082 திருச்செங்குன்றூர்

ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று : அவை

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் ரயில் நிலையம் உள்ளது. பேருந்துகள் உண்டு ; தங்கும் வசதியும் உள்ளது .

இந்த திவ்ய தேசம் திருஆரன்விளைக்கு கிழக்கே சுமார் 9 கீமீ தொலைவிலும், திருப்புலியூர்க்கு மேற்கே 7 கீமீ தொலைவிலும், திருவண்வண்டூருக்கு வடமேற்கே 8 கீ மீ தொலைவிலும், திருவல்லவாழுக்கு வடக்கே 16 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனை திருச்சிற்றாறு மகா விஷ்ணு கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

புனித நதியான பம்பை ஆற்றின் துணை நதியான திருச்சிற்றாறு எனும் நதியின் கரையில் அமைந்துள்ள, மிகவும் பழமை வாய்ந்த திருத்தலம். திருமால், ஸ்ரீ இமை யவரப்பன் எனும் திருநாமத்துடன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். தாயார் செங்கமலவல்லி நாச்சியார்.

வைகுண்ட ஏகாதசி மற்றும் திருவோணத் திருவிழா இத்திருத்தலத்தில் முக்கிய விழாக்களாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் ஒரு பாடலில் குறிப்பிட்டு உள்ளார்.

இது கேரளாவின் திருச்செங்கனூர் பகுதியில் உள்ள ஐந்து புராதன ஆலயங்களில் ஒன்றாகும், இது மகாபாரதத்தின் புராணக்கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இங்கு ஐந்து பாண்டவர்கள் தலா ஒரு கோவிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது; திருச்சிற்றாறு    – தர்ம புத்திரராலும், திருஆரமுளா அர்ஜு னனாலும், திருப்புலியூர் பீமனாலும், திருவண் வண்டூர் நகுலனாலும், திருக்கடித்தானம் சகாதேவனாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பார்கள்.

மகாபாரதத்தில் தர்மர் துரோணரை போரில் வெல்வதற்கு ‘அஸ்வத்தாமன் மரணம்’ என்பதை உரக்கச் சொல்லி, யானை என்பதை மெல்ல சொல்லியது அவரின் மனதை வருத்தியது; அதற்காக தர்மர் இந்த தலத்திற்கு வந்து இந்த கோவிலை செப்பனிட்டு, திருச்சிற்றாரில் ஸ்நானமும் மற்றும் பூஜைகளும் செய்து மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. இதனை தர்ம புத்திரர் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்வார்கள். அதனால் இத்திருத்தலம் ‘தருமர் கோவில்’, ‘தரும ஷேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

தர்மர் இங்கு வருவதற்கு முன்பே இந்த திருத்தலம் இருந்ததாகவும் தேவர்கள் இந்த எம்பெருமானை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. “இமையவர்” என்ற பெயர் தேவர்களைக் குறிக்கிறது, அவர்கள் இங்கு பலத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. துர்வாச முனிவரின் சாபங்களிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு தவம் செய்ததாக நம்பப்படுகிறது.

நம்மாழ்வார் பதினொரு பாடல்கள் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார். இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.

சென்ற பதிகத்தில், சர்வேஸ்வரன் ஸம்ஸாரிகளுடைய விருப்பத்தை மனதில் கொண்டு இங்கு வந்து அவதரித்ததும், அவர்கள் தங்களுக்கு விரும்பியவற்றை மட்டும் அடைவதற்கு இவனை அணுகினார்களே தவிர, இவனிடத்தில் ஒரு பரிவும் இல்லை என்பதையும் அறிந்து அஞ்சினான். அந்த அச்சம் தீரும்படி தம்மிடம் பரிவு காட்டுவது மட்டும் இல்லாமல் தாம் மிடுக்குடன் இருந்தாலும் தன்னை சமாதானம் செய்து பரிவு காட்டுவதை பார்த்தோம்.

இந்த பதிகத்தில் காதல் மையல் ஏறி கலங்கி, முக்தரும் நித்தியரும் இங்கு இல்லை என்றும் தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விடாத சனகர் முதலியவர் இங்கு இல்லை என்றும் பாற்கடலை கடைந்ததும் தெய்வப் பிறவியில் தான் என்றும் கலங்கி இருந்த போது, நம்மாழ்வார் எம்பெருமானின் சூர வீர முதலான குணங்களையும் படைத்தல் போன்ற ஆச்சர்யங்களையும், எதிரிகளை வேரோடு அழித்த ஆற்றலையும் காட்டிக் கொடுத்து, மேம்பட்ட ஞானத்தையும் சக்தியையும் உடையவராய் அவன் மேல் பரிவையும் உடைய மூவாயிரம் பிராமணர்கள் உளர் என்றும் சொல்லி அவன் வடிவழகில் நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்.

ஒழுகுகின்ற மதமாகின்ற அருவிகளை உடைய யானையாகிய பெரிய மலையின் தந்தங்களாகிய இரண்டு சிகரங்களை முறித்து அதனைக் கீழே தள்ளி, அந்த யானையைச் செலுத்தி வந்த வலிய பாகனுடைய உயிரையும் கவர்ந்து, சபையில் இருந்த மல்லர்களையும் கொன்று, சுற்றிலும் உள்ள மஞ்சத்தின் மேல் இருந்த, போரை செலுத்துகின்ற அரசர்கள் புறமுதுகு காட்டி ஓட, உயர்ந்த மாடத்தின் மேலே இருந்த கஞ்சனைக் கொன்ற சீரைக் கொண்ட பாலனான ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி இருக்கின்ற திருச்செங்குன்றூரில் இருக்கின்ற திருச்சிற்றாறு ஆனது நாங்கள் சென்று அடைவதற்கு புகல்இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

நாங்கள் சென்று சார்வதற்குப் புகலிடமானவன், எங்களுக்கு அமுதமானவன், நித்ய சூரிகளுக்குத் தலைவன், எனக்குத் தலைவன், நிறைந்து இருக்கின்ற மூன்று உலகங்களையும் படைத்துக் காத்து, அழிக்கின்ற, பொருந்திய பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று வகையான உருவத்தை உடையவன், எனக்கு அந்தராத்மாவாக இருப்பவன், சிறந்த கயல் மீன்கள் துள்ளுகின்ற தேன் நிறைந்த மருத நிலங்கள் பக்கங்களில் சூழ்ந்த திருச்செங்குன்றூர் திருச் சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கின்ற காரணப் பொருள் ஆனவன் அல்லாமல் எனக்குப் பொருந்திய துணை வேறு யாவர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

எனக்கு பொருந்திய பெருமான், நித்தியசூரிகளுக்குப் பெருமான், பெரிய பூமியை இடந்து கொண்டு வந்த பெருமான், முன்னைய கொடிய தீ வினைகள் முழுவதும் ஒரு நொடிப் பொழிதில் அழியும்படி என்னை ஆள்கின்ற எம்பெருமான், தெற்குத் திசைக்கு அலங்காரமாய் விளங்குகின்ற திருசெங்குன்றூரில் திருச்சிற்றாங்கரையின் மேற்குப் பக்கத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானுடைய திருவடியே அல்லாமல் எனக்கு புகலிடம் நினைவிலும் கூட வேறு ஒன்றும் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இதன் விளக்கத்தை இங்கே காணலாம்.

பெரிய மூன்று உலகங்களும் நிறையும்படி பெரிய உருவமாகி நிமிர்ந்த அழகிய வாமனன் ஆன எம்மான், வழிக்கின்ற கடலைக் கடைந்த அழகிய மாணிக்கம் போன்ற வடிவை உடைய என் அம்மான், செறிந்த குலைகளை உடைய வாழைகளும் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அலங்காரமாய் சூழ்ந்து இருக்கின்ற திருசெங்குன்றூர் திருச்சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் வசிக்கின்றவர்கள் உள்ளபடி அறியும்படி உண்மைப் பெருமையோடு நின்ற எம்பெருமான் ஆகிய இறைவனுடைய இரண்டு திருவடிகள் அல்லாமல் மற்று ஒரு பாதுகாவல் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அடி இணை அல்லது பிறிது ஒரு அரண் இல்லை என்கிறார். அர்ச்சாவதாரம் பூரணம் ஆகையாலே, ‘மெய்ம்மையே நின்ற என்கிறார்.

மஹாபலியை வென்றும் கடலைக் கடைந்தும் அடியார்களுடைய ஆபத்தைப் போக்கித் திருசெங்குன்றூரில் நின்று அருளினவனின் திருவடிகள் அல்லது வேறு எனக்கு அரண் இல்லை என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

மற்றைய ஒப்பற்ற திவ்ய தேசங்களில் எழுந்து அருளி இருக்கின்றவனும் அவனைக் காட்டிலும் வேறுபட்டவன் அல்லன் என்கிற அதுவே உண்மைப் பொருள் ஆனாலும் திருச்சிற்றாற்று எம்பெருமானை ஒழிய என் உயிரானது வேறு ஒருவனைப் பொருந்தி விரும்ப மாட்டாது; ஆகையாலே அவன் எழுந்து அருளி இருக்கின்ற சிறந்த அந்தணர்களால் செய்யப்படுகின்ற யாகங்களிலே அவிர்பாகத்தின் நறுமணம் மிக்க புகையானது ஆகாயத்தின் பிரகாசத்தை மறைக்கின்ற சிறந்த நீண்ட மாடங்களை உடைய திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு சிறந்த புகலிடமாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

எனக்குச் சிறந்த புகலிடமானவனை, எனக்கு அரிய உயிராய் இருப்பவனை, நித்யசூரிகளுக்கு தந்தையாயும் தாயாயும் இருக்கின்றவனை, தனக்கும் தன்னுடைய தன்மையை அறிதற்கு அரியவனை, விரிந்த திருபாற்கடலில் அறிதுயில் செய்கின்றவனை, ஞான வளப்பத்தை உடைய சிவபிரானையும் பிரமனையும் தனையும் ஒப்பவர்களாகிய மனத்திலே கொள்ளப்பட்ட கல்யாண குணங்களை உடையவர்களான மூவாயிரம் அந்தணர்கள் வாழ்கின்ற செறிவைக் கொண்டு உள்ள வலிய மாடங்கள் சூழ்ந்த திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில் கண்டேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அம்மானை திருச்சிற்றாற்றில் கண்டேன் என்றும் ஒப்பாராகிய மூவாயிரவர் வாழ் திருச்செங்குன்றூர் என்றும் கூறுகிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அந்த சுவாமி, எப்போதும் அழகிய சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும் சிவந்த திருவாயும் சிவந்த திருவடியும் சிவந்த திருக்கைகளும் அழகிய சிவந்த திரு உந்தித் தாமரையும் சிவந்த பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கின்ற திருமார்பும் சிவந்த பீதாம்பரமும் அழகிய சிவந்த திருமுடியும் திரு ஆரமும் திவ்ய ஆயுதங்களும் விளங்கும்படியாக என் மனதில் எழுந்து அருளி இருக்கிறான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருவடி என் சிந்தை உளான் என்கிறார். திருச்செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன், தன் அழகோடே மறக்க முடியாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

என் மனதிற்குள்ளே விளங்க இருந்தவனை, நான்கு வேதங்களிலும் வல்லவர்களும் பூ தேவர்களுமாகிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திசை நோக்கிக் கை கூப்பி துதிக்கும்படியாகத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை ஒளியைக் கொண்ட தேவர்களுக்கு புகலிடமாய் இருப்பவனை வலிய கையை உடையவரான அசுரர்கட்கு கொடிய யமனானவனை பொருந்திய மூன்று உலகங்களையும் படைத்து அழித்து காப்பாற்றுகின்றவனை புகழுமாற்றை அறியேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. காப்பவனை புகழுமாறு அறியேன். இப்படி நிறைவாக அனுபவித்த சீறி கொள் சிற்றாயனுடைய விலக்ஷணமான குணங்களிலும் அழகிலும் அழுந்தி அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் என்கிறார். இந்த பாடலின் விளக்கங்களை இங்கே காணலாம்.

கூர்மை பொருந்திய கல்வியோடு அனுஷ்டானமும் நாடோறும் செய்யப் படுகின்ற திருவாராதனமும் ஆகிய இவைகள் இயல்பாகவே அமைந்தவர்களான கொடையால் அமைந்த பெரிய புகழோடு கூடியவர்களும் ‘இன்னார்’ என்று பிரசித்தமானவர்களும் ஈஸ்வரனாகிய தன்னை ஒத்த ஞானம் சக்தி முதலியவற்றை உடையவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசிக்கின்ற திருச்செங்குன்னூரில் திருச்சிற்றாரில் எழுந்து அருளி இருக்கின்ற சர்வேஸ்வரன் படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய முத்தொழில்களை செய்கிறவனும் ஆவான்; பிரமனாகிய மேலானவனும் சிவபிரானும் ஆவான். பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே காப்பாற்றுகின்றவனாய் புகுந்து ஒரு பொருளையும் விட்டு நீங்காமல் எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் இருப்பவனும் ஆவான். எல்லாப் பொருள்களும் தன் அதீனமாய் இருக்கப் பெற்றவனும் ஆவான்; நான் கூறுவது புனைந்துரை அல்ல என்பது இந்த பாடலின் பொழிப்புரை. பிரமன் முதலான எல்லாப் பொருள்களினுடைய படைத்தல் முதலானவைகளைச் செய்கின்றவன் திருச்செங்குன்னூரில் நின்று அருளினவன் என்னும் இடம்; புனைந்துரை அல்ல, மெய் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

பொருந்திய தலைவனை, அவர்கள் அவர்களாகி அவர்களுக்கு விருப்பமானவற்றை கொடுக்கின்ற அம்மானை, பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை, பொருந்திய புகழை உடைய மூவாயிரம் பிராமணர்களுடைய தேசமாய், பூ தேவர்களான வைஷ்ணவர்களுடைய வாழ் ச்சிக்கு உரியதாய் இருக்கும் திருச்செங்குன்றூரில் எழுந்து அருளி இருக்கின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனை சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் அந்தர்யாமியாய் உள்ள எம்பெருமானைப் பொருந்த பெற்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அமர்ந்த நாதனை அவர் அவராகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை *முக்கண் அம்மானை நான்முகனை ஆற்றங்கரையானை அமர்ந்த மாயோனை அமர்ந்தேன் என முடிக்க. சர்வேஸ்வரனாய் வைத்து எல்லாப் பொருள்கட்கும் பற்றப்படுமவன் ஆகைக்காக திருச்செங்குன்றூரில் நின்று அருளினவனை அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading