திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொள்கிறார்.
  • மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல கைங்கர்யம் செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் சொல்வது குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியது கூறப்பட்டது.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன, மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக ஆனதாகவும் ஆழ்வார் வருந்தி இந்த பிறவி வீணானதாக தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்கிறார்.

திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால் அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற பாடலில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 34

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.

ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

  • நாம் எங்கும் தேடி ஓட வேண்டாதபடி, நம் இதயத்திலுள்ளே எப்போதும் நெருக்கமாக இருக்கும் எம்பெருமான் என்கிறார்.
  • நெஞ்சத்தின் உள்ளே, எப்பொழுதும் வசிக்கின்ற, எங்கும் வெளியே செல்லாத, எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமான் என்கிறார்.
  • சிந்திப்பதற்கு உறுப்பான, அறிவு சிறிதும் இல்லாதவன் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார்.
  • “ஆழ்வார் பரம பாகவதன், பரமபக்தன்” என்று அனைவரும் புகழும்படியாகவும் “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி” (திருப்பள்ளியெழுச்சி, 10) என்று கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.
  • எல்லை கடந்து சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.

அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.

இனி சற்று விளக்கமாக.

உள்ளத்தே உறையும் மாலை

எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.

ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.

பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2)  என்றும் திருமாலிரின்சோலை பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.8), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.

எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா

நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,

  • ஜீவாத்மாவான தன்னை பற்றிய அறிவு இல்லை
  • அறியவேண்டிய பரமாத்மாவை பற்றிய அறிவு இல்லை
  • இந்த உடல், தாழ்ந்தது, தற்காலிகமானது, ஜீவாத்மாவை விட வேறு பட்டது, பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்காகவே ஜீவன் ஏற்பட்டது என்ற தன்மைகளை பற்றிய அறிவு இல்லை

என்று சொல்கிறார்.

அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

கள்ளத்தே நான்

அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைச்சானுசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.

பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.

நானும் தொண்டாய்

ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யம் ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.

தொண்டுக்கே கோலம் பூண்டு

எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.

ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.

கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.

மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதா, அமரர் ஏரே, ஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான்அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவலிட்டுழி தருகின்றோம், நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

வெள்கிப் போய்

தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.

என்னுள்ளே நான்

சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

விலவறச் சிரித்திட்டேனே

விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.

பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.

கச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந் பரத ஸ்ததா.

ஷத்ருக்நம் ச அப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாம் ச ஸர்வஷஃ৷৷

மந்யே ப்ராப்தாஃ ஸ்மதஂதம் தேசம் பரத்வாஜோ யம் அப்ரவீத். நா அதிதூரே ஹி மந்யே அஹம் நதீஂம் மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)

சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.

அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.

பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.

இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும். அதனை அடுத்த பாசுரம் பற்றிய பதிப்பில் அனுபவிக்கலாம். நன்றி.

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம். அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி இங்கே கண்டோம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மீது பாடிய மற்ற பாடல்களை கீழே காண்போம். நன்றி.

பெரியதிருமொழி

4.3.8

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை, மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை, தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்  செம்பொன் செய் கோயிலி னுள்ளே, மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஓழிந்தேனே.

இங்கே, பாலோடு சக்கரையும் சேர்த்து பருகுவார் போல் க்ருஷணாவதாரத்தோடு திருவேங்கடமுடையானையும் சேர்த்து அனுபவிக்கிறார். தன்னுடைய பேரனோடு பகைத்த பாணாசுரனின் ஆயிரம் தோள்கள் கீழே விழும்படி அன்று திருவாழியை தொட்டவனை, இன்னமும் விரோதிகள் வந்தால் என்ன செய்வது என்று ஒளிபடைத்த சிகரங்களை உடைய திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற, வேதங்களை பிரதிபலிக்கின்றவனாய், தானே பிரகாசம் மிக்கவனாய், தெற்கே திலகம் போல் இருக்கின்றவர்கள் எல்லோரும் கூடும் திருநாங்கூர் செம்பொன்கோவிலில் கண்டு தொழுதேன்.

4.7.5

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே, நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், சேடார் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய், பாடா வருவேன் விணையாயின பாற்றே.

திருவெள்ளக்குளத்தில் இருப்போருக்கு முகம் காட்டிக் கொண்டுள்ள எம்பெருமானிடம் , தன் பாவங்களை நீக்கு என்ற ஆழ்வாரிடம், அங்குள்ள புகழ் பெற்ற வேதியர்கள் போல் சில தர்மங்களை செய்து ஆழ்வாரும் விரோதிகளை போக்கிக்கொள்ள கூடாதோ என்ற எம்பெருமானிடம், கானமும், வானரமும், வேடுவரும் என்று எல்லாவற்றிற்கும் முகம் காட்டி கொண்டுள்ளவன் அன்றோ அவன்; தனக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகிறார்.

பரிவிற்கும் ஆண்பிள்ளைத்தனத்திற்கும் குறைவற்றும், திருமலையில் நின்றும், வேடுவர்கள் நிறைந்திருக்கின்ற அங்கே நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமான் தன்னுடைய ரூப, ஸ்வரூப குணங்களுக்கு தானே பிரகாசம் கொடுக்கின்றான் என்றும், தேசம் எங்கும் இருக்கின்ற கீர்த்தியுடைய வேதியர்கள் நிறைந்துள்ள, தளிர் சோலைகளில் சூழப்பட்ட திருவெள்ளக்குளம் என்ற திருநாங்கூர் திவ்யதேசத்தில் எழுந்தருளி இருப்பவனே என்றும் எம்பெருமானுடைய குணங்களை பாடி வருகின்ற தன்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் சிதற அடிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு உள்ள சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டு என்பது வழக்கம். இந்த ஒற்றுமை விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என்று இங்கே விளிக்கின்றார்.  திருவேங்கடமலை விஷயமான “கண்ணார் கடல் சூழ” என்ற திருமொழியில் அடியேன் இடரைக்களையாயே என்றதும், இந்த ஒற்றுமையை குறித்தே என்று கொள்ளலாம்.

5.3.4

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்க்கட்கு அரசளித்த, காம்பின் ஆர்த் திருவேங்கடப் பொருப்ப. நின் காதலை அருள் எனக்கு, மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த, தீம் பலங்கனித் தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!

மாஞ்சோலையிலே சென்று அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அதனை போக்க வேறு சுவை வேண்டி, இனிய பலாப்பழத்தின் தேனினை சுவைக்கின்றது. அத்தகைய திருவெள்ளரையில் நின்ற எம்பெருமானிடம், பாரத போரில் மேல் விழுகின்ற குதிரைகள் மாய்ந்து போகும்படியும், எதிரிகள் உயிர் போகும்படியும் செய்து, பஞ்ச பாண்டவர்களை வெற்றி பெற செய்த உதவி செய்தவனும் மூங்கில்கள் நிறைந்த திருவேங்கட மலையில் உள்ள அவனிடத்தில் பரமபக்தியை பிறப்பித்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

காவ்யங்களிலும், நாடகங்களிலும் ஆகமங்களிலும் ஈடுபட்டு அவைகள் கசந்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவத் அனுபவம் செய்து களிக்கின்றார்கள் என்று உள்ளுறை பொருளாக கூறுகிறார்.

5.5.1

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள், மருவாளா என்குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே.

இது திருமங்கையாழ்வார் பாடும் தாய் பாசுரம் ஆகும். திருவரங்கம் பற்றி ஆழ்வார் பாடிய ஐந்து பதிகங்களில் இரண்டாவது பதிகம். ஆனால் இதில் திருவரங்கமே என்று சொல்லாமல், வேங்கடமே வேங்கடமே என்று திருவேங்கடத்தைப்பற்றி ஆழ்வார் சொல்வதை உரையாசிரியர் பெரியபெருமாள் இங்கு வந்து சேர்ந்த வரலாறு கூறுவதாக கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அங்கு உள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக ரிஷிகளும் நம் ஆச்சார்யார்களும் சொல்வார்கள். பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு இருந்து பயணம் தொடங்கி, வரும் வழியில் திருவேங்கட மலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சயனிப்பதாக சொல்வார்கள்.

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தின் முதல் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்று சொல்லி, விண்ணவர் கோனான எம்பெருமான், வேங்கடவனான வந்தான் என்கிறார். இரண்டாம் பாட்டில் அன்று நேர்ந்த நிசாசரரை என்று, நம்பெருமாள் (உத்ஸவர்) இராவண வதத்திற்கு பிறகு தெற்கு வாசல் வழியாக வந்து சேர்ந்ததை சொன்னார். மூன்றாம் பாட்டில் “மந்திபாய் வடவேங்கடமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான் அரங்கத்தரவினணையான்” என்று சொன்னதை, திருவேங்கடமலையில் இருந்து, வடக்கு வாசல் வழியாக பெரியபெருமாள் (மூலவர்) வந்து திருவரங்கத்திலே நுழைந்தான் என்று பட்டர் என்ற ஆச்சாரியார் சொல்வார்.

மேலும், திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலமாக இருப்பதால், அடுத்த பயணத்திற்கு காத்து இருப்பவர் போல் தெரிகிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக ஸேவை சாதிப்பதால் இனி எங்கும் போகவேண்டாம் என்ற தோற்றத்தோடு இருப்பது போல் உள்ளது பொருத்தமாக இருக்கும். ஆக, திருவரங்கத்துக்கு மூலம் திருமலை என்பதால், இப்போது திருவரங்கத்திலே  ஆழ்வார்க்கு ஏற்படும் பற்று, திருமலையளவும் சென்றதனால் ‘வேங்கடமே வேங்கடமே’ என்கிறார் என்று விளக்கம் கொடுக்கிறார்.

தன் வயது, பருவத்தின் காரணமாக, ஒரு சில விஷயத்தை சிலருக்கு சொல்லி, ஒரு சில விஷயத்தை சிலருக்கு மறைத்து என்று மனிதர்கள் இருப்பார்கள்; உதாரணமாக தோழிகளுக்கு சொல்லும் மகள் சில விஷயத்தை தாய்க்கு சொல்ல மாட்டாள்; ஆனால் தன்னுடைய பெண், அப்படி இல்லாமல், வேங்கடமே, வேங்கடமே என்று எவருக்கும் அஞ்சாமல் / வெட்கப்படாமல் பிதற்றுகின்றாள், என்கிறாள்.

பரத்துவத்தை பற்றி சொல்லாமல், வியூகத்தை சொல்லாமல், விபவங்களை சொல்லாமல், விட்டு விட்டு, அவன் உகந்து அருளின தேசத்தை மட்டுமே (வேங்கடமே) என்று பிதற்றுகிறாளே தவிர அதனுள் புகுந்து செல்வதற்கு அறியாதவள், தன் மகள் என்கிறாள். காட்கரை ஏற்றும் அதனுள் கண்ணா (திருவாய்மொழி, 9.6.7) என்று நம்மாழ்வார் திவ்ய தேசத்தையும், எம்பெருமானையும் சேர்த்து சொன்னது போல் இல்லாமல், இங்கு திருவேங்கடமுடையான் என்று குறிப்பிடவில்லை.

நீண்ட கண்களில் உறக்கத்தை மறந்துவிட்டாள் ; தன்னுடைய மடியிலும் பொருந்த மாட்டேன் என்கிறாள்; வேறு யார் மடியில் தான் பொருந்துகிறாளோ ? திருப்பாற்கடலில் பிராட்டியை கைகொண்டவனான எம்பெருமான் தன் மகள் விஷயத்தில் செய்த காரியங்களை தான் நினைக்க முடியுமோ என்று சொல்வதாக பாசுரம். கணவனின் ஊர் பெயரை அஞ்சாமல் கூச்சம் கொள்ளாமல் பிதற்றுகின்றாள்; தன்னுடைய வடிவைக்காட்டி முன்பு திருப்பாற்கடலில் இருந்து பிராட்டியை கொள்ளை கொண்டான், இன்று ஸம்ஸாரக் கடலில் இருந்து தன் மகளை கொள்ளை கொண்டான் என்றும் எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைகளைக் கொள்ளை கொள்வதே வேலை என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.

ஸம்ஸாரத்துக்கு ஆளாகாதபடி செய்யும் அனைத்தும் கொள்ளை கொண்டது போல் என்று சொல்லி, தாய் வசத்தில் இருக்கும் மகளைகூட, எம்பெருமான் கொள்ளை கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமானால் ஏற்று கொள்ள கூடிய பெருமை ஒருவரால் சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக இருகின்ற ஸம்ஸாரத்திலே இன்று இப்படிப்பட்ட பகவத் விஷயம் கிடைத்தது என்றால் அதற்கான காரணம் தன் பெண் அறிய மாட்டாள் என்றும், கரையிலே நிற்கிற தான் எப்படி அறிவேன் என்று தாய் சொல்வது போல் உள்ள பாசுரம்.

5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்து எனது, மனத்திருந்த வடமலையை, வரி வண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, யான் கண்ட தணி நீர்த் தென் அரங்கத்தே

“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி 3.3.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஒருவருக்கு உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவனும், அவைகளுக்கு உபாயமாக இருப்பவனும், உபாயத்திற்கு புருஷகாரத்வம் செய்யும் திருமகளுடன் சேர்த்தி கொள்பவனும், திருவேங்கட மலையின் நிர்வாகம் செய்பவனும், எம்பெருமானே ஆவார்.

அப்படியிருந்தும், அதனை விட்டு எழுந்து, தன்னுடைய நெஞ்சத்தில் ஒரு நொடி கூட விட்டு பிரியாமல் இருப்பவனும் அவனே; அழகிய பூங்கொத்துகள் உள்ள வண்டுகள் இருக்கும் சோலைகளைக் கொண்ட பூங்கோவலூரில், உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான எம்பெருமானை தான் கண்டது திருவரங்கத்தில் என்கிறார்.

அந்தணனை என்று சொன்னது, வேதத்தை காப்பவன் என்று சொல்லி, பிரம்மச்சர்ய வேஷத்தை குறிப்பிட்டு, உலகளந்த விஷயத்திற்கு நம்மை கூட்டிச்சென்றது.  அந்தணன் என்பது, அழகிய தண்மை பொருந்தியவன், பரம தயாளு என்ற அர்த்தத்தில் வருகிறது.

6.8.1

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய், மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.

மான் தோலை மார்பிலே போர்த்திக்கொண்டு, மஹாபலியிடம் பூமியை யாசித்து பெற்று, அவனை தன் திருவடிகளால் ஆக்ரமித்துக்கொண்ட தேனை உடைய சாரல்களை கொண்ட திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானை தான் தேடி சென்று திருநாரையூரில் சேவித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமான் தன்னைப் பெறுதற்குப் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அந்த சமயங்களில் தான் ஒரு புக்தி அற்றவனாக இருந்ததாகவும், இன்று தான் அவனைத் தேடித் திரிய வேண்டி உள்ளது என்றும் ஆழ்வார் கூறுகிறார். நீண்ட பயணம் சென்று திருமலை உச்சியிலே காண வேண்டாமல், தாகம் எடுத்தவார் தண்ணீர் கண்ட இடத்திலே குடிப்பதை போலே திருநறையூரிலே கண்டு சேவித்தேன் என்கிறார்.

கொண்டல்லது போகேன் என்று தானம் வாங்கியதை சொல்கிறார். மாவலி தன்னையுடையது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பூமியை, தன்னுடையதாக ஆக்கிக்கொண்ட எம்பெருமான் என்கிறார். அவனல்லாததை அவனுடையதாக்கி, தனக்கு இதுவே போதும் என்று மாவலியிடம் கேட்டு வாங்கியதை சொல்கிறார். கையில் நீர் விழுந்தவுடன், மனம் மாறுவதற்குள் சுகுமாரமான திருவடிகளாலே காடும் மேடையும் எல்லை நடந்து அளந்து கொண்டவன் என்கிறார். எல்லோரையும் அடிமை கொள்ள கூடியவன், (சர்வசேஷி), எல்லோருக்கும் அதிகாரி (சர்வாதிகாரனாய்) இருக்கும் எம்பெருமான் தன்னை தாழ விட்டுக்கொண்டது தான் தோற்றதால் அல்ல என்றும் தன்னை தாழ விட்டுக் கொள்ளும் நல்ல குணம் உடையவன் என்றும் சொல்கிறார். உலகளந்த போது, எம்பெருமானை தவறவிட்டவர்கள், இப்போது தவறவிட கூடாது என்பதற்காக திருமலையில் நிற்பதை சொல்கிறார்.

7.3.5

ஆங்கு வெந் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு, தாமரை யன்ன பொன்னார் அடி எம் பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற, வேங்கடத்து அரியைப் பரி கீறியை வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங் கரும்பினை, தேனை நன் பாலினை அன்றி யென் மனம் சிந்தை செய்யாதே.

கொடிய நரகங்களிலே நோவுபட நேர்ந்த போது, அங்கு வந்து, பயப்படவேண்டாம் என்று அடியேனை, அழகு மிக்க திருவடிகளையுடையனும், தனக்கு உபகாரம் செய்பவனும், மேல் உலகங்களுக்கு எல்லாம் அலங்காரமாய் இருக்கின்ற, திருமலையில் எழுந்தருளி இருக்கிற, சிங்கம் போன்றவனும், குதிரை முகத்துடன் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும், வெண்ணையை திருடி உண்டு, உரலோடு கட்டுண்டு இருந்தவனும், கரும்புச்சாறு மற்றும் தேன் போன்றவனும், இனிய பால் போன்ற திருநறையூர் நம்பியை தவிர வேறு எவரையும் தன் நெஞ்சம் நினைக்காது என்கிறார்.

7.10.3

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை, பங்கில் வைத்த உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ் மங்குலைச், சுடரை வட மாமலை உச்சியை, நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை, பகலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

தங்கள் விஷயத்தில் கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும், வாசம் வீசுகின்ற கூந்தலை உடைய பார்வதியைத் தன்னுடலில் பாதி உடையவனான ருத்ரனை, தனது ஒரு பக்கத்திலே இடம் கொடுத்து அதிலே ஒரு உகப்பை உடையவனும் இப்படிப்பட்ட சீல குணமே சுபாவம் உள்ளவனும், குளிர்ந்த முழு சந்திரன் தவழ்கின்ற ஆகாசமாய் நிற்பவனும், சூரியனை அந்தர்யாமியாக உள்ளவனும், திருவேங்கடமலையின் உச்சியில் இருப்பவனும், நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும், இரவு பகல் என்ற இரண்டிற்கும் நிர்வாஹகனை சென்று நாடி திருகண்ணமங்கையில் கண்டு கொண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

8.2.3

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள், உள் மெலிந்தாள் இது வென்கொலோ.

பரகாலநாயகியானவள் (திருமங்கை ஆழ்வார் நாயகியாக பாடுவது) அருவிகள் பொழியும் திருமலை என்றும், திருநீர்மலை என்றும் சொல்லி வாய் பிதற்றுகின்றாள். திருமெய்யத்தைப் பற்றி, அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்த இடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று என்று கேள்வி கேட்டு அதற்கும் பதில் எதுவும் கிடைக்காததால் பெருமூச்சு விடுகிறாள். சீர் மிகுந்த திருக்கண்ணபுரம் என்று சொல்லியபோது, நீர் பண்டமாக உருகுகிறாள். நெஞ்சு தளர்கின்றாள்; இதற்கு இவள் செய்த பாவமே அன்றி வேறு எந்த காரணமும் தெரியவில்லை என்கிறாள்.

9.7.4

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று, எண்ணுவார் எண்ணம் அது ஓழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல், விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடத்து உளார் வளங் கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

இசை விளக்குகின்ற இனிய பேச்சுக்களுடைய பெண்களை அணைப்போம் என்ற சிந்தையில் உள்ளவர்களை சிந்தனையை மாற்றி, நாம் உஜ்ஜிவிக்க வேண்டுமானால், நித்யஸூரிகளுக்காக பரமபதத்தில் காட்சி கொடுக்கின்றவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவருமான திருவல்லவாழ் எம்பெருமானுடைய பெருமையை பேசவேண்டும் என்கிறார்.

9.9.9

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை, புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை, சிலம்பு இயல் ஆறு உடைய திரு மாலிருஞ் சோலை நின்ற, நலந் திகழ் நாரணனை நணுகும் சகால் என் நல் உதலே

சங்கும் சக்கரமும் உடையனும், மலை போன்ற திரண்ட திருத்தோள்களை உடையவனும், யஜ்ஞோபவீதத்தை உடையவனும், சோலை சூழ்ந்த திருவேங்கட மலையில் உள்ளவனும், வேதியனை, ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுர கங்கையை உடைய திருமாலிருஞ் சோலை என்ற திவ்யதேசத்தில் நிற்பவனும், திருக்கல்யாண குணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந் நாராயணனை, அழகிய நெற்றியை உடையவளான தன்னுடைய மகள் கிடைக்க பெறுவாளா என்று ஆழ்வார் கூறுகிறார். வட திருவேங்கட மலையையும் தென் திருமாலிருஞ்சோலையையும் சேர்த்து ஆழ்வார் அனுபவிக்கிறார்.

10.1.2

பொன்னை மாமணியை அணியார்ந்த ஓர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை எம் பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்கா விலே.

நேற்று திருவேங்கடத்தில் கண்ட எம்பெருமானை இன்று திருத்தண்காவில் கண்டேன் என்கிறார். திருத்தண்கா என்பது காஞ்சியில் உள்ள விளக்கொளி பெருமாள்; பொன்போல விரும்பத் தகுந்தவனும் நீலமணி போன்றவனும், அழகு மிக்க ஒரு மின்னல் போன்று ஜவாலை ஸ்வரூபமானவனும் தன்னை அடிமை கொண்ட ஸ்வாமி என்கிறார்.

10.10.5

சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலன் உயர்த்த, மல்லார் தோள் வட வேங்கடவன் வர, சொல்லாய் பைங்கிளியே.

பசுமை தங்கிய கிளியே! ஒளிமிக்க திருவாழியை வலத் திருக் கையிலே உயர தாங்கி பிடித்தவனும், மிடுக்குடைய திருத்தோள்களை உடையவனும் வட திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானை இங்கே வரச்சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். தன்னை அணைப்பதற்கு என்றே பயணம் மேற்கொண்டு திருவேங்கட மலையிலே நிற்கின்ற எம்பெருமானை இங்கு வரச் சொல்கிறார்.

11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன் மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

கண்ணபிரான் என் நெஞ்சில் எழுந்தருளி இருக்கச் செய்தேயும், எனது கைகளில் வளைகளானவை ஏனோ கழன்று போயின; இவை என்ன ஆச்சரியம் ; பெண்குடியிலே பிறந்துள்ள நாம் வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாய் இருக்கின்றோம் ; அந்த எம்பெருமான் விரும்பி இருக்கும் இடமான திருவரங்கமும் திருவேங்கடமலையும், பாடாமல் இருக்கிறோமோ என்கிறார்.

11.5.10

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தானேலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உலன் கண்டாய் சாழலே.

தோழி, கபட வேடித்தினால் மஹாபலியிடம் இருந்து மூன்றடி மண்ணை இரந்து பெற்று அளந்து கொண்டவன், திருப்பாற்கடலிலே உள்ளான், திருமலையிலே உள்ளான் என்று சொல்கின்றார்களோ ? திருப்பாற் கடலிலும் திருமலையிலும் உள்ளவனே ஆயினும் கலியனுடைய நெஞ்சத்தில் உள்ளான் என்கிறார்.

திருக்குறுந்தாண்டகம்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந் திருவரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை, தன்மையை நினைவார் எந்தன் தலைமிசை மன்னுவாரே. (7)

அமரர் சென்னி பூவினை என்று இதற்கு முந்தைய பாடலில், நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருக்கும் எம்பெருமான், என்று பாடியதை தொடர்ந்து, எம்பெருமான் ஆழ்வார் தலைமீதும் அணியாக இருக்க விரும்புவதை தெரிவிக்க, ஆழ்வார் அதைவிட அவன் சீலத்தை போற்றி பாடும் அடியவர்களை தன் சிரத்திலே ஏற்க விரும்புகிறார் போலும்.

இந்த பிறவியில் இவ்வுலக இன்பத்தையும், மறுபிறவியில் பரமபத இன்பத்தையும் தருபவரும், பல சோலைகளை உடைய வியப்பு தரும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்பவரும், வெவ்வேறு யுகங்களில் கருப்பு சிவப்பு என்று வெவ்வேறு நிறம் கொண்டு உள்ளவரும், விண்ணவருக்கும் மண்ணில்உள்ளவருக்கும் ஒருமையாக திருவேங்கடமலையில் நின்று கொண்டு இருப்பவனுமான எம்பெருமானை நினைப்பவர்கள், தன்னுடைய சிரத்திலே பொருந்த தக்கவர்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

திருமலையில் உள்ள எம்பெருமானை, இங்கு உள்ளவர் பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள் என்றும், மேலுலகத்தில் உள்ளவர்கள் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள் என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.

திருநெடுந்தாண்டகம்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே. (8)

பல திவ்யதேசங்களையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.

காஞ்சியில் திருநீரகம், என்பது ஸ்ரீ உலகளந்த  பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. அந்த எம்பெருமானை நீரின் ஸ்வபாவத்தை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம் என்பார்கள்;

நெடுவரையின் உச்சி மேலாய் என்று சொன்னது, இந்த உலகத்தில் உள்ளவர்களும், மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கும்நாடி ஓங்கியுள்ள திருமலையிலே நின்று அருள்பவன் என்பதை குறிக்கும். “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற பாசுரங்களிலும் இது சொல்லப் படுகிறது.

நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திவ்யதேசம் ஆகும்.

ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரக ரூபியாக (ஆதிசேஷன் வடிவமாக) இத்தலத்தில் ஸேவை சாதிக்கிறார். நிறைந்தகச்சி என்று சொல்வது பல திவ்யதேசங்கள் நிறைந்த காஞ்சி என்று சொல்வதாகவும், ஆதிசேஷனின் ஒளியால் நிறைந்த கச்சிநகர் என்றும் கொள்ளலாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய் என்பது திருவெஃகா திவ்யதேசத்தை சொல்லும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண் வளர்ந்து அருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை”என்கிறார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா என்ற திருமழிசை ஆழ்வாரின் சொற்களுக்கும், “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா!  நீ கிடக்க வேண்டும் “என்ற சொற்களுக்கும் கட்டுப்பட்டு அந்த ஆழ்வாரின் பின்னே அவன் சென்றும் பிறகு திரும்பி வந்ததும் எம்பெருமானின் ஆச்ரித பாரதந்திரியம் என்ற குணம் இருப்பது என்கிறார். ஆச்ரித ஸ்பர்சமுள்ள ஒரு துறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யம் என்கிறார்.

தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருப்பவன் என்பதை உள்ளுவார் உள்ளத்தாய் என்கிறார். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் (திருவரங்கத்தில்), திருமலை (திருவேங்கடம்) பெருமாள் கோயில் (திருக்கச்சி) முதலான உகந்தருளின இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரம உத்தேச்யம் என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் / திவ்யதேசங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், நம் ஆசார்யர்கள் சொல்வது இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகமேத்துங் காரகத்தாய் என்பது திருகாரகம் என்ற திவ்யதேசத்தை சொல்வது. இதுவும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் இருக்கும் இடம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு திருகாரகம் என்று பெயர் என்பார்கள்.

கார்வானத்துள்ளாய் என்பது திருகார்வானம் என்ற தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ள நான்கு திவ்யதேசங்களில் ஒன்று.

கள்வா என்பது ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்தில் உறைபவனே என்ற பொருளில் வரும். பிறர் அறியாதபடி காரியம் செய்பவனைக் கள்வன் என்பர்; இவன் காத்திருந்து சிறந்தவர்களையே (சத்தான) பிடித்துக்கொள்வார் என்பதால் கள்வன் எனப்படுகிறான்.  

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்“என்று சோழநாட்டு திவ்யதேசங்களில் ஒன்றான ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளி கொண்டருள்கின்றவனை கூப்பிடுகிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய். என்றும், கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும், வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும், விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும், துன்று குழல் கருநிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்க்கின்றாளே. (16)

இது திருத்தாயார் பாடும் பாடலாக ஆழ்வார் அருளி உள்ளார். “மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே“ என்று கீழ்ப்பாட்டில்(15) சொன்னபோது நாயகன் எதிரே நிற்பதாக நினைத்து மென்மையான கிளி போல் வார்த்தைகள் சொல்லியபோதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதால் நிலைகுலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் தன் மகள் என்று திருத்தாயார் சொல்கிறார். அவனுடைய திருகுணங்களான ரக்ஷகத்வமும் லௌலப்யமும் ளெஸசீல்யமும் பாவியாகிய தன்னிடத்தில் பலிக்க இல்லையே என்று கண்ணீருடன் கதறுகிறதை சொல்கிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றது ரக்ஷகத்வத்தை சொல்லியது. நித்யஸூரிகளுக்கு மட்டும் என்று இருந்தாலோ, ராம கிருஷ்ணராக அவதரித்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களோடு மட்டும் என்று இருந்தாலோ தான் பொறுத்து இருந்திருக்க கூடும் என்றும் அறிவுக்கு கீழ் எல்லையான கன்றுகளையும் ரக்ஷித்த எம்பெருமான், அவனை தவிர வேறு எங்கும் செல்லாத தன்னை ரக்ஷிக்காமல் விட்டது ஏன் என்று கேட்டு கன்றாக பிறக்கவில்லை என்பதாலோ என்று கூறுகிறார். கண்ண பிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும், கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆகுமாம் என்பது சொல்வழக்கு. நம்மாழ்வாரும் “திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி“ என்கிறார்.

கடி பொழில்சூழ் கணபுரத்து என் கனியே என்றது அக்காலங்களில் மட்டும் அல்லாது பின்னாட்களில் உள்ளவர்களையும் ரக்ஷிக்க திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருப்பது சொல்லப்பட்டது. கடிபொழில்சூழ் என்றது “ஸர்வகந்த;“ என்கிறதன்படி, பரிமளமயனாய் இருக்கிற எம்பெருமானையும் தன்னை தாழ்த்திகொள்ள வல்லவனாய் இருப்பதையும் சொல்கிறது.

கணபுரத்தென் கனியே என்றது அச்சோலையில் பழுத்த பழம் போல இருக்கும் திருக்கண்ணபுர எம்பெருமானான, சௌரிராஜனை சொன்னது. என் கனியே என்பது ப்ரபன்னர்களுக்கு சரியான சமயத்தில் அவர்களது அனுபவத்திற்கு கனியாகவும் மற்றவர்களுக்கு காயாகவும் இருப்பான் என்கிறது.

மன்றமரக்கூத்தாடி மகிழ்ந்தாய் என்றது கண்ணபிரான் குடக்கூத்தாடினதை சொல்கிறது. “இடையர்க்குச் செல்வம் மிகுந்தால், ஆடுவதொரு கூத்து, குடக்கூத்து” என்று சொல்வார்கள். தானும் இடையர்களுடன் சேர்ந்தவர்தான் என்பதை மெய்ப்பிப்பதற்காக இவனும் குடக்கூத்தாடி மகிழ்ந்தான் என்று சொல்கிறார்.

வடதிரு வேங்கடம் மேய மைந்தா என்பது ஒரு ஊரிலே இருந்து தன்னை கொடுத்தது மாத்திரம் இன்றி வைகுந்தத்திற்கும் இந்த பூமிக்கும் இடையே நடுவான திருமலையில் நின்று தன்னைக் கொடுக்கிறதை சொல்கிறது. “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ – “வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும் “கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்று சொல்வது போல், உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வித்தியாசம் பாராமல் அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவும் (சௌலப்ய சௌசீல்யங்கள்) தனக்கு அரிது என்று பரிதாபமாக ஆழ்வார் சொல்கிறார்.

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்று சொன்னது, அவனுடைய விரோதிகளை அழிக்கும் சக்தியையும் அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களை அடியோடு வெற்றி பெற்ற பெரு வீரனாய் அவன் விளங்கும்போதும் தான் இழக்கிறனே என்று வருந்திச் சொல்கிறார்.

வீரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாயென்றும் என்று சொன்னது, பிராட்டி விஷயத்தில் பித்துபிடித்து, தன்னுடைய ஊரை அவள் பெயராலே சிறப்புறச் செய்து, “நாச்சியார் கோவிலாக்கி”, இப்படி ஒருத்திக்கு எல்லாவற்றையும் செய்பவன் தன் விஷயத்தில் விஷமாக நினைப்பது ஏன் என்ற உள்ளுறை பொருளில் வருகிறது.

சிறிய திருமடல்

மற்று எனக்கு இங்கு கற்பிப்பார் நாயகரே,  நான் அவனை, காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேங்கடமே திருக்கோவல் ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே பேராமனுதிருத்தான் வெள்ளறையே வெஃகாலே, பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை (36)

இங்கே ஆழ்வார் பல திவ்யதேசங்களை குறிப்பிடுகிறார்.

பெரிய திருமடல்

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, – அடியிணையைத்  (4)

திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலைகளாக உடையவளாய், பொருத்தமான ரூபத்தை உடையவளாய் அன்னத்தின் நடைபோன்ற நடை உடையளாய் தெய்வப் பெண்ணாகிய பூமிப்பிராட்டியின் அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்ற எம்பெருமான் என்று திருமங்கை ஆழ்வார் தொடர்கிறார்.

மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை, மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர் (68)

பளபள என்று மின்னும் சிகரங்களை உடைய திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானை, ஆச்சரியமான திருகுணங்களை கொண்டவனை, திருமாலரின்சோலை மணவாளனை, பகைவரை கொல்ல வல்ல சுதர்சன சக்கரத்தை கொண்டவனை, திருக்கோட்டியூர் பெருமானை என்று பல திவ்யதேச பெருமான்களை இந்த பகுதியில் அழைக்கிறார். தன்னை அடைந்தவர்களது பாவங்கள் அனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடம் எனப் பெயர் பெற்றது.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் / இன்னொரு திவ்யதேசம் பற்றிய சிந்தனையில் சந்திக்கலாம், நன்றி.

திருமாலை – மெய்யெல்லாம் போகவிட்டு (33)

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • அதில் உள்ள முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொண்டதை பார்த்தோம்.
  • மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பதுபோல் உள்ள  குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற அடுத்த பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் ஆழ்வார் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியதும் கூறப்பட்டது.
  • அடுத்த பாசுரமான ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்யதேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும், மற்றும் கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதைப் பார்க்கலாம்,

இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடலை கண்டோம்.

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்லப்பட்டது.

திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை, விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 33

மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு, பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி, எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் கூறும் பாடல்.

சென்ற எட்டு பாடல்களால் தன்னிடம் நன்மைகள் எதுவும் இல்லை; தீமைகளுக்கும் குறைவில்லை; இங்குள்ளவர்களுக்கு ஆகாதவன் ஆனேன் என்றும், மூர்க்கனேன் வந்து நின்றேன் என்று சொன்ன ஆழ்வாரிடம் எம்பெருமான், அந்த வார்த்தைகள் ஆழ்வாரின் இதயத்தில் இருந்து உண்மையாக வருகிறதா என்று திருவுள்ளமாக, ஆழ்வார் அதுவும் பொய் என்கிறார். அப்படி ஒரு உபாயமும் இல்லையாகில் தான் எப்படி அருள்வது என்று திருவுள்ளமாக, ஆழ்வார் எம்பெருமான் திருவடிகளின் சம்பந்தமும் கிருபையையும் மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.

மனம், மொழி, உடல் என்கிற மூன்றினாலும், உண்மையாய் இருக்க வேண்டியவராய் இருக்க முடியாமல் போனாலும் ஏதாவது ஒன்றிலாவது உண்மையானவனாக இருந்திருக்கலாம். ஆனால்; அப்படிப்பட்ட நிலைமையும் தனக்கு இல்லை; உலக விஷயங்களில் உள்ள ஆசையினால் பொய் தவிர வேறு எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். ஆயினும் எம்பெருமானின் திருவருள் இருக்குமானால், தனக்கு ஒரு குறையும் இல்லை என்கிற விசுவாசம் ஒன்று மட்டும் தன்னிடத்தில் உள்ளதால் அந்த ஆசையினால் வெட்கமும்  அச்சமும் கொண்டு அவர் முன்பு வந்து நின்றேன் என்கிறார்.

இனி சற்று விளக்கமாக

மெய் எல்லாம் போக விட்டு

மெய் என்பது உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதாக, உள்ளதை உள்ளபடியே பேசும் என்று அர்த்தம் ஆகும். முன் பாடல்களில், (25 – 29) தம்மிடம் இல்லை என்று ஆழ்வார் சொன்ன எல்லா நன்மைகளுக்கும் மூலம் சத்யம் என்ற மெய் ஒன்றே ஆகும்.

ஸத்ய மூலமிதம் சர்வம் லோக; ஸத்யே ப்ரதிஷ்டித : நாஹம் மித்யா ப்ரவஷ்யாமி ஸத்யமேவ வதாம்யஹம் : (கைசிக மஹாத்மியம், 32) என்றதன் படி, இந்த உலகம் உண்டானது சத்தியத்தினால், இந்த உலகம், சத்தியத்திலேயே நிலைநிற்கிறது. நம்பாடுவான், தான் எப்போதும் உண்மையே பேசுபவன், எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்று சொல்வது இங்கே மேற்கோளாக காட்டப்படுகிறது.

உண்மை (மெய் ) பலவகை பட்டது; மனதில் நினைப்பது உண்மையாக இருக்க வேண்டும்; அதே போல் அதை சொல்வதும் உண்மையாக இருக்க வேண்டும். முடிவில் அது செயலிலும் உண்மையாக இருப்பது மட்டுமே மெய். இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டோ, அல்லது இவைகளை பலவிதமாக பலரிடம் சொல்வதிலோ செய்வதிலோ வெளிப்படுவது என்பது, முழுமையான உண்மை இல்லை. அதனால் தான் ஆழ்வார் மெய் எல்லாம் என்கிறார். ஆழ்வார், தான் மட்டும் மெய்யாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவர்களும், தான் இருக்கும் நாடு முழுவதிலும் மெய்யர்கள் இல்லாதவர்களாக பார்த்துக் கொண்டதை ‘போக விட்டு‘ என்பதன் மூலம் சொல்கிறார். அனைத்தும் அறிந்த எம்பெருமானிடம் , உண்மையே பேசித் தீர வேண்டும்; இருந்தும் அவர் முன்பும் பொய் பேசினேன் என்று ஆழ்வார் வருந்துகிறார்.

விரிகுழலாரில் பட்டு

இப்படி உண்மையை அடியோடு கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு, ஆழ்வார் ‘விரி குழலாரில் பட்டு‘ என்று பிற பெண்களுடன் பழகியதை குறிப்பிடுகிறார். எப்படி எம்பெருமானை நேசிப்பவர்களுக்கு பொய் சிறிதும் ஆகாதோ, அதே போல் விரிகுழலாருடன் கூடி மகிழ்பவர்களுக்கு உண்மை ஆகாது என்பது கருத்து. இங்கு திருவாய்மொழி (5.10.2) மேற்கோள் சொல்லப்படுகிறது. ‘அது இது உது என்னல் ஆவன அல்ல, என்னை உன் செய்கை நைவிக்கும்’ என்று நம்மாழ்வார் சொல்வது எம்பெருமான் விஷயத்தில் எந்த செயலை நினைத்தாலும் அடியவர்கள் அவைகளில் நன்றாக ஈடுபடுவது போல், விரிகுழலாரில் ஆழ்ந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுவார்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்.

பட்டு‘ என்பது, மீளமுடியாதபடி வலையில் அகப்பட்டு என்பதாகும். ஆச்சார்ய உபதேசத்தாலே எம்பெருமானின் திருமேனி அழகை நேரில் காண நிற்கும் போதும், நெஞ்சம் அந்த பெண்களை நினைக்கும்படி அன்றோ அவர்கள் வலையில் இவன் அகப்பட்டு இருப்பது என்கிறார்.

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட

மெய்யை எப்படி அடியோடு விட்டது போல், பொய்யை ஒன்று விடாமல் முழுவதுமாக சேர்த்துக் கொண்டேன் என்கிறார். எம்பெருமானோடு கொண்ட தொடர்பு, பொய் பேசுபவர்களையும் உண்மை பேச வைப்பது போல், பிற பெண்களின் தொடர்பு, உண்மை பேசுபவர்களைக்கூட பொய் பேச வைக்கும் என்கிறார்.

உண்மை போலவே, பொய்யும் பலவகை படுவதால், அதையும் எல்லாம் என்று குறிப்பிடுகிறார். பொய் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் தன்னுடன் வைத்து கொண்டார் என்கிறார்.

பொதிந்து கொண்ட என்பதற்கு, எல்லா பொய்களும் எங்கும் தப்பி போகாமல் தன்னுடன் சேர்த்து வைத்து கொண்டேன் என்று சொல்வதாகும். உலகத்தவர் யாராவது எப்போதாவது தங்கள் பெண்டிரிடம் பொய் செல்ல வேண்டுமானால் ஆழ்வாரிடம் வந்து கேட்டு பெற்று செல்ல வேண்டும், ஏனெனில், பொய் என்பதனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் போல் சொல்லப்படுகிறது. கோட்டையின் எட்டு திக்குகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளே உள்ளவர்கள் வெளியே போகாதபடி வைத்து இருப்பது போல், பொய்கள் ஒன்றும் இவரைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு உள்ளதாக சொல்கிறார்.

போட்கனேன் வந்து நின்றேன்

மெய் பேசுபவர்கள் மட்டும் தான் எம்பெருமானை அணுக முடியும் ஆகையால், தன்னுடைய தாழ்வை மட்டும் எடுத்துக்கொண்டால் அவனை அணுக முடியாது என்றும் வேறு போக்கிடம் இல்லாததால் எம்பெருமான் முன் வந்து நின்றேன் என்று பாடுகிறார். எம்பெருமானை அடையவேண்டிய சாதனங்களை செய்தவர்கள் அவன் வாசல் முன், வேலை செய்தவன் கூலி பெறுவதற்கு நிற்பது போல், தானும் வந்து இருப்பதை ‘நின்றேன்‘ என்கிறார். போட்கனேன் என்றால் கதியற்ற நிலை, போக்கிடம் இல்லாமல் வந்து நின்றதாக ஆழ்வார் உரைக்கிறார்.

ஐயனே அரங்கனே

ஐயனே என்பதற்கு இயற்கையிலேயே எம்பெருமானிடம் தனக்கு உள்ள உறவினை பற்றி ஆழ்வார் கூறுகிறார். வெளி இந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கியவர் மட்டுமே அடையக்கூடிய பரமபத்திற்கு வர ஆசை கொள்வது ஏன், விரிகுழலாரிடமே செல்ல வேண்டியது தானே என்றதற்கு ஆழ்வார், தன்னால் அழித்துக்கொள்ள முடியாத இயற்கையிலேயே உண்டானதான உறவு எம்பெருமானிடம் உள்ளதால் வந்ததாக சொல்கிறார். தாய் தந்தையர்களிடம் பல தீங்குகளை செய்தவர்கள், பிறர் அறியாமல் பின்பக்கம் வழியாக வந்து அவர்களிடம் உதவி பெறுவதுபோல் வந்ததாக கூறுகிறார்.

‘இயற்கையிலே உறவினன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள், ஸாஸ்திரத்தை படித்தா, அல்லது ஆச்சார்யர்களின் உபதேசத்தின்படியாக இங்கு வந்தீர்’ என்பதற்கு, அரங்கனே என்ற பதத்தால், சம்சாரிகள் உஜ்ஜிவிக்க வேண்டும் என்பதையே பெரும் பயனாக கொண்டு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானிடம் வந்ததாக கூறுகிறார். பரமபதத்தின் உயர்வினையும் கருத்தில் கொள்ளாமல், தம்மை வெறுப்பார்கள் இருக்கும் இடமாக இருந்தாலும், தான் வெறுப்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள அனைவரையும் பரம்பத்திற்கு அழைத்து செல்லும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று உறுதி செய்து கொண்டு வந்துள்ளதாலும், எம்பெருமான் சயன திருக்கோலம் கொண்டுள்ளதாக சொல்கிறார்.

உன் அருள் என்னும் ஆசை தன்னால்

எம்பெருமானின் கருணையை பெறுவதற்காக வந்து நின்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் கருணை, தாம் அழியும்படியான அளவிற்கு தங்களுக்கு தீங்கை விளைவித்துக் கொண்டவர்களும் அவனின் கருணை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அல்லவோ உள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி சொல்வதற்கு காரணம், இராமபிரான் காகாசுரனிடம் காட்டிய கருணை. ப்ரம்மாஸ்திரத்தினால் இராமன் காகாசுரனை அழிக்க முற்பட்ட நிலையிலும், அவன் இராமபிரானின் திருவடிகளில் விழலாம் போல் அல்லவோ இராமனின் கருணை இருக்கிறது. இராமாயணம், சுந்தர காண்டம், 38.34ல் சொல்வது, சரணம் அடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான காகாசுரனை, கொல்ல தகுதியான இருந்தபோதிலும், சரணம் அடைய தக்கவனான இராம பிரான் தன் அருளாலே காப்பாற்றினான்.

பொய்யனேன் வந்து நின்றேன்

தம்மிடம் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகளும் ஒன்று விடாமல் உண்டு என்று அறிந்து, எம்பெருமானிடம் உள்ள உறவையும் அறிந்து ஆழ்வார் வந்துள்ளதை ஆமோதித்து அது போன்ற அதிகாரிகளையே தாம் எதிர்பார்த்து இருப்பதாக சொல்லி, ஆழ்வார் இப்படித்தான் வந்தாரா என்று எம்பெருமான் வினவ, ஆழ்வார், ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மை இல்லை, பொய்யாகவே இருந்தது என்கிறார். இயற்கையாகவே எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமானிடம் தான் மெய் என்று ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.

பொய்யனேன் என்று சொன்னது, தீமைகளில் தன்னிடம் இல்லாது எதுவும் இல்லை என்பது ஆகும். எம்பெருமான் முன், தமக்கு புகலிடம் இல்லை, அவனை தவிர வேறு போக்கிடம் இல்லை, அவனே தனக்கு உபாயம் என்று செய்வது சரணாகதி ஆகும். இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது; இதை அவன் முன் செய்வதால் பயன் உண்டு என்று சொன்னதால் தானும் செய்ததாக சொல்கிறார். உண்மையாகவே தன் தாழ்வினை மனதில் கொண்டு சொல்லவில்லை என்ற கருத்து.

பொய்யனேன் பொய்யனேனே

பொய்யனேனே என்று சொன்னது, இயற்கையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருக்கும் எம்பெருமானே மெய் என்று மயங்கும்படி பொய் சொன்னதாக சொல்கிறார். முன்பு சொன்ன பாசுரங்களில், ஆதரம் பெருக வைத்த அழகன் (16), கண்ணினை களிக்குமாரே (17), பனியரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று எல்லாம் சொன்ன வார்த்தைகளை பொய் மாலைகள் என்று இங்கே குறிப்பிட்டு, பொய்யனேன் பொய்யனேனே என்று சொல்கிறார். மெய்யே சொல்லி பிழைக்க வேண்டிய எம்பெருமான் முன் எத்தனை பொய்கள் சொன்னேன் என்று சொல்லி ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம். நன்றி.

Thirumaalai – Meyyellam Poga Vittu (33)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours of Emperuman to Azhwaar

Azhwar moved on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

No to Good things

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers using all the three elements, thinking through mind, offering flowers using hands and reciting holy chants using mouth. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think.
  • So, initially Azhwaar said that he did not use all the three elements together in his prayers, and subsequently Azhwaar said no to each one of them in the subsequent hymns.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Yes to all bad things

The fourth part of Azhwaar’s Naichyanusanthanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, says that he has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even one single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the criteria and that was his stupidity.

Now let us move on to the next hymn.

Hymn 33

Mei ellaam Poga Vittu, viri kuzhalaaril pattu, poi ellaam podhindhu konda potkanen, vandhu ninren, Ayyane, Arangane, un arul ennum aasai thanaal, poiyanen vandhu ninren, poiyanen poiyanene ! (33)

Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

Azhwaar, in the last eight songs, sang that he had no positivity and there was no shortage of bad qualities either; became an unwanted person to people around also. Emperumaan wanted to know whether those words were truly from Azhwaar’s heart. Azhwaar said that was also a lie. Emperumaan asked, if Azhwaar did not have any means, how could He bless him ? Azhwaar said that he expected only the association with Emperumaan’s holy feet and His grace.

If Azhwaar could not be truthful in all the three as thoughts, words and actions, he could have been truthful at least in one among them. But Azhwaar was not. He was desirous in the worldly things, and was left with nothing but falsehood. But If he had the blessings from Emperumaan, that would make him beleive that he had no shortcomings, and Azhwaar with that desire, came in front of Emperumaan seeking His Holy feet, only with fear and shame

Now let us go through in some details.

Mei Ellam Poga Vittu

Mei means Truth that is beneficial to all the living things and should depict true state of things. The route of all the good things that were mentioned by Azhwaar as though he did not possess is the Truth with the above mentioned meaning.

The sloka 32, from Kaisika Mahathmiyam is taken here as a quote here. The sloka is “Satya moolamidham sarvam loka; satye prathishtitha; Naaham mithyaa pravashyaami satyameva vadhaamyaham;” This means that the world is created from the Truth; This world is sustained by The Truth. In Kaiska mahathmiyam, Nampaaduvaan said that he would only speak truth and all those who are involved with Emperumaan would never utter a lie.

Truth (Mei) is manifold; the thoughts should be truthful, and speaking the same should also be truthful and ultimately truthful in action also. When any of these things are different, or mentioned differently with different people or applied differently for different people, it is not complete truthfulness. That’s why Azhwaar says Truth in all respects, when he said “Mei Ellam”. Azhwaar said that he was not only non-truthful, also made sure that the people around him and in the country were non-truthful, by using the words “poga vittu“, meaning ‘letting go”. Since Emperumaan knows everything, everyone should speak only the truth in front of Him. Azhwaar regretted that he lied even before Him.

Viri Kuzhalaaril Pattu

Azhwaar mentioned that his association with other women, as the reason for completely abandoning the Truth by ‘Viri Kuhalaril Pattu’. It is how falsehood can not be endured by those who love Emperumaan, same manner, truth can not be endured by those who enjoy the company of such women. Here Thiruvaimozhi (5.10.2) is quoted. Nammazhwaar says, ‘adhu idhu udhu ennal avana alla, ennai un seygai naivikkum” meaning that the followers of Emperumaan get involved fully with all the actions that are associated with Emperuman, in the same way, those who are associated with such women, would also get involved completely

Here ‘Pattu’ means irretrievably entangled. Azhwaar says that even when he is having the dharsan of the beauty of His form or Thirumeni in person, because of the advices from his Acharya or guru, he is caught in their net as his heart still thinks of those women.

Poi Yellam Podhindhu konda

Azhwaar says that just as truth has been completely rejected, falsehood has been completely included. He says that just as connection with Emperumaan makes even the liars to speak the truth, so as the connection with other women makes truth-tellers to lie.

Like truth, falsehood is multifaceted, so he refers to it as everything by calling “ellaam“. He says that he kept with him everything that could be called a lie.

When Azhwaar says “podhindhu konda“, it means ’embodied’ and he says that he had kept all the lies with him without letting them escape anywhere. Azhwaar says that any man, if ever wanted to lie to his girl friends, must come to Azhwaar and ask for it, as he had taken the entire lease of lying. He says that just as security is strengthened in all the eight directions of a fort and the people are kept inside and prevented from going out, so the lies are made sure that none of them would leave Azhwaar.

Potkanen Vandhu Ninren

Since, those who speak truth alone can approach Emperumaan, He cannot be approached if Azhwaar’s inferiority alone is taken into consideration. Because there was no other means, he came and stood in front of Emperumaan. Those who have followed the procedures to reach Him would ‘stand’ in front of His door, like a worker standing in front of his employer to receive the wages. Azhwaar says that he too had come in front of Him and stood much similar to those who have followed the ways to reach Him. Azhwaar said that he had no other go hence came in front of Him in “Potkanen“.

Ayyane Arangane

Azhwaar uses “Ayyane” here to insist about his natural relationship with Emperumaan. Emperumaan asked, why Azhwaar could not go to the women ( Virikuzhalaaril pattu) but yearns to reach Paramapadham, that is attainable only by people who have conquered internal and external senses. Azhwaar said that it was because he had a relationship with Emperumaan, that was indestructible by him and that relationship had occurred naturally. He continued that he came in front of Emperumaan like the children who have harmed their parents, coming back to them through the backdoors seeking help.

Emperumaan wanted to know from Azhwaar on how he discovered his natural relationship with Him. Was it through reading the scriptures, or because of the teachings of the Acharyas’ . Azhwaar explained this by the word Arangane, which means that he came to Emperumaan in Thiruvarangam, whose only aim is to uplift all the samsaaris and grant them Moksham . Azhwaar continued that the reclining form of Emperumaan in Thiruvarangam, shows that even though there would be people who detest Emperumaan, and He does not hate anyone, and has vowed that He would not leave Thiruvarangam until He takes everyone here to Moksham.

Un arul ennum aasai thannaal

Azhwaar said that he came to receive the mercy of Emperuman. It is like even those who have harmed themselves to the extent of perishing, need the mercy of Emperumaan. The reason for the above statement is the way Rama showed mercy to Kakasura . Even when Rama tried to kill Kakasura with Brahmastra, Rama’s mercy was such that Kakasura came back and fell in Ramapiran’s foot. Ramayana, Sundara Kanda, 38.34 says that Kakasura, who had surrendered and fell to the earth, though he deserved to be killed, was saved by the grace of Rama, who deserved surrendering. The exact meaning of that sloka is ‘Seeing the crow fallen on the ground, O Kakutstha (Ram), you who are a saviour of those who seek refuge, saved him out of compassion, even though he deserved to be killed. (34). And the next sloka says “Rama, you saw the crow in pain and despondency who returned to you and said that it is not possible to make Brahma’s weapon ineffectual. You may tell now. (what should be done.)” (35).

Poiyanen vandhu ninren

Emperumaan said that He was looking at Jeevathmaas like Azhwaar, who

  • knew that they had no merits and
  • knew that they had all demerits, and
  • those who also knew the natural relationship with Emperumaan.

When Emperumaan wanted to ascertain the same from Azhwaar, he said that these were also not true. He said that he could not speak any one thing as truth to Emperumaan, as He naturally knows everything .

To say that he was a liar, as in “Poiyanen” is to say that he had all the vices. Having no refuge, other than Him no other shelter, realising He alone is the source is the Surrender to Emperumaan. This is stipulated in shastraas. He said that he did it because he was told that doing this in front of Him would be beneficial. The comment is that he really did not say that he went in front of Him with his demerits in mind.

Poiyanen Poiyanene

Azhwaar said that he lied in such a capability that even Emperumaan, who, by His nature, knows everything as they are, also believed those lies as Truth. In the earlier hymns, all the words said by azhwaar like “aadharam peruga vaitha azhagan”(16), “kanninai kallikkumaare”(17), paniyarumbu uthirumaalo “(18), “udal enaku urgumaalo “(19) were all false garlands, and Emperumaan believed that those were true and hence Azhwaar said strongly that he was a liar, by mentioning the words twice, like Poiyanen, Poiyanene: Azhwaar completed this this verse by saying how many lies he had told in front of Emperuman, where every one should tell only the truths to survive.

Let us catchup again in the next song. Thanks.

072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் )
மூலவர்நவமோஹன கிருஷ்ணன்
உத்ஸவர்
தாயார் ருக்மணி சத்தியபாமா
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10
ஆண்டாள் – 5
திருமங்கை ஆழ்வார் – 7
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருவாய்ப்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

திருவாய்ப்பாடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

திருத்தலம் பற்றி

டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் மதுரா புகைவண்டி நிலையம் உள்ளது. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் திரு ஆய்ப்பாடி என்றும் ஆயர்பாடி என்றும் கோகுலம் என்றும் சொல்லப்படும் இந்த திவ்யதேசம் உள்ளது.

கண்ணனின் லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக வ்ரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் வ்ரஜ பூமி’யில் உள்ளன.

யமுனா நதி இங்கே ஓடுகிறது. அருகில் புராண கோகுல் என்ற இடம் உள்ளது. இங்கே நந்தகோபர், யசோதை, பலராமர் மற்றும் கிருஷ்ணருக்கு மரத்தினால் ஆன சிலைகள் உள்ளன. இங்குள்ள மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் உடையனவாக உள்ளன. சிறு வயது கண்ணன் இங்கே மண் உண்டு தன்னுடைய திருவாயில் ஏழு உலகங்களையும் யசோதைக்கு காட்டியதை நினைவுகூறும் வண்ணம், மண்ணே பிரசாதமாக தரப் படுகிறது.

சிறைச்சாலையில் தேவகிக்கு மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் நந்தகோபர் வீட்டில், வந்து சேர்ந்த, கண்ணன் பிறந்த நாளுக்கு அடுத்த நாள், அதாவது ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் இங்கே நந்தோற்சவம் என்று ஆயர்பாடி வந்த திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் இப்போது இல்லை என்றாலும், இப்போது இருப்பவை, பிற்காலங்களில் ஏற்பட்டவை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும். மதுராவில் கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

எம்பெருமானை “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது. அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன் இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது. இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே மிகவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு. கிருஷ்ணரின் ரஸா அனுபவத்தை ரசித்தே உலகில் உயிரினங்கள் காலம் கடத்துகின்றன என்பதே உண்மை.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • கோகுலம்
  • புராண கோகுல் (சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில்)
  • மதுரா திவ்யதேசத்தில் குறிப்பிட்ட இடங்கள்
    • மதுரா சிறைச்சாலை கண்ணன் கோவில் – கிருஷ்ண ஜென்ம பூமி / கேசவதேவ் கோவில்
    • கோவர்த்தன கிரி, மலை, பரிக்ரமா அல்லது சுற்றி வருதல்
    • கேசீ காட், காளிய மதன் காட், சீர் காட், ரமண்ரேதீ, வம்சீ வட், சேவா குஞ்ச், நிதிவனம், பங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர், ரங்கஜி மந்திர் / ரங்கமந்திர்

ஸ்தல வரலாறு

இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து திருஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.

கண்ணனின் சிறு வயதில் நடத்திய லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன்
சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த விளையாட்டுக்கள் எல்லாம்
பல நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்று பலவிதமான லீலைகளை செய்த இதன் இந்த கோகுலம்.

பூதகியை கொன்றது, கன்றுகள் மேய்த்து திரும்பியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது, கொக்காசுரன், சகடாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்தது, கோபியரோடு ஆடியது, காளிங்க நர்த்தனம் செய்தது, குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது, கோபியரோடு குரவை கூத்து ஆடியது, வேணுகானம் இசைத்தது, கம்ச வதம் செய்தது என்று ஆயர்ப்பாடி வரலாற்றை நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

கோகுலத்தில் கண்ணன் செய்த லீலைகளை தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களால் 22 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த கோகுலம் என்ற திவ்யதேசம்.

கண்ணன் வளர்ந்த ஊர் என்பதால் ஆயார்பாடிக்கு பெருமை உண்டானது. ஆயர்பாடியின் செல்வத்தை, அதன் வளத்தை, சீர்மல்கும் ஆய்ப்பாடி, என்று ஆண்டாள் பெருமை பேசுகிறார். அங்கே ஆயர்கள் பாலை கறக்க குடத்தை எடுத்ததும், ஒரு சில நொடிகளில் குடத்தை நிறைந்ததும், அதனால் வள்ளல் பெரும்பசுக்கள் என்று அவள் போற்றி பாடுகிறார். பரம் பொருளாகிய நாராயணனின், கிருஷ்ணனின், தங்கள் வீடு வந்த சந்தோஷத்தை ஆயர்கள் கொண்டாடினர். கண்ணன் பால் தயிர் வெண்ணையை திருட வருவான் என்று நினைத்து பால், தயிர் வெண்ணை என்று வீடு எங்கும், நிறைத்து வைத்துஇருப்பார்கள் என்று பெரிய ஆழ்வார் பேசுகிறார்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

14ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே. (பெரியாழ்வார் திருமொழி 1.2.2)கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோஷம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர்.
16
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. பெரியாழ்வார் திருமொழி 1.2.4
கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம்.
132தீயபுந்திக் கஞ்சன்உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே. பெரியாழ்வார் திருமொழி 2.2.5)கண்ணபிரானே, கெட்ட புத்தியையுடைய கம்சன், உன்னிடத்தில் கோபம் கொண்டு, நீ தனியாக இருக்கும் சமயம் பார்த்து, வஞ்சனையால் உன்னை கைப்படுத்திக் கொண்டால் நான் உயிருடன் இருக்கும் சக்தி அற்றவளாக இருப்பேன், தாய்மார்கள் சொல்லும் வார்த்தைகள், மிகவும் முக்கியமான அவசியமான வார்த்தைகள் ஆகும். மீண்டும் வற்புறுத்தி சொல்கிறேன், நீ எங்கும் செல்ல வேண்டாம், திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே! அமர்ந்து வந்து என் முலை உணாயே என்கிறார். உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், இத்திருவாய்ப்பாடி முழுவதும் இருள் சூழ்ந்து விடும் என்கிறார்.
145முலையேதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்து விட்டு மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர்பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே. (பெரியாழ்வார் திருமொழி 2.3.7)முலையையும் மற்றும் உள்ள பக்ஷ்ணங்களையும் வேண்டாம் என்று சொல்லி காதில் இட்ட காதணியை தூக்கி எறிந்து விட்டு கோவர்த்தன மலையை குடையாக தூக்கி ஆலங்கட்டி மழையில் இருந்து ஆயர்குல மக்களையும், ஆடு மாடுகளையும் மனம் உகந்து காத்துஅருளினவனே, இராமாவதாரத்தில், சிவ தனுசுவை முறித்து, பிராட்டியை மணம் கொண்டவனே, த்ரிவிக்ரமனே, திருஆய்ப்பாடிக்கு உபகாரகனே, என்று பலவிதமாக யசோதை கண்ணனை புகழ்ந்து மீண்டும் அந்த காதணியை அணிவிக்க முயல, அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமும் இல்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டது என்னுடைய குற்றமே’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.
231தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கன்று ஆநிறைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவேபெரியாழ்வார் திருமொழி 3.1.9தாய் மோர் விற்பதற்கு வெளியே செல்வார்கள்; தந்தை இளம் பசுக்கூட்டங்களை மேய்பதற்காக அவற்றின் பின்னே போய்விடுவர்கள்; அப்படிப்பட்ட சமயங்களில், ஆயர்பாடியில் தனியே இருக்கும் அந்த இளம் பெண்களை நீ விருப்பம் போல், இஷ்டமான இடங்களுக்கு அழைத்து செல்கிறாய்; உன்மீது பகைமை பாராட்டும், சிசுபாலன், கம்சன் முதலானவர்களுக்கு உன்மீது பழிச்சொல் சொல்லி சந்தோஷம் படுபவர்களுக்கும், உன்னை விரும்புபவர்களும் உன் செயல்களை கண்டு, உன்னை வெறுக்கும்படி, திரியும் ஆயனே, உன்னை சாதாரண மனிதன் அல்ல என்றும், அருந்தெய்வம் என்றும் நான் அறிவேன்; உனக்கு முலை தர அஞ்சாமல் நின்றேன் என்று யசோதை சொல்வது போல் அமைந்த பாடல்.
235பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே, கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.2திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சள் அரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதை சோதித்து பார்ப்பதற்கு கண்ணனுடைய கரிய திருமேனியிலே பூசிப் பார்ப்பார்கள் ; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பெயர் பெற்றது. சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடுகளை தன் திருவடிகளால் சிதைத்து விளையாடி திரியாமல், முன்னே வருபவர்கள் தெரியாதபடி கன்றுகளின் தூளிகளால் நிறைந்து இருக்கும், அடித்து பிடுங்கும் வேடர்கள் நிறைந்த காடுகளுக்கு கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், கண்ணபிரானுடைய பொன் போல் மேனி நிறம் மழுங்குமே என்றும், எல்லாம் நான் செய்த பாவமே என்று யசோதை வருந்துவதான பாடல்.
237வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கண்ணுக்கே இனியானைக் கான் அதர் இடைக் கன்றின் பின் எண்ணற் அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.4 எவ்வளவு தீங்கு செய்தாலும் இந்த கண்ணனின் வடிவழகை நினைத்தால் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பதைப்போல், இவனை விடமுடியாதே என்ற கருத்துடன் உள்ள பாடல். அழகியதான கறுத்த கூந்தலை உடைய பெண்டிர், தலைமுடி கலைந்து ஓடி கண்ணனின் தாயான என்னிடம் வந்து, பல தீமைகளை செய்ததாக பழி தூற்றிடும் படி அவனை எங்கும் திரியவிடாமல் செய்து, காட்டுவழியில் கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், எல்லாம் தான் செய்த பாவமே என்கிறார். தீங்குகளால் நெஞ்சங்கள் புண் பட்டாலும், கண்கள் அவற்றை பதிவிடாமல் செய்யும் அழகை உடையவன் என்பதை கண்ணுக்கு இனியானை என்று கூறுகிறார். இந்த தன்மையானவன் என்று யாராலும் நினைக்க முடியாதவன் கண்ணன் என்பதை எண்ணற் அரியானை என்று கூறுகிறார்.
239மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கடிறு பல திரி கான் அதர் இடை கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (பெரியாழ்வார் திருமொழி 3.2.6)கண்ணபிரானை வெண்ணெயை தொண்டையில் உறுத்தாமல் மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி பல இடங்களுக்கு சென்று, பல கள்ள வேலைகளை செய்து, இந்த ஆய்ப்பாடி முழுவதும் திரியவிடாமல், பல யானைகள் திரியும் காடுகளில் கன்றுகளின் பின் போக விட்டேனே, எல்லாம் என் பாவமே என்று வருந்தும் ன்பாடல்;
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி என்பதற்கு, மற்ற பக்ஷணம், உணவு என்றால் பார்த்து சாப்பிட வேண்டும், வெண்ணை என்றால், அப்படியே விழுங்கிவிடலாம் என்கிறார். தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை (பெரியாழ்வார் திருமொழி 1.1.5), என்றும், தடாநிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு (பெரிய திருமொழி 10.7.3) என்றும், ஈட்டிய வெண்ணை தொடுவுண்ண வந்து அவதரித்தவன் என்றும் விளக்கப்படுகிறது.
படிறு பல என்பதால் எண்ணில் அடங்காமையை சொல்லியது. பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் (பெரிய திருமொழி 10.7.5) என்றும், தொட்டு தைத்து நலியேல் கண்டாய்  (நாச்சியார் திருமொழி, 2.8) என்றும், எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால்
(நாச்சியார் திருமொழி 2.9) என்றும் படிறு பல விளக்கப் படுகிறது.
263விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மறைத்து ஆயர் பாடியில் வீதியூடே கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னி மார் காமுற்ற வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் பண்ணின இன்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (பெரியாழ்வார் திருமொழி 3.4.10)ஸ்ரீவைகுண்டத்திலே நித்யஸூரிகள் விரும்பி சேவித்த போதும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் இருந்து தன்னை மறைத்து, திருவாய்ப்பாடியில் வந்து திருஅவதாரம் செய்து, பசுக்களின் பின்னே நின்றது, ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள அவனது மேன்மைக்கு எதிரிடையான, அவனுடைய சௌலப்யத்தை / நீர்மையை ஜீவாத்மாக்களுக்கு காட்டவே என்கிறார். பெரியாழ்வார் அருளி செய்த சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் இனிமையாக பாட வல்லவர்கள் வைகுந்தம் பெறுவார் என்று பலம் கூறி முடிக்கிறார்.
281புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத்தது அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. (பெரியாழ்வார் திருமொழி 3.6.7)பூமியில் நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தை காணுங்கள்; கன்றுகள் மேய்கின்ற கோபாலன் இருக்கிற கூட்டத்திலே, திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்டு இருக்கின்ற சர்வேஸ்வரன் திருகுழலை ஊத, அந்த இசையானது தேவலோகம் முழுவதும் பரவ, வானவர் அனைவரும், அந்தணர்கள் தங்களுக்கு அளிக்கும் ஹவிஸை (யாகங்களில் அக்நிக்கு அளிக்கப்படும் பிரசாதம்) உண்ண மறந்து, திருஆய்ப்பாடியானது நிறைந்து வழியும்படி, நெருங்கி செவியின் உள்நாவால் குழல் ஓசையின் இனிமையை உட்கொண்டு, உள்ளம் களித்து பசு மேய்க்கும் கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் விடாமல் இருந்தார்கள்.
பெரியாழ்வார் திருமொழி

ஆண்டாள் – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி

474மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம், கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (திருப்பாவை 1)இந்த பாடல், திருவாய்ப்பாடி சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கு ஏற்ற காலம் ஏது” என்று மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களிடம் கூறுவது, பகவத் கீதையில் கண்ணபிரான், மாதங்களில் தான் மார்கழி மாதமாகிறேன் என்று மார்கழி மாதத்தின் பெருமையை கூறினார். இங்கு, நீராட எனக் கூறியது நெடுநாளாகக் கண்ணபிரானைப் பிரிந்து இருந்தமையால் பிறந்த தாபம் அடங்க நீராட விருப்பமுடையீர், வாருங்கள் என்று அழைப்பது. “மார்கழித் திங்கள்” என்று கூறியது ஸத்துவகுணம் நிரம்பிய கால விசேஷத்தைக் குறிக்கும்.
கீழ்மையான ஸ்வர்க்கலோக அனுபவத்திற்கு ஹோமம் யாகம் முதலிய அரிய காரியங்களை செய்ய வேண்டும்; மீண்டும் திரும்ப முடியாத வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்களால் விளங்கும்.  
பால், நெய் மற்றும் வெண்ணெய் முதலியவற்றால் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில் திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்கும் ஆய்ப்பாடி” எனப்பட்டது. 
எம்பெருமானிடம் அன்பு காட்டுவதைத் தவிர மேன்மையானது வேறு எதுவும் ஜீவாத்மாவிற்கு இல்லை என்பதாலும், தண்டகாரண்ய வாசிகளான முனிவர்கள் இராமபிரானது வடிவழகின் அதிசயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியால் அடுத்த பிறவியில் பெண்மையை விரும்பி ஆயர்பாடியில் மங்கையராய் பிறந்து, கண்ணணைக் கூடினர் என்பதாலும் “செல்வச் சிறுமீர்காள்” என்று கூறப்பட்டது.
எறும்பு முதலிய சிறிய உயிர்களின் அழிதலுக்கு அஞ்சிப் புல்லின் மேல் காலை வைத்து நடந்து அறியாத நந்தகோபன், கண்ணனை மகனாகப் பெற்ற பின்பு அவனிடத்தில் இருந்த அளவு முகுந்த பாசத்தினால், தொட்டிலின் கீழ் ஒரு சிறிய எறும்பு ஊர்ந்தாலும் அதனைக் கொல்வதற்காக எப்போதும் கூரிய வேலுடன் இருந்தான் என்பதை “கூர்வேற் கொடுந்தொழிலன் ” என்று கூறப்பட்டான்.  
உலகில் சிறுவர்கள் தந்தையரிடம் அஞ்சி நிற்பதும், தாய்களிடம் அடங்காமால் இருப்பதும் போல் கண்ணபிரானும் நந்தகோபனிடம் கன்றாகவும், யசோதையிடம் சிங்கமாகவும் இருந்தமையை “நந்தகோபன் குமரன்,” “யசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
நாராயணனே என்று சொல்லும் போது உள்ள ஏகாரம் நாராயணன் அடியார்க்குக்கு அருளும் போது எதையும் எதிர்பாராது செய்பவன் என்று உணர்த்தும்.  நமக்கே என்ற இடத்தில் உள்ள ஏகாரமும் அதே பொருளுடன் நாராயணன், ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் ஆகியவற்றுடன் உள்ள நமக்கன்றி மற்றவர்க்கு காரியம் செய்ய மாட்டான் என்று கூறுகிறார்.
பறை என்பது நோன்புக்கு ஒரு விசேஷமான வாத்யம் ஆகும். பறை என்பதற்கு கைங்கர்ய பிரார்ப்த்தி என்ற ஒரு உள்ளுறை அர்த்தமும் உண்டு. எம்பெருமானிடம் ஆண்டாள் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று பிரார்திக்கிறார். இந்த பறை என்ற வார்த்தையும் அர்த்தமும் திருப்பாவையில் பல இடங்களில் பார்க்கலாம்.
618மற்று இருந்தீர்கள் அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்றிருந்தேனுக்கு உரைப்பதெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஓழியவே போய்ப் பேர்த்தொரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின் (நாச்சியார் திருமொழி 12.1)
எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து.
‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது.
ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
630ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும், கார் ஏர் உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே (நாச்சியார் திருமொழி 13.4)திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளை கொண்டு அநுபவிக்கின்ற ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் துன்புறுத்த, அதனால் தான் மிகவும் துன்பப்பட்டதாகவும் பலவிதமாய் சிதலமடைந்து நொந்து கிடக்கிற தன்னை இந்த உலகத்தில், தேற்றுபவர் யார் உண்டு என்று கேட்க, தாய்மார்கள் தாங்கள் இருப்பதாக சொல்ல, எவ்வளவு அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று எப்பொழுதும் திருப்தி அடைய முடியாதபடி இருக்கின்ற கண்ணபிரானுடைய அமுதம் சுரக்கிற திருவாயில் ஊறி இருக்கின்ற மணம் மிகுந்த திரவத்தையாவது (ரசத்தையாவது ) ஈரப்பசையுடன் உலராமல், கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து அதை தான் பருகும்படி செய்து, தன்னுடைய இளைப்பை போக்க முயற்சி செய்யுங்கள் என்று ஆண்டாள் கூறும் பாசுரம்.
இராமபிரானை விரும்பி இருந்தால், அவனுடைய தெய்வீக திருக்குணங்களை எண்ணி அனுசந்தித்து சீதா பிராட்டியை போல் காத்திருக்கலாம் என்றும், கண்ணனை நம்பியவர்கள் அப்படி காத்திருக்க முடியாது என்றும் சொல்வது போல் உள்ளது. திருவாய்ப்பாடியில் உள்ள அத்தனை பெண்களிடமும் நன்றாக விளையாடிய கண்ணன் தன்னிடம் மட்டும் வராமல் இருந்தால் தான் எப்படி உயிருடன் இருப்பது என்கிறார். அம்பு பட்டு இருந்தால், மருந்து போட்டு கொள்ளலாம் என்றும் இப்படி தளர்த்தும் சிதைந்தும் இருந்தால் தன்னை தேற்றுவார் உண்டோ என்று ஆண்டாள் கேட்கிறார். சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாம் என்று எண்ணி, ஆராமுவது போன்ற எம்பெருமான் திருநாமங்களைச் அவள் செவிகளுக்கு கேட்கும்படி சொல்ல, அது கேட்டு சிறிது தெளிந்து, தான் உலர்ந்து போவதற்கு முன் தனக்கு எம்பெருமானின் வாயமுதம் என்ற பானத்தை பருகவைத்து தன்னுடைய இளைப்பை நீக்கப் பாருங்கள் என்கிறார்.
636அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே 13.10)
இந்த பதிகம் படித்தவர்களுக்கு இந்த பாடல் மூலம் பலன் சொல்லி முடிக்கிறார். நிச்சலும் தீமைகள் செய்யும் (பெரியாழ்வார் திருமொழி 3.7.1) எம்பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச் செய்த இந்த சொல் மாலைகளைப் புகழ்ந்து பாட வல்லவர்கள் ஸம்ஸாரம் என்கிற பிறவி பெருங் கடலிலே விழுந்து நோவு படமாட்டார்கள் என்கிறாள்.
பஹவோ ந்ருப! கல்யாணருணா புத்ரஸ்யஸந்திதே என்பதில் நல்ல குணவான் என்று இராமபிரான் புகழ் பெற்றதை போல் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ் பெற்று இருப்பதால், கண்ணன் செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கு போல் திகழ்கிறது என்று “அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை“ புகழ்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊரே இருண்டு கிடக்கும்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஆகும்.
வில்லை துலைத்த புருவத்தாள் என்று சொல்வதை ‘துலா‘என்ற வடமொழி சொல்லின் ஆதாரமாக கொண்டு வில்லை தோற்கடித்த புருவம் உடையவள் என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், அதனை பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் பற்றவில்லை; தன்னுடன் சமமாக இருக்கும் மற்ற பொருட்கள் எல்லாம் தோற்கும்படியான வில்லும் போராடி தோற்கும்படி உள்ள புருவங்களை உடையவள் என்ற பொருள் சொல்கிறார். ஆக துலைத்த என்பதற்கு தொலைத்த என்பது ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
638அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாளி குட் ஏற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
தான் மிகவும் தளர்ச்சி அடையும்படி என்னைப் பிரிந்து போய்த் திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரியும், ‘வெண்ணெயளைந்த குணுங்கு‘ (பெரியாழ்வார் திருமொழி 2.4.1) நாற்றம் கமழும் எம்பெருமானை (கண்ணனை) கண்டீர்களா என்று கேட்பது பாடலின் முதல் பகுதி. மின்னலும் மேகமும் சேர்ந்தது போல் திருமேனியில் வனமாலை அசைய அசைய ஆயிரக்கணக்கான பிள்ளைகளோடு விளையாடி இருக்குப்பதை விருந்தாவனத்தே கண்டோம் என்று விடை சொல்வது போல் இருப்பது பாசுரத்தின் பின் பகுதி.
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் என்பதில், ஆயர்பாடி எனபது, திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய் பால் முதலிய பொருட்களையும் குறிக்கும்.
குட்டேறு என்பதற்கு இளைய காளை என்று பொருள்.
கோவர்த்தனன் என்பதற்கு பசுக்களை ஒன்று நூறாக வளர்க்கும் ஆற்றல் பெற்றவன் என்று பொருள்.
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான் என்பது பெரியாழ்வார் திருமொழி (3.1.1).
ஆண்டாள் பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார்

1021பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெங்கோவலன், ஏத்துவார்த் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே. (பெரிய திருமொழி, 1.8.4)பாண்டவர்களுக்காக மஹாபாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி அடியவர்களுக்காக காரியம் செய்வதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், திருவாய்ப்பாடியில் இடைச்சிகளோடு ராஸக்ரீடை என்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதவனும், இடவெந்தை என்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானுடைய, பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார். பாரதம் கை செய்திட்டு என்று சொன்னது, பாரத யுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய உபகாரங்களைச் செய்த கண்ணன் என்கிறார்.   குரவை கூத்து என்பது ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவங்கள் எடுத்துக் கை கோத்து ஆடும் கூத்து.
அடியவர்களுக்காக காரியம் செய்தது என்பது, தர்மனுக்கு பட்டாபிஷேகம் செய்தது, திரௌபதி குழல் முடிக்க வகை செய்தது, குரவைக் கூத்திலே தன்னையும் ஒருவனாக இணைத்தது போன்றவை.
1392பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மையெழுதாள் பூவை பேணாள், ஏணறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும், நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர அறிகிலேனே, (பெரிய திருமொழி 5.5.5) திருமங்கையாழ்வாரின் தாயார் தன் மகளின் நிலையைப்பற்றி பாடும் பாடல்; தன் மகள் முத்தாரம் போன்ற ஆபரணங்கள் அணிந்த முலையின் மேல் சந்தனத்தை பூசுவில்லை ; ஒன்றோடு ஒன்று சண்டை செய்யும் இரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளவில்லை; தான் வளர்த்துக் கொண்டிருந்த பூவைப் பட்சியையும் ஆதரிக்கவில்லை; எந்த பொருளையும் நெஞ்சினால் நினைக்கவில்லை; ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்; செவ்வித்தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு வல்லவனானவனும், நமக்கெல்லாம் தெரியும் படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்த கண்ணபிரான், பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு என் மகளை செய்தவைகளை அறிய முடியாதவளாக இருக்கிறேன்.
தாயார் சொல்வது, ‘ஸ்ரீரீயப்பதி என்றே எம்பெருமான் அறியப்படுகிறான், இப்படி அவன் அவளுக்கு துன்பம் கொடுத்தால், அவள் எப்படி அவனுக்கு முகம் கொடுப்பாள், இது தெரியாதவனா எம்பெருமான்’ என்று வியக்கிறாள்;
1435அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேர் அருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே, (பெரிய திருமொழி 5.9.8)அழகிய பொன் போன்ற சிறந்த ஏழு உலங்களும் அறியும் படியாக திருவாய்ப்பாடியிலே நப்பின்னைப் பிராட்டியினுடைய கைப்பிடிக்க ஏழு எருதுகளை வீழ்த்தியவன் சிவந்த பொன் போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட தென் திருப்பேர் நகரில் இருந்து அருள் செய்கிறான். அவனுடைய திருநாமங்களை நாள் தோறும் சொல்லி தான் உஜ்ஜிவனம் அடைந்ததாக சொல்கிறார்.
1993தந்தை தளை கழல்த் தோன்றிப் போய், ஆய்ப்பாடி நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் காணேடீ, நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண், எந்தை பெருமான் காண் சாழலே. (பெரிய திருமொழி 11.5.2)தோழீ, தந்தையாகிய வஸுதேவருடைய விலங்கு கழன்று விழும்படியாக திருஅவதாரம் செய்து, மதுரையில் இருந்து ஆயர்பாடி சென்று நந்தகோபருடைய குலத்திற்கு விளக்காக வளர்ந்தான். இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான்முகனுக்கு தகப்பன் ஆவான். என்னுடைய எம்பெருமான் என்கிறார்.
கம்ஸனால் விலங்கிடப்பட்டுச் சிறையில் இருந்த வஸுதேவன், தேவகி இவர்களின் விலங்குகள் கண்ணபிரான் திரு அவதாரம் செய்த போது உடைந்த வரலாறு தந்தை தலைகழல என்பதால் சொல்லப்பட்டது.
1994ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப்போய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ, தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன் வயிறு, இவ் ஏழு உலகம் உண்டும் இடமுடைத்தால் சாழலே. (பெரிய திருமொழி 11.5.3)தோழீ, நீ பெருமையாக பேசுகின்ற எம்பெருமான் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாக இருந்தால் அன்றோ அவனுக்கு பெருமை. அவனுடைய சரித்திரங்களை ஆராய்ந்தால் அவனும் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பமுள்ளவனாகக் காணப்படுகிறான். திருஆய்பாடியில் கண்ணாகப் பிறந்து கள்ளத்தனத்தினால் தயிர் வெண்ணெய் பால் முதலியவற்றை வாரி உண்டான் என்பது தெரிவதால் இப்படி பிறர் பொருள்களில் ஆசையுள்ளவன் பரம புருஷனாக இருக்கத் தகுமோ? என்று பாசுரத்தின் முன்பகுதியில் கேட்கிறாள்; அதற்கு மறுமொழியாக இன்னொருத்தி, தோழீ, திருவாய்ப்பாடியில் இடைச்சிகள் சேமித்து வைத்திருந்த தயிரை அமுது செய்தான் என்பது உண்மை; நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு, அதனால் நிறைந்து விடுகிற வயிறு இல்லை அவனது திரு வயிறு. காரேழ் கடலேழ் மலை ஏழ் உலகுண்டும் ஆராவயிற்றான் (திருவாய்மொழி, 10.8.2) என்று இருப்பவன். . ஏழு உலகங்களையும் திருவயிற்றினுள் சேர்த்துக் கொண்டாலும், இன்னமும் வயிற்றை நிறைக்க வேணும் என்கிற எண்ணத்தினால் தயிர் முதலியவற்றை அவன் வாரி உண்டால் அவன் பெருமைக்கு குறை உண்டு எனலாம். ஆனால், அவன் கொண்டாடத்தக்க எளிமை குணத்தை காண்பிக்கவே இவாறு செய்தான் என்கிறாள்; அதனால் அவன் பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்பது கருத்து.
1995அறியாதார்க்கு ஆன் ஆயனாகிப் போய், ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிறுக்கு, எறி நீர் உலகு அனைத்தும் எய்தாது ஆல் சாழலே. (பெரிய திருமொழி 11.5.4)தோழி, ஒன்றும் அறியாதவர்களுக்கு மாடு மேய்க்கும் இடையர் குல மகனாக ஆய்ப்பாடியில் உறிகளில் உள்ள வெண்ணையை களவாடி உண்டு மகிழ்ந்தவன். உறிகளிலே இருந்த மணம் மிக்க வெண்ணெயை உண்டு உகந்தவனின் திருவயிற்றுக்கு கடல் சூழ்ந்த உலகங்கள் போதாது என்று ஆச்சரியப்படுகிறார்.
எம்பெருமான் மனிதனாக திரு அவதாரம் செய்தாலும் அவனுடைய மேன்மை குணங்களை அறியாதவர்களுக்கு, அவன் தயிரை கடைந்து உறியிலே சேமித்து வைத்தவன் இல்லை. கடைந்த வெண்ணையை உண்டு உகந்தான் என்றும் சம்சாரிகளுக்கு எப்படி பகவத்லாபமோ அது போல் அவனுக்கு இது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
2673ஆராத தன்மையனா ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி சீரார்க் கலையல் குல் சீரடிச் செந்துவர் வாய் (சிறிய திருமடல், 28)பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினன், இருந்தாலும் திருப்தி அடையாமல், தன்னுடைய ஸௌலப்ய (எளிய) குணத்தை நன்கு விளக்க வேண்டி ஒரு நாள் அந்தத் திருவாய்பாடியிலே அழகிய சேலையை அணிந்த அல்குலை உடையவளும், அழகிய கால்களை உடையவளும் மிகவும் சிவந்த அதரத்தை உடையவளும் (ஆன யசோதை மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு அழகிய இடுப்பு நோகும்படி வெகுகாலமாக சிறந்த தயிரைக் கடைந்து அதில் திரண்ட வெண்ணையை வேர்வை மிக்க நெற்றியை உடைய யசோதை வேறொரு பாத்திரத்திலே இட்டு பத்திரமாக வைத்துவிட்டு சென்றாள்.)
திருமங்கையாழ்வார்

மீண்டும், இன்னொரு திவ்யதேச யாத்திரையில் சந்திப்போம், நன்றி

சில புகைப்படங்கள்

திருவேங்கடமுடையான் திருமங்கையாழ்வார் 4 (வானவர் தங்கள் சிந்தை)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம்.

இனி அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி சிறிது இங்கே காணலாம்.

பெரிய திருமொழி (2.1)

அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே என்றும், இனி யான் உன்னை என்றும் விடேன் என்றும், கைங்கர்ய லாபத்திற்காக அவன் திருவடிகளை அடைந்து சரண் புகுந்ததும், அந்த கைங்கர்யமே எப்போதும் வேண்டும் என்கிற ஒரு ஆசை பிறந்ததையும் ஆழ்வார் கருத்தில் கொண்டு, அது எப்படி தன்பக்கலில் வந்தது என்று ஆராய்ந்து, மற்றவர்கள் (பொங்கு பொதியும் (2.1.5), துவரியாடையர் (2.1.6) பாடல்களாலும் இந்த பிறவி பலன் தெரியாமல் பாழ்பட்டு நிற்க, தனக்கு மட்டும் கைங்கர்யம் செய்ய ஆசை பிறந்ததற்கு காரணம் தன் நெஞ்சே (என் நெஞ்சம் என்பாய் , பெரிய திருமொழி 2.1.2 முதல் 2.1.8) என்று உணர்ந்து கொண்டு திருவுள்ளதோடு கூடி இனியர் ஆகின்றார்.

பெரிய திருமொழி முதல் பத்தில், ஆழ்வார், திருமந்திரத்தின் பலன்களையும், திருமந்திரத்தின் அர்த்தங்களை அருளி செய்ததையும், அந்த மந்திரம் விளைந்த நிலங்களில் தனக்கு உண்டான ஆசை மற்றும் அபிமானங்களை அருளி செய்தார். ஸ்ரீ சாளக்ராமம், ஸ்ரீ நைமிசாரண்யம், ஸ்ரீ அகோபிலம், ஸ்ரீ வெங்கடாச்சலம் இவற்றின் மேல் எழுந்த ஆசையினால் அவற்றை அனுபவித்து தமக்கு பகவத் விஷயத்தில் மிகவும் உகந்தது நித்ய கைங்கர்யமே என்று உறுதியாக சொன்னார்.

இனி இரண்டாவது பத்தில், திருவேங்கடம், திருஎவ்வளுர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருகடல்மல்லை, திருவிடவெந்தை, திரு அட்டபுயகரம், திருபரமேச்சுர விண்ணகரம், திருக்கோவலூர் இவற்றில் உகந்து எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான்களை அனுபவித்து பாடி, தன்னுடைய ஸ்வரூபம், பாகவத கைங்கர்யத்திற்கு இன்னும் பொருத்தமாய் இருக்கும் என்று சொல்லி, முதல் பத்தில் சொன்ன எம்பெருமான் நித்ய கைங்கர்யம் அவன் அருளாலே வரவேண்டும் என்பதால், பாகவத கைங்கர்யத்தை கொண்டு, அதனை ஒதுக்கி விடுகிறார்.

முதல் பாடல் (2.1.1)

வானவர் தங்கள் சிந்தை போலேன் நெஞ்சமே.இனிது வந்து, மாதவ மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை, கானவர் இடு காரகிற் புகை ஓங்கு வேங்கடம் மேவி, மாண் குறள் ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

“என்னுடைய நெஞ்சமே, மிக்க தவம் செய்த மனிதர்கள் நெஞ்சங்களில் பொருந்தி நித்யவாஸம் செய்கின்ற என் ஸ்வாமியாய், வேடர்கள் வைரம் கொண்டு அறுத்த கருமையான அகில் மரங்களை நெருப்பில் இடுவதால் உண்டான புகை பரவி இருக்கின்ற உயர்ந்த திருமலையில் நித்யவாஸம் செய்கின்றவனாய், அழகிய வேடம் கொண்ட வாமனன் என்ற பிராமணனாக திகழும் எம்பெருமானுக்கு, நித்யஸூரிகளுடைய இதயங்களை போலவே இனிதாக உவந்து வந்து இப்பொழுது கைங்கர்யம் செய்வதில் ஆசைகொள்கின்றாயே” என்று ஆழ்வார் பாடுவது இந்த பாடலின் பொழிப்புரை ஆகும்.

தன்னுடைய நெஞ்சத்தினை குறித்து, ஆழ்வார், என் நெஞ்சில் உளானே என்றும், என் சிந்தையுள் நின்ற மாயன் என்றும் சொல்லி, அவன் தன் திருவுள்ளத்தில் வந்த அமர்ந்து இருக்கின்ற தன்மையை சிறப்பாக கூறி, மஹா தபஸ்விகள் இருதய கமலத்தில் வீற்று இருக்கும் ”மாண் குறள் ஆன அந்தணர்க்கு அடிமை பூண்டாயே” என்று பெருமையுடன் சொல்கிறார். தன்னுடைய உடைமையை பெறுவதற்கு தானே இரப்பாளனாகி வந்தமை மாண் என்பதன் மூலம் சொல்லப்பட்டது. மண் இரக்க வாமன அவதாரம் எடுத்தது போல் இப்பொழுது தன்னை அடிமை கொள்ள தன் நெஞ்சில் வாமன அவதாரம் எடுத்ததாக சொல்கிறார். அவனும் இரந்து நின்ற பின், தன் நெஞ்சமும் அவன் நினைவின்படியே போகின்றதே என்கிறார்.

நித்யஸூரிகளின் இதயம் பகவத் கைங்கர்யத்தில் எப்பொழுதும் ஆசையும் அபிமானமும் கொண்டு இருப்பதுபோல், என் நெஞ்சமான நீ அவன் திருவடிகளில் உகப்போடு ஈடுபாடு கொண்டு இருக்கிறாய் என்று சொல்கிறார்.

இரண்டாம் பாடல் (2.1.2)

உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப் பிறவியே கெடுப்பானது கண்டு என் நெஞ்சம் என்பாய், குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து, அறவ நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

ஆழ்வாரின் நெஞ்சம், ஆழ்வாரிடம், ‘நீர் எம்மை கொண்டாடுகிறீர், கைங்கர்யம் நமக்கு தொடர்ந்து நித்யம் கிடைக்குமோ என்று கவலை படும்படியான பாவங்கள் நிறைந்த பூமியில் அன்றோ நாம் வாழ்கிறோம்,” என்று சொல்லி, எம்பெருமானுடைய மோக்ஷம் அளிக்கும் மேன்மையே ஆழ்வார் இங்கே கொண்டாடுகிறார்.

நெஞ்சமே! திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களை அறிந்து நீ அவனிடத்தில் அடிமைத் தொழில் பூண்டாயே! நாம் பந்துக்களென்று சிலரை எண்ணிக்கொண்டு அவர்களுக்கு நன்மை செய்வதும், சிலரை எதிரிகள் என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்குத் தீமை செய்வதுமாக இருக்கிறோமே, எம்பெருமானுடைய ஸ்வபாவம் அது போல் அல்ல. அவன் கர்மத்தின் காரணமாக / நிர்பந்தமாக உறவு சுற்றம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன். எல்லாரிடத்திலும் வேறுபாடு இன்றி அன்புடையவனாக இருப்பவன். தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களின் பாபங்களை களைந்து, அவர்களை ஸம்ஸாரத்தில் இருந்து நீக்கி, நித்ய ஸூரிகளுடைய கூட்டத்திலே நிறுத்துபவன். அதனைப்பார்த்து அவன் மேல் அடிமைத் தொழில் பூண்டாயே” என்று தன் நெஞ்சிடம் சொல்வதாக சொல்வார்கள்.

உகந்தவர் தம்மை’ என்பதற்கு, ‘தன்னிடத்தில் எவர் அன்பு வைக்கிறார்களோ, அவர்களை’ என்றும், ‘எம்பெருமான் தான் எவர்களிடத்தில் அன்பு வைக்கிறானோ அவர்களை’ என்றும் உரைக்கலாம்.

அறவன் என்பதற்கு “ தண்ணீர்ப் பந்தலை வைத்து, நம்மை அடிமையாக பெறுகைக்குத் தம்மை நமக்குத் கொடுத்து நிற்கின்ற பரம தார்மிகன்” என்பது பெரியவாச்சான் பிள்ளையின் விளக்கம். நம்மிடத்தில் கைங்கரியம் கொள்வதற்காக திருமலையிலே வந்து நித்ய வாசம் செய்கிற பெரிய தருமத்தைச் செய்த எம்பெருமான் என்று சொல்கிறார்.

மூன்றாம் பாடல் (2.1.3)

இண்டையாயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும், வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என் நெஞ்சமென்பாய், வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டதனோடும், மீமிசை அண்ட மாண்டிருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

பரமபதத்தில் எப்பொழுதும் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் இருக்கின்ற நெஞ்சத்தை மீண்டும் அன்போடு கொண்டாடுகிறார்.

பலவகைப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு எம்பெருமானை துதிக்க வருகின்ற தொண்டர்களையும் அவர்களோடு ஸம்பந்தம் உள்ள மற்றவர்களையும் அவன் ஏற்றுக்கொண்டு, பரமபதத்திலே கொண்டு சேர்க்கிறான் என்கிற இந்த சிறந்த குணத்தைக் கண்டு நெஞ்சே, அந்த திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே என்று மகிழ்கிறார்.

இண்டை என்பது பூமாலை. ” எண்டிசையுமுள்ள பூக்கொண்டேத்தி” (திருவாய்மொழி, 4.7.8) என்று நம்மாழ்வார் சொன்னபடி, பூமாலை என்று பெயர் கொண்ட ஒன்றை ஏந்திக்கொண்டு சென்றாலும் போதும் என்கிறார்.

தொண்டர்களெத்துவார் என்பதனால், தொண்டர்கள் பகவத் விஷயத்தில் “கையினால் பூக்களை கொண்டு, வாயினால் எம்பெருமானை பாடி” என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

உறவோடும் வானிடைக் கொண்டு போயிடவும் அது கண்டு என்று சொல்வதால் தொண்டர்கள் மட்டுமின்றி அவர்களோடு ஸம்பந்தம் உள்ள அனைவர்க்கும் மோக்ஷம் என்று ஆழ்வார் கூறுகிறார். இங்கு சம்பந்தம் என்பது ஒருநாள் காரியம் செய்தாலும் என்று கொண்டு, வேறுபாடு இல்லாமல் அழைத்து செல்கிற குணம் என்கிறார்.

இங்குத்தை இருப்பு தன்னையும் இழக்கிறோமோ என்று அஞ்சி அவன் அருகே சென்று கைங்கர்யம் செய்ய ஆசை கொண்ட நெஞ்சே என்று நெஞ்சத்தினை கொண்டாடும் போது, அஞ்சி என்பது இந்த உலகத்தில் உள்ள லௌகீகர்கள் அஞ்சுவது போல் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டம் என்று சொல்வது ஆகாயம் என்று பொருள். வெறும் ஆகாயத்தை என்று சொன்னால் அது சொர்க்கத்தை மட்டுமே குறிக்கும் என்பதால் மீமிசை அண்டம் என்று சொல்லி, மஹா ஆகாயம் அல்லது பரம ஆகாயம் என்று சொல்லி, பரமபதத்தையும் சேர்க்கிறார்.

அவாப்த ஸமஸ்த காமன் (எல்லா ஆசைகளும் நிறைவேறியவன் அல்லது நிறைவேறாத ஆசை ஒன்றும் இல்லாதவன்) என்று சொல்லப்படும் எம்பெருமானுக்கு, இவரை அடிமை செய்யாவிட்டால் என்ன குறை என்று கேட்டுக்கொண்டு, திருமலையில் ஆழ்வார் வந்து புகுந்து எம்பெருமானிடம் அடிமை கொள்வதற்கு முன்பு, இந்த பூ உலகத்தை ஒரு ஐஸ்வர்யமாக நினைத்தது கிடையாது. (தனலுப்தன்) ஒரு ஏழை அல்லது கஞ்சன் ஒரு காசு விழுந்த இடத்தில் துழாவி கையெல்லாம் புழுதியாகி நிற்பதைப்போல் அவன் திருமலையில் நிற்கிறான் என்று உரையாசிரியர் எழுதுகிறார்.

நான்காம் பாடல் (2.1.4)

பாவி யாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை, மண்மிசை மேவி ஆட் கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை, கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கடமலை ஆண்டு, வானவர் ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த ஆழ்வார் முன்பு பெரிய திருமொழி 1.4.4ல் “துணிவினி உனக்குச் சொல்லுவன்மனமே. தொழுதெழு தொண்டர்கள் தமக்கு, பிணியொழித்த அமரர்ப் பெரு விசும்பு அருளும் பேரருளாளன் எம்பெருமான்,’ என்று சொல்வதை ஆழ்வாருடைய நெஞ்சமானது குறிப்பிட்டு, ‘இப்படி நீங்கள் உபதேசம் செய்ததால் மோக்ஷத்தை பற்றி சொன்னேன்’ என்று கூற, அதற்கு ஆழ்வார் ‘தான் எத்தனை காலமாக உபதேசத்திருந்தாலும் அப்போதெல்லாம் மறுத்ததை நினைவில் கொண்டு, அதனால் இப்போதும் கேட்கமாட்டேன் என்று சொல்லாமல், உடனே இசைந்தாயே ‘ என்று நெஞ்சத்தை புகழ்கிறார்.

எம்பெருமான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்து, பக்தர்களிடத்தில் பற்பல கைங்கரியங்களை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அருளி, அத்துடன் திருப்தி பெறாமல் இன்னமும் இவர்களிடத்தில் நித்ய கைங்கரியம் கொள்ள வேண்டும் என்று அவர்களை பரமபதத்திற்கு கொண்டு வைப்பவனாய் இருக்கும் கோபால கிருஷ்ணனான திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே நெஞ்சே என்று உகக்கிறார்.

முன்பு தமக்கு அடிமை செய்தவர்களை, தான் திருஅவதாரம் செய்து, இவன் எனக்கு மைத்துனன், இவன் எனக்கு நண்பன் என்று சொல்லி அவர்களோடு பொருந்தி, அவர்களுக்கு கைங்கர்ய ருசியை ஏற்படுத்தி, அவர்களை தனக்கு அடிமை செய்ய வைத்து, அவர்களை பரமபதத்தில் கொண்டு வைக்கும் சுவாமி என்கிறார். இங்கு மைத்துனன் என்றது அர்ச்சுனனை, நண்பன் என்று சொல்வது குகப்பெருமானை.

பாவியாது செய்தாய் என்பதில் உள்ள பாவி, என்பது பாவித்தலாகிய ஆராய்தல் என்பதை சொல்வது. ஆராயாதே செய்தாய் என்றதன் கருத்து, “அத்தைச் செய்வோமோ இத்தைச் செய்வோமோ” என்று அலைபாயாமல், உறுதியான எண்ணம் கொண்டு தொண்டு செய்தாயே என்று கூறுதல் ஆகும். இந்த உலக விஷயங்களில் மண்டி சம்சாரியாக இருக்கலாமா, எம்பெருமானுக்குத் தொண்டு செய்து பிறவிப்பயன் ஏய்தலாமா என்று தடுமாறாமல் சடக்கெனக் கைங்கரியத்தில் ஈடுபட்டாயே என்று சொல்கிறார்.

கோவிநாயகன் (கோபிநாயகன்) என்பது ஆய்ச்சிகட்கு அன்பன் என்று அர்த்தம் ஆகும். கோபியர்களுடன் கண்ணன் கலந்து விளையாடுவதைபோல் எம்பெருமான் தன்னுடைய அடியார்களோடு ஆர்வத்துடன் சேர்வான் என்பதை குறிக்க கோவிநாயகன் என்று கையாண்டு உள்ளார்.

ஐந்தாம் பாடல் (2.1.5)

பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளி உள்ளுறை, தங்கள் தேவரும் தாங்களுமேயாக என்நெஞ்சமென்பாய்! எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்றருள், அங்கணாயகற்கு இன்றடி மைத்தொழில் பூண்டாயே.

பாவியாது செய்தாய் என்று என்னை புகழ்வது ஏன் என்று நெஞ்சம் கேட்டபோது, ஆழ்வார் வெளியே இவ்வுலகில் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்று இந்த பாடலின் மூலம் ஆழ்வார் சொல்கிறார். உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புற மதத்தவர்களின் சமயம் வளர்ந்தும் வரும் இப்படிப்பட்ட உலகத்திலே விதிவசத்தாலே நாம் புற மதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே பிறந்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப் பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் (2.1.5, 2.1.6 மற்றும் 2.1.7) வெளியிடுகிறார்.

பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாக கொண்டும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக கொண்டும் இருப்பதை, பொங்குபோதியும்  பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர் என்றார். போதி என்று அரசமரத்திற்குப் பெயர்;  அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது.  பிண்டி என்று அசோக மரத்திற்குப் பெயர்.  ஜைநர்கள் அதிகமாக விரதங்களை கடைபிடிப்பவர் ஆகையால், நோன்பியர் எனப்பட்டனர்.  ஆக, புத்தர்களும், ஜைநர்களும் ஆகிய புற மதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்து இருக்கும் மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் செல்லாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத் தொழில் பூண்டாயே, நீயே பாக்யசாலி என்று ஆழ்வார் உவக்கிறார்.

தாங்களுமேயாக என்பதற்கு ஆழ்வார் உட்கருத்தாக சொல்வது, லோகத்தில் உள்ள மற்றவர்கள் முக்தர்கள் ஆகும்படி என்பதாகும். எப்படி ஆழ்வாரது நெஞ்சம், மற்றவைகளை ஆதரிக்காமல், எம்பெருமான் விஷயத்தை ஆதரித்ததோ அதே போல் லோகத்தில் உள்ள மற்றவர்களும் எம்பெருமான் விஷயத்தை ஆதரித்து, பின்பற்றி முக்தர்கள் ஆவார்கள் என்கிறார்.

தானவரென்று அஸூரர்களைச்சொல்வதுடன் இந்த நிலவுலகத்தில் உள்ளவர்களையும் குறிப்பதாக சொல்வதுண்டு.   ஸ்தாநம் என்ற வடசொல் தானம் என திரிந்து ஸ்தானத்தில் உள்ளவர் என்பதை தானவர் என்று கொண்டு, அவ்வுலகத்தில் உள்ளவர்களும் இவ்வுலகத்தில் உள்ளவர்களும் நிறைந்து போற்றுமிடம் வேங்கடம் என்றும் கொள்ளலாம்.

அங்கணாயகற்கு (அம் கண் நாயகர்க்கு ) என்பதற்கு எம்பெருமானின் கண்ணழகிற்கு தோற்று அடிமை சாசனம் எழுதி கொடுத்தவர்கள் வழியில் சேர்ந்தாயோ என்று நெஞ்சத்தை கொண்டாடுகிறார்.

ஆறாம் பாடல் (2.1.6)

துவரிய ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டியுண்டு பின்னரும், தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சமென்பாய், கவரி மாக்கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண்ணார் விசும்பிடை, அமர நாயகறகு இன்றடிமைத் தொழில் பூண்டாயே.

இடுப்பிலே காவி உடையை கட்டிக்கொண்டு மொட்டைத் தலையராகக் இருக்கிற சமணர்கள் கண்டபடி சோறுகளைத் தின்று அவ்வளவோடு திருப்தி பெறாமல், தங்களைப் போன்ற மற்றுமுள்ள சமணர்களுடனே பின்னையும் பெருங்கூட்டமாக இருந்து தின்று தின்று தடித்து இருப்பதை காண்கிறோம், நெஞ்சமே நீயும் அவர்களைப்போலே உண்டு உடல் பெருத்து போகாமல் திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டு வாழப் பெற்றாயே என்று தன்னுடைய நெஞ்சத்தினை ஆழ்வார் உகந்தார்.

ஓ மனமே, காஷாய வஸ்திரம் அணிந்து மொட்டை தலையராக இருக்கிற சமணர்கள் ஒருவருக்கு மேல் ஒருவர் விழுந்து, மனம் போனபடி பல உணவுகளையும் உண்டு, அவர்களும் அவர்களை சேர்ந்தவர்களும் உடல் பருத்து இருக்க, நீயும் அவர்களைப்போல் உண்டு, உடம்பு பெருக்காமல் கவரிமான்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்திருக்கிற திருமலையைக் கோயிலாகக் கொண்டவனும், விசாலாமான பரமபதத்திலேயுள்ள நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான எம்பெருமானுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே என்று ஆழ்வார் உகக்கிறார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஏழாம் பாடல் (2.1.7)

தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார் அலக்கணது கண்டென் நெஞ்சமென்பாய், மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டதனோடும், வானிடை அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

தருக்கினால் என்று சொன்னது தர்க்கத்தினால் என்று கொண்டு வெறும் கேவலம் வாதங்களாலே மட்டும் தங்கள் மதத்தை ஸ்தாபிக்க செய்வார்கள் என்றும் சாஸ்த்ரங்களுடன் கூடிய அல்லது ப்ரமாணங்களுடன் கூடிய வாதங்ககளை கொண்டே மதங்களை ஸ்தாபிக்க வேண்டியது உசிதமானது என்றும் இந்த பாடலில் ஆழ்வார் கூறுகிறார்.

சமணமதத்தில் ஒரு விரதமுண்டு; அதாவது, பெருஞ்சோறுண்ணுதல் என்ற அந்த விரதத்தின் போது, தயிறும் சோறுமாகத் திரட்டி, கண் பிதுங்கும்படி கழுத்துவரை சோறிட்டு கொள்வார்களாம். அந்த கஷ்டத்தைக் கண்டு அந்த மதத்தை வெறுத்துத் திருவேங்கடமுடை யானுக்குத் தொண்டு பூண்டு மகிழப் பெற்றாயே நெஞ்சமே, என்று ஆழ்வார் உகக்கிறார். இதே ஆழ்வார் பெரிய திருமொழி ஏழாம் பத்து ஒன்பதாவது பதிகம் இரண்டாம் பாடலில் (7.9.2) “தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ்சோற்றோடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்தடைவீர்” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு என்பது வைதிகர்கள் வணங்கும்படியாக ஸூர்ய மண்டலத்திலே எழுந்தருளி இருப்பவனே என்றுசொல்வர். அதேபோல், சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும் எம்பெருமானுக்கு அடிமை பூண்டாய் என்றும் சொல்வதுண்டு. .  “த்யேயஸ் ஸதா ஸவித்ருமண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

எட்டாம் பாடல் (2.1.8)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பது சிலர்ப் பேசக் கேட்டிருந்தே, என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே, வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய, ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே.

இந்த பாடல் துவங்கி மூன்று பாடல்களில், (2.1.8, 2.1.9 மற்றும் 2.1.10), எம்பெருமானின் அருள் என்ற பாக்யம் பெற்றவர்களின் உயர்வை ஆழ்வார் சொல்கிறார். அது மட்டுமின்றி நல்ல புத்தி இல்லாதவர்களின் நிலைகளையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

பகவத் விஷயத்தில் சேரமால் இருக்கின்ற ஜீவாத்மாக்களை போல் உண்டு உடுத்து திரியாமல், அதற்கு (தன்னுடைய நெஞ்சத்திற்கு) காரணமான தன்னிடம் சேராமல், தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல், திடீரென்று திருவேங்கடமுடையான் விஷயத்தில் அடிமை தொழில் பூண்டு, அவன் திருவடிகளை சேர்ந்ததே என்று தன நெஞ்சத்தைப் பற்றி சொல்கிறார்.

“சேயன், அணியன், சிறியன், பெரியன்” என்கிற வார்த்தைகள் பகவத் விஷயத்தில் ஈடுபடாத ஸம்ஸாரிகள் சொல்லும் வார்த்தைகள் ஆகும். சிலர், பரமபதத்தில் இருக்கும் பரவாஸூதேவன் எட்டாத தூரத்தில் உள்ளான் என்று காரணம் சொல்லி, அவனைப் பற்ற மாட்டார்கள்; சிலர், அர்ச்சாவதாரங்கள் சமீபத்தில் இருப்பதால் அலட்சியம் தோன்ற பேசுவார்கள்; நமக்காக திருஅவதாரம் எடுத்த, ராமன், கிருஷ்ணன் போன்ற விபவாவதாரங்களின் ஸௌலப்ய குணத்தில் ஈடுபடாமல் சிறுமைகளைச் சொல்லி ஏசுவர்; திருப்பாற்கடலில் இருக்கும் வியூக வாஸூதேவனையும், அந்தர்யாமியான எம்பெருமானையும் பற்றச் சொன்னால் தங்கள் நெஞ்சங்களுக்கு எட்டாதவர்கள் என்று சொல்லி அந்த உயர்ந்த உருவை எப்படி பற்றுவது என்று சொல்வர்; இப்படி அவனுடைய குணங்களெல்லாம் இகழ்வாருடைய கூட்டங்களில் சேராமல், திருவேங்கமுடையான் விஷயத்தில் அடிமைத் தொழில்பூண்டு நின்றாயே என்று தன்னுடைய நெஞ்சினை உகந்து பேசுகின்றார்.

கரண தயா உன்னையுடைய என்னோடு என்று சொல்வதைபோன்றே இங்கு எனக்கு ஒன்று சொல்லாதே, என்று கூறுவது. பிரிதி சென்றுஅடை நெஞ்சே, என்றும், வதரி வணங்குவதும் என்றும், சாளக்ராமம் அடை நெஞ்சே என்று பலகாலும் சொன்னதற்கு தக்கவாறு நெஞ்சம் செல்கிறது என்று ஆழ்வாருக்கு உகப்பு.

மதயானைகளின் தலைகளிலும் மூங்கில்களினும் முத்துக்கள் உண்டாகின்றன என்று கவிகள் சொல்வார்கள்; அப்படியே ஆழ்வாரும், “வேய்கள் நின்று வெண்முத்தமே சொரி வேங்கடம்” என்கிறார். முன்பு “வெண் தரளங்கள் வேய்விண்டுதிர் வேங்கடமாமலை” என்றார். மூங்கில்களானவை வெளுத்த முத்துக்களைச் சொரிய, அவற்றின் ஒளியானது வழிகாட்ட, திருமலை அப்பனின் திருவடிகளில் வந்து சேர்ந்தது என்று ரசமாக சொல்வார்கள்.

ஆயர் நாயக்கர்க்கு என்று சொன்னதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆயர் குலத் தலைவனான என்று கூறுகிறார்.

இப்படி வேங்கடம், கண்ணன் இரண்டையும் குறிப்பிட்டதால் திருவேங்கடத்தில் நின்ற விபவத்தில் ஈடுபட்ட மனதை சொல்வதாக கருத்து.

ஒன்பதாம் பாடல் (2.1.9)

கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள், பாடி ஆடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலா, ஆடு தாமரையோனும் ஈசனும் அமர் கோனும் நின்றேத்தும், வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத்தொழில் பூண்டாயே.

குற்றங்களை சொல்லி அவற்றில் இருந்து விடு பெற எம்பெருமானை நாடியவர்களையும் அதிகாரத்தை தேடி எம்பெருமானை நாடுபவர்களையும் மற்ற பலன்களை விரும்பி எம்பெருமானை நாடியவர்களையும் குறிப்பிட்டு நெஞ்சமே நீ அவர்களை போல் இல்லை, எம்பெருமானை தொழுவதேயே பிரயோஜனமாக கொண்டு தொழுகிறாய் என்று உகக்கிறார்.

கூடியாடி உரைத்ததே உரைத்தாய்” என்று கூறியது தமது நெஞ்சின் பலகால துன்பத்தை கூறியது. அதாவது உலக விஷயங்களில் மட்டும் மண்டிக்கிடந்த ஜீவாத்மாக்களோடு உரையாடி, அதனையே அதுவும் பேசி காலம் கழித்ததாகவும் சொல்லி, தன் நெஞ்சிடம் அது நேற்றுவரை எப்படி பொழுது போக்கியது, இன்று எப்படி இப்படி இருக்கிறது என்று ஆச்சர்யம் தோன்ற சொல்கிறார்.

நெஞ்சிடம் அது பெற்ற பாக்கியத்தின் உயர்வினை தான் சொல்வதாக தொடங்குகிறார். அன்புடன் நன்றாக கேட்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். பக்தி இல்லாமல், பாடியும் ஆடியும் பலரும் பணிந்து அவனை துதித்தும் காணமுடியாதவனும், பிரமன் சிவன் இந்திரன் முதலான தெய்வங்கள் தங்கள் அதிகாரங்களை பெறுவதற்கு இங்கு (திருமலையில்) வந்து துதிக்கும் பெருமை பெற்றவனுமான திருவேங்கடமுடையான் இடத்தில் அவருடைய நெஞ்சம் அடிமைத் தொழில் பூண்டதாக பெருமை படுகிறார். நெஞ்சத்திடம் அது இந்த இரண்டு கோஷ்டியிலும் இல்லை என்பதற்கும் பெருமை படுகிறார்.

காண்கிலா” என்றும், “காண்கிலார்” என்றும் இரண்டு வித பாடங்கள் உண்டு. காண்கிலா என்று சொல்லும்பபோது, திருவேங்கடமுடையானுக்கு உள்ள சிறப்பாக எடுத்துக் கொள்ளப்படும். காணக்கிலார் என்று சொல்லும்போது, பிரம்மனுக்கும் ஈசனுக்கும்  அமரர் கோனுக்கும் சிறப்பாகக் குறிப்பிட்டு சொல்லப்படும். தங்களைப் பணிந்தவர்களும் கூடத் தங்களைக் காண முடியாத ஏற்றமுடைய பிரமன் முதலியோர் வந்து துதிக்கும் பெருமை பெற்ற திருவேங்கமுடையான் என்ற அர்த்தத்தில் வரும்.

ஆடு’ என்று வெற்றிக்குப் பெயர்; வெற்றியையுடைய பிரமன், உலகங்களைப் படைக்க வல்லவனாகையாகிற ஸாமர்த்தியம் வாய்ந்த பிரமன் என்று சொல்ல ஆடு தாமரையோன் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆடு என்பது பெருமையாய் என்ற பொருளிலும் வரும், பெருமையை உடைய தாமரையோன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆடுகை என்பது நடையாடுகை என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் போது, அதில் ஆர்வம் கொண்டவன் (வர்த்திக்கிறான்) என சொல்வார்கள். மேலும் ஆடுகை என்பது உண்டாகை என்ற அர்த்தமும் உள்ளதால், எம்பெருமானின் திருநாபிக் கமலத்தில் உதித்தவன் என்று பொருள் கொள்ளப்படும்.

திருநெடுந்தாண்டகம் (16) பாசுரத்தில் “மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும்,” என்று சொன்னது போல், இங்கும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு என்று சொல்கிறார்.

பத்தாம் பாடல் (2.1.10)

மின்னு மாமுகில் மேவு தண் திருவேங்கடமலை கோயில் மேவிய, அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை, கன்னி மாமதிள் மங்கையர்க் கலி கன்றி இன் தமிழால் உரைத்த, இம்மன்னு பாடல் வல்லார்க்கு இடமாகும் வானுலகே.

மின்னலுடன் கூடிய காளமேகங்கள் வந்து சேர்கிற திருமலையை உறைவிடமாக வாழ்பவனும், ஹம்ச ரூபத்துடன் அவதரித்தவனும், நித்யஸூரிகளுக்கு தலைவனுமான எம்பெருமான் விஷயமாக, பெரிய மதில்களை உடைய திருமங்கை நாட்டில் உள்ளவர்களுக்கு தலைவனான இனிய தமிழால் உரைத்த வேதம் போன்ற இப்பாடல்களை பாட வல்லவர்களுக்கு பரமபதம் வாசஸ்தலமாகும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.

கன்னி மாமதிள், எந்திரத்தில் உள்ள கன்னி, என்பது என்றும் அழியாத என்ற பொருளில் வரும்.

மின்னு மாமுகில் என்று சொன்னது எம்பெருமானும், பிராட்டியும் கூடி வாழ்கின்ற வாழ்ச்சியை சொல்வதாகும். மின்னல் பிராட்டியையும் முகில் என்ற மேகங்கள் எம்பெருமானும் ஆகும். தன் வடிவில் இருக்கும் இருட்டிற்கு விளக்கு பிடித்துக்கொண்டு திரியும் மேகங்களை போல் தன்னை அறிவதற்கு சாதனமாக வேதங்களை கொடுத்த எம்பெருமான் என்பதை உரைப்பதற்காக ஆழ்வார் கூறும் உபமானம். அப்படிப்பட்ட வேதங்களை ப்ரம்மாதிகள் தொலைத்த போது, மீட்டு கொடுப்பதற்காக அன்னப்பட்சி வடிவத்தில் அவதரித்த எம்பெருமானை அன்னமாய் நிகழ்ந்த பெருமானை என்று அடுத்து சொல்கிறார். பின்னர் அவர்கள் எம்பெருமானை துதிப்பதற்கு சுலபனாக இருக்கிற சர்வேஸ்வரன், திருமலையில் கோவில் கொண்டு உள்ளான் என்று கொள்ளலாம்.

இனி, திருமங்கை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பாடிய மற்ற பாசுரங்களை அடுத்த பதிவினில் பார்க்கலாம், நன்றி.

Thirumaalai – Aarthu Vandu Alambum (32)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours to Azhwaar from Emperumaan

Azhwar moved on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam 

After the first three subtopics of Thirumalai, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

No to Good things

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers using all the three elements, thinking through mind, offering flowers using hands and reciting holy chants using mouth. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think.
  • Initially Azhwaar said that he did not use all the three senses together in his prayers, and subsequently denied that he did not use them individually also.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Yes to Bad Things

In this fourth part of Azhwaar’s Naichanusandhanam, which consists of ten verses 25 to 34, we saw Azhwaar saying that he had no good qualities, in the five hymns from 25 to 29 and in the next five songs, he says that he has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar confirmed that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathular thammil allen Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

Now let us move on with the next hymn.

Hymn 32

Aarthu vandu alambum solai, ani Thiruvarangam thannul, kaarthiral anaya meni, Kannane unnai kaanum, maargam ondrum ariya maataa, manisaril thurisanaaya, moorkanen vandhu ninren, moorakanen moorakanene (32)

The Emperumaan’s form, is like a huge dark rainy cloud, in the temple of Thiruvarangam, that was surrounded by gardens, with blooming flowers and beetles buzzing and wandering, that were like ornaments and adding beauty to the temple. Azhwaar said about himself, as a lowly human being, a fool unable to let go of things that he loved, knowing no way to reach Thee, The Emperumaan, and cried that he came there without minding what he lacked. He exclaimed his action as a stupid one.

The interlocutor puts an interesting preface to this song, Emperumaan was wondering how Azhwaar had came to Him, when Azhwaar was rejected even by his close relatives and friends, including by those who did not get involved with Emperumaan and the activities related to Him. The response from Azhwaar was that he came there brutally, and could not find a reason, as fools would do many things without any reason or it would be really difficult to find a reason for the activities of fools.

Now let us start moving into more details in the following sections.

Aarthu Vandu Alambum Solai

The beetles who came to drink the nectar from the flowers of the Thiruvarangam gardens were very eager to sip the nectar, they drank up to their necks, without realising, how much they drank , and were unable to stay in one place and were buzzing around here and there.

This is compared with the singing of Sama Gaana by the mukthathmas, in Paramapadham, in the bliss of seeing Emperumaan and hence reflects the sweetness of Thiruvarangam. Azhwar was singing this hymn to pray for the Paramapadham, but the beetles express the bliss of drinking the nectar.

As the monkeys in their joy after hearing about seeing Sita, by Sri Hanuman as stated in the Ramayana, Sundara Kanta (61.14), destroyed Sugriva’s gardens, these beetles were enjoying in the same way

Similarly, Periyazhwaar sang about Sri Krishna”s birth, as everyone in Gokulam were overjoyed, when they heard that their leader Nandagopar had got a child. People in that town overjoyed, not knowing what to do, some ran, some slipped in the mud, some shouted loudly, some searched for the child, some sang, some beat the drum and some danced appropriately to that. Everyone in Gokulam was in a frenzy. Periyazhwaar said that there was none who did not change in Tiruvaipadi because of Krishna’s birth. Thondaradipodi Azhwaar says that the beetles in Thiruvarangam were also enjoying similarly.

Oduvaar, vizhuvaar, ugandhu aalippaar, naaduvaar, nampiraan engutraan enbaar, paaduvaargalum, palparai kotta nindru aaduvaarkalum aayitru Aaipaadiye (Periyazhvaar Thirumozhi 1.2.2)

In summary, it is said that the beetles who came to drink the nectar were like Markandeya Maharishi who wandered in the pralayam, the deluge. The beetles were also like the gardens in the river floods of Thiruvarangam.

Ani Thiruvarangam Thannul

Azhwaar said that Thiruvarangam is like an ornament to a woman. Ramayana Sundara Kandam (16.26), says that a woman’s best ornament is her husband and Sita Piraatti, who is worthy of worship with all ornaments, was without radiance, because of her separation from Sri Rama. “Indeed, the husband is the greatest ornament for a married woman. Hence though deserving adornment she does not like it, bereft of her husband who is her only ornament. When giving explanation to this, the commentator said that Thiruvarangam was like a woman without her Thaali, or mangala suthram, when Emperumaan had not descended or taken His reclining position in Thiruvarangam.

The term ”Solai’ can be combined as Solai ani Thiruvarangam to mean, that the Thiruvarangam Periya koil has those gardens as it’s ornaments.

Just as Azhwaar said that the term Ani Thiruvarangam, Andal, too, the daughter of Periyazhwaar, sang about Srivilliputhur as Ani Pudhuvai Pattar Piraan Kothai sonna (Thirupaavai 30). Both Periyazhwaar and Thondaradipodi Azhwaar had done Pushpa Kainkaryam, flower related services to Emperumaan.

Kaar Thiral Anaiya Meni

Seeing the flood of honey in the Thiruvarangam gardens, and assuming that as sea, the clouds drank the nectar upto their neck. Thereby the clouds could not move and leave the tower of the temple of Thiruvarangam. The commentator goes further to say that the reclining posture of Emperumaan resembles the above clouds and could not leave the temple. The interlocutor describes that cloud could be said to some extent to be a metaphor for the form of Emperumaan, because of it’s blackness in colour, it’s coolness, its helping tendency towards others without expecting anything back, and giving everything to others without keeping anything for itself.

We can recall, how Swami Nammazhwaar says that whenever he saw the clouds, he is reminded of Emperumaan in Thiruvaaimozhi (8.5.8) “Thokka mega pal kuzhaangal kaanum thorum tholaivan naan”.

Kannane

This word Kannane here, says that the Emperumaan is superior than the cloud. Unlike the clouds, Krishna is not the one who brings water from far off and stay there. But He was born together in the simplest clan, stayed close and gave Himself to help them. So it is very appropriate to call Periyaperumaal as Kannan. Our Achaaryas would say, by stealing and eating the stored butter of Yasodha, He grew and roamed like a dark grazing bull, which could be seen in Periyaperumal.

We can also recall Thirupaanazhwaar in Amalanaadhipiraan (10), “Kondal vannanai Kovalanaai vennai unda vaayan…. Ani Arangan“.

Unnai Kaanum maargham onrum ariya maataa

It means that Azhwaar did not know even one way to reach Him or see Him. Bhagavadh Geetha, mentions that the way to reach Him is to practice the activity based Karma Yoga, which would resuly in Gnana Yoga, the knowledge about Emperumaan. These two yogas together result in the Bakthi Yoga. It is also important to know about the secrets of His many incarnations, and to understand the “Purushothama Vidhya”. Apart from Bhagavadh Geetha, there are many other methods mentioned in saastras, like Thirunama Sankeerthanam, (Chanting His Holy names), residing and doing services in holy places or Punniya Kshethra Vaasam. All these methods were given to Jeevathamas so that they could choose one way or other to reach Him. Azhwaar says that he does not practice or know even one of the innumerable ways mentioned in our Sampradhaayam to attain Paramapadham

Manisaril

Azhwwar regrets that even after born as a human being, who is capable of reasoning between, the right and the wrong things, unlike an animal, he did not have the knowledge about the means of attaining Moksha.

Thurisanaai

Azhwaar says that if he was compared with others, they would be considered very high as the Nithyasooris, and they would also reject him as a theif. He could have withdrawn or accepted that he was unworthy to get Moksha, had he been born as an animal. But he regrets that he lost the benefits of born as a human being, as he considered himself as a sinner.

A quote is given here that, one who is born as a human being and not deaf or dumb, but who has not detached himself from this samsaram, would be with Brahmahathi dosha. Azhwaar says that due to this he had become a deceitful person who did not belong to either humans or animals.

Moorkanen Vandhu Ninren

Emperumaan was wondering, under such case, why Azhwaar came in front of Him. Azhwaar responded by saying that he came because he was an ignorant person who did not know his inferiority. He continued that had he known the superiority of Emperumaan, he could have withdrawn as it was inappropriate to go near Him. But he came in front of Emperumaan, mainly because, he was ignorant.

Here Swami Nammazhwaar’s Thiruvaaimozhi (1.5.1) is quoted, where he mentioned “valavezh ulagin mudhalaai vaanor irai aru vinaiyen”. “valavezh ulagin muthalaai vaanor irai” means that Emperumaan is so superior that a common man is unworthy to glorify, Emperumaan. By aru vinaiyen, Azhwaar mentioned about his inferiority, who was not worth to say anything about Emperumaan. Azhwaar mentioned that as some poison being mixed in the drinking fountain in a place, he approached the matter about Emperumaan, that is enjoyed by good people.

Thondaradipodi Azhwaar, in this hymn, said that he approached Emperumaan, because He is Kannan, and He accepts everyone and hence Azhwaar also used the same logic to go near Him without knowing the evils that would result because of that. He says that even though he was a monster, he came and stopped because the great Emperumaan is showing Himself as Kannan.

Moorkanen Moorkanene

He says that this lack of knowledge could not be found anywhere else in the world and hence mentioned Moorkanen twice. It can be also assumed that the first moorkanen is related to the harm he could have caused to Periya Perumal because of his approach and the second moorkanen is related to his inferiority.

See you in the next chapter, thank you

திருவேங்கடமுடையான் திருமங்கை ஆழ்வார் 3 (கண்ணார் கடல்சூழ்)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். இப்பொழுது அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம்.

அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு காண்போம்.

பெரியதிருமொழி 1.10

சென்ற பதிகத்தில், இஷ்ட பிராப்த்தியை பிரார்த்தித்தார்; இந்த பதிகத்தில் அநிஷ்ட நிவ்ருத்தியை பிரார்த்திக்கிறார். எம்பெருமானை அடைவதற்கு தன்னிடம் உள்ள விரோதிகளை போக்கி தரவேணும், அவனால் மட்டுமே அது முடியம் என்று ஆழ்வார் தீர்மானத்துடன் இருக்க, ஆழ்வாரின் எல்லா பிரார்த்தனைகளையும் நிறைவேற்றவே இங்கே திருமலையில் எழுந்தருளி இருப்பதாக எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமான் ஆழ்வாரின் மனதில் புகுந்து அவருக்கு பரபக்தி முதலியவைகளை பிறப்பித்ததாக இந்த பதிகம் சொல்கிறது.

பாஷ்யகாரர் சரணம் அனுஷ்டித்த போது, ஸ்தூல, சூஷ்ம ரூபமான (கண்களுக்கு புலப்படாத) ப்ருகிருதியை அழித்து தர வேண்டும் என்றும், அஹங்கார மமகாரங்களை கழித்து தர வேண்டும் என்றும், விரோதியை போக்கி தர வேண்டும் என்றும் பரபக்தி முதலியவற்றை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

முதல் பாடல் (1.10.1)

கண்ணார்க் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன் தன், திண்ணாகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய், விண்ணோர்த் தொழும் வேங்கடமாமலை மேய, அண்ணா ! அடியேன் இடரைக் களையாயே.

மிகப் பெரிய கடலையே அகழாக கொண்ட இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய சரீரம், தேவதைகளின் வரங்களால் வலுத்த அந்த சரீரம், இரு பிளவாகப் பிளக்கும்படி அவன் மீது அம்புகளை எய்தவனே, என்று ஸ்ரீராம பிரானை அழைத்து, திருவேங்கடமுடையானும் இவனும் ஒருவனே என்று சொல்கிறார். இராவணனாலே தங்களுடைய உடைமைகளை இழந்த தேவர்கள் எல்லோரும் மகிழ்ந்து வந்து தொழும்படியான திருவேங்கட மலையிலே எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானே, இந்த இருள் தருமா ஞாலத்தில் இருப்பதாவது பெரும் துக்கம் என்று உணர்ந்த தன்னுடைய இந்த இடரைப் போக்கி அருள வேண்டும் என்கிறார். இங்கிருப்பது இடர் என்று தன் நெஞ்சுக்கு பட்ட பின் தன்னுடைய கைங்கர்ய விரோதியை போக்கி அருள வேண்டுகிறார்.

இரண்டாம் பாடல் (1.10.2)

இலங்கைப்பதிக்கு அன்று இறையாய, அரக்கர் குலம் கெட்டவர் மாளக் கொடிப் புள் திரித்தாய்!, விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய, அலங்கல் துளப முடியாய்! அருளாயே!

முற்காலத்தில் இலங்கைக்கு அரசர்களாயிருந்த மாலி, இராவணன் முதலிய ராக்ஷஸர்கள் கும்பலோடே சிதறியோடி முடியும்படியாக தனக்கு கொடியான பெரிய திருவடி கொடியை பறக்கவிட்டவனே, மேலே ஸஞ்சரீக்கிற சந்திர ஸூர்யர்கள் விலகி போக வேண்டும் என்ற அளவிற்கு உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையிலே மேவி இருக்கின்ற எம்பெருமானே, அடியவர்களின் ரக்ஷணத்திற்கு என்று திருத்துழாய் மாலை அணிந்தவனே, அடியேன் மீது க்ருபை பண்ணி அருள வேண்டும். சென்ற பாடலிலும் இந்த பாடலிலும் எம்பெருமான் விரோதிகளை அழிக்கும் குணத்தை சொல்லி, இந்த பாடலில் தனக்கு அம்பு எய்து கொல்லும் விரோதிகள் என்று இல்லை, அருள் ஒன்றே போதும் என்று வேண்டுகிறார்.

புற்றானது என்றைக்கும் கெட்ட பாம்புகள் உறையுமிடமாக இருப்பது போல இலங்கையானது, இராவணனுக்கு முன்பும் குடியிருந்த மாலி முதலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததால், அவர்களையும் எம்பெருமான் முடித்ததை சொல்கிறார்.

உத்தர ஸ்ரீராமாயணத்தில் ஏழாவது ஸர்க்கத்தில் மாலி முதலிய அரக்கர்களை முடித்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மாலியானவன் முதலில் பெரிய திருவடியை கதையாலே அடித்துத் துரத்தி விட்டான் என்றும், பிறகு பெருமாள் அளவற்ற சீற்றங் கொண்டு அந்த பெரிய திருவடியின் மேல் ஏறிக்கொண்டு போர்க்களத்திலே எழுந்தருளித் திருவாழியைப் பிரயோகித்து வெற்றி பெற்றான் என்கிறார். ‘இலங்கைப் பதிக்கென்று இறையாய ” என்றும் பொருந்தும்.

குலம் மாள” என்னாமல் என்று சொல்லாமல், ” குலம் கெட்டு மாள ” என்று சொன்னதால், பல அரக்கர்கள் மூலைக்கொருவராகச் சிதறி ஓடினார்கள் என்பதும், பலர் மாண்டு ஒழிந்தனர் என்பதும் பாதாளத்திற்கு சென்று ஒளிந்தார்களும் பட்டுபோகும்படி பெரிய திருவடியின் கொடியை சுழற்றிக்கொண்டு திரிந்தார் என்பதும் விளங்கும்.  விலங்கல்  குடுமி  என்று சொன்னது, ”சேணுயர் வேங்கடம்” என்று நான்முகன் திருவந்தாதி (5.2) பாசுரத்தில் சொன்னது போல், திருமலையின் உயரத்தை சொல்வது, வானத்தின் மீது ஸஞ்சரிக்கின்ற ஸுர்ய சந்திரர்கள் தன்னுடைய பாதையை விட்டு விலகிப் போக வேண்டும் என்று அளவுக்கு உயரங்கள் கொண்ட சிகரத்தையுடைய திருமலை என்கிறார். விலங்கல் என்று மலைக்கும் அர்த்தம் உண்டு என்பதால், சிகரத்தையுடைய, திருவேங்கடமலையிலே என்றும் சொல்லலாம், ஆனால் அது சிறப்பாக இருக்காது என்று உரையாசிரியர் கூறுகிறார்.

மூன்றாம் பாடல் 1.10.3

நீரார்க் கடலும் நிலனும் முழுதுண்டு, ஏராலமிளந்தளிர்மேல் துயிலெந்தாய்!, சீரார் திருவேங்கடமாமலை மேய, ஆராவமுதே!அடியேற்கருளாயே!

சென்ற பாடலில் ஒரு கடலுக்கு உட்பட்ட இலங்கையில் விரோதிகளை ஒழித்த அளவினை போலவோ, இந்த பூமியையும் கடல்களையும் காப்பாற்றும் அளவு என்று இந்த பாடலில் சொல்கிறார்.

மற்றவர்களை ரக்ஷிக்க தனக்கு சக்தி இருந்தாலும், ஆழ்வாரை ரக்ஷித்தல் தனக்கு எளிது இல்லை என்றும், அரிது என்றும் எம்பெருமான் திருவுள்ளமாக, பிரளய காலத்திலே கடல் சூழ்ந்த உலகங்களை எல்லாம், தன் திருவயிற்றிலே வைத்து இளையதொரு ஆலந்தளிரின் மேலே கண் வளர்ந்தருளின சாமர்த்தியம் கொண்ட எம்பெருமானுக்கு அரிதான காரியமும் உண்டோ என்றும், எல்லாம் எளிதே என்பவர் போல வடபத்ரசாயி சரித்திரத்தை ஆழ்வார் எடுத்து சொல்கிறார். அந்த சக்தி விசேஷம் எல்லாம் தோன்ற திருமலையிலே ஸேவை ஸாதிக்கின்ற ஆராவமுதமே! இதுவே போக்கியம் என்று இருக்கிற ஆழ்வாருக்கு இதனை அனுபவிக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறார்.

சீரார் திருவேங்கடமாமலை என்று சொன்னது, பரமபதம் போல் ஐஸ்வர்யத்தில் மிகுதியாக உள்ள திருமலை என்பதை சொல்வதற்காக என்று கொள்ளலாம். ஆராவமுதே என்று சொன்னது, இந்த அமுதம் சொர்க்கத்தில் இல்லை என்பது போல் இங்கே தான் உள்ளது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

நான்காம் பாடல் (1.10.4)

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக, கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா! அடியேனுக்கு அருள்புரியாயே!

திருமலையில் எழுந்தருளி இருக்கின்ற இருப்பில் எம்பெருமானின் மேன்மை (பரத்வம்) எளிமை (ஸௌலப்யம்) என்ற இரண்டும் ஒருங்கே விளங்குகின்றன. இரண்டுக்கும் ப்ரகாசகமான இரண்டு சரித்திரங்கள் / எம்பெருமானின் திருவிளையாடல்களை பாடலின் முதல் இரண்டு அடிகளில் சொல்கிறார். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகள் உறிகளின் மேலே சேமித்து வைத்த நெய் முதலியவற்றை அமுது செய்தாய் என்பதால் ஸௌலப்ய குணத்தையும், சிறு குறுகிய வடிவம் கொண்டு மாவலியிடத்துச் சென்று, நீரேற்றுப் பெற்று ஈரடியாலே உலகத்தை அளந்தாய் என்று சொன்னதால், பரத்வத்தையும் ஆழ்வார் சொல்கிறார்.

உண்டாய் உறிமேல் நறு நெய் அமுதாக என்று சொன்னதால், அடியவர்கள் செய்த பண்டங்கள் இல்லாமல் இருக்க மாட்டேன் என்பது போல் சொல்லப்பட்டது.

விண்தோய் சிகரத் திருவேங்கடம்” என்று சொன்னதால், பரமபதம் அளவும் ஓங்கிய சிகரங்களை கொண்ட திருமலையில் உறையும் திருவேங்கடத்தானே என்கிறார்.

 திருவேங்கடமலை இந்த பூமியில் உள்ளதால் நம் போன்ற மனிதர்கள் சென்று ஸேவிப்பதற்கு சுலபமாக இருப்பது போலே, “விண்தோய் சிகரத் திருவேங்கடம்” ஆனதால் நித்யஸூரிகள் வந்து ஸேவிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதுவே “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் “மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச்செய்தது.

நித்யஸூரிகள் பரத்வத்திலே ஸர்வகாலமும் பழகினவர்களாகையாலே ஸௌலப்யத்தைக் காண விரும்பி வருவர்கள்; மனிசர்கள் பரத்வத்தைக்காண விரும்பிச் செல்லுவர்கள்; இரண்டு குணங்களும் அங்கே குறையற்றவை என்று இப்பாசுரத்தினால் காட்டினார்.

 ‘அண்டன்‘ என்று இடையனுக்கும் தேவனுக்கும் பெயர். அதனால், ”திருவேங்கடம் மேய அண்டா“ என்ற சொல்வதும் இங்கே வெண்ணை உண்ட வாயனுக்கும், மண்ணை கொண்ட காலனுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று உரையாசிரியர் கூறுகிறார். ”உறி மேல் நறுநெய் அமுதாக உண்ட அண்டா” என்று யோசித்து, இடையனே! என்றும், “குறளாய் ஈரடியாலே நிலம் கொண்ட அண்டா” என்று யோசித்து, ‘தேவனே! பரம புருஷனே!’ என்றும் சொல்லி இரண்டு யோசனைகளாலும் பரத்வ ஸௌலப்யங்கள் விளங்கும் வண்ணம் ஆழ்வார் இந்த பாட்டில் சொல்லி உள்ளார்.

யசோதை பிராட்டியும், இந்திரனும் பெற்ற பேற்றின் அளவுக்கும் அதிகமாக தனக்கு கைங்கர்யத்தை தந்து அருள வேண்டும் என்பது உள்ளுறை பொருள். அருளாயே என்று சொல்லாமல் அருள் புரியாயே என்று சொல்வதால் ஆழ்வாருடைய அடிமை செய்வதில் உள்ள ஆர்வம் வெளிப்படுகிறது என்று கொள்ளலாம்.

ஐந்தாம் பாடல் (1.10.5)

தூணாய் அதன் ஊடு அரியாய் வந்து தோன்றி, பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய், சேணார் திருவேங்கட மாமலை மேய, கோள் நாகம் அணையாய! குறிக்கொள் எனை நீயே!

முன் பாசுரத்தில், வாமனனாக அற்புதமாக வேஷம் கொண்டதை நினைவில் கொண்டு அதற்கு முன் திரு அவதாரம் செய்த நரசிம்மத்தை இந்த பாடலில் எடுத்து கொள்கிறார். இதனால் உபகாரம் செய்ய அவன் உருவம் கொண்டதை சொல்லி அதே போல் திருமலையில் வந்து நின்று தன்னுடைய உள்ளத்தில் புகுந்ததை சொல்கிறார்.

பக்தர்களின் விரோதிகளிடத்தில் கோபமும், பக்தர்களிடத்தில் அன்பும் விளங்கத் திருமலையிலே ஸேவை ஸாதிக்கின்றதை சொல்கிறார். தூணினுள்ளே நரசிங்கமாய்த் தோன்றி இரணியனுடலைப் பிளந்தெறிந்து சிறுவனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் செய்ததை போல் அடியேனுக்கும் அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

தூணூடு அரியாய் வந்து தோன்றி” என்று சொல்லாமல், ‘தூணாய் அதன் ஊடு” என்று சொன்னதால், ‘முன்பே நரஸிம்ஹத்தை உள்ளே வைத்து கட்டின தூண் இது’ என்று சொல்ல முடியாதபடி வெறும் தூணுக்குள்ளே திருஅவதாரம் செய்த என்று பொருள். “அளந்திட்ட தூணை அவன் தட்ட அங்கே வளர்ந்திட்டு வாளுயிர் சிங்க உருவாய்” என்று பாடிய பெரியாழ்வார் திருமொழி (1.7.9) பாசுரத்தை நினைவில் கொள்ளலாம். பேணா அவுணன் என்றதால், எம்பெருமானை மதிக்காத இரணியன் என்றும், பாகவதவனான ப்ரஹ்லாதனை மதிக்காத இரணியன் என்றும் உரைக்கலாம்.

சேண்  என்று சொல்வது, அகலம், ஆகாயம், மேன்மை, உயர்வு, தூரம், நீளம் என்று சிலவற்றை குறிக்கும். கோள்நாகணையாய் என்பதில் எந்திரத்தில் கோள் என்பது மிடுக்கினை குறிக்கும், அதே போல், திருவனந்தாழ்வானுக்கு மிடுக்காக இருப்பது ‘சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம்” என்றபடி பலவகை சேவைகளை செய்வதற்கு தக்கவாறு உரிய வடிவங்களை எடுத்து தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி.

குறிக்கொள் என்று சொன்னதால், ஓர் அடியவனும் உள்ளான் என்று திருவுள்ளத்தில் வைத்திரு என்று சொல்லி, திருவனந்தாழ்வானைப் போலே தன்னையும் எம்பெருமானின் சேவகத்துக்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்பது உள்ளுறை பொருள்.

ஆறாம் பாடல் (1.10.6)

மன்னா இம்மனிசப் பிறவியை நீக்கி, தன்னாகித் தன் இன் அருள் செய்யும் தலைவன், மின்னார் முகில் சேர் திருவேங்கடம் மேய, என்னானை யென்னப்பன் என் நெஞ்சில் உளானே !

இந்த பதிகத்தின் முதல் ஐந்து பாட்டும் ஆழ்வாரின் பிரார்த்தனையாய்ச் சென்றது; இனி வரும் பாடல்கள் பிரார்த்தனை ஒருவாறு நிறைவேறியதாகச் சொல்வதாகச் செல்லுகிறது. ”அடியேனிடரைக்களை யாயே” என்றும் “அடியேற்கருளாயே” என்றும் “அடியேனுக்கருள் புரியாயே” என்றும் “குறிக்கொள் எனை நீயே ” என்றும் பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கித் திருவேங்கடமுடையான், அடியார்களைத் தேடித் திரிகிற தான் இப்படி பிரார்த்திக்கிற ஆழ்வாரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றாமல் இருப்பேனா என்று சொல்லி ஆழ்வார் திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அதனை அறிந்த ஆழ்வார் இனிதாக அனுபவிக்கிறார். எம்பெருமான் தமது நெஞ்சிலே வந்து புகுந்ததால் தாம் ஸம்ஸாரத்தில் நின்றும் விலகி விட்டதாகவே நினைத்துப் பேசுகிறார்.

தன்னாகி என்பதற்கு தனதாக்கி கொள்ளுதல் என்றும், மின்னார் முகில் சேர் என்று சொன்னது, ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் என்பதில் உள்ள ஒப்பீடுகளை போன்றது என்றும் மனதில் கொள்ள வேண்டும். மேகமும் மின்னலும் சேர்ந்து இருப்பது, அவனும் பிராட்டியும் சேர்ந்து இருப்பதை சொன்னது.

மன்னா என்பது மனிதப் பிறவிக்கு அடைமொழி. ”மின்னின் நிலையில் மன் உயிர் ஆக்கைகள்” ( திருவாய்மொழி 1.2.2) என்றபடி மின்னலைக் காட்டிலும் ஸ்திரமற்ற இந்த மானிடப் பிறவியில் இருந்து தன்னை நீக்கி அருள் செய்யும் எம்பெருமான் தன் நெஞ்சிலே வந்து புகுந்து நிற்கிறான் என்கிறார்.

என்னப்பன் என்று சொன்னதன் மூலம், தனக்கு உபகாரம் செய்பவன் என்று சொல்லி, ‘”என் நெஞ்சில் உளானே” என்று தனக்கு செய்த உபகாரத்தையும் சொல்கிறார். உளானே என்று ஏகாரத்துடன் சொன்னதற்கு காரணம், நெஞ்சில் வந்து புகுந்து, போக மாட்டேன் என்று இருக்கிறார் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

ஏழாம் பாடல் (1.10.7)

மானேய் மட நோக்கி திறத்து எதிர் வந்த, ஆனேழ் விடைசெற்ற அணி வரைத் தோளா, தேனே. திருவேங்கடமாமலை மேய, கோனே. என் மனம் குடி கொண்டிருந்தாயே

சென்ற பாட்டில், நெஞ்சில் புகுந்து போகமாட்டேன் என்று சொன்னவர், இந்த பாடலில், நப்பின்னை பிராட்டியுடன் வந்து தன் நெஞ்சில் குடி கொண்டார் என்கிறார்.

அண்ணா அடியேன் இடரைக் களையாயே” என்று முதல் பாட்டிலே தாம் பிரார்த்தித்தபடியே தம்முடைய இடர்களைக் களைந்து அருளினது, முன்பு நப்பின்னைப் பிராட்டியுடன் சேர்வதற்கு விரோதிகளாயிருந்த ஏழு ரிஷபங்களை அடக்கினது போலே இருப்பதால் அதனை இங்கே சொல்லுகிறார். மானினுடைய விழிகளை போன்ற நோக்கை உடையவளான நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற்காக அவளுடைய தந்தையின் கட்டளைப்படி ஏழு ரிஷபங்களையும் கொன்று ஒழித்த எம்பெருமானே !அன்று அவளுக்கு எவ்வளவு போக்யமாக இருந்ததோ, தனக்கும் அவ்வளவு போக்யமாக இருப்பவனே! திருவேங்கடமுடையானே! அந்த நப்பின்னைப் பிராட்டியையும் கூட்டிக் கொண்டு என் மனத்தே வந்து குடி கொண்டிருக்கின்றாயே! இப்படியும் ஒரு திருவருள் உண்டோ என்று கூறுகிறார். அவள் கண்ணாலே காண, இவன் தோளாலே தழுவினான் என்றும், இவன், அவளுடைய கண்ணழகிற்கு தோற்று அவளை தழுவ, அவள் இவனுடைய தோள் மிடுக்கிற்கு தோற்றாள் என்றும், ஆழ்வாரின் திருவுள்ளம்.

“‘எதிர் வந்த ஆனேழ் விடைகளை மானேய்மட நோக்கி திறத்துச் செற்ற அணிவரைதோளா! என்று அழைக்கிறார். நப்பின்னை பிராட்டிக்காக இளகும் தோள்கள் ரிஷபங்களுக்கு இளகாமல் இருந்த திண்ணிய தோள்கள் என்கிறார்.

தேனே என்றது, நப்பின்னை பிராட்டிக்காக எம்பெருமான் ஏழு ரிஷபங்களை ஒழித்த சரித்திரத்தை சொன்ன ஆழ்வாரின் நெஞ்சுக்கு இனிதாக இருப்பதை சொல்வது.

என் மனம் குடி கொண்டு இருந்தாயே என்பதற்கு நப்பின்னை பிராட்டியுடன், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி (5.2.10) ல் கூறியது போல், “அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து“, இனி ஒரு காலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று தோன்றும் படி சொன்னதாயிற்று.

எட்டாம் பாடல் (1.10.8)

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாளொளி வெண் தரளங்கள், வேய் விண்டுதிர் வேங்கடமாமலை மேய, ஆயனடி யல்லது மற்றறையேனே.

இப்படி என் நெஞ்சிலே நப்பின்னைப் பிராட்டியுடன் வந்து புகுந்த பின்பு இவன் திருவடிகளிலே கைங்கரியம் பண்ணுவதைத்தவிர வேறொன்றும் நானறியேன் என்பதை ஆயனடி அல்லது மற்றை அறியேனே” என்கிறார்.

எம்பெருமான் சிலர்க்குச் (பக்தி இல்லாதவர்களுக்கு) சேயன், சிலர்க்கு ( தன்னுடைய அடியவர்களுக்கு)அணியன்; சேயன் என்றால் தூரத்தில் இருப்பவன் என்றும், அணியன் என்றால் அருகே இருப்பவன் என்றும் கொள்ளலாம். தன்னை விரும்பாதவர்களுக்கு (உகவாதார்க்கு) அவன் எட்டாதவன்; தன்னை விரும்பியவர்களுக்கு (உகந்தார்க்கு) அவன் கையாளாயிருப்பவன். இவன் துரியோதனர்களிடத்திலும் பாண்டவர்களிடத்திலும் பழகியதில் இருந்து இதனைக் காணலாம். சிறிது பக்தியுடையார்க்கும் அவன் அணியன் என்பதை தன் விஷயத்தில் காணலாம் என்பது ஆழ்வார் வாக்கு என்பதை என்  சிந்தையுள்  நின்ற மாயன் என்பதால் அறிந்து கொள்ளலாம். தன்னுடைய இதயத்தில் வந்து நித்ய வாஸம் பண்ணுகிற ஆச்சரிய சீலன் அணியன் என்று சொல்லவும் வேண்டுமோ என்கிறார்.

ஆழ்வார் அவனிருக்கும் தேசத்திற்கு செல்ல உத்தேசித்து, அதற்கான விரோதிகளை எம்பெருமான் நீக்க வேண்டும் என்பது அவரின் பிரார்த்தனையாய் இருக்க, ஆழ்வாரின் உள்ளத்தில் உடனே வரவேண்டும் என்பது எம்பெருமான் திருள்ளமாக இருக்க அவசரமாய் ஆழ்வார் உள்ளத்திலே புகுந்து நின்றதை, என்  சிந்தையுள்  நின்ற மாயன் என்று ஆழ்வார் கூறி உள்ளார்.

மணி வாள் ஒளி வெண் தரளங்கள் வேய் விண்டு உதிர் என்பது திருவேங்கட மலையை சொல்கிறது. யானைகளிடத்திலும் மூங்கில்களிலும் முத்துக்களும் மணிகளும் உண்டாவதாக நூல்கள் கூறும். மூங்கில்கள் விண்டு விரிந்து, ஒளி பொருந்திய மணிகளையும், ஒளியும் வெண்ணிறமும் பொருந்திய முத்துக்களையும் உதிர்க்கும் இடமான திருமலையிலே எழுந்தருளியிருக்கிற ஸர்வ சுலபனுடைய திருவடிகளைத் தவிர வேறொன்றும் அறியேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

வாள் ஒளி வெண் என்றது திருவேங்கடத்திற்கு விசேஷமாக சொல்லப்பட்டது. வெண்மை, நீர்மை உடையவன் என்பதை குறிக்கும்.

ஒன்பதாம் பாடல் (1.10.9)

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய், நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ, சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!, இனி யான் உன்னை என்றும் விடேனே.

ஆயன் திருவடி அன்றி மற்று எதுவும் இல்லை என்று ஆழ்வார் சொன்னதை கேட்டு எம்பெருமான் வேறு சிலவற்றை திருவுள்ளமாக, அவற்றை இந்த பாடலில் ஆழ்வார் அருளி செய்கிறார்.

வந்தாயென்மனம் என்று சொன்னதன் மூலம், தாம் பெற்ற பேற்றை வாயாரச் சொல்லி மகிழ்கிறார். “வந்து என் மனம் புகுந்து மன்னி நின்றாய்” என்று ஒரு வாக்கியமாகவே சொல்லாமல், தம்முடைய ஆனந்தம் நன்கு விளங்குமாறு ”வந்தாய், என் மனம் புகுந்தாய், மன்னி நின்றாய் ” என்று தனித்தனி வாக்கியங்களாக நீட்டி உரைக்கின்றார்.

பரமபதம், திருப்பாற்கடல் முதலான அஸாதாரண திருத்தலங்களை விட்டு, ஆழ்வார் எம்பெருமானிடம், அப்படி ஒரு வேண்டுதல் வைக்காத போதும், ஆழ்வார் இருந்த இடம் தேடி வந்து, ஆழ்வாரின் மனதினுள் வந்தாய் என்கிறார். வந்த இடத்திலும், ஞான அனுஷ்டானங்களில் சிறந்த யோகிகளின் மனத்தைத் தேடி சென்று போகாமல் ஆழ்வாரின் மனத்தைத் தேடிப் பிடித்து வந்து புகுந்தாய் என்பதை என் மனம் புகுந்தாய் என்கிறார். ‘இனிய இடங்களிலே எம்பெருமான் சுகமாக இருப்பதைவிட்டு இவருடைய அழுக்கு நெஞ்சிலே சிறைப் பட்டுக் இருப்பதேன்’ என்று வெறுத்து ஆழ்வாரின் நெஞ்சைவிட்டு நீங்காமல், ‘இதனில் சிறந்த இடம் வே றொன்று நமக்கில்லை’ என்று அதனையே ஒரு பெரும் பேறாக எடுத்துக் கொண்டு, ஆழ்வார் எம்பெருமான் வர வேண்டாம் என்று சொல்லாத ஒரு காரணத்தினாலேயே, ஆழ்வாரின் நெஞ்சிலே நிரந்தரமாக இருந்து விட்டாய் என்பதை மன்னிநின்றாய் என்கிறார். இனி புகுதல் அரியதாக இருக்கும் என்பதால் அங்கேயே நிரந்தரமாக இருந்தான் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

நந்தாத கொழும் சுடரே என்றது, ஒரு காலமும் அணையாத அல்லது கெடாத நெடும் சுடரே என்று அர்த்தம். எம்பெருமான் தன் நெஞ்சில் வந்து புகுந்ததனாலே அவனுடைய தேஜஸ்ஸுக்கு ஒரு சிறிதளவும் குறையில்லை, முன்னைவிட ஒளி அதிகமாகவே உள்ளது என்பதை நந்தாத கொழுஞ்சுடரே! என கூறுகிறார்.

திருமலையில் வந்து நின்று எம்பெருமானின் ஸ்வாமித்துவத்தை காட் டி தன்னை வேறு எங்கும் செல்ல முடியாதவனாக ( அநன்யார்கன் ) ஆக்கி விட்டார் என்று ஆழ்வார் சொல்கிறார்.

இனி யான் உன்னை என்றும் விடேன் என்பதற்கு கொடுத்துள்ள விளக்கம் மிகவும் சுவாரசியம் ஆக உள்ளது. எம்பெருமான் ஆழ்வாரின் இதயத்தை தனக்கு என்று நினைப்பது கண்டு, ஆழ்வார், ‘ நீ எனக்கு என்று திருமலையில் வந்து நிற்கிற நிலையை பார்த்தபின், அடியேன் உனக்காக ஆகும்படி பற்றின பற்றை விடுவேனோ’ என்ற வகையில் சொல்கிறார். இதனால் ஆழ்வார் தனக்கு பரபக்தி பிறந்தது என்கிறபடி பாடுகிறார். பரபக்தி என்பது அரை நொடி பொழுது ( அரை க்ஷணம்) அவனை நினையாவிட்டால் உயிர் போவது என்ற நிலையை அடைவது.

பத்தாம் பாடல் (1.10.10)

வில்லார் மலி வேங்கடமாமலைமேய, மல்லார்த் திரள்தோள் மணிவண்ணன் அம்மானை, கல்லார்த் திரள் தோள் கலியன் சொன்ன மாலை, வல்லார் அவர் வானவர் ஆகுவர்த் தாமே.

திருவேங்கடமுடையானைத் திருமங்கையாழ்வார் கவி பாடின இப்பாசுரங்களை ஓத வல்லவர்கள் நித்யஸுரிகளைப் போலே நித்ய கைங்கரியம் பண்ணிக்கொண்டு வாழப் பெறுவர்கள் என்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறார்.

ஆழ்வார் திருமலையில் எம்பெருமானை மங்களாசாசனம் செய்து பாடுவார் ஆகையால், அவரை போலவே மற்றவர் பலரும் எம்பெருமானை மங்களாசாசனம் செய்ய வருவார்கள். அவர்கள் எப்பொழுதும் வில் மற்றும் அம்புகளுடன் கூடி இருக்கும் வேடர்கள் என்று கூறுகிறார்.

நித்யஸூரிகள் எப்பொழுதும் ஆபத்துகளை எதிர்பார்த்து பரமபதத்தில் பணிபுரிவது போல், ஸ்ரீகுஹப்பெருமாள் எப்படி இரவு பொழுது முழுவதும் விழித்திருந்து இராமபிரானை உற்று நோக்கி வந்தானோ, அது போன்று திருமலையில், வேடர்கள் இந்நிலத்திலே எந்த வேளையிலே யாரால் என்ன தீங்கு எம்பெருமானுக்கு நேர்ந்துவிடுமோ’ என்று பயந்து எப்போதும் ஏறிட்ட வில்லும் கையுமாய் இருப்பர் என்று திருமலையில் நிறைந்து இருக்கும் வேடர்களை ஆழ்வார் மகிழ்ந்து விரிவாக புகழ்ந்து சொல்கிறார்.

பெரியாழ்வார், “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா” என்று எம்பெருமானுடைய அளவற்ற சக்தி விசேஷத்தை அறிந்து சொன்னபோதும் பயம் கொண்டு சந்தேகம் மிகுதியாலே “பல்லாண்டு பல்லாண்டு” என்று சொன்னார் போல், இவரும் “மல்லார் திரடோள் மணிவண்ணன்” என்று அறிந்து வைத்தும் சந்தேகத்தினால் மங்களாசாஸநத்திலே, ஆழ்வார்கள் மிகவும் பாதுகாவலர்களாக இருப்பர் என்பது இந்த பாட்டில் தெரிகிறது.

இந்த பாட்டில் ஆழ்வார் பல்லாண்டு பாடுவதாக இல்லையே என்று நினைக்க வேண்டாம். ” மங்களாசாஸநம் செய்பவர்கள் திருமலையிலே உள்ளார்” என்று சொல்லுவதும் பல்லாண்டு பாடுவதை போலவே என்று உரையாசிரியர் கூறுகிறார்.

இனி அடுத்த பதிகத்தை பற்றி விளக்கத்தில் சந்திக்கலாம், நன்றி.

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் 2 ( தாயே தந்தையே)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். இப்பொழுது அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே காண்போம்.

பெரியதிருமொழி 1.9

சென்ற பதிகத்தில், ஒவ்வொரு பாசுரத்தில் “திருவேங்கடம் அடை நெஞ்சமே! திருவேங்கடம் அடை நெஞ்சமே!” என்று சொல்லித் திருமலையை அணுகுமாறு தம் திருவுள்ளத்திடம் சொல்கிறார். அந்த திருவுள்ளமும் அப்படியே செல்ல, “யானும் என் நெஞ்சமும் இசைந்து ஓழிந்தோம்” என்பது போலே ஆழ்வாரும் அவரின் நெஞ்சமும் கூடித் திருவேங்கடமுடையானை அநுபவிக்கத் திருமலையிலே வந்து புகுந்தனர். எல்லோருக்கும் ஸ்வாமியாய், எல்லோருக்கும் சொந்தமானவனாகவும் விளங்குகின்ற எம்பெருமான் இங்கே நித்யவாஸம் செய்து அருளுகிறபடியால் தமக்கும் எல்லாம் செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் ஆழ்வார் இங்கு வந்து சேர்ந்தார். அதனால் இதனை இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் வந்தடைந்தேன் என்று சொல்லி உள்ளார்.

இப்படி வந்த ஆழ்வாரை, எதிர்கொண்டு அழைத்தல், அணைத்தல், இனியதாக ஒரு வார்த்தை சொல்லுதல், நலம் விசாரித்தல் அல்லது ஒரு கைங்கரியம் செய்ய சொல்லுதல் என்று எதுவும் சொல்லாமல் திருமலையப்பன் இருந்தான். அதனால் ஆழ்வார் மிகவும் திருவுள்ளம் வருத்தப்பட்டு ‘ஸர்வஜ்ஞனாய் ஸர்வ சக்தனாய் நமக்கு வகுத்த நாதனாய் பிராட்டியை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாதவனாய் இருக்கும் எம்பெருமான் இப்போது நம்மை கண்டு கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் தம்முடைய பாவங்களே இருக்கும் என்று நிச்சயித்து, அந்த எம்பெருமானின் திருவுள்ளத்திலே இரக்கம் பிறக்கும்படி இந்த பதிகத்தில் பாசுரங்கள் பாடுகிறார்.

சொந்தங்கள் இல்லாதவர்களை சொந்தமாக நினைத்தும், அனுபவிக்க வேண்டாத விஷயங்களை அனுபவித்துக் கொண்டும், மற்ற ஜீவாத்மாக்களுக்கு அளவு இல்லாமல் துயர் கொடுத்துக் கொண்டும் , இன்னமும் பலவகைப் பாவங்களைச் செய்தும் காலம் கழித்து வந்ததாக ஆழ்வார் சொல்கிறார். இருந்தாலும், இப்போது எம்பெருமானை விட்டு பிரிய முடியாதபடி அன்பு பிறந்ததனால் அநுதாபத்துடனே தான் திருமலை வந்து சேர்ந்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

இனி தன்னுடைய முன்னைத் தீவினைகளைப் பார்த்துக் கைவிடாமல், தன் குற்றங்களை பொறுத்துக் கொண்டு தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டும் என்று பெரிய பிராட்டியாரைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானின் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகிறார். எம்பெருமானோ ஸர்வரக்ஷகன்; தானோ அனாதை. தன் குற்றங்களைப் பொறுத்துக் கொள்ள பிராட்டியும் எம்பெருமானின் திரு மார்பில், ‘அகலகில்லேன் இறையும் என்று ” இருக்கிறார். ஆகவே தன் அபராதங்களைப் பொறுத்தருளி ஒன்பதாம் பாட்டிலே “மாயனே எங்கள் மாதவனே!” என்று பிராட்டி ஸம்பந்தம் பற்றி நேரிடையாக சொல்லி, புருஷகாரம் முன்னாகச் சரணம் புகுகிறார்.

முதல் பாடல் (1.9.1)

தாயே தந்தையென்றும், தாரமே கிளை மக்களென்றும், நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால், வேய் ஏய் பூம்பொழில் சூழ் விரையார் திருவேங்கடவா! நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.

எம்பெருமானையே ஸகலவித சொந்தங்களுமாகக் கொள்ள வேண்டியிருக்க அது செய்யாமல், தாயாக இல்லாதவரை, தாயே என்றும் தந்தையாக இல்லாதவரை தந்தையே என்றும் மனைவியாக இல்லாதவரை தாரமே என்றும் சுற்றங்களே இல்லாதவரை கிளையே என்றும் நண்பர்கள் இல்லாவர்களை மக்களே என்றும், பெற்ற பிள்ளைகளிடமும், நண்பர்களிடமும் ஆசை வைத்து மிகவும் கஷ்டங்கள் பட்டேன் என்றும், அவர்களுக்கு தன்னை காப்பாற்ற சக்தி இருந்தால்தானே அவர்களால் தான் வாழமுடியும், ஆனால் உண்மையில் அவர்களை வீணே நம்பி தான் கெட்டேன் என்றும், பிறர்க்கும் எம்பெருமானுக்கும் என்று வாழ்ந்து விட்டதாக சொல்கிறார்.

என்றென்றும் எல்லோருக்கும் சொந்தமான எம்பெருமானை மட்டும், பற்றி இருந்தால் ஒரு குறையும் இருந்திருக்காதே என்றும், தற்பொழுது நல்ல புத்தி உண்டானதால் பரமபோக்யமான திருமலையிலே வந்து எம்பெருமானின் திருவடிகளிலே விழுந்ததாகவும், தன்னுடைய முன் காலத்தைய தீவினைகளை எம்பெருமான் திருவுள்ளத்தில் கொள்ளாமல், ஆழ்வார் ஒரு சரணாகதன் என்று மட்டும் எடுத்துக் கொண்டு பர​ம கிருபையுடன் அடிமை கொண்டருள வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.

காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருந்த உலக சொந்தங்கள் கைவிட்டதனால், எல்லோருக்கும் எப்பொழுதும் சொந்தமாக உள்ள எம்பெருமானை காணமுடியாதோ என்று எண்ணும் அளவிற்கு அவனிடத்தில் ஆசையை பிறப்பித்தன என்பதை, உன்னைக் காண்பதோர் ஆசையினால்” என்பதன் மூலம் தெரிவிக்கின்றார்.

நாயேன் என்று ஆழ்வார் சொன்னதற்கு நாய் போலே நீசன் என்று பொருள் கொண்டாலும், பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் உள்ளுறை பொருள் ரசமானது. ராஜபுத்ரர்கள் நாய்களையே மேல் விழுந்து விரும்புவது போலே ராஜாதிராஜனான எம்பெருமானும் தன்னை, தன் மேல் விழுந்து விரும்ப வேண்டும் என்கிறார்.

மூங்கில்கள் நெருங்கி யிருக்கப் பெற்றதும் பூஞ்சோலைகள் நிறைந்திருக்கப் பெற்றதும் மிகுந்த மணம் உடையதுமான திருமலை என்கிறார். சர்வ கந்தம் என்னும்படியான ஒரு பொருள் உள்ளே இருக்கின்றது என்பதை தெரிவிக்கும்படி பூம்பொழில் சூழ் விரையார் என்று கூறுகிறார். அந்த மணம் வழி காட்டவே திருமலை வந்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

இரண்டாம் பாடல் (1.9.2)

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து, நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன், தேனேய் பூம்பொழில்சூழ் திருவேங்கட மாமலை, என் ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

முதல் பாடலில் சொந்த பந்தங்களை உற்ற உறவினராக நினைத்திருந்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி சரணம் புகுந்தார். இந்த பாட்டில், போக்யம் இல்லாத கெட்ட விஷயங்களை போக்யம் என்று எண்ணிக்கொண்டு இருந்த குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும் என்று சொல்லி சரண் புகுகிறார்.

நெஞ்சு நஞ்சாக இருந்த போதும், வெளி நோக்கினை வெகு அழகாகச் செய்து, ஆண் பிள்ளைகளை கவர்கின்ற பெண்களின் கண் வலையிலே அகப்பட்டு, அந்த மாதர்களை போற்றி கொண்டாடுவதே முக்கியம் என்று கொண்டு, அதற்காக எத்தனை பாவங்கள் செய்யலாமோ அத்தனை பாவங்களையும் செய்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

‘உள்ள நரகங்கள் போதாது என்று இன்னமும் பல நரகங்களை படைக்க வேண்டும் ’ என்று அளவிற்கு, எண்ணிறந்த பாவங்களைச் செய்தாகவும், ‘போக்யமல்லாத விஷயங்களிலே ஆச்சர்யப்பட்டு அவற்றில் ஈடுபட்டு பயனில்லாத செயல்களை செய்து தீமைகளை விளைவித்துக் கொண்டோமே !’ என்று அநுதாபம் தோன்றியதனால், பரமபோக்யமான விஷயத்திலே ஈடுபட்டு நன்மை பெறுவோமென்று நல்ல ஞானம் உண்டாகி, போக்யதைக்கு எல்லை நிலமாகவுள்ள திருமலையிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் வந்து சரணம் புகுந்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

பழைய குற்றங்களைக் காணாது அடியேனை அடிமை கொண்டருள வேண்டும் என்பது ஆழ்வாரின் பிரார்த்தனை. “ஈச்வரனுக்கு ஜகந்நிர்வாஹம் நடக்க வேண்டுமானால் வேறே சில நரகங்கள் ஸ்ருஷ்டிக்க வேணும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை அருளியது.

என் ஆனாய் என்பதை, ஆனையை போன்றவனே என்றும் கொள்ளலாம். திருநெடுந்தாண்டகத்தில் ஆழ்வார் தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலமதயானாய்”  என்று அருளியுள்ளார்.

நம்மாழ்வாரும், திருவாய்மொழியில்  “என்னானை என்னப்பன் எம்பெருமான்” என்றார். எம்பெருமான் ஆனை என்பவன் என்பதற்கு சில காரணங்கள்;

  • யானையை எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கும் போதெல்லாம் அபூர்வ வஸ்து போலவே இருந்து பரம ஆனந்தத்தைத் தருவது போல எம்பெருமானும் ”அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே” என்னும்படி இருக்கிறான்.
  • ஆனையின் மேல் ஏறவேண்டியவன் ஆனையின் காலைப் பற்றியே ஏற வேண்டும், அது போலவே, எம்பெருமானிடம் சேர வேண்டியவர்களும் அவனது திருவடிகளையே பற்றி ஏறவேண்டும்
  • ஆனையானது தன்னைக் கட்ட, தானே கயிறு கொடுக்கும்; “எட்டினோடு இரண்டு எனுங் கயிற்றினால்” (திருச்சந்த விருத்தம்.) என்றபடி பக்தியாகிற கயிற்றை எம்பெருமானே தந்தருள்வன்.
  • யானையை நீராட்டினாலும் அடுத்த நொடியே அழுக்கோடே சேரும்; எம்பெருமான் சுத்த ஸத்வமயனாய்ப் பரம பவித்திரனாக இருக்கும்போதும், வாத்சல்யம் என்ற குணத்தினால் ‘”பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும் ‘ உடைய நம் போன்றவர்களோடு சேர திருவுள்ளம் கொண்டு இருப்பவன்.
  • யானையைப் பிடிக்க பெண் யானையைக் கொண்டே பிடிக்கவேண்டும்; அதேபோல், பிராட்டியின் புருஷகாரத்துடனேயே எம்பெருமானை அடையமுடியும்.
  • பாகனுடைய அநுமதியின்றித் வருபவர்களை யானை தள்ளி விடும். எம்பெருமானும் “வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பாகவதர்களை முன்னிட்டுப் தன்னிடம் வருபவர்களை தவிர மற்றவர்களை அங்கீகரிக்க மாட்டான்.
  • யானையின் மொழி யானைப்பாகனுக்கே தெரியும்; எம்பெருமானுடைய பாஷை திருக்கச்சி நம்பி போன்றவர்களுக்கே தெரியும்; நம்பிகள் காஞ்சி பேரருளாளனோடே பேசுகின்றவர்
  • யானையினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் முதலிய தொழில்கள் பாகன் சொல்லும்படி கேட்கும். எம்பெருமானும் . “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – உன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” என்றும், “கிடந்தவா றெழுந்திருந்து பேசு” என்றும் சொல்கின்ற திருமழிசைப்பிரான் போன்றவற்றுக்கு கட்டுப்படுபவன்
  • யானைக்குக் கை நீளம்; எம்பெருமானும் ‘”அலம்புரிந்த நெடுந்தடக் கை” என்று சொல்லப் படுபவன்.
  • யானை உண்ணும் போது இறைக்கும் அரிசி பல கோடி எறும்புகளுக்கு உணவாகும். எம்பெருமான் அமுது செய்த பிரசாதத்தாலே பலகோடி பக்தர்கள் உஜ்ஜீவிக்கிறார்கள்.
  • யானை இறந்த பின்பும் உதவும்; எம்பெருமானும் தீர்த்தம் ஸாதித்துத் தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளின பின்பும் இதிஹாஸ புராணங்கள் அருளிச் செயல்கள் மூலமாகத் தனது சரிதைகளை நம் போன்றவர்களுக்கு உணர்த்தி உதவுகிறார்.
  • யானைக்கு ஒரு கையே; எம்பெருமானுக்கும் கொடுக்கும் கையே தவிர கொள்ளும் கை இல்லை.
  • பாகனுக்கு யானை ஸம்பாதித்துக் கொடுக்கும், எம்பெருமானும் அர்ச்சக பரிசாரகர்களுக்கு  சம்பாதித்து கொடுப்பார்.
மூன்றாம் பாடல் (1.9.3)

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஓன்று இலாமையினால், என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தது அறியேன், குன்றேய் மேக மதிர் குளிர் மாமலை வேங்கடவா!, அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

மலை போன்ற மேகங்கள் கூடி இருக்கும் குளிர்ந்ததாய்ச் சிறந்த திருவேங்கடமலையின் மேல் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானே, விவேகம் சிறிதும் இல்லாமல், யாசித்தவர்களுக்கு இனிமையாக ஒரு நாளும் பதில் சொல்லி அறியேன். பல பிராணிகளை கொன்று முடித்தேன். அன்றே உன்னை வந்து பற்றினேன். அடியேனை ஆட் கொண்டு அருள் என்று ஆழ்வார் வேண்டுகிறார் என்பது இந்த பாடலின் பதவுரை.

உயிர்களை கொன்றதால் உண்டான பாவங்களை / குற்றங்களை பொறுத்தருள வேண்டும் என்று இந்த பாடலில் வேண்டுகிறார். குறிக்கோள் ஒன்று இல்லாமையால் பல உயிர்களை கொன்றேன் என்கிறார். செயல்களை பாராதே, ஸ்வரூபத்தை பார்த்து ஏற்றுக்கொள் என்று வேண்டுகிறார்.

குறிக்கோள் ஒன்று என்று சொன்னதை, குறிக்கோள் ஒன்றும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் உரை ஆசிரியர். குறிக்கோள் என்பது நம்பிக்கை / ஞானம். உடல் வேறு ஆன்மா வேறு என்றும், தெய்வம், சாஸ்திரம் உண்டு என்றும், பாவம் புண்ணியம் உண்டு என்றும், இதனை செய்தால் பாவம், இதனை செய்தால் புண்ணியம் என்றும் பாவ பலன்களை அனுபவிக்க நரகத்திற்கு செல்ல வேண்டும் என்றும், இவை ஒன்றிலும் நம்பிக்கை / ஞானம் இல்லாதவனாக ஆழ்வார் தன்னை குறிப்பிட்டு, குறிக்கோள் ஒன்றும் இல்லாவன் என்கிறார்.

இந்த பாவியிடம் யாசித்தேனே என்று அவர்களை வாழ்நாள் உள்ளவரை நெஞ்சு புண்பட்டு இருக்கும் வார்த்தைகளை சொல்லிவிட்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

“இன்று வந்தடைந்தேன்” என்று சொல்லாமல், “அன்றே வந்தடைந்தேன்”  என்று ஆழ்வார் சொல்வதற்கு பெரியாவாச்சான்பிள்ளை சொல்லும் உரை சுவாரஸ்யமானது. அன்றே அனுதாபம் பிறந்ததால், பிராயச்சித்தம் பண்ணியதால் இன்றைய வருகை என்று இல்லாமல், கொன்ற கை கழுவாதே, கொன்றதால் உண்டான இரத்தம் படிந்த கைகளை (உதிரம் ) கழுவாமல் வந்து சரண் புகுந்ததாக கூறுகிறார்.

நான்காம் பாடல் (1.9.4)

குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தே எய்த்தொழிந்தேன், நலந் தான் என்றும் இலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன், நிலம் தோய் நீள் முகில் சேர் நெறியார்த் திருவேங்கடவா, அலந் தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

பூமியிலே படிந்த பெரிய மேகங்கள் நடமாடின வழிகள்  தெரிகிற திருமலையில் எழுந்து அருளி உள்ளவனே, எல்லா குலங்களிலும் பிறந்து, இறந்து இளைத்துப் போனவனும் ஒரு வித நன்மை இல்லாதவனும், ஒரு தர்மம் செய்யாதவனும், பல துயரங்களை அனுபவித்தவனான் அடியேன், உன்னை வந்து அடைந்தேன், ஆட் கொள்வாயாக என்கிறார் ஆழ்வார்.

“இனி நமக்கு ஒரு பாபமும் செய்ய சக்தியில்லை; இளைத்துத் திருவடிகளிலே வந்து விழுந்து விட்டேன்: பழைய குற்றங்களைப் பாராமல் அடியேனை அடிமை கொண்டருள வேண்டும் என்கிறார் ஆழ்வார்.

மேகங்கள் கழுத்தளவும் நீரைப்பருகி, அந்த நீரின் கனத்தாலே வேகமாக போக முடியாமல், நகர்ந்து நகர்ந்து மழையை துளித் துளியாக பெய்து கொண்டு ஸஞ்சரித்த அடையாளம் வழிகளிலே தெரிகின்றது என்பதை ஆழ்வார் “நிலந்தோய் நீள்முகில்சேர் நெறியார்” என்கிறார்.

ஐந்தாம் பாடல் (1.9.5)

எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன், துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும் கிற்கின்றிலேன், செப்பார்த் திண் வரை சூழ் திருவேங்கடமாமலை, என் அப்பா! வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

அரணாக திண்ணிய மலைகளாலே சூழப்பட்ட திருமலையிலே எழுந்தருளி இருக்கின்ற என் அப்பனே, சர்வ சக்தனே, பலவகைப்பட்ட பாவங்களையே செய்து, துக்கம் கொண்டவனாக உனது திருவடிகளை ஏற்றுக்கொண்டு துதிக்கவும் சக்தியற்றவனான நான் வந்து அடைந்தேன், என்னை ஆட்கொண்டு அருள் செய் என்று ஆழ்வார் வேண்டுவது இந்த பாடலின் பொழிப்புரை.

அதிபாதகம், உபபாதகம், மஹாபாதகம் என்னும் பாவங்கள் எப்படிப்பட்டவை ஆயினும், அவைகளை செய்யும் போது சிறிதும் சலியாமல் செய்து விட்டேன். பிறகு அப்பாவங்களுக்கு நேரக்கூடிய பலன்களைக் கேள்விப்பட்டு என்ன செய்தோம் என்று வருத்தத்தால் குன்றிப் போனேன்.  கைசலியாமல் பாவங்களைச் செய்ததினால் இளைப்பு உண்டானதால், நாலெழுத்துச் சொல்லி உன்னைத் துதிக்கவும் முடியாத சக்தி அற்றவனாக ஆனேன். ஆயினும் உன்னடிக்கீழ் வந்து புகுந்தேன், ஆகையால் அடியேனை அடிமை கொண்டருள வேணும்.

ஆறாம் பாடல் (1.9.6)

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம், புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்ந்து ஓழிந்தேன், விண்ணார் நீள் சிகர விரையார்த் திருவேங்கடவா, அண்ணா! வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே.

இனி ஒரு சரீரத்தையும் எடுக்க சக்தி இல்லாததால் அடுத்த ஜென்மத்திற்கு பயந்து உன் திருவடிவாரத்திலே வந்து விழுந்தேன், அடிமை கொண்டருள வேண்டும் என்று ஆழ்வார் பிரார்த்திக்கும் பாடல்.

ஆகாயம் அளவிற்கு உயர்ந்திருக்கிற கொடுமுடிகளை உடைய பரிமளம் மிக்க திருமலையிலே எழுந்தருளி இருக்கின்ற ஸ்வாமியே, பூமி, ஜலம், அக்நி, வாயு, மேகங்கள் உலாவுகின்ற ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களினால் ஆன புண்கள் நிறைந்த சரீரத்தில் அகப்பட்டுக் கொண்டு கதறி அழுது உடல் மெலிந்து மிகவும் கஷ்டப்பட்டவனான அடியேன், உன்னை அடைந்தேன்; என்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பதவுரை.

ஏழாம் பாடல் (1.9.7)

தெரியென் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன், பெரியேனாயின பின் பிறர்க்கே உழைத்தே ஏழையானேன், கரி சேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!, அரிய!. வந்தடைந்தேன் அடியேனை ஆட் கொண்டு அருளே.

யானைகள் மிகுந்ததும், அழகிய சோலைகளாலே சூழப்பட்டும் உள்ள வலுவான திருமலையில் வாழ்பவனே, ஹரியே, சிறியவனாக இருந்தபோது, அறிவில்லாதவனாய் பல பாவங்களை செய்து தீர்த்தேன். வளர்ந்த பின், பிறர்க்கே உழைத்து கெட்டு போனேன். இப்போது உன்னிடம் வந்து சேர்ந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருள் செய்ய வேண்டும் என்கிறார்.

இளம் பருவத்தில் நல்ல விஷயங்களைக் கற்கும்படி சொல்லி இருப்பதற்கு மாறாக தான் இளம் பருவத்தில், விவேகம் இல்லாதவனாக பல தப்புக்காரியங்களைச் செய்து விட்டேன் என்றும், போன காலம் எல்லாம் பழுதே போனாலும், இனியாகிலும் எம்பெருமான் விஷயத்திலே தொண்டு செய்யலாம் என்று அவன் திருவடி கீழே வந்து சேர்ந்ததாகவும் சொல்லி தன்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

இளம் பருவத்தில் நல்ல விஷயங்களை கற்ற / தெரிந்த கொண்ட ப்ரஹலாதாழ்வான், லட்சுமணன் என்ற இளைய பெருமாள், துருவன், சுவாமி நம்மாழ்வார் போன்றவர்களை நினைவில் கொண்டதால், தான் மாறாக இருந்ததாக சொல்கிறார்.

ஹரி என்ற வடசொல் அரி என்றாயிற்று. தன்னுடைய பாவங்களை யெல்லாம் எரிப்பதற்கு சாமர்த்தியம் உடையவனே என்றும், சிங்கம் போல் ஒருவராலும் அடக்க முடியாதவனே என்றும் ஹரி என்ற சொல்லுக்கு பொருள் உரைக்கலாம்.

எட்டாம் பாடல் (1.9.8)

நோற்றேன் பல் பிறவி உன்னைக் காண்பதோர் ஆசையினால், ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்!, கோல் தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ் வேங்கடவா!, ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே.

பலபிறவிகள் உண்டாகும்படி கருமங்களைச் செய்ததாகவும், இப்படி பல பிறவிகளும் பிறந்து கொண்டே வரும் போது, இந்த பிறவியில் எதோ ஒரு விசேஷத்தாலே எம்பெருமானைக் காண வேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றும், அதனால், இதற்கு முன்னே தாம் இருந்த நிலை மிகவும் பொல்லாதது என்று நெஞ்சில் பட்டு, இதுவரையில் நடந்தவற்றையும் இனி நடக்கப் போகின்றவைகளையும் நினைத்து பொறுக்க முடியாமல், எம்பெருமானின் திருவடிகளை வந்து சேர்ந்தேன் என்றும் தன்னை ஆட்கொண்டு அருள வேண்டும் என்றும் பிரார்திக்கிறார்.

பல்பிறவி நோற்றேன் என்பது, பல பிறவிகள் பிறக்கும்படி கருமங்கள் செய்தேன் என்று ஆழ்வார் கூறுவதாக கொள்ளலாம்.

பிறர்க்கே உழைத்து ஏழையானேன் என்று முன் பாட்டில் சொன்ன ஆழ்வார், இப்பிறப்பே இடர் உற்றனன் என்று சொல்லி, தான் இருந்த நிலை மிகவும் பொல்லாதது என்று அறிந்த பின் அவனை காண வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது என்கிறார்.

மாறி மாறி வரும் பிறவிகளை இனி சகிக்க மாட்டேன் என்பதை ஆற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உன்னைக் காண்பதோர் ஆசையினால் பல்பிறவி நோற்றேன், இப்பிறப்பே ஏற்றேன்” என்று வார்த்தைகளை மாற்றி அமைத்துக்கொண்டு, “உன்னை ஸேவிக்க வேண்டும் என்று பலபல பிறவிகளில் நோன்பு நோற்றேன்; இதுவரையில் உன்னுடைய ஸேவை கிடைக்கவில்லை; இப்பிறவியில் பாக்கியம் வாய்த்தது; முன்னே இருந்த காலமெல்லாம் வீணாய்ப் போயிற்றே என்று இடர் உற்றேன்” என்றும் ஒரு விளக்கம் கூறுவார்கள்; ஆனால் அதனை நம் முன்னோர்கள் அவ்வளவு சிறப்பாக கொள்வதில்லை.

ஒன்பதாம் பாசுரம் (1.9.9)

பற்றேல் ஒன்றிலேன் பாவமே செய்து பாவியானேன், மற்று ஓன்று அறியேன் மாயனே!  எங்கள் மாதவனே!, கல் தேன்பாய்ந்தொழுகும் கமலச் சுனை வேங்கடவா!, அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.

ஆச்சரியமான குணங்களை உடையவனே, எங்களுக்குப் புருஷகாரமான பிராட்டிக்கு வல்லபனே! மலை மூட்டுகளில் இருந்து தேன் பெருகி வெள்ளமாக நிற்பதும் உள்ள தாமரைச் சுனைகளை கொண்ட திருமலையிலே வாழ்பவனே! எந்தவிதமான ஆதாரமும் இல்லாதவனாக பாவங்களை செய்து ஒரு பாவியாய் ஒரு உபாயமும் அறியாதவனாக உனக்கே அற்று தீர்த்தவனாக வந்து அடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருள் செய் என்கிறார்.

இப்பாட்டில் மாதவனே! என்று சொல்வதால், பிராட்டியை முன்னிட்டு சரணம் புகுந்தமை விளங்கும்.

பற்றேலொன்றுமிலேன் என்பதற்கு கொடுத்துள்ள விளக்கம் ரசிக்க வைக்கிறது. உன்னுடைய ஸம்பந்தத்தை அறுத்துக் கொண்டு வெகுதூரம் ஓடிப்போன எனக்கு ஓரிடத்திலும் ஒருவகையான ஆதாரமுமில்லை. ஆத்மாவுக்கு ஞானமும் ஆனந்தமும் தேவையாய் இருக்கும் போது, அடியேன் பாபமே தேவையோ என்று பாவங்களையே செய்து பாவியானேன். உன்னைப் பெறுவதற்கான உபாய விஷயத்தில் எள்ளளவும் ஞானமில்லை; நீயோ இப்படிப்பட்ட குறைவாளரையும் ரக்ஷிக்கவல்ல ஆச்சர்ய சக்தி உள்ளவனாக நின்றாய்; உனது குளிர்ந்த திருவுள்ளத்திலே என்னைப் போன்றவர்களுடைய அபராதங்களினாலே ஒருகால் சீற்றம் பிறந்தாலும் அவற்றை பொறுப்பித்து ரக்ஷிப்பிக்கவல்ல பெரிய பிராட்டியாரும், ”அகலகில்லேனிறையுமென்று“‘ உன் திருமார்விலே உறைகின்றாள்; இப்படியிருக்க நான் வந்து சரணம் புகுந்தபின் இனி நான் இழப்பதுண்டோ? “பற்றிலார் பற்ற நின்றானே!” என்றபடி ஆதாரமற்றவர்களுக்கு ஆதாரமாய் நிற்கக் கூடிய நீயே அடியேனை ஆட்கொண்டருள வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

பாவமே செய்து பாவியானேன் என்று பாவத்தை இரண்டு முறை குறிப்பிட வேண்டுமோ என்று கேட்டுக்கொண்டு, புண்ணியம் செய்து பாவத்தை சம்பாதிப்பவர்கள் உண்டு என்றும், பாவம் செய்து புண்ணியத்தை சம்பாதிப்பவர்கள் உண்டு என்று சொல்லி, ஆழ்வார் பாவம் செய்து பாவத்தையே பெற்றார் என்று உரை ஆசிரியர் கூறுவார். தசரதன் கொடுத்த வார்த்தையை மீறக்கூடாது என்ற புண்ணியத்தை செய்தாலும், தசரதன், எம்பெருமான் இராமனை இழந்தான் என்ற பாவத்திற்கு ஆளானான். “சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்”  என்று பாவங்களையே செய்த சிசுபாலன் இறுதியில் புண்ணியத்தை அடைந்தான். ஆக, ஆழ்வார் சொல்வதாவது, தசரதனைப் போலே புண்யத்தைச் செய்து பாவியானவன் அல்லேன், சிசுபாலனைப் போலே பாவத்தைச் செய்து புண்யாத்மாவாக ஆனவனும் அல்லேன்; செய்ததும் பாவம்; ஆனதும் பாவியாக என்கிறார்.

பத்தாம் பாடல் (1.9.10)

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய வெம் கார் வண்ணனை, விண்ணோர்த் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை, திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன் கலியன், பண்ணார்ப் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே

கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்தில் கூறிய படி ஏழுலகத்தவர்க்கும் கண் போன்றவனும் உயிர் போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கை மன்னன் அருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடும் என்று கூறி, இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி ஆழ்வார் இந்த பதிகத்தை முடிக்கின்றார்.

இந்த பாடலில் திண்ணார் மாடம் என்பதற்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. காடு சென்ற இராமன், எப்படி பரத்தாழ்வான் வருகை கண்டு நாடு திரும்புவான் என்று மக்கள் களித்து இருந்தார்களோ, அப்படியே ஆழ்வார் வருகை கண்டு திருவேங்கடத்தான் மகிழ்ச்சியுடன் எழுந்தருளுவான் என்று திருமங்கையில் உள்ளோர் களித்தனர் என்று கூறுவர்.

பாவமே செய்து பாவியானேன் என்று ஆழ்வார் சொன்னதை, எம்பெருமானும் பொறுத்த பின், எப்படி விபீஷணன் சரணாகதி செய்ய வந்த போது, விபீஷணனுக்கு மட்டும் இன்றி அவன் கூட வந்த நால்வருக்கும் சக்கரவர்த்தி திருமகன், அடைக்கலம் கொடுத்தாரோ, அதே போல் ஆழ்வார் பாடல்களை நாம் கற்றால் நம்மையும் எம்பெருமான் பொறுப்பார் என்று கொள்ள வேண்டும்.

சென்ற பாடலில் பாவியானேன் என்று சொன்ன ஆழ்வார், இந்த பாடலில், அவர் சம்பந்தம் கொண்டு பாவங்கள் போகும் என்று சொல்வதாக சுருக்கமாக கொள்ளலாம்.

மீண்டும் அடுத்த பதிகத்தில் சந்திப்போம் நன்றி

திருவேங்கடமுடையான் – திருமங்கைஆழ்வார் 1 (கொங்கு அலர்ந்த)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேயாழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம். நன்றி

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருஎழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார். அவற்றை பற்றி சிறிது கீழே காண்போம்.

முதல் பத்து – எட்டாம் பதிகம்

பெரிய திருமொழியில் ஏழாம் பதிகத்தில், “நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய” என்றும், “தேய்த்த தீயால் விண் சிவக்கும்” என்றும் “கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய்” என்றும் “சென்று காண்டற்கு அரிய கோயில்’ என்றும் சிங்கவேள் குன்றத்தின் (அஹோபிலம்) நிலத்தின் கடுமையைப் பற்றி பேசின திருமங்கை ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! ‘ சிங்கவேள் குன்றத்திலே ஏன் துவளுகிறீர்? “தெழிகுரலருவித் திருவேங்கடம்” “சிந்து பூ மகிழுந் திருவேங்கடம்” “தெண்ணிறைச்சுனை நீர்த்திருவேங்கடம்”, “மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாழ்வரே ” என்று நெஞ்சு குளிரப் பேசும்படியான திருவேங்கடமா மலையிலே நாம் அனைவர்க்கும் எளிதாக ஸேவை ஸாதிக்கிறோம், அங்கே வந்து தொழுது ஆனந்தம் அடைவீர்’ என்றருளிச் செய்ய, அங்கே போய் எம்பெருமானையும் திருவேங்கடத்தையும் அநுபவிக்கத் தொடங்குகிறார். இந்த பதிகமும், இதற்கு அடுத்த மூன்று பதிகங்களில், ஆக நாற்பது பாசுரங்கள் தமிழ் மொழி நடமாடும் இடத்திற்கு எல்லையாய் இருக்கின்ற திருவேங்கட மலை பற்றி ஆழ்வார் கூறும் அருள் மொழிகள் ஆகும்.

முதல் பாடல் (1.8.1)

கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த, கோவலன் எம் பிரான், சங்கு தங்கு தடங் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்,  பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம், பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே!

பரிமளம் வீசுகின்ற பூக்கள் நிறைந்த குருந்த மரத்தை முறித்து அழித்த கோபால கிருஷ்ணனாய், சங்குகள் தங்கியிருக்கிற பெரிய கடலிலே திருக்கண் வளர்கின்ற புண்டரீகாக்ஷனாய், செருக்குடன் கிளர்ந்து வந்த பகாஸூரன் வாயைக் கிழித்தெறிந்த புராண புருஷனான ஸ்ரீமந் நாராயணனது இருப்பிடமாகிய நீர்வளமுடையதாய், சிவந்த மீன்கள் களித்து வாழப்பெற்ற சுனைகளை கொண்ட திருவேங்கடத்தை அடை நெஞ்சமே! என்கிறார். 

புள்ளினை வாய்பிளந்த வரலாறு என்பது கொக்கின் வடிவம் எடுத்துக் கொண்டு வந்த அசுரனை கண்ணபிரான் அழித்தது; விபவாவதாரத்தில் பகாஸூரன், கொக்காசுரன் போன்ற விரோதிகளை ஒழித்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் விரோதிகளை ஒழிக்க வல்லன் என்று காட்டுகிறார். சங்கு தங்கு என்று திருப்பாற்கடலை குறிப்பிட்ட ஆழ்வார், சாதாரண சங்குளை சொல்லி இருக்கலாம், அல்லது சங்கநிதி பத்மநிதி என்ற பலதரப்பட்ட நிதிகளையும் சொல்லி இருக்கலாம். திருப்பாற்கடல் நாதனே கண்ணபிரானாக வந்து அவதரித்தான், அவனே திருவேங்கட முடையானாகவும் வந்து ஸேவை ஸாதிக்கிறான் என்கிறார். புராணர் என்பதால், இன்று நேற்று அல்ல நெடுநாள் தொட்டு அசுரர்களை அழிக்கிறான் என்கிறார்.

இரண்டாம் பாடல் (1.8.2)

பள்ளியாவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய்முலை, பிள்ளையாய் உயிருண்ட எந்தை பிரான் அவன் பெருகுமிடம், வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்றே எண்ணி, நாள் தொறும் தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பூதனை என்பவள் கதறும்படியாக, சிறிய குழந்தையாக இருக்கும்போதே, அவளுடைய முலையை உறிஞ்சி உயிருடன் அமுத செய்த கண்ணன் பள்ளிகொள்ளும் இடம், திருப்பாற்கடலும் திருவரங்கமும் ஆகும். அந்த எம்பெருமான் வளருகின்ற இடமாகவும், தெளிந்த ஞானிகள், கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தனாயும், த்ரேதா யுகத்தில் சிவந்த பொன்னின் நிறம் போன்ற செம்மை உடையவனாயும், (துவாபரயுகத்தில் பாசியின் பசுமை நிறத்தனாயும்) கலியுகத்தில் கறுத்த நிறத்தனாயும் இருப்பவன் என்று தியானித்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் வணங்கும் திருமலையை, அடை என்று தன்னுடைய நெஞ்சிடம் கூறுகிறார்.

குழந்தை பருவத்தில் உட்காரவும் இல்லாமல், நிற்கவும் இல்லாமல் இருந்த நிலையில் பூதனையை முடித்ததால், அப்படி இல்லாமல் சயனத்தில் இருந்த திருபாற்கடலையும் திருவரங்கத்தையும் ஆழ்வார் இங்கு குறிப்பிட்டுள்ளார். தொட்டில் பிள்ளை பூதனை உயிர் உண்ட பின்பு வளர்ந்த இடம் திருமலை என்கிறார். தெள்ளியார் என்றது வேறொரு பலன்களை விரும்பாத ஸ்வரூபத் தெளிவுடைய  சிந்தை உடையவர்கள் என்பது.

மூன்றாம் பாடல் (1.8.3)

நின்ற மாமருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான், என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரையடி எம்பிரான், கன்றி மாரி பொழிந்திடக் கடி ஆனிரைக்கு இடர் நீக்குவான், சென்று குன்றமெடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

மருதமரங்கள் இற்று முறிந்து விழும்படி நடை கற்றவனும், அப்போது தன்மேல் சிறிதும் தோஷம் தட்டாதபடி தான் குறை ஒன்றும் இல்லாமல், திருவாழியாகிய சக்கரத்தாழ்வாரை கையில் உடையவனும், எப்போதும் நித்யஸூரிகள் வந்து தொழுகின்ற திருவடித் தாமரைகளை உடையவனும், இந்திரன் பசிக் கோபங்கொண்டு மழை பெய்வித்த காலத்திலே ஆநிரைகளின் துன்பத்தை ஒரு நொடிப்பொழுதிலே போக்குவதற்காக கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்றவனுமான எம்பெருமானுடைய திருவேங்கடமலையை அடைந்திடு நெஞ்சமே என்கிறார்.

மருத மரங்கள் முறிந்து வீழ்ந்தது என்றது, நளகூபரன், மணிக்ரீவன் என்னும் குபேரனின் புத்திரர்கள் இருவரும் மருத மரங்களாக சாபம் பெற்று இருந்த போது, கம்சனால் ஏவப்பட்ட இரண்டு அசுரர்கள் இந்த மரங்களில் ஆவேசித்ததும், கண்ணன் உரலினோடு கட்டப்பட்டு மருத மரங்களுக்கு இடையில் சென்று அவற்றை முறிய செய்து, குபேர புத்திரர்களுக்கு சாப விமோசனம் கொடுத்த சரித்திரமாகும்.

ஆநிரை காத்தது என்றது கண்ணன் கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையு ம் காத்த சரித்திரம் ஆகும்.

நான்காம் பாடல் (1.8.4)

பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எங்கோவலன், ஏத்துவார் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பாண்டவர்களுக்காக மஹாபாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி அடியவர்களுக்காக காரியம் செய்வதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், திருவாய்ப்பாடியில் இடைச்சிகளோடு ராஸக்ரீடை என்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதவனும், இடவெந்தை என்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானுடைய, பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார்.

பாரதம் கை செய்திட்டு என்று சொன்னது, பாரத யுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய உபகாரங்களைச் செய்த கண்ணன் என்கிறார்.   குரவை கூத்து என்பது ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவங்கள் எடுத்துக் கை கோத்து ஆடும் கூத்து.

அடியவர்களுக்காக காரியம் செய்தது என்பது, தர்மனுக்கு பட்டாபிஷேகம் செய்தது, திரௌபதி குழல் முடிக்க வகை செய்தது, குரவைக் கூத்திலே தன்னையும் ஒருவனாக இணைத்தது போன்றவை.

ஐந்தாம் பாடல் (1.8.5)

வண் கையான அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய், மண் கையால் இரந்தான் மராமரம் ஏழு எய்த வலத்தினான், எண் கையான் இமயத்துள்ளான் இருஞ்சோலை மேவிய எம்பிரான், திண் கைம்மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

வேண்டியவர்களுக்கு வேண்டியதை தானம் செய்கிற அஸுர சக்ரவர்த்தியான மஹாபலியினுடைய யாக பூமியிலே வாமன திருஅவதாரத்தில் பிரமசாரியாய்ச் சென்று கை நீட்டி மூவடி மண் தா என்று இரந்தவனும், ஸுக்ரீவனுக்கு நம்பிக்கை உண்டாக்குவதற்காக ஏழு ஸால மரங்களைத் துளை படுத்தின மஹா பலமுடையவனும், அடியவர்களை காப்பாற்றுவதற்கு என்று திவ்யாயுதங்களை அணிந்தவனான, பல திருக் கைகளையுடையவனும், கச்சிமா நகரிலுள்ள அஷ்டபுஜகரம் என்கிற திவ்ய தேசத்திலே எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பவனும், இமயமலையில் திருப்பிரிதி என்னும் திருப்பதியிலே எழுந்தருளியிருப்பவனும், திருமாலிருஞ்சோலையிலே வந்து நிற்பவனும், முதலை வாயிலே அகப்பட்டுத் துடித்த ஸ்ரீ கஜேந்த்ராழ்வானுடைய துன்பத்தைத் தொலைத்தவனுமான எம்பெருமானுடைய திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார்.

இராமன் விடுத்த பாணம் ஏழு மரங்களை மட்டுமல்லாமல், ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று திரும்பி வந்து இராமனின் அம்புறாத்துணியை அடைந்தது என்பது சரித்திரம்.

ஆறாம் பாடல் (1.8.6)

எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப் பொன் வயிற்றில் பெய்து, பண்டு ஓர் ஆலிலைப் பள்ளி கொண்டவன், பால் மதிக்கு இடர்த் தீர்த்தவன், ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன், ஒள் எயிற்றொடு, திண் திறல் அரி ஆயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே

உலகங்களெல்லாம் பிரளய காலத்தில் தனது திருவயிற்றிலே வைத்து காப்பாற்றி ஒரு ஆலம் தளிரிலே பள்ளி கொண்டவனும், சந்திரனுக்கு நேர்ந்த க்ஷயரோகத்தைப் போக்கி அருளினவனும், “அழகியான் தானே அரியுருவன் தானே” என்கிறபடியே அழகிய கோரப்பற்களுடனே மஹாபலசாலியான நரசிங்கமாய்த் திருஅவதாரம் எடுத்து, தன் வலிவோடு ஒத்த வலிவுடையனான ஹிரண்யனுடைய மார்விலே நகங்களை ஊன்றி அவ்வுடலைப் பிளந்தவனுமான எம்பெருமானுடைய திருவேங்கடத்தைச் சென்று சேர் மனமே என்கிறார்.

இங்கு எட்டு திசைகள் என்று சொன்னது, அந்த அந்த இடங்களில் உள்ள எல்லா பொருள்களையும் சொன்னதாக கொள்ள வேண்டும்.

ஏழாம் பாடல் (1.8.7)

பாரும் நீர் எரி காற்றினொடு, ஆகாசமும் இவையாயினான், பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகுமிடம், காரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச் சோரு மாமுகில் தோய்தர, சேரும் வார்ப் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும் ஆயிரம் நாமங்களால் வணங்கப்படுபவனும், பிறத்தல் இல்லாதவனும் கருமங்களுக்கு வசப்படாதவனுமானமான எம்பெருமான், தன்னுடைய பெருமை எல்லாம் தோற்ற எழுந்தருளி இருக்குமிடம் திருவேங்கடம்; அது ஆகாயத்தில் நின்றும் மழை பெய்யவும் பனி பெய்யவும் பெற்றது; மேகங்கள் வந்து தங்கும் விதமாக, மேக மண்டலம் வரையில் உயர்ந்த, சோலைகளாலே சூழப்பட்டது. அதனைச் சென்று சேர் நெஞ்சே என்கிறார்.

எட்டாம் பாடல் (1.8.8)

அம்பரம் அனல் கால் நிலம் சலமாகி நின்ற அமரர்க்கோன், வம்புலாம் மலர் மேல் மலி மட மங்கை தன் கொழுநன் அவன், கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் நீள் இதணம் தொறும், செம்புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே.

பூமி, நீர், தீ, காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத ஸ்வரூபியானவனும், நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும், அலர்மேல் மங்கைக்குத் துணைவனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமலையைச் சென்று சேர்மனமே என்கிறார்.  

குறத்திகள் மலைகளிலே வாழ்பவர்கள்; விலங்குகளும் பறவைகளும் மேயாதபடி நிலங்களை உயரமான பரண்களை அமைத்துக்கொண்டு அவற்றிலே இருந்து கொண்டு பாதுகாத்தல் அவர்களுது தொழிலாகும். அதனை புனங்காத்தல் என்பர். அப்படிப்பட்ட தேசம் திருவேங்கடம் என்கிறார்.

ஒன்பதாம் பாடல் (1.8.9)

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று, பின்னரும், பேசுவார்த் தமை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம், வாச மாமலர் நாறுவார் பொழில் சூழ் தரும் உலகுக்கெல்லாம், தேசமாய்த் திகழும் மலை திருவேங்கடமடைநெஞ்சமே.

மேலே உள்ள பாசுரங்களில் ஆழ்வார் தன்னுடைய நெஞ்சத்திடம் சொல்வதாக அமைந்தன. இந்த பாசுரத்தில் முதல் இரண்டு அடிகளில், பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும் என்று கொண்டு, மற்றவரை முன்னிலை கொண்டு சொன்னதால், இது ஆழ்வார் உபதேசம் செய்வதாகவும் கடைசி இரண்டு வரிகள் வழக்கம் போல் தன்னுடைய மனதிற்கு சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

திருநாம மெட்டெழுத்தும் சொல்லிநின்று, பின்னரும் பேசுவார் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம் பேசுமின்” என்று எடுத்துக்கொண்டு, திருவஷ்டாக்ஷரத்தை ஒரு முறை சொல்லிவிட்டது என்று திருப்தி பெற்று ஓய்ந்து விடாமல் மேன்மேலும் அத்திருமந்திரத்தையே பேசிக் கொண்டிருப்பவர்களை உஜ்ஜீவிக்கச் செய்து, அவர்களுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தைப் போக்கித் திருநாட்டிலே நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யம் அளிக்கும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் இடத்தை, நீங்கள் எல்லோரும் சொல்லுங்கள்; திருவிருத்தம் 6.10 பாடலில் நம்மாழ்வார் கூறியபடி, ”திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” ‘திருவேங்கடம் திருவேங்கடம் ‘ என்று சொல்லுங்கள் என்கிறார். பேசுமின் என்ற வார்த்தையை திருநாமம் எட்டெழுத்தும் பேசுமின் என்றும், பிரானிடம் பேசுமின்” என்று இரண்டு இடங்களிலும் கொண்டு அர்த்தம் கொள்வதும் ரசிக்கத்தக்கது.

பேசும் இன் என்று பிரித்து திருநாமம் இனியதாக உள்ளது, என்று சொன்னாலும் தகும். பரமபோக்யமான(இனிமையான), திருவஷ்டாக்ஷரத்தைச் சொல்லி, பின்னரும் பேசுபவர்களை உஜ்ஜீவிப்பிக்கவல்ல எம்பெருமானுக்கு இருப்பிடமானதும், மணம்மிக்க சிறந்த புஷ்பங்கள் உடைய பரந்த சோலைகளால் சூழப்பட்டதும், உலகுக்கெல்லாம் திலகமாக விளங்குவதுமான திருவேங்கட மலையைச் சென்று சேர்மனமே என்று அர்த்தம் கொள்ளலாம்.  

பெரியவாச்சான் உரையில், பெற்ற தாயின் பெயரை சொல்வதற்கு எந்த ஒரு அதிகாரமும் தேவை இல்லையோ அதே போல் இடர் வந்த காலத்தில் எம்பெருமானின் எட்டுஎழுத்து திருமந்திரத்தை சொல்வது என்று குறிப்பிட்டு உள்ளார். இது வாத பிரதிவாதங்களுக்கு உட்பட்டு இருந்தாலும் நோக்கத்தக்கவையே என்பதற்காக குறிப்பிட்டுள்ளோம்.

பத்தாம் பாடல் (1.8.10)

செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடத்து உறை செல்வனை, மங்கையர்த் தலைவன் கலிகன்றி வண்டமிழ்ச் செஞ்சொல் மாலைகள், சங்கையின்றித் தரித்துரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே, வங்க மா கடல் வையம் காவலராகி வானுலகாள்வரே

இத்திருமொழி (பதிகம்) கற்றார்க்குப் பலன் என்ன என்பதை ஆழ்வார் சொல்லும் பலஸ்ருதி பாசுரம். இளமை பருவத்திற்குத் தகுதியாகச் சிவந்த நிறத்தையுடைய மீன்களானவை, ஒன்றோடொன்று களித்து விளையாடப் பெற்ற சுனைகளையுடைய திருவேங்கட மலையிலே நித்யவாஸம் செய்து அருள்கின்ற எம்பெருமானைக் குறித்துத் திருமங்கைமன்னன் அழகிய தமிழிலே சிறந்த வார்த்தைகளால் அருளிச் செய்த இச்சொல் மாலையைத் தரித்துச் சொல்ல வல்லவர்கள் இந்த உலகத்தில் உள்ள வரைக்கும் ராஜாதி ராஜர்களாய் விளங்கி, பின்னர் நித்திய விபூதிக்கும் நிர்வாஹகராகப் பெறுவர்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

 சங்கையின்றித் தரித்துரைக்கவல்லார்கள் என்று சொன்னது, இந்த தமிழ் பாசுரத்திற்கு இந்த வல்லமை உண்டோ என்று சந்தேகம் கொள்ளாமல் முழு விசுவாசத்துடன் ஓத வல்லவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

மீண்டும் அடுத்த பகுதியில் ஆழ்வாரின் அடுத்த பதிகத்தை பற்றி சொல்லும் போது சந்திக்கலாம், நன்றி

 

RSS
Follow by Email