கஜேந்திர மோக்ஷமும் ஆழ்வார்களும்

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் மிகவும் முக்கிய சரணாகதிகளில், கஜேந்திரன் சரணாகதி, விபீஷ்ண சரணாகதி, திரௌபதி சரணாகதி போன்றவை அதிகம் பேசப்படும் சரணாகதிகள். பாகவத புராணம் இந்த கஜேந்திர மோக்ஷ வரலாற்றை கேட்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறது. வேதாந்த தேசிகர் என்னும் ஆச்சாரியர், “வாரணம் அழைக்க வந்த காரணன்” என்ற சிறப்பு அடைமொழியுடன் எம்பெருமானை மும்மணிக்கோவை என்ற நூலில் அழைக்கிறார்.

கஜேந்திர மோக்ஷம் பற்றி சில ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை இங்கே கொடுத்துள்ளேன். திவ்யப்ரபந்த உரையாசிரியர்கள், சில பாடல்களுக்கான விளக்கங்களில், கஜேந்திர மோக்ஷத்தை எடுத்து காட்டியும் உள்ளார்கள். அத்தகைய பாசுரங்களையோ, இன்னும் சில நேரடியான பாசுரங்களை நான் தவற விட்டு இருக்கலாம், அது அடியேனுடைய பிழையாகும், மன்னிக்க வேண்டுகிறேன். அவற்றைப்பற்றி தெரிவித்தால், நன்றி, இங்கே சேர்த்து விடுகிறேன். முதலில் கஜேந்திர மோக்ஷம் பற்றி சில குறிப்புகள்;

கஜேந்திர மோக்ஷம்

இந்திரத்யும்னன் என்னும் மன்னன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான். விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு அவன் பூஜையில் இருக்கும்போது இவ்வுலகம் மறந்த நிலையில் இருப்பான்.  இவ்விதம் பக்தியில் ஈடுபட்டிருந்த ஒரு நாள் துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார். இந்திரத்யும்னன் தனது பக்திக் குடிலை விட்டு வெளிவராததால், இறுதியில் அவன் மீது மிகவும் சினங்கொண்ட முனிவர், யானையைப் போலச் செருக்குடன் இருந்ததனால், அவனுக்கு விலங்குகளிலேயே மதம் பிடித்த யானையாக பிறக்க சாபமிட்டார். நிலையுணர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து முனிவரிடம் சாபவிமோசனம் வேண்டி நின்றான். சினந்தணிந்த முனிவர் நீ யானையாக இருந்தாலும் திருமால் மீது பக்திகொண்ட கஜேந்திரனாகத் திகழ்வாய். ஒரு முதலை உன் காலை பிடிக்க நீ மஹாவிஷ்ணுவை கூவி அழைக்க உனக்கு மோட்சம் கிடைக்கும் என்றார்.

கூஹு என்னும் அரக்கன் ஒருவன் ஒரு நாள், அகத்தியர் தண்ணீரில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரின் காலை பிடித்து இழுத்தான். சினமுற்ற அகத்தியர் அவனை ஒரு முதலையாக பிறக்க சாபம் இட்டார். அவனும் விமோசனம் வேண்ட நீ கஜேந்திரன் என்னும் யானையின் காலை பிடித்து இழுக்கும் போது திருமாலின் சக்ராயுதம் பட்டு சாபவிமோசனம் அடைவதாக கூறினார்.

பின்னொருநாள், மேலே சொன்ன சாப விமோச்சனைகளை போல், கஜேந்திரன் ‘ஆதிமூலமே!’ என்று கூவியழைக்க, உடனே திருமால் கருடன் மீதேறி அங்கு எழுந்தருளித் தனது  சக்கராயுதத்தைப் பிரயோகித்து முதலையை கொன்று யானையை அதன் வாயினின்று விடுவித்து இறுதியில் அதற்கு முத்தியை அருளினான். இதனை கபிஸ்தலம் என்ற திவ்யதேச ஸ்தலபுராணத்திலும் அறியலாம்.

இனி, ஆழ்வார் பாடல்களும், அவற்றின் சிறு விளக்கங்களுடன் :

பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
1பதக முதலைவாய்ப் பட்ட களிறு, கதறிக் கை கூப்பி என் கண்ணா, கண்ணா என்ன உதவப் புள் ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த, அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் 2.1.9:முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனின் குரல் கேட்டு துயர் தீர்க்க கருட வாகனனாக வந்து வருத்தத்தைப் போக்கியவன் அப்பூச்சி காட்டுகின்றான்.
2ஒரு ஆரணம் பணி கொண்டவன் பொய்கையில், கஞ்சன் தன் ஒரு ஆரணம், உயிருண்டவன் சென்று உறையும் மலை, கரு ஆரணம் தன்பிடி துறந்தோட கடல் வண்ணன், திருவாணை கூறத் திரியும் தண் மாலிருஞ் சோலையே 4.2.5கஜேந்திரன் என்ற யானையின் கைங்கர்யத்தை ஏற்றுக்கொண்டு, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, எம்பெருமான் கண்ணன் நித்தியவாசம் செய்கின்ற திருமாலிரும்சோலையில், கோபித்துக்கொண்டு சென்ற பெண் யானையை ‘கடல்வண்ணர் மேல் ஆணை, செல்லாதே’, என்ற ஆண் யானையின் சொல் கேட்டு நின்ற திருத்தலம் ஆகும். ஒரு யானையைக் காத்து, ஒரு யானையைக்கொன்றான்; ஒரு அத்தானைக் காத்து ஒரு அத்தானைக் கொன்றான்;- (அர்ஜுநனும்  சிசுபாலனும்.); ஒரு ராக்ஷஸனைக் காத்து, ஒரு ராக்ஷஸனைக் கொன்றான்; (விபீஷணனும் ராவணனும்.); ஒரு குரங்கைக் காத்து, ஒரு குரங்கைக் கொன்றான்;  (ஸுக்ரீவனும் வாலியும்); ஒரு பெண்ணைக் காத்து, ஒரு பெண்ணைக் கொன்றான்; (அஹல்யையும் தாடகையும்.); ஒரு அம்மானைக் காத்து, ஒரு அம்மானைக் கொன்றான்; (யசோதைக்கு உடன் பிறந்தவரும் நப்பின்னை தந்தையுமாகிய கும்பரும், கம்ஸனும்) என்று ஒன்றை காத்து ஒன்றை கொன்ற எம்பெருமானின் பெருமையை சொல்லி மகிழலாம்.
3துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்துத் துணையாவர் என்றே, ஒப்பிலேன் ஆகிலும், நின்னை அடைந்தேன், ஆனைக்கு நீஅருள் செய்தமையால், எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளி யானே. 4.10.1திருவரங்கம் கோவிலில் திருஅனந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு உள்ளவனே, அடியார்களை காப்பதில் மிகவும் சாமர்த்தியம் உள்ள தங்களை அடைவதற்கு, சர்வ இந்திரியங்களும் அடங்கிய பின்னும் தேவரீர் துணை இருப்பீர் என்ற எண்ணம் தானே காரணம். அப்படி எம்பெருமான் திருஉள்ளத்தில் திட்டமிட்டு இருக்கும் அடியார்களுக்கு தான் நிகரில்லை என்றாலும், கஜேந்திரன் என்ற யானையை காத்தவன் என்ற காரணத்தினால், அதைபோல் அவனுடைய கருணையினால், தன்னையும் காத்து அருள்வார் என்று ஆழ்வார் அவனை சரண் புகுந்ததாக சொல்கிறார். தன்னுடைய முதுமையில், துயர் படும் காலத்தில், இந்திரியங்கள் ஒன்றுக்கும் பயன் பெறாமல் போகும் போது, எம்பெருமானை ஒரு நொடிகூட, நினைக்கமுடியாமல் போகும் காலத்திற்காக (அப்போதைக்கு), இப்போதே, இந்திரியங்கள் நன்றாக உள்ள காலத்தில், சொல்லி வைத்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி ஆழ்வார் சொல்லியதால் இதை எம்பெருமான் நினைத்து வைத்து இருந்து ஆழ்வாரை காக்க வேண்டுமோ எனில், ஆழ்வார், அதற்காகத்தான் ஸ்ரீவைகுண்டத்தையும் திருப்பாற்கடலையும் விட்டுக் ஆழ்வாரின் மனக்கோவிலில், வந்து பள்ளி கொண்டு அருளினது என்று பின்னால் சொல்ல போவதற்கு வகையாய் அமைந்துள்ளது இப்பாசுரம்
ஆண்டாள்
நாச்சியார் திருமொழி
4குண்டு நீருறை கோளரீ மத யானை கோள்விடுத்தாய் உன்னைக் கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல், வண்டல் நுண் மணல் தெள்ளியாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம், தெண்டிரைக்கடற் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே 1.2.3மிக்க ஆழத்தை உடைய கடலிலே சாய்ந்து அருளுபவனும், சிங்கம் போன்று மிடுக்கை உடையவனும், மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு, முதலையால் நேர்ந்த துன்பத்தைத் தொலைத்து அருளினவனுமான கண்ணபிரானே! அடியார்களின் துயரத்தை தீர்க்க வல்லவனான நீ, உன்னை பார்த்து ஆசைப்படுகின்ற எங்களை கடைக்கண்ணால் பார்த்து துன்பப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறார்.
திருமழிசைப்பிரான்
திருச்சந்தவிருத்தம்
5ஆனை காத்து ஓர் ஆனை கொன்றது அன்றி, ஆயர் பிள்ளையாய், ஆனை மேய்த்தி, ஆ நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால், ஆனைகாத்து மையரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை யன்று சென்று அடர்த்த மாயமென்ன மாயமே. 40கஜேந்திர ஆழ்வான் என்ற யானையை காத்தருளி, ஆயர் குல பிள்ளையாக, குவலயாபீடம் என்ற யானையை கொன்று, பசுக்களை மேய்த்து, பசுவின் நெய்யை அமுது செய்து, கோவர்தனம் என்ற மலையினை கொண்டு பசுக்களை காப்பாற்றி, நப்பின்னை பிராட்டிக்காக, அவள் எதிரே நின்று, ஏழு எருதுகளை முடித்தது, என்ன ஆச்சர்யம், என்ன ஆச்சர்யம்.
நான்முகன் திருவந்தாதி
6மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ, மதித்தாய் மதிகோள் விடுத்தாய், – மதித்தாய் மடுகிடந்த மாமுதலை கோள் விடுப்பான், ஆழிவிடற் கிரண்டும் போயிரண்டின் வீடு.உன்னைச் சிந்தித்து அடிபணியாதவர்கள், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில், வீடு என்ற பரமபதத்தை பெறாமல், மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து துன்புறும்படி மதித்தாய் என்பது ஒரு கருத்து. நான்கு வேதங்களைக் கொண்டு, உன்னை சிந்திக்காதவர்கள் ஒழியும்படி மதித்தாய் என்பது அதே வரிக்கு இன்னொரு கருத்து. கஜேந்திரன் என்ற யானைக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யமும், முதலைக்கு சாபமோக்ஷமும் கொடுத்து அருளினாய் என்றும் ஆழ்வார் எம்பெருமானை நோக்கி பாடும் பாசுரம் இது.
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
திருமாலை
7உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகி, செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே. 28தேவர்களாலும் அறிய முடியாத தேஜோ மயமான பரமபதத்தை உடைய எம்பெருமான், கஜேந்திராழ்வானுக்காக, சிவந்த மாமிசத்தை அப்படியே உண்டு வாழும் முதலையின் மேலே கோபம் கொண்டு, ஆற்றங்கரைக்கே வந்து காத்து அருளினார். அப்படி அடியார்களின் மேல் ஒருதலை பட்சமாக அன்பு காட்டுகிற எம்பெருமான் இருக்கிறது போது, நாம் ஏன் நம்மைப்பற்றி கவலைப்பட வேண்டும். அவனுக்கு தொண்டு செய்து காலத்தை கழிக்காமல் ஏன்தான் தோன்றினேனோ என்று ஆழ்வார் கவலைப்படும் பாடல்.
8பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான், எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை யீந்த கண்ணறா உன்னை யென்னோ களை கணாக் கருது மாறே. 44கங்கா நதியை சடையில் உடைய சிவனும், நான்முக கடவுளும், உன்னை காண்பதற்காக, எண்ணமுடியாத நெடுங்காலமாக காணமுடியாமல் தவம் புரிந்தவர்களாய் வெட்கமடைந்து தலை கவிழ்ந்து இருக்க, அந்த காலத்தில், முதலை வாயில் அகப்பட்ட கஜேந்திரனுக்காக எழுந்தருளி நித்யஸூரிகளும் ஆச்சர்யிக்கும்படி பரம க்ருபையைச் செய்தருளி, சிலருக்காக சிலரை கொன்ற எம்பெருமானை சர்வ ரக்ஷகன் என்று தஞ்சமாக நினைக்கலாகுமோ என்று சில மதிகேடர் கூறுவர் என்று ஆழ்வார் கூறுகிறார்.
திருப்பள்ளியெழுச்சி
9கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக் கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ, எழுந்தன மலரணைப் பள்ளி கொள் அன்னம், ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி, விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தி னுக்கு அனுங்கி ,அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே 2கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றானது, முல்லை கொடிகளில் மலர்ந்து கொண்டு இருக்கும் முல்லை மலர்களை தழுவிக் கொண்டு அதன் வாசத்தினால் பெருமாளுக்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்கின்றது. அன்று கஜேந்திர ஆழ்வான் என்னும் யானையை, கொடிய ஆபத்தில் இருந்து வேகமாக வந்து காப்பாற்றியது போல், அடியோங்களையும் காக்க விரைவில் கண் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.
திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி
10மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்றிழிந்த, கானமர் வேழம் கையெடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட் டானை, தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. 2.3.9மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும் படியாக முதலையானது அவ் யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின் மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய  திருவல்லிக்கேணி கண்டேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
11கொழுந்து அலரும் மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டதற்கு எள்கி, அழுந்தி யமா களிற்றினுக்கு அன்று ஆழி யேந்தி அந்தரமே வரத்தோன்றி யருள் செய்தானை, எழுந்த மலர்க் கருநீலமிருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன்காட்ட, செழுந்தடநீர்க் கமலம் தீ விகை போல் காட்டும் திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே. 2.10.3சோலைகளின் கூட்டங்கள் சூழ்ந்த தடாகத்திலே  முதலை வாள் போன்ற பற்களினால் காலைக் கவ்வினதற்கு வருந்தின கஜேந்திராழ்வானுக்காக ஆழி கொண்டு வந்து தோன்றி, அந்த யானைக்கு கருணை பொழிந்த பெருமானை செழித்த நீரையுடைய தடாகங்களில் தாமரைகள் விளங்கும் திருக்கோவலூரதனுள், நான் கண்டேன் என்கிறார்.
12முதலைத் தனிமா முரண்தீர அன்று முதுநீர்த் தடத்துச் செங்கண் வேழம் உய்ய, விதலைத் தலைச் சென்றதற்கே உதவி வினை தீர்த்த அம்மானிடம், விண் அண்ணவும் பதலைக் கபோதம் ஓளிமாட நெற்றிப் பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம், மதலைத் தலை மென்  பெடை கூடு நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கென் மனனே. 3.8.2முன்பொருகாலத்தில் பொய்கைக் கரையிலே முதலையினால் ஏற்பட்ட மிகப் பெரிய துன்பம் தீருமாறும், கஜேந்திராழ்வான் உஜ்ஜீவிக்கும் படியாகவும், தாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!என்று அஞ்சி நடுங்கியிருந்த காலத்தில், எழுந்தருளி, அந்த யானைக்கு உதவி செய்த எம்பெருமானை, விண்ணுலகு வரை உயர்ந்து இருப்பதும், கலசங்களையும் உடைய திருநாங்கூர் திவ்யதேசத்தில் உள்ள மணிமாடக்கோயில் சென்று, என் மனனே, வணங்கு, என்று ஆழ்வார் தன்னுடைய மனதுக்கு கூறுகிறார்.
13தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்து அருளி, முன்னு காம்பு உடைக் குன்ற மேந்திக் கடுமழை காத்த எந்தை, பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட, எங்கும் தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத் தானே. 4.5.1பனை போன்ற துதிக்கையை உடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கி அருள் செய்தவன், மூங்கில்களை கொண்ட கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்துப் பிடித்து, கடுமையான மழையைத் தடுத்த எம்பெருமான், திருநாங்கூரில் திருமணிக்கூடம் என்னும் திருப்பதியில் நித்ய வாசம் செய்கின்றான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
14தாவளந்து உலக முற்றும் தடமலர்ப் பொய்கை புக்கு, நாவளம் நவின்று ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய், மாவளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக், காவளம் பாடி மேய கண்ணனே களைகணீயே. 4.6.1உலகம் அனைத்தும் தேடி பெரிய பூக்களை உடைய குளத்தில் இறங்கியபோது, முதலையினால் கவ்வப்பட்டதால், நாவுக்கு அலங்காரம் போல் இருக்கும் திருநாமங்களை சொல்லி துதிக்க, கஜேந்திரனின் அச்சத்தை போக்கியவனே, மிக்க செல்வமானது அதிகமான திருக்காவளம்பாடி என்ற திவ்யதேசத்தில் நித்யவாஸம் செய்யும் கண்ணபிரானே நீயே காப்பாற்றவேண்டும் என்று ஆழ்வார் பாடுகிறார்.
15கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து, பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதனிடம், பள்ளச் செறுவில் கயலுகளப் பழனக் கழனி யதனுள்போய், புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும் புள்ளம் பூதங் குடிதானே! 5.1.2வாமனனாக அவதரித்து மஹாபலியிடம் இருந்து எல்லா உலகங்களையும் கைப்பற்றியவனும், கஜேந்திரனுடைய துயரத்தை போக்கி அருளினவனும், பரம பவித்திரனுமான எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், கழனிகளில் மீன்களானவை துள்ளி விளையாடும் போது, பறவைகள், தங்கள் குட்டிகளுக்கு தேவையான சிறு மீன்களை தேடும் புள்ளம்பூதங்குடி ஆகும்.
16ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால் உடைய தேர் ஓருவனாய் உலகில், சூழிமால் யானைத் துயர்கெடுத்து, இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து, பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் பகலவனொளி கெட, பகலே ஆழியால் அன்று அங்கு காழியை மறைத்தான் அரங்கமா நகரமர்ந்தானே. 5.7.8காலம் போன்ற எல்லாவற்றையும் நிர்வகிக்கும், ஹோமம் யாகம் இவற்றுக்கு தலைவனாய், ஒற்றை சக்கர தேர் ஓட்டும் சூரியனுக்கு அந்தராத்மாவாக இருக்கும், எம்பெருமான், கஜேந்திரனுடைய துன்பத்தை போக்கியவனும், முன்பு ஒரு காலத்தில், இலங்கை அழியும்படியாக கூறிய அம்புகளை பிரயோகித்தவனும், அர்ச்சுனனுக்கு பின்னொருநாள், பகலில் ஆழிகொண்டு சூரியனை மறைத்து உதவி செய்தவனும் அரங்கமாநகரில் அமர்ந்து உள்ளான் என்று கூறுகிறார்.
17கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம், முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப, கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளதறிந்து, உன் அடியனேனும் வந்தடியிணை யடைந்தேன் அணிபொ ழில் திரு வரங்கத்தம் மானே, 5.8.3நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையில் இருந்த தாமரைமலரை எம்பெருமானுக்காகப் பறித்த யானை ஆபத்தை அடையும்படி, மிக்க வலிமையையுடைய ஒரு முதலையானது பிடித்துக்கொள்ள, யானை தன்னை தன்னுடைய வலிமையினால் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், எம்பெருமானை சரண் அடைய, எம்பெருமான் முதலையின் உயிர்போகும் வரை கோபத்தை வரவழைத்து கொண்டது தெரிந்து, அடியேனும் வந்து உன் சரண் அடைந்தேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.
18தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம், மூவாமை நல்கி முதலை துணித்தானை, தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை, நாவாயுளானை நறையூரில் கண்டேனே. 6.8.3பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு, ஸ்ரீ கஜேந்திராழ்வான் துன்பமடையாதபடி வந்து, அருள்புரிந்து, முதலையை ஒழித்தவனை, நித்யஸூரிகளுக்கு தலைவனை, செந்தாமரைப்பூ போன்ற திருக்கண்களை உடையவனை, திருநாவாய் என்னும் திருப்பதியில் இருப்பவனை, திருநறையூரில் கண்டனே என்று பாடுகிறார்.
19குன்றால் மாரி தடுத்தவனைக் குல வேழம் அன்று, பொன்றாமை, அதனுக்கருள் செய்த போரேற்றை, அன்று ஆவின் நறு நெய் அமர்ந்துண்ண அணியழுந்தூர், நின்றானை, அடியேன் கண்டு கொண்டு நிறைந்தேனே. 7.6.4கோவர்த்தன மலையைக்கொண்டு மழையை தடுத்தவனும், நல்ல குலத்தில் பிறந்த கஜேந்திரன் என்ற யானை அன்று முதலையின் வாயில் சிக்கி முடிந்து போகாமல் தடுத்து அருள் செய்தவனும், போர் செய்ய வல்ல காளையை போன்றவனும், பசு நெய்யை நன்றாக ரசித்து உண்பவனும், அன்றே தேரழுந்தூரில் அமர்ந்து இருப்பவனை தான் கண்டு கொண்டு விட்டதாகவும், அதனால் குறை ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
20குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று, நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ என்ன நெஞ்சிடர் தீர்த்து அருளிய என் நிமலன் காண்மின், மலைத் திகழ் சந்தகில் கனக மணியும் கொண்டு வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய, அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத் தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3மலையில் இருந்து சந்தன மரங்களையும் அகிற் கட்டைகளையும் பொன்னையும் ரத்னங்களையும், திரட்டிக்கொண்டு கழனிகளில் எல்லாம் நீர் பாயும், அலை எறியும் காவிரியினால், செழிப்பும் சிறப்பும் பெற்ற தேரழுந்தூர், எம்பெருமான் உகந்து நின்ற திவ்யதேசம் ஆகும். கஜேந்திராழ்வான் ஆற்றில் இறங்கியபோது, வலிமையான முதலை பிடித்து இழுத்ததினால் அந்த முதலைக்கு அஞ்சி, சந்திரனைப்போன்று குளிர்ந்த ஒளியை உடையவனே என்று ஓலமிட்டு துதித்த யானையின் துன்பத்தை நீக்கியவன் என் குற்றங்கள் இல்லாத எம்பெருமான் ஆவான் என்று ஆழ்வார் கூறுகிறார்.
21இலையார் மலர்ப்பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு, கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய அதனுக்கு அருள் புரிந்தான், அலை நீரிலங்கைத் தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி, முன் கலை மாச்சிலையால் எய்தானூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. 8.6.7கஜேந்திரன் என்ற யானை இலைகள், பூக்கள் நிரம்பிய அழகிய குளத்தில், முதலையினால் துன்பம் அடைந்து, கையேந்தி, நிற்கையில் அருள்புரிந்து காத்தவன், கடல் சூழ்ந்த இலங்கைக்கு தலைவனான இராவணனின் தம்பியான விபீஷணனுக்கு, லங்கா அரசை கொடுத்து அருளினவன், அதற்கு முன்பு, மாயமான் வேடத்தில் வந்த மாரீசனை கூறிய அம்பினால் கொன்றவனுடைய ஊர், நாம் தொழும் திருக்கண்ணபுரம் ஆகும் என்கிறார் ஆழ்வார்.
22கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை, மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, எம்மானை எம்பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை, அடியேன் அடைந்து உய்ந்து போனேனே. 8.9.1நீண்ட துதிக்கையையுடையதும், மதம் கொள்ளும் இயல்பு உடையதுமான கஜேந்திரனுடைய துயர் போக்கி அருளின காளமேகத்தைப் போன்ற, மை நிறத்தை உடைய, மிகப்பெரிய விலைமதிப்பில்லாத நீல ரத்தினத்தைப் போன்றவனும் மரகத பச்சை போன்றவனும், எனக்கு ஸ்வாமியும், எனக்கு உபகாரம் செய்து அருள்பவனும், சர்வேஸ்வரனும், என் நெஞ்சினுள் இருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிராஜனை அடியேன் அடைந்து உய்ந்து போனேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.
23கவளமா கதத்த கரி உய்யப் பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து, துவள மேல் வந்து தோன்றிவன் முதலை துணிபடச் சுடுபடை துரந்தோன் குவளை நீள் முளரி குமுதம் ஓண் கழுநீர் கொய்ம்மலர் நெய்தல் ஓண் கழனி திவளும் மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 9.1.2கவளம் கொள்ளும், மிக மதத்தை உடைய கஜேந்திரன் என்ற யானை, ஒரு குளத்தில் இருந்த முதலையினால் கவ்வப்பட்டு கலக்கம் அடைந்து, எம்பெருமானை நினைத்து, வருந்திய போது, அது உஜ்ஜிவிக்கும் படி, மேல் வழியாக வந்து முதலையை இரு பிளவாக பிளந்து, ஜொலிக்கின்ற திரு ஆழி என்ற சக்கரத்தை உடைய எம்பெருமான், நெய்தல், தாமரை, ஆம்பல், செங்கழுநீர் என்று பலவகை பூக்கள் நிறைந்து இருக்கும் நீர்நிலைகளையும், பிரகாசிக்கின்ற திரு மாளிகைகளையும், அவைகளை சூழுந்துள்ள மதில்களையும் உடைய திருக்கண்ணங்குடியில் நின்றான்.
24 இருந்தான் என் உள்ளத்து இறைவன்,கறை சேர் பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த, செங்கண் பெருந்தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஓளி மன்னும் அன்னே. 11.3.2என் நெஞ்சினுள்ளே வாழ்ந்து இருப்பவனும், ஸர்வ ஸ்வாமியும், கஜேந்திராழ்வானுக்கு அருள் செய்தவனும், செந்தாமரைக் கண்ணனும், திருத்தோள்களை உடையனும் ஆன ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் பாடிக் கூத்தாட எனது முலைகளானவை வருத்தம் இல்லாமல் ஒளி பெறும் என்று பெண் பாவனையில் ஆழ்வார் பாடி உள்ளார்.
திருவெழுகூற்றிருக்கை
25நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனைஎம்பெருமானை ஆராதிப்பதற்காகத் தாமரைப்பூப் பறிக்கப் போன குளத்தில் முதலை வாயில் அகப்பட்ட ஸ்ரீ கஜேந்திரனுடைய கூக்குரலைக்கேட்டு எம்பெருமான் ஸ்ரீ வைகுண்டத்தினின்று கருடன் மேல் விரைந்து வந்து முதலையைக் கொன்று ஆனையைக் காத்தருளினது பிரசித்தம். நால்திசை நடுங்க என்பதனால், எம்பெருமானின் வேகத்தை கண்டவர்கள், ‘இன்று ஏதோ பிரளயம் விளையப் போகிறது‘ என்று அஞ்சி நடுங்கினர் என்பதாகும். தொங்குகின்ற வாயையும் மூவிடங்களில் மதநீர்ப் பெருக்கையும் இரண்டு காதுகளையும் உடைய அழகிய சிறகையுடைய பெரியதிருவடியான கருடன்மேல் ஏறிக்கொண்டு, ஆழமான நீரையுடைய மடுவின் கரையிலே எழுந்தருளி,  பகவத்பக்தியில் ஒப்பற்ற கஜேந்திரனுடைய துக்கத்தை போக்கி அருளினாய்.
சிறிய திருமடல்
26போரானை பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி, நீரார் மலர்க்கமலம் கொண் டோர் நெடுங்கையால் நாராயணா ! ஓ ! மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆரிடரை நீக்காய் – என வெகுண்டு – (2694) மிகப் பெரிய மலைபோன்ற மத்தகஜமானது, நீர்நிலத்திலே முதலையின் வாயில் அகப்பட்டு நின்று வருந்தி நீண்ட ஒரு துதிக்கையினால் அப்போது அலர்ந்த தாமரைப் பூக்களை எடுத்துக்கொண்டு ஓ நாராயணனே! நீலமணி வண்ணனே! என் எஜமானனே ! வந்தருளவேணும், எனது பெருந்துக்கத்தைப் போக்கி யருளவேணும், என்று கூவ, அக்கூக்குரலைக் கேட்டு
27தீராத சீற்றத்தால் சென்றிரண்டு கூறாக ஈராவதனை இடர்க்கடிந்தான் எம்பெருமான் பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர்
உம்மகளை தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கனுமற்று  (2695)
கஜேந்திரனின் விரோதியின் (முதலை) மேல் கோபித்து அடங்காத கோபத்தோடு பொய்கைக்கரைக்கு எழுந்தருளி முதலயை இருதுண்டமாகப் பிளந்து அந்தக் கஜேந்திரனுடைய துன்பத்தைப் போக்கடித்த எம்பெருமான் இப்படிப்பட்ட அளவற்ற காரியங்களுக்கு வாசகமான ஆயிரம் ஆயிரம் நாமங்களை உடையவன், அவ்வெம்பெருமான் தான், அறிவு கெட்ட பெண்டுகளே! உங்கள் மகளுக்கு இப்படிப்பட்ட தீராத நோயை உண்டு பண்ணினான் காண்மின் என்று கட்டுவிச்சி சொல்லி முடித்தாள்.
பொய்கையாழ்வார், முதல் திருவந்தாதி
28அடியும் படி கடப்பத், தோள் திசை மேல் செல்ல, முடியும் விசும்பு அளந்தது என்பர் – வடியுகிரால் ஈர்ந்தான் இரணியன தாகம், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் உலகளந்த நான்று 17இந்த பாசுரத்தில் நேரடியாக கஜேந்திர மோக்ஷம் சொல்லப் படவில்லை என்றாலும், இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான் என்பதை, நம் ஆச்சார்யர்கள் விளக்கும் போது, ஸ்ரீகஜேந்திராழ்வானைக் காத்தருளப் பெரிய திருவடியின் மீதேறி அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடி வந்த காலத்திலும் நேரில் ஸேவிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லையே என்று அநுதாபப்படுவது தோன்றும் என்பர்.
29இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும், அறைபுனலும் செந்தீயும் ஆவான் , பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த, செங்கண்மால் கண்டாய் தெளி. 29ஸ்ரீவைகுந்தநாதன் ஆகவும், பூமி, ஆகாயம், வாயு, நீர், தீ, ஆகிய பஞ்ச பூதங்களாலான இந்த உலகத்தை உடையவனுமான எம்பெருமான், பிறைபோன்ற தந்தத்தையுடையதும் பசுமை தங்கிய கண்களை உடையதுமான பெரிய கஜேந்திரனை, முதலையின் வாயிலே அகப்பட்டு பட்ட துக்கத்தில் இருந்து காத்தவன் புண்டரீகாக்ஷன் என்று நெஞ்சே தெரிந்துகொள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
30வாரி சுருக்கி மதம் களிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந்நிறீஇ, – கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே, மேலொரு நாள் கைந்நாகம் காத்தான் கழல். 47மதம் பிடித்த ஐந்து யானைகளை போன்ற ஐந்து இந்திரியங்களையும் உலக விஷயங்களில் இருந்து இழுத்துப்பிடித்து, கண்டவிடங்களிலும் திரிய வொட்டாமல் நிலைநிறுத்தி, மிகவும் துல்லியமான உண்மையான பக்தியினால், அவனை உள்ளபடி உணர வல்லவர்கள், முன்பொரு காலத்திலே கஜேந்திராழ்வானை ரக்ஷித்தவனான அப்பெருமானுடைய திருவடிகளை கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள் என்பது இந்த பாடலின் கருத்து.
3`இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம் தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, – படமுடை பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும், கொய்ந்நாகப் பூம் போது கொண்டு. 78கஜேந்திராழ்வானை தொடர்ந்து வந்த கொடுமை பூண்ட முதலையை கொன்றவனும், பசுமை நிறத்தை உடைய திருவனந்தாழ்வானை மெத்தையாக உடையனுமான எம்பெருமானது திருவடிகளை புன்னையின் அழகிய மலர்களைக்கொண்டு தொழுவோம் என்று தன் மனதிற்கு ஆழ்வார் சொல்கிறார். மேலும் அவனுக்கு அடிமை செய்யாமல் இருக்கும் துயரத்தை தன்னால் அனுபவிக்க முடியாது என்றும் கூறுகிறார்.
32பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன், அடிசேர்ந்தருள் பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை என்னும் பேர்ப் பொன். 97புண்ணியமும் பாபமும் அவனிட்ட வழக்காய் இருக்கும் என்று 96 ம் பாட்டில் ஆழ்வார் சொல்லி உள்ளார். அதனை தொடர்ந்து. இந்த பாடலில் கஜேந்திரன் சென்ற ஜென்மத்தில் செய்த புண்ணியம் தொடர, இந்த ஜென்மத்திலும் பக்தியை தொடர்ந்தாலும், மற்ற யானை கூட்டங்களின் சகவாசத்தினால், உலக விஷயங்களிலும் ஈடுபட்டதை, ஆழ்வார் பேடையோடு சேர்ந்து போகங்களை அனுபவிக்கிற கஜேந்த்ராழ்வான் என்பதை பிடி சேர் களிறு என்கிறார். அப்படிப்பட்ட கஜேந்திரனை காத்து அருளினை எம்பெருமான், கங்கைக்கு பாவங்களை போக்கும் சக்தியை தன்னுடைய திருவடிகளை தீண்டியதால் அருளினான் என்றும் கூறி உள்ளார்.
பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி
33தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சிப் படரெடுத்த பைங்கமலம் ¦ கொண்டு, அன்று இடர் எடுக்க ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர் கோன் பாழி தான் எய்திற்றுப் பண்டு. 13மதயானையானது, விசாலமாயிருந்த பொய்கையிலே இறங்கி மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காகக் துதிக்கையில் கொண்டு வரும்போது, முதலையின் வாயில் அகப்பட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் பெருந்துன்பம் உண்டாக, இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோ என்று மனம் பதறி, திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை தியானித்து வணங்கியபடியாலே அந்த கஜேந்திரன் பரமபதத்தை அடைந்தது என்று ஆழ்வார் சொல்கிறார்.
34அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர் வெண்கோட்டு மால் யானை வென்று முடித் தன்றே, தண் கோட்டு மாமலரால் தாழ்ந்து. 22முதலையின் வாயில் அகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக் கொண்டு அந்த ஆபத்தைப் போக்கி கொள்ள நினைத்துத் தானே முயற்சி செய்து கொண்டிருந்த வரையில் துன்பம் நீங்க வில்லை ; ‘தன்னாலான மட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமானும் விலகியே நின்றான்; இனி நம்மாலாகாதென்று துணிந்து தன்னுடைய முயற்சியை கைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின், அந்த யானையை காப்பாற்றுவதை, தன் காரியமாகக் கொண்ட எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய  மடுவின்கரையிலே ஓடி வந்து துன்பம் தீர்த்தான். அதேபோல், அடியார்களுக்கு வேண்டிய அத்தனை காரியங்களையும் தானே செய்வதாக என்று எண்ணிக் கொண்டு மிகவும் உற்சாகம் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை கிடைக்கப்பெற்றால், நடப்பதற்கு அரிய காரியமும், எளிதாகும்.
35 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆய் நடு அந்தி வாய், வாய்ந்த மலர் தூவி வைகலும், – ஏய்ந்த பிறைக் கோட்டுச் செங்கண் கரி விடுத்த பெம்மான் இறைக்கு ஆட் படத் துணிந்த யான். 73எம்பெருமான் கஜேந்திராழ்வானிடத்தில் வெளியிட்ட உபகாரத்தைப் பார்த்தபின், நாமும் அந்த கஜேந்திரனைப்போலே அடிமை செய்வோமாயின் அப்படிப்பட்ட அனுகிரத்திற்கு பாத்திரம் ஆகலாம் என்று எப்பொழுதும் புஷ்பங்களை எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிப்பதும் அவனுடைய திருநாமங்களை சொல்லிக் கொண்டு இருப்பதுமான தம்முடைய செயல்களை ஆழ்வார் சொல்லி கொள்கிறார். சந்திரகலை போன்ற தந்தரத்தையும் சிவந்த கண்களையு ம் உடைய கஜேந்திரன் என்கிறார். ஸ்ரீமந் நாராயணனுக்கு அடிமை செய்ய உறுதிகொண்ட காலை பகல் மாலை முதலிய எல்லா காலங்களிலும் கிடைத்த புஷ்பங்களை கொண்டு ஆயிரம் ஆயிரம் திருநாமங்களை ஆராய்ந்து உரைக்கிறேன் என்கிறார்.
பேய்ஆழ்வார் – மூன்றாம் திருவந்தாதி
36சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணிமுடி மால், தாழ்ந்த அருவித் தடவரைவாய், – ஆழ்ந்த மணிநீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான், அணி நீல வண்ணத்தவன். 50எம்பெருமான் அடியார்களுக்காக செய்தருளின காரியங்களெல்லாவற்றினும் ஸ்ரீகஜேந்திராழ்வானுக்குச் செய்தருளின உதவி, தனிப்பட்டு விளங்குகையாலே, கஜேந்திர மோக்ஷம் பற்றி இந்த பாசுரத்தில் அருளி இருக்கிறார். இப்பாட்டில் நடுவே இரண்டடிகளில் கதையை சொல்லி, முதலடியிலும் கடைசி வரியிலும் எம்பெருமானைச் சிறப்பித்துக் கூறியிருப்பதன் கருத்தை உணர வேண்டும், எம்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்து கொண்டிருப்பதும், திருவபிஷேகம் (கிரீடம்) அணிந்து கொண்டிருப்பதும் ‘தானே அனைத்துலகும் காக்கவல்ல முழுமுதற் கடவுள்‘ என்பதை விளக்குவதற்குத் தான். பரமபக்தனான கஜேந்திராழ்வான் நெடுங்காலமாக ஒரு முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டதனால், எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் (காப்பாற்றும் தன்மை என்ற குணம்) சற்று குன்றி இருந்தது என்பதை, அவனுடைய திருத்துழாய் மாலையும்வாடி, திருவபிஷேகமும் ஒளிமழுங்கிக் கிடந்தது என்பதாக சொல்வது முதல் அடியில். பிறகு முதலையை கொன்று வேழத்தை வாழ்வித்ததனால் எம்பெருமானின் காப்பாற்றும் குணம் பிரகாசமாக, திருத்துழாய் மாலையும் திருவபிஷேகேமும் ஒளி கூடியதால், அதனை ‘சூழ்ந்த துழாயலங்கல் ‘ என்று கூறுகிறார். பக்தனுடைய விரோதியை ஒழித்தோம் என்ற மகிழ்ச்சியினால் திருமேனி மேலும் ஒளிவிட, ‘அணிநீல வண்ணத்தவன்‘ என்ற கடைசி வரியினால் அருளிச்செய்தார். கஜேந்திரவான் தாமரைப்பூ பறித்த பொய்கை மலை மேல் இருந்ததினால், ‘தடைவரைவாய்‘ எனப்பட்டது.
37அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம் சுழிந்த மொய்ம்பன், – சரணா மேல் ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப்பு என்னாதே
ஓதுகதி மாயனையே ஓர்த்து. 78
எம்பெருமான் ஸர்வ ரக்ஷகன் என்று பேர் எடுத்துஇருந்தாலும், அவனுடைய ரக்ஷகத்வம் எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் தானே அமையாது. தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் தாங்களே முயற்சி செய்யும் போது, அவர்களிடத்தில் அந்த சமயங்களில் அவன் தனது ரக்ஷகத்வத்தை காட்டமாட்டான். இரு கைகளையும் விட்டு ‘நீயே சரண்‘ என்று எல்லா சுமைகளையும் அவன் மேல் ஏற்றிவிட்டு, தம் கையாலே ஒரு முயற்சியும் செய்யாத ஞானிகளையே தான் காத்து அருள்வான். “இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப்போலே“ என்னும்படியாக அவள் ஒரு கையாலே துணியை பிடித்துக்கொண்டு தன்னை தானே காப்பாற்றிக்கொள்ள முயற்சித்த போது, அவளுடைய ரக்ஷணத்திலே கண்ணபிரான் திருவுள்ளம் செலுத்தவில்லை. ஸ்ரீகஜேந்திராழ்வானும் தன்னை காப்பாற்ற தானே முயற்சி எடுத்த வரையில் நாராயணன் அவனுடைய ரக்ஷணத்தை பற்றி நினைக்கவில்லை. எம்பெருமான் நமக்கு ரக்ஷகனாக எல்லாக் காலத்திலும் துணையாக இருக்கிறான் என்ற முதல் அடியை எடுத்துக்கொண்டால், இதன் உட்கருத்து, நாம் நம்மை காப்பதில் உள்ள முயற்சியை விட்டுவிட்டு, அவன் காப்பான் என்று இருந்தால், அவன் “என் உடம்பில் உள்ள அழுக்கை நானே போக்கிக்கொள்வேன்” என்றபடி நம்மை காப்பான் என்பதே. நம் ஜென்மம் என்ன, ஞானம் என்ன, ஆசாரம் என்ன என்று நம் தாழ்வுகளை பார்க்காமல், அந்த மாயனை மனத்தால் எப்போதும் நினைத்திடு என்று தன் மனதிற்கு உபதேசிக்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழி
38நீந்தும் துயர்ப்பிறவி யுட்பட மற்றெவ்வெவையும், நீந்தும் துயரில்லா வீடு முதலாம், பூந்தண் புனல் பொய்கை யானை இடர்க் கடிந்த, பூந்தண் துழாயென் தனி நாயகன் புணர்ப்பே. 2.8.2போக்கிக்கொள்ள முடியாத துக்கத்தை விளைக்கின்ற பிறப்பு, இறப்பு இவற்றை பகவத் ஸம்பந்தம் போக்கடிக்கும், துக்கம் சிறிதும் இல்லாத முக்தியையும் அளிக்கும் என்பது ஒரு கருத்து. அபாரமான துயரங்களை விளைவிப்பதான கடந்து செல்வதற்கு அரிதான பிறவி முதலான பிறப்பு, இறப்பு என்ற எல்லா வகைப்பட்ட துக்கங்களும் தொடமுடியாத மோக்ஷம் என்ற ஆனந்தத்திற்கு வழி செய்து கொடுக்கும் பகவத் சம்பந்தம் என்பது முதல் இரண்டு வரிகளின் இன்னொரு கருத்து. கஜேந்திராழ்வானைக் காத்தருளினவனும், அப்படியே பக்தர்கள் அனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலையிட்டுக் கொண்டு நாயகனாக விளங்கும் எம்பெருமானோடு உண்டான ஸம்பந்தமே பகவத் சம்பந்தம் என்று பின்னால் வரும் வரிகளில் விளக்குகிறார். அவன் திருவடி சம்பந்தம், துக்கங்களை களைந்து பேரானந்தத்தை கொடுக்கும் என்பது இந்த பாசுரத்தில் சுருக்கம்.
39எம்மாவீட்டுத் திறமும் செப்பம், நின் செம்மா பாதபற்புத் தலை சேர்த் தொல்லை, கைம்மா துன்பம் கடிந்த பிரானே, அம்மாவடியென் வேண்டுவது ஈதே. 2.9.1 கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே! உன்திருவடிகளை அடியேன் தலைமீது சீக்கிரமாக வைக்க வேண்டும் என்பது மட்டுமே நாம் வேண்டுவது; மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை என்று ஆழ்வார் கூறுகிறார்.
40மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய், தொழுங் காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே, மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9
எம்பெருமானுடைய திரு அவதாரங்களுக்கு மூன்று வகையான பயன் பேசப்பட்டுள்ளன. அடியார்களைக் காத்தல், துஷ்டர்களை அழித்தல், தர்மத்தை நிலை நாட்டுதல் என மூன்று காரியங்களுக்காக எம்பெருமான் அவ்வப்போது அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. மூன்றும், ஒன்று போலவே தோன்றும்.பரமபதத்தில் வீற்றிருந்தபடியே ஸங்கல்பத்தால் செய்ய முடியாத காரியமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லும் வண்ணம் அமைந்து உள்ள பாசுரம். எம்பெருமானை நேரில் ஸேவிக்க வேணும் என்ற ஆசை கொண்ட அடியார்களின் விருப்பத்தை எப்படி ஸங்கல்பத்தினால் செய்ய முடியும், நேரில் எழுந்தருளித்தான் ஸேவை ஸாதித்தாக முடியும் என்பதை விளக்கும் பாசுரம்.
மழுங்காத வைநுதிய சக்கரநல்வலத்தையாய்!” என்ற சொற்தொடரின் கருத்தாவது, பரமபதத்திலிருந்துகொண்டே திருவாழியாழ்வானை ஏவி முதலையை முடித்திட ஆற்றல் அவனுக்கு உண்டு என்று காட்டுவதாகும். அப்படியிருந்தும் கருடன்மேல் ஏறி வந்து பொய்கைக் கரையில் காட்சி தந்தது இரண்டாம் அடியில் சொல்லப்படுகிறது. களிற்றுக்குத் தொழுங்காதல் என்றதால், கஜேந்திராழ்வான் எம்பெருமானை தொழ வேண்டும் என்ற காதலை நிறைவேற்றுதற்காகவே தோன்றினான் என்பது சொல்லப்பட்டது. எம்பெருமான் அவதரித்தே செய்யத்தக்க காரியம் ஸங்கல்பத்தினால் செய்யப்போகாது என்பது இறுதியாக சொல்லப்பட்டது. ஸங்கல்பத்தைக் கொண்டே ரக்ஷிக்கப் பார்த்தால், ‘அடியார்க்காக ஓடிவந்து உதவுமவன்’ என்கிற பெயரால் உண்டாகும் ஜோதி மறையும் என்கிறார். இந்த பாசுரம் முடிச்சோதியாய் என்ற பதிகத்தில் வருகிறது.
41வந்தாய்போலே வந்தும் என் மனத்தினை நீ, சிந்தாமல் செய்யாய் இதுவே இதுவாகில், கொந்தார்க் காயாவின் கொழு மலர்த் திருநிறத்த எந்தாய், யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே? 3.2.5ஆழ்வார் எம்பெருமானிடம், இராம, கிருஷ்ண அவதாரங்கள் போலே தனக்காகவும் வந்து சில நாட்கள் இருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் நன்று. அது செய்யத் திருவுள்ளம் இல்லையாகில், ஆனைக்குத் தோன்றினால் போல், ப்ரஹ்லாதனுக்குத் தோன்றினால் போல், தனக்கும் ஒரு சிறிய நேரம் தோற்றம் அளித்து அருள வேண்டும் என்கிறார். இப்படி உதவ முடியாது என்பதே தினமும் எம்பெருமான் சொல்வாரானால், தான் தன்னுடைய முயற்சியினால் அவனை வந்து சேர்வது என்று ஒன்று உண்டோ என்று வினவுகிறார். இனி அவன் வடிவழகை காண்பது என்பது தான் இழந்து போகிற ஒன்றாகிவிடுமே என்று கவலை படுகிறார்.
42மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற, கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல் வண்ணன் கண்ணன், எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார், தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 3.5.1ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த அடியார்கள் மேல் உள்ள அன்பை அறிந்தும், எம்பெருமான் மேல் அன்பு பாராட்டாதவர் பிறப்பு வீண் என்கிறார். கஜேந்திராழ்வானுடைய கூக்குரல் கேட்டு பதறிப் பொய்கைக்கரைக்கு வந்தது மட்டுமின்றி, முதலைவாய்ப்பட்டுப் புண்பட்ட அதன் காலைத் திருக்கைகளினால் தடவி உபசாரங்கள் செய்தது அந்த யானைக்கு, செய்த பெரிய அருள். இதனை அறிந்தவர்கள், எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும், பறந்தும், துள்ளவேண்டும்; அப்படி செய்யாதவர்கள் இவ்வுலகில் பிறந்தாலும், என்ன பலன் என்கிறார்.
43அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான் யானார், எம்மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர், கைம்மா துன்பொழித்தாய் என்று கைதலை பூசலிட்டே, மெய்ம்மாலாய் ஓழிந்தேன் எம்பிரான் என் மேலானே.5.1.7 தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்கும் போது அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி என்று ஆழ்வார் சொன்னாலும், எம்பெருமானின் கருணை பிரவாகமாக ஓடுவதையும் சொல்லி உள்ளார். ஆழ்வார், முதலடியினால் எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலைநாட்டினார். இரண்டாம் அடியினால் எல்லா வழியாலும் மஹாபாவங்களைப் செய்தவர்களிடமும் எம்பெருமானுடைய பரமக்ருபை பெருக தடை எதுவும் இல்லை என்கிறார். அவருடைய அருள் வெள்ளப் பெருக்கினாலே எம்பெருமானுக்கும் நமக்குமுள்ள மேடுபள்ளமும் நிரவப்பட்டது என்கிறார். மெய்யன்புடையார் நெஞ்சு கனிந்து சொல்லும் சொல்லை தான் கபட பக்தியோடே சொன்னதாகவும், அது மெய்யான பக்தியாகவே எம்பெருமான் எடுத்துக்கொண்டான் என்றும் சொல்கிறார்.
44செலக்காண் கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்! உலப்பி லானே எல்லா வுலகும் உடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான் அலப்பாய் ,ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.5.8.4
ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே என்று சொல்லும் போது, ஆழ்வார், கஜேந்திராழ்வானுக்கு உதவ ஆகாசத்தில் வந்து தோன்றினாப்போலே தனக்காகவும் வந்து தோன்றுகிறாரோ என்று ஆகாசத்தை நோக்குகிறார். திருக்குணங்களையுடையவனே!அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே! எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான ஒப்பற்ற தலைவனே!பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே எம்பெருமான் வருதற்குரிய வானத்தைப்பார்த்து அழுவதும் தொழுவதும் செய்து நின்றதாக ஆழ்வார் கூறுகிறார்.
45வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும், உட்குடை யசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள்ளுருகும், கட்கிலீ உன்னைக் காணுமா றருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும், திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்து என் செய்திட் டாயே? 7.2.3 இந்த பாடலிலும், ஆழ்வார் “வானமே நோக்கும்” என்று சொல்லி, யானைக்கு உதவ வந்ததைப் போல நமக்கும் உதவ வரக்கூடும் என்று வானத்தையே நோக்குகின்றார். நீல மணிவண்ணனே என்று கூப்பிடுகிறார். எம்பெருமான் வராத காரணத்தால் ஏமாற்றம் / மயக்கம் ஏற்பட்டு, வலிமையுடையவர்களான அசுரர்களினுடைய உயிர்களை பறித்த வீரனே என்கிறார். உள்ளம் நீராக உருகுவதாகவும், கண்களில் புலப்படாதவராகவும் இருக்கிறார் என்கிறார். இராம, கிருஷ்ண அவதாரங்களில் வந்து காட்சி அளித்தது போல் எம்பெருமானை கண்ணார காண அருள் புரிய வேண்டுகிறார். இந்த பதிகம் முழுவதும், ஆழ்வார் பெண் பாவனையில் பாடுவதால், இந்த பெண்ணுக்கு திருவரங்கத்து எம்பெருமான் செய்தது என்ன என்று கேட்டு பாசுரத்தை முடிக்கிறார்.
46அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,
நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான், சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை, ஒன்றி வலஞ் செய்ய ஒன்றுமோ? தீவினை யுள்ளத்தின் சார்வல்லவே (7.10.8)
திருவாறன்விளையிலே நுழையும்போதே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையும் என்று ஆழ்வார் சொல்கிறார். கஜேந்திராழ்வானுடைய துயரைக் தீர்த்தவன் அது போலவே நம்முடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே வந்து நிதான நின்றான்; நாம் அங்குச் சென்று வலஞ்செய்ய கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்தமற்றவையாகிப் பறந்தொழியும் என்கிறார். “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று சொல்லி எம்பெருமானது திருவடிகளை முக்கியமானதாக ஏற்றி முதல் அடியிலேயே கூறப்பட்டது. ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் என்பதில், ஆனைக்கு இடராவது, தன் உயிர் போகிறதே என்பதில்லை, வெகு சிரமப்பட்டுப் பறித்த பூவை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியவில்லையே, அதனால் எம்பெருமானுக்கு என்ன தவறு விளைகிறதோ என்பதாம். அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காப்பாற்றததனால் ரக்ஷகன் என்ற தகுதி இல்லை என்று உலகத்தார் சொல்லி விடுவார்களோ என்று யானை துன்பம் கொண்டது .
47இருந்தான் கண்டுகொண்டு என ஏழை நெஞ்சாளும், திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தற மன்னி, பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,
தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.  8.7.2
ஆழ்வார், பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலி மாண்டு ஓழியும்படி எம்பெருமான், தன்னழகாலே செய்து என்னை ஆட்கொண்டு அருளினை பேருதவி, கஜேந்திரனுக்காக செய்த உதவியோடு கூட ஒப்பிட முடியாது என்கிறார். ஒரு முதலையின் வாய்ப்பட்ட களிறன்றோ அது, ஐந்து முதலைகளினான ஐம்பொறிகள் மூலம் அன்றோ தாம் பட்ட இடர் என்கிறார். கண்டது எல்லாவற்றிலும் சபலமாயிருக்குமே நெஞ்சு, அப்படிப்பட்ட நெஞ்சை இந்திரியங்கள் தம் வழியே இழுத்துக் கொண்டு இருக்கும். எம்பெருமான் அந்த நெஞ்சை அவர் பக்கம் திருப்பி, எல்லா கரணங்களும் பகவத் விஷயத்திலேயே லயிக்கும்படி செய்ததை, எனதேழை நெஞ்சாளுந் திருந்தாத ஓர் ஐவரைத் தேய்ந்தர மன்னி ‘ என்று சொல்லி அதையே எம்பெருமான் தனக்கு செய்த பேருதவி என்கிறார்.
48பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காணவந்து நின் பன்னிலாமுத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்று அருளாய், பவள நன்படர்க் கீழ்ச்சங்குறை பொருநல் தண் திருப்புளிங்குடிக் கிடந்தாய் கவள மாகளிற்றின் இடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே.
9.2.5
 “கவள மாகளிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே!” என்ற சொற்களால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினால் போலே தமக்கு வந்து தோன்றி அருள வேண்டும் என்று பிரார்த்திப்பது விளங்கும். பவளம் போல் கனிவாய் சிவப்பக் காண வந்து, அதற்கு மேலே நிலா போன்ற பற்களால் ஒளியுடைய இதழ் கதிர் முறுவல் செய்ய வேணும்;  அதற்குமேலே திருக்கண் தாமரை விளங்கும்படி நின்றருளவும் வேணும் என்கிறார். தாமிரபரணியை கொண்ட திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்து அருளுபவனே, “நாராயணா! ஓ ! மணிவண்ணா நாகணையாய்! வாராய், என் ஆரிடரை நீக்காய்” என்று கூவி அழைத்த ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துன்பம் கெடும்படி மடுவின் கரையிலே பெரிய திருவடியை நடத்தினவனே ! என் வேண்டுகோளை நிறைவேற்றி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார்.

மீண்டும் இன்னொரு தலைப்பில் சந்திப்போம், நன்றி

069 திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்) / Badrinath

காலையும் மாலையும்

அரவந்தவல்லித்தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீ பதரி நாராயணன் திருவடிகளே போற்றி போற்றி !!!

திவ்யதேசம் திருவதரியாஸ்ரமம் (பத்ரிநாத்), அஷ்டாக்ஷர க்ஷேத்திரம், விஷாலபுரி
மூலவர் பத்ரி நாராயணன்
உத்ஸவர்
தாயார் அரவிந்தவல்லித்தாயார்
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 21
பெரியாழ்வார் 1
தொலைபேசி 070607 28843.

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருபத்ரிகாசிரமம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கோவில் பற்றி

இத்தலம் வடநாட்டு திவ்யதேசங்களில் மிக முக்கியமான பத்ரிகாச்ரமம் எனப்படும் பெரும் திவ்ய தேசமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,500 அடி உயரத்தில் இமய மலையில் பனிபடர்ந்த சூழலில், மலையின் மத்தியில், எழில்மிக்க ரம்யமான மலைச்சிகரங்களுக்கு நடுவில், நர நாராயண பர்வதத்தின் மடியில், பவித்திரமான அலகநந்தா நதிக்கரையில், அலகநந்தாவும், தோலி கங்காவும் சங்கமமாகும் பத்ரிநாத் மலைச் சிகரங்களின் மத்தியில், நீலகண்ட சிகரத்தின் பக்கத்தில்,  இலந்தை மரக்காடுகள் நிறைந்து விளங்கும் இடத்தில் அமைந்துள்ளது. அலகநந்தாவின் கரையில்தான் கோவில் அமைந்துள்ளது.  இந்த க்ஷேத்திரம் தேவபூமி என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறது. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள்.  

எம்பெருமான் தானாக சுயம்புவாக எழுந்தருளியிருக்கும், ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில், இதுவும் ஒன்றாக, இத்தலம் அமைந்து உள்ளது. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்கள் ஆகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

பரமாத்மா, தானே ஆச்சார்யனாகவும், தானே சிஷ்யனாகவுமிருந்து அல்லது எம்பெருமானே தாமே குருவாகவும், சீடனாகவும் இருந்து கொண்டு, ஓம் நமோ நாராயணாய என்ற ”அஷ்டாக்ஷர மந்திரம்” எனும் மூல மந்திரமாகிய திருமந்திர உபதேசத்தை, நாராயணன் என்ற திருநாமத்துடனே உலகத்திற்கு வந்து உகந்து அருளின இடம், பத்ரிகாஸ்ரமம் தான். குரு நாராயணன், சீடன் நரநாராயணன். எம்பெருமான் ஆச்சார்யராக இருந்த ஸ்தலங்களில் பத்ரிநாத்தும் திருநறையூரும் முக்கியமானவை. திருநறையூரில் எம்பெருமான் குரு, திருமங்கையாழ்வார் சீடர். எம்பெருமானைச் சரண் புகுந்து மோட்சம் புகும் பக்தர்கட்கு மிக எளிய வழி திருமந்திர உபதேசத்தில் சொல்லப்பட்டது. அதனால், திருமந்திரம் அவதரித்த திருத்தலமாக இந்த பத்ரிநாத் கருதப்படுகிறது.

மகாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமான பத்ரி (இலந்தை) எனப்படும் மரத்தின் கீழே அமர்ந்ததால் பத்ரிகா-ஆஸ்ரமம் – பத்ரிகாச்ரமம் ஆயிற்றென்பர். எம்பெருமான் தவம் செய்ய அமர்ந்த பின், அவருக்கு நிழலாக மஹாலக்ஷ்மி இலந்தை தோட்டமாகவே அவதரித்து இங்கு வந்ததாகவும் சொல்வார்கள். மஹாலக்ஷ்மி சொரூபமான இலந்தை(பதரி) மரத்தின் கீழ் அமைந்த ஆசிரமத்தில் எம்பெருமான் திருமந்திரத்தை உபதேசிக்க இந்த இடத்தை ஒரு ஆஸ்ரமமாக தேர்ந்தெடுத்ததால் பத்ரிகாஸ்ரமம் ஆயிற்றென்பர். வடமொழியில் இலந்தை மரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடம் என்பது பதரிகாச்ரமம் என்று ஆயிற்று.

பத்ரிநாராயணன் ஆலயத்திற்கு எதிரில் தப்த குண்டம் என்னும் தீர்த்தம் உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்றாகும். தொடக்கூட முடியாத அளவில் வேகமாகவும், மிகக்குளிர்ந்த நிலையிலும், அலகநந்தா பக்கத்திலேயே ஓடிக்கொண்டு இருக்கும் போது இந்த வெந்நீர் ஊற்று மிகவும் ஆச்சர்யமான ஒன்றாகும். அதற்கான காரணம் இன்னும் அறியப்படாததும் மேலும் ஆச்சர்யம் தரும். தப்தகுண்டத்தின் நீர் எப்பொழுதும் சூடாக வருகிறது. இது பத்ரி யாத்ரிகர்களுக்கு எம்பெருமானின் அனுக்கிரகம். இந்தக் குளிர்ந்த இடத்திலும் பக்தர்கள் குளித்து,  தரிசிக்க வசதியாக உள்ளது. தப்த குண்டத்தில் நீராடிவிட்டு சில படிகள் ஏறிச்சென்றதும் சிம்ம துவாரத்தில் இருக்கும் கருடாழ்வார் நமக்கு காட்சி தருகிறார்.

கருடாழ்வாரைத் தரிசித்துவிட்டுத் தான் பத்ரிநாராயணன் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு பத்ரி நாராயணன், கருடாழ்வார், நாரதர், உத்தவர், குபேரன், நரன் மற்றும் நாராயணன் முதலானோர் மிக்க பேரெழில் பொங்க வீற்றிருக்கின்றனர். பத்ரி நாராயணர், இலந்தை மரத்தின் கீழ், ஜடாபரிதனாய், நான்கு திருக்கரங்களுடன், (சதுர் புஜங்களுடன்), கிழக்கு நோக்கி மேல் வலது திருக்கரத்தில் சக்கரமும், மேல் இடது திருக்கரத்தில் சங்கும், கீழ் வலது இடது திருக்கரங்களை யோக முத்திரையாக் கொண்டு, மார்பில் ஸ்ரீவத்ஸ சின்னத்துடன், பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மூர்த்தியாக வீற்று இருந்து தபஸ்வி வேஷத்தில் காட்சி கொடுக்கிறார்.

பகவானின் வலப்புறம் குபேரனும், கருடனும் அமர்ந்திருக்கிறார்கள். இடப்புறத்தில் தேவரிஷி நாரதர், உத்தவர், நாராயணர், நரர் முதலியோர் உள்ளனர். ஸாளக்கிராமச் சிலையாலான மூலமூர்த்தி, மற்றவையெல்லாம் உத்ஸவ மூர்த்திகளே. தெற்குப் பிரகார ஆரம்பத்தில் அனுமான் சந்நிதிக்குப் பிறகு வடக்கு நோக்கியுள்ள தாயார் சந்நிதியில்,  மகாலக்ஷ்மி (அரவிந்த வல்லித்தாயார்) தரிசனம் அளிக்கிறாள். பிராகாரத்தில் ஆதிசங்கரருக்குத் தனி சந்நிதி உள்ளது.  கோவிலின் பின்புறம் லக்ஷ்மிநரசிம்ஹருக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது, அதில் இராமானுஜருக்கும், சுவாமி தேசிகனுக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு.  

இங்கு எம்பெருமானுக்கு நடைபெறும் சகல விதமான பூஜைகளும், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை, மக்களுக்கு எதிரிலேயே, திரை எதுவும் போடாமல் பக்தர்கள் நேரடியாக காண்பதற்கு ஏதுவாக கேரளத்தை சேர்ந்த நம்பூத்ரிகளே தலைமை அர்ச்சகராக இருந்து நடைபெறுகின்றன.

தினந்தோறும் சூரிய உதயத்திற்கு முன்பு,  திருமஞ்சனம் செய்து நம்பூதிரி சாளக்கிராம சிலையிலான மூல மூர்த்திக்கு ஆரத்தி செய்து, ஒவ்வொரு அங்கத்தையும் தரிசனம் செய்து வைத்து விளக்கம் அளிக்கிறார். இங்கு இரவில் பெருமாளுக்கு சாந்தி பஞ்சகம் என்னும் பூஜை நடைபெறும். அப்போது எம்பெருமானின் ஆடைகளையும், மாலைகளையும் களைவர். இவ்வாறு எம்பெருமானின் ஆடைகள் மற்றும் மாலைகளை களைந்துவிட்டு சிறிய துண்டு ஒன்றை அணிவிப்பர். இந்நிகழ்ச்சிக்கு கீதகோவிந்தம் என்று பெயர். இந்த பூஜை நடைபெறும் சமயம் எம்பெருமானின் பக்கத்தில் அமர்ந்தே பூஜை நிகழ்ச்சிகளை பக்தர்கள் தரிசிக்க முடியும். இதற்குத் தனிக் கட்டணம் உண்டு.

இங்கு கோவிலின் வடபுறம் அலகநந்தாவின் கரையில் பிரம்ம கபாலம் என்னும் ஒரு இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பெரிய பாறையில் பித்ருக்களுக்கு, கயா ஸ்ராத்தம் போல், இங்கும் ஸ்ராத்தம் செய்யப்படுகிறது. பத்ரிநாராயணனுக்கு காலையில் நிவேதனம் செய்துவிட்டு, பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் எனப்படும் பிரசாதத்தை, கோவிலிலேயே கொடுப்பார்கள். இவ்விடத்தில் ஸ்ராத்தம் செய்தால் நம் முன்னோர்களின் அனைத்து தலைமுறையினர்க்கும் மோக்ஷம் கிடைப்பதாக ஐதீஹம்.

பத்ரிநாத் க்ஷேத்திரத்தில் பஞ்ச தீர்த்தங்கள் உள்ளன. அவை, தப்த குண்டம், பிரகலாத குண்டம்,  நாரத குண்டம், கூர்ம தாரா மற்றும் ரிஷிகங்கா. இதில் தப்த குண்டத்தில், அக்னி வாசம் செய்வதாக வரலாறு. தப்தகுண்டத்தின் கீழ் பாகத்தில் மார்க்கண்டேய சிலை உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இங்கு தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. மார்க்கண்டேய சிலைக்குப் பக்கத்தில் நரசிம்ம பகவான் சிலை உள்ளது. கூர்ம தாரா தீர்த்தம் அன்னதான பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

நீலகண்ட மலைக்குக் கீழே, மூன்று கி.மீ. தூரத்தில் சரண பாதுகை உள்ளது.  இங்கு  எம்பெருமானின் திருவடிகளை தரிசனம் செய்யலாம்.

பத்ரிநாத் க்ஷேத்ரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள வியாச குகை, கணேச குகை, பீமர் பாலம் முதலியவை மானா கிராமத்தில் உள்ள முக்கியமான புனித இடங்கள். இந்த மானா கிராமம் இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்படுகிறது, அதற்கு பிறகு திபெத். இங்கே கொஞ்சம் கீழே சரஸ்வதி நதி ஓடுகிறது. சரஸ்வதி நதி இங்கே பூமிக்குள் சென்று, திரிவேணி சங்கமத்தில் ( அலஹாபாத் பிரயாகை) மீண்டும் வெளிவருவதாக நம் புராணங்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இவற்றை தவிர, பத்ரியில் வஸுதார என்ற பனித்திவலைகள் விழும் நீர்வீழ்ச்சியும் உண்டு. அந்த நீர்திவிலைகள் நம் மேல் படும் போது புண்ணியம் தரும் என்று நம்பப் படுகிறது.

இங்கு கோயிலைச் சுற்றிலும் பனிமலைகள் உள்ளன. எப்போதும் பனி பெய்வதால் கடுங்குளிரில் அமிழ்ந்திருக்கும் இப்பிரதேசத்திற்கு குளிர்தாங்கும் பருவம் இளமை
என்பதால், கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம் (திருவாய்மொழி 2.10.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், மிக இளமை வயதிலேயே இங்கு சென்று வந்துவிட வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் தமது பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தலம் 6 மாதங்களுக்கு மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்குத் திறந்து விடப்படும். அதாவது குளிர் காலமான 6 மாதத்தில் விடாது பனிபெய்து இத்தலத்தையே மூடுமளவிற்கு வருவதால் குளிர்காலமான 6 மாதத்திற்கு இத்தலம் மூடப்பட்டு மீண்டும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்படும். பூட்டப்பட்ட 6 மாதத்தில் தினந்தோறும் தேவர்கள் இங்கு வந்து பாரிஜாத மலர்களால் எம்பெருமானை அர்ச்சிப்பதாகக் கூறுவர்.
அதாவது பனிக்காலத்தில் கோவிலை அடைத்து விட்டு 6 மாதங்கழித்து திறந்து பார்க்கும் போது முதல்நாள் இரவில் பெருமாளுக்குச் சூட்டிய மலர் மாலைகள் மறுநாள் காலையில் பார்த்தால் எப்படி இருக்குமோ அதே போல் இருக்குமாம். அதனால் தான் மூடப்பட்ட 6 மாத காலமும் தேவர்கள் ஆராதித்து செல்கின்றனர் என்ற ஐதீஹம். மேலும் பத்ரிநாராயணனின் இடது பக்கத்தில் எப்பொழுதும் அகண்ட ஜோதி – நந்தா தீபம் எரிந்து கொண்டே இருக்கிறது. குளிர்காலத்தில் கோயில் கதவுகள் மூடப் பட்டிருக்கும் 6 மாதகால சமயத்திலும் இந்த தீபம் எரிந்துகொண்டு இருக்கும். அதனால் இங்கு ஆறு மாதம் தேவபூஜை, ஆறு மாதம் மனுஷ்ய பூஜை என்று சொல்லப்படுகிறது.

குளிர்காலத்தில், சுமார் 6 மாத காலத்திற்கு கோயிலின் கதவுகள் மூடப்பட்டிருக்கும். இந்தக் காலத்தில் பத்ரிநாராயணனின் உற்சவ மூர்த்தியை,  ஜோஷிமத் நரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளச் செய்து, அங்கு கிரமப்படி நித்ய ஆராதனைகள் நடைபெறுகின்றன. மறுபடியும் சித்திரை மாதம், அக்ஷய திருதியைக்கு மறுநாள்,  கோயில் கதவுகள் திறக்கப் பட்டு எம்பெருமானும் பத்ரியில் எழுந்தருளுகிறார்.

Thanks to Google maps. Please note that more information may be needed to travel to these places, thanks

பத்ரிகாச்ரம் பற்றி குறிப்பிடுகையில் “பஞ்ச பத்ரி” என்று ஐந்து பத்ரி பற்றி சொல்லப்பட்டுள்ளது. பெரும்பாலானவை இறுதியில் 4 அல்லது 5 கிமீ, போல் நடைப் பயணத்தின் மூலமாகவே அடையவேண்டி உள்ளது. புருஷசூக்தம் ஸ்லோகத்தை இயற்றிய நாராயணர், இந்த ஐந்து இடங்களில் தவம் இருந்ததாக சொல்வர். அவை, யோகபத்ரி, வ்ருத்தபத்ரி, த்யானபத்ரி,  தபோபத்ரி மற்றும் பவிஷ்ய பத்ரி.

வ்ருத்தபத்ரி அலகநந்தாவின் அழகான பள்ளத்தாக்கு ,  மிகவும் ரம்யமான இடம்.  இங்குதான் நாரதர் தவம் செய்தார். ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார். த்யானபத்ரியில் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார். யோகபத்ரியில் தியான மந்திர் அமைந்துள்ளது. அங்கே,  கோயில் கருவறையில் யோக த்யானீ பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். த்யானபத்ரி, யோகபத்ரி இரண்டும் ஒன்று, பாண்டுகேஸ்வரில் உள்ளது, என்று சொல்பவர்கள் உண்டு. அவர்கள், இதனைத்தவிர, ஆதிபத்ரி என்று இன்னொரு ஸ்தலமும் கர்ணப்ரயாகை அருகில் சொல்லப்படுகிறது. பவிஷ்யபத்ரி தபோவனில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்டதாகவும், கலியுகத்தில் தாம் இங்கு எழுந்தருளப் போவதாகவும் சொல்லப் படுகிறது. வரும் காலத்தில்,  இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மக்கள் பத்ரிநாத் சென்று அடைவது இயலாது போகும் என்றும், அது சமயம் பத்ரி நாராயணன், பவிஷ்ய பத்ரியில் எழுந்தருளி பூஜைகளை ஏற்று அருள்பாலிப்பார் என்று கூறப்படுகிறது. தபோ பத்ரி தான் இன்றைய பத்ரிநாத், அல்லது பத்ரி விஷால் என்றும் அழைக்கப்படுகிறது. அடியேன் பத்ரிவிஷால் மட்டுமே தர்சனம் செய்து உள்ளேன். மற்றவை தரிசிக்க மீண்டும் செல்ல ஆசை உள்ளது, பத்ரிநாராயணன் தான் நிறைவேற்றி தர வேண்டும்.

பத்ரிநாராயணன் கோவில் அமைந்து இருப்பது நாராயண பர்வதம். இதைத்தவிர கோவிலுக்கு எதிர்புறம், நரநாராயண பர்வதங்கள்; கோவிலுக்கு வலப்புறம் அமைந்துள்ள நீலகண்ட பர்வதம் போன்றவை காண்பதற்குப் பேரெழில் பொலிந்தனவாகும். குளுமை மிக்க அழகான மலைத் தொடரில், நர நாராயணர்கள் தவம் புரிந்த காரணத்தினால், இந்த மலைத் தொடரின் பெயர் நர நாராயண பர்வதம்  என்று வழங்கப்படுகிறது.  

இங்கு அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அடியேன் பத்ரிக்கு சென்றது 26 மற்றும் 27 அக்டோபர் 2014. கோவில் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் அந்த ஆண்டுக்காக மூடி விடுவார்கள் என்ற நிலை; பனியும் குளிரும் அதிகம். முதல் நாள் பகலில், பத்ரி வந்து சேர்ந்து அன்று மாலையில் ஒரு முறை எம்பெருமானை ஸஹஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்று சேவித்துவிட்டு அடுத்த நாள் காலையில் சில சேவைகளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம். அதிகாலையில் அலாரம் இல்லாமல் சுமார் 03 00 மணிக்கு எழுந்து விட்டதால் தங்கியிருந்த இடத்திலே ஒரு ஸ்னானம் செய்து விட்டு, எங்களுடன் வந்த வழிகாட்டியை (guide) தொந்தரவு செய்யாமல், காலையில் விஸ்வரூப தரிசனத்திற்கு கிளம்பலாம் என்று நடந்து வந்து கொண்டு இருந்தோம். கோவிலுக்கு வருவதால் கேமரா, போன் போன்றவற்றை எடுத்து வரவில்லை. வரும் போது, நீலகண்ட பர்வதத்தை தரிசித்த காட்சி மறக்க முடியாதது. இரண்டு மலைகள், வானத்தில் சிறிய சந்திர ஒளியினால், (வளர்பிறை சதுர்த்தி அல்லது பஞ்சமி), நீல நிற ஒளியுடன், மிக பிரகாசமாக நாங்கள் விவரிக்க முடியாதபடி, வியக்கும் வண்ணம், மறக்க முடியாதபடி, ஒரு மலையில் உள்ள பனியினால் சந்திர ஒளி பட்டு அதனுடைய பிரதிபலிப்பு இன்னொரு மலையில் விழுந்து, அந்த ஒளியும் மீண்டும் அதிகமாக ஒளி விட, மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றிய விதமாய் எங்களை மேலும் நடக்க விடாமல் அதையே பார்த்து பிரமிக்கும்படி செய்தது. அப்போது எங்களுக்கு அது நீலகண்ட பர்வதம் என்று தெரியாது. நாங்கள் நினைத்தது நரனும் நாராயணனும் என்றே நினைத்து, நன்றாக அனுபவித்தபடி கோவிலை அடைந்தோம். விஸ்வரூப தரிசனமும் கிடைத்தது. பிறகு சில வருடங்களுக்கு பிறகு எங்கள் நண்பர் ஸ்வாமிநாதன் அவர்களிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் எங்களுக்கு நீலகண்டனின் நேரடியான தரிசனமே கிடைத்து விட்டது என்று சொன்னார். நர நாராயணர்களுடன் நீலகண்டரின் அருளாசியும் இந்த பயணத்தில் எங்களுக்கு கிடைத்து ஒரு அரிய அனுபவமே.

இங்கு தப்த குண்டத்தில் நீராடியது, விஸ்வரூப தரிசனம், ஸஹஸ்ரநாம தரிசனம், சர்வ தரிசனம் என்று ஒரு சில தடவை பத்ரி நாராயணனனை தரிசித்து, ப்ரம்ம கபாலத்தில் பித்ரு ஸ்ராத்தம் கொடுத்தது, நீலகண்டரின் நேரடி அருளாசி, போன்றவற்றை ஆனந்தமாக அனுபவித்தது, அடியேன் பாக்யம். மீண்டும் அவனை தரிசிக்க இன்னொரு சந்தர்ப்பம் அருளவேண்டும் என்பதே இப்போதும் எம்பெருமானிடம் பிரார்த்திப்பது.

ஸ்தல வரலாறு

இந்த திருத்தலம் பற்றி தனி புத்தகமே போடும் அளவிற்கு புராணங்களும், வட நாட்டு நூல்களும் குறிப்புக்களை கொடுக்கின்றன. பத்ரிநாத்தில் ஸ்ரீமந்நாராயணன் தானே எழுந்தருளித் தவம் புரிந்த தலம் என்பது புராண வரலாறு.

ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ள படி முதல் யுகத்தின் ஆரம்ப காலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தானே உலக நலத்திற்காகவும், பக்தர்களுக்கு சுலபமாக தனது திவ்ய தரிசனத்தைக் கொடுத்து அருள்பாலிக்கவும் பத்ரிநாத் என்ற பத்ரிகாச்ரமத்தில் (உத்தராகண்ட்) அர்ச்சாரூபமாக எழுந்து அருளி உள்ளார்.

நர நாராயணன் : எம்பெருமான் நர மற்றும் நாராயணா என்று இரண்டு தர்மத்தின் உருவங்களாக அவதரித்து துறவறத்தை அமைக்க, பக்திமிக்க இமயமலைகளுக்கு மத்தியில் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, அலகநந்தா ஆற்றின் பின்புறத்தில் இரண்டு கண்கவர் குளிர்ச்சியான மற்றும் வெந்நீர் ஊற்றுகளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு இடத்தை கண்டனர். இந்த இடத்திற்கு பத்ரி விஷால் என்று பெயரிட்டனர். இதில் நரனாக அவதரித்தது ஆதிசேஷன் என்று சொல்லப்படுகிறது. அலகாநந்தா நதிக் கரையில்,  ‘சேஷ நேத்ரம்’ என்று ஒரு பகுதி உள்ளது.  இங்கே ஒரு சிறு பாறை அனைவராலும் வணங்கப்படுகிறது.  இதன் மேல்புறத்தில் ஆதிசேஷ நாகத்தின் கண்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன; பக்கவாட்டில் பகவானின் திருவடிகள் காணப் படுகின்றன.  

கீழே கொடுத்துள்ள இந்த வரலாறு ஒரு செவி வழி செய்தியே தவிர எந்த புராணத்திலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. இங்கு சஹஸ்ரகவசாசுரன் என்று ஒருவன் இருந்தான். அவன் சூரியனிடம் கடினமாக தவம் இருந்து, சாகா வரம் வேண்டும் என்று கேட்க, சூரிய பகவான் அது இயற்கைக்கு முரணானது என்று சொல்லி மறுத்து, வேறு வரம் கேட்க சொல்ல, அவனும் பதினாயிரம் கவசம் வேண்டும், அதில் உள்ள ஒவ்வொரு கவசத்தையும் அழிக்க கூடியவன் பதினாயிரம் நாட்கள் தவம் செய்தவனாக இருக்க வேண்டும், அப்படி ஒரு கவசத்தை அழித்தவுடன் அவனும் மடிய வேண்டும் என்று வரம் கேட்டான். சூரிய பகவானும் அந்த வரத்தை அளித்தார். அதனால் அவன் பதினாயிரம் கவசம் அணிந்து யாராலும் அழிக்க முடியாதபடி இருந்தான்.

பத்ரிகாசிரமத்தில் தவம் இருந்த முனிவர்களுக்கு சிவன், இந்த திருத்தலத்தில் தவம் இருந்தால், இந்த இடத்தில் செய்யும் எல்லா தவங்களும் அது பதினாயிரம் மடங்கு பலன் அளிக்க வல்லது என்று ஒரு வரம் அளித்து இருந்தார்.

சஹஸ்ர கவசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் எம்பெருமானிடம் வேண்ட, அவரும் ஆதிசேஷனுடன் நர நாராயணர்களாக இங்கு அவதரித்தார்கள். ஆதிசேஷனுக்கு உயிர்ப்பிக்கும் மந்திரத்தையும் உபதேசித்து இந்த அசுரனிடம் போரிட ஆரம்பித்தார். அதன்படி ஒரு நாள் ஒருவர் போர் புரிவது, அதே நாள் மற்றொருவர் தவம் புரிவது. போரில் அசுரனின் ஒரு கவசத்தை அழிப்பது, அதனால் மடிந்தால், உயிர்ப்பிக்கும் மந்திரம் கொண்டு ஒருவர் மற்றொருவரை பிழைக்க வைப்பது என்று பேசி வைத்து கொண்டனர். அதன்படி நரனும் நாராயணனும் 9999 நாட்கள் போர் மற்றும் தவம் புரிந்து அசுரனின் 9999 கவசங்களை அழித்து விட்டனர். கடைசி நாள் பிரளயம் ஏற்பட, கடைசி கவசத்தோடு அசுரன் கர்ணனாகப் பிறந்தான் என்று சொல்வார்கள். இந்த நர நாராயணர்களே பின் வந்த யுகத்தில், அர்ஜுனனாகவும் பகவான் கிருஷ்ணன் ஆகவும் அவதரித்தார்கள் என்று இங்கே கூறுகிறார்கள்.

தப்த குண்டம் : அக்னி பகவான் ஒரு நாள் உணவில் நெய் அதிகமாக சேர்த்துக் கொண்டார். இதனால் அவருக்கு ஏற்பட்ட அஜீரண பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று விஷ்ணுவிடம் வேண்டினார். விஷ்ணு, அக்னி பகவானை, தண்ணீராக மாறச் செய்து, அந்தத் தண்ணீரில் பக்தர்கள் நீராடினால் அவருடைய பாவமெல்லாம் நீங்கும் என்றும், அதனால் அக்னி பகவானின் அஜீரண கோளாறும் நீங்கும் என்றும் வரமளித்தார். அந்த சம்பவத்திற்குப் பின் தான் அக்னி பகவான், நீர் ஊற்றாக எடுத்து தப்த குண்டத்தில் பாய்ந்தார் என்கிறது புராணம். சூடான நீர் ஓடும் இந்த தப்த குண்டத்தில் நதிக்கு அருகில் உள்ள அலகாநந்தா நதியில் தொட முடியாத அளவிற்கு குளிர்ந்த நிலையில் நீர் இருப்பது அதிசயமான ஒன்று.

நாரதர் : வ்ருத்தபத்ரி நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு.  நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும்,  பின்னாளில் ஆதி சங்கரர் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குபேரன் : மஹாலக்ஷ்மியை திருமணம் முடிக்க எம்பெருமான் இங்கு குபேரனை அழைத்து விமரிசையாக தன்னுடைய திருமண ஏற்பாட்டை செய்த திருத்தலம். அதனால், குபேரனும் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார்.

ப்ரம்ம கபாலம் : சிவனுக்கும், பிரம்மனுக்கும் முன்னொரு காலத்தில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கிள்ளி எடுத்த பிரம்மனின் தலை கையை விட்டு கீழே விழவில்லை.  சிவன், விஷ்ணுவிடம் இதற்கு பரிகாரம் கேட்டபோது, ‘பூலோகத்தில் ஒரு பதிவிரதையிடம் பிச்சையினை பெற்றால்’, பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று கூறினார். சிவபெருமான், பூலோகத்தில்  பத்ரி ஆசிரமத்தில் நாராயணருக்கு உதவி செய்து கொண்டிருந்த மஹாலக்ஷ்மியிடம் சிவன் பிச்சை கேட்க, மகாலட்சுமி பிச்சை அளித்ததும் சிவபெருமானின் கையில் இருந்த பிரம்மனின் தலை கீழே விழுந்தது. அந்த இடம்தான் இன்று பத்ரிநாத்தில் பிரம்ம கபாலம் என்று அழைக்கின்றனர். இதனால் இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

ஹனுமான் : பத்ரிநாத் செல்லும் வழியில் ஹனுமான் கட்டி என்ற ஓர் இடம் உள்ளது. இங்கு பீமனும் அனுமனும் சண்டையிட்டதாகக் கூறுவர். ஹனுமான் கட்டியைத் தாண்டி சுமார் 4 கி.மீ. சென்றதும் பத்ரிகாஸ்ரமம் காட்சி தரும்.

உத்தவர் : ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,  பத்ரிகாசிரமத்தை தனது ஆச்ரமமாகக் குறிப்பிட்டுக் கூறி உத்தவரை அங்கு சென்று, தனது திருவடி தீர்த்தமான அலகநந்தாவின் புனித தீர்த்தத்தால் மேலும் புனிதமடைய வேண்டும் என்று உபதேசித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது கிருஷ்ண அவதாரம் முடித்துக் கொண்டு, வைகுண்டம் செல்ல நினைக்கும் போது, தனது நண்பரும், அமைச்சரும், பரம பக்தருமான உத்தவர், கிருஷ்ணைரை சந்தித்து, தன்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்ல வேண்டினார். உத்தவருக்கும், அருச்சுனனுக்கு கீதா உபதேசம் செய்தது போன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவருக்கு உத்தவ கீதை எனும் ஆத்ம உபதேசம் செய்கிறார். பின்னர் உத்தவரிடம், உன் வாழ்நாள் காலம் முடிந்த பின் வைகுண்டம் வரலாம் என்றும், அதுவரை பத்ரி சென்று தங்கி பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் இறுதியில் வைகுந்தம் வந்தடைய ஆசி வழங்கினார். கிருஷ்ணர் கூறியபடி, உத்தவர் பத்ரிநாத் சென்று பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு, வாழ்நாள் முடிந்த பின் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார்.

வியாசர் : இந்த மலையில், மணிபத்ரபூர் என்ற மானா கிராமத்தில், ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரத புராணத்தை இயற்றினார். வியாச குகைக்கு எதிரில் உள்ளது. இந்த குகை புராதனப் பெருமையைப் பறைசாற்றியபடி அமைந்திருக்கிறது. இந்த குகைக்குள் அமர்ந்தபோதுதான் வியாசப் பெருமானுக்கு மகாபாரத காவியம் மனதில் ஊன்றியது.  வியாச மகரிஷி, மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல, விநாயகப் பெருமான் இங்கு அமர்ந்துதான் அதை அப்படியே எழுதியிருக்கிறார். உற்பத்தியான சந்தோஷத்தில் பேரிரைச்சலுடன் சரஸ்வதி பிரவாகம் எடுத்ததாகவும், அதனால் வியாசர் சொன்ன மகாபாரதம், விநாயகர் காதுகளில் தெளிவாக விழவில்லை என்றும், ஆகவே வியாச முனிவர் நதியை மறைந்துபோகச் செய்துவிட்டார் என்றும் ஒரு விளக்கம் இங்கே சொல்லப்படுகிறது.   

பாண்டு : இது பாண்டவர்கள் பிறந்த இடமாகவும், அவர்களது தந்தையான பாண்டு மகாராஜா தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. பீமன் கட்டிய பீம்பாலம் வழியாகத் தான் பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியுடன் சென்று முக்தி அடைந்தார்கள் என்று இங்கு நிலவும் செவி வழி செய்தி.

ஆதி சங்கரர்: எம்பெருமானின் உத்திரவு படி பிரம்மா முதலிய தேவர்கள், அலகானந்தா, நாரத குண்டத்தில் இருந்த பகவானின் திவ்ய மங்கள மூர்த்தியை (விக்ரகம்) வெளியில் எடுத்து, பத்ரிநாத்தில் ப்ரதிஷ்டை செய்து அன்று முதல் தேவர்களாலும், மனிதர்களாலும் பகவான் பத்ரிநாத் ஆராதிக்கப்பட்டு வந்தார். இடையில் இதற்கு தடை ஏற்பட்டு, விக்ரகம் மறைந்தது. ஆதிசங்கரர் பத்ரிநாத் வந்தபோது, அவர் கனவில் தோன்றிய எம்பெருமானை, ஆதிசங்கரரே மீண்டும் நாரத குண்டத்தில் இருந்து மீட்டு மறுபடியும் பத்ரியில், முன்னர் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்தார். இதனால் தான் இன்னும் ஆதிசங்கரர் அவதரித்த கேரளா மாநிலத்தில் இருந்து வரும் நம்பூதிரிகளால், அவரால் ஏற்படுத்தப்பட்ட ஆராதன முறைப்படி ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆழ்வார்கள்

பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் 22 பாசுரங்களில் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள்.

திருமங்கையாழ்வார்:

திருமங்கை ஆழ்வார் ஒரு பதிகத்தில், “வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்று பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் செய்தும், “வதரியாச்சிரமத்துள்ளானே” என்ற அடுத்த பதிகத்தில் அந்த க்ஷேத்திரத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானைத் துதிக்கின்றார். ஆழ்வார், ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம் பற்றி வதரிவணங்குதுமே என்று சொல்லி, அந்தத் திருமலையில் எல்லா இடங்களிலும் ஸ்ரீநாராயணன் தவம் புரிந்த இடமாயும், தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டு அருளின இடமாக இருக்கிற ஸ்ரீபதரிகாச்ரம விசேஷத்தை வதரியாச்சிராமத்துள்ளானே என்று சொன்னதால், மேலே சொன்ன ஐந்து பத்ரிகளும், ஆதிபத்ரி எல்லாம் சேர்ந்து இந்த திவ்யதேசம் என்று கொள்ள வேண்டும்.

பெரியதிருமொழி 1.3

  1. வதரி என்னும் இதுத் திருத்தலம் மற்ற திருப்பதிகள் போல் இல்லாமல் வெகு சிரமப் பட்டு அடையக்கூடியது ஆகையால், உடல் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்க வேண்டும், இல்லையானால், உடல் தளர்ந்து போனபின் நெஞ்சால் கூட நினைக்கவும் அரிதாகும். அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே சென்று ஸேவிக்க வேண்டும் என்று அருளிச்செய்கிறார். வயதான காலத்தில், முதுகு கூனிட்டபின், முன்னடி நோக்கி வளைதல் இயல்பு என்றும், அதற்கு முன்பே வதரி சென்று வணங்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
  2. முதுமை வருதற்கு முன்பே நம்முடைய கரணங்கள் சக்தியோடு இருக்கும் இளமையில் பரமபோக்யமான வதரியை வணங்குதல் நன்று என்கிறார். தேனைப் பருகின வண்டுகள் களிப்புக்கு இடமான வதரி என்று சொன்னது “எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே” ( திருவாய்மொழி 10.7.2) என்னும்படியான எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவித்து முக்தாத்மாக்கள் வாழப் பெற்ற வதரி என்கிறார்.
  3. உடம்பில் இளமையில் மறைந்து கிடக்கும் நரம்புகள், முதுமையில் உறிகள் போலே, உடம்பின் மேற்பக்கம் தெளிவாகத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையில் உடல் நடுங்கி திருநாமங்களை வாயினால் சொல்ல முடியாது; ஒரு திவ்ய தேசத்திற்கு காலினால் செல்ல முடியாது; நெஞ்சால் நினைக்கவும் முடியாது; ஆகையால் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல், உடல் திடமாக உள்ள போதே, பக்தியுடன் திருநாமங்களை சொல்லி பரமபோக்யமான வதரி சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  4. முதுமையில் கண்கள் சுருங்கி அவற்றில் இருந்து பீளை பெருகவும், இருமி, பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தடுமாறி நடக்கவும் முடியாமல், இருக்கும் காலத்தில் வதரி வணங்குதல் முடியாத காரியமாகும். அப்படி நேருவதற்கு முன்னமே அங்கு சென்று, ‘கண்ணபிரானே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை’ என்று இருந்த இடையர்களுக்கு, கோவர்த்தன குன்றினை ஏந்தி, பெருமழையில் இருந்து காத்த கண்ணபிரானது, வாளை மீன்கள் குதித்து வாழும் குளிர்ந்த குளங்களைக் கொண்ட வதரியை சென்று வணங்குதல் நன்று என்கிறார்.
  5. இளமையில், மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொல்லுவது இருமுவது என்ற இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டு, தடியைக் காலாகக்கொண்டு, முதுமையில் தடுமாறி நடக்க நேருவதற்கு முன்னே, வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை உடையவனான எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். இங்கு, மாதர்கள் விரும்புதற்கு உகந்தவராக இருந்ததையும், அந்த மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினதையும் சிற்றின்பங்களில் அழிந்ததையும் சொன்னது சம்சாரிகளைப் பற்றி தானே தவிர, ஆழ்வாருடைய நெஞ்சில் ஒரு துளி கூட அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
  6. பலஹீனமான பேச்சுடனே இருமி சரீரம் மெலிந்து பைத்தியம் பிடித்தவர்கள் போல விகாரப்பட்ட மனமுடையராய் வார்த்தைகள் சொல்லி தளருவதற்கு முன்பே, எல்லோருக்கும் ஸ்வாமியாயும், தனக்கு தந்தையாயும், உலகத்திற்கு மூலக் கடவுளாயும், ஒரு காலத்தில் தேவர்களுக்காக ஆழ்ந்த கடலைக் கடைந்தவனாயும் உள்ள எம்பெருமானுடையதான ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். அத்தன் என்பதனால், பொதுப்படையாக உலகத்துக்கெல்லாம் ‘ஸ்வாமி என்பதும், எந்தை என்பதனால், விசேஷித்துத் தமது ஸ்வாமி என்றும் ஆழ்வார் அருளுகிறார்.
  7. உலகில் விசித்திரமான ஒன்றையோ, விகாரமான ஒன்றையோ பார்க்கும் போது கண்கள் கூசி ‘அப்பப்ப!’ என்று மெய் சிலிர்த்துக் கூறுவது வழக்கம். கிழவர்கள் தண்டு கொண்டு கால் ஊன்றி தள்ளி நடந்துகொண்டு, தாம் நெடுநாள் பழகின மின்னிடை மடவார் வீதி செல்லும் போது, அளவு கடந்த முதுமை விகாரங்களைக் கண்டு அந்த மாதர்கள் தங்களுக்குள்ளே அதிசயித்து, பக்கத்து வீட்டுக்காரிகளை அழைத்து அவர்களுடைய எஜமானர் வருகிற அழகைப்பாருங்கள் ‘ என்று காட்டி சிரிப்பார்க்கள். அப்படிப்பட்ட பரிஹாஸங்களுக்கு ஆளாவதற்கு முன்னே வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  8. முதுமையில் கருநெய்தல் போன்ற அழகிய கண்களை உடைய மாதர்கள் இருக்கும் இடத்தின் வழியே செல்லும் போது, ‘அப்பால் ஒழிந்து போங்கள், இங்கே இருக்கக் கூடாது’ என்று அவமரியாதையாகப் பேசுகிறர்களிடம், ஆசைகளை விட்டுத் தொலைத்து நல்வழி போகப் பார்க்க நினைத்தால், பரிமளம் மிக்க குளிர்ந்த திருத்துழாய் மாலையை அணிந்த எம்பெருமானது ஸ்ரீபதரியை வணங்குவோம் என்கிறார். குவளையங்கண்ணியர் என்று சொன்னது கண்ணழகிலே துவண்டு நிற்கும் முதியவர்களின் எண்ணத்தினால் என்று கொள்ளவும்.
  9. இந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்றும் ஞானேந்திரியங்கள் என்றும் இருவகைப்படும். வாய், கை, கால், குதம், குறி என்பன கர்மேந்திரியங்கள்; நாக்கு மூக்கு கண் காது உடல் என்பன ஞானேந்திரியங்கள். பொதுவாக முதுமையில், இவை எல்லாம் படிப்படியாக அழியும். கண் தெரியாதபடியும் காது கேளாதபடியும் அடியெடுத்து வைக்க முடியாதபடியும் முதுமை அதிகரித்து ஒரு மூலையிலே கிடந்து கண்டபடி பிதற்ற நேருங்காலத்தில் வதரியை வணங்குதல் முடியாது. அப்போதைக்கு இப்போதே குளிர்ந்த திருத்துழாயைக் கையிற் கொண்டு, அவனது திருநாமங்களை பாடுதலும் ஆடுதலும் செய்யப்பெற்ற, வதரி வணங்குதல் நன்று என்கிறார்.
  10. வண்டுகள் ரீங்காரம் செய்து குளிர்ந்த மலர்களில் இருக்கும் மதுவை உண்டு மகிழும் அழகிய பூக்கள் சூழ்ந்து திகழும் பத்ரி எனப்படும் இடத்தில் எழுந்தருளியுள்ள நெடுமாலைப் பற்றி மங்கை நாட்டின் வேந்தனான கலியன் சொன்ன பாடல்களை கூட்டமாய்ச் சேர்ந்து ஆடிப்பாடும் தொண்டர்கள் நீள்விசும்பில் பரமபதம் எனப்படும் வைகுந்தத்தில் சென்று ஆட்சி செய்திருப்பார்களே தவிர அற்பர்களாய் மீண்டும் இவ்வுலகிற்க்கு வந்து துவள மாட்டார்கள் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று இந்த தலத்தைப் பற்றிச் சொல்லி வந்தவர் இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று சொல்லி முடிப்பதால் வதரிநாராயணனை முன்னிட்டே வதரி வணங்கினார் என்பது தெளிவாயிற்று.

பெரியதிருமொழி 1.4

  1. ஸ்ரீதேவி, பூதேவி நாச்சிமார்களுக்காக அரிய பெரிய காரியம் செய்த மஹாநுபாவன் எழுந்தருளியிருக்குமிடம் ஸ்ரீபதரிகாச்ரமம் என்கிறார். முதலடியில் பூதேவிக்கு செய்த வராஹ அவதாரமும், இரண்டாம் அடியில் ஸ்ரீதேவிக்கு செய்த இராம அவதாரமும் சொல்லப்படுகிறது. இப்படி நிலமகள் இருவர்க்கும் காரியம் செய்த எம்பெருமான், தான் என்றைக்கும் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் காரியம் செய்வதற்காக, இந்திரன் முதலிய தேவர்கள் தேனொழுகுகின்ற கற்பக நறுமலர்களைக் கொணர்ந்து வணங்குமிடமாயும் கங்கைக் கரையில் உள்ளதாயும் இருக்கிற பதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறார் என்கிறார்.
  2. எம்பெருமானையும் பிராட்டியையும் பிரிப்பதற்கு மாயமான் வடிவு கொண்டு வந்த மாரீசனை ஒழித்ததையும், ஸுக்ரீவனுக்கு விரோதியான வாலியை ஒழித்ததையும் முன்னடிகளில் அருளிச் செய்கிறார். வாலியை, ஆழ்வார் கொடுமையான தொழிலை உடைய பலசாலியானவன் என்று கூறுகிறார். தேனையுடைய திருநாபிக் கமலத்தில் பிறந்த பிரமனோடு கூட தேவர்களும் பல காலம் வந்து வணங்கப் பெற்றதும் பெருகுகின்ற புராதனமாக ஆகாச கங்கைக் கரை மீது உள்ளதுமான ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளியிருக்கிறான். முதுநீர் என்று கங்கை நீரை சொல்கிறார், முதுநீர் என்பதால் புதிதாகச் சுரந்த நீர் அல்ல என்று புரியும். இமம் மே கங்கே யமுநே ஸரஸ்வதி என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டுள்ளமையால் வேதம் போலவே நித்யமான நதி என்பது புலப்படும்.
  3. ஒருவரால் அழிக்க முடியாத லங்கா புரியும் அதற்கு பாதுகாப்பாக இருந்த தெற்கு ஸமுத்ரமும், இராவணனும், அவனுக்குத் துணையாயிருந்த ராக்ஷஸ ஜாதி முற்றிலும் நாசம் அடையும் விதம் தனது மிகச் சிறந்த பராக்கிரமத்தைச் செலுத்திக் காரியம் செய்த ராஜாதி ராஜன் எழுந்தருளியிருக்குமிடம் வதரியாச்சிரமம் என்கிறார். “கடலை வற்றச் செய்துவிடுகிறேன்” என்று இங்கிருந்து கிளம்பும் முன் திருப்புல்லாணியில் சிவந்த கண்களுடன் அம்பு தொடுத்ததனாலும், கடலிடையே அணைகட்டினதாலும், கடல் கெடாவிட்டாலும், “கடல் கெடக் கொடுந்தொழில் புரிந்த கொற்றவன் ” என்று ஆழ்வார் கூறி உள்ளார். கங்கையின் மிடுக்கையும் வேகத்தையும், சூரியன் சுழன்று வரும் மேருமலையை முட்டி வருகின்ற வெண்ணிறமான கங்கை நீர் ஆகாயத்தில் பரவி இருப்பதைப் பார்த்தால், மாளிகைகளின் உச்சியில் இருக்கிற தூண்களில் கட்டப்பட்டுள்ள வெளுத்த துணிக் கொடிகள் காற்றில் அசைந்து பரவுவது போல் இருக்கின்றது என்று ஆழ்வார் சொல்கிறார்.
  4. ‘நெஞ்சே! தொண்டர்களுடைய ‘விரோதியைப் போக்கிப் பரமபதத்தை அளிக்கின்ற பேரருளாளன் ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் எழுந்தருளி இருக்கிறான். அங்கே சென்று அவனை நீ வணங்கி வாழ்வாயாக; இதுவே உனக்கு நான் உரைக்கும் உறுதியான ‘ஒரு நல்வார்த்தை ‘ என்கிறார். அந்த வதரியாச்சிரமம் கங்கைக்கரையிலுள்ளது; அந்த கங்கை, கண்ணன் செய்கிற காரியமெல்லாம் செய்யும். அவன் “ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைச், சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு, காற்றிற் கடியனாய் ஓடி” ( பெரியாழ்வார் திருமொழி, 2.10.1) என்றபடி ஆய்ச்சிகளின் துகில்களையும் ஹாரங்களையும் வாரிக்கொண்டு ஓடுவது போல், மேலுலகத்து மாதர்களுடைய வஸ்த்ரங்களையும் முக்தாஹாரம் முதலியவற்றையும் வாரிக்கொண்டும் பல பல ரத்னங்களையும் தள்ளிக்கொண்டும் பெருகி ஓடுகின்றதாம் கங்கை.
  5. சென்ற பாட்டில் கண்ணபிரானுடைய திருவிளையாடல் ஆழ்வார்க்கு நினைவுக்கு வரவே, மற்றொரு க்ருஷ்ண வரலாற்றை இங்கே பேசுகிறார். பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலையுண்டு அவளை முடித்த வரலாறு தெரிந்த ஒன்று. யசோதையைப் போலவே வடிவு கொண்டு வந்த பூதனையினுடைய மடியிலே நல்ல மகன் போல இருந்து அவளது முலையையுண்டு அவளை முடித்த கண்ணனைக் கண்ட தாயானவள், ‘இனி இப்பிள்ளையை மடியிலெடுத்துக் கொள்ளக்கூடாது, முலையுண்கிற பாவனையில் உயிரை முடிக்கும் பிள்ளை இது’ என்று கூசும்படியாக சூரனாய் வளர்ந்த தலைவன் எழுந்தருளி இருப்பது வதரியாச்சிரமம். இந்த பிள்ளையை நாம் மடியிலே வைத்து முலைகொடுத்துப் பழக்கியதால் இவன் கண்டார் மடியிலும் முலையுண்கிறது ; இனி நாம் இவனை இடுப்பில் எடுத்துக் கொள்ளவே கூடாது என்று கூசினாள் யசோதை என்கிறார். வதரியாச்சிரமம், ஓங்கி இருக்கும் சிகரத்தின் உச்சியிலே அண்டத்தைத் தரிக்கிற செம்பொன்மலையாகிற மேருபர்வததில் விளங்குகின்ற விசாலமான சிகரத்தில் இருந்து விழுந்தது போல் ஓடி வருகின்ற கங்கையின் கரையிலுள்ளது என்கிறார்.
  6. கண்ணபிரான் தொட்டில் பருவத்தில் செய்த லீலை ஒன்றை சென்ற பாசுரத்தில் சொன்னார். இதில் குமாரனான பருவத்தில் செய்த மற்றொரு செயலைச் சொல்லுகிறார். கும்பன் என்னும் இடையர் தலைவனது மகளாகவும் நீளாதேவியின் அம்சமாகவும் பிறந்த “நீளா’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருபவளுமானவும், இதற்கு உவமையாக முடியாது வருந்துகின்ற அல்குல் படைத்தவளுமான, நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை குறித்தபடி யார்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக் கொண்டு அவற்றை அடக்கி அப்பிராட்டியை மணம் செய்து கொண்ட அப்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான் என்கிறார். அந்த வதரி, கங்கைக்கரையில் உள்ளது. கபில மாமுனியின் சாபத்தால் நீறாய்க் கிடந்த தன் பாட்டன்மாரை, சுத்தி செய்தற்காகக் கங்கையைப் பெற வேணுமென்று பகீரதன் தவம் புரிந்ததால் காரணந்தன்னால் என்று ஆழிவார் கூறியுள்ளார். அந்த கங்கையை, பகீரதன் இந்த உலகத்திற்கு அழைத்து வரும் போது / அவதரிக்க செய்த போது, நடுவழியிலே ஒரு மலை தடுத்துக் கொண்டு நின்றதாகவும், கங்கை நீரின் அளவும் வேகமும் ஏற்படுத்திய விசையினால் அந்த மலையை இரண்டு பிளவு ஆகும் படி குத்திப் புறப்பட்டு, அம்மலையிலிருந்த யானைகளையும் தள்ளிக் கொண்டு வந்து சேர்ந்தது எனபது ஒரு விளக்கம். பகீரதன் கொணர்ந்த கங்கா ப்ரவாஹத்தை ஒரு மலை தடுத்த போது, அவன் இந்திரனை நோக்கித் தவம் புரிந்ததாகவும், அவன் தவத்தை மெச்சி, இந்திரன் தனது யானையான ஐராவதத்தை அனுப்பி, அது அந்த மலையை, தன்னுடைய நான்கு தந்தங்களால் இருபிளவாகும் படி குத்தி கங்கைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாதாகவும் புராணம் சொல்லுவது இன்னொரு விளக்கம்.
  7. திருமால் தேவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கிக் கடல்கடைந்து அருளியபோது, கடையப் பட்ட அந்த கடலில் இருந்து ஐராவதம் என்ற யானை, உச்சிச்ரவஸ் என்னும் குதிரை, விஷம், சந்திரன், கல்ப வ்ருக்ஷம், அமுதம் முதலியன உண்டாயின. அவற்றில் தேவேந்திரனுக்கு ஐராவத யானையையும், அமிருதத்தையும், தேவர்களுக்குத் தலைவனாயிருக்கும் சொர்க்க லோகத்தையும் கொடுத்தருளி, அந்தரங்க அடியவர்களான நமக்குத் தன்னையே கொடுத்தருளி உபகரித்த எம்பெருமான் வதரியில் உள்ளான்; அவ்வாச்சிரமம் கங்கையின் கரைமேலுள்ளது. அந்தரத்து அமரர் அடியிணை வணங்க, ஆயிரம் முகத்தினால் அருளி கங்கை, மந்தர மலையில் இருந்து விழுந்தது. அதாவது கங்கையானது ஒரு முகமாக வந்து இறங்கினால், பெரிய விசையோடே வருகிற மிடுக்கைக் கடல் தாங்காது என்று தேவர்கள் எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து ‘ கங்கை பல முகமாகப் பெருகும்படி அருள் புரிய வேணும்’ என்று பிரார்த்திக்க, அவன் ‘ அப்படியே ஆகுக’ என்று அருள் கூர்ந்து கங்கையை நியமித்த வளவிலே கங்கை பல முகமாகப் பெருகிற்றாம். அதையே, கங்கா தேவியின் திருவடிகளிலேயே வணங்கிப் பிரார்த்தித்தனர் என்றும் கங்காதேவியே ஆயிரம் முகமாக பிரிந்து வந்தாள் என்றும் கூறுவார் உளர்.
  8. மாரீசனாகிற மாயமான் மேலே அம்பு எய்து அதனை முடித்தவனும், பரம பக்தனான ப்ரஹ்லாதனுக்குக் கொடுமை செய்த ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்து ஒழித்தவனும், பிரமனால் சிவனுக்கு நேர்ந்த ப்ரஹ்ம ஹத்தி சாபத்தைத் தொலைத்து அருளினவனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். தவம் புரிந்துயர்ந்த மாமுனி கொணர்ந்த என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர். ஒன்று பெரிய தவம் செய்து பகீரதன் கொண்டுவந்த கங்கை என்பது. மற்றொன்று, பெரிய தவம் புரிந்து பிரம்மரிஷி என்று உயர்ந்த, விசுவாமித்திர முனிவர், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன்னுடைய யாகத்தை காப்பதற்காக அழைத்துக் கொண்டு போன போது கங்கையின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டே கங்கைக் கரை மேல் சென்றதால், தவம் புரிந்து உயர்ந்த மாமுனியினால், ஸ்ரீராம லக்ஷ்மணர்களைத் தன் கரைமீது கொண்டு வரப்பெற்ற கங்கை என்ற விளக்கம் சொல்வதுண்டு.
  9. எல்லா உலகங்களில் உள்ள எல்லா பொருட்களையும், பிரளய காலத்தில், தன்னுடைய திருவயிற்றிலே வைத்து காப்பாற்றியவனும், உபயவிபூதி நாதனுமான எம்பெருமான் வதரியாச்சிரமத்துள்ளான். “ஒண்சுடர் எய்ந்த உம்பரும் ஊழியுமானான்” என்றது மேலுலகத்திற்கும் கீழுலகத்திற்கும் நாதன் என்று சொன்னது. உம்பரும் ஆனான் என்பதனால் மேலுலகத்திற்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ‘ஊழியுமானான்’ என்பதனால், காலம் நகரக்கூடியதான இவ்வுலகுக்கு நிர்வாஹகனாயிருப்பதை சொல்லிற்று. ப்ரஹ்மலோகத்தில் இருந்து நடுவே வழிபண்ணிக்கொண்டு அதற்குக் கீழ்ப்பட்ட அந்தரிக்ஷலோகத்திலே வந்து இறங்கி, அங்கு நின்றும், பூமிப்பிராட்டி பொறுக்க மாட்டாமல் தடுமாறும்படி, பூமியிலே வந்து பெருகுகின்ற கங்கையின் கரைமேலுள்ளது வதரியாச்சிரமம்.
  10. பெரிய வேகத்தோடு வருகிற அலைகளை உடைய தெளிந்த தீர்த்தத்தை கொண்ட கங்கையின் கரைமேலே ஸ்ரீபதரிகாச்ரமத்திலே எழுந்தருளி இருக்கிற கடல் வண்ணனான ஸ்ரீமந் நாராயண மூர்த்தியைச் சிந்தித்துத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த சிறந்த இப்பாசுரங்களை ஓதவல்லவர்கள், கடல் சூழ்ந்த மண்ணுலகத்தை நெடு நாள் ஆண்ட பின் ப்ரஹ்ம லோகத்தை நிர்வஹித்து அதன்பிறகு நித்யஸுரிகளோடே ஒரு கோஷ்டியாக இருக்கப் பெறுவர். எந்த எந்த பலன்களை விரும்பினாலும் அந்த அந்த பலன்கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்குமென்பது உண்மைப்பொருள். தம்முடைய கவன ஸாமர்த்தியத்தால் இல்லாமல், எம்பெருமானுடைய இன்னருளால் செய்யப்பட்ட பாசுரம் எனபதை பனுவல் என்ற வார்த்தையால் ஆழ்வார் சொல்கிறார்.

சிறிய திருமடல் 74:

நிறைய திவ்யதேசங்களைப் பற்றி சொல்லும் இடத்தில, பாரோர் புகழும் வதரி என்று ஆழ்வார் கூறுகிறார்.

பெரியாழ்வார் :

பெரியாழ்வார் திருமொழி (4.7.9) பாசுரத்தில், பெரியாழ்வார் பத்ரிநாத் பற்றி சொல்லி உள்ளார். தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார்.

மீண்டும் இன்னும் ஒரு திவ்யதேசம் பற்றி பார்க்கும் போது சந்திப்போம் நன்றி.

Kurangugal Malaiyai Nooka

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our sampradhayam in the hymn Meyyerke meyyanaagum.
  • In the next hymn Soodhanaai Kalvanaai, Emperumaan entered the heart of Azhwaar and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal. (Virumbi ninru)
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy. (ini thirai thivalai modha)
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham (Kuda Thisai mudiyai)
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees only. (Paayum Neer Arangam)
  • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar. (Panivinal manamadhu onri)
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to create something new to speak about Him. (Pesitre pesal allaal)
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan. (Gangaiyil punidhamaaya)
  • Finally, Emperumaan made Azhwaar to realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him. (Vella Neer parandhu paayum)

These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

In the first hymn in this subsection, Kulithu Moondru Analai (25) doing Naichiyaanusandhaanam, we saw Azhwaar mentioning that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything from those qualifications onward.

In the next hymn, Podhellam Podhu Kondu (26), we saw Emperumaan asking Azhwaar, that he could do the poojas and singing slokas on Him, which anyone could do, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams. We also saw Azhwaar mentioning that he did not do them as well.

Now let us move on with the next hymn.

Hymn 27

Kurangugal malaiyai nooka kulithu thaam purandittu odi, tharanganeer adaikal utra salam illa anilam polen, marangal pol valiya nenjam, vanjanen nenju thannaal, Aranganaarku aat seyyaadhey aliyathen ayarkindrenne. Thirumaalai 27

The ape warriors pushed the mountains into the sea and the squirrels dipped in the water and then flipped into the sand on the shore to drop sand particles back to the sea to construct the bridge enabling them to participate in the activities that were related to Rama. The squirrels were sincere and not hypocritical, in dropping the sand to reclaim the sea with swelling waves. Azhwaar sings that he was not sincere like squirrels, but as hard-hearted as trees, and deceptive. Azhwaar completed the song that though he was eligible to perform all the services to Thiruvarangan, did not do any sincere service to Emperumaan and his life became useless.

As sung by Azhwaar in the last two verses, though he did not do any good deeds that humans could do, Paramathmaa stated that He accepted the services that were carried with good intention by squirrels and monkeys, when He took Rama incarnation, same way as He accepts the services of Nithyasoories, like Vishwaksena, Ananthazhwaan and Garudazhwaar in Paramapadham. When Periyaperumal inquired Azhwaar whether he could do any such thing, Azhwaar responded negatively in this hymn.

Kurangugal malaiyai nooka

The usage of plural for monkeys and singular for mountains, denotes that the number of monkeys is more and the number of mountains is few and one mountain is pushed by many monkeys. Although every ape warrior was capable of lifting a mountain like a small stone, the commentator says that many monkeys are touching a mountain out of a desire to put in their efforts to take part in the services that were related to Rama. The commentator further asked, would there be any desire for the animals to do such service and responded that, when Sri Rama, the apt Lord who accepts the service, is seen with the bow and arrow in His hand, all who are knowledgeable (human) and those who do not have the knowledge, (non-human, like animals, birds, insects and all) including a tiny matter would do the services.

Malaiyai nooka

Azhwaar did not use the word poda to indicate that the mountains being dropped into the sea but nooka to mean to push the mountain. This only shows that one set of monkeys push the mountain for some distance, before another set of monkeys take over and go towards the sea. In this way the mountains without being lifted by any, were simply pushed from one hand to another into the sea .

Kulithu

In the Ramayana, Yutha Kaantam (5.9), Rama said that His body was getting hot with the thoughts on Sita, and if He stays in the ocean for a while, the glowing Kaamagni, even in the water would still trouble and all the water would dry up. The narrator says that all the ape warriors who saw the plight of Emperuman due to His separation from Sitapiraati , were engaged in Rama’s work very briskly in constructing the bridge over the sea.

Kulithu … anilam polen

Let us look at Azhwaar’s first thoughts from the perspective of the squirrels .

  • Seeing the speed with which the monkeys were pushing the mountain, squirrels thought that the speed was inadequate for Emperumaan’s longing to reach Sita Piraati as soon as possible.
  • If the mountains, were simply thrown into the sea, the bridge could not be built. They had to be plastered, and not a single monkey did that.
  • To plaster the mountains, sand is needed, and that too in between the mountains, and none of these monkeys were doing the same.
  • So, the squirrels dipped into the sea, swam ashore and flipped in the sand, and with the sand on their bodies, bathed in the sea again in between those mountains in the sea. (Kulithu).
  • Thus the squirrels thought that they were plastering the mountains in the sea.
  • The squirrels also thought that the frequent dipping into the water and going to the shore with dripping water would help drying up the water in the sea, so that constructing the bridge for Rama would become easier.
  • The squirrels did not think that these activities so minuscule and would not make any significant difference in the construction of the dam but were very keen to engage themselves in the activities towards Rama’s objective.
  • Azhwaar used the word ‘Thaam‘ to indicate that the squirrels were very proud in the service of plastering the mountains which the monkeys could not do.
  • Thaam can also be meant to indicate the small size of their body.
  • After dropping the sand in the water, the squirrels bathed again and ran far away in the shore, beleiving that would enable their bodies to attract more sand by rolling their bodies on the sand back and forth. This Azhwaar calls it as “purandittodi”
  • Noticing the squirrels running far and fast, the monkeys asked the reason for such a speed in their activities. The squirrels answered that, Sri Rama was saddened. Therefore, His lunch should be at the Northern Entrance of Lanka and that’s why they were hastening and were disapproving the monkey’s inadequate speed. The squirrels responded that Ramapiran is so saddened and he would like to have his lunch on the other side of the sea, which is the northern part of Sri Lanka. Squirrels also complained that the speed of the work done by the monkeys was not enough.
  • The squirrels continued the service, without worrying about whether they could finish the thing on their own or not, because of the desire in participating in the activities for Rama.
  • These little squirrels tried to block the ocean that was with swelling waves. (tharanga neer adaikal )
  • The squirrels began to think that they were the supervisors and managing the activities of blocking the ocean and the helping monkeys which were pushing the mountains into the sea were the subordinates. the word (“utra”)
  • Squirrels did this as service, without expecting any thing in return. (“salam illa anilam“)
  • Here Azhwaar is giving an explanation as to why these activities of the squirrels, which were not really helpful in completing the bridge, were considered as services towards Emperumaan. It is the purity in their minds, that was enough for Azhwaar to count these activities towards Rama’s objectives. What was in the minds of the squirrels was that Emperumaan should reach Sri Lanka at the earliest.

The word “Salamila” could also mean temptation. Based on that meaning, the commentator provides one more explanation. Human beings are bound by the Shastras for carrying out all activities, whereas these animals like monkeys and squirrels are not bound by any shastras and do not even have limbs to do services like human beings. But here, the lowly animals did lot of things like bathing, running from shore to the sea and return, sticking sand on their bodies, pushing mountains, etc. and with all good intentions. Based on the meaning of Salamila as temptation, commentator explains that Azhwaar felt that he did not do any such activities and also he did not even had the good intentions like those animals. Azhwaar had mentioned this not only in this hymn but also in the previous hymn, kulithu moondru .

All wishes of Emperuman have been already fulfilled, hence what He expects from the Jeevathmaas are only the above good intentions. Nothing can be done by the imperfect souls to the comprehensive Emperumaan. But if Jeevathmaas thinking what they can do with their meagre knowledge and power, and abstain from doing the services because of that reason, they are considered unblessed. Emperuman, who is completely comprehensive, will accept even small things from every one, with complete happiness. There are only a very few jeevathmaas who do things towards Him without any expectation, like the squirrels. Azhwaar felt that he did not even have such involvement like those squirrels .

Some hymns on the construction of the bridge

Kalaiyum, kariyum, parimaavum, thiriyum kaanam kadandhu poi, silaiyum, kanaiyum thunaiyaaga chendraan, vendri serukalathu, malai kondu,alai neeranai katti, mathil neer ilangai vaal arakkar thalaivan thalai pathu aruthu uganthaan Saalagirammam adai nenje (Periya Thirumozhi 1.5.1)

Mallai munneer atharpada vari venchilai kaal valaivithu kollai vilangu pani seyyak kodiyon ilangai pugal utru, thollai marangal pugapeydhu thuvalai nimirndhu vaananava kallal kadalai adaithaan oor Kannapuram naam thozhudhume (Periya Thirumozhi 8.6.4)

Malai adhanaal anai katti mathil ilangai azhithavane ! (Kula Sekara Azhwaar, Perumaal Thirumozhi 8.8)

Kurai kadalai adal ambaal maruga veydhu kulai katti maru karaiyai adhannal yaeri, eri nedu vel arakkarodu ilangai vendhan innuyir kondavan thambikku arasum eenthu (Kula Sekara Azhwaar, Perumal Thirumozhi 10.7)

Oru Villaal Ongu munneer anaithu ulagangal uyya, seruvile arakkar konai setra nam sevaganaar (Thondaradipodi Azhwaar, Thirumalai 11)

Marangal Pol Valiya Nenjam

In the 17th hymn, Azhwaar sang that his heart was hardened like iron, and here he sang that his heart was as strong as trees. Azhwaar called his heart tree, because iron could be molded to a desired shape when smelted in hot furnace, but the wood would turn to ashes if placed on fire.

There is also a school of thought as, “salamilla marangal pol“, and the explanation given is that the wood can be shaken by a weapon, whereas Azhwaar’s heart was stronger than that and nothing could shake it.

Vanjanen

Azhwaar says that with such a hardened heart, he was able to pretend as though his heart melted thinking about Emperumaan. Azhwaar said that he was fully involved into all other worldly activities, but could not get involved in the matters related to Paramathma, and at the same time he was able to make onlookers believe as though Azhwaar was true in matters related to Emperumaan and no one would be like Azhwaar. Azhwaar said that he was hiding his true colours and live differently. The same thought was shared in the hymn 17, when Azhwaar mentioned “irai irai urugum vannam” to highlight his disguised life.

Nenju Thannaal

Azhwaar said that he could have done at least some service with some involvement to Him with the heart given by Him and who was so nearby, like the squirrels who did the activities with good intention.

Aranganaarku aat seiyaadhey

Devotion and service to Emperumaan, means doing it to the fullest, and as said earlier, if it is done with lesser involvement, it does not become service to Him. But looking at Emperumaan, who took the good intentions of the squirrels themselves as Service, Azhwaar said that Emperumaan could have taken even the services done with lesser involvement as though a complete service to Him.

Alliyathen

Lakshmanan said In Ramayana (Ayodhya canto 31-25), that he would do all the services to Sita and Rama, while they were moving happily on the slopes of the mountains, when they were awake or when they were sleeping. Azhwaar felt sad that his soul, which could have delivered all the services, all the times, like ‘ozhivil kaalam ellaam udanaai manni vadivilla adimai seiya” was wasted.

Ayarkindrene

Azhwaar says that the reason why his soul was wasted like this was due to him forgetting the Emperumaan and not because he was not eligible. Here is a quote from the great hymn of Thirumangai Azhwaar (Periya Thirumozhi 6.2.2), “marandhen unnai munnam marantha madhiyin manathaal, iraanthen” meaning that I forgot you, I died,  I had forgotten you then, in that forgotten mindless state, I lost all and fell into the trap of birth-death, cycles, suffering pain and miseries. 

Azhwaar in this subsection of Naichaanusanthaanam, said in the first hymn that he did not even have the eligibility to follow any of the karma, gnana, bakthi (actions, knowledge and devotion) routes, which were accorded to him. In the second hymn, he said that he did not follow the steps followed by any human like doing Poojas and the Praising the Perumal. In this third hymn, Azhwaar continued his denial or naichaanusanthaanam, that he did not do even what the squirrels and monkeys had done according to their abilities with good intentions.

With this, let us conclude this hymn and move onto the next hymn in the next weblog, thanks

068 திருகண்டமென்னும் கடி நகர் Thirukandamenum Kadinagar

புண்டரீகவல்லி ஸமேத புருஷோத்தமன் திருவடிகளே போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’
மூலவர் நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி
உத்ஸவர்
தாயார் புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்11
மங்களாசாசனம் பெரியாழ்வார் 11
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி.

Google Map

திருக்கண்டமென்னும் கடிநகர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

கோவில் பற்றி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தேவப்ரயாகை அமைந்திருக்கிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் பத்ரிநாத்தில் இருந்து சுமார் 290 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன. அலகநந்தா நதியுடன் பாகீரதி சங்கமமாகும் தேவப்ரயாகை ( ரிஷிகேஷில் இருந்து 70 கிமீ ) ; அலகாநந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரப்ரயாகை (140 கிமீ) ; அலகநந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணப்ரயாகை (170 கிமீ); அலகநந்தாவுடன் நந்தாகினி சேரும் நந்தப்ரயாகை (190 கிமீ) ; அலகநந்தாவுடன் கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்ரயாகை (260 கிமீ) என ஐந்து ப்ரயாகைகள் ( பஞ்ச ப்ரயாகை) பத்ரிநாத்திற்கு முன்பு உள்ளன. தேவப்பிரயாகை  அலஹாபாத்தின் திரிவேணி சங்கமம் போன்று வழிபடப்படும் வரும் ஒரு புண்ணிய சங்கமம் ஆகும். அமைதியாக நகர்ந்து பச்சை நிறத்துடன் வரும் பாகீரதியும், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து இளம் சிவப்பு நிறத்துடன் வரும் அலகநந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு ‘கங்கை’ எனப் பெயர் மாறுகிறது. 

Thanks to Google Maps

ப்ரயாகை என்றால் சங்கமிப்பது; இங்கு பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிப்பதாலும், இங்கு பிரம்மா, விஷணுவே தேவன் என்று அவருக்காக சிறந்த யாகத்தை செய்ததாலும், இந்த இடத்தை இந்திரனே பாதுகாப்பதாலும், இது தேவப்ரயாகை என்று பெயர் பெற்றது.

ப்ர என்றால் சிறந்த யாகம் அல்லது வேள்வி என்று பொருள். மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு ப்ரயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ரயாகை என்றாயிற்று என்று கூறுவார்கள். பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவம் செய்ததாக வரலாறு. ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ரயாகை என்றும் சொல்வர்.

கண்டம் என்றால் ஒரு பகுதி என்றும் கடி என்றால் மணம் கமழும் என்றும் அர்த்தம். மணம் கமழும் பகுதி என்று ஆழ்வாரால் பாடப்பட்ட பகுதி, கண்டம் எனும் கடி நகர் ஆகும்.

கடி என்றால் ஒரு நொடி பொழுது என்றும் இந்த திவ்யதேசத்தில் ஒரு நொடி பொழுது இருந்தால் எல்லா ஜென்மங்களிலும் செய்த பாவங்களை போக்கி விடும் என்று ஓர் அர்த்தம் சொல்வார்கள்; 108 திவ்யதேசங்களில் இப்படி சொல்லப்பட்ட திவ்யதேசங்கள் மூன்று, அவை, கண்டமெனும் கடி நகர், திருக்கடிகை, திருக்கடித்தானம் (மலையாள திவ்யதேசம்) ஆகும்.

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்று அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் மகாதேவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் உத்சவர் உண்டு. ஆண்டுக்கு பத்து நாட்கள் உற்சவம் காண்கிறார்.

ஆதி சங்கரர் நிறுவிய கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்று கூறப்படும். ஸ்வாமி ராமானுஜரும் மங்களாசாசனம் செய்த க்ஷேத்திரம் ஆகும்.

இங்கு அடியேனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த சங்கமத்தில் அடியேன் தர்ப்பணம் செய்ய உதவிய குருஜிக்கு / ஆச்சர்யனுக்கு, தர்ப்பணம் செய்துவைத்த பின் ஒரு சிறு காணிக்கையை சமர்பித்தேன். அவர் அதில் ஒரு பாதியை எடுத்துக்கொண்டு, மீதியை 300 படிகள் மேல உள்ள மெயின் ரோட்டில் உள்ள கிராம அலுவலத்தில் கட்டி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார். நாங்கள் சென்றது நவம்பர் மாதம் (2014), பனி குளிர் மழை இருந்த நிலைமை. அப்படி செய்த அந்த குருஜியை பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம். இன்னும் ஒரு வாரத்தில் அந்த பக்கம் வரும் பக்தர்கள் சுத்தமாக நின்று விடுவார்கள், ஆறுமாதம் சென்ற பிறகு, கோடை காலத்தில் தான் ஏப்ரல், மே முதல் மறுபடியும் பயணிகள் வருவார்கள். கீழே அடியேன் கொடுத்துள்ள படங்களை பார்த்தாலும் எங்களைத் தவிர வேறு யாரும் அந்த சமயத்தில் அங்கு இல்லை என்பது தெரியும். இருந்தாலும் அந்த குருஜியின் நேர்மை எங்களை ஆச்சர்யப்பட வைத்தது. அதைவிட ஆச்சர்யம் , அவர் சொன்ன காரணம். ‘இன்னும் ஆறு மாதத்திற்கு பயணிகள் வரமாட்டார்கள், என்னை போன்று இங்கு இருக்கும் குருமார்களை இந்த கிராம மன்றம் தான் வரும் ஆறு மாத்திற்கு காப்பாற்ற வேண்டும். அதனால் அவர்களிடம் கொடுப்பது தான் முறை’ என்றார். எங்கள் கண்கள் கலங்கியது உண்மை. அவருக்கு நன்றி சொல்லி, இன்னும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து அதையும் அவர் முன்பே இரண்டாக பிரித்து அவருக்கு ஒரு பங்கும், அந்த அலுவலத்தில் இன்னொரு பங்கும் செலுத்துவிட்டு வந்தோம். தேவப்பிரயாகை ஏன் இன்னும் புண்ணியபூமியாக இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

ஸ்தலபுராணம்

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான் என்றும், இங்குள்ள ஆலமரம் தான்
ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில் தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.

பாண்டவர்கள், அவர்கள் சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராட வேண்டும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடும் என்று மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு. அப்படி சொல்லப்பட்ட சங்கமம், இந்த தேவபிரயாகையா அல்லது கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் அலகாபாத் அருகில் உள்ள திருவேணிசங்கமமா என்ற ஒரு கருத்தும் உள்ளது.

பிரம்மா, இவ்விடத்தில் செய்த யாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம். பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.

ஸ்தலவரலாறு மற்றும் ஆழ்வாருக்கு கிடைத்த அனுபவம் பற்றி மேலும் ஆழ்வார் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆழ்வார்

பெரியாழ்வாரால் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் இது. இந்த பதிகத்திற்கு முன்பு ஆழ்வார், எம்பெருமான் உகந்து அருளிய திருக்கோட்டியூர் திருமாலிரும்சோலை முதலிய திவ்ய தேசங்களையும், அவற்றில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான்களின் நிலையை அனுபவத்தாற்போல், வடநாட்டு திவ்யதேசமான கண்டமெனும் கடிநகர் திவ்யதேசத்தையும் திவ்யதேச எம்பெருமானையும் அனுபவிக்கும் பதிகம். தோஷங்கள் கூடிய இந்த சம்சாரத்தில் இருந்து நம்மை திருத்துவதற்காக எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரத்தின் போது, தன் திருவடிகளை தீண்டிய ஏற்றத்தாலே, சகல லோக பாவனத்துடன் எல்லாக் காலங்களிலும் பிரவாகமாக ஓடிக்கொண்டு இருக்கும் கங்கைநதியின் கரையில் எழுந்தருளி இருக்கும் புருஷோத்மனையும், இந்த திவ்யதேசத்தின் வைபவத்தையும் பெருமையாக பேசி இந்த பத்து பாசுரங்களில் அனுபவிக்கிறார். இந்த பாடல்களை எங்கே இருந்து கொண்டு படித்தாலும், இந்த திவ்யதேசத்திற்கு வந்து கங்கையில் நீராடி, எம்பெருமானின் திருவடிகளில் சேவை செய்த பலனுக்கு ஈடாகும் என்று ஆழ்வார் சொல்கிறார்.

ஒவ்வொரு பாடலிலும் எம்பெருமானின் பெருமையும், கங்கையின் பெருமையும் சேர்த்து சேர்த்து சொல்லியிருக்கிறார்.

பாடல் எம்பெருமானைப் பற்றி ஆழ்வார் சொல்வதுகங்கையைப்பற்றி ஆழ்வார் சொல்வது
1தங்கையாகிய சூர்பனகைக்கு மூக்கையும் தமயனாகிய இராவணனுக்கு தலையையும் அறுத்த நம் சக்கரவர்த்தி திருமகன், அயோத்தியில் எழுந்தருளி, எல்லா இடங்களிலும் தன்னுடைய கீர்த்தி விளங்கும்படி பத்தாயிரம் ஆண்டுகள் அரசாண்ட நம் புருஷோத்தமனுக்கு அமைவிடம் இந்த திருத்தலம். சர்வலோகத்திற்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பிராட்டியையும் எம்பெருமானையும் முறையில் விரும்பாமல், முறை கெட விரும்புவர்களுக்கு கிடைக்கும் பலன் இது என்று ஆழ்வார் கூறுகிறார். பிராட்டியை தள்ளி, (உபேக்ஷித்து) எம்பெருமானை விரும்பிய சூர்பனகைக்கு மூக்கு போனது; எம்பெருமானை தள்ளி, பிராட்டியை விபரீதமாக அபகரித்த இராவணனுக்கு உயிரே போனது. “எம் தாசரதி போய் எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன்” என்று சொன்னது, மனிதனாக திருஅவதாரம் செய்தபோதும், பரத்வத்தை சொல்வதற்காக என்று கொள்ளலாம். எம்பெருமானை விட, அவன் இருக்கின்ற திவ்யதேசத்தை ஆழ்வார் கொண்டாடுகிறார்.கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் கங்கை” என்று சொல்லி, எங்கே ஸ்னானம் செய்யும் போது கங்கை என்று சொல்லி கொண்டால் கூட பாவங்களை போக்கும் சிறப்பு மிக்க கங்கை என்று ஆழ்வார் சொல்கிறார்.
2த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான் வளர்ந்த வேகத்தைப் பார்த்த சந்திர சூரியன் அஞ்சியபடியேயும், நீல நிறத்தில் ஒரு திருவடியால் பூமி முதலான கீழ் உலகங்கள் எல்லாவற்றையும், இன்னொரு திருவடியால் மேலுலகங்கள் அனைத்தையும் அளந்து தானே எல்லா உலகங்களுக்கும் சேஷி என்றபடியேயும் காட்டிய புருஷோத்தமன் இருக்கும் இடம் இந்த திவ்யதேசம் என்கிறார். எம்பெருமானின் திருவடிகளில் திருத்துழாயும் அவன் திருவடிகளை விளக்கின தீர்த்தத்தை தலையில் தரித்துக்கொண்டு சிவபெருமானின் சிரஸில் இருந்த கொன்றை மலர்களும் கலந்து வானில் இருந்து பூமிக்கு வரும் கங்கை நதியின் கரையில் உள்ள கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
3 த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான், பாஞ்சசன்யமாகிய சங்கினை தன்னுடைய திருவதரங்களில் வைத்து ஒலி எழுப்பி, தீயை பொழிகின்ற சக்கரத்தை இன்னோரு திருக்கரத்தில் ஏந்தியபடி நமுசி முதலிய அசுரர்களின் தலைகளை உருட்டி ஏறிந்தவனாகவும் நம்போன்ற பக்தர்களை காப்பவனாகவும் இருக்கின்ற நம் புருஷோத்தமன் உறையும் இடம் இந்த திவ்யதேசம் என்கிறார். எம்பெருமானின் திருவடிகளை சுத்தம் செய்யும் பிரம்மனின் கைகளிலும், பிறகு சிவபெருமானின் சிரசிலும் பட்ட நீரானது வரும் வழியில் ஒளி தரும் இரத்தினங்களை சிதறியபடி ஓடும் கங்கையின் கரையில் உள்ள கடிநகர் என்கிறார்.
4இந்திரன் போன்ற தேவர்கள் செருக்குடன் அரசாளும் படியாக, அவர்களுக்கும் தனக்கும் எதிராகவரும் சேனைகளை யமலோகம் செல்லும்படி நாந்தகம் என்ற வாளை ஏந்திக்கொண்டு உள்ள எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார். ஹிமவானிடத்தில் தொடங்கி, கடலளவும் இரண்டு கரைகளில் புரண்டு ஓடும் நீரில் ஸ்னானம் முதலியவை செய்து தங்களுடைய பாவங்களை போக்கிக்கொள்கிற மனிதர்களுக்கு உதவும் கங்கை என்று அதன் புகழ் பாடுகிறார்.
5கலப்பையையும் உலக்கையையும் ஸ்ரீ சார்ங்கம் என்ற வில்லினையும் அழகிய ஒளிபொருந்திய திருவாழியையும் ஸ்ரீ பாஞ்சசன்யத்தையும் கோடாரியையும், ஸ்ரீ நந்தக வாளையும் தன்னுடைய பக்தர்களின் விரோதிகளை அழிக்கும் ஆயுதங்களாக தானே ஏந்தி கொண்டு அதில் பெருமையும் படும் எம் புருஷோத்தமன் உறையும் இடம் என்கிறார். அநேக ஜென்மங்களில் கூடி திரண்ட பாவங்களை எல்லாம் ஒரு நொடி பொழுதில் தன்னுடைய ஜலத்தினாலே கழுவி விடும் பெருமை உடைய கங்கை என்கிறார்.
6இந்திரனின் ஏவல்படி, சமுத்திரம் அளவு தண்ணீரை ஏந்திக்கொண்டு மேகங்கள், திருவாய்ப்பாடியில் வந்து, கேட்டவர்கள் குடல் குழம்பும்படி இடித்து சப்தம் செய்து, சலசலவென்று குடத்தில் இருந்து கொட்டுவது போல் தொடர்ந்து ஏழு நாட்கள் பெருமழையாக பெய்து கொண்டு இருக்க, மேகங்களின் பகைமையையும் திருவாய்ப்பாடியில் உள்ளவர்களின் எளிமையும் கண்டு, அவர்கள் மேல் ஒரு மழைத்துளி, ஒரு கல், ஒரு இடி இவை எதுவும் விழாமல், ஒரு குன்றினை குடையாகப் பிடித்து தான் அவதரித்த தேசமான மதுராவில், கம்சனை கொன்று, தாய் தந்தையரை விடுவித்து, அங்குள்ளோரையும் நன்றாக வாழ வழி செய்த எம்பெருமான், புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் கண்டமெனும்கடி நகரில் வாசம் செய்கிறான் என்கிறார். பல யாகங்களை செய்த மேன்மையான முனிவர்கள் அலை அடித்துக்கொண்டு இருக்கும் கங்கையில் ஸ்னானம் செய்யும் போது, யாகம் நடக்கும் இடத்தில் இருக்கும் கலப்பை போன்ற உபகரணங்களை ஆற்றில் தள்ளிக்கொண்டு போகும் கங்கை என்று கூறுகிறார்.
7கம்சனின் வில்விழவிற்கு என்று சென்று அந்த ஆயுதசாலையில் கம்சனுக்கு பிடித்த வில்லினை உடைத்து, வேழத்தை முறுக்கி அதன் குவலயாபீடத்தை உடைத்து துவம்சம் செய்து, சாணுரமுஷ்டிகரான மல்லர்களின் உடல் நொறுங்கி விழும்படி செய்து பிறகு கம்சனை கீழேபிடித்து தள்ளி தன் திருவடிகளால் உதைத்து கொன்று விட்ட புருஷோத்தமனுக்கு உகந்த தேசம் இந்த கண்டமெனும்கடி நகர் என்கிறார். ஐராவதத்தின் மத ஜலமும், சொர்க்கத்தில், என்றும் இளமை குறையாத தேவ மகளிர் அணிந்த சாந்தும், கற்பகமலரும் எல்லாம் சேர்ந்து ஓடி வருகின்ற கங்கை என்று இந்த பாசுரதத்தில் சொல்கிறார்.
8கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக்கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியைக்கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக் கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போகச்செய்து விடுகிறான் என்பது கருத்து. பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் இந்த திவ்யதேசம் என்று பெருமையுடன் கூறுகிறார்.
9தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடினகர் என்கிறார். பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார்.
10விஷ்ணு, லக்ஷ்மி நித்ய வாசம் செய்யும் பரம் என்னும் ஸ்ரீவைகுந்ததை அடைவதே தமக்கு உபாயம், அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி முக்தியை ஏற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் இரக்கமுடைய எமது புருடோத்தமன் கங்கைக் கரைமேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்து அருளி உள்ளான் என்பது ஒரு பத்தாவது பாடலுக்கான ஒரு சிறிய விளக்கம். ***அழகான நல்ல நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த கங்கைக்கரை
***இந்த பாசுரத்திற்கு நம் உரையாசிரியர் கொடுக்கும் விளக்கம் இன்னும் ஆழ்ந்த பொருள்களை உள்ளடக்கி உள்ளது. அதனை புரிந்துகொள்ள அடியேன் முயற்சி செய்து உள்ளேன்; ஆனால் அவை இன்னும் முற்றுப்பெறவில்லை, இன்னும் முயற்சி தேவையாக உள்ளது என்பதே நிதர்சனம்.

மூன்றெழுத்து அதனை மூன்றெழுத்து அதனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை, ஏற்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய எம்புருடோத்தமன் இருக்கை மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானான், கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல் கண்டமென் னும்கடி நகரே.

மூன்றெழுத்து அதனை – அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று எழுத்துக்களை
மூன்றெழுத்து அதனால் – நிருக்தம் என்பது வடமொழியில் மூன்று எழுத்துக்கள். அது வேத அங்கங்களான சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல் இலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பா இலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்ற ஆறில் ஒன்று, இந்த நிருக்திகிரமத்தினால் என்பது மூன்று எழுத்து அதனால் என்பதற்க்கு விளக்கம் ஆக சொல்லபடுகிறது.
மூன்றெழுத்தாக்கி – ஓம் என்று ஒரு பிரணவ மந்திரத்தை அகார, உகார, மகார மூன்று எழுத்துக்களாக்கி, அதற்கு மூன்று விசேஷ அர்த்தங்களை அருளி செய்து
மூன்றெழுத்தை – அந்த மூன்று எழுத்துக்களையும்
ஏன்று கொண்டிருப்பார்க்கு – தங்களுக்கு தஞ்சம் என்று ஏற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு
மூன்றடி நிமிர்த்து – திருமந்திரத்தை மூன்று பதமாக வளர்த்து, (இந்த பிரணவ (ஒம்) என்ற வார்த்தையைத் தான் மூன்று பதமாகிய திருமந்திரத்தில் முக்கிய / முதல் வார்த்தையாக வளர்த்து)
மூன்றினில் தோன்றி – ஆத்மாவினுடைய மூன்று தத்துவங்களை உணர்த்தும் மூன்று பதங்களாகிய அநந்ய சேஷத்வம் (எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்தல்), அநந்ய சரணத்வம், (எம்பெருமான் ஒருவனையே புகலாகப் பற்றுதல்), அநந்ய போக்யத்வம் (எம்பெருமான் குணங்களையே அநுபவித்து நாம் அவன் அநுபவத்துக்கே பொருளாயிருத்தல்) தோற்றுவித்தது இங்கே கூறப்பட்டது. இந்த மூன்றும் சேர்ந்து ஆகாரத்ரயம் என்றும் சொல்லப்படும்.
மூன்றினில் மூன்று உருவானான் – ஆத்மாக்களின் ஆகாரத்ரயத்ததிற்கு உதவியாக இந்த மூன்று தத்துவங்களை தன்னிடமே கொண்டு இருக்கிறான் என்பதை சொல்கிறது.

எம்பெருமான் தன்னுடைய சங்கல்பத்தினால், அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று எழுத்துக்களை தோற்றுவித்து, அவற்றை சேர்த்து ஓம் என்று ஒரு அக்ஷரமாக்கி, அதனை நிருக்திகிரமத்தினால் (நிருக்தம்- வேத அங்கங்கள் ஆறனுள் ஒன்று) மூன்று பதமாக்கி அதற்கு மூன்று அர்த்த விசேஷங்களை அடக்கியது, இங்கு சொல்லப்பட்டது. இந்த மூன்று எழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பவருக்கு பரமகிருபையைச் செய்து அருள்பவனும், அந்த ப்ரணவத்தை நம மற்றும் நாராயண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, (திருவஷ்டாக்ஷரமாக்கி) அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்றினையும் ஜீவாத்மாக்களுக்கு தோன்றுவித்து, அவற்றின் பிரதி சம்பந்தியாகிற சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்றினையும் தன்னிடம் கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் கண்டமென்னுங் கடிநகர் ஆகும்.
11இந்த பாசுரம், இந்த பதிகத்தில் உள்ள பாடல்களை படிப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களை சொல்லும் பலச்ருதி பாசுரம் ஆகும். கங்கை கரையில் உள்ளதும் எல்லாவித ஏற்றங்களும் உடையதுமான இந்த கண்டமெனும்கடினகரில் எழுந்தருளி இருக்கும் எம் புருஷோத்தமன் திருவடிகளில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாககரான பெரியாழ்வார் விரும்பி ஆசைப்பட்டு நிலைநின்ற பிரேமத்தால் செய்த தமிழ் மாலையான இவற்றை எப்பொழுதும் விடாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறவர்களுக்கு எங்கிருந்தாலும் கங்கையில் ஸ்னானம் செய்து திருகண்டமெனும்கடி நகரில் எழுந்தருளி உள்ள புருஷோத்தமனின் திருவடிகளின் கீழே நிரந்தர சேவை செய்கிறதாகிய பலன் என்று சொல்லி முடிக்கிறார்ஜலத்தின் பிரவாகத்தால் உண்டான கொழிப்பும் சப்தமும் கங்கை கரையில் உள்ளன என்றும் சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் பிறப்பால் வந்த ஏற்றத்தை உடைய கங்கை என்றும் கூறுகிறார்.

மீண்டும் இன்னொரு திவ்யதேச யாத்திரையில் சந்திக்கலாம். நன்றி.

whatsapp நண்பர்கள் மற்றும் விளக்கத்தை அருளியவருக்கும் அடியேனின் மனமார்ந்த நன்றி.

Thirumaalai Umbaraal Ariyal Aagaa

இந்த பதிவினை தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும், நன்றி

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

In the first three hymns of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathma. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavaruku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Still people did not follow Azhwaar, he decided to move on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our sampradhayam in the hymn Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in the next hymn Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal in the next hymn, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in the next hymn, ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are for the happiness of His devotees only in the next hymn, Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar to realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, in the next hymn, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas and our Acharyaas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in the next hymn, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar to realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in the last hymn of this sequence, namely, Vella Neer parandhu paayum.

These are the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24).

Now Azhwaar sings that he did not have any good qualities but had only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

In the first hymn of this subsection, Kulithu Moondru Analai (25), doing Naichiyaanusandhaanam, we saw Azhwaar mentioning that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In the next hymn, Podhellam Podhu Kondu (26), we saw Emperumaan asking Azhwaar, that he could do the poojas and singing slokas on Him, which anyone could do, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams. We also saw Azhwaar mentioning that he did not do them as well.

After hearing Azhwaar say that he did not do any good deeds that humans could do, Paramathmaa stated that He accepted the services that were carried with good intention by squirrels and monkeys, when He took Rama incarnation, the same way as He accepts the services of Nithyasoories, like Vishwaksena, Ananthazhwaan and Garudazhwaar in Paramapadham. When Periyaperumal inquired Azhwaar whether he had done any such thing with good intentions, Azhwaar responded negatively in the hymn “kurangugal malaiyai nooka” (27).

In the hymn Kulithu moondru analai (25), Emperumaan asked Azhwaar, if he had done prayers using all the three elements, thinking through mind, offering flowers using hands and reciting holy chants using mouth. In the next hymn, Podhellam Podhu Kondu (26), Emperumaan asked Azhwaar whether he did prayers using his mouth, by reciting holy chants. In the next hymn kurangugal malayai nooka, (27), Emperumaan asked Azhwaar whether he had served with his hands and legs, like the monkeys and squirrels. In this hymn, Umbaraal ariyalaaha” (28), Emperumaan is asking Azhwaar whether his mind had thought about Paramaatma. So, initially Emperumaan asked Azhwaar whether he has done all the three, when Azhwaar replied negatively, Emperumaan started asking about each of them in each of the subsequent hymns.

Now let us move on with the next hymn.

Hymn 28

Umbaraal ariyalaaga oli ulaar aanaikaagi, sem pulal undu vaazhum mudhalai mel seeri vanthaar, nam paramaayadhu unde, naaigalom sirumai ora, empiraarkku aat seyaadhe, en seyvaan thonrinene (Thirumaalai 28)

Even gods like Brahma, could not even think of where the glorious Paramapadham is, which is unmeasurable, and Emperumaan came down from Paramapadham, Even gods like Brahma, could not even think of where the glorious Paramapadham is, which is unmeasurable, with so much anger on a crocodile, which eats just the red meat for living, to protect and bless the elephant named Gajendran, from the crocodile. When He is there to protect His subjects like this, what burden do we have to save ourselves? Azhwaar regretted, why he was born like a dog with lowly qualities and flaws and without doing service to Emperumaan, Who does not consider any of these.

Emperumaan asked Azhwaar, if he did not have the good intentions like the squirrels and monkeys who did smaller services, had he at least thought about Paramathma as his saviour, like how He was called out by the elephant, when a crocodile caught the legs of the elephant, Gajendra, in the river and when Gajendra felt that it was about to give up. Azhwaar responded negatively like how did in the previous hymns.

This paasuram is one amomg the few paasurams of Thirumalai, where there is no direct mention of ‘Thiruvarangan’ .

Azhwar delves deeply into this event, Gajendra Moksham to explain the glory of Emperumaan.

  • The stature of Emperumaan, Who helped
    • One who is in the most superior Paramapadham, who is beyond being understood. He has no compulsion to help anyone
  • The relationship between the aided elephant, Gajendran, and the Helper, Emperumaan
    • This elephant has no direct connection to the Emperumaan, like Sridevi Thaayaar or Bhoomi Piraati, or the nithyasoories like Ananthazhwaar, Vishwaksena and Garuda.
  • The strength / skill of the recipient’s enemy (crocodile)
    • The enemy is not a strong enemy like Ravana, Hiranyakasipu or Sisupalan. Azhwaar names the crocodile a mere waterworm.
  • The status of Emperumaan at that moment
    • Emperumaan, who is always calm, brought the anger upon Himself
  • The place where help was given
    • Emperumaan could have done the help from Paramapadham, from where He was, by sending His discus, Sudharsanam; but went straight to the shores of the river and rescued.
  • Why the help was done at that time like that
    • The urgency, the love, the preference, the willingness to give dharsan to His subjects who are in danger or who were in danger and aware of the fact that they could not defend themselves, who were ready to acknowledge their relationship with Emperumaan.

We may able to see some of the hymns (in Tamil) sung by other azhwaars about Gajendra Moksham here. Let us see more details of what Azhwaar says in the following sections.

Umbaraal ariyalaagaa Oli ulaar

Umbar refers to gods like Brahmaa in the Satyalokam and other gods in other celestial worlds.

ariyalaagaa or beyond comprehending means that even the most enlightened gods like Brahmaa and Shiva could not reach, or even know about. Lord Krishna in Bhagavad Gita (16.14), says, ‘I am Eswaran, I am the one who attains all the benefits, I am the one who is naturally the route and ready all the times, the one who is naturally strong and the one who enjoys bliss’. Gods like Brahmma and Shiva consider themselves as Eswaran and even they could not reach or know about Paramapadham. The narrator says that though they have more wisdom, they are arrogant that they are capable of doing anything, and those who are arrogant have no place in Paramapadham.

Next let us take a quote from Vishnu Purana (1.9.55) where Brahmaa points out, that if there is something that is beyond being understood by the gods, sages, Sankara and himself , then that is the Paramapadham of the Supreme Vishnu.

The word “oli ullaar” , or “luminous” refers to the Paramapadham and the luminary refers to Emperumaan who dwells there forever. In the Chandhogya Upanishad (3.13.7), the word light is quoted as the supernatural light that shines from above, above all that is created by Emperumaan and above those created by His creation and which has nothing which is equivalent or above those.

In the Mahabharata, on the Aranya / Vana Parvat (136.18.23), it is said that the place of Vishnu, the Paramathma, is much brighter than that of Sun and Agni, and that by the splendor of that light, even the gods and demons cannot see Paramapadham, and those who reached there would never return again.

In the third Thiruvandhaadhi (51), Paramapadham is referred to as Kalangaa peru nagaram meaning that it is a place where all things are clear and nothing is murkier and Emperumaan who is enlightened by the Nithyasoories there, came down to protect / bless a devotee who was suffering in the normal life (samsara) in this world.

Aanaikaagi (for the elephant)

Being such a boundless Noble, He rushed, His form ruffled up , scratching His head (hurried), to protect an animal shows that He started as if He was trying to protect some superiors like Thaaayar or Piraati, Thiruvadi,(Garudazhwaar), or Thiruvananthazhwaan (Aadhiseshan). The difference between a mountain and a pit is obvious when we compare Emperumaan with the elephant, the stature of Who helped and the stature of the suffering elephant.

If a devotee is to be saved, Emperumaan does not see His superiority or the devotee’s inferiority. It is clear from this Gajendra’s history that He considers only their danger and the indestructible connection they have with Him.

Sempulaal Undu Vaazhum Mudhalai mel

“Sempulaal Undu Vaazhum” means, the crocodile, a lowly insect or worm that makes a living by eating red meat.

Though He does not see the inferiority of His devotees, He would not consider the strength of the enemy of His devotee also. If the above enemy was strong, it could make some sense for Him to come down and fight with such a strong enemy. But in this case, the enemy was a worm or insect that lives on eating lowly fish or other red meat, but thinking as though it has been ruling all the seven worlds all alone, something similar to what Nammazhwaar sang in Thiruvaaimozhi (4.5.1), “Veetru irunthu yezhu ulagum thani kol sella“.

In the Vishnu Purana (1.9.35) Brahma says that all should reach out and surrender to Lord Mahavishnu, Who is the protector and Eswaran to all those who are in celestial world and in other worlds and Who is the enemy of the Asuras. When Brahma himself and other demi gods were suffering from the demons, they had no other refuge to alleviate those sufferings, than surrendering to Emperumaan, who fought and killed the mighty demons like Hiranyakasipu and Ravana and destroyed them and there is nothing that is surprising. The commentator says that it was surprising that Emperumaan got angry with the crocodile when the elephant called Him for help and He rushed in such a hurry, considering the lowly crocodile as an enemy and as strong as the enemies mentioned earlier.

Seeri (with full of anger)

Emperumaan is always calm. In Ramayana, Ayodhya Kantam, 1-10 says that Emperumaan would be composed with the matters pertaining to Him. But Aranya Kantam (34-24), says that Rama summoned the fierce rage on Himself to kill the demons. It also said that He brought anger on Himself, and looked like the fierce fire of deluge. Rama with an unfailing serenity of mind, was always calm . But Rama stretched the formidable bow and lifted the arrows from his quiver to kill the demons. Later, in the battle of Ramayana, (59-136), when Rama saw Hanuman, the best among the special monkeys, wounded by Ravana, He allowed the anger to take control of Himself, that was very unlike of Himself. We need to understand, if any of the devotees are insulted or endangered by someone, Emperumaan will succumb to anger. The narrator points out that this is not surprising since it is true that He would not see how lowly the enemy is, when He is in rage.

Thirumangaiyazhwar took refuge in this great quality of Emperumaan, in his Periya Thirumozhi (5.8.3) “kodiya vaai vilangin uyir malanga, konda seetram onru undu“, meaning that He had such a fierce anger to kill the crocodile, which held the legs of Gajendra with its deadly mouth that there is a wrath of the deadly beast. Here Thirumangai Azhwaar says that such a rage would protect His devotees, as long as they take shelter under Him.

Vandhaar (He came)

According to Azhwaar, it was astonishing that Emperumaan, Who with the power to destroy the enemy from wherever He is, rushed hurriedly to the shore. The meaning is that if the world is to be destroyed, He does that from wherever He is just by His wish. But when a devotee is suffering, if He does not come directly and destroy the enemy of the devotee with His own hands to wipe out the devotee’s misery, His anger/rage would not go away. Azhwaar felt as if Emperumaan came and helped Azhwaar himself, when He helped the suffering elephant. This is much similar to what Thirumangai Azhwaar quoted in his Periyathirumozhi (5.8.3) “kodiya vaai vilangu“, meaning an animal having deadly mouth. If Thirumangai Azhwaar had not felt the suffering, he would not have sung ‘deadly mouth’. Likewise, Thondaradipodi Azhwaar felt as if he was helped, when Emperumaan actually helped the elephant. So, it is to be learnt that Srivaishnavam is that we should feel as though we are helped, whenever another devotee is helped by Paramathma. There was no need for Him to come down to help, but He came, only to show that when we surrender to Him, He will surely come and help.

Nam paramayaadhu unde (why should we take the burden)

From the above it is understood that Emperumaan always has a great affection and mercy for His devotees and always shows partiality or acts in favour of them. The words in this title clearly states that Azhwaar was asking why we should protect ourselves when He is there to save us. The commentator goes on to say that Emperumaan’s merit is as follows.

  • Emperumaan does not see His superiority
  • Emperumaan does not see the lowliness of His devotees
  • Emperumaan does not let His devotees experience the distress longer due to the enormous amount of sins committed by them . In other words He does not delay even though the sins committed by His devotees are huge.

Naaigalom (dogs)

Azhwaar says that when we compare our lowly stature, in terms of devotion, the elephant named Gajendran should be placed at a very high level as rishis like Janaka. He continues to say that we are in the position of a dog, that is chased away after entering a house with open doors. According to Azhwaar we are all like the lowly dogs, whose owners too would bathe and cleanse themselves, whenever a dog touch them.

Sirumai ora empiraarku

Azhwaar says that no matter how lowly we are, Emperumaan does not have an eye to see our lowliness or our mistakes. There are two holy names (Thiru naamams) in the Vishnu Sahasranama called, Avignyaada and Sahasraamsu. Avignyaada means Does not know and Sahasramsu means thousand folds. The explanation that is given for Avignyaada Sahasramsu is that He is so magnanimous that He does not see the sins or wrong things of His devotees and takes every virtue into thousand folds before blessing His devotees with benefits. The same thing is expanded beautifully as He does not see the mistakes that are committed by His devotees, but takes each of such mistakes or sins itself as a virtue or good thing, and as thousand folds before giving His blessings or benefits. Now the question is why should Azhwaar say that Emperumaan is ignorant of all the mistakes or sins of His devotees when Emperumaan knows everything. The commentator is taking a quote from Mundakopanishadh (1-1-10) which says, Paramaathmaa knows everything as His nature, (swabhaavam) and by His resolve (sankalpam). In this verse it is said that Paramaathma does not consider Himself as one knowing but forbearing the sins and shortcomings of His devotees and then helping them, but He takes those sins and shortcomings as virtues / good deeds, to help and bless them.

Empiraarku (Who helps me)

Let’s take the word “empiraarku” alone and see the explanation. Emperumaan does not see our faults or sins, but considers the danger only, to protect us as seen earlier. Azhwaar says that He has defined His role like that to protect us and this he calls it as empiraarku. Em is explained as He stands as a Lord suited to His nature, and Piraarku as, who renders help .

Aat Seyaadhe (Without doing service)

Is not it appropriate for us to do the services for such Emperumaan? Once Emperumaan has accepted our works as His responsibility, it is appropriate for us to subject our body, the limbs, senses and mind, to Emperumaan and offer our services to Him. Azhwaar was regretting that he was not doing such thing, in this hymn.

En Seyvaan Thonrinene (What to do, I was born)

Here, Azhwaar says that he was with a useless birth. He says that the purpose of the birth was to do services to Emperumaan, but instead of doing so, his birth was wasted. Here the words of Sumitradevi, who supports Lakshmana to accompany Rama to the forest, is quoted. Valmiki Ramayanam, Ayodhya Kaantam, verse (40.5) says that , “Lakshman was born to live in forest and to serve Rama.” Similarly, Ayodhya Kandam verse (31.25) is quoted here, as what Lakshmana said to Rama, that he would do all kinds of service to Him, while the Lord was asleep or awake. Azhwaar says that if he had born with a desire to serve Emperumaan like Lakshmana, then he could reason his birth, but without that desire Azhwaar felt that his birth appeared as lifeless and ignorant, like an object. As stated in 26th hymn, it is customary to say that evil planets appear in the sky. Azhwaar says that his birth could be taken like the appearance of an evil planet in the sky, as he did not do the desired services to Emperumaan and hence regrets himself as ‘thonrinene” rather than born.

With that we will conclude this hymn and let us catch up on the next hymn. Thanks.

067 Thirupirithi – திருப்பிருதி

பரிமளவல்லி நாச்சியார் ஸமேத பரமபுருஷன் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பிருதி / ஜோஷிமட்
மூலவர் பரமபுருஷன்
உத்ஸவர் பரமபுருஷன்
தாயார் பரிமளவல்லி
திருக்கோலம்கிடந்த (புஜங்க சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம் நன்றி.

Google Map

திருப்பிருதி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருப்பிரிதி பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

கோவில் பற்றி

ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் இன்று திருப்பிருதி என்று பொதுவான அபிப்பிராயம். ஹரித்துவாரில் இருந்து சுமார் 150 மைல் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6200 அடி உயரத்தில் ஜோஷிர்மட் என்ற இந்த இடத்தைத்தான் 108 திருப்பதிகளில் ஒன்றாக வழிபடுகிறார்கள். பக்தர்கள் மீது எம்பெருமானுக்கு இருக்கும் அன்பைக் குறிக்கும் பிரீதி என்ற சொல்லிலிருந்து இந்தத் திருத்தலம் திருப் ப்ரீதி என்று அழைக்கப்பட்டு பின்னர் திருப்பிருதி என்று பெயர் மாறியது என்று சொல்வார்கள்.

இமயமலைக்கு உள்ளே வடபுறத்தில் மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த எல்லையற்ற அழகுள்ள இடத்தில் அமைந்திருந்தது என்று சொல்பவர்களும் உண்டு. ஏனெனில் இத்தலம் எங்கிருந்தது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஜோஷிமட்டில் தான் தற்போது கோவில்களும், மூர்த்திகளும் உள்ளனர். மேலும் பத்ரிநாத் எம்பெருமானும் இமயமலையின் மிதமிஞ்சிய குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே பத்ரிநாத் கோவிலில் காட்சி அளித்து மீதி சுமார் ஆறு மாத காலம் இந்த ஜோஷிர்மட் கோவிலுக்குத்தான், எழுந்தருளி, ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் இருந்து காட்சி அளிக்கிறார்.

ஆதிசங்கரர் இங்கு (ஜோஷிர்மட்) தான் திவ்யஞானம் பெற்று சங்கரபாஷ்யம் அருளியதாக சொல்வார்கள். இந்தக் கோவிலில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்த பிறகுதான் ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினர் என்றும், இங்கே ஒரு பீடத்தை நிறுவினார் என்றும் ஐதீகம். (ஆதிசங்கரர்  இந்தியாவின் நான்கு திசைகளிலும் நிறுவிய நான்கு பீடங்கள்: வடக்கே ஜோஷிர்மட், கிழக்கே பூரி, தெற்கே சிருங்கேரி, மேற்கே துவாரகை). இரண்டாயிரம்  ஆண்டுப்  பழமை  உடையதாகக்  கருதப்படும்  கல்பதரு ஒன்றையும் இங்கே காண முடியும்.

ஜோஷிர்மட், திருப்பிருதி இல்லை என்று நினைக்க சான்றோர் கூறும் வார்த்தைகள்;

1. திருமங்கையாழ்வார் வதரி, சாளக்கிராமம், நைமி சாரண்யம், சிங்கவேள் குன்றம் திருமலை என்று வடக்கு தொட்டு தெற்கு நோக்கி வரிசைக் கிரமமாக மங்களாசாசனம் செய்து கொண்டே வருகிறார். இதில் வதரி எனப்படும் பத்ரிகாச்ரமம் ஜோஷி மடத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்திருந்தால் ஆழ்வார் முதலில் பத்ரியை மங்களாசாசனம் செய்து விட்டு அதன்பிறகு ஜோஷி மடத்தை மங்களாசாசனம் செய்திருப்பர். ஆனால் ஆழ்வார் அப்படி இல்லாமல், முதலில் திருப்பிருதியை பாடிவிட்டு, பிறகு பத்ரியை பாடியுள்ளார். ஆழ்வார் முதலில் திருப்பிருதியை தமது திருமொழியில் 1.2 ல் மங்களாசாசனம் செய்து விட்டு பிறகு பத்ரியை 1.3 மற்றும் 1.4 பதிகங்களில் மங்களாசாசனம் செய்கிறார். எனவே ஜோஷி மடமே திருப்பிருதியாக இருந்தால் ஆழ்வார் பத்ரியை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்திருக்க மாட்டார்.

2. மேலும், பத்ரியை பாடும் போதும், கண்டமெனும் கடிநகர் பற்றி பாடும் போது கங்கைகரையை வெகுவாக குறிப்பிட்ட ஆழ்வார் ஜோஷிர்மட்டினை பாடும் போது கங்கைகரையை பத்து பாடல்களில் ஒன்றில் கூட குறிப்பிடவில்லை. ஆகையால், ஆழ்வார் குறிப்பிடும் திருப்பிருதி, பதிரியைவிட மேலும் உயரத்தில் கங்கையின் உற்பத்தி ஸ்தானத்தை விட மேலும் வடக்கே, இமய மலையில் இருந்திருக்க வேண்டும் என்பதும் ஒரு கருத்து,

3. திருப்பிருதியை பற்றி பாடிய ஆழ்வார் அங்குள்ள பயங்கர விலங்குகளையும் யானைகளை விழுங்கும் மலைபாம்புகளையும் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் பத்ரிநாத் பாசுரங்களில் அப்படி ஒன்றும் சொல்லாமல் பாரோர் புகழும் வதிரி என்றும், பயங்கர மிருகங்களைப் பற்றி சொல்லாததாலும், பத்ரிநாத்தில் இருந்து இருபது மைல் தெற்கே திருப்பிருதி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

4. மேலும் ஆழ்வார் பாடல்களுக்கு விளக்கம் அளித்த பெரியவாச்சான்பிள்ளை தெற்கே உள்ள திவ்ய தேசங்களுக்கு எப்படி திருமலை ஒரு எல்லையாக உள்ளதோ அதேபோல் எல்லா திவ்யதேசங்களுக்கும் திருப்பிருதி எல்லையாக உள்ளது என்று சொன்னதால் இந்த திவ்யதேசம் எல்லா திவ்யதேசங்களுக்கும் வடக்கே இருக்க வேண்டும் என்றே கொள்ளவேண்டும்.

5. இங்கு இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானஸரோவஸ் தீர்த்தம் என்று குறுப்பிடப்பட்டு உள்ளன. புராணங்களும் இதிகாசங்களும் மானஸரோவரம் என்னும் இந்த நதியை பாரதத்தின் வட எல்லையாக வர்ணிக்கின்றன. இந்நதி இன்றும் திபெத் நாட்டில் இதே பெயரில் வழங்கப்படுகிறது. இது 54 மைல் சுற்றளவும் 200 சதுர மைல் பரப்பளவும், 250 அடிக்கும் மேலான ஆழத்தையும் கொண்டது. கடல் மட்டத்திற்கு மேல் 15000 அடி உயரத்தில் உள்ளது. பிரம்மன் தனது ஸங்கல்பத்தாலே முதன் முதலில் பாரத தேசத்தின் வட எல்லையாக இந்த ஏரியை படைத்ததால் மானஸரஸ் என பெயர் உண்டானது. இதன்படி பார்த்தாலும், ஜோஷிர்மட், திருப்பிருதியாக இருப்பதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. திருமங்கை ஆழ்வாரும் மனசரோவஸ் தீர்த்தத்தை திருவுள்ளத்தில் கொண்டு, தடஞ்சுனைப் பிருதி (பெரியதிருமொழி 1.2.1) என்று இந்த திவ்யதேசத்தின் முதல் பாடலில் சொல்லி இருப்பார் போலும். அதுபோல் ஒரு ஏரி ஜோஷிர்மட்டில் இல்லை என்பது ஓர் தகவல்.

6. “பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவணப் பள்ளிகொள் பரமா என்று ,” ( பெரிய திருமொழி 1.2.6) என்று இந்த திருப்பிருதி எம்பெருமானின் திருநாமத்தையும் அவரின் கிடந்த சயனத்தையும் சொல்லி ஆயிரம் தலைகளை கொண்ட அனந்தாழ்வானையும் ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இன்று ஜோஷிமட்டில் எம்பெருமான் இந்த திருக்கோலத்தில் இல்லை. ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரசிங்க பெருமாள் ஆலயமும் நின்ற திருக்கோலத்தில் இருக்கும் நாராயணர் ஆலயமும் மட்டுமே உள்ளன.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் முதன்முதலில் மங்களாசாசனம் செய்தது இந்த திருத்தலம் தான். இங்கிருந்துதான் இவர் தனது பற்பல திவ்யதேச மங்களாசாசனங்களை தொடங்கி தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து வரும் வழியில் உள்ள ஸ்தலங்களில் மங்களாசாசனம் செய்து கொண்டே வந்து தென்னாடு வருகிறார்.

திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார்.

  1. வாலியை வதை செய்து அருளின எம்பெருமான் இனிதாக எழுந்தருளி இருக்கும் இடமான இமயமலையினுள் அமைந்துள்ள திருப்பிருதியைச் சென்று சேருமாறு முதல் பாடலில் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகின்றார். திருமங்கை ஆழ்வார் இந்த எம்பெருமானைப் பற்றிப் பாடும் முதல் பாசுரத்தில் ‘அன்று, ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்த நல் இமயத்துள்’ என்று பாடியிருக்கிறார், அதனால் இன்றும் எங்கும் எம்பெருமானுக்கு ஏலக்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.
  2. ஒன்றுக்கும் கலங்க மாட்டாத மாகடலே கலங்கும் படியாகவும், ஸம்ஸாரம் என்றால் என்னவென்றே அறியாத திருவனந்தாழ்வான் ஸேனைமுதலியார் முதலிய நித்ய ஸூரிகள் செய்யத் தக்க கைங்கரியங்களை வானர மற்றும் விலங்குகள் செய்யும் படியாகவும், நீரில் ஆழ்ந்து போகக்கூடிய மலைகள் மிதந்து அணையாய் நிற்கும் படியாகவும் செய்தருளிய விசித்திரசக்தி உடைய மஹாவீரன் (ஸ்ரீராமபிரான்) எழுந்தருளி உள்ள திருப்பிருதி, யானைகள் அஞ்சும் சிங்கங்கள் உலாவும் இமயமலையினுள் உள்ளது என்று இரண்டாவது பாசுரத்தில் சொல்கிறார்.
  3. ஶீதாபிராட்டிக்காக இலங்கையைப் பாழ் படுத்தினமையைச் மேல் பாசுரத்தில் சொன்ன ஆழ்வார் இந்த பாசுரத்தில், நப்பின்னைப் பிராட்டிக்காகச் செய்ததொரு செயலைச் சொல்லுகிறார். நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த நப்பின்னைப் பிராட்டியை மணம் செய்து கொள்ளுதற்காக, யாவர்க்கும் அடங்காத ஏழு எருதுகளையும் கண்ணபிரான் அடக்கி நப்பின்னையை மணம் செய்த வரலாறு சொல்லி, திருப்பிருதியில் உள்ள அழகிய பாறைகளின் மீது வேங்கை மலர்கள் விசேஷமாக உதிர்ந்து படுக்கை விரித்தால் போல் இருக்க, அதன்மீது யானையானது தன் பேடையோடு கிடந்து உறங்குவதற்குப் பாங்காக வண்டுகள் இன்னிசை பாடப் பெற்ற திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சமே என்கிறார். நப்பின்னைப் பிராட்டியோடே பரமரஶிகன் இருக்கும் இடம் ஆகையால் அங்குள்ள விலங்குகளும் ச்ருங்கார ரஸத்திலே நோக்காக இருப்பதை சொல்லியது ஒரு சிறப்பே.
  4. அடுத்த பாசுரம், நரஸிம்ஹ மூர்த்தியாக அவதரித்து இரணியன் மார்பைப் பிளந்த பெருமிடுக்குத் தோற்ற எழுந்தருளி இருக்குமிடம் என்கிறது. அங்குள்ள பன்றிகள் (வராஹங்கள்) குனிந்து, வளைந்த கொம்புகளாலே மாணிக்கப் பாறைகளைக் குத்திப் பெயர்க்க அதிலிருந்து வரும் மாணிக்கங்கள் மலையருவிகளோடு கூடி உருண்டு விழும். நரஸிம்ஹமூர்த்தி இரணியனுடைய மார்பைப் பிளந்து குடல் மாலையைத் தன் மேல் எடுத்துப் போட்டுக் கொண்ட பிறகு ரத்த வெள்ளமானது பிரவாகமாக ஓடியது போல் அவ்வருவிகள் பாய்கின்றன. அப்படிப் பட்ட திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சமே என்று பாடுகிறார்.
  5. அடுத்த பாசுரத்தில், விபவ அவதாரங்களுக்கு மூலமாக உள்ள திருப்பாற்கடல் நாதனைப் பற்றி சொல்கிறார். ஆபரணங்கள் பூண்டதனாலே ஒலி செய்து கொண்டிருக்கிற பரவாஸுதேவன் திருவடிகளை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையுடன் உள்ள நான்முகன் முதலான தேவர்கட்கு திருப்பாற்கடலிலே வந்து ஸேவை ஸாதிக்கிற ஷீராப்திநாதன், பிராட்டியும் தானுமாய் வந்து பொருந்தி வாழும் இடம் இமயமலையினுள் உள்ள திருப்பிருதி என்கிறார்.
  6. தேவர்களுக்காக ஸ்ரீவைகுண்டத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து கண்வளர்ந்த எம்பெருமான் அக்கடலளவும் போக மாட்டாத மனிதர்களுக்கும் அநுகூலமாக இமயமலையிலே வந்து எழுந்தருளி இருக்கிறார். இங்கு குருக்கத்திக் கொடிகள் ஆகாசம் வரை ஒங்கிப் படர்ந்து மேகமண்டலத்தோடு போராடும் என்றும் அப்பொழுது பூக்கள் மலரும், அப்பூக்களிலே மதுவை பருக வண்டுகள் மேகத்துக்கும் கொடிக்கும் நுழைந்து இசை பாடும்; திருப்பிருதி முழுவதும் இந்த சப்தமே நிறைந்து இருக்கும். அந்த திருத்தலத்தை சென்று சேர் நெஞ்சே என்று பாடுகிறார். கொடிகளைத் தாயாராகவும், மேகக்கூட்டத்தை எம்பெருமானாகவும் சொல்லி, வண்டுகள் இசை பாடுவதாக சொல்லி, நம் போன்றவர்களை மன்னித்து காப்பாற்றுவதற்காக பிராட்டி, எம்பெருமானோடு மன்றாடுவதை ஒரு உள்ளுறை பொருளாக கூறுவதும் உண்டு.
  7. இமயமலையில் மேக மண்டலம் வரை நீண்டு வளர்ந்த வேங்கை மரங்களில் மிளகு கொடிகள் தழுவி நிற்கும். சிறு மலைகளிலே கொடிய வேங்கைப் புலிகள் திரியும். இப்படி எங்கும் வேங்கை மயமாகவே இருக்கின்ற இமயமலையில் தேவர்கள் வந்து செங்கழுநீர், செண்பகம், இருவாட்சி, பாதிரி, புன்னை, குருக்கத்தி, கருமுகை, தாமரை என்ற எட்டு வகை பூக்களையும் ஸமர்ப்பித்து ஆயிரம் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வணங்கும் இடமாகிய திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சே என்கிறார்.
  8. அடுத்த பாசுரத்தில், இமயமலையில் சோலைகள் அடர்த்தியாகவும் அதிகமாகவும் இருப்பதால், சூரியனின் கதிர்கள் நுழையாமல், பகற்போது என்பது இல்லாமல் இரவு காலமே அதிகம் இருந்து எங்கும் இருள் மூடிக்கிடக்கும். அப்படி இருள் மூடிக்கிடக்கிற மலையின் குகைகளில் பாம்புகள் உணவு கிடைக்காமல் பெரும் பசியோடு, சோலையின் பரிமளத்தோடே கூடின காற்றை உண்டு, பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கும். அப்படிப்பட்ட இமயமலையில் தேவர்கள் வந்து ‘பரமபுருஷா!, முதலிய திருநாமங்களை சொன்னபடி, நான்முகக்கடவுளை முன்னிட்டு வணங்கும் திருப்பிருதியைச் சென்று சேர் நெஞ்சே என்று பாடுகிறார்.
  9. ஆயிரம் ஆயிரம் திருநாமங்களையும் சொல்லி அவற்றின் அர்த்தங்களையும் உணர்ந்தவர்களுக்கு எவ்விதமான துன்பமும் வந்து சேராதபடி ஆனந்தத்தை கொடுத்து அருள் செய்கின்ற பரம புருஷன் எழுந்தருளி உள்ளது இமயமலையின் உள்ளே. அங்குள்ள அசோகமலர்கள் மலரும் போது, அவை நெருப்போ என்று வண்டுகள் பிரமித்து, பிறகு ஆராய்ந்து அவை மலரே என்று முடிவு செய்து, அவைகளின் மேல் அமர்ந்து, சென்றுவிட்டபின், அடுத்த நாளும் அதே சந்தேகம் அந்த வண்டுக்கு எழும். அப்படிப்பட்ட வண்டுகளைக் கொண்ட திருப்பிருதியை சென்று சேர் நெஞ்சே என்று ஆழ்வார் கூறுகிறார். சர்வ ரக்ஷிகனான எம்பெருமானுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்று எண்ணி, ஒரு சமயம், பல்லாண்டு பல்லாண்டென்று அவனுக்கு மங்களாஸாசனம் செய்பவரும், இன்னொரு சந்தர்ப்பத்தில், அந்த அச்சம் நீங்கி தங்களை ரக்ஷித்தருள வேணும்’ என்று பிரார்த்திப்பதை நினைவு படுத்தும் வண்டுகள் பற்றி இங்கு சொல்லப்படுவதாக ரசமாக கூறுவாரும் உண்டு.
  10. மிகப்பெரிய மேகக்கூட்டங்கள் அதிக நீர்திவலைகளை சுமந்துகொண்டு நகர முடியாமல், கர்ஜனை செய்து கொண்டு இருப்பதைக் கண்ட மிகப்பெரிய பாம்பானது ஒரு மலை ஊர்ந்து செல்கிறதோ என்றெண்ணி தன் இருப்பிடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பிக்கும். இன்னொரு பாம்பானது, அவை யானைகளோ என்று எண்ணி, அவற்றை விழுங்க வரும். அவ்வளவு பெரிய பாம்புகளைக் கொண்ட திருப்பிருதியில் சயனித்துள்ள எம்பெருமானைச் சேவித்தவர்கட்கும் அந்தப்பெருமானைப் பற்றி பாடப்பட்ட இந்த பாடல்களை இசையோடு பாடவல்லார்க்கும் தீயவினைகள் சேராது என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது இத்தலம்.

மீண்டும் இன்னொரு திவ்யதேசத்தை பற்றிய வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.

066 திருநைமிசாரண்யம் / Thirunaimisaaranyam

ஸ்ரீஹரிலக்ஷ்மி ஸமேத ஸ்ரீ தேவராஜன் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம் திருநைமிசாரண்யம்
மூலவர் ஸ்ரீ தேவராஜன், ஸ்ரீஹரி,
உத்ஸவர் ஸ்ரீ தேவராஜன்
தாயார்ஸ்ரீஹரிலக்ஷ்மி புண்டரீகவல்லி
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91

வடநாட்டு திவ்யதேசங்களை பற்றி ஒரு சிறிய முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

“குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…” என்று சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர்.

இந்த திருத்தலம் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம் அதாவது காடு ஆனதால் நேமிச ஆரண்யமாகி, நைமிசாரண்யம் ஆயிற்று.

இங்கு, நைமிச ஆரண்யம் என்ற கருத்தை கொண்டு, மக்களும் இறைவனை ஆரண்ய ஸ்வரூபியாக, அதாவது எம்பெருமானின் உருவமாய் காடுகளைக்கொண்டு, காடுகளையே எம்பெருமானாக வணங்குகின்றனர். இங்கு வனம் என்று இயற்கையையே வழிபாடு செய்யும் வைணவர்களுக்கு, இதே போல் நீர் என்ற இயற்கையை எம்பெருமானாக செய்யும் திருத்தலம், ராஜஸ்தானில் உள்ள புஷ்கர் ஆகும்.

தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை. ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோமதி நதிக்கு ஆதிகங்கை என்று மற்றொரு பெயர் உண்டு. இந்த கோமதி தான் முதலில் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்ட நதி என்று சொல்வார்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்ரதீர்த்ததில் நீராடுவது விசேஷம். அமாவாசை அன்று சக்ரதீர்த்ததில் நீராடினால் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும் என்றும், திங்கள் அன்று நிகழும் அமாவாசையின் போது சக்ரதீர்த்தத்திலும், கோமதி நதியிலும் நீராடினால் எல்லா ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பிக்கை.

இங்குள்ள சக்ர தீர்த்தம் 14 லோகங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுவதால், சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ரதீர்த்த கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு.

இங்கிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி (வ்யாஸகத்தி) என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்ற புராணங்களை உருவாக்கினார்கள். வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்த பெருமை இத்தலத்திற்கு உண்டாகிறது. இந்த கோவிலில் ஓலை வடிவில் இந்த புராணங்கள் இன்றும் பாதுகாக்கப் படுகின்றன. இங்கேயுள்ள ஆலமரத்தடியில் பல மஹரிஷிகள் இருந்து உபதேசம் செய்ததால், அதனை சுற்றி வருபவர்களுக்கு, இன்றும் இந்த ஆலமரமே, அதில் இருந்து வீசும் புண்ணிய கிரணங்கள் மூலம், அந்த ரிஷிகளின் அருளை அள்ளி வழங்குவதாக நம்பிக்கை.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான்கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

ஹநுமான்கட்டி செல்வதற்கு சற்று முன்னால், புராண மந்திர் என்று சுகப்பிரம்ம ரிஷிக்கு ஒரு கோவில் உள்ளது, கிளி மூக்குடன் பெரிய வெண்கல சிலை உள்ள கோவில் ஆகும்.

இங்கு ராமானுஜ கூடமும், அஹோபில மடமும் தங்குவதற்கும் தென்னிந்திய உணவுக்கும் உள்ளன. அஹோபில மடத்தில், தேவனார் விளாக அழகியசிங்கர் என்ற ஆச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது.

இங்கு தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள்

  • கோமதி நதி
  • பாலாஜி மந்திர்
  • சக்கரதீர்த்தம்
  • வ்யாஸகத்தி
  • ஹனுமான் கட்டி
  • அஹோபில மடம், ஆச்சாரியார் பிருந்தாவனம்

ஸ்தல வரலாறு

உக்கிரஸ்ரவஸ் என்ற சூத பௌராணிகர் மஹாபாரத இதிகாசத்தை சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்து உரைத்தார்.

ஒரு சமயம் சௌனகர் தலைமையில் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் எல்லாம் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்கு உகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தான். இந்த பாரத தேசத்தில் கோமதி நதி தீரத்தில் உள்ள இந்த இடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை மஹாவிஷ்ணுவிற்கே வழங்க எண்ணினர். அவ்விதமே மஹாவிஷ்ணு குறித்து தவம் செய்தனர். மஹாவிஷ்ணுவும் வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே எழுந்தருளி அவிர்ப்பாகத்தை ஏற்றுக் கொண்டு அந்த முனிவர்களுக்கு அருள் புரிந்தார்.

இங்கு தான் இராமர், இராவணனை வதம் செய்ததை கொண்டாடும் விதமாக ஒரு அஸ்வமேத யாகம் செய்தார். 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 4 வேதம் ஆகியவற்றை வேதவியாசர் வழங்கியதும் இங்கே தான். பின்னாளில் பாகவதம் விடாமல் படிக்கப் பட்டதும் இங்கேதான். கிருஷ்ணர், பலராமர், பாண்டவர்கள் ஆகியோரும் இந்த தலத்திற்கு வருகை புரிந்து உள்ளனர். துளசிதாசர் இராம சரித மானஸ் எழுதியதும் இங்கேயே. இதனை சுற்றியுள்ள 16 கிலோமீட்டர் தூரமும் புனித பூமியாக கருதப்படுகிறது.

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் இந்த திருத்தலத்தின் மேல் பத்து பாசுரங்கள் பாடி உள்ளார். வம்புலால் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் இவற்றை நம்பினார் இறந்தால், நமன் தமர் பற்றி ஏற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் (பெரிய திருமொழி 1.6.4) என்று தனது மனைவியைத் தவிர்த்து பிறர் மனைவியையும், மற்றவர்களின் பொருள்களையும் விரும்புகின்றவர் இறந்த பிறகு, அந்த பாவங்களுக்காக செம்பினால் செய்யப்பட்ட , நெருப்பினில் இட்ட ஒரு பாவையின் சிலையைக் கட்டித் தழுவு என்று நரகத்தில் தண்டனை வழங்குவர். எனவே அது போன்ற கொடுமைகள் செய்வதற்கு தான் அஞ்சுவதாகவும் நம்பினாரை ஒரு போதும் கைவிடாத நைமிசாரண்யத்தில் உள்ள எம்பெருமானின்
திருவடியை வந்து அடைந்தேன் என்றும் பாடுகிறார்.

இந்த பத்துப் பாசுரங்களில் திருமங்கையாழ்வார் தம்முடைய தாழ்வுகளையெல்லாம் கூறிக்கொண்டு
பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அந்த பகவானை நைமிசாரண்யத்தில் உள்ளாய் என்று சரணம் அடைவதாகவும், அதனை எப்படி செய்தேன் என்றும், அதனால் பெற்ற பலனையும் கூறி நம்மையும் நைமிசாரண்யத்திற்கு அழைக்கின்றார்.

  • ஸம்ஸாரமாகிற வியாதியை அறுத்துக்கொள்ள எண்ணமில்லாதவனாகவே இருந்திட்டேன் என்றும்
  • தருமங்களை மறந்து இந்திரியங்கள் அநுபவிக்கிற விஷயங்களிலேயே வாழ்நாளை வீணாகக் கழித்தேன் என்றும்
  • ஸ்த்ரீகள் விஷயத்திலே மிக்க ஆசைகொண்ட தான் யமகிங்கரர்கள் செய்யப்போகிற கொடுமையான தண்டனைகளை நினைத்து நடுங்கின தாகவும்
  • பிச்சை கேட்டவர்களுக்கு இல்லவே இல்லை என்று சொல்லிய பாபங்களுக்கான பலன்களை நினைத்து பார்க்க முடியாதவனாக உள்ளேன் என்றும்
  • பிராணிகளுக்கு துன்பம் மட்டுமே செய்து கொண்டு, தான் விவேக ஞானம் இல்லாமல் இருந்தேன் என்றும்
  • அநீதியான ஒழுக்கங்களை நெஞ்சால் நினைத்தும், வாயால் பேசியும் பிறகு செய்தும் அடைய வேண்டிய நரகத்தை நினைத்து பயந்ததாகவும், சொன்ன ஆழ்வார்,
  • வாயினால் பாடி, மலர் தூவி, அவன் திருவடியில் சரணம் அடைந்து, இந்திரியங்களின் கொடுமைகளை அப்புறப்படுத்தி விட்டேன் என்றும்
  • இந்த சரீரத்தை விட்டு பிரியும் போது தான் அவனை அடையவேண்டும் என்று முன்பு எண்ணியதாகவும் இப்போதே வந்து சேர்ந்து விட்டதாகவும்
  • துக்கங்கள் நம்மிடம் வந்து சேராத வகையை நாம் நினைத்தால், நைமிசாரண்யத்திலே போய் தொழுவோம் வாருங்கள்” என்று சொல்லி முடிக்கிறார்.

Google Map

திருநைமிசாரண்யம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

குரங்குகள் மலையை நூக்க

To read this weblog in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை திருவரங்கன் ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • திருவரங்கனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • திருவரங்கனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவத்அனுபவத்தை இழந்ததை சொல்லி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் திருவரங்கனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சராணாகதிக்கு எம்பெருமான் தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்தோம்.

தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை, எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியின் முதல் பாசுரத்தை, திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் கேட்டு கொண்டதை பார்த்தோம். கர்ம, ஞான, பக்தி யோகங்கள் இல்லை என்றால், மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்க, அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு என்ற பாசுர விளக்கத்தையும் முன்வலைப்பதிவில் பார்த்தோம்.

இனி அடுத்த பாசுரம்.

பாசுரம் 27

குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டு ஓடி, தரங்கநீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலம் போலேன், மரங்கள்போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால், அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே திருமாலை 27

வானர வீரர்கள், இராம கைங்கர்யத்தில் ஈடுபடவேண்டும் என்ற காரணத்தினால், மலைகளை தள்ளிக்கொண்டு வருவது போலவும், தண்ணீரிலே மூழ்கி, பின்னர் கரையில் உள்ள மணலில் புரண்டு ஓடி, அலைகளுடன் பொங்கும்படியான கடலை, தூர்ப்பதில் ஈடுபட்ட கபடம் அற்ற அணில்களைப்போலவும், தான் இல்லை என்றும், மரங்களைப்போல் கடினமான மனதை உடையவனாய், வஞ்சனையில் ஈடுபட்டுள்ளவனாய் எல்லாவித கைங்கர்யங்களுக்கும் தகுதி வாய்ந்த, பெருமை உடைய, தான் திருவரங்கனுக்கு நெஞ்சார அடிமை செய்யாமல், அனர்த்தப்பட்டு நிற்கிறேன் என்று ஆழ்வார் பாடுகிறார்.

சென்ற இரண்டு பாசுரங்களில் சொல்லியது போல், மனிதர்கள் செய்யக்கூடிய எந்த நற்செயல்களையும் ஆழ்வார் செய்யாவிட்டாலும், பரமபதத்தில், அனந்தாழ்வான், கருடன், விஷ்வக்சேனர் மூலம் ஏற்றுக்கொள்ளும் சேவைகளை, விலங்குகளைக்கொண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி, எம்பெருமான் ராமனாக அவதரித்த காலத்தில், குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவ, அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுப்பது போல் அமைந்துள்ள உள்ள பாசுரம்.

குரங்குகள் மலையை நூக்க

குரங்குகள் என்று பன்மையில் சொல்லி, மலை என்று ஒருமையில் சொன்னது, எண்ணிக்கையில் குரங்குகள் அதிகம் என்றும், மலைகள் குறைவாகவும் இருப்பது என்றும் ஒரு மலையை பல குரங்குகள் தள்ளிக் கொண்டு வருகின்றன என்றும் தெரிகிறது. ஒவ்வொரு வானர வீரரும் ஒரு மலையை ஒரு சிறு கல் போல் தூக்கும் சக்தி உடையவர் என்றாலும், மலைகள் குறைவாக இருப்பதால் இராம கைங்கர்யம் செய்யும் ஆசையால் பல குரங்குகள் ஒரு மலையை தொட்டு வருகின்றன என்று உரை ஆசிரியர் கூறுகிறார். மேலும், விலங்குகளுக்கு இத்தகைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை வருமா என்று கேட்டுக்கொண்டு, சேவையை ஏற்றுக்கொள்ளும் ஸ்வாமியான ஸ்ரீ ராமபிரான், பொருத்தமான ஸ்வாமி ஆனதாலும், அவர் வில்லும் கையுமாக நிற்கும் நிலையைக் கண்டவுடன், ஞானம் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்யாசம் இல்லாமல் சிறு துரும்பு போன்றவைகளும் கூட கைங்கர்யம் செய்யும் என்று சொல்கிறார்.

மலையை நூக்க

மலையை கடலில் போட என்று சொல்லாமல், நூக்க என்ற சொல்லால், மலையை தள்ளிக்கொண்டு வருவது என்று சொல்வது, முதலில் வரும் மலையை தள்ளிக்கொண்டு வரும் வானரக்கூட்டத்தில் இருந்து அடுத்த வானரக்கூட்டம் மலையைபெற்றுக்கொண்டு அப்படியே அடுத்து வரும் வானரக்கூட்டத்திற்கு கொடுக்க, இப்படி மலையை யாரும் தூக்காமல் கைமாறிமாறி, கடலில் தள்ளி விட்டன என்று கருத்து.

குளித்து

இராமாயணம், யுத்தகாண்டத்தில் (5.9) இராமர், சீதையை நினைத்து தன் உடல் மிகவும் கொதித்து உள்ளதாகவும், தான் அப்படியே சமுத்திரத்தில் சிறிது நேரம் இருந்தால், அந்த ஜுவலிக்கின்ற காமாக்னியானது ஜலத்தில் கூட கஷ்டப்பட்டே தகிக்கும் என்றும், நீரெல்லாம் வற்றி விடும் என்றும் கூறுகிறார். எம்பெருமான் சீதாபிராட்டியின் பிரிவால் வாடுவதை பார்த்த வானரவீரர்கள் எல்லோரும் ராம கைங்கர்யத்தில் ஈடுபட்டு, மிகவும் வேகமாக கடலில் அணைக்கட்டுவதை காட்டுகிறது என்று உரையாசிரியர் சொல்கிறார்.

குளித்து …. அணிலம் போலேன்

இங்கு ஆழ்வார் முதலில் அணிலின் பார்வையில் இருந்து ஒரு சில கருத்துக்களைச் சொல்கிறார்.

  • குரங்குகள் மலைகளை தள்ளிக்கொண்டு போவதை பார்த்து, எம்பெருமான் பிராட்டியை சீக்கிரம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திற்கு, அந்த வேகம் போதாது என்று எண்ணின.
  • மலைகளை கடலில் வெறுமே போட்டுவிட்டால், பாலம் கட்டி முடியாது, அவைகளை பூசவேண்டும், ஒரு குரங்கும் அதை செய்யவில்லை;
  • மலைகளை பூச மணல் வேண்டும், அதையும் மலைகளுக்கு நடுவே போடவேண்டும், அவற்றை இந்த குரங்குகள் செய்ய வில்லை.
  • அதனால், அணில்கள் கடலில் மூழ்கி, கரையில் புரண்டு தன்னுடைய உடல்களில் மணலை ஒட்டி மீண்டும் கடலில் உள்ள அந்த மலைகளுக்கு இடையே மீண்டும் கடலில் குளித்தன. (குளித்து)
  • இவ்வாறு அணில்கள் கடலில் உள்ள மலைகளை பூசுவதாக நினைத்தன.
  • இப்படி அடிக்கடி கடலில் முழுவதால் அந்த தண்ணீரை கடலில் இருந்து எடுத்து கொண்டு போக முடியும், அதனால் கடல் தண்ணீரும் சீக்கிரத்தில் வற்றி விடும் என்று அணை கட்டும் இராம கைங்கர்யத்தில் அணில்கள் ஈடுபட்டன.
  • இவை எவ்வளவு சிறியவை, இதனால் அணை கட்டிமுடிக்கமுடியாது என்று எல்லாம் அணில் நினைக்காமல், இராம கைங்கர்யத்தில் ஈடுபடுவதிலேயே குறியாக இருந்தன.
  • குரங்குகளால் பூச முடியாமல் போன, ராமகாரியத்தை, நம்மால் செய்ய முடிகிறதே என்ற கர்வத்துடன் அணில்கள் ஓடிஓடி சேவை புரிந்தன என்பதை ஆழ்வார் ‘தாம்‘ என்ற வார்த்தையால் சொல்கிறார்.
  • தாம் என்பதற்கு சிறிய மேனி என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
  • தண்ணீரில் இவ்வாறு மணலை உதிர்த்து விட்டு, மீண்டும் குளித்து, பின் அதிக மணலை தன்னுடைய உடம்பில் ஓட்டும் என்ற தவறான நம்பிகையால், கடற்கரையில் வெகு தூரம் சென்று உருண்டு, பிரண்டு மீண்டும் கடலுக்கு சென்றன. (புரண்டிட்டோடி )
  • அப்பொழுது அதனை கவனித்த வானரங்கள் ஏன் இவ்வளவு வேகம் என்று கேட்டதற்கு, இராமபிரான் துக்கமாக உள்ளார், மத்திய உணவு இலங்கையின் வடக்கு வாசலில் தான், அதற்குத்தான் இந்த வேகம் என்று சொல்லி, வானரங்களுக்கு வேகம் போதவில்லையே என்று குறைபட்டுக்கொண்டன.
  • இராம காரியத்தில் உள்ள விருப்பத்தால், தம்மால் இந்த காரியத்தை செய்து முடிக்க முடியமா என்று யோசிக்காமல், அணில்கள் அந்த சேவையை தொடர்ந்தன.
  • அலைகளால் பொங்குகின்ற கடலை அடைப்பதற்கு இந்த சிறிய அணில்கள் முயற்சி செய்தன. (தரங்க நீரை அடைக்கல்)
  • தாங்கள் தான் மேஸ்திரிகள் போல் இருந்து கடலை அடைகின்றோம் என்றும், தங்களுக்கு உதவியாக வானரங்கள் மலையை கொண்டு கடலில் கொட்டுகின்றன என்றும் அணில்கள் நினைக்க தொடங்கின. (உற்ற)
  • அணில்கள் இந்த காரியத்தை கைங்கர்யமாக செய்கின்றவே தவிர, ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை (சலம் இலா அணிலம் )
  • அணில்கள் செய்யும் காரியங்கள் சிறிதளவும் கடலை அடைக்க உதவி இல்லாமல் இருக்கும்போது அது எப்படி எம்பெருமான் கைங்கர்யமாக கருதப்படுகிறது என்றால், அவைகளின் எண்ணத்தில் உள்ள சுத்தத்தன்மையே போதுமானது என்று ஆழ்வார் சொல்கிறார். எண்ணம், எம்பெருமான் விரைவில் கடலைகடந்து இலங்காபுரியை அடையவேண்டும் என்பதே.

சலமிலா என்பதை, சலனம் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டு, ஆழ்வார், மனிதர்கள் போல், சாஸ்திரங்களால் வசப்படாமல், கைங்கர்யம் செய்ய கை கால்கள் கூட இல்லாமல், குளித்து, ஓடி, புரண்டு, என்று பல செயல்கள் செய்யும் இந்த தாழ்ந்த விலங்குகளிடம் உள்ள நல்ல எண்ணங்கள் கூட தன்னிடம் இல்லை என்பதை, சென்ற பாசுரத்தாலும் (குளித்து மூன்று) இந்த பாசுரத்தாலும் சொல்கிறார்.

எல்லா விருப்பங்களும், என்றும் நிறைவேற பெற்று இருக்கும், எம்பெருமானுக்கு ஜீவாத்மாக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது இந்த நல்ல எண்ணம் ஒன்றைத்தான். பூர்ணனான எம்பெருமானுக்கு பூர்ணமில்லாத ஜீவாத்மாக்களால் ஒன்றும் செய்து விட முடியாதுதான். அதற்காக அற்ப ஞானமும், அற்ப சக்தியும் உள்ள தான் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்குவது பாக்கியம் இல்லாதவன் செய்வது. பூர்ணனான எம்பெருமானுக்கு ஒரு சிறிது காரியம் செய்தாலும், மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்வான் என்று எந்த பிரதிபலனையும் கருதாமல் அவனுக்கு தொண்டு செய்பவர் ஒரு சிலரே. அப்படி செய்யும் அணிலுக்கு உள்ள ஈடுபாடு தனக்கு இல்லையே என்று ஆழ்வார் தெரிவிக்கின்றார்.

அணைக்கட்டியதை பற்றிய சில பாசுரங்கள் :

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய், சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து, மலைகொண்டலை நீரணைகட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன், தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. (திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி 1.5.1)

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்து, கொல்லை விலங்கு பணிசெய்யக் கொடியோன் இலங்கை புகலுற்று, தொல்லை மரங்கள் புகப்பெய்து துவலை நிமிர்ந்து வானணவ, கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே. திருமங்கையாழ்வார், (பெரிய திருமொழி, 8.6.4)

மலையதனால் அணை கட்டி மதிள் இலங்கை அழித்தவனே ! (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி, 8.8)

குரை கடலை அடல் அம்பாள் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை அதனால் ஏறி எரி நெடு வேல் அர்க்கரோடு இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து (குலசேகர ஆழ்வார், பெருமாள் திருமொழி 10.7)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் ( தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை 11)

மரங்கள்போல் வலிய நெஞ்சம்

இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று 17 வது பாசுரத்தில் பாடிய ஆழ்வார், இங்கு மரங்கள் போல் வலிய நெஞ்சம் என்று பாடுகிறார். இரும்பினை தீயில் இட்டு தனக்கு வேண்டிய வடிவத்திற்கு மாற்ற முடியும், ஆனால் மரத்தினை தீயில் இட்டால் சாம்பல் ஆகிவிடும் என்று காரணத்தால் ஆழ்வார் தனது நெஞ்சினை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

சலமிலா மரங்கள் போல் என்று ஒரு அர்த்தமும் சொல்லப்படுகிறது. மரத்தை ஆயுதத்தால் அசைத்து விடலாம் என்றும், ஆழ்வார் தன் நெஞ்சம் அதைவிட வலியது, எதனாலும் அசைக்கமுடியாது என்று கொள்ளலாம்.

வஞ்சனேன்

இப்படி கடினமான நெஞ்சம் இருக்கும் போது, பார்க்கிறவர்கள் இவன் நெஞ்சம் எம்பெருமானை நினைத்து இப்படி உருகுகிறதே என்று நினைக்கும்படி நடிக்க வல்லவனாக தான் இருப்பதாக ஆழ்வார் சொல்கிறார். உலகில் உள்ள மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டு, எம்பெருமானிடத்தில் கொஞ்சமும் ஈடுபாடு இல்லாமல், ஆனால் பார்ப்பவர்கள் இவனைப்போல் உண்டோ என்று மயங்கும்படி உட்கருத்தை மறைத்து வாழ்கிறேன் என்று ஆழ்வார் சொல்கிறார். இறை இறை உருகும் வண்ணம் என்று 17வது பாசுரத்தில் சொன்னது இப்படி வேஷம் போட்டது என்று ஆழ்வார் சொல்கிறார்.

நெஞ்சு தன்னால்

அணில்கள் தங்களுடைய நல்லெண்ணத்தாலே கைங்கர்யம் செய்தது போல், அவர் கொடுத்த நெஞ்சத்தை வைத்து, அருகே இருக்கும் அவரிடம் கொஞ்சமாவது ஈடுபாடு கொண்டு இருக்கலாம் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார்.

அரகங்கனார்க்கு ஆட்செய்யாதே

ஆட்செய்தல் என்றால் அது முழுமையாக பரிபூர்ணமாக செய்வதாகும், மேலே சொன்னது போல், கொஞ்சம் ஈடுபாடு இருந்தால், அது ஆட்செய்தல் என்று ஆகாது. அணில்களின் நல்ல எண்ணத்தையே கைங்கர்யமாக திருவுள்ளம் கொள்ளும் எம்பெருமானைக் கருத்தில் கொண்டால் அவன் அந்த கொஞ்சத்தையே முழுமையாகக்கொள்வான் என்று ஆழ்வார் சொல்கிறார்.

அளியத்தேன்

இராமாயணத்தில் (அயோத்யா காண்டம் 31-25), சீதையும், இராமனும் மலை சரிவுகளில் ரம்யமாக பயணம் செய்யும் போதும் மற்றும், அவர்கள் உறங்கும் போதும், முழித்துக்கொண்டு இருக்கும் போதும் அவர்களுக்குத் தேவையான எல்லாவித சேவைகளையும் செய்வேன் சென்று லக்ஷ்மணன் கூறியது போல், ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வடிவில்லா அடிமை செய்ய வேண்டியதற்காக பிறந்த ஆத்மா அல்லவோ, என்று ஆழ்வார் தன்னுடைய ஆத்மாவை எண்ணி அது வீணாகிவிட்டதே என்று கவலைப் படுகிறார்.

அயர்க்கின்றேனே

இப்படி தன்னுடைய ஆத்மா வீணாகி விட்டதே என்பதற்கான காரணம், தான் எம்பெருமானை மறந்ததுதான் என்றும், தகுதி இல்லாதால் அல்ல என்றும் சொல்கிறார். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (6.2.2), மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதியின் மனத்தால், இறந்தேன் சொல்வதை இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

ஆழ்வார் தன்னுடைய வர்ணாசிரம தர்மத்திற்கு தகுந்த, கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, என்று இந்த பகுதியின் முதல் பாடலிலும், இரண்டாம் பாடலில், தான் எந்த மனிதன் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்வதில்லை என்றும் இப்போது மூன்றாம் பாடலில் குரங்குகள், அணில்கள் போன்ற மிருகங்கள் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல, ஆழ்வார் எதுவும் செய்தது இல்லை என்று நைச்சானுசந்தானத்தை தொடர்கிறார்.

இனி மீண்டும் அடுத்த பாசுரத்தில் பார்க்கலாம், நன்றி.

065 திருஅயோத்தி Thiru Ayodhi

ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி

வடநாட்டு திருப்பதிகள் – முன்னுரை

இன்று தமிழகம் என்று சொல்கின்ற பகுதிக்கு வடக்கு பக்கம் தான் விபவத்தில் அமைந்த அத்தனை அவதாரங்களும் நிகழ்ந்தது. ஆனால் வட இந்தியாவில் காலச் சூழ்நிலைகளாலும், அன்னியர் வருகையாலும், அடிக்கடி நிகழ்ந்த யுத்தங்களாலும், படையெடுப்புகளாலும், திருத்தலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கூம்பு வடிவமைந்த கோபுரங்களும், சிறிய அளவிலான மூலஸ்தானங்களும் தமிழகத்தில் நாம் கண்டு களிக்கும் அர்ச்சாவதார மூர்த்திகளின்றும் வித்தியாசமான வடிவில் அமைந்த மூர்த்திகளோடு இத்தலங்கள் திகழ்கின்றன.

இந்த வடநாட்டுப் எம்பெருமான்கள், வேதங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும், புராண இதிகாசங்களுக்கும் மத்தியில் புகழில் மண்டிக் கிடக்கின்றார்கள். தமிழ் மொழி தவிர்ந்த மற்ற மொழி கவிகளின் வார்த்தைகளிலும் பிரகாசித்து இருக்கிறார்கள். வால்மீகி, வியாசர், துளசிதாசர், காளிதாசன் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டு போகும். அதே போல், புண்ணியங்கள் நிறைந்த புகழ் மலிந்த கங்கை, யமுனை, சரஸ்வதி, கோமதி, பிரம்மபுத்திரா, அளகநந்தா ப்ராயாகை, சரயு என்னும் பல புண்ணிய தீர்த்தங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. ஸ்தலவரலாறுகளுக்கும் குறைவில்லை, காலம் காலமாக, யுகம் யுகமாக நீண்டுகொண்டே இருக்கும்.

திருப்பாற்கடல், சாளக்கிராமம், துவாரகா, திருபிரிதி போன்ற திவ்யதேசங்கள் இருந்த இடம், இன்று இருக்கும் இடம் பற்றியும் நிறைய தொடர் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூர்த்திகள் சில ஸ்தலங்களில் இல்லை.  சிலவற்றை பிரதேச அளவில் மங்களாசாசனம் செய்து உள்ளார்கள். அதாவது கோகுலம் என்றும், பிருந்தாவனம் என்றும், அயோத்தி என்றும்
சரித்திர நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடம் முழுமையும் பாடி பரவசம் அடைந்துள்ளார்கள்.
பனி மூடிய சிகரங்களுக்கிடையே பளிச்சென மின்னும் திவ்ய தேசமும் உண்டு. வேத, இதிகாச, புராண ஸ்மிருதிகளோடு, தர்மம், ஞானம், யாகம் என்ற கோட்பாடுகள் சூழ திகழும் திவ்யதேசங்களாகும்.

ஓம் என்பது, அ உ ம என்பதின் சேர்க்கை என்பது ஒரு புறமும், வியூக வாசுதேவன், பிரத்யும்ன, சங்கர்ஷண, அநிருத்த என்று தன்னையும் சேர்த்து நான்காக பிரிந்ததை இன்னொரு புறமாகவும் கொண்டு, சரஸ்வதி, யமுனை, கங்கா என்ற புண்ணிய நதிகளை இன்னொரு புறமும் கொண்டு அவற்றை எல்லாம் இணைக்கும் அவதார ரகசியங்களை விளக்கும் சாஸ்திரங்களுக்கு பிரிதிநிதியாக இந்த திவ்யதேசங்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

துவாரகா என்ற திவ்யதேசமும் பஞ்ச துவாரகா என்ற பெயரில் ஐந்து வெவ்வேறு இடங்களில் பரந்து பக்தர்களை பரவசப்படுத்துவதும், நரனாக, தீர்த்தமாக, வனமாக, சங்கமித்துக் கொண்ட நதிகளின் அரவணைப்பில், வேதம், பரமபதத்திலிருந்து எம்பெருமான் தன்னை வ்யூக நிலைக்கு எழுந்தருளப் பண்ணியதை விவரிக்கும் இத்தலங்கள், சில ஆழ்வார்களால் பாடப்பட்டவை, சில புஷ்கர், கயா, குருஷேத்திரம், சித்திரகூடம், பஞ்சவடி, போன்ற அபிமான ஸ்தலங்கள்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட வடநாட்டுத் திருப்பதிகள் 11.  அவை, திருஅயோத்தி, திருநைமிசாரண்யம், திருப்பிரிதி, திருகண்டமென்னும்கடிநகர், திருப்பத்ரிகாச்ரமம், திருசாளக்ராமம், திருவடமதுரை (கோவர்த்தனம் பிருந்தாவனம் சேர்ந்தது), திருஆய்ப்பாடி, திருதுவாரகை, திருசிங்கவேள்குன்றம், திருவேங்கடம்.

Thanks Google Map
திவ்யதேசம்திருஅயோத்தியா
மூலவர்ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன்
உத்ஸவர்ஸ்ரீராமன்
தாயார்ஸீதாப்பிராட்டி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம்
திசைவடக்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் 6
குலசேகராழ்வார் 4
நம்மாழ்வார் 1
தொண்டரடிபொடியாழ்வார் 1

திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி
தீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி
விமானம் புஷ்கல விமானம்

சக்ரவர்த்தி திருமகன்

இராமன், சித்திரை மாதத்தில், வளர்பிறை நவமி அன்று, புனர்வசு கூடிய நக்ஷத்திரத்தில் கடக லக்கினத்தில் அவதரித்தான். இராமனின் அவதார தினத்தை ஒரு விரதமாகவே கொண்டாடும் படி நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமனை சக்ரவர்த்தி திருமகன் என்று அழைப்பது வழக்கம்.

இராமன் பற்றி சொல்லி முடிக்க முடியாது என்பது உண்மை. இருந்தாலும், ஒரு சில வரிகள் இராமன் பற்றி பிறர் சொல்லியது.

மண்டோதரி, இராவணன் மனைவி.  ராமனைப் பற்றி கூறுகிறாள். ரகு வம்ச மணி ராமன், விஸ்வரூபன். அவனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது. பாதாளம் அவரது பாதங்கள். பிரம்மலோகம் அவரது சிரசு. சூரிய சந்திரர்கள் அவனது கண்கள். மேகம் அவனது கேசம். அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல். பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது. எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவர் மீது கொண்ட பகைமையை விடுக என்று ராவணனிடம் அவனது மனைவி மண்டோதரி மன்றாடுகிறாள்.

வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கிறார். த்வம் அப்ரமேயஶ்ச, துராஸதஶ்ச, ஜிதேந்த்ரியஶ்ச, உத்தம தார்மிகஶ்ச. அக்ஷய்யகீர்திஶ்ச விசக்ஷணஶ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் ‘நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

இராவணனின் நண்பன் மாரீசன் இராமனின் பெயரை கேட்டவுடன், தன்னுடைய வாய் உலர்ந்து, மிகவும் கவலையுற்று, உலர்ந்த தன் உதட்டினை ஈரப்படுத்திக் கொண்டு, உயிரற்றவனின் கண்கள் இமைக்காது இருப்பதுபோல் இராவணனை பார்த்தான். ராமனின் வீரத்தை நேரில் பார்த்ததால் மாரீசன், கரம் கூப்பி இராவணனிடம் தங்கள் இருவருடைய நன்மைக்காக சொன்னது. இராமனின் வீரத்தை நேரில் பார்த்த ஒற்றன் ஒருவனையும், இராவணன் நியமிக்கவில்லை என்றும், ராமனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் ஒரு ராக்ஷசன் கூட இல்லாமல் செய்துவிடுவார் என்றும், சீதை இராவணனுடைய உயிரைக் குடிப்பதற்காக பிறக்கவில்லை என்று தான் நம்புவதாகவும், ராமன் தர்மத்தை விட்டு ஒரு சிறிதும் பிசகாதவன் என்றும், ராமன் உண்மைக்கு இலக்கணம் என்றும், இராமன் புலன்களை அடக்கியவன் என்றும், இராமனிடம் சண்டைக்கு செல்வது இராவணனுக்கு உசிதம் இல்லை என்றும் ஒரு சர்க்கம் முழுவதும் உபதேசம் செய்கிறான்.

இராமனை புகழ்ந்து மேலே கொடுத்துள்ள வார்த்தைகளை சொன்ன மூவருமே, இராமனுக்கு எதிரிகள்.

இராம நாம மஹிமை

அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமனால், அவனது திருநாமம், உலகம் முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி சொல்லி முடித்து விட முடியாது. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டு எரிக்க வல்லது. லவ குசர்கள், இராமாயணம் பாடும் போது இராமனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, அனுமன் சொன்னதால், சீதைக்கு உயிரை தக்க வைத்தது. அனுமன் சொன்னதால், பரதனுக்கு உயிரை மீட்டுக்குக் கொடுத்தது. ம்ருத சஞ்சீவனம் ராம நாமம் – போகிற உயிரை மீட்டுக் கொடுக்கும்.

திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள். ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள், அழியா மகத்துவம் உடையவை.

ராம நாமத்தை உலகிற்குக் கொடுத்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்பும் ஆகும். அது அயோத்தியில் தொடங்கி, கோசல நாட்டில் வளர்ந்து, இந்தியா எங்கும் பரவி, இன்று உலகளவில் பெரிதும் பேசப்படும் நாமமாக உள்ளது. இராமாயணம், அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட / எழுதப்பட்ட சரித்திரமாக இன்று உள்ளது.

கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் சூரிய குல  இக்ஷ்வாகு மன்னரின் வழித்தோன்றல்கள் எனப்படுகின்றனர். இக்ஷ்வாகு குலத்தின் புகழ் பெற்றவர்களாக பகீரதன்,  தசரதன்  மற்றும் இராமன்  கருதப்படுகிறார்கள்.

கம்பர், ராமநாமத்தின் மகிமையை, “ நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே, தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே, சென்மமும், மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமாவென்ற இரண்டு எழுத்தினால்” என்றும், “நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம், விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும், நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே” என்றும் கூறுகிறார். பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராம ஜெயம்”  அல்லது  “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும்,  ஞானம் பெருகும்,  பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்,  வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.

இத்திருத்தலம் பற்றி

சிற்றன்னையின் சொல் காரணமாக தந்தை தயரதன் ஆணையை சிரமேற்கொண்டு கானகம் அடைந்த ஸ்ரீராமனே, ஞானம் அற்றவர்கட்கு அருமருந்தாய் திகழும் அயோத்தி நகருக்கு அதிபதியே, என்று குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் திருத்தலம் வட இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்து உள்ளது. எங்கு நோக்கினும் ராம, சீதா பிராட்டியின் கோவில்களும், ஆஞ்சநேயர் கோவில்களும், ராம பஜனையும் ராம பக்தர்களுமாகத் திகழ ஒரே ராம மயமாகத் திகழ்கிறது இந்த ராம ஜென்ம பூமி.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்யா என்ற சொல்லுக்கு எதிர்த்து வெற்றி பெற முடியாதது என்று சொல்வார்கள். அதாவது தோல்வியே இல்லாத ஊர்.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

அயோத்தி, சரயு நதியின் தெற்கு கரைக்கும் தமஸா நதியின் வடக்கு கரைக்கும் இடையில் அமைந்து உள்ளது. பண்டைய கோசல நாட்டின் தலைநகர் ஆகும். சரயு நதிக்கரையில் கோ (பசு) தானம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. சரயு நதியின் மூலம் தான் முதலில் ஸ்ரீ லக்ஷ்மணனும் பின்னர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் பரமபதம் அடைந்தார்கள் என்றும், அவனைத் தொடர்ந்த மக்கள், மரம், செடி, கொடி, விலங்கு என எல்லா ஜீவராசிகளும் பரமபதத்தை கொடுத்தான் என்றும் வரலாறு கூறுகிறது.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்

இராம ஜென்ம பூமி, இது இராமர் அவதரித்த இடம். வாழ்ந்த இடம். பல வரலாறுகளை சுமந்து கொண்டு உள்ள இடம். கூடிய விரைவில் மிக பெரிய இராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற இடம். இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடம்.

அநுமான்கார்ஹி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. 76 படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் அழகிய சிலைகளையும் கொண்டு கம்பீரத்தோறறத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. ஆஞ்சேநேயரின் பெரிய திருவுருவ சிலையைத்தவிர, அவருக்கும், அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் இங்கே சிலைகள் உண்டு. இங்கு போகும் வழியில் நிறைய கடைகள், அங்கு விற்கப்படும் பிரசாதங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி, ஆஞ்சேநேயர்க்கு சமர்பிக்கிறார்கள். இந்த ஆலயத்தின் சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் பக்தர்கள் ராமாயணம் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு தான் ஹனுமான் வாழ்ந்துகொண்டு எல்லோரையும் காத்துகொண்டு இருப்பதாக நம்பிக்கை. இராம ஜென்ம பூமிக்கு போவதற்கு முன் இவரை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு அமைந்துள்ள கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதையின் இடம் ஆகும், கைகேயி அவர்களுக்கு உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

வால்மீகி பவன், இது ஒரு அருமையான இடம். இங்கு வால்மீகி, லவ குசர்களுடன் காட்சி அளிக்கிறார். இது வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்ட பார்க்க வேண்டிய இடம் ஆகும். வால்மீகி ராமாயணத்தின் 24,000 ஸ்லோகங்களும் இங்கே பொறிக்கப்பட்டு உள்ளன.

சீதா பவன், இது சீதை சமையல் செய்த இடமாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு சமையல் அறைகள் உண்டு, கீழ்த்தளத்தில் உள்ளது சீதா தேவியின் சமையல் செய்யும் இடம் என்றும் அங்கு சில பாத்திரகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கே, ராமர், சீதை, பரதன் மாண்டவி, லக்ஷ்மணன், ஊர்மிளா, சத்ருக்னன் ஸ்ருதகீர்த்தி என்று அவரவர் மனைவியுடன் தரிசனம் செய்யும் கோயிலாகவும் உள்ளது. சீதாவை அன்னபூரணி என்றும், இது அவருடைய கோவில் என்றும் சொல்வதுண்டு.

தசரத பவன், என்பது தசரதனின் அரண்மனை, இராமன் வளர்ந்த இடம், பெரிய அரண்மனை, தசரத மஹால் என்றும் சொல்லப்படும்.

சரயு நதி இமயமலையில் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது. அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காக்ரா என்னும் நதி கலக்கிறது. சரயு நதியில் உள்ள ராம்காட் என்னுமிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம். மேலும் குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய படித்துறைகள் ஆகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுக்கு வரும் போது, ராமன் சரயு நதிக்கு வந்து, தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது. ராமன் தனது சரீரத்தைக் களைந்த சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு தென்னிந்திய பாணி கோவில் உள்ளது. தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ளது. இராமன் சந்நிதியில், ராமன், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன், அனுமன், மற்றும் கருடன் என்று எல்லோரும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் மணவாளமாமுனிகள் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

இராமாயணத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். ஸ்ரீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

ஸ்தல வரலாறு

புராணங்கள், எண்ணற்ற இலக்கியங்கள், கணக்கில் அடங்கா நூல்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த அயோத்தி விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று சொல்லப் படுகிறது. வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம் இடம் பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்பு மனுவுக்கு, ஸ்ரீமந்நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும் பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென் கரையில் ஸ்தாபித்தார் என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. மனு விஸ்வகர்மாவைக்கொண்டு அதை பெரிய நகரமாக மாற்ற, எம்பெருமான் வசிஷ்டரை அங்கேயே வாசம் செய்ய அனுப்பி வைத்தான்.

தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன் வைகுந்தத்தை முதலிலேயே இங்கு கொண்டு வைத்து விட்டார் போலும்.

பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன் பூவுலகிற்கு வந்து முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான். திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார்.

இக்ஷ்வாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இக்ஷ்வாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி கொண்டது.

அயோத்தியில் பார்க்க வேண்டிய இடங்கள்

  1. ராம ஜென்ம பூமி, இதற்கு வடக்கே பரதன் அவதரித்த இடமும், ராமஜென்ம பூமியின் கிழக்கே லக்ஷ்மண, சத்ருகுண ஜென்மபூமிகளும் உள்ளன.
  2. ஹனுமான் கடி
  3. சரயு நதி (ராம் காட், லக்ஷ்மண் காட், குப்தார் காட்) லக்ஷ்மண் காட், இங்கிருந்து தான் லக்ஷ்மணன் தன்னுடைய அவதார முடிவின் போது தன்னுடைய சுய ரூபமான ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷனாக மாறி பரமபதம் அடைந்தான். அதனால் இது சஹஸ்ராதார தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். குப்த காட் என்ற இடத்தில இருந்து தான் ராமன் பரமபத்திற்கு எழுந்து அருளினான்.
  4. வால்மீகி பவன்
  5. தசரத பவன்
  6. அம்மாஜி மந்திர் தெற்கு பக்க கோவில்போல் அமைப்பும், பூஜைகளும்
  7. கனகபவனம் என்று அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கைகேயியின் அரண்மனை – இராமன் சீதை அந்தப்புரம்
  8. லகட்மண்டி / பரத் பவன் என்று தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம்
  9. வசிஷ்ட ஆஸ்ரமம்
  10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும் வரை காத்திருந்து நாட்டை ஆண்ட நந்திகிராமம் (இது அயோத்தியிலிருந்து சுமார் 20 மைல்)

இராமாயணம் பற்றி இன்னும் சில இடங்கள்

  1. பிட்டூர் – இது கான்பூருக்கு அருகில் உள்ளது, வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. லவ குசர் பிறந்த இடம். துருவன் தவம் செய்த இடம்.
  2. ப்ரயாக்ராஜ் அருகில், ஶ்ருங்கிபேரபுரம் என்று குகன் ராமனை சந்தித்து கங்கையை கடந்த இடம், குகன் மந்திர்
  3. ப்ரயாக்ராஜ் நகரில் பரத்வாஜமுனிவரின் ஆஸ்ரமம், த்ரிவேணி சங்கமம்
  4. சீதாமர்ஹி (பிஹார்) – சீதா அவதரித்த இடம்
  5. பஸ்ர் பிஹார் – தாடகா வனம், வதம், யாக சம்ரக்ஷணம், வைகுந்தநாதர் கோவில் . வாமன அவதார ஸ்தலம் (தற்போது, பிஹார் ஜெயில்)
  6. ஜனக்புரி (நேபாளம்) – தனுஷாதம், ஜனகபவன்
  7. சித்திரகூட் – மந்தாகினி ஆறு, ராமன் காட், துளசிதாசர் பவன்

அயோத்தியா யாத்ரா பலன்கள்

ஒருவர் அயோத்திக்கு போக எண்ணினாலும், போகும்படி சொன்னாலும், போகிறவர்களுக்கு ஏதாவது உதவி செய்தாலும், அவர்களுக்கு அச்வமேத யாக பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. அயோத்தி செல்பவர்களுக்கு ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் தொலையும். அயோத்தி செல்ல தொடங்கி, பிறகு தடைகள் ஏற்பட்டு செல்ல முடியாவிட்டாலும், அஸ்வமேத யாக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சரயு நதியில் நின்று இராமனை நினைத்தால், அவர்களுக்கு ஒரு குறையும் இராது என்று சரயு நதியே, தசரதனிடம் கூறியதாக பார்வதி தேவிக்கு பரமசிவன் கூறியுள்ளார். சரயு நதி, வசிஷ்டரின் வேண்டுதலால் ஸ்ரீமன் நாராயணானால் அனுப்பப்பட்ட மானஸ சரஸ். ப்ரம்மா ஸ்ரீமன் நாராயணனை ஸ்தோஸ்திரம் செய்யும் போது, எம்பெருமானின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீரை பிரம்மன் குளம் போல் சேர்த்து வைத்ததே மானஸ சரஸ்.

சரயூநதியின் குப்தா காட்டில், சவரம் செய்து இராமனை வழிபடுவர்களுக்கு சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

சீதையின் சமையல் அறையை பார்த்ததினால், பரசுராமர் க்ஷத்திரிய வத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும், பலராமர், சூதவத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும் சொல்லப்டுகிறது. இந்த இரண்டு சரித்திரங்களை சீதை வாழ்ந்த காலத்திற்கு பிறகு என்று தெரிகிறது.

அயோத்தியில் ஹனுமனை பூஜிப்பவர்களுக்கு ஒரு குறையும் வராது என்று சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள்

பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். அயோத்தி நகரத்தையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளதால் இங்குள்ள அனைத்து வைணவத் தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவே கொள்ளலாம். குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் 10 பாடல்களால் ராமாயண காவியத்தையும் மங்களாசாசனம் செய்துவிட்டார்.

நன்றி whatsapp group நண்பர்கள் மற்றும் dinamalardaily

Google Map

திருஅயோத்யா பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅயோத்யா பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

கம்ப ராமாயணத்தில் அயோத்தி பற்றிய சில பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பர் சுவாமிநாதனுக்கு நன்றி

பெரியாழ்வார்

பெரியாழ்வார் : ஒரு தொகுப்பில், அனுமான் தன்னை எப்படி, லங்காவில் உள்ள அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் அடையாளம் காட்டிக் கொண்டார் (3.10) என்றும், ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த குண நலன்களை மற்றொரு தொகுப்பிலும் (3.9) பாடி உள்ளார்.

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன், அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.6) இங்கு பரதன் இராமனை பிரிந்து வாடும் மனநிலையை, அந்த குணநலனை ஆழ்வாரை படியில் குணத்துப் பரத நம்பி என்று புகழ்கிறார்.

தார்க்கு இளந் தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற  அயோத்திக்கு அரசனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.8) இங்கு பரதனுக்கு அரசை ஈன்றதையும், சூர்ப்பனகையின் செவி, மூக்கு அறுத்த வரலாற்றினை இராமனின் சிறப்பாக கூறியுள்ளார்.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு, ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா, அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த, ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.10) . இங்கு சமுத்திரத்தில் பாலம் கட்டியதையும், இராவணனை வென்றதையும், விபீஷணனுக்கு அரசு ஈந்ததையும் அளித்த இராமனின் சிறப்புகளை சொல்கிறார்.

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம், தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓர் அடையாளம் (பெரியாழ்வார் திருமொழி 3.10.4) இங்கு, அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் இராமபிரான் குஹனுடன் ஸ்நேஹம் செய்து கொண்ட வரலாற்றை அனுமன் ஒரு அடையாளமாக சொன்னதை, தெரிவிக்கின்றார்.

மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாள இவை மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே. (பெரியாழ்வார் திருமொழி 3.10.8) இங்கு அனுமன், சீதையிடம் இராமன் தன்னுடைய திருக்கரத்தில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும் என்று சொல்லி கொடுத்ததை ஒரு அடையாளமாக பாடுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி, இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9) இது கண்டம் எனும் கடி நகர் என்ற திவ்யதேச எம்பெருமானை பாடும் போது ஆழ்வார், வைகுந்தம், துவாரகை, அயோத்தி, பத்ரிகாச்ரமம் இடங்களில் வாசம் செய்யும் எம்பெருமானையும், பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது இறங்குகின்ற வேகத்தையும் சொல்கின்றார்.  

குலசேகராழ்வார்

குலசேகராழ்வாருக்கு ராமச்சந்திரமூர்த்தியின் மேல் இருந்த அபரிமிதமான அன்பினால், அவரை குலசேகரப்பெருமாள் என்று குறிப்பிடுவர். குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தை பாடி உள்ளார். நம் சம்பிரதாயத்தில், பெருமாள் என்றால், அது ஸ்ரீராமனை குறிக்கும். (பெரியபெருமாள் என்றால் திருவரங்கனைக் குறிக்கும்). பெருமாள் திருமொழியில், 105 பாசுரங்கள், 10 பதிகங்களாக உள்ளன. இதில் மூன்று பதிகங்களில், இராமாயணத்தின் காட்சிகளை தனக்கே உரிய தனித்துவத்துடன் சொல்லி உள்ளார். எட்டாவது பதிகத்தில், கோசலை இராமனை தாலாட்டு பாடுவதையும், ஒன்பதாவது பதிகத்தில், இராமனை பிரியும் தசரதனின் புலம்பல்களையும், பத்தாவது பதிகத்தில், இராமாயணத்தை முழுமையாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் கோவிந்தராஜ பெருமாளை அருகில் வைத்துக்கொண்டு சொல்லியுள்ளார்.

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!, அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!சிற்றவை தன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ! (பெருமாள் திருமொழி 8.6) என்ற பாடலில், எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்கிறார்.  அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே, வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே, காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (பெருமாள் திருமொழி 8.7) இங்கு அயோத்தி நகர்க்கு அரசனே!, ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார்.

அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி, வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை செங்கண் நெடும் கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே. ((பெருமாள் திருமொழி 10.1) இங்கு, அயோத்தியின் புகழை ஆழ்வார், அழகிய இடத்தையுடையதும், உயர்ந்த மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்யா என்று ப்ரஸித்தமுமான அழகிய நகரம் என்று குறிப்பிட்டு, ஸகல லோகங்களையும் விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே தேவர்களெல்லாரையும் துன்பம் தீர்ந்து வாழச்செய்த இராமபிரான் என்கிறார்.

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெருந் தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதை மதியோம் இன்றே (பெருமாள் திருமொழி 10.8). இங்கும் அயோத்தியின் பெருமையை அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு அமைக்கப்பட்ட உப்பரிகை வீடுகளையுடைய அயோத்தி என்று கூறுகிறார். ஆராவமுதமாக உள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அதேபோல் உள்ள அந்த எம்பெருமானின் சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும் ஈடாகாது என்பதை இன் அமுதை மதியோம் என்கிறார். லவ குசர் இராமாயணத்தை சொல்லக்கேட்டு அதனால் உலகத்தை நன்னெறியில் செலுத்தினார்கள் என்றும், இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆண்டு வந்ததால், உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

தொண்டரடிபொடியாழ்வார்

தொண்டரடிபொடியாழ்வார் எம்பெருமானை திருப்பள்ளியெழுச்சி செய்யும் பிரபந்தத்தில், அயோத்தியாவை அரசுசெய்வதால், எங்களுக்கு ஸ்வாமியானவனே! என்று சொல்கிறார்.

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள், வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும், ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள், இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை, வாட்டிய வரிசிலை வானவர் ஏறே, மாமுனி வேள்வியைக் காத்து அவ பிரதம். ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே, அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (திருப்பள்ளியெழுச்சி 4)

திருமங்கையாழ்வார்

திருமங்கை ஆழ்வார், யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனை ஆகிய எல்லாவற்றோடும் அரக்கர் தொலையுமாறு கொன்று, வெற்றி பெற்ற அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டு மகிழும்படியாகக் குழமணிதூர கூத்து ஆட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்.

கவள யானை பாய் புரவித் தேரோட அரக்கர் எல்லாம், துவள, வென்ற வென்றியாளன், தன் தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே. (பெரியதிருமொழி 10.3.8)

நம்மாழ்வார்

நம்மாழ்வார் இங்கு இராம பிரானுடைய ஒரு விசேஷமான தன்மையை / குணத்தை அருளிச் செய்கிறார். இராமன் காட்டுக்கு சென்றபோது, அயோத்தியில் உள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லாம் துக்கத்தால் பிடிக்கப்பட்டன. அதாவது துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி உலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் காலடி வைக்க முடியாதபடி, கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்கள் என்ற பிரிவின்றி அவையெல்லாம் பசுமையை இழந்து இலையுலர்ந்து அழகு அழியும்படி ஆயின என்றும், பதினாலாண்டுகள் கடந்த பிறகு மீண்டும் அவன் திருஅயோத்திக்கு எழுந்தருளிய போது, அவை துயரம் நீங்கி, மீண்டும் செழிப்புற்று மகிழ்ச்சி அடைந்தன என்றும் சொல்லி, இராமபிரானின் பிரிவும் அருகாமையும் உயிரற்ற பொருள்களுக்கும் உயிருள்ளவை போல், பிரிவில் துக்கத்தையும் சேரும்போது மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கக்கூடிய தன்மையை உடைய இந்த பாடலில் காணலாம். இம் மஹாகுணத்தை உடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை ஆழ்வார் அனுபவிக்கிறார். நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே என்று சொன்னதற்கு, தான் பரமபதம் செல்லும் போது எல்லாவற்றையும் அழைத்து சென்றான் என்று ஒரு பொருள் கொண்டாலும், அயோத்தியில் அவன் ஆட்சி செய்யும் போதே அங்கேயே அவர்கள் எல்லோரையும் நல்ல சுபாவங்களை கொண்டு இருக்கும்படி செய்தான் என்றும் கொள்ளலாம்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?, புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. (திருவாய்மொழி, 7.5.1)

வார்த்தை இராமாயணம் ( நன்றி whatsapp group நண்பர்கள்)

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

விளக்கம்:

  1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
  2. வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
  3. கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
  4. பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
  5. மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
  6. சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
  7. துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
  8. நெகிழ்ந்தார்:
    *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
    *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
    *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
    *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
    *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
    *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
  9. இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
  10. அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
  11. அழித்தார்: இலங்கையை அழித்தது.
  12. செழித்தார்: *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது ; *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
  13. துறந்தார்: அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
  14. துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
  15. ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
  16. மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

ஜெய் ஸ்ரீராம்.

064 திருக்கடிகை Thirukadigai

ஸ்ரீ அமிர்தவல்லி சமேத யோகநரஸிம்ஹ சுவாமி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கடிகை, சோளிங்கர், சோளசிங்கபுரம், சோளங்கிபுரம், கடிகாசலம்
பெரிய மலைமூலவர்யோக நரசிம்மர் (அக்காரக் கனி)
உத்ஸவர் இங்கே இல்லை (கீழ்க்கோவிலில் இருக்கிறார்)
தாயார் அம்ருதவல்லி (தனிக்கோவில் நாச்சியார்)
திருக்கோலம் வீற்றுஇருந்த திருக்கோலம்
திசை கிழக்கே திருமுகமண்டலம்
சிறிய மலைமூலவர்யோக ஆஞ்சநேயர் (நான்கு திருக்கரங்களுடன், கையில் சங்கு சக்கரத்துடன் )
மற்ற சன்னதிகள்ரங்கநாதன்,சக்ரவர்த்தி திருமகன்
கீழேயுள்ள
கோவில்
மூலவர்இங்கே இல்லை (பெரியமலையில் உள்ளார்)
உத்ஸவர்பக்தவத்சலப்பெருமாள், தக்கான், பக்தோசித ஸ்வாமிஆதிகேசவப்பெருமாள் (பின்புறம் உள்ளார், சில சமயங்களில் தரிசனம் கிடைக்கும்)
தாயார் சுதாவல்லி நாச்சியார் , அம்ருதவல்லி
மற்ற சன்னதிகள்ஆண்டாள், ஆழ்வார், ஆச்சார்யர்கள், எறும்பியப்பா, தொட்டாச்சாரியார்
பாசுரங்கள் 4
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 3
பேய்ஆழ்வார் 1
தொலைபேசி 91- 44-2232 1221, +91-4172-260 255

கோவில் பற்றி

காஞ்சீபுரத்திற்கும், திருவேங்கடமலைக்கும் இடையிலுள்ள திருத்தலம். இந்த திருத்தலத்தில் கீழே உள்ள திருக்கோவிலில் உற்சவரும், பெரிய மலை மீது மூலவரும் அதனருகில் உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரங்களுடன் ஆஞ்சநேயரும் அமர்ந்துள்ளனர். நரசிம்மர் ஆஞ்சநேயர் இருவரும் யோகநிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பு.

சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) இங்கு தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹமிருப்பதால் இதற்கு திருக்கடிகை என்னும் பெயர்
வந்தது. கடிகை என்றால் நாழிகை, அசலம் என்றால் மலை, இரண்டும் சேர்ந்து கடிகாசலமானது.

சோளிங்கபுரத்தின் புராணப்பெயர் கடிகாசலம், இவ்விடத்தை ஆழ்வார்கள் திருக்கடிகை என்றும் ஆச்சாரியர்கள் சோளசிம்மபுரம் என்றும், சைவர்கள் சோழலிங்கபுரம் என்றும் அழைத்து, தற்போது சோளிங்கபுரம், சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு விசேஷமான பிரார்த்தனைத் தலம் ஆகும். பேய், பிசாசு, சூனியம் என்று சொல்லப்படும் அதீத நோய்கள், தீர இங்கே வந்து விரதம் கடைபிடித்து பிரதி தினமும் தக்கான் குளத்தில் நீராடி, மலைமீதேறி பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டு வந்தால், எல்லா தீரும், மகிழ்ச்சியுடன் இருப்பர் என்று நம்பிக்கை.

அஹோபில மலைதான் எம்பெருமான் நரசிம்ம அவதாரம் எடுத்த இடம். மீண்டும் ஒரு முறை முனிவர்களுக்காக அந்த அவதாரத்தை இங்கே மேற்கொண்டதால், இது தனிச் சிறப்பாகும்.

பிரிவுகளும் சேர்க்கைகளும் இன்றி ஒரே கல்லில் இம்மலை அமைந்திருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்ற பெயரும் உண்டு.

இங்குள்ள பெரியமலையில் யோக நரசிம்மர் எழுந்தருளி உள்ளார். சுமார் 750 அடி உயரமுள்ள 1305 படிகள், ஏழு மண்டபங்கள் உள்ள கடிகாசலம் என்ற பெரியமலை இது. இங்கு நரசிம்மர் சாளக்ராம மாலை அணிந்து, யோகநிலையில், கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். இந்த ஆலயம் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ளது.

இங்கு பக்தர்கள் படியேறி வந்து தம்மைச் சேவிப்பதை பெருமாளே விரும்புவதாக ஐதீஹம். (இங்கு விஞ்ச் ரயில் போட இரண்டு மூன்று முறை முயற்சிக்கப்பட்டு தோல்வி கண்டு விட்டது).

இங்கு கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறப்பதால் வெள்ளி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திருவிழா போல் விசேஷங்கள் நடைபெறும். எங்கும் மக்கள் அலை போல் இருக்கும். சித்திரை ப்ரம்மோத்ஸவம் மிக சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி மாதம், நரசிம்ம ஜெயந்தி திருவிழாவாகவும், காஞ்சி கருட சேவை உற்சவமும் கொண்டாடப் படுகிறது. ஆடியில் திருவாடிப்பூரமும், ஆவணியில் பவித்ரோத்ஸத்வமும் புரட்டாசியில் நவராத்திரியும் மார்கழியில் வைகுந்த ஏகாதசியும், மாசியில் தொட்டாச்சார்யார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பெரிய மலையில் உள்ள நரசிம்மரை தரிசித்துவிட்டுத் தான் சிறிய மலையில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டும். சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சேநேயரின் கண்கள் நேரடியாக யோக நரசிம்மரின் திருவடிகளை நோக்கி அமைந்துள்ளது. சிறிய மலை சுமார் 350 அடிஉயரம் உள்ளது, 400 படிகள் ஏறி சேவிக்க வேண்டும்.

ஆஞ்சநேயருக்கு சங்கு சக்கரம் கொடுத்தருள இராமன் இங்கு எழுந்து அருளினார். இராமனின் ஆராதனை பெருமாள் ரங்கநாதர் ஆவார். அதனால் அவரும் சின்னமலையில் காட்சி அளிக்கிறார். மிகவும் அழகான சிறிய வடிவில் உள்ள (பால) ரங்கநாதர் ஆகும். இவரை தரிசிக்கும் போது, திருசிறுபுலியூர் நினைவுக்கு வருவது ஆச்சர்யம் இல்லை.

உற்சவர் பக்தோசித பெருமாள், சுதாவல்லி, அமிர்தவல்லி எனும் தனது இருதேவியருடன், மலை அடிவாரத்திலிருந்து 2 கி.மீ- தொலைவில் தனிக்கோவில் கொண்டுள்ளார்.  அமிர்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன. உசிதம் என்றால் விருப்பம் எனப்படும். பக்தர்கள் விருப்பப்படி அருளவல்லவராதலால் பக்தோசிதப்பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். அருளுவதில் தக்கவராக இருப்பதால் தக்கான் எனவும் அழைக்கப்படுகிறார். 

இங்குள்ள தீர்த்தத்தில் (குளத்தில்) நீராடி எம்பெருமானை வழிபட்டால், ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Google Map

திருக்கடிகை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருக்கடிகை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

திருக்கடிகை பற்றி நம் பதிப்புகளில் இருந்து

Thanks to friends from Whatsapp

ஸ்தல வரலாறு

சப்தரிஷிகளும், (அத்ரி, காஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர்) வாமதேவர் என்ற முனிவரும் பிரஹ்லாதனுக்காக எம்பெருமான் எடுத்த நரசிம்ம அவதாரத்தைக் காண வேண்டும் என்ற ஆசையினால் இம்மலையில் வந்து தவம் செய்யத் தொடங்கினர். முன்னொரு காலத்தில் விசுவாமித்திரர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் (ஒரு நாழிகை நேரத்தில்) நரசிம்மனைக் குறித்து துதித்து பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றதால், தாங்களும் ஒரு நாழிகை நேரத்தில் நரசிம்ம மூர்த்தியை தரிசிக்கலாம் என்ற நம்பிக்கையில் இம்மலையைத் தெரிவு செய்து இங்கே வந்து தவம் இருந்தனர்.

இது இவ்வாறு இருக்க இராமவதாரம் முடிந்ததும் ஸ்ரீராமன் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் தருவாயில், கடிகாசலத்தில் என்னைக் குறித்து தவம் செய்யும் ஸப்த ரிஷிகட்கு, உண்டாகும், இன்னல்களைக் களைந்து அதன்பின் வைகுந்தம் வருவாயாக என்று ஆஞ்சநேயரிடம் கூற, அவரும் அவ்விதமே இந்த மலைக்கு வந்து சேர்ந்தார். காலன், கேயன் என்னும் இரு அரக்கர்கள் இம்மலையில் நாராயணன் குறித்து தவஞ்செய்யும் ரிஷிகளுக்கு பெருத்த இடையூறு விளைவிக்க அவர்களோடு போர் புரிந்த ஆஞ்சநேயர் ஸ்ரீராமனைத் துதித்து நிற்க, ஸ்ரீராமன் அனுமனுக்கு காட்சி தந்து சங்கு சக்கரங்களை வழங்க, அவற்றால் இரு அரக்கர்களின் தலையைக் கொய்து ரிஷிகளின் தவம் தடை இல்லாமல் தொடர அருள் புரிகிறார். இறுதியில் ரிஷிகளின் தவத்தை மெச்சிய நாராயணன் நரசிம்ம மூர்த்தியாக அவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றான்.

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் “நீ நமது முன்பு அமர்ந்து யோக ஆஞ்சநேயராக மக்களுக்கு தீராத பிணிகளை தீர்த்து, எம்மை வந்தடைவாயாக என்று அருளி மறைந்தார். இதனால் தான் யோக நிலையில் (சங்கு சக்கரத்துடன்) ஆஞ்சநேயருக்கும் தனிச்சன்னதி உள்ளது. கலியுகம் முடியும் வரை அனுமனும் வாழ்வதாக ஐதீஹம். எனவேதான் பக்தி ரசத்தோடு இராமாயணம் படிக்கும் இடம் தோறும் அனுமன் அருவமாகவோ உருவமாகவோ பிரத்யட்சம் ஆவதாய் ஐதீஹம். இந்த உலகத்திலேயே எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டு இருக்கிறார் என்பதை கீழ் கண்ட ஸ்லோகத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம், பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம், மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

ஒரு சமயம் துர்வாச முனிவர் இத்தலத்தை அடைந்து நரசிம்மனை வணங்கி அவரின் திருத்துழாய் மாலையைப் பெற்று அதைக் கழுத்திலும், தலையிலும் சூடி ஆனந்தக் கூத்தாடினார். அப்போது அங்கே நிரம்பியிருந்த சாதுக்கள் கூட்டத்தில் நின்ற நவக்கிரகங்களில் ஒருவனான புதன் துர்வாசரின் இச்செயலைக் கண்டு ஏளனத் தொனியில் சிரித்துக் கேலி செய்ய, துர்வாசரால் சபிக்கப்பட்ட புதன், இந்த கடிகாசலத்தில் பாண்டவ தீர்த்தத்தில் நீராடி அங்கு ஆடியும் பாடியும் வரும் முனிவர்களுக்குத் தொண்டு செய்து தன் சாபம் தீர்ந்து மீண்டும் உயர்நிலை பெற்றான் என்று புராணம் கூறுகிறது.

ஆழ்வார் ஆச்சாரியர்

முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.

வண்பூங்கடிகை இளங்குமரன்’ என்பது பேயாழ்வார் மங்களாசாசனம், மூன்றாம் திருவந்தாதி 61 பாசுரம்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்காய் என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை கடிகை தடம் குன்றின் மிசையிருந்த அக்கார கனியை அடைந்துயிந்து போனேனே  (பெரிய திருமொழி 8.9.4)

ஸ்ரீமந் நாதமுனிகளும், திருக்கச்சி நம்பிகளும், இராமானுஜரும் மணவாள மாமுனியும், மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தொட்டாச்சார்யார் என்னும் ஆச்சார்யர் இத்தலத்தில் பிறந்தவர். இவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று வரதராஜப் பெருமாளை தரிசிப்பதை விரதமாகக் கொண்டிருந்தார். ஓராண்டு உடல் நலிவால் காஞ்சி செல்ல இயலாது போகவே, தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி வரதராஜப் பெருமாளின் கருட சேவையை மனதில் எண்ணித் துதித்து கண்ணீர் சிந்த , காஞ்சிப் பெருமாள் கருட வாகனத்தில் இவருக்குக் காட்சி தந்தார். இதன் நினைவாக இன்றும் காஞ்சியில் பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் காலை கருட வாகனத்தில் எழுந்தருளும் போது கோபுர வாயிலில் தாமதித்து நின்று சோளிங்கபுரம் தொட்டையாச்சார்யாருக்கு சேவை சாதிப்பதாய் குடைகளால் வரதன் மறைக்கப்பட்டு, கற்பூர ஆர்த்தி நடந்து வருகிறது. இத்திருக்கடிகையில் கீழ்க்கோவிலில் தொட்டாச்சார்யருக்கும் தனிச்சன்னதி உள்ளது.

கீழ்க்கோவிலை அமைத்து உற்சவ ஸ்வாமியை பிரதிஷ்டை செய்ததும் இவரே. சிதம்பரம் கோவிலில் இருந்து மூலவரை கிருமிகண்டசோழன் கடலில் போட்டு சென்ற பிறகு அதனைத்தேடி கண்டுபிடிக்க செய்து, மீணடும் சிதம்பரம் கோவிலில் பிரதிஷடை செய்ததும் இவரே.

தொட்டையாசார்யார் பல அற்புதங்கள் செய்து காட்டித் தமது பக்தியை வெளிக்காட்டிய இடம். இவர் சென்றால், இவருக்கு முன்னால் சக்ரத்தாழ்வார் வழிகாட்டிய படி செல்வார் என்று சொல்வர்.

இவரைப் போன்று எறும்பியப்பா என்னும் ஞானியும் இங்குதான் வாழ்ந்தார்.

திருக்கடிகை மலை ஏறி வழிபட இயலாத அன்பர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனத்தில் நினைத்துச் சிந்தித்தாலே போதும். மோட்சம் சித்திக்கும் எனப் புகழ்ந்துரைக்கின்றார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.

RSS
Follow by Email