்கின்ற பிறப்பு, இறப்பு இவற்றை பகவத் ஸம்பந்தம் போக்கடிக்கும், துக்கம் சிறிதும் இல்லாத முக்தியையும் அளிக்கும் என்பது ஒரு கருத்து. அபாரமான துயரங்களை விளைவிப்பதான கடந்து செல்வதற்கு அரிதான பிறவி முதலான பிறப்பு, இறப்பு என்ற எல்லா வகைப்பட்ட துக்கங்களும் தொடமுடியாத மோக்ஷம் என்ற ஆனந்தத்திற்கு வழி செய்து கொடுக்கும் பகவத் சம்பந்தம் என்பது முதல் இரண்டு வரிகளின் இன்னொரு கருத்து. கஜேந்திராழ்வானைக் காத்தருளினவனும், அப்படியே பக்தர்கள் அனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலையிட்டுக் கொண்டு நாயகனாக விளங்கும் எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமே பகவத் சம்பந்தம் என்று பின்னால் வரும் வரிகளில் விளக்குகிறார். அவன் திருவடி சம்பந்தம், துக்கங்களை களைந்து பேரானந்தத்தை கொடுக்கும் என்பது இந்த பாசுரத்தில் சுருக்கம்.
39எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த் தொல்லை, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, அம்மாவடியென் வேண்டுவது ஈதே. 2.9.1 கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! உன்திருவடிகளை அடியேன் தலைமீது சீக்கிரமாக வைக்க வேண்டும் என்பது மட்டுமே நாம் வேண்டுவது; மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
40மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், தொழுங் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9
எம்பெருமானுடைய திரு அவதாரங்களுக்கு மூன்று வகையான பயன் பேசப்பட்டுள்ளன. அடியார்களைக் காத்தல், துஷ்டர்களை அழித்தல், தர்மத்தை நிலை நாட்டுதல் என மூன்று காரியங்களுக்காக எம்பெருமான் அவ்வப்போது அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. மூன்றும், ஒன்று போலவே தோன்றும்.பரமபதத்தில் வீற்றிருந்தபடியே ஸங்கல்பத்தால் செய்ய முடியாத காரியமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் வண்ணம் அமைந்து உள்ள பாசுரம். எம்பெருமானை நேரில் ஸேவிக்க வேணும் என்ற ஆசை கொண்ட அடியார்களின் விருப்பத்தை எப்படி ஸங்கல்பத்தினால் செய்ய முடியும், நேரில் எழுந்தருளித்தான் ஸேவை ஸாதித்தாக முடியும் என்பதை விளக்கும் பாசுரம்.
மழுங்காத வைநுதிய சக்கரநல்வலத்தையாய்!” என்ற சொற்தொடரின் கருத்தாவது, பரமபதத்திலிருந்துகொண்டே திருவாழியாழ்வானை ஏவி முதலையை முடித்திட ஆற்றல் அவனுக்கு உண்டு என்று காட்டுவதாகும். அப்படியிருந்தும் கருடன்மேல் ஏறி வந்து பொய்கைக் கரையில் காட்சி தந்தது இரண்டாம் அடியில் சொல்லப்படுகிறது. களிற்றுக்குத் தொழுங்காதல் என்றதால், கஜேந்திராழ்வான் எம்பெருமானை தொழ வேண்டும் என்ற காதலை நிறைவேற்றுதற்காகவே தோன்றினான் என்பது சொல்லப்பட்டது. எம்பெருமான் அவதரித்தே செய்யத்தக்க காரியம் ஸங்கல்பத்தினால் செய்யப்போகாது என்பது இறுதியாக சொல்லப்பட்டது. ஸங்கல்பத்தைக் கொண்டே ரக்ஷிக்கப் பார்த்தால், ‘அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற பெயரால் உண்டாகும் ஜோதி மறையும் என்கிறார். இந்த பாசுரம் முடிச்சோதியாய் என்ற பதிகத்தில் வருகிறது.
41வந்தாய்போலே வந்தும் என் மனத்தினை நீ, சிந்தாமல் செய்யாய் இதுவே இதுவாகில், கொந்தார்க் காயாவின் கொழு மலர்த் திருநிறத்த எந்தாய், யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே? 3.2.5ஆழ்வார் எம்பெருமானிடம், இராம, கிருஷ்ண அவதாரங்கள் போலே தனக்காகவும் வந்து சில நாட்கள் இருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் நன்று. அது செய்யத் திருவுள்ளம் இல்லையாகில், ஆனைக்குத் தோன்றினால் போல், ப்ரஹ்லாதனுக்குத் தோன்றினால் போல், தனக்கும் ஒரு சிறிய நேரம் தோற்றம் அளித்து அருள வேண்டும் என்கிறார். இப்படி உதவ முடியாது என்பதே தினமும் எம்பெருமான் சொல்வாரானால், தான் தன்னுடைய முயற்சியினால் அவனை வந்து சேர்வது என்று ஒன்று உண்டோ என்று வினவுகிறார். இனி அவன் வடிவழகை காண்பது என்பது தான் இழந்து போகிற ஒன்றாகிவிடுமே என்று கவலை படுகிறார்.
42மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற, கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன், எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார், தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 3.5.1ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த அடியார்கள் மேல் உள்ள அன்பை அறிந்தும், எம்பெருமான் மேல் அன்பு பாராட்டாதவர் பிறப்பு வீண் என்கிறார். கஜேந்திராழ்வானுடைய கூக்குரல் கேட்டு பதறிப் பொய்கைக்கரைக்கு வந்தது மட்டுமின்றி, முதலைவாய்ப்பட்டுப் புண்பட்ட அதன் காலைத் திருக்கைகளினால் தடவி உபசாரங்கள் செய்தது அந்த யானைக்கு, செய்த பெரிய அருள். இதனை அறிந்தவர்கள், எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும், பறந்தும், துள்ளவேண்டும்; அப்படி செய்யாதவர்கள் இவ்வுலகில் பிறந்தாலும், என்ன பலன் என்கிறார்.
43அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர், கைம்மா துன்பொழித்தாய் என்று கைதலை பூசலிட்டே, மெய்ம்மாலாய் ஓழிந்தேன் எம்பிரான் என் மேலானே.5.1.7 தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்கும் போது அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி என்று ஆழ்வார் சொன்னாலும், எம்பெருமானின் கருணை பிரவாகமாக ஓடுவதையும் சொல்லி உள்ளார். ஆழ்வார், முதலடியினால் எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலைநாட்டினார். இரண்டாம் அடியினால் எல்லா வழியாலும் மஹாபாவங்களைப் செய்தவர்களிடமும் எம்பெருமானுடைய பரமக்ருபை பெருக தடை எதுவும் இல்லை என்கிறார். அவருடைய அருள் வெள்ளப் பெருக்கினாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டது என்கிறார். மெய்யன்புடையார் நெஞ்சு கனிந்து சொல்லும் சொல்லை தான் கபட பக்தியோடே சொன்னதாகவும், அது மெய்யான பக்தியாகவே எம்பெருமான் எடுத்துக்கொண்டான் என்றும் சொல்கிறார்.
44செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான் அலப்பாய் ,ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.5.8.4
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே என்று சொல்லும் போது, ஆழ்வார், கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் வந்து தோன்றினாப்போலே தனக்காகவும் வந்து தோன்றுகிறாரோ என்று ஆகாசத்தை நோக்குகிறார். திருக்குணங்களையுடையவனே!அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒப்பற்ற தலைவனே!பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே எம்பெருமான் வருதற்குரிய வானத்தைப்பார்த்து அழுவதும் தொழுவதும் செய்து நின்றதாக ஆழ்வார் கூறுகிறார்.
45வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும், உட்குடை யசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள்ளுருகும், கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும், திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்திட் டாயே? 7.2.3 இந்த பாடலிலும், ஆழ்வார் “வானமே நோக்கும்” என்று சொல்லி, யானைக்கு உதவ வந்ததைப் போல நமக்கும் உதவ வரக்கூடும் என்று வானத்தையே நோக்குகின்றார். நீல மணிவண்ணனே என்று கூப்பிடுகிறார். எம்பெருமான் வராத காரணத்தால் ஏமாற்றம் / மயக்கம் ஏற்பட்டு, வலிமையுடையவர்களான அசுரர்களினுடைய உயிர்களை பறித்த வீரனே என்கிறார். உள்ளம் நீராக உருகுவதாகவும், கண்களில் புலப்படாதவராகவும் இருக்கிறார் என்கிறார். இராம, கிருஷ்ண அவதாரங்களில் வந்து காட்சி அளித்தது போல் எம்பெருமானை கண்ணார காண அருள் புரிய வேண்டுகிறார். இந்த பதிகம் முழுவதும், ஆழ்வார் பெண் பாவனையில் பாடுவதால், இந்த பெண்ணுக்கு திருவரங்கத்து எம்பெருமான் செய்தது என்ன என்று கேட்டு பாசுரத்தை முடிக்கிறார்.
46அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான், சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை, ஒன்றி வலஞ் செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே (7.10.8)
திருவாறன்விளையிலே நுழையும்போதே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையும் என்று ஆழ்வார் சொல்கிறார். கஜேந்திராழ்வானுடைய துயரைக் தீர்த்தவன் அது போலவே நம்முடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே வந்து நிதான நின்றான்; நாம் அங்குச் சென்று வலஞ்செய்ய கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்தமற்றவையாகிப் பறந்தொழியும் என்கிறார். “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று சொல்லி எம்பெருமானது திருவடிகளை முக்கியமானதாக ஏற்றி முதல் அடியிலேயே கூறப்பட்டது. ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் என்பதில், ஆனைக்கு இடராவது, தன் உயிர் போகிறதே என்பதில்லை, வெகு சிரமப்பட்டுப் பறித்த பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியவில்லையே, அதனால் எம்பெருமானுக்கு என்ன தவறு விளைகிறதோ என்பதாம். அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காப்பாற்றததனால் ரக்ஷகன் என்ற தகுதி இல்லை என்று உலகத்தார் சொல்லி விடுவார்களோ என்று யானை துன்பம் கொண்டது .
47இருந்தான் கண்டுகொண்டு என ஏழை நெஞ்சாளும், திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தற மன்னி, பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.  8.7.2
ஆழ்வார், பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலி மாண்டு ஓழியும்படி எம்பெருமான், தன்னழகாலே செய்து என்னை ஆட்கொண்டு அருளினை பேருதவி, கஜேந்திரனுக்காக செய்த உதவியோடு கூட ஒப்பிட முடியாது என்கிறார். ஒரு முதலையின் வாய்ப்பட்ட களிறன்றோ அது, ஐந்து முதலைகளினான ஐம்பொறிகள் மூலம் அன்றோ தாம் பட்ட இடர் என்கிறார். கண்டது எல்லாவற்றிலும் சபலமாயிருக்குமே நெஞ்சு, அப்படிப்பட்ட நெஞ்சை இந்திரியங்கள் தம் வழியே இழுத்துக் கொண்டு இருக்கும். எம்பெருமான் அந்த நெஞ்சை அவர் பக்கம் திருப்பி, எல்லா கரணங்களும் பகவத் விஷயத்திலேயே லயிக்கும்படி செய்ததை, எனதேழை நெஞ்சாளுந் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தர மன்னி ‘ என்று சொல்லி அதையே எம்பெருமான் தனக்கு செய்த பேருதவி என்கிறார்.
48பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காணவந்து நின் பன்னிலாமுத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய், பவள நன்படர்க் கீழ்ச்சங்குறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் கவள மாகளிற்றின் இடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே.
9.2.5
 “கவள மாகளிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே!” என்ற சொற்களால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே தமக்கு வந்து தோன்றி அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது விளங்கும். பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்கு மேலே நிலா போன்ற பற்களால் ஒளியுடைய இதழ் கதிர் முறுவல் செய்ய வேணும்;  அதற்குமேலே திருக்கண் தாமரை விளங்கும்படி நின்றருளவும் வேணும் என்கிறார். தாமிரபரணியை கொண்ட திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்து அருளுபவனே, “நாராயணா! ஓ ! மணிவண்ணா நாகணையாய்! வாராய், என் ஆரிடரை நீக்காய்” என்று கூவி அழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துன்பம் கெடும்படி மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளை நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார்.

மீண்டும் இன்னொரு தலைப்பில் சந்திப்போம், நன்றி

069 திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்) / Badrinath

காலையும் மாலையும்

அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!!

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21
பெரியாழ்வார் 1
தொலைபேசி 070607 28843.

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருபத்ரிகாசிரமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கோவில் பற்றி

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில், எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,  இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.  இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.  

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில், இதுவும் ஒன்றாக, இத்தலம் அமைந்து உள்ளது. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள் ஆகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து அல்லது எம்பெருமானே தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு, ஓம் நமோ நாராயணாய என்ற ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரமாகிய திருமந்திர உபதேசத்தை, நாராயணன் என்ற திருநாமத்துடனே உலகத்திற்கு வந்து உகந்து அருளின இடம், பத்ரிகாஸ்ரமம் தான். குரு நாராயணன், சீடன் நரநாராயணன். எம்பெருமான் ஆச்சார்யராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை. திருநறையூரில் எம்பெருமான் குரு, திருமங்கையாழ்வார் சீடர். எம்பெருமானைச் சரண் புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழி திருமந்திர உபதேசத்தில் சொல்லப்பட்டது. அதனால், திருமந்திரம் அவதரித்த திருத்தலமாக இந்த பத்ரிநாத் கருதப்படுகிறது.

மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்ரிகாச்ரமம் ஆயிற்றென்பர். எம்பெருமான் தவம் செய்ய அமர்ந்த பின், அவருக்கு நிழலாக மஹாலக்ஷ்மி இலந்தை தோட்டமாகவே அவதரித்து இங்கு வந்ததாகவும் சொல்வார்கள். மஹாலக்ஷ்மி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்ரிகாஸ்ரமம் ஆயிற்றென்பர். வடமொழியில் இலந்தை மரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம் என்பது பதரிகாச்ரமம் என்று ஆயிற்று.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும், அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து,  தரிசிக்க வசதியாக உள்ளது. தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.

கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், உத்தவர், குபேரன், நரன் மற்றும் நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர். பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்), கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும், கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு, மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன், பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள். இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர். ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே. தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,  மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள். பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.  கோவிலின் பின்புறம் லக்ஷ்மிநரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது, அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.  

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை, மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக கேரளத்தை சேர்ந்த நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு,  திருமஞ்சனம் செய்து நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர். இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது. பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை, கோவிலிலேயே கொடுப்பார்கள். இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன. அவை, தப்த குண்டம், பிரகலாத குண்டம்,  நாரத குண்டம், கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா. இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு. தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.  இங்கு  எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள். இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது, அதற்கு பிறகு திபெத். இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில் ( அலஹாபாத் பிரயாகை) மீண்டும் வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு. அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு குளிர்தாங்கும் பருவம் இளமை
என்பதால், கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் (திருவாய்மொழி 2.10.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு மீண்டும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும் போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் இருக்குமாம். அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் ஆராதித்து செல்கின்றனர் என்ற ஐதீஹம். மேலும் பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6 மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும். அதனால் இங்கு ஆறு மாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனுஷ்ய பூஜை என்று சொல்லப்படுகிறது.

குளிர்காலத்தில், சுமார் 6 மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை,  ஜோஷிமத் நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனைகள் நடைபெறுகின்றன. மறுபடியும் சித்திரை மாதம், அக்ஷய திருதியைக்கு மறுநாள்,  கோயில் கதவுகள் திறக்கப் பட்டு எம்பெருமானும் பத்ரியில் எழுந்தருளுகிறார்.

Thanks to Google maps. Please note that more information may be needed to travel to these places, thanks

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடையவேண்டி உள்ளது. புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர். அவை, யோகபத்ரி, வ்ருத்தபத்ரி, த்யானபத்ரி,  தபோபத்ரி மற்றும் பவிஷ்ய பத்ரி.

வ்ருத்தபத்ரி அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு ,  மிகவும் ரம்யமான இடம்.  இங்குதான் நாரதர் தவம் செய்தார். ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார். த்யானபத்ரியில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார். யோகபத்ரியில் தியான மந்திர் அமைந்துள்ளது. அங்கே,  கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு. அவர்கள், இதனைத்தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ணப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது. பவிஷ்யபத்ரி தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும், கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது. வரும் காலத்தில்,  இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும், அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது. தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது. அடியேன் பத்ரிவிஷால் மட்டுமே தர்சனம் செய்து உள்ளேன். மற்றவை தரிசிக்க மீண்டும் செல்ல ஆசை உள்ளது, பத்ரிநாராயணன் தான் நிறைவேற்றி தர வேண்டும்.

பத்ரிநாராயணன் கோவில் அமைந்து இருப்பது நாராயண பர்வதம். இதைத்தவிர கோவிலுக்கு எதிர்புறம், நரநாராயண பர்வதங்கள்; கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம் போன்றவை காண்பதற்குப் பேரெழில் பொலிந்தனவாகும். குளுமை மிக்க அழகான மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம்  என்று வழங்கப்படுகிறது.  

இங்கு அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அடியேன் பத்ரிக்கு சென்றது 26 மற்றும் 27 அக்டோபர் 2014. கோவில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் அந்த ஆண்டுக்காக மூடி விடுவார்கள் என்ற நிலை; பனியும் குளிரும் அதிகம். முதல் நாள் பகலில், பத்ரி வந்து சேர்ந்து அன்று மாலையில் ஒரு முறை எம்பெருமானை ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்று சேவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் சில சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம். அதிகாலையில் அலாரம் இல்லாமல் சுமார் 03 00 மணிக்கு எழுந்து விட்டதால் தங்கியிருந்த இடத்திலே ஒரு ஸ்னானம் செய்து விட்டு, எங்களுடன் வந்த வழிகாட்டியை (guide) தொந்தரவு செய்யாமல், காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு கிளம்பலாம் என்று நடந்து வந்து கொண்டு இருந்தோம். கோவிலுக்கு வருவதால் கேமரா, போன் போன்றவற்றை எடுத்து வரவில்லை. வரும் போது, நீலகண்ட பர்வதத்தை தரிசித்த காட்சி மறக்க முடியாதது. இரண்டு மலைகள், வானத்தில் சிறிய சந்திர ஒளியினால், (வளர்பிறை சதுர்த்தி அல்லது பஞ்சமி), நீல நிற ஒளியுடன், மிக பிரகாசமாக நாங்கள் விவரிக்க முடியாதபடி, வியக்கும் வண்ணம், மறக்க முடியாதபடி, ஒரு மலையில் உள்ள பனியினால் சந்திர ஒளி பட்டு அதனுடைய பிரதிபலிப்பு இன்னொரு மலையில் விழுந்து, அந்த ஒளியும் மீண்டும் அதிகமாக ஒளி விட, மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றிய விதமாய் எங்களை மேலும் நடக்க விடாமல் அதையே பார்த்து பிரமிக்கும்படி செய்தது. அப்போது எங்களுக்கு அது நீலகண்ட பர்வதம் என்று தெரியாது. நாங்கள் நினைத்தது நரனும் நாராயணனும் என்றே நினைத்து, நன்றாக அனுபவித்தபடி கோவிலை அடைந்தோம். விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு எங்கள் நண்பர் ஸ்வாமிநாதன் அவர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் எங்களுக்கு நீலகண்டனின் நேரடியான தரிசனமே கிடைத்து விட்டது என்று சொன்னார். நர நாராயணர்களுடன் நீலகண்டரின் அருளாசியும் இந்த பயணத்தில் எங்களுக்கு கிடைத்து ஒரு அரிய அனுபவமே.

இங்கு தப்த குண்டத்தில் நீராடியது, விஸ்வரூப தரிசனம், ஸஹஸ்ரநாம தரிசனம், சர்வ தரிசனம் என்று ஒரு சில தடவை பத்ரி நாராயணனனை தரிசித்து, ப்ரம்ம கபாலத்தில் பித்ரு ஸ்ராத்தம் கொடுத்தது, நீலகண்டரின் நேரடி அருளாசி, போன்றவற்றை ஆனந்தமாக அனுபவித்தது, அடியேன் பாக்யம். மீண்டும் அவனை தரிசிக்க இன்னொரு சந்தர்ப்பம் அருளவேண்டும் என்பதே இப்போதும் எம்பெருமானிடம் பிரார்த்திப்பது.

ஸ்தல வரலாறு

இந்த திருத்தலம் பற்றி தனி புத்தகமே போடும் அளவிற்கு புராணங்களும், வட நாட்டு நூல்களும் குறிப்புக்களை கொடுக்கின்றன. பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு.

ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி முதல் யுகத்தின் ஆரம்ப காலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு சுலபமாக தனது திவ்ய தரிசனத்தைக் கொடுத்து அருள்பாலிக்கவும் பத்ரிநாத் என்ற பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட்) அர்ச்சாரூபமாக எழுந்து அருளி உள்ளார்.

நர நாராயணன் : எம்பெருமான் நர மற்றும் நாராயணா என்று இரண்டு தர்மத்தின் உருவங்களாக அவதரித்து துறவறத்தை அமைக்க, பக்திமிக்க இமயமலைகளுக்கு மத்தியில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, அலகநந்தா ஆற்றின் பின்புறத்தில் இரண்டு கண்கவர் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் ஊற்றுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இடத்தை கண்டனர். இந்த இடத்திற்கு பத்ரி விஷால் என்று பெயரிட்டனர். இதில் நரனாக அவதரித்தது ஆதிசேஷன் என்று சொல்லப்படுகிறது. அலகாநந்தா நதிக் கரையில்,  ‘சேஷ நேத்ரம்’ என்று ஒரு பகுதி உள்ளது.  இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது.  இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன; பக்கவாட்டில் பகவானின் திருவடிகள் காணப் படுகின்றன.  

கீழே கொடுத்துள்ள இந்த வரலாறு ஒரு செவி வழி செய்தியே தவிர எந்த புராணத்திலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. இங்கு சஹஸ்ரகவசாசுரன் என்று ஒருவன் இருந்தான். அவன் சூரியனிடம் கடினமாக தவம் இருந்து, சாகா வரம் வேண்டும் என்று கேட்க, சூரிய பகவான் அது இயற்கைக்கு முரணானது என்று சொல்லி மறுத்து, வேறு வரம் கேட்க சொல்ல, அவனும் பதினாயிரம் கவசம் வேண்டும், அதில் உள்ள ஒவ்வொரு கவசத்தையும் அழிக்க கூடியவன் பதினாயிரம் நாட்கள் தவம் செய்தவனாக இருக்க வேண்டும், அப்படி ஒரு கவசத்தை அழித்தவுடன் அவனும் மடிய வேண்டும் என்று வரம் கேட்டான். சூரிய பகவானும் அந்த வரத்தை அளித்தார். அதனால் அவன் பதினாயிரம் கவசம் அணிந்து யாராலும் அழிக்க முடியாதபடி இருந்தான்.

பத்ரிகாசிரமத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு சிவன், இந்த திருத்தலத்தில் தவம் இருந்தால், இந்த இடத்தில் செய்யும் எல்லா தவங்களும் அது பதினாயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது என்று ஒரு வரம் அளித்து இருந்தார்.

சஹஸ்ர கவசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் வேண்ட, அவரும் ஆதிசேஷனுடன் நர நாராயணர்களாக இங்கு அவதரித்தார்கள். ஆதிசேஷனுக்கு உயிர்ப்பிக்கும் மந்திரத்தையும் உபதேசித்து இந்த அசுரனிடம் போரிட ஆரம்பித்தார். அதன்படி ஒரு நாள் ஒருவர் போர் புரிவது, அதே நாள் மற்றொருவர் தவம் புரிவது. போரில் அசுரனின் ஒரு கவசத்தை அழிப்பது, அதனால் மடிந்தால், உயிர்ப்பிக்கும் மந்திரம் கொண்டு ஒருவர் மற்றொருவரை பிழைக்க வைப்பது என்று பேசி வைத்து கொண்டனர். அதன்படி நரனும் நாராயணனும் 9999 நாட்கள் போர் மற்றும் தவம் புரிந்து அசுரனின் 9999 கவசங்களை அழித்து விட்டனர். கடைசி நாள் பிரளயம் ஏற்பட, கடைசி கவசத்தோடு அசுரன் கர்ணனாகப் பிறந்தான் என்று சொல்வார்கள். இந்த நர நாராயணர்களே பின் வந்த யுகத்தில், அர்ஜுனனாகவும் பகவான் கிருஷ்ணன் ஆகவும் அவதரித்தார்கள் என்று இங்கே கூறுகிறார்கள்.

தப்த குண்டம் : அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம். சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் : வ்ருத்தபத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.  நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும்,  பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் : மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து விமரிசையாக தன்னுடைய திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம். அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் : சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை.  சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது, ‘பூலோகத்தில் ஒரு பதிவிரதையிடம் பிச்சையினை பெற்றால்’, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார். சிவபெருமான், பூலோகத்தில்  பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர். இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் : பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் : ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,  பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார். கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் : இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது. இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.  வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார். உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும், அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும், ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார் என்றும் ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.   

பாண்டு : இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும், அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள் என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்: எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார். இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது. ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை, ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால், அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 22 பாசுரங்களில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

திருமங்கையாழ்வார்:

திருமங்கை ஆழ்வார் ஒரு பதிகத்தில், “வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்று பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் செய்தும், “வதரியாச்சிரமத்துள்ளானே” என்ற அடுத்த பதிகத்தில் அந்த க்ஷேத்திரத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானைத் துதிக்கின்றார். ஆழ்வார், ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம் பற்றி வதரிவணங்குதுமே என்று சொல்லி, அந்தத் திருமலையில் எல்லா இடங்களிலும் ஸ்ரீநாராயணன் தவம் புரிந்த இடமாயும், தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டு அருளின இடமாக இருக்கிற ஸ்ரீபதரிகாச்ரம விசேஷத்தை வதரியாச்சிராமத்துள்ளானே என்று சொன்னதால், மேலே சொன்ன ஐந்து பத்ரிகளும், ஆதிபத்ரி எல்லாம் சேர்ந்து இந்த திவ்யதேசம் என்று கொள்ள வேண்டும்.

பெரியதிருமொழி 1.3

  1. வதரி என்னும் இதுத் திருத்தலம் மற்ற திருப்பதிகள் போல் இல்லாமல் வெகு சிரமப் பட்டு அடையக்கூடியது ஆகையால், உடல் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்க வேண்டும், இல்லையானால், உடல் தளர்ந்து போனபின் நெஞ்சால் கூட நினைக்கவும் அரிதாகும். அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே சென்று ஸேவிக்க வேண்டும் என்று அருளிச்செய்கிறார். வயதான காலத்தில், முதுகு கூனிட்டபின், முன்னடி நோக்கி வளைதல் இயல்பு என்றும், அதற்கு முன்பே வதரி சென்று வணங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
  2. முதுமை வருதற்கு முன்பே நம்முடைய கரணங்கள் சக்தியோடு இருக்கும் இளமையில் பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்கிறார். தேனைப் பருகின வண்டுகள் களிப்புக்கு இடமான வதரி என்று சொன்னது “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” ( திருவாய்மொழி 10.7.2) என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து முக்தாத்மாக்கள் வாழப் பெற்ற வதரி என்கிறார்.
  3. உடம்பில் இளமையில் மறைந்து கிடக்கும் நரம்புகள், முதுமையில் உறிகள் போலே, உடம்பின் மேற்பக்கம் தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையில் உடல் நடுங்கி திருநாமங்களை வாயினால் சொல்ல முடியாது; ஒரு திவ்ய தேசத்திற்கு காலினால் செல்ல முடியாது; நெஞ்சால் நினைக்கவும் முடியாது; ஆகையால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், உடல் திடமாக உள்ள போதே, பக்தியுடன் திருநாமங்களை சொல்லி பரமபோக்யமான வதரி சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  4. முதுமையில் கண்கள் சுருங்கி அவற்றில் இருந்து பீளை பெருகவும், இருமி, பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தடுமாறி நடக்கவும் முடியாமல், இருக்கும் காலத்தில் வதரி வணங்குதல் முடியாத காரியமாகும். அப்படி நேருவதற்கு முன்னமே அங்கு சென்று, ‘கண்ணபிரானே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை’ என்று இருந்த இடையர்களுக்கு, கோவர்த்தன குன்றினை ஏந்தி, பெருமழையில் இருந்து காத்த கண்ணபிரானது, வாளை மீன்கள் குதித்து வாழும் குளிர்ந்த குளங்களைக் கொண்ட வதரியை சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  5. இளமையில், மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொல்லுவது இருமுவது என்ற இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டு, தடியைக் காலாகக்கொண்டு, முதுமையில் தடுமாறி நடக்க நேருவதற்கு முன்னே, வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை உடையவனான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். இங்கு, மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொன்னது சம்சாரிகளைப் பற்றி தானே தவிர, ஆழ்வாருடைய நெஞ்சில் ஒரு துளி கூட அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
  6. பலஹீனமான பேச்சுடனே இருமி சரீரம் மெலிந்து பைத்தியம் பிடித்தவர்கள் போல விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தைகள் சொல்லி தளருவதற்கு முன்பே, எல்லோருக்கும் ஸ்வாமியாயும், தனக்கு தந்தையாயும், உலகத்திற்கு மூலக் கடவுளாயும், ஒரு காலத்தில் தேவர்களுக்காக ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாயும் உள்ள எம்பெருமானுடையதான ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும், எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்றும் ஆழ்வார் அருளுகிறார்.
  7. உலகில் விசித்திரமான ஒன்றையோ, விகாரமான ஒன்றையோ பார்க்கும் போது கண்கள் கூசி ‘அப்பப்ப!’ என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டு கொண்டு கால் ஊன்றி தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதி செல்லும் போது, அளவு கடந்த முதுமை விகாரங்களைக் கண்டு அந்த மாதர்கள் தங்களுக்குள்ளே அதிசயித்து, பக்கத்து வீட்டுக்காரிகளை அழைத்து அவர்களுடைய எஜமானர் வருகிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டி சிரிப்பார்க்கள். அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவதற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  8. முதுமையில் கருநெய்தல் போன்ற அழகிய கண்களை உடைய மாதர்கள் இருக்கும் இடத்தின் வழியே செல்லும் போது, ‘அப்பால் ஒழிந்து போங்கள், இங்கே இருக்கக் கூடாது’ என்று அவமரியாதையாகப் பேசுகிறர்களிடம், ஆசைகளை விட்டுத் தொலைத்து நல்வழி போகப் பார்க்க நினைத்தால், பரிமளம் மிக்க குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்த எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். குவளையங்கண்ணியர் என்று சொன்னது கண்ணழகிலே துவண்டு நிற்கும் முதியவர்களின் எண்ணத்தினால் என்று கொள்ளவும்.
  9. இந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்றும் ஞானேந்திரியங்கள் என்றும் இருவகைப்படும். வாய், கை, கால், குதம், குறி என்பன கர்மேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். பொதுவாக முதுமையில், இவை எல்லாம் படிப்படியாக அழியும். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் முதுமை அதிகரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை வணங்குதல் முடியாது. அப்போதைக்கு இப்போதே குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு, அவனது திருநாமங்களை பாடுதலும் ஆடுதலும் செய்யப்பெற்ற, வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  10. வண்டுகள் ரீங்காரம் செய்து குளிர்ந்த மலர்களில் இருக்கும் மதுவை உண்டு மகிழும் அழகிய பூக்கள் சூழ்ந்து திகழும் பத்ரி எனப்படும் இடத்தில் எழுந்தருளியுள்ள நெடுமாலைப் பற்றி மங்கை நாட்டின் வேந்தனான கலியன் சொன்ன பாடல்களை கூட்டமாய்ச் சேர்ந்து ஆடிப்பாடும் தொண்டர்கள் நீள்விசும்பில் பரமபதம் எனப்படும் வைகுந்தத்தில் சென்று ஆட்சி செய்திருப்பார்களே தவிர அற்பர்களாய் மீண்டும் இவ்வுலகிற்க்கு வந்து துவள மாட்டார்கள் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று இந்த தலத்தைப் பற்றிச் சொல்லி வந்தவர் இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று சொல்லி முடிப்பதால் வதரிநாராயணனை முன்னிட்டே வதரி வணங்கினார் என்பது தெளிவாயிற்று.

பெரியதிருமொழி 1.4

  1. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சிமார்களுக்காக அரிய பெரிய காரியம் செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார். முதலடியில் பூதேவிக்கு செய்த வராஹ அவதாரமும், இரண்டாம் அடியில் ஸ்ரீதேவிக்கு செய்த இராம அவதாரமும் சொல்லப்படுகிறது. இப்படி நிலமகள் இருவர்க்கும் காரியம் செய்த எம்பெருமான், தான் என்றைக்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் காரியம் செய்வதற்காக, இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும் கங்கைக் கரையில் உள்ளதாயும் இருக்கிற பதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்.
  2. எம்பெருமானையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவு கொண்டு வந்த மாரீசனை ஒழித்ததையும், ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்ததையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார். வாலியை, ஆழ்வார் கொடுமையான தொழிலை உடைய பலசாலியானவன் என்று கூறுகிறார். தேனையுடைய திருநாபிக் கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர்களும் பல காலம் வந்து வணங்கப் பெற்றதும் பெருகுகின்ற புராதனமாக ஆகாச கங்கைக் கரை மீது உள்ளதுமான ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறான். முதுநீர் என்று கங்கை நீரை சொல்கிறார், முதுநீர் என்பதால் புதிதாகச் சுரந்த நீர் அல்ல என்று புரியும். இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமையால் வேதம் போலவே நித்யமான நதி என்பது புலப்படும்.
  3. ஒருவரால் அழிக்க முடியாத லங்கா புரியும் அதற்கு பாதுகாப்பாக இருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸ ஜாதி முற்றிலும் நாசம் அடையும் விதம் தனது மிகச் சிறந்த பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியம் செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம் என்கிறார். “கடலை வற்றச் செய்துவிடுகிறேன்” என்று இங்கிருந்து கிளம்பும் முன் திருப்புல்லாணியில் சிவந்த கண்களுடன் அம்பு தொடுத்ததனாலும், கடலிடையே அணைகட்டினதாலும், கடல் கெடாவிட்டாலும், “கடல் கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்று ஆழ்வார் கூறி உள்ளார். கங்கையின் மிடுக்கையும் வேகத்தையும், சூரியன் சுழன்று வரும் மேருமலையை முட்டி வருகின்ற வெண்ணிறமான கங்கை நீர் ஆகாயத்தில் பரவி இருப்பதைப் பார்த்தால், மாளிகைகளின் உச்சியில் இருக்கிற தூண்களில் கட்டப்பட்டுள்ள வெளுத்த துணிக் கொடிகள் காற்றில் அசைந்து பரவுவது போல் இருக்கின்றது என்று ஆழ்வார் சொல்கிறார்.
  4. ‘நெஞ்சே! தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளி இருக்கிறான். அங்கே சென்று அவனை நீ வணங்கி வாழ்வாயாக; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதியான ‘ஒரு நல்வார்த்தை ‘ என்கிறார். அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; அந்த கங்கை, கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும். அவன் “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றிற் கடியனாய் ஓடி” ( பெரியாழ்வார் திருமொழி, 2.10.1) என்றபடி ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல், மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும் முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை.
  5. சென்ற பாட்டில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வரவே, மற்றொரு க்ருஷ்ண வரலாற்றை இங்கே பேசுகிறார். பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்த வரலாறு தெரிந்த ஒன்று. யசோதையைப் போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நல்ல மகன் போல இருந்து அவளது முலையையுண்டு அவளை முடித்த கண்ணனைக் கண்ட தாயானவள், ‘இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது, முலையுண்கிற பாவனையில் உயிரை முடிக்கும் பிள்ளை இது’ என்று கூசும்படியாக சூரனாய் வளர்ந்த தலைவன் எழுந்தருளி இருப்பது வதரியாச்சிரமம். இந்த பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கியதால் இவன் கண்டார் மடியிலும் முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று கூசினாள் யசோதை என்கிறார். வதரியாச்சிரமம், ஓங்கி இருக்கும் சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலையாகிற மேருபர்வததில் விளங்குகின்ற விசாலமான சிகரத்தில் இருந்து விழுந்தது போல் ஓடி வருகின்ற கங்கையின் கரையிலுள்ளது என்கிறார்.
  6. கண்ணபிரான் தொட்டில் பருவத்தில் செய்த லீலை ஒன்றை சென்ற பாசுரத்தில் சொன்னார். இதில் குமாரனான பருவத்தில் செய்த மற்றொரு செயலைச் சொல்லுகிறார். கும்பன் என்னும் இடையர் தலைவனது மகளாகவும் நீளாதேவியின் அம்சமாகவும் பிறந்த “நீளா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருபவளுமானவும், இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற அல்குல் படைத்தவளுமான, நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை குறித்தபடி யார்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு அவற்றை அடக்கி அப்பிராட்டியை மணம் செய்து கொண்ட அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான் என்கிறார். அந்த வதரி, கங்கைக்கரையில் உள்ளது. கபில மாமுனியின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தன் பாட்டன்மாரை, சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம் புரிந்ததால் காரணந்தன்னால் என்று ஆழிவார் கூறியுள்ளார். அந்த கங்கையை, பகீரதன் இந்த உலகத்திற்கு அழைத்து வரும் போது / அவதரிக்க செய்த போது, நடுவழியிலே ஒரு மலை தடுத்துக் கொண்டு நின்றதாகவும், கங்கை நீரின் அளவும் வேகமும் ஏற்படுத்திய விசையினால் அந்த மலையை இரண்டு பிளவு ஆகும் படி குத்திப் புறப்பட்டு, அம்மலையிலிருந்த யானைகளையும் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தது எனபது ஒரு விளக்கம். பகீரதன் கொணர்ந்த கங்கா ப்ரவாஹத்தை ஒரு மலை தடுத்த போது, அவன் இந்திரனை நோக்கித் தவம் புரிந்ததாகவும், அவன் தவத்தை மெச்சி, இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி, அது அந்த மலையை, தன்னுடைய நான்கு தந்தங்களால் இருபிளவாகும் படி குத்தி கங்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாதாகவும் புராணம் சொல்லுவது இன்னொரு விளக்கம்.
  7. திருமால் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கிக் கடல்கடைந்து அருளியபோது, கடையப் பட்ட அந்த கடலில் இருந்து ஐராவதம் என்ற யானை, உச்சிச்ரவஸ் என்னும் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயின. அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவத யானையையும், அமிருதத்தையும், தேவர்களுக்குத் தலைவனாயிருக்கும் சொர்க்க லோகத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரியில் உள்ளான்; அவ்வாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது. அந்தரத்து அமரர் அடியிணை வணங்க, ஆயிரம் முகத்தினால் அருளி கங்கை, மந்தர மலையில் இருந்து விழுந்தது. அதாவது கங்கையானது ஒரு முகமாக வந்து இறங்கினால், பெரிய விசையோடே வருகிற மிடுக்கைக் கடல் தாங்காது என்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து ‘ கங்கை பல முகமாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க, அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம். அதையே, கங்கா தேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனர் என்றும் கங்காதேவியே ஆயிரம் முகமாக பிரிந்து வந்தாள் என்றும் கூறுவார் உளர்.
  8. மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரம பக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமை செய்த ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து ஒழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி சாபத்தைத் தொலைத்து அருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். தவம் புரிந்துயர்ந்த மாமுனி கொணர்ந்த என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர். ஒன்று பெரிய தவம் செய்து பகீரதன் கொண்டுவந்த கங்கை என்பது. மற்றொன்று, பெரிய தவம் புரிந்து பிரம்மரிஷி என்று உயர்ந்த, விசுவாமித்திர முனிவர், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அழைத்துக் கொண்டு போன போது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே கங்கைக் கரை மேல் சென்றதால், தவம் புரிந்து உயர்ந்த மாமுனியினால், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன் கரைமீது கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற விளக்கம் சொல்வதுண்டு.
  9. எல்லா உலகங்களில் உள்ள எல்லா பொருட்களையும், பிரளய காலத்தில், தன்னுடைய திருவயிற்றிலே வைத்து காப்பாற்றியவனும், உபயவிபூதி நாதனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். “ஒண்சுடர் எய்ந்த உம்பரும் ஊழியுமானான்” என்றது மேலுலகத்திற்கும் கீழுலகத்திற்கும் நாதன் என்று சொன்னது. உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ‘ஊழியுமானான்’ என்பதனால், காலம் நகரக்கூடியதான இவ்வுலகுக்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ப்ரஹ்மலோகத்தில் இருந்து நடுவே வழிபண்ணிக்கொண்டு அதற்குக் கீழ்ப்பட்ட அந்தரிக்ஷலோகத்திலே வந்து இறங்கி, அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி, பூமியிலே வந்து பெருகுகின்ற கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம்.
  10. பெரிய வேகத்தோடு வருகிற அலைகளை உடைய தெளிந்த தீர்த்தத்தை கொண்ட கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளி இருக்கிற கடல் வண்ணனான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடு நாள் ஆண்ட பின் ப்ரஹ்ம லோகத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர். எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள். தம்முடைய கவன ஸாமர்த்தியத்தால் இல்லாமல், எம்பெருமானுடைய இன்னருளால் செய்யப்பட்ட பாசுரம் எனபதை பனுவல் என்ற வார்த்தையால் ஆழ்வார் சொல்கிறார்.

சிறிய திருமடல் 74:

நிறைய திவ்யதேசங்களைப் பற்றி சொல்லும் இடத்தில, பாரோர் புகழும் வதரி என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெரியாழ்வார் :

பெரியாழ்வார் திருமொழி (4.7.9) பாசுரத்தில், பெரியாழ்வார் பத்ரிநாத் பற்றி சொல்லி உள்ளார். தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.

மீண்டும் இன்னும் ஒரு திவ்யதேசம் பற்றி பார்க்கும் போது சந்திப்போம் நன்றி.

Kurangugal Malaiyai Nooka

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our sampradhayam in the hymn Meyyerke meyyanaagum.
  • In the next hymn Soodhanaai Kalvanaai, Emperumaan entered the heart of Azhwaar and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal. (Virumbi ninru)
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy. (ini thirai thivalai modha)
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham (Kuda Thisai mudiyai)
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees only. (Paayum Neer Arangam)
  • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar. (Panivinal manamadhu onri)
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to create something new to speak about Him. (Pesitre pesal allaal)
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan. (Gangaiyil punidhamaaya)
  • Finally, Emperumaan made Azhwaar to realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him. (Vella Neer parandhu paayum)

These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

In the first hymn in this subsection, Kulithu Moondru Analai (25) doing Naichiyaanusandhaanam, we saw Azhwaar mentioning that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything from those qualifications onward.

In the next hymn, Podhellam Podhu Kondu (26), we saw Emperumaan asking Azhwaar, that he could do the poojas and singing slokas on Him, which anyone could do, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams. We also saw Azhwaar mentioning that he did not do them as well.

Now let us move on with the next hymn.

Hymn 27

Kurangugal malaiyai nooka kulithu thaam purandittu odi, tharanganeer adaikal utra salam illa anilam polen, marangal pol valiya nenjam, vanjanen nenju thannaal, Aranganaarku aat seyyaadhey aliyathen ayarkindrenne. Thirumaalai 27

The ape warriors pushed the mountains into the sea and the squirrels dipped in the water and then flipped into the sand on the shore to drop sand particles back to the sea to construct the bridge enabling them to participate in the activities that were related to Rama. The squirrels were sincere and not hypocritical, in dropping the sand to reclaim the sea with swelling waves. Azhwaar sings that he was not sincere like squirrels, but as hard-hearted as trees, and deceptive. Azhwaar completed the song that though he was eligible to perform all the services to Thiruvarangan, did not do any sincere service to Emperumaan and his life became useless.

As sung by Azhwaar in the last two verses, though he did not do any good deeds that humans could do, Paramathmaa stated that He accepted the services that were carried with good intention by squirrels and monkeys, when He took Rama incarnation, same way as He accepts the services of Nithyasoories, like Vishwaksena, Ananthazhwaan and Garudazhwaar in Paramapadham. When Periyaperumal inquired Azhwaar whether he could do any such thing, Azhwaar responded negatively in this hymn.

Kurangugal malaiyai nooka

The usage of plural for monkeys and singular for mountains, denotes that the number of monkeys is more and the number of mountains is few and one mountain is pushed by many monkeys. Although every ape warrior was capable of lifting a mountain like a small stone, the commentator says that many monkeys are touching a mountain out of a desire to put in their efforts to take part in the services that were related to Rama. The commentator further asked, would there be any desire for the animals to do such service and responded that, when Sri Rama, the apt Lord who accepts the service, is seen with the bow and arrow in His hand, all who are knowledgeable (human) and those who do not have the knowledge, (non-human, like animals, birds, insects and all) including a tiny matter would do the services.

Malaiyai nooka

Azhwaar did not use the word poda to indicate that the mountains being dropped into the sea but nooka to mean to push the mountain. This only shows that one set of monkeys push the mountain for some distance, before another set of monkeys take over and go towards the sea. In this way the mountains without being lifted by any, were simply pushed from one hand to another into the sea .

Kulithu

In the Ramayana, Yutha Kaantam (5.9), Rama said that His body was getting hot with the thoughts on Sita, and if He stays in the ocean for a while, the glowing Kaamagni, even in the water would still trouble and all the water would dry up. The narrator says that all the ape warriors who saw the plight of Emperuman due to His separation from Sitapiraati , were engaged in Rama’s work very briskly in constructing the bridge over the sea.

Kulithu … anilam polen

Let us look at Azhwaar’s first thoughts from the perspective of the squirrels .

  • Seeing the speed with which the monkeys were pushing the mountain, squirrels thought that the speed was inadequate for Emperumaan’s longing to reach Sita Piraati as soon as possible.
  • If the mountains, were simply thrown into the sea, the bridge could not be built. They had to be plastered, and not a single monkey did that.
  • To plaster the mountains, sand is needed, and that too in between the mountains, and none of these monkeys were doing the same.
  • So, the squirrels dipped into the sea, swam ashore and flipped in the sand, and with the sand on their bodies, bathed in the sea again in between those mountains in the sea. (Kulithu).
  • Thus the squirrels thought that they were plastering the mountains in the sea.
  • The squirrels also thought that the frequent dipping into the water and going to the shore with dripping water would help drying up the water in the sea, so that constructing the bridge for Rama would become easier.
  • The squirrels did not think that these activities so minuscule and would not make any significant difference in the construction of the dam but were very keen to engage themselves in the activities towards Rama’s objective.
  • Azhwaar used the word ‘Thaam‘ to indicate that the squirrels were very proud in the service of plastering the mountains which the monkeys could not do.
  • Thaam can also be meant to indicate the small size of their body.
  • After dropping the sand in the water, the squirrels bathed again and ran far away in the shore, beleiving that would enable their bodies to attract more sand by rolling their bodies on the sand back and forth. This Azhwaar calls it as “purandittodi”
  • Noticing the squirrels running far and fast, the monkeys asked the reason for such a speed in their activities. The squirrels answered that, Sri Rama was saddened. Therefore, His lunch should be at the Northern Entrance of Lanka and that’s why they were hastening and were disapproving the monkey’s inadequate speed. The squirrels responded that Ramapiran is so saddened and he would like to have his lunch on the other side of the sea, which is the northern part of Sri Lanka. Squirrels also complained that the speed of the work done by the monkeys was not enough.
  • The squirrels continued the service, without worrying about whether they could finish the thing on their own or not, because of the desire in participating in the activities for Rama.
  • These little squirrels tried to block the ocean that was with swelling waves. (tharanga neer adaikal )
  • The squirrels began to think that they were the supervisors and managing the activities of blocking the ocean and the helping monkeys which were pushing the mountains into the sea were the subordinates. the word (“utra”)
  • Squirrels did this as service, without expecting any thing in return. (“salam illa anilam“)
  • Here Azhwaar is giving an explanation as to why these activities of the squirrels, which were not really helpful in completing the bridge, were considered as services towards Emperumaan. It is the purity in their minds, that was enough for Azhwaar to count these activities towards Rama’s objectives. What was in the minds of the squirrels was that Emperumaan should reach Sri Lanka at the earliest.

The word “Salamila” could also mean temptation. Based on that meaning, the commentator provides one more explanation. Human beings are bound by the Shastras for carrying out all activities, whereas these animals like monkeys and squirrels are not bound by any shastras and do not even have limbs to do services like human beings. But here, the lowly animals did lot of things like bathing, running from shore to the sea and return, sticking sand on their bodies, pushing mountains, etc. and with all good intentions. Based on the meaning of Salamila as temptation, commentator explains that Azhwaar felt that he did not do any such activities and also he did not even had the good intentions like those animals. Azhwaar had mentioned this not only in this hymn but also in the previous hymn, kulithu moondru .

All wishes of Emperuman have been already fulfilled, hence what He expects from the Jeevathmaas are only the above good intentions. Nothing can be done by the imperfect souls to the comprehensive Emperumaan. But if Jeevathmaas thinking what they can do with their meagre knowledge and power, and abstain from doing the services because of that reason, they are considered unblessed. Emperuman, who is completely comprehensive, will accept even small things from every one, with complete happiness. There are only a very few jeevathmaas who do things towards Him without any expectation, like the squirrels. Azhwaar felt that he did not even have such involvement like those squirrels .

Some hymns on the construction of the bridge

Kalaiyum, kariyum, parimaavum, thiriyum kaanam kadandhu poi, silaiyum, kanaiyum thunaiyaaga chendraan, vendri serukalathu, malai kondu,alai neeranai katti, mathil neer ilangai vaal arakkar thalaivan thalai pathu aruthu uganthaan Saalagirammam adai nenje (Periya Thirumozhi 1.5.1)

Mallai munneer atharpada vari venchilai kaal valaivithu kollai vilangu pani seyyak kodiyon ilangai pugal utru, thollai marangal pugapeydhu thuvalai nimirndhu vaananava kallal kadalai adaithaan oor Kannapuram naam thozhudhume (Periya Thirumozhi 8.6.4)

Malai adhanaal anai katti mathil ilangai azhithavane ! (Kula Sekara Azhwaar, Perumaal Thirumozhi 8.8)

Kurai kadalai adal ambaal maruga veydhu kulai katti maru karaiyai adhannal yaeri, eri nedu vel arakkarodu ilangai vendhan innuyir kondavan thambikku arasum eenthu (Kula Sekara Azhwaar, Perumal Thirumozhi 10.7)

Oru Villaal Ongu munneer anaithu ulagangal uyya, seruvile arakkar konai setra nam sevaganaar (Thondaradipodi Azhwaar, Thirumalai 11)

Marangal Pol Valiya Nenjam

In the 17th hymn, Azhwaar sang that his heart was hardened like iron, and here he sang that his heart was as strong as trees. Azhwaar called his heart tree, because iron could be molded to a desired shape when smelted in hot furnace, but the wood would turn to ashes if placed on fire.

There is also a school of thought as, “salamilla marangal pol“, and the explanation given is that the wood can be shaken by a weapon, whereas Azhwaar’s heart was stronger than that and nothing could shake it.

Vanjanen

Azhwaar says that with such a hardened heart, he was able to pretend as though his heart melted thinking about Emperumaan. Azhwaar said that he was fully involved into all other worldly activities, but could not get involved in the matters related to Paramathma, and at the same time he was able to make onlookers believe as though Azhwaar was true in matters related to Emperumaan and no one would be like Azhwaar. Azhwaar said that he was hiding his true colours and live differently. The same thought was shared in the hymn 17, when Azhwaar mentioned “irai irai urugum vannam” to highlight his disguised life.

Nenju Thannaal

Azhwaar said that he could have done at least some service with some involvement to Him with the heart given by Him and who was so nearby, like the squirrels who did the activities with good intention.

Aranganaarku aat seiyaadhey

Devotion and service to Emperumaan, means doing it to the fullest, and as said earlier, if it is done with lesser involvement, it does not become service to Him. But looking at Emperumaan, who took the good intentions of the squirrels themselves as Service, Azhwaar said that Emperumaan could have taken even the services done with lesser involvement as though a complete service to Him.

Alliyathen

Lakshmanan said In Ramayana (Ayodhya canto 31-25), that he would do all the services to Sita and Rama, while they were moving happily on the slopes of the mountains, when they were awake or when they were sleeping. Azhwaar felt sad that his soul, which could have delivered