075 திருவேங்கடம் – நான்காம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் திருப்பதி வேங்கடாசலபதி கோவில் உள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார், கோவில் கொண்டுள்ள அலர்மேல்மங்காபுரம் என்ற திருப்பதியும், இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாக சேர்ந்து திருவேங்கடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதி என்று முன்பு அனுபவித்தோம். இங்கே வேறு சில தலைப்புகளில் சிலவற்றை காண்போம்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

ராமாநுஜரின் திருமலை விஜயங்கள்

பாத மண்டபம்

இராமானுஜர் மூன்று முறை திருமலைக்கு எழுந்தருளி உள்ளார். இராமானுஜருக்கு இருந்த ஐந்து ஆச்சார்யார்களில் ஒருவரான திருமலை நம்பிகள் திருமலையில் தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார். முதல் முறை, தனது இளம் வயதில் இம்மலையைச் சேவிக்க வந்த போது, ஆழ்வார்கள் திருமலையில் ஏறுவதால் அந்த மலையின் தூய்மை கெடும் என்று அஞ்சி, மலை அடிவாரத்திலேயே நின்று, திருவேங்கடவனுக்கு மங்களாசாஸனம் செய்து நலம் பெற்றனர் என்பதை அறிந்து, தானும் அதன் மேல் நடந்து வர விருப்பம் இல்லை என்று தெரிவித்ததாகவும், இவருக்காகவே இவரது தாய் மாமனும், ஒரு ஆச்சார்யராகவும் இருந்த திருமலை நம்பிகள் மலையில் இருந்து தினமும் இறங்கி வந்து, ஒவ்வொரு நாளும், இராமானுஜருக்கு திருமலை அடிவாரத்தில் உள்ள புளிய மரத்தடியில் ராமாயண பாடம் கற்றுத் தந்தார்.

அப்படி பாடம் சொல்லி கொடுக்கும் போது, தான் திருமலையில் மதிய பூஜை சமயம் திருவேங்கட தரிசனம் கிடைக்கவில்லையே என்று உணர்ந்து வருந்தியபடி உறக்கத்தில், எம்பெருமானே திருமலை நம்பிகளுக்கு கனவினில் காட்சி தந்து, மலையடிவாரத்தில் நின்று காட்சி கொடுத்ததாகவும், அவரும் திருமஞ்சன கைங்கர்யம் செய்து உறக்கத்தில் இருந்து எழுந்தார். அப்போது அங்கு ராமானுஜரும் எழுந்தருள, இருவரும் என்றும் இல்லாதபடி, கற்பூர, கஸ்தூரி பரிமளங்கள் வீச, என்ன ஒரு ஆச்சரியம் என்று திகைத்து சுற்றி திரும்பி பார்க்க, என்றும் இராமாயணம் கற்று தரும் அந்த புளிய மரத்தடியில் திருவேங்கடமுடையானின் திருவடிகள் இரண்டும் இருந்தன. ஸ்வயம்வக்தமான அந்த திருவடிகளை சேவித்து, அவற்றின் கீழாக ஆழ்வார்கள் பதின்மரையும் திருவடிகளோடு ஒரு திருமேனியாக ஏறி அருள செய்து, அதற்கு திருவாலயமும் அமைத்து வைகானச ஆகம முறைப்படி ஸ்தாபித்து, அந்த புளிய மரத்தையும் ஆதிசேஷனின் அம்சம் என்று நிச்சயித்து “கலௌ வேங்கட நாயக” என்று பல்லாண்டு பாடியதாக வரலாறு. அந்த இடத்தில், இன்றும் திருவேங்கடவனின் திருவடிகள் உள்ளன, அதற்கு பாத மண்டபம் என்று பெயரிட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அப்பனுக்கு சங்காழி தந்தது

இரண்டாம் முறை சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே திருவேங்கடவன் தங்கள் தெய்வம் என்ற வாதத்தை தீர்த்து வைக்க வந்தது. இந்த முறை வந்தபோது இராமானுஜர் மூன்று நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து, மலை ஏறினார் என்றும், அப்படி அவர் ஏறும் போதும், தன் முழங்கால்களையே படிகளில் வைத்து ஏறினார் என்றும், அப்படி ஒரு இடத்தில் ஏறும் போது அவர் முழங்கால் எலும்பு முறிந்தது என்றும் அப்போது திருவேங்கடவன் தோன்றி அவருடைய இடர்களை போக்கி, கால்களுக்கு உரமூட்டி, மலை ஏறுவதற்கு தகுந்தவைகளாக செய்து திருவருள் காட்டி மறைந்தான் என்றும் ஒரு செவி வழி செய்தி உள்ளது. அதனால் தான் இந்த பகுதிக்கு முழங்கால் முறிச்சான் என்று இறந்த காலத்தில் பெயர் உள்ளதாக சொல்கிறார்கள்.

இராமானுஜர் திருமலைக்கு வந்த போது இப்பெருமானின் கைகளில் சங்கு சக்கரங்கள் இல்லாததாலும் திருக்கரங்களில் நாகாபரணம் என்ற நகை அணிந்து இருந்ததாலும், இந்த தெய்வத்தைச் சிவன் என்றும், இந்து மதத்தின் வேறு பிரிவுகளின் தெய்வம் என்றும் பலவாறு கூற, திருமலையில் ராமானுஜர் மூன்று நாட்கள் தங்கி இருந்து, வேதம், புராணங்களில் இருந்து வாக்கியங்கள் எடுத்து அருளி, அவைகளையும் வேறு பிரிவினர்கள் ஏற்காததால், இறுதியில், எம்பெருமானின் சந்நிதியில், சங்கு, சக்கரம், மற்றும் சிவன், பிற தெய்வங்களின் ஆயுதங்களையும் வைத்து, எம்பெருமானிடம் அவனுக்கு உகந்த ஆயுதங்களை தரித்து அடுத்த நாள் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டி கதவுகளை மூடி பூட்டி வைத்து வந்து வந்தார். அடுத்த நாள் கதவு திறந்ததும் எம்பெருமான் சங்கு சக்கரங்களை தரித்து காட்சி அளித்து, இராமானுஜரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து எல்லோருக்கும் அப்போதும், மறுபடி எப்போதும் விவாதங்கள் வராதபடி, தான் வைணவ தெய்வமே என்று சேவை சாதித்தார். . இப்படி இராமானுஜர் திருவேங்கடத்தில் சங்கு சக்கரங்கள் தோன்றக் காரணமாயிருந்தார். அதனால் இராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்கு ஆழி தந்தவன்’ என்ற பெருமை உண்டு.

தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், திருவேங்கடத்தான், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார். திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரும் இந்த திவ்யதேசத்திற்கு வந்திருந்து,

“உபசாந்த சித்த குருகுல      பவபாண்டவர்க்கு வரதன் மையுருவோன்ப்ர சித்த நெடியவன் …… ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்      வடவேங்க டத்தி லுறைபவ           னுயர்சார்ங்க சக்ர கரதலன் …… மருகோனே” (திருப்புகழ் 75)

என்று இந்த எம்பெருமான் திருமாலே என்று பாடி உள்ளார்.

இந்த முறை தான் இராமானுஜர் கோவிந்தராஜரை திருப்பதியில் நிறுவி கோவிலையும் பெரிதாக்கி, வழிபாட்டு முறைகளையும் சீர் செய்தார்.

திருமலை திருப்பதி நிர்வாக கட்டளைகள்

மூன்றாம் முறை இராமானுஜர் திருமலையில் ஒரு வருடம் இருந்து தானே அதன் நிர்வாக பொறுப்புகளை ஏற்று திருக்கோவிலின் செல்வம் அழியாமல் காத்து, அது மேலும் வளர்ந்து திருக்கோவில் திருப்பணிகள் தொடர்ந்து நடத்திட வழிகள் செய்தார்.

ரிஷிகளும், முனிவர்களும், பரம பாகவதர்களும் வேதம், புராணங்களில் சொன்னபடி திருமலா யாத்திரையின் போது அனுசரிக்க வேண்டிய நியமங்களை தொகுத்து விதிகளாக வழங்கினார். இவைகளை அனுஷ்டிப்பவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் உகந்தவர்கள் என்றும் அதனை அனுஷ்டிக்காதவர்கள் தனக்கும் வேதங்களுக்கும் வெளிப்பட்டவர்கள் என்றும் தன்னுடைய குரலாக ஒரு அர்ச்சகரின் மேல் ஆவிர்பவித்து திருவேங்கடவனே சொன்னதாக திருமலையொழுகு கூறுகிறது.

ஒரு மடத்தை சன்னதிக்கு எதிரில் இருக்கும் ஆஞ்சநேயர் பக்கத்தில் கட்டி அங்கேயே தங்கி இருந்து ஜீயர், ஏகாங்கி நால்வர் என்று ஏற்பாடு செய்து திருவேங்கடமுடையானின் திருப்பணிகள் தடையின்றி நடத்த ஏற்பாடு செய்து பிறகு திருவரங்கம் திரும்பினார். தினமும் திருக்கோவில் நடைசாத்தும் போது கதவுகளில் திருவடி (ஆஞ்சநேயர்) முத்திரையுடன் பூட்டி ஜீயரிடம் சமர்ப்பித்து, மீண்டும் அடுத்த நாள் காலையில் அங்கிருந்தே பெறுவதற்கும் ஏற்பாடு செய்தார். ஏகாங்கி ஸ்ரீவைஷ்ணவருக்கு சேனாதிபதி ஜீயர் என்று பெயர் வழங்கினார்.

திருமலையில் கட்டியம் யாதவ நாராயணன் அல்லது கட்டியத்தேவன் என்பவன் இராமானுஜரின் திருவடிகளை பற்றி, அவர் சீடனாகி, திருமலையிலும் திருப்பதியிலும் இராமானுஜர் கோவில் திருப்பணிகள் அனைத்தும் செய்வதற்கு துணையாக இருந்தான் என்று திருமலை ஒழுகு என்ற நூல் சொல்கிறது.

மார்கழியில் கிருஷ்ணர் சயனம்

திருவேங்கடவன் சன்னதியில் தினமும் ஸ்நபன பேரரான அழகப்பிரானார் இரவில் சயனம் கொள்வது வைகானச ஆகமம் ஆகும். ஆழ்வார் திருமகளான ஆண்டாள் கிருஷ்ணருடன் அனுபவத்தை ஆசைப்பட்டு, தினமும் ஒரு பாடலாய் மார்கழியில் முப்பது பாடல்கள் பாடியதாலும், ‘வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே ‘ என்று இதர அர்ச்சாவதாரங்களை விட்டு, திருவேங்கடவனையே விரும்புவதாலும், விபவ அர்ச்சைகளுக்கு ஒரு பாலமாக இருப்பதாலும், வைகானச ஆகமத்தில் ஒரு ஸம்ஹிதையில் கிருஷ்ணரே மார்கழியில் சயன பேரராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாலும், மூன்று விக்ரகங்கள் இருக்கும் போது, கிருஷ்ணரே என்ற விதி இருப்பதாலும், இராமானுஜர், திருவேங்கடத்தில், கிருஷ்ணரே மார்கழி மாதத்தில் சயன பேரராக இருந்து உலகை காத்தருள ஏற்பாடு செய்தார்.

தீர்த்த நயினார்

தொண்டைமான் சக்ரவர்த்தி, போரில் தோற்று ஸ்வாமியின் மீது உள்ள பக்தியினால் அவர் காட்டிய குகை வழியாக அகாலத்திலே, திருவேங்கடவன் சந்நிதியை அடைய அப்போது அந்தரங்கத்தில் இருந்த ஸ்ரீ, பூமா தேவிகள், அந்நிய புருஷன் வந்ததினால் உடனே மறைந்து, ஸ்ரீதேவி தன்னுடைய இருப்பிடமான எம்பெருமானின் திருமார்பில் மறைந்து கொள்ள, பூமாதேவி, அருகில் கைங்கர்யத்திற்காக கட்டியிருந்த கிணற்றில் மறைந்தாள் என்று ஒரு செவி வழி செய்தியினை கேள்வியுற்ற இராமானுஜர், பூதேவியை அர்ச்சா ரூபமாக எழுந்தருள செய்து, ஒரு தீர்த்த நயினாரையும் அந்த கிணற்றிலே சேர்த்தியாக கிணற்றில் எழுந்தருள செய்து அவர்களுக்கு நித்திய தளிகைகள் அமுது செய்யும்படி செய்தார்.

புஷ்ப கைங்கர்ய ஏற்பாடுகள்

ராமானுஜர் திருமலையில் நிறைய நந்தவனங்கள் அமைக்க ஏற்பாடு செய்து எம்பெருமானுக்கு புதிய புஷ்பங்கள் கிடைக்க செய்தார். ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவரை திருவரங்கத்தில் இருந்து இங்கு அனுப்பினார். அவர் திருமலையில் தங்கி, பல நந்தவனங்கள் அமைத்து இந்த திருமலையை தன்னுடைய கடின உழைப்பினால் புஷ்பமண்டபம் என்பதற்கு ஏற்ப அதிக புஷ்பங்களை ஸ்வாமிக்கு தொடர்ந்து கிடைக்க செய்தார். இன்றும் அனந்தாழ்வான் பெயரில் திருமலையில் நந்தவனம் உள்ளது, அவர் பெயரில் ஒரு உற்சவமும் நடைபெறுகிறது. திருவேங்கடத்தானும் அனந்தாழ்வானுடன் செய்த திருவிளையாடல்களும் இந்த உற்சவத்தில் இடம் பெறுகின்றன.

கட்டியம் யாதவராயன் அனந்தாழ்வான் கேட்டுக்கொண்டபடி யமுனைத்துறை என்ற பெயரில் எம்பெருமானுக்கு திரு மாலைகள் கட்டுவதற்கு திருமலை திருக்கோவிலில் ஒரு மண்டபம் கட்டி கொடுத்தான். இன்றும் அங்கு தான் பூக்கள் தொடுக்க படுகின்றன.

அனந்தாழ்வான் இராமானுஜரின் விருப்பப்படி திருமலையில் பூங்காவனம் அமைந்து தினமும் எம்பெருமானுக்கு புஷ்பகைங்கர்யம் செய்து வந்தார். அந்த திருப்பணியில் திருவேங்கடவனும் உகந்து இருந்ததார். ஒருமுறை புரட்டாசி ப்ரம்மோத்ஸவம் காலத்தில், 7 ம் நாள் திருநாள் அன்று திருவேங்கடவனும் அலர்மேல்மங்கை தாயாரும், ராஜா, ராணி என்று வேடம் தரித்து, அனந்தாழ்வான் புஷ்பதோட்டத்தில் புகுந்து புஷ்பங்களை பறித்து செல்வதை பார்த்த அனந்தாழ்வான் அவர்களை தொடர்ந்து சென்று அவர்களை பிடிக்க பார்த்தார். அவர்கள் திருக்கோவிலை அப்பிரதக்ஷிணமாக (தலைகீழாக அல்லது மாற்றி சுற்றுவது) சுற்றி வந்து மீண்டும் அனந்தாழ்வான் தோட்டத்தில் சென்று மறைந்து விட்டனர். இந்த ஐதீகம் ப்ரம்மோத்ஸவத்தில் அனுஷ்டிக்க தக்கது என்று ராமானுஜர் கருதி ப்ரம்மோத்ஸவத்தில் ஒரு நாள் பூந்தோட்ட உலா செல்லும்படி செய்து, திரும்பும்போது அப்பிரதக்ஷிணமாக சுற்ற கட்டளை பிறப்பித்தார். அந்த உத்சவம் இன்றும் நடக்கிறது.

ஞான முத்திரை

திருமலையில் நிறுவப்பெற்றுள்ள இராமானுஜர் திருவுருவத்தை செய்து அவரிடம் கொடுத்த போது, அதனை அவர் தழுவி அனந்தாழ்வானிடம் கொடுத்ததாகவும் அவர் யாதவராயன் துணை கொண்டு அவருக்கு கோவில் எழுப்பி அங்கு நிறுவினார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது. இந்த இராமானுஜர் திருவுருவம் அவரது 40 வது ஆண்டில் வடித்தது, அவரது வலது திருக்கரம் ஞான முத்திரை குறிக்கும் வண்ணம் உள்ளது. திருமலை திருப்பதிக்கு பலவற்றை திருத்தி புதியவைகளை புகுத்தி, பிறருக்கு தெரியாதிருந்த பல உண்மைகளை வெளிப்படுத்தியும், வேங்கடவனுக்கு சங்கும் சக்ரமும் கொடுத்ததை அவன் ஏற்றுக்கொண்டதையும் மனதில் கொண்டு இராமானுஜரை ஆச்சார்யார் போல் கருதத்தக்க ஞானமுத்திரையுடன் கூடிய திருவுருவுடன் செய்திருப்பர் என்பது ஆன்றோர் கருத்து. திருப்பதியில் கோவிந்தராஜன் சன்னதியிலும், பெரிய ரகுநாதன் சந்நிதியிலும் இருக்கும் இராமானுஜர் திருவுருவங்களும் ஞான முத்திரையுடன் தான் இருக்கிறன.

நாகாபரணம்

திருமலையின் ஸ்தல வ்ருக்ஷம் நித்யசூரியான அனந்தனின் அம்சமான புளிய மரம். முன்பொரு நாள், கஜபதி என்று ஒரு பக்தன் திருவேங்கடவனுக்கு திருமலையில் ஒரு கோபுரமும் கட்ட ஆசை கொண்டு அதற்குரிய செல்வமும் மக்களையும் கொடுத்து கோபுர வேலையை தொடங்க சொல்லி, அவர் மற்ற திவ்யதேச யாத்திரை சென்று கட்டப்பட்டுள்ள கோபுரத்தை தரிசிக்க திருமலைக்கு திரும்பினான். திருமலையை அடையும் முன்பு, அவனுடைய கனவில், ஒரு சர்ப்பம் தோன்றி, இந்த மலைத்தொடர், தான், தான் என்றும், வாமன, வராக புராணங்களில் சொன்னது போல், திருப்பதியில் தலையாகவும், அஹோபிலத்தில் உடம்பாகவும், ஸ்ரீசைலத்தில் வாலாகவும் இருப்பதாகவும், இப்படி இங்கே மலையை வெட்டுவதாலும், கற்களை கொண்டு குவிப்பதாலும், கோபுரம் கட்டுவதாலும், தன் மேல் பாரம் அதிகமானதாகவும் அதனால் தன்னுடைய சுத்தம் குறைந்து வருவதாகவும், அது திருவேங்கடவனை தரிசித்தால் தான் அவை தீரும் என்று சொல்லி திருவேங்கடவனை வலம் வந்து, அவன் வைகுண்ட ஹஸ்தத்தில் சுற்றிக் கொண்டதை கண்டான்.

ஆதிசேஷனிடம் அபசார படவேண்டாம் என்று அடுத்த நாளே, கோபுர திருப்பணிகளை நிறுத்தி, இந்த கனவிற்கு என்ன பலன் பரிகாரம் என்று விசாரிக்க, வேங்கடவனுக்கு நாகாபரணம் அணிவிக்கலாம் என்று ஆன்றோர்கள் யோசனை கூற, அப்படியே அவர் தங்கத்திலே செய்து எங்கு அணிவிக்கலாம் என்று சந்தேகம் பிறந்த்து. அப்போது ஒரு பக்தன் மேல் எம்பெருமான் ஆவேசித்து, முன்பு ஒரு நாள் வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் வாக்கு வாதம் வந்ததாகவும் எம்பெருமான் வாயு பக்கம் நின்றதாகவும், அதனால் வருத்தமுற்ற ஆதிசேஷன், நாகதீர்த்தம் என்ற இடத்தில் தவம் செய்ய, எம்பெருமான் மனம் உகந்து, ஆதிசேஷனை ஏற்றுக்கொண்டார். எப்படி ஒரு தகப்பன் தன்னுடைய குழந்தையை தன்னுடைய கரங்களில் ஏந்தி கொள்வாரோ அப்படியே இந்த நாகபரணத்தையும் தனது வலது கரத்தில் தோள்வளைகளோடே சூடி கொள்வேன் என்று கூற, எம்பெருமானுக்கு வலது திருக்கரத்தில் நாகாபரணம் சேர்ந்தது. பின்னாளில் இந்த நாகாபரணமே அவர் வைணவ கடவுள் அல்ல என்ற பிறர் சொல்ல ஒரு காரணமாக அமைந்தது என்பதை முன்பு பார்த்தோம். . பின்னாளில் ராமானுஜர் எம்பெருமானின் இன்னொரு திருக்கரத்திற்கும் நாகாபரணம் அணிவிக்க ஏற்பாடு செய்தார்.

வேங்கடத்தரி

ஸ்கந்த புராணத்தில் ஸ்வர்ணமுகரீ மஹாத்மியத்திலும், வாமன, வராஹ புராணங்களில் சொன்னது போல், திருமலையில் சிவனுக்காக ஸ்வாமி புஷ்கரிணியின் மேற்கு கரையில் ஆவிர்ப்பவித்த அழகியசிங்கரான வேங்கடத்தரியை ஒரு காலத்தில், சில சைவ பக்தர்கள், இது சிவனுக்காக தோன்றிய அழகிய சிங்கர், ஆகையால் ஒரு சிவனையும் இங்கே பிரதிஷ்டை செய்து கொள்கிறோம் என்ற கோரிக்கையை வைக்க, ஸ்ரீவைஷ்ணவர்களும் அர்ச்சகர்களும் வாமன, வராஹ, மார்க்கண்டேய, ப்ரஹ்மாண்டாதி புராணங்களில் கூறியது போல் இது கருடாத்ரி, விஷ்ணு க்ஷேத்ரம், இங்கே சிவப்ரதிஷ்டி உசிதம் இல்லை என்று சொல்ல, அரசனும் அதை ஏற்று, சிவபக்தர்களுக்கு செய்தி அனுப்ப அவர்களும் சென்று விட்டனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள், இப்படி இந்த அழகிய சிங்கர் ப்ரசித்தராய், தினமும் ஆராதனம் கண்டு அருளி இருந்தால், எல்லோரும் இந்த ஸ்தலத்தை தங்களுது என்று சொல்வார்கள் என்பதால், தின திருவாராதனத்தை குறைத்துக்கொண்டு அவரை பிரசித்தம் இல்லாமல் செய்ய பார்த்தார்கள்.

இதனை கேள்வியுற்ற ராமானுஜர், இவருக்கு நித்ய ஆராதனம் இல்லாமல் இருந்தால் அது இந்த ஸ்தலத்திற்கு நல்லது அல்ல என்று, இந்த வேங்கடத்தரி என்ற உக்கிர நரசிம்மரை, திருமலை திருக்கோவிலில் ஈசான மூலையில் இந்த உக்ரம் குறையும்படி, விமானாபி முகமாய் பிரதிஷ்டை செய்து, தினமும் திருவாராதனம் தவறாமல் நடக்க ஏற்பாடு செய்தார்.

கோவிந்தராஜர்

தில்லையில் கோவிந்தராஜன் சயன திருக்கோலத்தில் அருள் பாலித்து கொண்டு இருந்தார். அப்போது சோழ தேசத்தை ஆண்டு கொண்டு இருந்த முதல் குலோத்துங்கன் என்ற அரசன் தன்னுடைய சமய பற்றின் காரணமாக இந்த கோவிந்தராஜனை அவர் இடம் கடல் ஆனதால் அங்கேயே இருக்கட்டும் என்று வைணவர்கள் மனம் புண்படும்படியும் அந்த திவ்யதேச பெருமைகள் முழுவதுமாக அழியும்படியும், கடலில் எறிந்தான், தில்லையில் இருந்த வைணவர்களை துன்புறுத்தியும் வந்தான். தான் செய்த அடாவடி செயல்களினால், தன்னுடைய இறுதி காலத்தில் ராஜபிளவை என்ற நோய் வந்து உடம்பில் நிறைய புழுக்கள் வந்து கிருமி கண்ட சோழன் என்று பெயர் பெற்று இறந்தான்.

இவற்றைப்பற்றி கேள்விப்பட்ட இராமானுஜர், குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் ஈடுபாடு கொண்ட திவ்யதேசமான தில்லைநகர் திருச்சித்ரகூடம் அழிந்துவிட கூடாது என்ற சிரத்தையுடன், மீண்டும் அந்த திவ்யதேசத்திற்கு பாகவத பற்று வர வேண்டும் என்ற காரணத்துடனும், கோவிந்தராஜர், திருவேங்கடமுடையானின் அன்புக்கு பாத்திரமானவராய் கீழ் திருப்பதியில் எழுந்தருளி இருப்பதை மனதில் கொண்டு, ஒவ்வொரு இரவும், திருவேங்கடமுடையான் அர்த்தஜாம பூஜை பிரசாதம் அமுது செய்த பிறகு, சடகோபனை போர்த்தி, கையில் எழுந்தருளி கொண்டு, குடை, சாமரம் போன்ற உபசாரங்களோடு, வென்று கொண்டான் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர், தெற்கு முகமாக நின்று கொள்ள, கட்டியம் சொல்பவர் “அருளப்பாடு, திருச்சித்ரக்கூட கைங்கர்ய துரந்தரராய், திருவேங்கடமுடையான் செங்கோல் முத்ரா நிர்வாஹரான சேனை முதலியார்” என்று சொல்லி, கோவிலுக்கு பாரபத்யம் செய்யும் ஸ்ரீ வைஷ்ணவருக்கு பரிவட்டம், ஸ்ரீசடகோபன் (சடாரி) பிராசாதிக்கும்படி இராமானுஜர் கட்டளை செய்தார். யாதவராயன் திருப்பதி கோவிந்தராஜர் சன்னதிக்கு எதிரே ஒரு மண்டபம் கட்டினான். அதற்கு தில்லைக்கு வாய்த்தான் மண்டபம் என்றும் திருச்சித்ரகூட மண்டபம் என்றும் பெயர்.

இரண்டாம் முறை இராமானுசர் திருமலை எழுந்தருளி இருந்த போது, தில்லையில் இருந்து வந்த சில அந்தணர்கள் தில்லை எம்பெருமானின் உற்சவ மூர்த்தியின் விக்ரகத்தை கொண்டு வந்து அங்கே நடந்த கொடுமைகளை விவரித்தனர். திருவேங்கடத்தானுக்கும் கோவிந்தராஜனுக்கும் உள்ள ஒற்றுமை தோன்ற, திருமங்கை ஆழ்வார் அருளி செய்த “தென்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை” (பெரிய திருமடல் 67-68) எனபதை மனதில் கொண்டு, அதனை செயல் படுத்துதல் தக்க செயல் என்று திருப்பதியில் பார்த்தசாரதி சன்னதிக்கு அடுத்து கோவிந்தராஜனுக்கு கர்ப்பக்கிரகம் மற்றும் சன்னதி ஏற்பாடு செய்து தில்லைநகர் கோவிந்தராஜனைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது பார்த்தசாரதி திருவுருவமும் சிதிலடைந்து இருந்ததால் பூஜை நைவேத்தியம் இல்லாமல் இருந்ததும் கோவிந்தராஜனுக்கு இவை ஏற்பாடு செய்வதற்கும் ஏதுவாக இருந்தது.

இராமானுஜர், திருவேங்கடமுடையானும் கோவிந்தராஜனும் ஒருவரே என்பதற்கு ஏற்ப திருவேங்கடமுடையான் வேத பாராயணம் செவி சாய்க்கும் போது, வெங்கடேச மஹாத்மியத்துடன் திருச்சித்ரகூட மஹாத்மியத்தையும் கேட்டருளும்படி செய்தார். அதே போல் கோவிந்தராஜனும் வெங்கடேச மஹாத்மியத்தையும், திருச்சித்ரகூட மஹாத்மியத்துடன் செவிசாய்க்க செய்தார். அதே போல் திருவேங்கடவன் மாலைப் பொழுதில் நித்யாநுஸந்தானம் கேட்டருளும் போது, ‘ஊன் வாட உண்ணாது ‘ மற்றும் ‘வாட மருதிடை போகி ‘ என்ற திருமொழிகளையும் சேவித்து, கோவிந்தராஜனுக்கு ‘ஒழிவில் காலம் எல்லாம் ‘ மற்றும் ‘உலகமுண்ட பெருவாயா’ என்ற திருவாய்மொழி பதிகங்களையம் சேவிக்க செய்தார். இப்படி இரண்டு ஸ்தலங்களும் ஒன்றே என்பதற்கு ஏற்ப ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் உத்சவ காலங்களில், திருவேங்கட முடையான், கோவிந்தராஜன், அலர்மேல்மங்கை நாச்சியார், திருமகளார் சம்பாவனை என்று இரண்டு ஸ்தலங்களிலும் ஒரே மாதிரியாக நடைபெற ஏற்பாடு செய்தார்.

அத்யயன உத்ஸ்தவம்

திருவேங்கடமுடையான் ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையருக்காக மற்ற ஸ்தலங்கள் போல் இல்லாமல், அத்யயன உத்ஸவத்திலே இயற்பா முதல் நாலாயிரமும் கேட்டுஅருளும்படி ஒவ்வொரு ஆண்டும், இருபத்துமூன்று நாட்களாகவும், பிறகு ஞானப்பிரான் ஒரு நாளும், கோவிந்தராஜர் ஒரு நாளும் கட்டளை பிறப்பித்து இப்படி சில உத்ஸவங்கள், திருவேங்கடமுடையானுடன் ஒரே காலத்தில் நடைபெறாமல் பக்தர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க வழி செய்தார்.

மார்க்கண்டேய அழகியசிங்கர்

மார்க்கண்டேய மகரிஷி, திருமலை யாத்திரையின் போது வரும் வழியில், அழகியசிங்கர் மார்கண்டேயருக்கு பிரத்யக்ஷம் ஆனார் என்று மார்க்கண்டேய புராணத்தில் குறிப்பிட்டது போல், இராமானுஜர், அவருக்கு பிரத்யக்ஷம் ஆன குகை அருகில் ஒரு கோவில் அமைத்து, அழகியசிங்கரை வைகானச ஆகம முறைப்படி நிறுவி அவருக்கும் நித்திய ஆராதனம் நடக்கும்படி ஏற்பாடு செய்தார்.

கோவிந்தராஜர் தீர்த்தவாரி

கபில தீர்த்தக்கரையில் 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம்மாழ்வார் என்று கருதப்படுபவருக்கு திருக்கோவிலை கட்டி அவரை அதில் நிறுவியவர் பல்லவராயன் என்ற சிற்றரசன் ஆவான். அச்சுத ராயன் என்பவன் 1513ல் இந்த துறைக்கு படிகள் நிறுவி மண்டபம் கட்டி நான்கு புறங்களிலும் திருவாழி வைத்து சக்கர தீர்த்தம் என பெயரிட்டு இது திருவேங்கடமுடையானுக்கு உரியது என்னும்படி செய்தான். கோவிந்தராஜர் ஸ்ரீதேவி, பூமாதேவிகளுடன் உபகர்மா நாளில் எழுந்தருளி தீர்த்தவாரி காண்கிறார். இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வு 1467ல் இராமானுஜர் ஏற்பாடு செய்தது என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இந்த தீர்த்தத்தை விட தூய தீர்த்தம் திருப்பதியில் இல்லை. கந்தாடை ராமானுஜ அய்ங்கார் என்பவர் இந்த தீர்த்தத்தின் மேற்கு கரையில், தொண்டைமான் சக்ரவர்த்தி திருமலைக்கு செல்லும் வழியாக இருந்த குகையில் நரசிம்மரையும் தெற்கு கரையில் லக்ஷ்மிநாராயணனையும் பிரதிஷ்டை செய்து பிற மதத்தினரால் தொல்லை வாராது செய்தார் என்று திருமலை ஒழுகு கூறுகிறது.

இப்படி பல உத்சவ காலங்களில், கோவிந்தராஜருடன் ஆழ்வார் திருமகளான ஆண்டாளும் எழுந்தருளும்படி செய்தார். திருவாடி பூரத்தன்று திருமலை அடிவாரத்தில் ஸ்வயம்வக்தமான திருவடிகள் (ஆஞ்சநேயர்) சன்னதியில் ‘கூடல் வளைச்சு’ கொண்டாடும்படி ஏற்பாடு செய்தார். கணு நாள் அன்று, ஆண்டாளும் கிருஷ்ணரும் மாலை மாற்றி இந்த உலக நலத்திற்காக சேவை சாதிக்கும்படி செய்தார்.

கோவிந்தா கோவிந்தா

நைமிசாரண்ய ரிஷிகள், திருவேங்கட மஹாத்மியத்தை கேள்வியுற்று மற்ற நாமங்களை தவிர்த்து, கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, இந்த க்ஷேத்திரத்தில் திருமாலை தவிர வேறு எந்த தெய்வத்தையும் உச்சரிக்காது, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ள அர்த்த விசேஷத்தை மனதில் கொண்டு, திருமலை ஏறும் யாத்ரிகர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா ‘ என்றே பரம பாகவதர்களும் பரம ரிஷிகளைப் போல், திருமலை ஏற குரல் கொடுத்தார்.

திருவேங்கடவன் சந்நிதியில் சக்ரவர்த்தி திருமகன்

தென் மதுரையில் வைகைக்கரையின் மேற்கு கரையில், குருவித்துறை என்னும் ஊரில், விஸ்வம்பரன் என்ற முனிவர், இராமபிரான் லக்ஷ்மணனுடன் கடற்கரையில் இருக்கும் போது, விபீஷணன் வானத்தில் வந்து சக்கரவர்த்தி திருமகனிடம் சரணாகதி என்று வந்த காட்சியை காட்டியருள வேண்டும் என்று தவம் புரிந்தான். எம்பெருமானும் அந்த முனிவனின் கனவில் விபீஷ்ண சரணாகதி காட்சியை, இளையபெருமான் அருகே நிற்க, சக்ரவர்த்தி திருமகன் அமர்ந்திருக்க, அனுமன் எம்பெருமான் சந்நிதியில் விபீஷணனுக்கு அனுகூலமாக வார்த்தைகளை சொல்லி, எம்பெருமான் திருவுள்ளப்படி முடிவு எடுக்க வேணும் என்று கேட்டு அஞ்சலி முத்திரையுடன் நின்று கொண்டு இருந்தததையும், அங்கதன் வானில் விபீஷணன் இருக்கிறான் என்று தன்னுடைய விரல்களால் பவ்யமாக காட்டி கொண்டிருந்தததையும் முனிவர்க்கு சாதித்து அருளினார். முனிவர் மனம் மகிழ்ந்து, இந்த விபவத்தை அர்ச்சையில் என்னென்றும் தானும் மற்றவர்களும் அனுபவிக்கும் வண்ணம் விக்ரகங்கள் செய்து அந்த குருவித்துறையில் பல காலம் நித்ய திருவாராதனம் கண்டு வந்தார். ஒரு நாள் ஒரு பக்தனின் வாக்கினால் தன்னை திருமலைக்கு எழுந்தருள கேட்டு கொள்ள அவனும் அந்த விக்ரகங்களை திருமலைக்கு எடுத்து சென்றான்.

அப்போது அங்கே ராமானுஜர், திருமலை நம்பிகளிடம் இராமாயண பாடம் கற்று வந்தார். இந்த பக்தர் கொண்டு வந்த தினம், விபீஷண சரணாகதி என்று பகுதி நடக்கவே, இருவரும் இது தெய்வ சங்கல்பம் என்று திருமலையில், திருவேங்கடமுடையான் சந்நிதியில் இந்த எம்பெருமானுடன் சீதா தேவியும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று சங்கல்பித்து, சீதா கல்யாணமும் செய்து வைத்து நித்ய ஆராதனம் செய்துவிக்க ஏற்பாடு செய்தனர்.

திருமலை நம்பியும் திருவேங்கடவனும்

திருமலை நம்பி, திருவேங்கடவனுக்கு பாபவிநாச தீர்த்தத்தில் இருந்து தினசரி திருமஞ்சன மற்றும் திருவாராதன தீர்த்த கைங்கர்யம் செய்து வரும் சமயம், திருவேங்கடவன் அவரின் கைங்கர்யத்தில் திருப்தி கொண்டவராய், ஒரு நாள் அவர் வரும் வழியில் வேடன் உருவில் வந்து, திருமலை நம்பிகளை பார்த்து தனக்கு தாகமாக உள்ளது என்றும் தீர்த்தம் தரவும் கேட்டான். திருமலை நம்பிகள் இது திருவேங்கடவனுக்கு, மனிதர்களுக்கு அல்ல என்று கூறி தரமறுத்து திருமலைக்கு செல்ல ஆரம்பித்தார். வேடன் அந்த தீர்த்த பாத்திரத்தை சேதம் செய்து தண்ணீர் கீழே விழச்செய்து, அதை பருகியபடி இருந்தான். தீர்த்த பாத்திரத்தில் பளு குறைந்ததை உணர்ந்த திருமலைநம்பி திரும்பி பார்த்து நடந்ததை அறிந்து மீண்டும் தீர்த்தம் எடுத்து வர திரும்பியபோது, வேடன் ஆகாய கங்கை இடத்தை காண்பித்து அங்கு ஒரு அம்பு விட்டு, ஒரு ஊற்று பெருக செய்து அந்த தீர்த்தத்தை எடுத்து கொள்ள சொல்லி தன்னையும் யார் என்று காட்சி அளித்து மறைந்தார். திருமலை நம்பிகள் தனக்கு காட்சி கொடுத்த எம்பெருமானின் கருணையை மகிழ்ந்து அதே ஆகாய கங்கை தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்ய அன்று முதல் தொடங்கினார். சில நாட்களில் திருமலைநம்பிகள் பரமபதம் அடைந்தார். இதனை கேள்வியுற்ற இராமானுஜர் திருமலை நம்பிக்கு திருவேங்கடவன் காட்சி அளித்து ஆகாய கங்கை தீர்த்தத்தை கொண்டு முதலில் திருமஞ்சன நாளை கொண்டாடும் வண்ணம், அது அத்யயன உற்சவநாட்களுக்கு இடையில் வருவதால், அந்த உத்சவம் முடிந்த அடுத்த நாளில் அந்த திருமஞ்சனத்தை நடத்த உத்தரவு இட்டார். இந்த நிகழ்விற்கு தண்ணீர் அமுது வழி திருத்துதல் என்று பெயர்.

குருவை கிராமத்தில் திருவேங்கடவன்

குரும்பறுத்த நம்பியை பற்றி முன் பார்த்தோம். இங்கே இன்னும் சிறிது விளக்கமாக காண்போம். தொண்டைமான் சக்கரவர்த்தி திருவேங்கடவனிடத்தில் மண்ணினால் புஷ்பம் செய்த பக்தனை பற்றி கேட்டபோது, திருவேங்கடவன் அந்த பக்தனுக்கு முக்தி அளிக்க முடிவு செய்து அவன் குரும்பறுத்த நம்பி என்றும் அவன் திருமலைக்கு ஈசானமுலை திசையில் உள்ள குருவை என்ற கிராமம் என்றும் அவனை தனியே சென்று சந்திக்க வேண்டும் என்றும் தொண்டைமான் சக்ரவர்த்திக்கு திருவேங்கடவன் தெரிவித்தான். தொண்டைமான் சக்ரவர்த்தி குறும்பறுத்த நம்பியை புகழ்ந்து எம்பெருமானிடம் விடை பெற்று நம்பியை சந்திக்க செல்கிறான்.

தொண்டைமான் சக்கரவர்த்தி குருவை கிராமத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை சென்ற போது, எம்பெருமானின் நோக்கத்தை அறிந்த நம்பி, தன்னுடைய தொழில் செய்யும் சட்டியால் (தட்டுமரத்தினால்) தன் தலையில் அடித்துக்கொண்டு உடன், திருவேங்கடவன் தன்னுடைய வெள்ளிக்கிழமை திருமஞ்சன நேரம் என்றும் கருதாமல் உடனே அதே தோற்றத்துடன் நம்பிக்கு அங்கேயே காட்சி அளித்து உடனே மோக்ஷம் அளித்தார். இதனை அறிந்த இராமானுஜர், திருவேங்கடவன் தன்னை சேர்ந்தவர்களுக்கு வசப்பட்டவன் என்பதையும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு துணை இருப்பவன் என்று தெரியும்படி அப்படியே நம்பியின் முன் நேரில் வந்து அவனை அங்கீகரித்ததனை உலகில் அனைவரும் அறிந்து அவன் திருவடி பற்றவேண்டும் என்பதற்காக, குருவை கிராமத்தில், திருவேங்கடவனின் திருமஞ்சன கோலத்துடன், குறும்பறுத்த நம்பியின் தட்டுமர காட்சியோடு ஒரு கோவில் கட்டி நித்திய திருவாராதனம் செய்ய ஏற்பாடு செய்தார்.

சீரமைப்புக்களின் தொகுப்பு

இராமானுஜர் திருப்பதி மற்றும் திருமலையில் செய்த சில சிறப்பான புதியவை மற்றும் திருத்தங்கள் கீழே:

  • திருவேங்கடத்தானை சங்கு சக்கரம் தரிக்க செய்தது
  • கோபுரங்களில் வராக, நரசிம்ம, வைகுந்தநாத, வெங்கடேச தேவதைகளை வைகானச ஆகம முறைப்படி அமைத்து இந்த கோவில் திருமாலுக்கே என்று உலகறிய ஸம்ப்ரோக்ஷணம் செய்தது
  • வைகாசன ஆகமப்படி, சேஷ, விஷ்வேக்ஸேனா, கருட, ஜெய விஜய துவார பாலகர்களை அவர்களுக்குரிய இடங்களில் பிரதிஷ்டை செய்தது.
  • வெள்ளி கிழமைகளில் எம்பெருமானின் திருமார்பில் இருக்கும் அலர்மேல்மங்கை நாச்சியாரை எடுத்து தனியே திருமஞ்சனம் செய்யும் முன்பு, எம்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது
  • திருமாலின் திருமார்பில் திருமகளை இரு திருக்கரங்களுடன் அமைத்து ஒரு நன்னாளில் நிறுவியது
  • திருவேங்கடத்தானின் திருமஞ்சனத்தின் போது தாயார் எம்பெருமானின் திருமார்பை விட்டு இழிந்திருந்தபோது நாச்சியார் திருமொழி ஓதும்படி செய்தது
  • திருமஞ்சனத்திற்கு பிறகு எம்பெருமான் திரு நெற்றியில் மெல்லிய இரு கோடுகளாக கற்பூரத்தினால் ஆன திருமண் அணிவித்து அது 3 நாள் இருக்கும்படியும் மற்ற 4 நாட்கள் முத்துபோட்டிகளால் ஆன திருமண் அணிவித்தது
  • திருக்கண்களுக்கு குளிர்ச்சிக்காக அஞ்சன காப்பு அணிவிக்க ஏற்பாடு செய்தது
  • புரட்டாசி விழாவை (புரட்டாசி ப்ரமோஸ்தவம்) சிறப்பாக செய்வதற்காக திருமலை திருவீதிகளை திருத்தி அமைத்தது
  • ஞான பிரானுக்கு ஐப்பசி மாத சரவண நக்ஷத்திரந்தன்று வராக ஜெயந்தி சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தது
  • ஞான பிரானுக்கு மற்ற விழாக்கள் (பலி பீடார்ச்சனை, நித்திய ஹோம பூஜைகள்) என்று இல்லாமல் செய்தது
  • மலைகுனியநின்ற பெருமாளை (மலையப்ப ஸ்வாமியை) உத்சவ மூர்த்தி ஆக்கி, அதற்கு முன் உற்சவ மூர்த்தியாய் இருந்த போக ஸ்ரீனிவாச மூர்த்தியை (வேங்கடத்துறைவாரை) நிலைத்துள்ள மூர்த்தியாய் ஆக்கியது
  • தண்ணீர் அமுது வழி திருத்துதல்
  • பூந்தோட்டத்தில் எம்பெருமான் பூ பறிக்கும் விழா ஏற்பாடு செய்தது
  • அழகியசிங்கரான வேங்கடத்தரியை திருவேங்கடமுடையான் கோவிலிலே பிரதிஷ்டை செய்தது
  • திருவேங்கடமுடையானின் இடது திருக்கரத்திலும் (வைகுண்ட ஹஸ்தம்) வலது திருக்கரத்தில் உள்ளது போல் நாகாபரணம் (அரவப்பணி)அணிவித்தது
  • திருமலையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய நியதிகளை ஏற்படுத்தியது
  • அத்யயன உத்சவம் திருமலையில் 23 நாட்களும், ஆதிவராகப்பெருமாளுக்கும், கோவிந்தரராஜருக்கும் ஒரு நாள் உத்சவமாகவும் கொண்டாடும் படி செய்து அடியவர்கள் எல்லா உத்ஸ்தவங்களையும் காண வழி செய்தது.
  • திருவேங்கடமுடியானின் செல்வம் தொடர்ந்து வளர ஒரு எந்திரத்தை மந்திர பூர்வமாக அமைத்து திருக்கோவிலின் செல்வம் குறைபடாமல் வளர செய்தது.
  • திருப்பதியில் பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோவிலில் கோவிந்தராஜரை திருப்பிரதிஷ்டை செய்தது
  • அவர் பக்கத்தில் செங்கழுநீர் பூவினை ஏந்திய ஆண்டாளை பிரதிஷ்டை செய்தது
  • இந்த இருவருக்கும் திருவிழா காண்பதற்கு ஏற்பாடு செய்தது, மண்டபம் கோபுரம் போன்றவை யாதவ ராயனுடன் துணை கொண்டு செய்வித்தது
  • திருவேங்கடமுடையானும் கோவிந்தராஜனும் வேறல்ல இருவரும் ஒருவரே என்பதற்கு ஏற்ப, திருமலை திருக்கோவிலில் பஞ்ச பேரரர்கள் இருப்பது போல், இவரும் ஐக்கியம் தோன்றும்படி பல கட்டளைகள் ஏற்படுத்தினார்.
  • 10ம் நூற்றாணடில் திருமலை திருவேங்கடமுடையானுக்கு கொடி ஏற்றும் வைபவம் திருச்சுகாரனூரில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. அதனை மாற்றி திருமலையிலேயே நடத்த இராமானுஜர் ஏற்பாடுகள் செய்தார். கோபுரமும் கட்டி திருக்கோவிலினையும் திருவீதிகளையும் பெரிதாக்கினார்.
  • பூமாதேவியை அர்ச்சா ரூபமாக எழுந்தருள செய்து, ஒரு தீர்த்த நயினாரையும் கிணற்றிலே சேர்த்தியாக கிணற்றில் எழுந்தருள செய்து அவர்களுக்கு நித்திய தளிகைகள் அமுது செய்யும்படி செய்தது.
  • ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் ஒருமுறை மங்களாசாசனம் செய்ய திருவேங்கட யாத்திரை வந்திருந்த போது, எம்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்ய ஆகாய கங்கையில் இருந்து தீர்த்த எடுத்த வர நேரம் ஆனதால், மேற்சொன்ன கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து அந்த கிணற்றிற்கு அழகப்பிரானார் என்று திருநாமம் சாற்றியதாக செவி வழி செய்தி இராமானுஜர் நினைவு கூர்ந்து அந்த கிணற்றை அப்படியே அழைக்கவேண்டும் என்று கட்டளை இட்டார்.
  • திருமலை படி ஏறும்போது, கோவிந்தா கோவிந்தா என்று கூவி மலை ஏற ஊக்கிவித்தது.
  • திருமலையில் திருமலைக்கு நித்திய கைங்கர்யம் செய்பவர்கள் மட்டுமே தங்க முடியும் என்றும், மற்றவர்கள் கீழ் திருப்பதிக்கு திரும்பி விட வேண்டும் என்பதை விதியாக செய்தார். அதே போல் திருமலையில் எம்பெருமானுக்கு செய்யப்படும் நைவேத்தியம் கோவிலேயே திருமலையில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு பங்கீடு செய்வதோடு மட்டுமின்றி அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற வரைமுறைகளையும் வகுத்தார். (வீடுகளில் திருவாராதனம் செய்ய, பிள்ளை பிறத்தல், இறத்தல், ஈமக்கடன்கள் செய்தல்)
  • திருமலையில் எம்பெருமானுக்கு தரித்த எந்த புஷ்பமோ அல்லது மாலையோ யாரும் தவறாகவோ அல்லது மரியாதை இல்லாமாலோ பயன்படுத்த முடியாதபடி எவருக்கும் ப்ரஸாதமாய் கொடுப்பது இல்லை என்ற விதியை ஏற்படுத்தினார்.
  • மலை அடிவாரத்தில் இருந்து மலை ஏறும் போது, காலில் பாதணிகள் அணியாமல் ஏறுவது என்ற விதியை ஏற்படுத்தியது
  • திருமலை மற்றும் கோவிந்தராஜர் சன்னதிகளில் எந்த பாசுரங்கள், எந்த பிரபந்தங்கள், எப்பொழுது, எப்படி சேவிக்க வேண்டும், தனியன் சேர்த்தா அல்லது தனியன் இல்லாமலா, எத்தனை முறை சேவிக்க வேண்டும், எப்பொழுது அரையர் சேவை என்று நேரம், மாதம், காலம் இவற்றுடன் விரிவாக ஏற்படுத்தியது.

ஆழ்வார்கள்

திருவரங்கம், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திருத்தலம் என்று முன்பு பார்த்தோம். இந்த திருவேங்கடம், தொண்டரடிப்பொடி ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற பத்து ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருத்தலம். ஆழ்வார்கள் இந்த திருமலையைப் பற்றியும், வேங்கடவனைப் பற்றியும், பாசுரங்கள் சமர்ப்பித்துள்ளனர். ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் வேங்கடவனின் மகிமைகளைக் கூறி இருப்பதை நிற்பதை அடியேனுடைய எழுத்துக்களில் அடக்கிவிட முடியாது.

திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு திருவேங்கடவனுக்கு மார்கழி மாதத்தில் சாத்தப்படுகிறது.  ஆண்டாள் மங்களாசாசனம் செய்த திவ்யதேசங்களில் திருவேங்கடமும் ஒன்று.

மொத்தம் 202 பாக்களுக்கு மேல் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. வேங்கடவனுக்கு ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசன பாக்களை கீழே உள்ளவாறு காணலாம்.

1பொய்கையாழ்வார் – முதல் திருவந்தாதி 10
2பூதத்தாழ்வார் – இரண்டாம் திருவந்தாதி 11
3பேயாழ்வார் – மூன்றாம் திருவந்தாதி 19
4திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி திருச்சந்தவிருத்தம் 16
5நம்மாழ்வார் 49
திருவிருத்தம் 8
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் முதல் பகுதி 11
திருவாய்மொழி – துவய மஹாமந்திரத்தின் இறுதி பகுதி 11
திருவாய்மொழி – மற்ற பாசுரங்கள் 18
பெரிய திருவந்தாதி 1
6குலசேகர ஆழ்வார் – பெருமாள் திருமொழி 11
7பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி 7
8ஆண்டாள் 16
9திருப்பாணாழ்வார் – அமலனாதிபிரான் 2
10திருமங்கையாழ்வார் 61
10,1பெரிய திருமொழி 1.8 கொங்கு அலர்ந்த 10
10.2 பெரிய திருமொழி 1.9 தாயே தந்தையே 10
10.3 பெரிய திருமொழி 1.10 கண்ணார் கடல்சூழ் 10
10,4பெரிய திருமொழி 2,1 வானவர் தங்கள் சிந்தை 10
10.5 5. 1 பெரிய திருமொழி மற்றைய பாடல்கள் மற்றும் மற்ற பிரபந்தங்கள்
5.2 திருகுறுந்தாண்டகம்
5.3 திருநெடுந்தாண்டகம்
5.4 பெரிய திருமடல்
5.5 சிறிய திருமடல்
15
1
2
2
1

அடியவர்கள்

அனந்தாழ்வான் ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்; அவர் இராமானுஜரின் வார்த்தைகளை ஏற்று, அவரிடம் “அங்கிருந்த அனைவரில் அனந்தாழ்வானே ஆண்பிள்ளை’ என்று பாராட்டினை பெற்று, திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யும் பொருட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து சேர்ந்தவர். திருவேங்கடமுடையானும் அவரது கைங்கர்யத்தில் உவந்தவராய் அவரிடம் அன்பும் பரிவும் காட்டி வந்தார்.

ராமானுஜர் பரமபதம் அடைந்ததை (அவதார ஸமாப்த்தி ) ஒரு பக்தர் அனந்தாழ்வாரிடம் பகிர்ந்து கொண்டபோது, அனந்தாழ்வார் மிகவும் சோகம் அடைந்து சுமார் ஒரு வருட காலம் திருவேங்கடமுடையானுக்கும் கைங்கர்யம் எதுவும் செய்யாமல் வேதனையில் தவித்து வந்தார். திருவேங்கடமுடையான் அனந்தாழ்வாரிடம் தாமன்றோ தன்னுடைய இராமானுஜரை இழந்தது, அதற்காக தான் தான் வருத்தப்பட வேண்டும். அனந்தாழ்வாருக்கு எந்த குறையும் வராது என்று ஆறுதல் கூறி அவரை கைங்கர்யம் செய்ய அழைத்தார். அனந்தாழ்வாரும் திருவேங்கடமுடையானின் அழைப்பை ஏற்று அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தார். அதாவது அத்யயனோத்சவத்தில் ஒரு நாள், ராமானுஜ நூற்றுஅந்தாதியை செவி சாய்த்திட வேண்டும் என்பதாகும். திருவேங்கடமுடையானும் உகந்து, சடகோபன், கலியன் சொன்ன வார்தைகளை கேட்பதை போல், இராமானுஜரை பற்றிய வார்த்தைகளை நூற்று அந்தாதியில் கேட்போம் என்று அருள, கண்ணினும் சிறு தாம்பு சொல்லி முடித்த பிறகு அடுத்த நாள் இராமானுஜ நூற்று அந்தாதியும் வாசிக்க ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த நாள் இராமானுஜர் ஏற்படுத்திய தண்ணீரஅமுது வழி கைங்கர்யமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் ஸ்ரீ அனந்த சூரியார் என்பவருக்கும் தோதாத்திரி அம்மையார் என்பவருக்கும் திவ்ய குமாரராய் காஞ்சி மாநகரில் தூப்புல் என்ற திருத்தலத்தில், திருவேங்கடவன் திருக்கோவிலின் திருமணியின் அம்சமாக கி பி 1268 ஆண்டு புரட்டாசி மாதம் சரவண நக்ஷத்திரத்தில் ஒரு புதன் கிழமையில் அவதரித்தார். வேதாந்த தேசிகன் வேதங்களை, வேத நாதம் என கணீர் என்று எங்கும் ஒலிக்க செய்தார்.

மணவாள மாமுனிகளும் இங்கு பலமுறை எழுந்தருளியுள்ளார். அவரின் ஆணையின்படி அவரது சிஷ்யர் பிரதிவாதி பயங்கரம் அண்ணா எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ வேங்கடஸ்வர சுப்ரபாதத்தை அருளி செய்தார்.

இந்த சுப்ரபாதத்தினை அருளி செய்தவர் ஸ்ரீ அண்ணங்கராச்சார்யார் அல்லது பிரதிவாதி பயங்கரம் அண்ணா சுவாமி அவர்கள். இவர் சுவாமி தேசிகனின் திருக்குமாரரிடம் கற்று பின் மணவாள மா முனிகளின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்தவர். ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. அவை சுப்ரபாதம் (29 பாடல்கள்), ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம் (11 பாடல்கள்), பிரபத்தி (16 பாடல்கள்), மங்களாசாசனம் (14 பாடல்கள்) ஆகும்.

ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ச்லோகம் : “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ  தடே | ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம் ||”

அதாவது ஸ்ரீவைகுண்டத்தில் நித்யனாக இருக்கும் எம்பெருமான், அவ்விருப்பிடத்தை வெறுத்து, தான் வானோர்க்கு மட்டும் தெய்வமில்லை; இந்தப் பூமியில் வாழ்பவர்க்கும் தெய்வம் என்பதை உணர்த்தும் வண்ணம்,  விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும் நடுநாயகமாக இருக்கும் உயர்ந்த மலைகளையும், வராஹ புஷ்கரிணியையும் உடைய இடத்தை இருப்பிடமாகக் கொண்டான்.   வேங்கடேசன் என்ற திருநாமத்தையும் சார்த்திக்கொண்டான்.  இதனால் இந்த மலையானது  திருவேங்கடமலை என்று பிரசித்திபெற்று திகழ்கிறது.  இப்படிப்பட்ட தயை உடைய திவ்யமான திருவேங்கடத்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு (வாழ்ச்சி) என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம்.  

தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருமலை கோயிலுக்கு வந்திருக்கிறார்.அவரும் அன்னமய்யாவும் சம காலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், பல தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

இந்த சுப்ரபாதத்தை தன்னுடைய இனிய குரலால் பாடி இந்த உலகின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்றவர் MS சுப்புலக்ஷ்மி. அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு சிலை திருப்பதியில் இருந்து அலிபிரி வரும் வழியில் வைக்கப்பட்டுள்ளது.

மேலே சொன்ன திருவேங்கட விஷயங்களை சொல்லியபின் அடியேன் உறுதியாக புரிந்து கொண்டது, திருவேங்கட அனுபவத்தை சொல்லி முடிக்க முடியாது. மேலும் திருவேங்கடமுடையான் பற்றிய விஷயங்களை அடியேன் அறிய முடிந்தால், இன்னொரு வலைப்பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். தற்போது, திருவேங்கட அனுபவத்தை சற்று இங்கே நிறுத்திவிட்டு, இனி இன்னொரு திவ்யதேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

===================================================================================

திருமாலை 35 – தாவி அன்று உலகம் எல்லாம்

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்குச் செய்த மிகப் பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாகக் கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளைப் பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், அடியவர்களுக்கு நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமானுக்கு அடிமை செய்பவன் போல வேஷங்களைப் போட்டு, அவன் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லா நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டதை சொல்கிறார்.

இனி திருமாலையின் அடுத்த பகுதி.

இப்படி ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, தான் எல்லோருக்கும் அவர்கள் கேட்காமலே செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இனி, இந்த பகுதியில் உள்ள முதல் பாசுரத்தைப் பார்ப்போம். நன்றி.

பாசுரம் 35

தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால், சிக்கென செங்கண் மாலே ! ஆவியே ! அமுதே ! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய் ! பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)

ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகுவதை உணர்ந்த எம்பெருமான், அவர் ஏன் விலகுகிறார் என்று வினவ, ஆழ்வார், எல்லாம் அறிந்த எம்பெருமான் முன் பொய்களை சொல்லி அணுகினதாகவும் அதனால் அவனுக்கு சிறுமை என்று முடிவு செய்து, பற்பல ஜென்மங்களாக, ஆழ்வாரைப் பற்றி ஒன்றும் அறியாத சாதாரண மக்களுடன் சேர்ந்து இருப்பதற்கு செல்வதாக பதில் உரைக்கிறார். எம்பெருமான், இந்த பாடலில், தாம் அடியவர்களின் எந்த குறையும் பார்ப்பதில்லை என்றும், சாதாரண மக்கள் எல்லா குறைகளையும் ஒன்று விடாமல் பார்ப்பார்கள் என்றும், தாம் அடியவர்களின் எல்லா குணங்களையும் ஒன்று விடாமல் கவனித்து கருத்தில் கொள்வதாகவும் கூறி, அவனை அணுகுவதே சரியானது என்கிறார். அதற்கு ஆழ்வார், அப்படி செய்ததற்கு ஏதாவது சரித்திரம் உண்டா என்று வினவ, த்ரிவிக்ரமனாக, மூவுலங்களையும் அளந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடிகளை சாத்தி, அருள் செய்து, எல்லை இல்லாத நீர்மையை (எளிமையை) காட்டியதைச் சொல்லி, ஆழ்வார் இல்லாவிட்டால், தன்னால் இருக்க முடியாது என்று உரைக்கிறார்.

சென்ற பாசுரத்தில் சொன்னது போல், இந்த பாட்டும் நம்மாழ்வாரின், வளவெழு உலகின் என்ற திருவாய்மொழி முதல் பத்து, ஐந்தாம் பதிகத்தில் சொன்னதை நினைவு படுத்தும். நம்மாழ்வார் முதல் பத்து முதல் நான்கு பதிகங்களில் நிறைய செய்தும் எம்பெருமான் மனம் இரங்கவில்லை, அதற்கு ஆழ்வார் தன்னுடைய குற்றங்களே காரணம் என்று எண்ணி விலகப்பார்த்தார். இந்த பதிகத்தில் மூன்றாம் பாட்டில் “திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன்“என்று த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி, தன் பால் மனம் வைக்கத் திருத்தி (திருவாய்மொழி, 1.5.10) அவரை விலகாமல் அவருடனே இருக்கும்படி செய்கிறார்.   இங்கும் அதே போல், தொண்டரடி பொடி ஆழ்வாருக்கும் த்ரிவிக்ரம அவதாரத்தை காட்டி அவரையும் அவனை விட்டு விலகாமல் பார்த்து கொள்கிறார்.

அதே போல், திருவாய்மொழி (7.10.10) என்ற பாசுரத்தில், ஆழ்வார், “சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத் தன்மை தேவ பிரான் அறியும், சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றுமில்லை“என்று சொல்வதில் “தன் சிந்தையில் அவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை தேவபிரான் அறிவான் என்றும், சிந்தையினால் செய்யப்படுவனவற்றுள் அவன் அறியாதன ஒன்றும் இல்லையே” என்றும் சொல்வது தொண்டரடிப்பொடி ஆழ்வார் விலவர சிரித்திட்டேனே என்று சொல்லும் போது சொல்வதுடன் ஒப்பிட்டு கொள்ளலாம். அங்கே நம்மாழ்வார் எம்பெருமானை தவிர வேறு ஒன்றும் தன் சிந்தையில் இல்லை என்றும் அதனை அவனே அறிவான் என்றும் சொல்வதும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன் சிந்தையில் அவனை தவிர மற்ற விஷயங்களே உள்ளன என்றும் அதனை அவரே அறிவார் என்றும் சொல்வதும் நினைவில் கொள்ளத்தக்கது.

“மஹாபலி எல்லா உலகங்களையும் அபகரித்த போது, எல்லா உலகங்களையும் கடந்து, எல்லாருடைய தலைகளிலும் தன்னுடைய திருவடி படும்படி வியாபித்த, என் ஸ்வாமியே, உன்னைத் தவிர, வேறு ஒரு பொருளையும் சேவிக்க மாட்டேன், சிவந்த திருக்கண்களை உடையவனே, அடியவர்களின் பக்கம் இருப்பவனே, எனக்கு உயிர் போன்றவனே, அமிர்தம் போன்றவேனே, என்னுடைய அருமருந்து போன்ற உயிர்க்கு அந்தராத்மாவாக இருக்கும் என் ஸ்வாமியே, பாவியாகிய நான், உன்னைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், நான் மிக்க பாவத்தை செய்தவனே’ என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

இனி சற்று விளக்கமாக,

தாவி

முன்கூட்டியே அறிவித்துவிட்டால், பல காலங்களாக மனதில் உள்ள அகங்காரம் உள்ள சம்சாரிகள், அவன் திருவடிகளை தங்கள் தலைமீது வைக்க மறுத்து ஆணை இடுவார்கள். எப்படி திருவாய்மொழியில் (10.10.2) நம்மாழ்வார், அவன் மறுக்க முடியாதபடி, “திருவாணை, நின் ஆணை ” என்று சொன்னபடி அடியவர்கள், அவன் மறுக்க முடியாதபடி திருவடிகளை தலையில் ஏந்தி கொள்வார்களோ, அதே போல் இவர்கள் இவனது திருவடிகளை ஏற்க மறுப்பார்கள் என்று எம்பெருமான் யாரும் அறியாதபடி, யாருக்கும் களைப்பு ஏற்படாதபடி எல்லோர் தலைகளிலும் தன் திருவடி தீண்டும்படி தாவி வளர்ந்தான் என்கிறார்.

அன்று

க்ருத யுகத்தில் மஹாபலியால் மூன்று உலகங்களும் அபகரிக்கப்பட்டு, எம்பெருமானுடைய சேஷித்வமும், மக்களுடைய சேஷத்வமும் அழிந்து கிடந்த அன்று என்கிறார்.

உலகமெல்லாம்

மஹாபலியால் கவரப்பட்ட மூன்று உலகங்களை அளந்தது மட்டும் இல்லாமல், பிரம்மாவின் சத்ய லோகம் வரையில் உள்ள ஏழு உலகங்களையும் அளந்து, எல்லாவற்றிலும் உள்ள எல்லா ஜீவராசிகள் மீதும், உயர்ந்தவர்(வசிஷ்டர்), தாழ்ந்தவர் (சண்டாளர்கள்) என்ற பேதமில்லாமல், தன்னுடைய திருவடிகள் தீண்டும்படி வளர்ந்ததை காட்டுகிறார்.

தலைவிளாகக் கொண்ட

ஸஹஸ்ர ஸீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ : ஸஹஸ்ரபாத் , ஸ பூமிம், விஸ்வதோ வ்ருத்வா , அத்யதிஷ்டத் தசாங்குலம் (புருஷஸூக்தம் 1) என்றதன் படி, புருஷன் எனப்படும் நாராயணன், கணக்கற்ற தலைகளையும், அளவற்ற கண்களையும், அனந்தமான கால்களையும் உடையவர், அவர் பூமியை எல்லாப்புறமும் சூழ்ந்து, அதற்கு மேலும் எல்லையற்ற தூரம் வியாபிக்கிறார் என்று பொருள் ஆகும். அதனால், பூமியையும் மற்றும் நித்ய விபூதியான மேல் உலகங்களையும் வியாபிக்கிறார் என்று பொருள் வருவது போல், தலைவிளாக்கொண்ட என்பது, அளக்க வேண்டியதற்கு மேலே அளந்ததை காட்டுகிறது. அதே போல், காக்க வேண்டிய (ரக்ஷிக்க வேண்டிய) பொருட்களின் அளவினை விட எம்பெருமானின் காக்க வேண்டிய ஆசை (பாரிப்பு) மிக அதிகமா இருப்பதை காட்டுகிறது.

எந்தாய்

திருமங்கையாழ்வார், திருகுறுந்தாண்டகம், பாடல் 6ல் “அமரர் சென்னி பூவினை‘ என்று சொன்னபடி, நித்யஸூரிகள் தங்கள் தலையினால் தாங்கும் எம்பெருமானின் திருவடிகளை, அவற்றில் ஈடுபாடற்ற சம்சாரிகள் தலைகளிலும் எம்பெருமான் வைப்பதற்கு என்ன காரணம் என்றால், அது எம்பெருமானனுக்கு ஜீவாத்மாக்களுடன் உடன் உள்ள, விட முடியாத உறவே என்று சொல்வது கவனிக்கத்தக்கது. நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள். 

எம்பெருமானுடன் இருந்த இந்த உறவு, அன்று தெரியாமல் இருந்த குறை தீர, இப்போது, அவ்வுறவை அறிந்தபின்னர், ஆழ்வார் என்தந்தை என்று சொல்லாமல் எந்தாய் என்று சொல்லி, தன்னுடைய நன்றி கடனை செலுத்துகிறார். அன்று எம்பெருமான் தன் திருவடிகளால் தடவி காத்ததினால், அவனுடைய அந்த முயற்சியால் தான், இப்பொழுது திருந்தியது என்று உணர்ந்து எந்தாய் என்று அழைக்கிறார். திருப்பாவை 24ம் பாட்டில், “அன்று இவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி, சென்று அங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கன்று குணிலாய் வெறிந்தாய் கழல் போற்றி, குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி, வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி, என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான், இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.” என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அன்று என்று அங்கு சொன்னது, முன்னொரு யுகத்தில், காலத்தில், என்று ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து, இன்று வந்ததை குறிப்பிடுகிறார்.

தாய் தன்னுடைய குழந்தையை கட்டி கொண்டு உறங்குவது போல், எம்பெருமான், எல்லோருடைய தலைகளையும், தான் பெற்ற பேறாக கருதி, தீண்டினான். சம்சாரிகள் இன்றும் அவனுடனான உறவை அறிந்து இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் சேர்த்து ஆழ்வார் உகக்கிறார்.

சேவியேன் உன்னை அல்லால்

ஆழ்வார், இப்பொழுது எம்பெருமானின் எளிமையை அறிந்து, அவனை விட்டு அகன்று மற்றொன்றை பற்ற மாட்டேன் என்கிறார். எம்பெருமானை விட்டால், ஆழ்வார், தான், எவர் தயவும் இன்றி, சுதந்திரமாக இருக்க வேண்டும் (சுதந்திரன்), அல்லது இன்னொருவரை சார்ந்து அவருக்கு அடிமையாக இருக்க வேண்டும்(பாரதந்திரியன்), இந்த இரண்டு குறையும் தனக்கு வராது என்கிறார்.

திருமந்திரத்தின் முதல் பதத்தில், பாரதந்த்ரியம் எனப்படும் எவருக்கும் அடிமையாக இருப்பதை தவிர்ப்பதையும், இரண்டாவது பதத்தில், ஸ்வாதந்த்ரியம் எனப்படும், தனக்கு தானே ராஜாவாக இருக்கும் தன்மையை தவிர்ப்பதையும், ஆழ்வார் சேவியேன் உன்னை அல்லால் என்கிறார். எம்பெருமானை சேவிப்பது வழக்கம் ஆகிவிட்டதால், வெளிவிஷயங்களையும் சேவிக்க மாட்டேன் என்ற வார்த்தைகளையே உபயோகிக்கிறார்.

சிக்கென

மேலே சொன்ன விஷயம் எல்லா காலங்களிலும் இருக்கும், தன்னுடைய ஆத்மா உள்ளவரையிலும் இருக்கும், எப்பொழுதும் இருக்கும் என்பதை சிக்கென என்றதால் சொல்கிறார். நம்மாழ்வார் “உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே.” திருவாய்மொழி (2.6.1) சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம். அதே போல் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை இழந்து விடுவோமோ என்று கவலையுற்ற எம்பெருமானுக்கு ஆழ்வார் இந்த வார்த்தையால் உறுதி அளிக்கிறார்.

ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: என்பது, பகவத் கீதையில், எம்பெருமான், ‘எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்’ என்று சரமச்லோகத்தில் ஜீவனை கவலைப்படாதே என்று சொன்ன எம்பெருமானுக்கு, இங்கே ஆழ்வார் அபயப்ரதானம் செய்கிறார்.

செங்கண்மாலே

இந்த வார்த்தைகள், எம்பெருமானுக்கு இயற்கையில் உள்ள சிவந்த திருக்கண்களை பற்றி சொல்வது அல்ல. ஆழ்வார் சிக்கென என்று சொன்னவுடன் எம்பெருமானின் திருக்கண்களில் பிறந்த ஒரு தனிச் சிவப்பினைக் குறிக்கிறது. சென்ற பாட்டில் (திருமாலை 34), ‘வெள்கிப் போய் ‘ என்றவுடன் கவலையுற்ற எம்பெருமான், இந்த பாட்டில், “‘சேவியேன் உன்னை அல்லால் சிக்கென “ என்று சொன்னதால் உண்டான பயம் தீர்ந்து, ஆழ்வாரின் மேல் உண்டான பெரும் காதல் உள் அடங்காமல் கண் வழியே புறப்பட்டு ஒளி வீசுவதை சொல்கிறார். செங்கண்மாலே என்பதால், பெருங்காதலால் இப்படி குதறி சிவந்த கண்களை உடையவனே என்று பொருள் கொள்ளலாம்.

கண்ணும் சிவந்து , பெரியவாய் வாயும் சிவந்து, (திருவாய்மொழி 8.8.1) என்ற பாடலிலும் ஸ்வாமி நம்மாழ்வார் கண்கள் சிவந்து என்று சொன்னது, எம்பெருமானது இயற்யான கண்ணழகை சொல்வது அன்று, ஆழ்வாரோடு சேர்ந்தபின் உண்டான பூரிப்பை சொல்கிறது.

இராமாயணம், யுத்த காண்டத்தில், விபீஷணன் இராவணனை பிரிந்து இராமனை தேடி வந்த போது, சுக்ரீவன், விபீஷணன் இராவணன் தம்பி என்பதால் அவனை கொல்ல வேண்டும் என்று சொன்னதும், பிறகு அனுமன் அவனை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னதும் இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

“வத்யதாமேஷ தீவ்ரேண தண்டேந ஸசிவைஸ் ஸஹ, ராவணஸ்ய, ந்ருஶம்ஸஸ்ய ப்ராதா ஹ்யேஷ விபீஷண(யுத்த காண்டம், 17.29) என்பது, இந்த விபீஷணன் கொடூரமான ராவணனின் சகோதரன் என்பதால் அவனது மந்திரிகளுடன் சேர்ந்து தண்டனை கொடுத்துக் கொல்வோம் என்று சுக்ரீவன் ராமனிடம் சொன்னான். எம்பெருமானுக்கு ஆழ்வார் கூறிய ‘வெள்கி போய் ‘என்ற வார்த்தை, சுக்ரீவன் இராமனிடம் கூறிய வார்த்தைக்கு ஒப்புமை கூறி எம்பெருமான் திருவுள்ளம் பட்ட பாட்டை காண்பிக்கின்றது. பின்னர் இராமன் மற்றவர்கள் கருத்தினை கேட்ட போது, வாயுவின் புத்திரனான அனுமன் விபீஷணனை நம் சொந்த நபராக ஏற்றுக்கொள்ளலாம் (17.67) என்று சொன்ன வார்த்தைகள், வலிமை மிக்க இராமன் இதயத்தில் மிகவும் மகிழ்ச்சியடைய செய்து, தனது கருத்தைச் சொல்லத் தொடங்கினான் என்பது கீழ் வரும் ஸ்லோகத்தில் வருகிறது. அதராமःப்ரஸந்நாத்மா ஶ்ருத்வா வாயுஸுதஸ்ய ஹ, ப்ரத்ய பாஷத துர்த்தஷ ஶ்ருதவாநாத்ம நிஸ்திதம் (யுத்த காண்டம், 18.1). ராமாவதாரத்தில் அனுமன், ஸ்ரீராமனுக்கு வருந்தாதீர் என்று அபயம் அளித்ததாகவும், இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார் அர்ச்சாவதாரத்தில் உள்ள பெரியபெருமாளுக்கு அபயம் அளித்ததாகவும் உரையாசிரியர் சொல்கிறார். ஆழ்வார் சிக்கென என்று சொன்னபோது, எம்பெருமானுக்கு அவ்வாறே இருந்தது என்கிறார்.

செங்கண்மாலே, உன்னை அல்லால் சேவியேனே என்று சேர்த்து பார்த்தால், தன்னை பெற்றதால், பெரும் காதலால் முகம் மலரும்படி இருக்கும் எம்பெருமானத் தவிர வேறு எங்கு போவார் என்ற கருத்தை சொல்கிறது.

ஆவியே

தன்னுடைய உயிரை போன்று இருக்கும் எம்பெருமானை விட்டு எங்கே போவேன் என்கிறார் ஆழ்வார். ஆழ்வார் பிராணனை (உயிரினை), வாயுவின் ஒரு நிலையாக கருதவில்லை. திருவாய்மொழி (7.2.9) யில் சொன்னது போல், இந்த ஆழ்வார், ‘என் திருமகள் சேர் மார்வனே. என்னும் என்னுடைய ஆவியே என்னும்’ என்று ஸ்ரீமன் நாராயணனையே தன்னுடைய உயிராக நினைத்து இருப்பவர்.

அமுதே

ஆழ்வார் எம்பெருமானை வாழ்விற்கு தேவையான உயிர் போல் மட்டும் எண்ணாமல், மிகவும் இனிமையான தன்னுடைய உயிரினை சாவாமல் காக்கும் அருமருந்தமான அமுதம் என்று நினைக்கிறார்.

எந்தன் ஆருயிர் அனைய எந்தாய்

எம்பெருமான் தன்னுடைய ஆத்மாவாகவே இருக்கிறார் என்கிறார். ஆத்மாவான எம்பெருமானை விட்டு, வெறும் சரீரத்தை மட்டும் கொண்டு தான் வெளியில் வாழ முடியாது என்பது கருத்து.

அணுகத்தகாதவன் என்று எண்ணி எம்பெருமானை விட்டு அகல செல்ல நினைத்த ஆழ்வாரை, அகன்று, அழிந்து விடாதபடி, சேர்த்துக்கொண்ட சுவாமி என்பதை, இங்கே எந்தாய் என்பதால் தெரிவிக்கிறார்.

வாத்ஸல்யம் என்ற எம்பெருமானின் திருக்குணம் என்பது, குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, அதாவது, பிறந்த கன்றை, தாய்ப் பசு, அருவருப்பு இல்லாமல், ஆசையுடனும் பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும் அன்பையும் பாசத்தையும் போல எம்பெருமான் அடியவர்களிடம் அன்பையும் பாசத்தையும் பொழிபவர்.

இங்கே, எம்பெருமானின் வாத்ஸல்யம் அல்லது அடியவர்களிடம் பரிவு என்ற திருக்குணத்தை காட்டும் சிவந்த கண்களை உடைய செங்கண்மால் என்கிறார். ஆழ்வாருக்கு உயிராக இருப்பவனே, இத்துடன் மிக இனிமையான அமுதம் போன்றவனே, தனக்கு ஆத்மாவாக இருந்து அவரை நல்வழியில் நடத்தி செல்லும் ஆருயிர் அனைய எந்தாய் என்கிறார், இப்படி உள்ள பல பெருமைகளையும் கொண்ட எம்பெருமானை விட்டு எங்கேயும் வெளியே செல்ல இயலாது என்று ஆழ்வார் கூறுகிறார்.

பாவியேன் உன்னை அல்லால்

கீழ் பாசுரங்களில் ஐயனே அரங்கனே (33) என்றும், ‘என்னை ஆளுடைய கோவே ‘ என்றும் சொன்ன வார்த்தைகளும் பொய் தானோ என்று எம்பெருமானின் திருவுள்ளமாகுமோ என்று கவலையுற்று, எம்பெருமானை தவிர வேறு ஒன்றையும் நினைக்க மாட்டேன் என்பதை, ‘பாவியேன் உன்னை அல்லால் ‘ என்ற வார்த்தைகளால் சொல்கிறார்.

பாவியேன் பாவியேனே

பாபம் மிகுந்த சம்சாரிகளை விடாமல், எல்லோர் தலையிலும் தன்னுடைய திருவடிகளால் தீண்டிய எம்பெருமானை விட்டு ஆழ்வார் விலகி செல்ல நினைத்ததற்கு காரணம் அவரின் பாவங்களே என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். இரண்டாவதாக சொன்ன ‘பாவியேனே ‘என்றது, உன்னை தவிர வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று முன்பு சொன்னதை உறுதி செய்கிறார்.

பாவியேன் பாவியேனே என்று இரண்டு வார்த்தைகளிலும் பாவி என்ற சொல் வருவது, தான் செய்த அதிக அளவு பாவங்களை குறிப்பதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம். அடியார்களின் குற்றங்களை காண மாட்டாத அளவோடு இல்லாமல், எம்பெருமானை வெறுக்கும் சம்சாரிகளையும் வெறுக்காத எம்பெருமானை தான் அகல நினைத்ததற்கு காரணம், தான் செய்த மிக அதிக அளவிலான பாவங்களே என்ற கருத்தையும் சொல்வதாக கொள்ளலாம்.

இந்த இரண்டு பாவங்களில், முதல் பாவம், ஆழ்வார் எம்பெருமானை விட்டு விலகி தன்னை தானே அழித்து கொள்ள நினைத்தது. இரண்டாவது பாவமாவது, அனைவரும் வாழ்வதற்கு காரணமாக ஆவியாயிருக்கும் எம்பெருமானையும் தான் அகல்வதின் மூலம் அழித்து, அனைவரையும் அழிக்க முற்பட்ட பாவத்தை குறிப்பதாக அமையும் என்றும் கொள்ளலாம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் இல்லை என்றும் தீய குணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் என்றும் இப்பாடலுடன் நைச்சாநுசந்தானம் என்ற நான்காம் பாகம் முடிகிறது. அடுத்த பகுதி ஆழ்வார் அருளிய திருமாலையின் மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்லும். எங்களின் வரும் வலைப்பதிவில் நாம் அனுபவித்து மகிழலாம். நன்றி.

இனி அடுத்த பாசுர அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.

075 திருவேங்கடம் – மூன்றாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தபோது கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை முதல் மூன்று தலைப்புகளை முதல் பகுதியாகவும், அடுத்த சில தலைப்புகளை இரண்டாவது பகுதியாகவும் முன்பு பதிவு செய்து இருந்தோம். இப்போது அடுத்த சில தலைப்புகளை உள்ளடக்கிய மூன்றாவது பகுதியை இங்கே காணலாம்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

திருமலை நிகழ்ச்சிகள்

சுப்ரபாத சேவை : தினசரி காலையில் 3 மணி முதல் 330 வரை சுப்ரபாத சேவை நடக்கும். இதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், ஒரு வீணை வாசிப்பவர், ஒரு தீபம் ஏந்துபவர் என்று ஆறு பேர் உள்ளே செல்வார்கள். துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்து ஊழியரிடம் இருந்து சாவி வாங்கி, கதவை திறப்பார்கள். ஸ்வாமியை வணங்கி விட்டு, கதவை சாத்திவிட்டு, உள்ளே செல்வார்கள்; கெஸல்யா சுப்ரஜா ராமா என்று ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் இன்னொரு குழு வாசிக்க ஆரம்பிபார்கள். இது சுப்ரபாத சேவா என்று பெயர். விளக்குகள் ஏற்றப்பட, வீணை வாசிக்க, சயன திருக்கோலத்தில் இருக்கும் போக ஸ்ரீனிவாச மூர்த்தியை, மூல மூர்த்திக்கு அருகில் நின்ற திருக்கோலத்தில் ஏளச் செய்வார்கள். இந்த போக ஸ்ரீனிவாசமூர்த்தியை இரவில் சயன திருக்கோலத்தில் ஒரு தொட்டிலில் ஏளச் செய்து இருப்பார்கள். சுப்ரபாதம் முடிந்தவுடன் கதவு திறக்கப்பட்டு, எம்பெருமானுக்கு பாலும் வெண்ணையும் அமுது செய்து தீபாராதனை நடக்கும்.

தினமும் ஆகாய கங்கையில் இருந்து மூன்று வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். அவைகள், ஒவ்வொன்றும், காலை, மாலை, இரவு பூஜைகளுக்கு எடுத்து வைக்கப்படும். மூல மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வதற்கு ஒப்பாக, போக மூர்த்திக்கு நடத்தப்படும். முழு மூர்த்திக்கும் நடக்காமல், திருவடிகளுக்கு மட்டுமே தீர்த்தம் சேர்க்கப்படுகிறது. எம்பெருமானுக்கு வாசனை தைலம் சாத்திய பின் மஞ்சள் நீர், பால், தேன், சந்தனம் , மீண்டும் மஞ்சள் நீர் என்று திருமஞ்சனம் செய்து, புதிய வஸ்திரம் அணிவித்து, திருமண் இட்டு, கண்ணாடி காட்டி, குடை பிடித்து, சாமரசம் வீசி சுப்ரபாத சேவையை முடிப்பார்கள்.

3.30 முதல் 3.45 வரை சன்னதி சுத்தம் செய்யப்படும். திரைபோட்டு, பழைய மாலைகளை களைந்து திருக்கோவிலுக்கு முன்னால் உள்ள பூக்கிணற்றில் சேர்க்கப்பட்டு, புது மாலைகள் அணிவிக்க படும். கோவிலுக்குகள் இருக்கும் யமுனாத்துறை என்ற இடத்தில கட்டப்பட்ட, புது மாலைகளை ஜீயர் ஸ்வாமிகள் பொறுப்பில், ஏகாங்கி என்பவரால் கொண்டு வரப்படும். ஜீயருடன், ஏகாங்கி, ஒரு வாத்தியக்காரர், திருப்பள்ளியெழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷஸுக்தம் பாட இருவர் என்பவர்கள் செல்வர்.

தோமாலை சேவை : 3 45 மணிக்கு இந்த சேவை ஆரம்பம் ஆகும். இது தோள் மாலை சேவை என்று முதலில் அழைக்கப்பது, பின்னாளில் மருவி தோமால சேவை என்று ஆனது. சுமார் 25 நிமிடம் ஆகும் இந்த சேவையின் போது, முதலில், எம்பெருமானின் திருமார்பில் எழுந்தருளி இருக்கும், மஹாலக்ஷ்மிக்கு, மாலை சார்த்தி, பிறகு எம்பெருமானுக்கு சாத்துவார்கள். திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை ஆகியவை சேவிக்கப்படும். இது சுமார் 430க்கு முடிவடையும்.

கொலுவு நிகழ்ச்சி : இதற்கு பக்தர்கள் அனுமதி கிடையாது. மூலவர் சன்னதியில் இருந்து கொலுவு ஸ்ரீனிவாச மூர்த்தியை வெள்ளிப் பல்லக்கில் ஏளப் பண்ணி, ஒரு தனி இடத்தில, எள்ளுப் பொடி வெல்லம் வெண்ணெய் அமுது செய்து, ஆராதனை செய்வார்கள். அன்றைய பஞ்சாங்கம் படித்து (நாள், கிழமை, திதி போன்றவை) அதற்கு முந்தய நாள் உண்டியல் வரவு இவற்றை சொல்லி, இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்வார்கள். மூலவரே வந்து கணக்கு வழக்குகளை கேட்டு இந்த நிகழ்வை நடத்தி வைப்பதாக ஐதீகம்.

இது முடிந்தவுடன் இரண்டு மணி அடித்து மூலவருக்கு தயிர் சாதம், முதல் நைவைத்தியம் செய்யப்படும். இதில் மூலவருடன், விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யஸூரிகளுக்கும் நைவேத்தியம் செய்யப்படும். இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு பணியாரங்கள் இரண்டாவது நைவைத்யம் செய்யப்படும். இதன் போது வராக ஸ்வாமியின் 108 திருநாமங்கள் வாசிக்கப்படும். இதன் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஸஹஸ்ரநாம அர்ச்சனை : அடுத்து 4:45 முதல், 5:30 வரை திருவேங்கடத்தானின் 1008 திருநாமங்களை சொல்லி இந்த சேவை நடக்கும். ஸஹஸ்ரநாம அர்ச்சனை முடிந்தவுடன், அர்ச்சனாந்திர தரிசனம் நடக்கும்.

மற்றவை : மதியம் 1200 மணி அளவில் தினமும் மலையப்ப ஸ்வாமிக்கும் ஸ்ரீதேவி தாயார், பூ தேவி தாயார் ஆகியவர்களுக்கு திவ்ய திருமண நிகழ்ச்சி நடைபெறும். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் இந்த வைபவம் பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

கீழ்க்கண்ட காணொளி மற்றும் படங்களை கொடுத்து உதவிய whatsapp குழு நண்பர்களுக்கு நன்றி

மாலை நான்கு மணிக்கு டோலஸ்தவம் எனப்படும் வைபவம் நடைபெறும், இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூ தேவி ஆகியோர் ஊஞ்சல் மண்டபத்தில், ஊஞ்சலில் ஆடும் போது, வேத பாராயணம், மற்றும் மங்கள வாத்தியங்கள் ஒலிக்கும். 530 மணி அளவில் இது முடிவடையும்.

மாலை 5:30 மணிக்கு ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில், சஹஸ்ர தீப அலங்காரம் நடைபெறும். வியாழக் கிழமைகளில், முக்கிய ஆபரணங்கள் இன்றி, வேட்டி அங்கவஸ்திரத்துடன் எம்பெருமான் காட்சி அளிப்பார். வழக்கமாக அணியும் திருமண் இல்லாமல், மெல்லிய திருமண் இடப்படும்.

இரவு 1 30 அளவில் திருக்கோவில் நடை சாத்தப்படும். அதற்காக எம்பெருமானுக்கு சயன தரிசனம் அல்லது ஏகாந்த தரிசனம் நடத்தப்படும். மூல மூர்த்தி பக்கத்தில் எழுந்தருளி இருக்கும் போக ஸ்ரீனிவாசமூர்த்தியை மாலைகளை களைந்துவிட்டு, வெல்வெட் மெத்தை உள்ள வெள்ளி கட்டிலில் ஏளச் செய்வார்கள். அதற்கு முன், காய்ச்சிய பால், திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து விளக்கு திரியை சிறியதாக வைப்பார்கள்; அன்னமாச்சார்யா பரம்பரையில் வந்தவர்கள் தம்புராவுடன் அவர் கீர்த்தனைகளை எம்பெருமானுக்கு பாடுவார்கள். எம்பெருமானுக்கு திரை சேர்த்து அன்றைய நிகழ்ச்சிகளை முடித்து, மறுநாள் காலையில் சுப்ரபாத சேவையுடன் தான் துவங்கும்.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் வலைத்தளத்தில், நடைபெறும் நிகழ்வுகளையும் Sevas என்ற தலைப்பின் கீழ் இங்கே காணலாம். இதன்படி, தினசரி சேவைகளாக, சுப்ரபாதம், அர்ச்சனா, தோமாலை சேவை மற்றும் ஏகாந்த சேவைகள் உள்ளன.

வாராந்திர சிறப்பு பூஜைகள் : திங்கள் அன்று 14 கலச விஷேச பூஜையும் (அர்ச்சித சேவா) செவ்வாய் கிழமைகளில் பாத பத்ம பூஜையும் (108 தங்க தாமரைகளை 108 நாமங்களை உச்சரித்து எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பிக்கும் பூஜை), புதன் கிழமைகளில் மூலவருடன் பட்டு நூலால் இணைத்த போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலச அபிஷேகமும், வியாழ கிழமைகளில் திருப்பாவாடை சேவை என்ற எம்பெருமானுக்கு முன் பெரிய அளவில் சமைத்த உணவு பரிமாறப்பட்டு நைவேத்தியம் செய்யப்படும் பூஜையும், (இந்த சமயத்தில் எம்பெருமானுக்கு மெல்லிய திருமண் சாத்தி இருப்பதால் எம்பெருமானின் திருக்கண்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்), இதன் பிறகு எம்பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்படும், சிலப்பதிகாரம் காலம் தொட்டு இருக்கின்ற, அதில் சொல்லப்பட்ட பூலாங்கி சேவையும், வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி, புரட்டாசி ப்ரஹ்மோத்ஸ வம், ரதசப்தமி ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். மார்கழியில் திருப்பாவை சேவை இங்கு பிரசித்தம்.

திருச்சானூரில் கார்த்திகை மாதம் சுக்லபட்ச பஞ்சமியில் பிரம்மோத்ஸவம். இந்த உற்சவத்தின் கடைசி நாளன்று வேங்கடவன் கூரைச் சேலை, ஆபரணங்கள் மலர் மாலைகள் ஆகியவற்றுடன் யானை மேல் மேளதாளத்துடன் வருவார். அவர் கொண்டு வந்த ஆடை அணிகலன்களை பிராட்டி அணிந்து கடைசி நாள் உற்சவம் நடைபெறுகிறது.

வைகாசி தெப்ப திருவிழா சுவாமி புஷ்கரணியில் நடக்கும். புரட்டாசி மாத ப்ரஹ்மோத் ஸவத்தின் கடைசி நாள் நிகழ்ச்சியான சுதர்சன சக்ர தீர்த்தவாரியும் சுவாமி புஷ்கரணியில் நடைபெறும். தை மாத இராம கிருஷ்ண தீர்த்த திருவிழாவும், மாசி பௌர்ணமியில் நடைபெறும் குமாரதாரா தீர்த்த திருவிழா, பங்குனி தும்புரு தீர்த்தத் திருவிழாவும், கார்த்திகை மாத க்ஷீராப்தி துவாதசியில் நடக்கும் சக்ர தீர்த்த திருவிழாவும் இதே சுவாமி புஷ்கரணியில் நடைபெறும்.

ப்ரம்மோத்ஸவம் : திருமலையில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம் காணக் கிடைப்பது மிக அரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி வைப்பதாக ஐதீஹம். இதனை தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ப்ரம்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாள் திருவிழாவில் எம்பெருமான் கருடசேவை நடக்கும் போது, மூலவரே வந்து புறப்பாடு காண்பதாக ஐதீகம். இதை குறிக்கும் வண்ணம் இன்றும் இந்த புறப்பாட்டின் போது, மூலவர் கதவு சிறிது நேரம் சாத்தப்பட்டு இருக்கும்.

புரட்டாசி ப்ரமோத்ஸவத்தின் முந்தய நாள் எல்லா தேவதைகளையும், தேவர்களையும், முனிவர்களையும் பக்தர்களையும் அழைக்கும் அங்குரார்ப்பணம் என்ற விழா நடக்கும். முப்பத்து முக்கோடி தேவர்களையும் அழைக்கும் விழா இது. ப்ரஹ்மாவே ப்ரம்ம லோகத்தில் இருந்து வந்து நேரடியாக நடத்தி வைக்கும் உத்சவம் ஆகும்.

முதல் நாள் மாலை கொடி ஏற்று விழா நடக்கும். பின்னர் இரவு பெரிய சேஷ வாஹனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்பார். இரண்டாம் நாள் காலை சிறிய சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச வாகன புறப்பாடும் நடக்கும். மூன்றாம் நாள் காலை சிம்ம வாகன பவனியும் இரவு முத்து பந்தல் வாகன பவனியும் நடக்கும். நான்காம் நாள் காலை கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூபால வாகனத்திலும் புறப்பாடு காண்பார். ஐந்தாம் நாள் காலை மோஹினி அலங்காரத்திலும், இரவில் கருட வாகனத்திலும் எம்பெருமான் வலம் வருவார். இந்த கருட வாகன தரிசனம் மிகவும் விசேஷமானது. இது கிடைப்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். கூட்டமும் அலை மோதும். மூலவருக்கு அணியும் லட்சுமி ஹாரத்தை அணிந்து மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் புறப்பாடு காண்பார். அதனால் இது மூலவரே வருவதாக ஐதீகம். ஆறாம் நாள் காலையில் அனுமந்த வாகனமும், மாலையில் தங்கத்தேர் உலாவும், இரவில் சந்திர பிரபை வாகனத்திலும் எம்பெருமான் எழுந்து அருளுவார். எட்டாம் நாள் காலையில் தேரோட்டமும் இரவில் குதிரை வாகனமும் நடக்கும். ஒன்பதாம் திருநாளன்று காலையில் பல்லக்கில் பவனியும் தொடர்ந்து சுவாமி புஷ்கரணியில் சுதர்சன் சக்ர தீர்த்தவாரியும் நடைபெறும்.

ப்ரம்மோஸ்த்வம் பற்றி திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் சொல்வதை இங்கே காணலாம்.

தெப்போத்ஸவம் : பங்குனி மாத சுக்ல பக்ஷ (பௌர்ணமிக்கு முன்) வரும் ஐந்து நாட்கள் இங்கு தெப்போத்சவம் நடைபெறுகிறது. ஏகாதசி அன்று ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் வலம் வருவார்கள். துவாதசி அன்று ருக்மிணி, சத்தியபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் வலம் வருவார்கள். கடைசி மூன்று நாட்களில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் வலம் வருவார்.

வசந்தோத்ஸவம் : சித்திரை மாதம் சுக்ல பக்ஷ த்ரியோதசி, சதுர்த்தசி மற்றும் பௌர்ணமி நாட்களில் மலையப்ப சுவாமி பரிவார தேவதைகளுடன் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் கண்டு அருளுவார். பௌர்ணமி அன்று ஸ்ரீ சீதா, ராமன், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர் மற்றும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரும் சேர்ந்து வருவார்கள். மதியம் 1 மணி சுமாருக்கு இந்த சேவை தொடங்கும்.

பத்மாவதி பரிணயம் : வைகாசி மாதம், தசமி, நவமி மற்றும் ஏகாதசி ஆகிய நாட்களில் நாராயணகிரி தோட்டத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நாட்களில் தான் ஸ்ரீனிவாசன் பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்து கொண்டார். மலையப்ப ஸ்வாமி யானை, குதிரை, கருட வாகனங்களில் ஸ்ரீ தேவி பூமாதேவி தாயார்களுடன் தனித்தனியாக எழுந்து அருளுவார்கள். இவர்களுக்கு இங்கு திருமணம் நடைபெறும். அதன் பிறகு கொலுவு நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4 மணி முதல் இவை தொடங்கும்.

ஜேஷ்டாபிஷேகம் : ஆனி மாதம் கேட்டை நக்ஷத்திரம் தொடங்கி மூன்று நாட்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறும். எம்பெருமான், தாயார் திருவுருவங்கள் சிதிலடையாமல் இருப்பதற்காக அவர்களுக்கு இங்கு திருமஞ்சனம் நடைபெறும். இதனை அபிதேயக திருமஞ்சனம் என்றும் கூறுவார்கள். திருமஞ்சனம் முடிந்தவுடன் எம்பெருமானுக்கு வைரம் பொதித்த வஜ்ர கவசம் அணியப்படும். மலையப்ப ஸ்வாமி தேவிமார்களுடன் திருவீதி உலா வருவார். இரண்டாம் நாள் முத்தங்கி சேவையும், மூன்றாம் நாள் தங்க கவச சேவையும் நடைபெறும்.

புஷ்பப் பல்லக்கு : திருக்கோவில்களில் தக்ஷிணாயண புண்ணிய காலத்தில் இருந்து ஆண்டுக்கான கணக்குகள் தொடங்கப்படும். அநேகமாக இது ஜூலை மாதம் 16ம் நடக்கும். திருமலையில் எம்பெருமானிடம் வருட கணக்கு ஒப்படைக்கப்படும். மாலை ஆறு மணிக்கு எம்பெருமான் புஷ்பப்பல்லக்கில் புறப்பாடு கண்டு, திருக்கோவிலின் முக்கிய அதிகாரிகளுடன் பவனி வருவார். அதிகாரிகள் சரியாக கணக்கு பார்ப்பதை எம்பெருமான் உறுதி செய்வதாக ஐதீகம்.

ரதசப்தமி : தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் ரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா திருமலையில் கொண்டாடப்படுகின்றது. மலையப்ப சுவாமி, அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனம் வரை ஏழு வெவ்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் நாள். சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தை துவக்கும் நாளில் சூரியன் எம்பெருமானை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் சேவை சாதிப்பதாக ஐதீகம்.

ரத சப்தமி அன்று திருமலையில் “ஒரு நாள் பிரம்மோத்ஸவம்” நடைபெறுகிறது. இந்நாளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் திருமலையில் உள்ள திருமாட வீதிகளில் ஊர்வலம் வருகிறார். ஏழு வாகனங்களில் ஒரே நாள், வருவதால் இந்த ரதசப்தமி தினத்தை திருமலையில் “அர்த்த -பிரம்மோத்ஸவம்” என்று அழைக்கிறார்கள். அதிகாலை 5.30 மணிக்கு ‘சூர்ய பிரபா வாகனம்’ தொடங்கி, 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், மதியம் 1 மணிக்கு அனுமன் வாகனம், மாலை 4 மணிக்கு கல்பவ்ருக்ஷ வாகனம், 6 மணிக்கு சர்வபூபால வாகனம். முறையே மாலை 8 மணிக்கு சந்திர பிரபா வாகனத்துடன் நாள் நிறைவு பெறுகிறது. மதியம் 2 மணிக்கு சுவாமி புஷ்கரணியில் சக்ரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெறும். திருமலை திருக்கோவில் திருமாட வீதிகளில் ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 1 மணிநேரம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் வெங்கடேஸ்வரர்.

புஷ்பயாகம் : கார்த்திகை மாத ஸ்ரவணத்தின் போது, புஷ்ப யாகம் என்று ஒரு திருவிழாவும் கொண்டப்படுகிறது. மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோர் தங்க பல்லக்கில் எழுந்தருளி, திருமஞ்சனம் கண்டருளி, பலவித அளவற்ற புஷ்பங்களால் அலங்கரிக்க பட்டு திருவீதி வலம் வருவார்.

அத்யயனோத்ஸவம் : இயற்பா முதல் நூற்றந்தாதி வரை 23 நாட்கள் திவ்யப்ரபந்தம் ஓதப்பட்டு, இறுதியில் தண்ணீரமுது வழி திருத்து விழாவும் நடைபெறுகின்றன.

தண்ணீரமுது வழி திருத்துகை : இந்த விழா ஆண்டுக்கு ஒரு முறை திருஅத்யயன உற்சவத்தின் முடிவில், திருமலைநம்பியிடம் இருந்து திருமஞ்சனத்திற்காக எடுத்து வரும் தீர்த்தத்தை எம்பெருமான் வரும் வழியிலேயே எடுத்து அமுது செய்த காட்சியை இந்த திருத்தலத்தில் உள்ள பெரியவர்களும், ஜீயர்களும், ஸ்ரீ வைணவர்களும்,கண்டுகளித்து திருவேங்கடவன் மற்றும் இராமானுஜர் திருவருளை பெறுவதற்கான திருவிழாவாக கொண்டப்படுகிறது. இந்த சமயம் திருவேங்கடவனுமும், இராமானுஜரும் ஆகாயகங்கை தீர்த்தத்திற்கு செல்லும் வழிக்கு எழுந்தருள கொண்டுபோய், எதிரே திருமொழி அனுசந்தானத்தோடு திருமஞ்சன தீர்த்தம் ஆகாய கங்கையில் இருந்து எடுத்து வரப்பட, அவர்களோடு திருவேங்கடவனும் ராமானுஜரும் சேர்ந்து திருவீதிகளில் திரு உலா வரும் போது, வீதியில் உள்ளவர்களும் தங்களுடைய இல்லத்தில் இருந்து, திருமஞ்சனத்திற்கு உரிய பொருட்களையும் எடுத்து திரு உலாவில் சேர்ந்து கொண்டு திருக்கோவிலை அடைவார்கள். அங்கு திருவேங்கடவனுக்கும் இராமானுஜருக்கும் புருஷஸூக்தத்தோடு திருமஞ்சனம் செய்து அவர்களின் திருவருளை வேண்டுவார்கள்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் : இவைகளைத் தவிர, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று ஆண்டுக்கு நான்கு முறை மூலவர் சன்னதியிலும் கோவில் முழுவதும் அடியவர்களால் ஆகம முறைப்படி சுத்தம் செய்யும் திருவிழா நடைபெறும். நடைபெறும். பொதுவாக இது உகாதி, அணிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதேசி, பிரம்மோத்சவம் முன்னிட்டு நான்கு முறை நடைபெறும்.

சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று மலையப்ப ஸ்வாமி வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதி உலா காண்கிறார்.  

மற்ற திருக்கோவில்கள்

ஆதிவராஹ சுவாமி திருக்கோவில் : இது சுவாமி புஷ்கரணி கரையில் உள்ளது.

கோதண்டராமஸ்வாமி திருக்கோவில் : இது திருப்பதி நகரத்தில் உள்ளது. இந்த இடம் முன்பு ரகுநாதபுரம் என்று கூறப்பட்டது. இங்கே ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இந்த கோவிலுக்கு எதிரே இதனுடன் சேர்ந்த ஸ்ரீ அனுமான் கோவிலும் உள்ளது. உகாதி, ஸ்ரீ ராம நவமி இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

ரங்கபூபாலன் என்ற பாண்டிய மன்னன் பல அரசர்களை வெற்றி பெற்று அந்த வெற்றிகளுக்கு அறிகுறியாக திருமலையில் கொடி நாட்டினான். அவன் ராமபிரானுடன் சீதா தேவி, மற்றும் லக்ஷ்மணன் இவர்களை நிறுவி இந்த திருக்கோவிலையும் கட்டினான் என்று திருமலையொழுகு கூறுகிறது. இவனே கோவிந்த ராஜர் சன்னதிக்கு அருகில் குலசேகர ஆழ்வாருக்கு ஒரு சன்னதியும் கட்டினான். குமார ராமானுஜ அய்யங்கார் என்பவர் இந்த கோவிலுக்கு ஒரு திருத்தேர் சம்பர்ப்பித்து, 1530ம் ஆண்டு பங்குனி 8ம் நாளில் எம்பெருமானைத் திருவீதி வலம் காண செய்தார்.

கல்யாண வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து வடக்கே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் மலை அடிவாரத்தில் ஸ்ரீனிவாசமங்காபுரம் என்ற இடத்தில இருக்கிறது. கபில தீர்த்தம் இங்கு தான் உள்ளது

பிரசன்ன வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோவில் : இது திருப்பதியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அப்பாலயகுண்டா என்ற ஊரில் உள்ளது. இங்கே சுவாமி அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

திருமங்கை ஆழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பி, வரதராஜர், பெரியாழ்வார், திருமலை நம்பி, கூரத்தாழ்வான், மதுரகவி ஆழ்வார், இராமானுஜர் ஆகியோருக்கு பல்வேறு காலங்களில் சன்னதிகள் கட்டப்பட்டு உள்ளன.

திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் வலைத்தளத்தில் எல்லா விவரங்களும் உள்ளன. மற்ற கோவில்கள் பற்றி இங்கே காணலாம்.

ஸ்தல வரலாறு

கலியுகம் பிறந்த பின்னர் எங்கும் கலியின் கொடுமை தாங்க முடியாததாக இருந்தது. முனிவர்கள் கலியின் கொடுமை குறையவும், உலக நன்மைக்காகவும், காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர், இந்த மகா யக்ஞத்தின் பயனை கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன் தீர்த்து வைக்கும் மூர்த்திக்கே தரவேண்டும் என்கிறார்.

மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பினை பிருகு மஹரிஷிக்கு கொடுத்து அவரை மூவுலகுக்கும் அனுப்பினர். பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு பிரம்மன் கண்டும் காணாதது போல் இருக்கிறான் என்று, அங்கிருந்து புறப்பட்டு கைலாயத்திற்கு வந்தார். கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில் தனித்திருந்து இவரை கவனிக்காமல் இருக்க, பிருகு இவ்விருவரும் பொறுமைசாலிகள் இல்லை என்று வைகுண்டம் அடைந்தார். அங்கே திருமகள் பாதம் வருட திருமால் துயில் கொண்டு இவரை பார்க்கவில்லை. மூம்மூர்த்திகளில் யாருக்கும் பொறுமை இல்லை என்று கோபம் கொண்டு திருமால் அருகில் சென்று, தனது காலால் திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்தார்.

உடனே, திருமால் அம்முனிவரின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு, பாறை போன்ற என் மார்பில் உதைத்த முனிவரின் பாதங்கள் எப்படி நோகிறதோ என்று முனிவரின் பாதங்களை தாங்கி, பிடித்து விடத் தொடங்கினார். தன் தவற்றை உணர்ந்த பிருகு, மன்னிப்புக் கேட்டு, தான் வந்த காரியத்தை தெரிவித்து விட்டு அவருக்கே யாக பலன்களை தருவது என்று யாகபூமிக்கு திரும்பினார்.

எம்பெருமானின் திருமார்பு, மஹாலக்ஷ்மியின் உறைவிடம் ஆகையால், அங்கு ஒருவர் உதைத்ததை பொறுக்க முடியாத மகாலட்சுமி வைகுண்டத்தை விட்டு நீங்கி, பூவுலகுக்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தார். மஹாலக்ஷ்மி இல்லாததால், திருமால் துயர் கொண்டு தாமும் பூலோகம் வந்து திருமலையில் ஒரு புற்றில் எழுந்தருளி, திருமகளை அடைய தவம் செய்யலானார்.

திருமலையில் ஒரு புற்றில் எம்பெருமான் நெடுநாள் ஆகாரமின்றி இருந்த நிலை கண்டு பிரம்மனும் சிவனும் தாங்களே பசுவும் கன்றுமாக தோன்ற, பூமாதேவி ஒரு இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும் மன்னனிடம் விற்க, மன்னனின் பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும் போது அந்த தெய்வப் பசு மட்டும் மந்தையிலிருந்து விலகி, ஸ்ரீனிவாசன் எழுந்தருளி இருந்த புற்றுக்கு சென்று பாலைச் சொரிய, தெய்வப்பசு மட்டும் மன்னருக்கு பால் கொடுக்காமல் இருப்பதை அறிந்த மன்னன் இதன் காரணத்தைக் கண்டுபிடிக்குமாறு சொல்ல, தெய்வப்பசு புற்றருகே
சென்று பால் சொரிவதைக் கண்டு, ஆத்திரமுற்று தன் கையிலிருந்த கோடாலியால் மாடு மேய்ப்பவன் பசுவை அடிக்க முயற்சிக்க, புற்றின் உள்ளே இருந்த எம்பெருமான் லேசாக எழுந்திருக்க, கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் கசிய ஆரம்பிக்க, அதைப் பார்த்த மேய்ப்பவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் மன்னனின் மாளிகையை அடைய, மன்னன் பசுவினைப் பின் தொடர்ந்து புற்றுக்கு அருகே வந்து பசு மேய்ப்பவன் கீழே விழுந்து கிடப்பதையும், ரத்தம் சிந்தி இருப்பதையும் புற்றுக்குள் யாரோ இருப்பதையும் அறிந்து
தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும் வேளையில் எம்பெருமான் புற்றில் இருந்து முழுவதுமாக வெளிப்பட்டு பசுவைக் காப்பாற்றி, அந்த மன்னனிடம் பின் ஒரு காலத்தில், அந்த மன்னன், ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வான் என்றும், அப்போது திருமகளே அவனுக்கு மகளாக பிறந்து வர, எம்பெருமானே வந்து அவளை மணம் புரிவதாக கூறி பசுமேய்ப்பவனைக்கும் மீண்டும் உயிர் கொடுத்தார்.

குசத்துவசர் என்னும் மகரிஷியின் தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்து, தான் ஸ்ரீவிஷ்ணுவை மணம் முடிக்க வேண்டும் என்று எண்ணி, அவனை குறித்து தவம் செய்ய தொடர்ந்தார். அக்கினிதேவன், இந்த வேதவதியைத் தான் சீதையாக இலங்கையில் இருக்க வைத்ததை தொடர்ந்து, இராவண வதம் முடிந்தபின், அவளின் தவத்தை மெச்சி, இராமன், அந்த அவதாரத்தில் தான் ஏகபத்தினி விரதன் என்றும் கலியுகத்தில் அவளை அடைவோம் என்று வரம் கொடுத்து இருந்தார். அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திர வம்சத்தைச் சார்ந்த ஆகாசராஜன் என்னும் மன்னனுக்கு ஒரு பெண்ணாக பிறந்து பத்மாவதி என்னும் பெயரில் கலியுகத்தில் வளர்ந்து வந்தாள்.

துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை வளர்த்தாள். இருந்தாலும், கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும் திருமணம் செய்து கொண்டதை யசோதை காணவில்லை என்ற அவளுடைய மனக்குறையை, கலியுகத்தில் தீர்த்து வைப்பதாக கண்ணன் யசோதைக்கு வரம் தந்திருந்தார். இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில் இருந்த ஸ்ரீ வராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை, ஸ்ரீனிவாசனை, யசோதை எப்படி கண்ணனை வளர்த்தாளோ அதன்படி தன் மகனாகவே வளர்த்து வர,
ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு, தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் சென்று பெண் கேட்க அனுப்பி வைத்தார்.

எம்பெருமான் ஸ்ரீனிவாசனே குறத்தி வேடம் பூண்டு, ஆகாசராஜன் மனைவியிடம் வகுளமாலிகை வருவதை பற்றியும் அவள் பத்மாவதியை பெண் கேட்பது பற்றியும் சொல்லி, அது அவர்களுக்கு நல்லது என்றும் குறி சொல்லி சென்றார். அதன்படியே வகுளமாலிகை வந்ததும், பத்மாவதியை பெண் கேட்டதும் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததாலும் ஆகாச ராஜனும் அதற்கு இசைந்து, அது எம்பெருமான் திருமகள் திருமணம் என்பதை உணர்ந்து, அதற்கு ஒப்புதல் கொடுத்தான். இதுவரை யாரும் செய்யாத வண்ணம் இந்த திருமணத்தை நடத்த எண்ணி எம்பெருமான் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். அக்னி பகவான் வந்தவர்களுக்கு உணவு தயார் செய்து பரிமாறும் சேவையை செய்ய இங்கே வருகிறார். வாயு, ப்ரஹ்மா ருத்ரன் என்று எல்லோரும் ஆளுக்கு ஒரு சேவையாக எல்லாவற்றையும் நடத்தி தர வருகிறார்கள். மஹாலட்சுமி எம்பெருமானிடம் இல்லாததால், அவர், குபேரனிடம் கடன் வாங்கி, எம்பெருமான் திருமலையில் திருமணம் நடத்தி வைத்ததாக வரலாறு. அந்த கடனுக்கான வட்டியை பக்தர்கள் காணிக்கையில் இருந்து இப்போதும் குபேரனுக்கு கட்டுவதாக கூறுவதுண்டு.

திருவேங்கடம் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாணத்தின் போது தயாரிக்கப்பட்ட உணவினை அஹோபில நரஸிம்ஹருக்கு திருவாராதனம் செய்யப்பட்டது.

வேதவதியான பத்மாவதியினை ஏற்று, யசோதையான வகுளமாலிகையின் குறை தீர்த்த ஸ்ரீனிவாசன், மனக்கிலேசம் உள்ளவர் போலவே இருக்க, எம்பெருமானின் திருவுள்ளம் அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்தானே நினைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன், ஆம் என்று சொல்ல, பத்மாவதி, மகாலெட்சுமியை அழைத்து வர சொல்ல, திருமகள் கோலாப்பூரில், லட்சுமி தேவி என்ற பெயரில் வளர்ந்து வருவதை அறிந்து, அங்கு சென்று, அவர் இல்லாதை அறிந்த போது எம்பெருமான் மேலும் வருத்தமுற்றார். மஹாராஷ்டிராவில் கோலப்பூரில் இன்றும் லட்சுமி சேத்திரம் என்பது உண்டு. அப்போது அங்கு ஒலித்த அசரீரி, மகாலக்ஷ்மி இருக்கும் இடத்தை தெரிவிக்க, எம்பெருமான் நித்யஸூரிகள் மற்றும் வாயு போன்ற பஞ்ச பூதங்களை கொண்டு மஹாலக்ஷ்மியை திருமலாவிற்கு அழைத்து வர செய்தார். வகுளமாலிகையும் பத்மாவதி தாயாரும் அவரை மனமார வரவேற்க, நித்யஸூரிகள் பிருகு முனிவர் அப்படி செய்ததற்கான காரணத்தை விளக்க மகாலட்சுமியும் மனம் உகந்து, திருமாலை அடைய, அவரும் மகிழ்ச்சியுடன் திருமகளை ஏற்க மகாலட்சுமியும் அகலகிலேன் இறையும் என்று திருவேங்கடத்தானின் திருமார்பில் ஏறி அமர்ந்து கொண்டார்.

பிரம்மாண்ட புராணத்தில், பத்தாவது அத்தியாயமான திருவேங்கட மஹாத்மியத்திலே நாரதர், திருப்பாற்கடலில் எம்பெருமானை தரிசித்த போது, அவரிடம் அவருக்கு உகந்த தேசம் எது என்று கேட்க, நாரதரும் திருமலை என்று குறிப்பிட, எம்பெருமானும் நித்யசூரியான அனந்தனை மலையாக இருக்க சொல்ல, தானும், பிராட்டிமார்களோடு சேனை முதலியார் மற்றும் நித்யஸூரிகளோடு, அங்கே அவதரிக்க வேண்டும் என்று திருவுள்ளமாக, திருப்பாற்கடல் நாதனே சங்கல்பித்து திருமலையில் தேவிமார்களுடன் எழுந்தருளி உள்ளான் என்று இருப்பதாலும், கிருமிகண்ட சோழன் மூலமாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் என்ற திவ்யதேச எம்பெருமான் கரும்கடலுள் புகுந்ததையும் மனதில் கொண்டு, அந்த எம்பெருமானையே ஆவாகனம் செய்து, உத்சவ பேரராய் எழுந்தருளி இருக்கும் தேவாதிதேவனுக்கு மூல விக்ரகமாய் திருப்பாற்கடல் நாதனை மது கைடபர்கள் சேவித்துக்குக் கொண்டு இருக்கும் விதமாக திருமலை அடிவாரத்தில் திருப்பிரதிஷ்டை செய்ததாக திருமலையொழுகு சொல்கிறது.

காசி ராஜன் சந்தான பிராப்தி வேண்டி குடும்ப சகிதமாக திருவேங்கடமுடையானை பக்தியுடன் தரிசித்து அன்று இரவு உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவனது மனைவியின் கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி அவளுக்கு சந்தான ப்ராப்தி கொடுப்பதாகவும் அவளின் நகை ஒன்றினை தருமாறும் கேட்டார்; அதற்கு அந்த மனைவி தன் கணவனிடம் கேட்டு தருகிறேன் என்று சொல்ல, திருவேங்கடமுடையானும், தன் அண்ணனான கோவிந்தராஜனிடம் கேட்டு சொல்வதாக சொல்லி மறைந்தார். இதனால் திருமலை அடிவாரத்தில் இருக்கும் கோவிந்தராஜன், திருவேங்கடமுடையானின் அண்ணா என்று சொல்வார்கள்.

தொண்டைமான் சக்கரவர்த்தி இப்பெருமானிடம் மிக்க ஈடுபாட்டுடன் திகழ்ந்து சிறந்த பக்தி கொண்டிருந்தான். எம்பெருமானுடன் தொண்டைமான் சக்கரவர்த்தி பேசியதாகவும் வரலாறு கூறுகின்றது. இவனைப் பகைவர்கள் சூழ்ந்து போது, போரில் தோல்வி ஏற்படக்கூடிய சூழ்நிலையில், வேங்கடவனை வேண்ட, வேங்கடவன், அவன் பகைவர்களை அழிப்பதற்கு தனது சங்கு சக்கரங்களைத் தொண்டைமானுக்கு அளித்து போரில் அவனை வெற்றி பெற செய்ததாக, ப்ரம்ம புராணத்தில் ஏழாம் அத்தியாயத்திலும், இந்த கோவிலின் வரலாற்றில், இராமானுஜர் அப்பனுக்கு சங்காழி கொடுத்த வரலாற்றின் போது சொல்லப்பட்டு உள்ளது.

தொண்டைமான் சக்ரவர்த்தி கபில தீர்த்த (ஆழ்வார் தீர்த்தம்) கரையில் உள்ள ஒரு துவாரத்தின் மூலம் சென்று திருவேங்கடவனை வணங்கி வந்தார் என்றும், அந்த வழியினை எம்பெருமானே அவனுக்கு காட்டி கொடுத்தார் என்றும் திருமலையொழுகு என்ற நூல் சொல்கிறது.

சாளுவ நரசிம்ம ராயன் காலத்தில் நாட்டில் முகலாய கலகங்கள் காரணமாக, திருவேங்கடமுடையான், கோவிந்தரராஜர், ஆழ்வார் மற்றும் எம்பெருமான் பாபவிநாசத்திற்கு அருகில் உள்ள குகையில் பாதுகாத்து, திருவாராதனம் கொண்டு சுமார் ஒரு வருடம் இருந்தனர் என்று திருமலையொழுகு கூறுகிறது.

சாளுவ நரசிம்ம ராயனும், கிருஷ்ணதேவ ராயரும், பல கிராமங்களை வரியில்லாமல் தானமாக விட்டு திருவேங்கடமுடையானுக்கும், கோவிந்தராஜனுக்கும் ஆழ்வாருக்கும் பல கைங்கர்யம் செய்து திருவேங்கடமுடையானின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டினார்கள்.

திருவேங்கடமுடையானைப் பற்றி மீண்டும் வேறு சில தலைப்புகளில் காண்போம். நன்றி.

Thirumaalai – Ullathey Uraiyum Maalai (34)

இந்த பதிவின் தமிழ் பதிவை இங்கே காணலாம், நன்றி.

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. .

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan or Paramathmaa. When people raised many objections, Azhwaar responded to them to follow Sri Rama, by silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, as ‘katrinam meytha kazhalinai panimin; and finally Aranganathan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours of Emperuman to Azhwaar

Azhwar moved on to describe the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on the concept of Paramatma, the supreme most concept among the twentysix concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

Devoid of any good virtue

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers using all the three elements, thinking through mind, offering flowers by hands and reciting holy chants from mouth. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think.
  • So, initially Azhwaar said that he did not use all the three elements together in his prayers, and subsequently Azhwaar said no to each one of them in the subsequent hymns.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Tirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Full of all bad qualities

The fourth part of Azhwaar’s Naichyanusandhanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, says that he has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even one single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the criteria and that was his stupidity.

In the 33rd hymn, Meiyellaam Poga Vittu, Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

Now let us move on to the next hymn.

Hymn 34 Ullathey uraiyum Maalai

Ullathe uraiyum Maalai, ulluvaan unarvu ondru illaa, kallathey naanum thondaai, thondukke kolam poondu, ulluvaar ullitru ellaam udan irundhu aridhi enru velgi poi ennule naan vilavara sirithittene (33)

Azhwaar laughed at himself, when he was trying to cheat Emperuman and his devotees by wearing appropriate costumes and speaking untrue words, realised that he could never cheat emperumaan, as He stays in the heart of everyone, from where all the thoughts are generated. Azhwaar considered himself a thief, as he believed the soul as his own. Azhwaar realised that his false guise was exposed and he laughed loudly, all by himself, to the extent of breaking his ribs. Azhwaar says that :

  • We need not run around and search for Him, as Emperuman, is always close in our hearts.
  • Residing always in the heart, Emperuman never goes out of the heart, knows everything.
  • Azhwaar describes himself as a person, who does not have any brain to do the right thinking.
  • Azhwaar acted as if he was a supreme devotee of Emperumaan and His devotees and sang “thodaiyotha thuvalamum, koodaiyum, polindhu, thonriya thol Thondaradipodi ” (Thirupalliyezhuchi,10), meaning that Azhwaar’s shoulders were shining with the basket with sacred basil garland that extended till his thighs”.
  • Azhwaar laughed boundlessly

Azhwaar, knowing that he, as a benefactor, was wearing the guise of a great devotee of Emperumaan, knowing that He, who knows all the thoughts of all thinkers by staying close to the heart of every individual, Azhwaar felt ashamed and laughed loudly within himself as Azhwaar also thought that he had moved away from Emperumaan, to the extent of breaking his ribs, is the direct meaning of this hymn.

Emperumaan always stays in the heart of everyone, the source for all the intelligence that come out of everyone’s mind, and known as “Sarvagyan’, meaning that He knows everything about everything, including all the mistakes committed by each and every one of us. So Azhwaar felt ashamed of coming in front of Emperumaan with disguise and untrue words, and thereby caused blemishes on Emperumaan . Azhwaar felt, as the brightness of the Sun, and darkness cannot be together, Azhwaar with all his shortcomings (darkness) could not go near Emperumaan ( brightness). Azhwaar felt that he brought disgrace to Him and tried to move away from his desire towards the Holy feet of Emperumaan and join all other jeevathmaas who did not have the knowledge to know about Azhwaar’s faults.

Here as a comparison, we can recall the hymn by Swami Nammazhwaar in Valavezh Ulagin (Thiruvaaimozhi 5.1), where Nammazhwaar wanted to move away from Emperumaan considering His Supreme Qualities and Azhwaar’s own lowliness.

Now let us go through in some details.

Ullathe Uraiyum Maalai

By “ullathe”, Azhwaar says that the Emperumaan, resides in the heart of every individual, which is the source from where the thoughts are generated. Outsiders can not see anything other than what is seen and since He resides in the heart, no one could ever cheat Him. By “uraiyum“, Azhwaar means that Emperumaan stays in the heart for ever and does not go out anywhere anytime. Further Azhwaar meant that if He goes out of the heart for sometime, during that time, the individuals could act either according to their wish (as told by the mind) or act in the right way (as told by Sastras or vedas). Since Emperumaan always stays in the heart, cheating Him is not possible. Azhwaar mentioned “Maalai”, to mean that He is superior to everyone, because of that also no one could ever cheat Him.

Though, Jeevathmaa is inside everyone’s body, it does not know everything that is happening inside this body. Though the sky is all-pervading, it cannot assign tasks to everyone. But since He knows everything, capable of designating anything to anyone, and the superiormost, it is absolutely impossible to deceive Him.

In Periyaazhwaar Thirumozhi (5.4.11) Periyaazhwaar sang, “Vittuchithan Manathe kovil konda kovalanai”, that Emperumaan is residing in Azhwaar’s heart.

Swami Nammazhwaar says in Thiruvaimozhi (10.6.1) “En nenjathul irundhu irunthamizh nool ivai mozhindhu” meaning that these are the words of the scriptures from my heart”. In Tiruvaimozhi (7.9.3), Azhwaar again says that Emperumaan entered into him through his tongue by “en naa mudhal vandhu pugundhu nal in kavi, thoo mudhal patharku thaan thannai sonna en vaai mudhal appanai “. In Thiruvaaimozhi 10.8.2 Azhwaar says that Emperumaan residing in Tiruppernagar had come to him on that day and He not only entered his heart, but occupied it fully with a vow, not to leave Azhwaar for ever. 

Similarly, in the Thiruvattaru Pathigam (Thiruvaimozhi 10.6.8), Azhwaar says, “Mei nindru kamazh thulava virai yeru thirumudiyan, kai ninra chakarathan karudhumidam porudhu punal, mai ninra varai polum thiru uruva vaataatraarku ennanri seydheno ennenjil thigazhvadhuve ” where Azhwaar was wondering, what he did, to deserve the grace of the Thiruvattaru Emperumaan. Azhwaar continued that Emperumaan with His fragrant Tulasi garland, has a radiant victorios discus that sets itself for action, wherever He wills. Here it can be seen as Emperumaan being inside the holy body of Azhwaar as one meaning. However the same can be seen as the good fragrance of the Thulasi moving from His holy form to His holy head. And Emperumaan feels, how blessed He is to enter into Azhwaar’s heart.

Our Acharyar, Parasara Bhattar, says that Emperuman resides in Nammazhwar’s voice and body to do good to him.

We can also recall, Thirumangaiyaazhwaar, in Periya Thirumozhi (8.9.5) the pathigam on Thirukkannapuram Souriraja Perumal, mentioned Thirukkudandhai Emperuman in “vandhaai en manathey vandhu nee pugundha pinnai, endhaai poi ariyaai“, meaning that Emperumaan came, entered Azhwaar’s heart, and after that did not know how to leave, Azhwaar’s heart. This was a great fortune Azhwaar was bestowed and could never forget this grace by Thirukudanthai Emperumaan.

Ulluvaan Unarvu Ondru Illaa

‘Ulluvaan unarvu ondru illa’ means that there is no material knowledge to think that He dwells within us. It is the opinion that there is no knowledge of Him, the Paramathmaa, Who is the Supreme Soul. In addition, there is no knowledge of Himself, who is the Jeevaathma. It is of the opinion, that only by knowing about Jeevathmaa, one will come to know about Him, the Paramathmaa, the possessor of Jeevathmaa. In the explanation of ‘ondru illa”,

  • The living soul has no knowledge about itself, the Jeevathmaa,
  • has no knowledge on Paramathmaa
  • has no knowledge about the nature of this body, which is inferior, temporary and is different from the Jeevathmaa.
  • There is no knowledge on the fact that the existence of the Jeevathmaa is for serving the Supreme Paramathmaa.

Antharyami and Antarathma are two different things. Antaratma is one of the five levels of the Parmathmaa, the Supreme Being within every living being. Antharyami is the determining or administering force or (Nyandrutvam) nature or quality of Antharatmaa, which is one of the five states of Paramatma, and that stays within that Jeevathmaa. In other words, Jeevathmaa is within each of us. Paramatma is the soul of Jeevathmaa itself. Shastras say that in everyone’s heart resides the all-pervading and majestic Emperumaan with Mahalakshmi in a lotus the size of a thumb. (It is wrong to say that Emperumaan is seen in a state called Antharathmaa at the size of the thumb. Our forefathers opined that the nature of Emperumaan shrinking himself is applicable only to His another state, namely archai.)

Kallathe Naan

Azhwaar says that he became a thief by hiding himself in outer guises so that the world could not recognize him as ignorant. He deceived the uninformed by saying that he had no evil qualities, known to his soul, the antharatmaa. He disguised himself according to Naichanu Santhaanam by telling the intellectuals that he had no good quality, known to the Antharathma and tricked them into thinking that Azhwaar possessed the knowledge of Jeevathmaa and Paramathamaa.

Azhwaar says that he had been harboring evil qualities since birth and made others believe that he had none of the evil qualities, and that too he has committed all these misdeeds while Emperumaan as a witness was watching him. While giving explanation to the above, the commentator also explains that Emperumaan Himself was a witness to both of Azhwaar’s actions of misdeeds and showing that he was not like that now.

Naanum Thondaai

Here the commentator quotes Valmiki, that those who did not have the connection with Emperumaan would hate themselves in Ramayana.

யஶ்ச ராமமஂ ந பஶ்யேது யம் ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

yescha Ramam na pasyethu yam cha Ramo na pasyathi, nindhitha sarvalokeshu swaathmaapyenam vigarhathe ” Ramayanam, Ayothya Kaantam (17-14). ‘He who does not see Rama or does not think about Rama will be blamed by all in the three worlds. He hates even himself.” is the meaning of this sloka.

Here, Azhwaar says that he, who had no merit, came to do the service to Emperumaan that should be done only by those full of spiritual qualities, and hates himself for coming to do the things that only good people should do.

Thondukke Kolam poondu

Azhwaar says that not only in the case of Emperumaan, Azhwaar has cheated even good people with sattva qualities, by wearing disguises and having holy names to celebrate him. Azhwaar says that he cheated others by wearing 12 Thirumans, all over his body and adorning the five weapons, the Pancha Ayudhams.

It seems to be the practice to wear all the five weapons of Emperumaan during panchasamskaram in the days of the explanatory Acharya or earlier. But nowadays during Panchasamskaram the practice is to wear the symbols of only Conch and Discus.

By mentioning “Kolam Poondu”, Azhwaar indicates that he put only the disguise, but never did the services. Similarly by stressing the word “Thondukke”, Azhwaar indicates that he did not do the services which are to be done by only people with good qualities.

Azhwaar after realising how insane he was to utter insensible words, listed his own words in the earlier hymns, presuming himself to be a great man and preaching others.

  • Achchutha, Amarar Ere, Aayar Tham Kozhundhe (Thirumalaai 2) – the holy names of Emperumaan
  • Ichuvai thavira yaan poi …. Achuvai perinum venden (2) – here talked about the sweetness of Emperumaan
  • Naavalittuzhi tharuginrom, naman thamar thalaigal meedhu (1) – here Azhwaar talked as though he was a supreme person, that he wanted to place his foot on the the head of Yaman, the leader for handling the karmas of the jeevathmaas after death.

Ulluvaar ullitru ellaam udan irundhu aridhi enru

Azhwaar realised that Emperumaan knows all the thoughts of every person by staying with them, as Emperumaan resides in the heart of each and everyone, from where all the thoughts are generated.

It is worth noting the words of Sakunthala to Dushyantha as per the quote given by the explanatory Achaarya. “Dushyanta Maharaja, you think that you are alone, you do not know Emperumaan, Adipurusha, who resides eternally, in your heart; you are committing sin in front of Him, Who knows the sinful deeds you are committing,” Azhwaar says that when Emperumaan, who knows everything and designates everything, is in the heart of Azhwaar and that was when Azhwaar did things that no one should do.

Velgippoi

Velgi poi means being ashamed. Azhwaar feels ashamed when he thinks of his hypocrisy, that Emperumaan is omniscient and always present in his heart. Being ashamed like this, he bowed his head and could not stand before Periyaperumal, and trying to move away from Him. Azhwaar continued to think that if someone was ashamed of a certain thing, they would look for a place where that was not there and go away. Here Azhwaar felt ashamed that he forgot to remember that there is no place where He, the Emperumaan is not present and Azhwaar was searching for a place where Emperumaan was not present.

Ennulle Naan

The common people are shameless, so they would not join Azhwaar when it comes to laughing loudly without inhibition. Even if Azhwaar thought that he was moving away from Periyaperumal, He would not like to laugh at Azhwaar, whether Azhwaar was in front of Him or away from Him. Therefore Periyaperumal also would not join Azhwaar in the matter of this uninhibited laughing; As a result, Azhwaar would be left alone to laugh all by himself. The author of the text says that Azhwaar himself became his partner in this matter, realizing that he deserved to laugh, and because there was no one to laugh with him.

Vilavarach chirithittene

Azhwaar says that he laughed until his ribs were broken. He says that there was no limit to his laughter as what he had done was also bordering on laughable things. He laughed thinking that what he wanted to do like destroying himself by getting away from Periya perumal, was similar to the thinking that those who wanted to fall into a fire, tried to do the same after taking betel leaf.

In Ramayana, Bharata told Satrukhnan with joy and a beaming face that he had reached the ashram mentioned by the sage Bharadhwaja in search of Srirama.

“Kagachaneva mahaa bhaahurdhyuthimaan Bharathasthathaa

shathrugnam , abraveethirishtaasthaanamaathyaam cha sarvashaha (Ramayanam, Ayodhya kaantam, 2.99.8)

manye praapthaah smatham dhesham Bharadhvaajo yam abhraveeth,

na athidhoore hi manyeh nadhee, mandhaakineem ithaahaa (Ramayanam, Ayodhya Kaantam 2.99.9)

Before hearing the Charama sloka, in Mahabharatham, Arjuna asked Krishna about the means of attaining moksha, and was saddened that it was difficult. He remained there, thinking that if Krishna was asked again, He would give a remedy for that too, and help Arjuna reach Him through that. Similarly, Emperumaan blessed Arjuna with the Charama Slokam, thinking that had He not responded, Arjuna would leave Him with sadness.

In the same way, Swami Nammazhwaar in Thiruvaaimozhi 1.1.3, says “An nalanudai oruvanai nanuginam naame”, which means that Azhwaar, being the lowest of lowly approached Emperumaan.

From the above, we can see, when Bharata, Arjuna and Nammazhwaar tried to approach Emperumaan, here Thondaradippodi Azhwaar, wanted to move away from Emperumaan with no desire and that he should not approach Periyaperumal anymore in this matter. Therefore, he was like a person who eats betel leaves, sprinkles flowers, and smiles before entering the fire and looked to move away from Periyaperumaal.

With this song, the fourth part, Naichanusandhaanam, ends with Thondaradippodi Azhwaar claiming that he had no good qualities and possessed all bad qualities. The next part will take us to the most important and interesting part of the Thirumalai, blessed by Azhwaar. We can experience and enjoy in our nexrt weblog. Thanks.

075 திருவேங்கடம் – இரண்டாம் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தின் முதல் மூன்று தலைப்புகளை முதல் பகுதியில் சொல்ல முயன்றுள்ளேன். அடுத்த சில தலைப்புகளில் இன்னும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

ஆதிவராகப்பெருமாள்

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராக ரூபியாய் காட்சி தந்தருளினார். அதனால், இது ஆதி வராக க்ஷேத்திரம் என்றே ஒரு காலத்தில் இது புகழ் பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில் அமைந்துள்ள ஆதி வராகரைச் சேவித்த பின்பே ஸ்ரீனிவாசனைச் சேவிக்கச் செல்ல வேண்டும் என்பது வழக்கம்.

எம்பெருமான் ஸ்ரீனிவாசனாக இங்கு வந்த போது, இந்த ஆதி வராஹ பெருமாளிடம் அனுமதி பெற்று இங்கு தங்கியதாக சொல்லப் படுகிறது. முதல் நைவேத்தியம் இந்த வராஹ பெருமானுக்குத் தான்.

முகலாய படையெடுப்பில் மதுரை மீனாக்ஷியம்மன் கோவில், திருவரங்கன் ஆலயம் போன்றவற்றை சூறையாடிய போது, இந்த திருமலை மட்டும் அவர்களிடம் சிக்கவில்லை. மலைமேல் உள்ள கோவில் என்ன என்று முகலாயர் கேட்ட போது, அது பன்றி கோவில் என்று வராக சுவாமி கோவிலை குறிப்பிட்டு சொன்னதால், பன்றி மேல் உள்ள வெறுப்பினால் அவர்கள் இங்கே வராமல் சென்றனர் என்று கூறுவதுண்டு.

ஆதிவராஹ க்ஷேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் மூன்று பிரிவுகள் கொண்டது. அவை கீழ் திருப்பதி என்ற திருப்பதி, திருமலா என்ற திருமலை மற்றும் அலர்மேல்மங்காபுரம் என்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோவில்.

திருமலை நடைவழிகள்

திருப்பதி ஏழுமலையான், அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி ஆகிய 7 மலைகள் மீது குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பதை கீழே பார்க்கலாம். திருவேங்கடமுடையானை திருமலைக்கு சென்று தரிசனம் செய்ய ஏழு மலைப் பாதைகளை பக்தர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

முதலாவது அலிபிரி பாதை. ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் மைத்துனர் மட்டி குமார அனந்தராயுலு என்பவர்தான் அலிபிரி மலைவழிப் பாதையை ஏற்படுத்தியாக தெரிகிறது. 3,650 படிகளும், 8 கி.மீ. தொலைவும் கொண்டது இந்த மலைப்பாதை. திருமலைக்கு செல்ல பேருந்து வசதிகள் இருந்தாலும், இந்த வழியே மலையை நடந்து சென்று தரிசிக்கும் பக்தர்களும் நிறைய உண்டு. இப்படி செல்பவர்களுக்கு தேவஸ்தானம் மிக சிறப்பான வசதிகளை செய்து தந்து உள்ளது. மலைஅடிவாரத்திற்கு அலிபிரி என்று பெயர்.

இங்கிருந்து தான் முனிவர்களும், யோகிகளும், ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எம்பெருமானை சேவிக்க சென்று உள்ளார்கள் என்று நினைத்தபடி மலைப்படிகளை ஏறினால் சிரமம் தெரியாது.

இதற்கு அடுத்த பகுதி, பாத மண்டபம், அங்கே எம்பெருமானின் திருவடிகள் உள்ளன. இதன் விவரம் கீழே ஆச்சாரியர் என்ற பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. அடுத்த பகுதி தலையேறு குண்டு பாறை, அங்கு ஆஞ்சநேயரை சேவிக்கலாம். மலை பாதையில் ஏறும் வழியில் தசாவதார மண்டபங்கள் கள் உள்ளன. மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ணா அவதாரங்களுக்கு பிறகு ஹயக்ரீவர் மண்டபம் உள்ளது. அதையடுத்து 12 ஆழ்வார்களின் மண்டபங்கள் உள்ளன. எல்லா மண்டபங்களையும் கடந்தவுடன் நாம் திருமலையை அடைந்து விடுவோம்.

திருமலைக்கு நாம் நடந்து செல்லும் போது, மூன்று கோபுரங்கள் உள்ளன; ஒன்று அலிபிரியில் உள்ள முதல் கோபுரம். இது ராயர் கோபுரம் என்று பெயர். இது சாளுவ நரசிம்மன் கி பி 1482ல் கட்டியது. இரண்டாவது குருவ நம்பிக்கான ஒரு கோபுரம், இது சுமார் 2000 படிகள் கடந்தவுடன் உள்ளது, சிறிது சிதலடைந்து உள்ளது. மூன்றாவது கோபுரம் காலி கோபுரம்.

காலி கோபுரத்தை தொடர்ந்து நரசிம்மர் சன்னதி உள்ளது. இதற்கு தபோவனம் என்று பெயர். இங்கு தவம் புரிந்த முனிவர்களுக்கு நரசிம்மன் காட்சி அளித்ததாக வரலாறு. யோகநரஸிம்ஹர் சுயம்புவாக நெடிய தோற்றத்துடன் காணப்படுகிறார்.

சேஷாத்திரி மலையை கடக்கும் போது, முழங்கால் முறிச்சான் என்ற பகுதி வருகிறது. இந்த புனித மலையில் பாதம் பதித்து நடந்தால், பாவம் வந்து சேரும் என்று ஸ்ரீ ராமானுஜர் முழங்காலாலேயே ஊர்ந்து சென்றதாக வரலாறு. இங்கு ராமானுஜருக்கு ஒரு சன்னதி உள்ளது.

செல்வன் என்ற ஒரு இடையன் முதலில் திருமலைக்கு திருப்படிகள் அமைத்தான் என்று திருமலை ஒழுகு கூறும். கந்தாடை இராமானுஜ அய்யங்கார் என்பவர் 15ம் நூற்றாண்டில் இந்த படிகளை சீர் செய்தார். அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதி வண் சடகோபதீந்தர மகாதேசிகன் என்னும் ஜீயர் திருமலைக்கு படிக்கட்டுகளை மேலும் சீர் அமைத்தார்.

இரண்டாவது, ஸ்ரீவாரி மெட்டு மலைப் பாதை. இவ்வழியாகத்தான் மகா விஷ்ணுவே திருமலைக்கு மலையேறிச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. இதுவே திருப்பதி – திருமலை இடையே இருந்த முதல் வழித்தடம். அரசர் சாளுவ நரசிம்ம ராயுலு இந்த வழியில் பயணம் செய்து திருமலையை அடைந்தார். 2,100 படிகள் மட்டுமே உள்ள இப்பாதையில், ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் திருமலையை சென்றடையலாம்.

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

கீழ்க்கண்ட காணொளி மற்றும் படங்களை கொடுத்து உதவிய whatsapp குழு நண்பர்களுக்கு நன்றி

இது திருப்பதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உள்ள ஸ்ரீனிவாச மங்காபுரம் என்ற இடத்தில இருந்து தொடங்குகிறது. ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட பிறகு சுமார் ஆறுமாதங்கள் அவரை ஸ்ரீனிவாச மங்காபுரத்தில் தங்குமாறும், மேலும் திருமலை ஏற வேண்டாம் என்று கேட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பாதை வழியாக ஸ்ரீனிவாச பெருமாள் திருமலைக்கு திருப்பதிக்கும் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது.

மூன்றாவது அன்னமாச்சாரியார் பாதை. இது, கடப்பா மாவட்டம், தாள்ள பாக்கம் பகுதியில் இருந்து குக்கல தொட்டி வழியாக திருமலையில் உள்ள பார்வேட்டி மண்டபம் வரை அமைந்துள்ளது. இவ்வழியாகத்தான் அன்னமாச்சாரியார் திருமலையை அடைந்ததாக கூறப்படுகிறது.

நான்காவதாக தும்புரு தீர்த்தம் பாதை.  திருமலையில் உள்ள தும்புரு தீர்த்தத்தில் இருந்து, குக்கல தொட்டி வழியாக கடப்பா மாவட்டம் சோமேஸ்வரர் கோயில் வரை உள்ளது. ஆனால் இந்த வழித்தடம் இருப்பது பலருக்கு தெரியாது.

ஐந்தாவதாக தரிகொண்ட வெங்கமாம்பாள் பாதை. ஏழுமலையானின் தீவிர பக்தையான தரிகொண்ட வெங்கமாம்பாள் இந்தப் பாதை வழியாகதான் திருமலையை அடைந்துள்ளார். இப்பாதை திருப்பதியை அடுத்துள்ள பாகரா பேட்டை வனப் பகுதியிலிருந்து தலக்கோனா வழியாக மொகலிபெண்டா, யுத்தகள்ளா, தீர்த்தம் குண்டா வழியாக திருமலையில் உள்ள வேதபாட சாலையை வந்தடையும். மிகவும் அடர்ந்த வனப் பகுதி வழியே இப்பாதை செல்வதால் இந்த வழியில் இடர்கள் அதிகம்.

அடுத்தது, பாலகொண்டா பாதை.  இது யுத்தகள்ளா தீர்த்தத்தில் இருந்து பால கொண்டாவரை நீண்டுள்ளது. கண்டி கோட்டை அரசர் ஏற்பாடு செய்த வழித்தடமாக இது கூறப்படுகிறது. ஆனால் இந்த பாதையை தற்போது யாரும் பயன்படுத்துவது இல்லை.

இறுதியாக தொண்டமான் பாதை என்பது ஏழாவது வழி.  இது தொண்டமான் சக்கரவர்த்தி காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழித்தடமாக கூறப்படுகிறது. திருப்பதி அருகே உள்ள கரகம்பாடியில் இருந்து அவ்வாச்சாரி கோனா வழியாக திருமலையை சென்றடையலாம். பக்தர்கள் ஏறிச்செல்ல மிகவும் சிரமமான பாதை என்பதால் காலப்போக்கில் இந்தப் பாதையும் காணாமல் போனது.

திருவேங்கடத்தில் ஏழு மலைகள்

வேங்கட மலை – வேங்கடாத்ரி : ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

சேஷ மலை – சேஷாத்திரி : பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

நாராயணாத்திரி – வேதகிரி : எம்பெருமான், வேதங்களை மீன் வடிவத்தில் காத்ததால், வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது. இங்கே எம்பெருமான் நாராயணனே, மலை வடிவிலேயே காட்சி அளிப்பதால், இது நாராயணத்ரி என்று அழைக்கப்படுகிறது.

கருட மலை – கருடாத்திரி : இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

விருஷப மலை – விருஷபாத்ரி : விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவன் எம்பெருமானை வேண்டி, அவன் பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

அஞ்சன மலை – அஞ்சனாத்ரி : ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

நீலாத்ரி : ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

திருமலையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் சிலாதோரணம் என்ற ஒரு பாறை படிமம் அமைந்துள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து தான் ஸ்ரீனிவாச பெருமாள் வெளிப்பட்டதாக சொல்வார்கள். இங்கு ஐராவதம், அபாய ஹஸ்தம், கருடாழ்வார் வடிவில் அமைந்த பாறைகள் உள்ளன. இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடங்கள் ஆகும். .ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை என்று சொல்வார்கள்.

திருமகளை தேடி அலைந்த ஸ்ரீனிவாச பெருமாள் ஒரு சிகரத்தில் நின்றதாக சொல்வார்கள். அது நாராயணகிரி என்ற மலை ஆகும். இப்போதும் அங்கு எம்பெருமானின் திருவடிகள் உள்ளன, அவற்றை ஸ்ரீவாரி பாதம் என்று பக்தர்கள் வணங்குகிறார்கள். இந்த இடம் சிலாதோரணத்திற்கு அருகில் உள்ளது.

திருமலையில் ஐந்து மூர்த்திகள்

திருமலையில் உள்ள திருவேங்கடவன் திருக்கோவிலும், திருச்சானூரில் இருக்கும் அலர்மேல் மங்கை திருக்கோவிலும் தொண்டைமான் கட்டியதாக வரலாறு. இங்குள்ள
சுற்று மண்டபங்கள் யாக சாலை, கோபுரங்கள், தானியக் களஞ்சியம் கொடியேற்று மண்டபம் போன்றனவையும் தொண்டைமான் கட்டியதே ஆகும். இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் தொண்டைமானின் கட்டிடப்பணி குறிக்கப் பட்டுள்ளது. இந்த தொண்டைமான், ஆகாயராஜனின் சகோதரர் என்றும் சொல்லப்படுகிறது.

திருமலையில், த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீ நிவாசர், மற்றும் மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை பஞ்சபேரர்கள் என்று அழைக்கின்றனர்.

த்ருவ ஸ்ரீநிவாச மூர்த்தி : இவர்தான் மூலவர். ஆனந்த நிலையத்தில் சுயம்புவாக எழுந்தவர். சாளக்ராமத்தால் ஆனவர். இவரை ஸ்தானக மூர்த்தி, த்ருவமூர்த்தி, த்ருவபேரம், கோவிந்தன், ஸ்ரீவாரி, பாலாஜி என்றெல்லாம் அழைப்பார்கள். உயர்ந்த திருவுருவம் கொண்ட பரந்தாமன். இந்த மூல மூர்த்தியை ஏகாந்த சேவைக்குப் பிறகு பிரம்மா முதலான எல்லா தேவர்களும் வந்து வணங்குவதாக ஐதீகம்.

போக ஸ்ரீநிவாச மூர்த்தி : இவர், கருவறையில் மூல மூர்த்தியுடன் இருப்பவர். கௌதுக பேரர், மணவாளப் பெருமாள் என்றும் இவருக்குப் பெயர். கோயிலில் இருந்து எப்போதும் வெளியே வராத இவருக்கு தினமும் ஆகாச கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புதன்கிழமை தோறும் காலை இவருக்கு தங்கவாசல் முன்பு ஸஹஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த சமயம் மட்டும் இவரை தரிசிக்கலாம். எட்டு அங்குல உயரத்தில் வெள்ளியினாலான பெருமாள் இவர்.

கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி : கொலுவு என்றால் ஆஸ்தானம் என்று பொருள். தினமும் கருவறையில் தோமாலை சேவை ஆனதும் ஸ்நபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் எழுந்தருளும் இவரிடம் அன்றைய பஞ்சாங்க விஷயங்கள், கோயில் வரவு செலவு, நித்திய அன்னதான நன்கொடையாளர் விவரங்கள், உற்சவ விஷயங்கள் ஆகியவற்றை ஆலய பட்டர் அறிவிப்பார். இந்நிகழ்வில் ஆலய பட்டர்கள், ஆலய ஊழியர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ள முடியாது.

உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி : இவருக்கு வேங்கடத்து உறைவார், ஸ்நபன பேரர் என்றும் பெயர்கள் உண்டு. இவரே பதினான்காம் நூற்றாண்டு வரை உற்சவமூர்த்தியாக இருந்தவர். இவர் மீது சூரிய ஒளி பட்டால் உக்ரமாகி விடுவார். ஒரு முறை அவ்வாறு ஏற்பட, பல கெடுதல்கள் நிகழ்ந்து விட்டன. எனவேதான் புதிதாக மலையப்ப ஸ்வாமியை எழுந்தருளச் செய்தனர். உக்ர ஸ்ரீநிவாச மூர்த்தி ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் கைசிக துவாதசி அன்று மட்டும் விடியற்காலை மூன்று மணி அளவில் எழுந்தருளி பக்தர்களுக்கு கருணை புரிகிறார்.

உற்சவ ஸ்ரீநிவாசர் எனும் மலையப்ப சுவாமி : இவருக்கு மலை குனிய நின்ற பெருமாள், உத்ஸவ பேரர், மலையப்பர், தர்பார் ஸ்ரீனிவாசர் எனும் பெயர்களும் உண்டு. நெற்றியில் பதிக்கப்பட்ட திருச்சுட்டியில் கஸ்தூரி திலகம் திகழக் காட்சி அளிப்பவர் மலையப்பர்.

சமீப வருடங்களாக திருமலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை போக்கவும் பக்தி மார்க்கம் செழிக்கவும் கல்யாண ஸ்ரீ நிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப் படுகிறது. இவர் வேறு, திருமலையில் உள்ள மலையப்ப சுவாமி வேறு.

தீர்த்தங்கள்

இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக, பிரதயக்ஷமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து கூடுகின்றன. சில முக்கியமான தீர்த்தங்களை இங்கு வகைப்படுத்துகிறோம்.

குமார தாரிகை அல்லது குமார தீர்த்தம் : மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசிப்பௌர்ணமி) சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. அன்று இந்த தீர்த்தத்தில் குளிப்பவர்கள் ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுகின்றனர்.

தும்புரு தீர்த்தம் எம்பெருமானை நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர்
தவமியற்றிய இடத்திற்கு அருகில் இருப்பதால் இது தும்புரு தீர்த்தம் எனப்படுகிறது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பௌர்ணமி) இதில் நீராடுவோருக்கு
பரமபதம் உண்டு.

இராம கிருஷ்ண தீர்த்தம் : தை மாதம் வரும் பௌர்ணமியில் இதில் நீராடினால் இந்த உலக சுகம், மற்றும் வைகுண்ட பிராப்தி இரண்டும் கிடைக்கும்.

ஆகாச கங்கை : தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு
திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இந்த தீர்த்தத்தின்
அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு நித்ய கைங்கர்ய தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருவாராம். கோவிலிலிருந்து சுமார் 2 மைல் தூரம். எம்பெருமான் இவரது தீர்த்த கைங்கர்யத்தை மெச்சி காட்சி கொடுத்து அந்த தீர்த்தத்தை கோவிலினுள்ளேயே காண்பித்ததாகவும் சொல்வார்கள். சகல சித்திகளையும் அளிக்கும் இந்த தீர்த்தத்தில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நீராடுவது மிக சிறப்பு.

பாண்டு தீர்த்தம் வைகாசி மாதம் சுக்ல பட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய் கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால் அப்போது இதில் நீராடுவோர் சகல
பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

பாபவிநாசன தீர்த்தம் மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக் கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்குஅறிய ஞானம் பெறுகின்றனர். சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

ஸ்வாமி புஷ்கரிணி தீர்த்தங்களின் அரசி என்று அழைக்கப்படுவதும், சரஸ்வதி தேவி
தவம் இயற்றியதுமான ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகாமையில் தான் ஆதிவராஹமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மிக விசேஷமான தீர்த்தமிது. இதில் மூன்று கோடி தீர்த்தங்கள் கூடுகின்றன மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூர்யோதயத்திற்கு 6 நாழிகை முன்பில் இருந்து சூர்யோதயத்திற்கு பிறகு 6 நாழிகை வரை இம்மலையில் உள்ள தீர்த்தங்கள் யாவும் இதில் கூடுகின்றன. எம்பெருமானும் இங்கு நீராடுவதாக ஐதீகம். அப்போது இதில் நீராடுவோர் பூவுலகில் சிறப்புடன் வாழ்ந்து இறுதியில் இறைவன் திருவடியிலும் எப்போதும் வீற்றிருக்கும் பேறுபெறுவர்.

கபில தீர்த்தம். இது கீழ் திருப்பதியில் மலை அடிவாரத்தில் அலிப்பிரிக்கு அருகில் உள்ளது. கபில முனிவர் பெயரில் இது இப்படி அழைக்கப்படுகிறது. இதுவே ஆழ்வார் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

கீழ் திருப்பதி

முதல் பிரிவு, கீழ் திருப்பதி என்று சொல்லப்படும் ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சன்னதி. இங்கே இவர் சயன திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் காட்சி அளிக்கிறார். புண்டரீகவல்லி தாயார், ஆண்டாள், உடையவர் ஆகியவர்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோவிந்தராஜ எம்பெருமான், ஒரு மரக்காலை (அளவுகோல்) தலையில் வைத்துக்கொண்டு சயனித்து உள்ளார், அந்த மரக்கால், திருமலையில் எம்பெருமானுக்கு வரும் காணிக்கையை அளந்து குபேரனுக்கு கொடுப்பதாக ஐதீகம்.

சிதம்பரத்தில் கோயில் கொண்டிருக்கும் தில்லைநகர் திருச்சித்திரகூட உத்சவ மூர்த்தி கோவிந்தராஜனே, இங்கே கீழ் திருப்பதியில் கோவிந்தராஜனாக சேவை சாதிக்கிறார்.

திருமலை

இரண்டாம் பிரிவு, மலை மேல் உள்ள திருப்பதி, திருமலா அல்லது திருமலை எனப்படும் மலை மேல் உள்ள திருக்கோவில். எம்பெருமான், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான் என்று பல திருநாமங்களுடன், ஆனந்த விமான நிலையத்தின் கீழ், கிழக்கு நோக்கி திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறான்.

திருமலை திருக்கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. ஒன்று சம்பங்கி சுற்று. இந்த பிரஹாரத்திற்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராயன் மண்டபம், சாளுவ நரசிம்ம மண்டபம், ஜனா மஹால், துஜஸ்தம்பம் ஆகியவை உள்ளன. கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் பிரதிமை மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயர், அவரது மனைவிகளான திருமலாதேவி, சின்னா தேவி இவர்களின் சிலைகள் உள்ளன.

அடுத்து ரங்க மண்டபம், இதில் 14ம் நூற்றாண்டில், முகலாய படையெடுப்பின் போது, தாக்கபட்ட ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட திருவரங்கன் உற்சவர் விக்ரகம், இந்த மண்டபத்தில் வைக்கப்பட்டதாக வரலாறு. கி பி 1328ல் முஹம்மது பின் துக்ளக் என்பவன் மதுரையும் அதனை சுற்றியுள்ள ஊர்களை கொள்ளை அடித்து கோவில்களை சூறையாடிய போது, திருவரங்கனை கொள்ளையர்களிடம் இருந்து தப்பிவிக்க, சில பக்தர்கள் அவரை சுமந்து வந்து பல ஊர்களை கடந்து திருமலையில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். நடைபயணமாக வர சுமார் 2 ஆண்டு எடுத்து இருக்கும். 1330ல் திருமலை திருக்கோவிலில் ரங்கமண்டபம் என்று அழைக்கப்படும் முன் மண்டபத்தில் எழுந்தருள செய்து அவரை விருந்தாளியாக உபசரித்து அவருக்கு முதல் திருவாராதனம் நடந்தது என்றும் கங்குலும் பகலும் என்ற பதிகம் (திருவாய்மொழி 7.2) திருவேங்கடவன் முன் ஓதப்பட்டது என்றும் சொல்வார்கள். இங்கிருந்த திருவரங்கனை 1363ல் செஞ்சிக்கு கொண்டு சென்று அங்கு ஒரு எட்டு ஆண்டுகள் வைத்திருந்து மதுரையில் கலகம் தணிந்த பின், திருவரங்கத்துக்கு 1371ல் எழுந்தருளினார்.

அடுத்த பகுதி, திருமலை ராயர் மண்டபம். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மலையப்ப சுவாமி எழுந்தருளி திருக்கோவில் கணக்குகளை பார்ப்பார். ஜனா மஹாலில் மலையப்ப சுவாமி ஊஞ்சல் உற்சவம் காணுவார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவில் துவஸ்தம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. திருவேங்கடத்தானுக்கு அமைக்கப்பட்டு இருக்கும் விமானத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்ட பரவாசுதேவர் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தின் உண்டியலுக்கு போவதற்கு முன்பு, இவரை முழுவதுமாக தரிசிக்கலாம்.

அடுத்த மண்டபம், நடிமி படி காவலி என்ற மண்டபம், இங்கு நைவேத்தியம் சமயத்தில் அடிக்கப்படும் இரண்டு கோவில் மணிகள் உள்ளன. அதனால் இந்த மண்டபத்தை திருமாமணி மண்டபம் என்றும் அழைப்பர். இந்த மண்டபத்திற்கு வடக்கே பரகாமணி மண்டபம் என்ற எம்பெருமானின் முக்கிய உண்டியல் உள்ள மண்டபம் உள்ளது. இங்கே காவாளம் என்ற பெரிய பித்தளை அண்டாவில் துணி சுற்றி உண்டியலாக வைத்து உள்ளார்கள். கிழக்கே கருடர் சன்னதி உள்ளது.

அடுத்து பங்காரு வகிலி என்னும் தங்க வாசல் வழியாக திருவேங்கடவனை தரிசிக்க செல்கிறோம். இதன் வாசலில் ஜெயன் விஜயன் என்ற துவார பாலகர்கள் இருக்கிறார்கள். எம்பெருமான் கருவறைக்கு செல்வதற்கு முன், உள்ள மண்டபம் ஸ்நாபன மண்டபம். அடுத்த கட்டம், ராமர் மேடை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமர், சீதா, லக்ஷ்மணர், சுக்ரீவன், அனுமன் அங்கதன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். சுதர்சன சக்ரத்தாழ்வார், விஷ்வக்சேனர், கருடர் போன்றவர்களும் எழுந்தருளி உள்ளனர். அடுத்து ஸ்ரீ கிருஷ்ணர், நவநீத கிருஷ்ணர் என்று நடன நிலையில் ஸ்ரீ ருக்மணி தேவியுடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு மார்கழி மாதம் சிறப்பு பூஜை

அடுத்தது அர்த்தமண்டபம் எனப்படும் கர்ப்பகிரகம். இங்கு ஸ்ரீனிவாச பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலமாக நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி உள்ளார். கீழ் வலது திருக்கரத்தால் வரதஹஸ்தம் (உள்ளங்கை பக்தர்களை நோக்கி, திருவிரல்கள் தன் திருவடியை நோக்கி இருப்பது) காண்பித்து, எல்லோரும் அவன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.இதற்கு வைகுண்ட ஹஸ்தம் என்றும் பெயர். கீழ் இடது திருக்கரங்களினால் கட்டியவலம்பிதா (திருவிரல்கள், இடது திருத் தொடையினை காட்டி தொடையின் மேல் இருப்பது) என்ற நிலையில் நிற்கிறார். முகத்தில், பெரிய திருமண்ணுடன் கீழ் தாடையில் பச்சைக்கற்பூரத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எம்பெருமான் வைர கீரிடம் அணிந்து இருப்பார். வலது திருமார்பில் மஹாலக்ஷ்மி தாயாரும், இடது திருமார்பில் பத்மாவதி தாயாரும் எழுந்தருளி உள்ளனர். ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச் சுட்டி,  காதணிகள்,  புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பூசு போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகர ஆழ்வார் படி உள்ளது.

திருவேங்கடவனை சேவித்து விட்டு வந்தவுடன் நாம் அடைவது முக்கோடி என்னும் அடுத்த பிரகாரம் ஆகும். இங்கே விஷ்வக்சேனர் சன்னதி உள்ளது. அவர் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார். வைகானச ஆகம முறைப்படி இந்த கோவிலுக்கு வருபவர்கள் அவரை வணங்கி செல்ல வேண்டும். இவர் எம்பெருமானுக்காக எல்லா நிர்வாக பொறுப்புகளையும் எடுத்து நிர்வகிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது இவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படும்.

எம்பெருமானின் சந்நிதிக்கு எதிரே கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் காட்சி அளிக்கிறார். ப்ரம்மோத்ஸவத்தின் போது கருட கொடி ஏற்றப்படும்.

திருமலை திருக்கோவில் கோபுரத்தின் இடது பக்கத்தில் ஸ்ரீ வரதராஜர் சுவாமி சன்னதி உள்ளது. அபயஹஸ்தத்துடன் சேவை சாதிக்கின்ற இவரை சேவித்தால் எல்லா செல்வங்களும் பெறலாம் என்று நம்புகிறார்கள். முதல் பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் கிரிஜாநரசிம்மர் என்ற யோகநரசிம்மஹ சுவாமி சன்னதி உள்ளது. வைகாசி ஸ்வாதி நட்சத்தில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பாக கொண்டாப்படும்.

ராமானுஜர் சன்னதி, மற்றும் சங்கீர்த்தனா பாதுகாப்பு அறை போன்றவையும் உள்ளன. சங்கீர்த்தனா பாதுகாப்பு அறையில், அன்னமார்ச்சார்யா, அவர் மகன் மற்றும் பேரன், திருவேங்கடவன் மேல் எழுதிய பாடல்கள் பாதுகாக்க பட்டு வருகின்றன.

எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்யும் மடப்பள்ளியை பொட்டு அறை என்கிறார்கள். இங்கே மஹாலக்ஷ்மி அருள் பாலிக்கிறார். அவரை மடப்பள்ளி நாச்சியார் என்றும், அவளே வகுளமாலிகா என்றும் வணங்குகிறார்கள். திருமலை திருக்கோயில் சமையல் கட்டு மிகவும் பெரியதாகும்.  பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம்,  சித்ரான்னம்,  வடை, முறுக்கு,  ஜிலேபி,  அதிரசம்,  போளி,  அப்பம், மெளகாரம்,  லட்டு,  பாயசம்,  தோசை, ரவாகேசரி,  பாதாம்கேசரி,  முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியில் தயிர் சாதம் மட்டுமே நைவேத்தியதிற்காக கோவில் கர்பக்கிருகத்திற்குள் குலசேகரப் படியைத் தாண்டி எடுத்து செல்லப்படுகிறது. மற்ற எந்த பிரசாதமோ. அல்லது எந்த வகையான பாத்திரத்திலோ எடுத்துக்கொண்டு குலசேகர படியை தாண்டாது. திருவேங்கடத்தானுக்கு அமுது செய்யப்பட்ட மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப் பெரிய பாக்கியமாகும்.

ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த மேல் சாத்து வஸ்திரத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்திற்கு பணம் செலுத்தி, அதற்கான நாளுக்கும் அவன் திருவுள்ளத்திற்கும் மூன்று வருடத்திற்கு மேல் காத்து இருக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். ஒரு நாளில் பல வஸ்திரங்களை எம்பெருமான் முன் சமர்ப்பித்து அன்று அவனுக்கு என்ன திருவுள்ளமோ (எந்த அர்ச்சகரோ / எந்த பணியாளரோ / எந்த நிறமோ / எந்த பக்தரோ ) அதுவே அவனை சேரும். அதே போல் கீழ் சாத்து அல்லது உள்சாத்து ஆடையை அணிவிக்க, தனி கட்டணமும், பத்து வருடங்கள் வரையும் காத்து இருக்க வேண்டும் என்று தெரிகிறது. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகின்றன.

திருவேங்கடவனுக்கு திருமஞ்சனம் செய்ய கட்டணம் செலுத்தி மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். திருமஞ்சத்திருக்காக ஸ்பெயினில் இருந்தும், குங்குமப்பூ நேபாளத்திலிருந்தும் கஸ்தூரி சைனாவிலிருந்தும் புனுகு பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் உள்நாட்டிலும், வெளி நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கபடும். 51  வட்டில்கள் மூலம் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு சேர்த்து, காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை திருமஞ்சனம் நடத்தப்படும். ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் இருந்து ரோஜா மலர்களும், சீனாவில் இருந்து, சீனச்சூடம்,  மற்றும் வாசனைப் பொருட்களும் வரவழைக்கப் படுகின்றன.

திருவேங்கடவனுக்கு வாரம் ஒருமுறை வெள்ளியன்று திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதற்கு முன்பு நைவேத்தியம், வடகலை மற்றும் தென்கலை ஸம்ப்ரதாயங்கள்படி என்று சிறப்பு சாத்துமுறை நடைபெறுகிறது. அதன்போது நடைபெறும் தீபாராதனை ஒளியில் ஏழுமலையான் எந்தவித அலங்காரங்களும் இல்லாமல், கண்ணை பறிக்கும் அழகோடு காட்சி அளிப்பார்.

திருவேங்கடமுடையானின் முன் கோபுர வாயிற் படிக்கு “அவாவர சூழ்ந்தான் வாயில்” எனவும், துவார பாலகர் மண்டபத்திற்கு “வென்று கொண்டான் மண்டபம் ” என்றும் வழங்கி வந்தன.

கோவிலின் வலது பக்கத்தில் ஸ்வாமி புஷ்கரணி கரையில் ஆதி வராகபெருமான் சன்னதி உள்ளது.

திருமலை சன்னதி வீதியில் திருக்கோவிலுக்கு எதிரே தனிக்கோவிலாக ஒரு ஆஞ்சனேயர் சந்நதி உள்ளது. அதற்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர். ஆஞ்சநேயரின் தாயார் அஞ்சனாதேவி இந்த மலையில் இருந்து ஸ்வாமியை தவம் இருந்து வேண்டி பெற்றதினால், இங்குள்ள ஒரு மலைக்கு அஞ்சனாத்ரி என்ற பெயர் உண்டு என்று பார்த்தோம். வைகாசி ஒருமுறை ஆஞ்சநேயர் சூரியனை பிடிப்பதற்காக வானில் பறந்து சென்று வந்தபோது, கவலையுற்ற தாய் அஞ்சனாதேவி, அனுமனை வானம் என்ற சங்கிலியால் இங்கே கட்டி வைத்து எம்பெருமானை விட்டு எப்போதும் அகலக்கூடாது என்று சொன்னதாக வரலாறு. விலங்கிடப்பட்ட ஆஞ்சேநேயர் என்பதால், இவருக்கு ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் என்று பெயர்.

திருமலா திருப்பதி லட்டு மிகவும் பிரசித்தம். திருமலையில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள் விசேஷம். திருமலையில் உற்சவர், ஊஞ்சல் ஊர்வலத்தில் ஆடு மேய்க்கும் கோலத்தில் இருப்பார், மற்ற திருத்தலங்களில் எம்பெருமான் மாடு மேய்க்கும் காட்சியை மட்டுமே காணலாம்.

எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாத அர்சனைகளுக்கும் வில்வ இலை உபயோகப் படுத்தப் படுகிறது.

அலர்மேல்மங்காபுரம்

மூன்றாம் பிரிவு, அலர்மேல்மங்காபுரம் எனப்படும், திருச்சானுர் ஆகும். திருமலை எம்பெருமானின் வலது திருமார்பில் மகாலெட்சுமியும், இடது திருமார்பில் பத்மாவதி தாயாரும் இருக்கின்றனர். பத்மாவதி தாயார் திருச்சானூர் என்னும் அலமேலு மங்காபுரத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். திருமலை வந்தவர்கள் இங்கு பிராட்டியை வழிபட்டுச் சென்றால் தான் திருமலைப் பயணம் பூர்த்தி அடைவதாக ஐதீகம். இங்குள்ள பத்ம ஸரோவரத் தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாகும்.

திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை தாயாரின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள், மது, மாமிசம் உண்ண மாட்டார்கள். வெள்ளிக்கிழமை திருமஞ்சனதிற்கு தேவையான சந்தனம், பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது.குங்குமப்பூவும் சேர்க்கப் படுகிறது. வெளிநாடு வாசனை திரவியங்களும் சேர்க்கப்படும்.

கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதி தாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முகலாய படைகளால் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன, அதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

மேலும் உள்ள தலைப்புகளை அடுத்து வரும் வலைப்பதிவுகளில் காணலாம், நன்றி.

075 திருவேங்கடம் – முதல் பகுதி

ஸ்ரீ பத்மாவதி நாயிகா ஸமேத திருவேங்கடமுடையான் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருவேங்கடம்
மூலவர் திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி,
ஏழுமலையான் திருவேங்கடத்தான்

திருப்பதியில், கோவிந்தராஜன்
உத்சவர் திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன் மலையப்ப சுவாமி
தாயார் அலர்மேல்மங்காபுரத்தில் பத்மாவதி தாயார்
கீழ்திருப்பதியில் புண்டரீகவல்லி தாயார்
திருக்கோலம் திருமலையில், திருப்பதியில் கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 202க்கும் மேல் – ஆழ்வார்கள் என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மங்களாசாசனம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
தீர்த்தம் 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.
திருச்சானூரில்  பத்ம ஸரோவரம்
கோபுரம் ஆனந்த நிலைய விமானம்
ஸ்தல வ்ருக்ஷம் புளியமரம் (சேஷ அம்சம்)

வடநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

திருத்தலம் பற்றி

திருவேங்கடம் எனப்படும் திருப்பதி, ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் பாதையில் உள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த பகுதியில் திருப்பதி வேங்கடாசலபதி கோவில் உள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார், கோவில் கொண்டுள்ள அலர்மேல்மங்காபுரம் என்ற திருப்பதியும், இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவாக சேர்ந்து திருவேங்கடம் என்று அழைக்கப்படுகிறது. கீழ் திருப்பதி, மேல் திருப்பதி என்றும் கூறப்படுகிறது. மேல் திருப்பதி திருமலா என்றும், கீழ் திருப்பதி, திருப்பதி என்றும் சொல்லப்படுகிறது. இந்த திருத்தலம் பற்றி எழுத ஆரம்பித்தால் கிடைக்கின்ற விவரங்கள் ஏராளம் ஏராளம். எல்லாவற்றையும் சொல்லி முடிக்க முடியாது என்ற முகவுரையுடன் இந்த திவ்யதேச அனுபவத்தை கீழ்கண்ட தலைப்புகளில் அடியேன் ஆரம்பிக்கின்றேன்.

  1. திருத்தல பெயர்
  2. திருத்தல பெருமைகள்
  3. சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்
  4. ஆதிவராக பெருமாள்
  5. திருமலை நடைவழி
  6. திருவேங்கடத்தின் ஏழு மலைகள்
  7. திருமலையின் ஐந்து மூர்த்திகள்
  8. திருமலையின் தீர்த்தங்கள்
  9. கீழ் திருப்பதி
  10. திருமலை
  11. அலர்மேல்மங்காபுரம்
  12. திருமலை நிகழ்ச்சிகள்
  13. திருவிழாக்கள்
  14. மற்ற திருக்கோவில்கள்
  15. ஸ்தல வரலாறு
  16. ராமானுஜர் திருமலை விஜயங்கள்
  17. ஆழ்வார்கள்
  18. ஆச்சார்யர்கள்

திருத்தல பெயர்

திருமலை ஏழு மலைகளை கொண்டது. இதனால் இது சப்தகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏழு மலைகளுக்கு மத்தியில் திருவேங்கடமுடையான் எழுந்தருளி இருக்கிறார். கிழக்கு தொடர்ச்சி மலையில் இந்த திருமலை ஆதிசேஷனின் தலைப்பகுதி என்றும் அஹோபிலம் உடம்பு பகுதி என்றும் ஸ்ரீசைலம் என்ற திருத்தலம் வால் பகுதி என்றும் சொல்லப்படுகிறது. சேஷாத்திரி நீலாத்ரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.  இந்த திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியின் காரணமாக ஒரு பெயர் வழங்கி வந்தது. கிருத யுகத்தில்  வ்ருஷபாத்ரி என்றும், திரேதா யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும் துவாபர யுகத்தில் சேஷாத்திரி என்றும் கலியுகத்தில் வேங்கடாத்ரி (வேங்கடாசலம்) என்றும் அழைக்கப்பட்டது.

வேங்கடம் என்றால், வேம் என்றும் கடம் என்றும் பிரித்துப் பார்த்தால், கொடுமையான பாவங்களை எரிக்கவல்ல என்று பொருள் வரும்.  வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற பொருள் கொண்ட இந்த திருத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், வராக புராணம், ஸ்கந்த புராணம், பாத்ம புராணம், போன்ற பத்து புராணங்கள் பேசுகின்றன. வேம் என்பது அழிவின்மை என்றும் கடம் என்பது ஐஸ்வர்யம் என்றும் பொருள் கொண்டால், அழிவில்லாத ஐச்வரியங்களைத் தன்னை அடைந்தவர்களுக்கு தருவதால் வேங்கடம் என பெயர் வந்தது என்று கூறுவாரும் உண்டு.

இந்த எம்பெருமான், ஸ்ரீனிவாசனே, எத்தனையோ பிறவிகளாக தீர்க்க முடியாமல் தொடர்ந்து வரும் பாவங்களைத் தீர்ப்பவன். அதனால் தான் வல்வினைகள் தீர்க்கும் திருமால் என்று குலசேகர ஆழ்வார் கூறுகிறார்.

இராமாயணத்தில் சுக்ரீவன், சீதையை தெற்கு நோக்கி தேடச் சென்ற தன்னுடைய வானரப்படைக்கு வழி சொல்லும் போது, திருவேங்கடம் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. சீதை வெற்றிகரமாக தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினால், சுக்ரீவன், வானரங்களை திருமலைக்குள் செல்ல வேண்டாம் என்றும், சென்றால் அந்த இடத்தின் புனித தன்மை காரணமாக பாவங்கள் களையப்பட்டு உடனே மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்வது திருமலையின் பெருமையை விளக்குகிறது. நன்றி ஸ்வாமிநாதன் சுவாமி. மேலும் இங்கே காண்க.

திருவேங்கடம் என்பது புஷ்ப மண்டபம் ஆகும். சிந்துபூ மகிழ் திருவேங்கடம் என்பது நம்மாழ்வார் வாக்கு,
திருவரங்கத்திற்கு போக மண்டபம் என்றும் காஞ்சிபுரத்திற்கு தியாக மண்டபம் என்பதும் பெயர்.

திருத்தல பெருமைகள்

இன்றைய கலியுகத்தில் உலகப் பிரசித்தி பெற்றதாகத் திகழ்கிறது. கேட்ட வரங்களை எல்லாம் தரும் கலியுக தெய்வம் இந்த வேங்கடத்தான் என்று உறுதியாக வேதங்கள் சொல்கின்றன.

இந்த திருமலையில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும் விருப்பம் கொண்டு வைகுந்தத்தில் இருந்து நேரில் இந்த திருவேங்கட மலைக்கு எழுந்தருளி, கலியுகம் முடியும் வரை பக்தர்களின் குறை தீர்க்க இங்கேயே இருப்பதாகவும், அதன் காரணமாகவே நித்யஸூரிகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், திருமலைக்கு வந்து எம்பெருமானை தினமும் துதிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் திருவேங்கடமும் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

எம்பெருமானே மீண்டும் மீண்டும் இது ஒரு பரம பவித்ரமான (பாவனமான) நாராயண க்ஷேத்திரம் என்பதை இது கருடாத்திரி(கருடன் மலை), இது சேஷாத்ரி(ஆதிசேஷன் மலை), இங்கே தானே அர்ச்சா ரூபத்தில் எழுந்தருளி இருக்கிறேன் என்று பலவாறாக வராக புராணம், வாமன புராணம், வேங்கடதேச மஹாத்ம்யம் பாகவதம் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

Google Map

திருவேங்கடம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தினம் ஒரு திவ்யதேசம் திருவேங்கடத்தை பற்றி சொல்வது

கீழ்க்கண்ட காணொளி மற்றும் படங்களை கொடுத்து உதவிய whatsapp குழு நண்பர்களுக்கு நன்றி

குலசேகர ஆழ்வார் திருமலையில் வாழும் தாவரங்களிலோ, பிராணிகளில் ஒன்றாகவோ, அல்லது அங்கு ஓடும் ஆறு அல்லது ஓடை என்ற ஒன்றாகவோ அல்லது அங்குள்ள ஒரு பொருளாகவோ பிறக்க மாட்டேனா என்று மன்றாடுகிறார். திருமலையில் ஒரு படிக்கல்லாகக் கிடந்து வேங்கடவனைத் தரிசிக்க மாட்டேனா என்று படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனா என்கிறார். இதனால்தான் இந்த எம்பெருமானின் முன் இருக்கும் பொற்படிக்கு குலசேகரப்படி என்றே பெரியோர் பெயரிட்டுள்ளனர். அது மட்டுமல்ல, எல்லா விஷ்ணு கோவில்களிலும் எம்பெருமானுக்கு முன்னே உள்ள படி குலசேகரப்படி என்றே அழைக்கிறார்கள்.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது. இவருயை நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை, அவ்ருக்கு சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் உபரியாக உள்ள நகைகளை அவ்வப்போது விளம்பரப் படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. பாதகவசம்  375  கிலோஉலகில் யாரிடமும் இல்லாத ஒற்றை நீலக்கல், மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் ஆகும். திருமலையில் உள்ள ஓவியங்கள்  300  ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை.

இங்கு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை அளவிட முடியாததாகும். பக்தர்கள் கொடுக்கும் முடிக் காணிக்கையும் இங்கு நடைபெறுவது போல் உலகில் எங்கும் நடைபெறுவது இல்லை. இங்கு தங்குவதற்கு தர்ம சத்திரங்களும், வாடகைக் சத்திரங்களும் அதிகம் உள்ளன. அன்னதான ததியாரதனங்களும் நடைபெற்று வருகின்றன. இனிக்கும் திருமலா திருப்பதி லட்டு இங்கு போல் வேறெங்கும் தெய்வச் சுவையுடன் அமைந்தது இல்லை.

கலியுகம் முடியும் வரை எம்பெருமான் இங்கேயே இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து பாவங்களைப் போக்கி நிற்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. குரும்பருத்த நம்பியின் சரித்திரம் ஒரு சிறந்த உதாரணம்.

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண் பாண்டங்கள் செய்து வாழ்ந்தவர். மண்ணினால் சிறு புஷ்பங்கள் செய்து மானசீகமாய் வேங்கடவனுக்குச் சமர்ப்பித்து ஆராதனை செய்து வந்தார். இவரது காலத்தில் வாழ்ந்திருந்த தொண்டை மன்னனும் வேங்கடவன் மேல் பக்தி கொண்டு இருந்தான். இந்த மன்னன் தங்கத்தால் புஷ்பங்கள் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து வந்தான். ஒரு நாள் காலையில் மன்னன் வேங்கடவனைத் தரிசிக்க சன்னதிக்குச் செல்லும் போது தான் சமர்ப்பித்த தங்கப் புஷ்பங்கள் பூமியில் கிடப்பதையும் மண் புஷ்பங்கள் வேங்கடவனின் திருமுடியில் வீற்று இருந்ததையும் கண்டான். இதனை விசாரித்த மன்னன், அது குறும்பறுத்த நம்பிகள் சமர்ப்பிக்கும் புஷ்பங்கள் இவையென்று அறிந்து அவரின் பக்தியின் மேன்மையைக் கேட்டு அவரை மனதார தொழுதான்.

இன்னொரு உதாரணம், ஹாதிராம் பாலாஜி என்னும் வட இந்திய பக்தர். இவர் ஒருமுறை பாலாஜி தரிசனம் முடிந்த பின் தன்னுடைய மடத்தில் தங்கியிருந்த போது, பாலாஜி அவருக்கு முன் காட்சி அளித்தார். பக்தர் எம்பெருமானிடம் தன்னுடன் சொக்கட்டான் ஆட வேண்டும் என்று விண்ணப்பித்தார். எம்பெருமானும் சம்மதித்து ஆடி விட்டு பின் சென்றான். போகும் போது ஒரு மாலையை விட்டுவிட்டு சென்றுவிட, ஹாதிராம் பாலாஜி அதை அடுத்த நாள் கவனித்து, கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க செல்லும் போது, அதற்கு முன்பே எம்பெருமானின் நகை இல்லாதை கவனித்து அதிகாரிகளிடம் தெரிவித்ததால் அதிகாரிகள் பக்தர் ஹாதிராம் இதனை திருடினார் என்று அவர்க்கு தண்டனையாக ஓர் கட்டு கரும்பினை ஒரே இரவில் உண்டு முடிக்க வேண்டும் என்று கட்டளை இட்டனர். ஹாதிராம் பாலாஜி எம்பெருமானை உருக்கமாக வேண்ட, எம்பெருமான் யானை வடிவில் வந்து ஒரு கட்டு கரும்பினை முடித்து பக்தரின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்தார். இந்த ஹாதிராமின் அதிஷ்டானம், (சமாதி) பாபவினாசம் செல்லும் வழியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலின் உள்ளது.

இன்னொரு உதாரணம் அன்னமாச்சார்யா. திருமலை நடைபயணமாக முழங்கால் முறிச்சான் பகுதியில் ஏறி வரும் போது அன்னமய்யா என்று 17 வயது சிறுவன் மயங்கி விழுந்தான். அப்போது, பத்மாவதி தாயார் அவன் முன் தோன்றி அவனுக்கு உணவு தண்ணீர் அளித்து அந்த சிறுவனை ஊக்கப்படுத்தி மறைந்தாள். பின்னாளில் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் என்ற பெயரில் அவர் எம்பெருமான் மேல் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடினார். அந்த அன்னமாச்சார்யாவின் வாழ்க்கை தொடங்கியது முழங்கால் முறிச்சானில் இருந்து தான்.

சில சொற்தொடர்களும் அதன் அர்த்தங்களும்

வென்று மாலை இட்டான் மண்டபம் : வென்று என்பது, சிசுபாலனை வென்று என்று அர்த்தம். மாலை இட்டான் என்பது கிருஷ்ணர் ருக்மணியை மாலை இட்டதை சொல்கிறது. ஆகையால், வென்று மாலையிட்டான் என்பது கிருஷ்ண சர்மா என்று திருநாமத்தை உணர்த்தும். வென்று மாலையிட்டபிரான் என்ற ஒரு வைணவ பிரபு திருமலையில் கட்டிய மண்டபத்திற்கு அவனுடைய கைங்கர்யத்தை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த கிருஷ்ணசர்மா கட்டிய மண்டபத்தை வென்று மாலையிட்டான் மண்டபம் என்று பெயர் வந்தது. ஏனெனில், பலராமனின் சகோதரன், கண்ணன் என்பதால், இராமானுஜ தாசன் என்பதும் கிருஷ்ணனயே குறிக்கும்.

மலை குனிய நின்ற பெருமாள் : மலை என்பது, திருமலை; குனிய என்பதற்கு முழுவதும் என்று அர்த்தம். நின்ற என்பதற்கு நிலையாக நிற்பதை குறிக்கும்.

தேவயாள் சிங்கன் : தேவியான பிராட்டியின் ஆள் என்றும், உபச்சாரக நாச்சியாரின் ஆள் என்றும் பொருள் வரும். சிங்கன் என்ற பக்தர் ஒருவர், முன்பு, திருமலையில், எம்பெருமான் சன்னதிக்கு விறகு விநியோகம் செய்து வந்தார். திருவேங்கடவனும் சிங்கன் தனக்கு விருப்பம் உடையவன் என்பதை உலகம் அறிந்து கொள்ள, அவனது இறுதி சடங்கிற்கு கோவிலில் இருந்து பொருட்கள் செல்ல வேண்டும் என்று கோவில் அர்ச்சகர்கள் மூலம் எம்பெருமான் தெரிவிக்க அன்று முதல் இந்த எம்பெருமான் உகந்த கைங்கர்யத்திற்கு சிங்கன் முறை என்று பெயர் வந்தது.

ஜீயர் : ஸ்வாமிக்கு உகந்தவர். ஸ்ரீ வசன பூஷணம் 237வது சூத்திரத்தில் பிள்ளை லோகாச்சார்யார், மாறனேரி நம்பி விஷயமாக பெரிய நம்பி, உடையவருக்கு அருளி செய்த வார்த்தைகள் என்ற இடத்தில் இராமானுஜர், ஜீயா என்று தன்னுடைய ஆச்சார்யரான பெரிய நம்பியை அழைக்கிறார். இங்கு மோக்ஷத்தை பெறுவதற்கும் பெறாததற்கும் உயர்குல பிறப்பும், இழிகுல பிறப்பும் காரணங்கள் ஆக மாட்டாது என்றும், பகவத் சம்பந்தம் இருப்பதும் இல்லாமையுமே காரணங்கள் என்றும், பகவத் சம்பந்தம் பெற்ற உயர்குலத்தர்களுக்கு, பகவத் சம்பந்தம் பெற்ற மற்ற குலத்தவர்கள் ஒப்பு ஆக மாட்டார்கள் என்பது தவறு என்றும், அந்த உயர்குலத்தவர்களை காட்டிலும் இந்த தாழ்குலத்தவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், இந்த உண்மைகளை உணராமல், இரண்டு தோஷங்களை உடைய பகவத் சம்பந்தம் பெற்ற உயர்குலத்தவர்களுக்கு, அத்தகைய தோஷங்கள், பாகவத சம்பந்தம் மூலம் மட்டுமே நீங்கும் என்பதையும் இந்த ஸ்ரீ வசன பூஷணம் 211 முதல் 223 வரை சூத்திரங்களினால் விளக்குகிறார். இந்த உபதேசம் தன்னுடைய குருவின் வாய் வழியாக வரவேண்டும் என்பதற்காக இராமானுஜர், பெரிய நம்பிகளிடம் இது பற்றி கேட்பதற்கு முன் அவரை ‘ஜீயா ‘என்று அழைத்துள்ளார்.

திருவேங்கமுடையான் பற்றிய மற்ற தலைப்புகளில் உள்ள விஷயங்களை அடுத்த வலைப்பதிவினில் காணலாம். நன்றி.

074 திருஅஹோபிலம் / திருசிங்கவேள்குன்றம்

ஸ்ரீ அமிர்தவல்லி செஞ்சுலட்சுமி தாயார் சமேத லட்சுமிநரசிம்மர் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம் திருஅஹோபிலம் / திரு சிங்கவேள் குன்றம்
மூலவர் ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹர் / ஸ்ரீ ப்ரஹ்லாத வரதன் / அஹோபில நரசிம்மர்
உத்சவர் மாலோல நரசிம்மர் மற்றும் எட்டு நரசிம்மர்கள்
தாயார் ஸ்ரீ செஞ்சு லட்சுமி / ஸ்ரீ அமிர்தவல்லி
திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம்
திருமுகமண்டலம் கிழக்கு
பாசுரங்கள் 10
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் (10)
தீர்த்தம் பாபநாசினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், கஜதீர்த்தம்,
பார்க்கவ தீர்த்தம்
, காவல தீர்த்தம், இராம லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
கோபுரம் குகை கோபுரம்

வடநாட்டு திவ்யதேசங்களை பார்த்துக்கொண்டு வருகிறோம். அதனைப்பற்றிய ஒரு சிறு குறிப்பினை இங்கே காணலாம். வடநாட்டு திருப்பதிகளில், முதலில் கிழக்கே உள்ள திவ்யதேசங்களான திருஅயோத்தி, நைமிசாரண்யம் தரிசித்துவிட்டு, பின்னர் வடக்கே உள்ள திவ்யதேசங்களான முக்திநாத், பத்ரிநாத், கண்டமென்னும் கடி நகர், ஜோஷிர்மட், வடமதுரை, ஆயர்பாடி சேவை செய்து விட்டு, மேற்கே உள்ள திருதுவாரகையும் பார்த்து உள்ளோம். இன்னும் உள்ள இரண்டு வடநாட்டு திவ்யதேசங்களை சற்று தெற்கே சென்று சேவிப்போம், முதலில் திருசிங்கவேள்குன்றம் எனப்படும், திருஅஹோபிலம்.

Google Map

திருஅஹோபிலம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருத்தலத்தைப்பற்றி

இந்த திருத்தலம்,  சென்னை பம்பாய் ரயில்பாதையில் உள்ள கடப்பா என்னும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 85 கி.மீ. தூரம் உள்ள அர்லகட்டா
என்ற ஊருக்குச் சென்ற பின்னர் நந்தியால் கிராமத்திற்கு அருகே அஹோபிலம் சென்று அடையலாம். இங்குள்ள மலைப்பிராந்தியங்களும், சுற்றிச்சூழ்ந்துள்ள காடுகளும் அடர்ந்து கருமையாக உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த மரங்களை கொண்டு உள்ள கருமையான கருப்பு மலையில் (தெலுங்கில் நல்ல கொண்டா) இந்த நவநரஸிம்ஹ க்ஷேத்திரம் உள்ளது. ஆதி சேஷனே இந்த கிழக்கு தொடர்ச்சி மலை தொடர்; அதன் தலை பாகமே திருமலை; அதன் வால் பாகம் ஸ்ரீசைலம்; அதன் முதுகு அல்லது உடல் பாகமே இந்த அஹோபில க்ஷேத்திரம் என்று கூறுவார்கள். மூன்று நாட்கள் இங்கு தங்கி இருந்து, நவ நரசிம்மர்களையும், ஸ்தம்ப நரசிம்மரையும் நன்றாக சேவித்து விட்டு திரும்பலாம். பாவன நரசிம்மரை சேவிக்க ஒரு அரை நாள் ஆகும். ஸ்தம்ப நரசிம்மரை சேவிக்க தனியாக ஒரு நாளும், அங்கு பழக்கப்பட்ட வழித்துணை ஆள் ஒருவரும் வேண்டும்.

இங்கு மலையடிவாரத்தில் கீழ் அஹோபிலம் என்று ஒரு கோவிலும், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மலையின் மேல் சுமார் 3000 அடி உயரத்தில் ஒரு கோவிலுமாக இரண்டு கோவில்கள் உண்டு. மலை மேல் உள்ள கோவிலில் தான்  ப்ரஹ்லாதன், கருடனுக்கு காட்சி அளித்ததாகவும் இங்கு தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகவும் கூறுவர்.

எம்பெருமான் புஷ்கரம் என்ற புண்ணிய க்ஷேத்திரத்தில், தீர்த்த ரூபியாக இருக்கிறான். எம்பெருமான் நைமிசாரண்யம் என்ற திவ்யதேசத்தில் ஆரண்ய ரூபியாக இருக்கிறான். எம்பெருமான் திருவேங்கடத்தில் பர்வத ரூபியாக இருக்கிறான். அஹோபிலம் என்ற இந்த திவ்யதேசம், காடு, மலை, ஆறு மற்றும் அருவிகளை உள்ளடக்கியது. அதனால், அஹோபிலம் சென்று நரசிம்மனை தரிசித்தாலே, மேலே சொன்ன மூன்று திருத்தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

நரம் கலந்த சிங்கத்தை விட உயர்ந்த தெய்வம் கிடையாது என்பார்கள்; பாவநாசினி தீர்த்தத்தை விட உயர்ந்த தீர்த்தம் கிடையாது என்பார்கள்; கருடாசல மலையை விட உயர்ந்த மலை கிடையாது என்பார்கள்; அஹோபிலத்தில் உறைகின்ற நரசிம்மனிடம் பக்தி செலுத்துபவர்களை விட உயர்ந்த யோகி கிடையாது என்பார்கள்; அஹோபிலம் அடைந்து, பாவநாசினி தீர்த்தத்தை பார்த்தால் கூட பல கோடி பிறவிகளில் செய்த பாவங்கள் தீர்ந்து போகும் என்பார்கள்.

அஹோபில மஹாத்மியம் என்ற நூலில், பித்ருக்களின் ப்ரீத்தி கிடைக்க, கயா செல்ல வேண்டும் என்றும், இந்த உடல் நற்கதி அடைய கங்கை செல்ல வேண்டும் என்றும், மந்திரோபதேசம் பெற காசி செல்ல வேண்டும் என்று சொல்வதுடன், இவை அனைத்தையும் அஹோபிலத்தில் 100 மடங்கு எளிதாக பெறலாம் என்று சொல்கிறது.

பிலம் என்றால் குகை அஹோ என்றால் சிம்மம் ஆதலால் வடமொழியில் அஹோபிலம் என்று பெயர் வந்தது. இதேயே சிங்கவேள் என்று தமிழில் குறிப்பிட்டு மலையும் சேர்த்து,
சிங்கவேள்குன்றம் என்று ஆயிற்று. எம்பெருமானே வேட்கையுடன் வந்து தங்கி நரமும் சிங்கமும் கலந்து வந்து உறையும் மலையை சார்ந்த இடம் ஆதலால் இது சிங்கவேள் குன்றம் ஆகியது என்றும் சொல்வர். ப்ரஹ்லாதன் மற்றும் பல தேவர்களின் வேட்கைக்கும் விருப்பிற்கும் ஏற்றவாறு எம்பெருமான் உறைந்தஇடம் ஆதலால் இது சிங்கவேள்குன்றம் என்றும் சொல்வர். எம்பெருமான் மிகுந்த வலிமையுடன் திரு அவதாரம் எடுத்து இரணியனை வதைத்ததால், ‘ஆஹா, என்ன பலம் என்ன பலம்’ என்று தேவர்கள் போற்றியதால், அஹாபலம் என்று சொல்வாரும் உண்டு. ‘சிங்கவேழ்குன்றம்’ என்று கூறி, யாவராலும் விரும்பப்படுகின்ற கட்டழகுடையவரான எம்பெருமான் எழுந்தருளி இருக்கின்ற ஏழு குன்றங்களை உடைய நரசிம்ம திருத்தலம் என்றும் பொருள் கூறுவார் உண்டு.  

இங்கு மலையின்மேல் பாவநாசினி என்னும் நீர்வீழ்ச்சி உள்ளது. இதன் கரைவழியே மேலே சென்றால் வராஹ நரசிம்மன் சன்னதியைச் சேவிக்கலாம். இங்கிருந்து மேலும் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரம் சென்றால் மாலோல நரசிம்ம க்ஷேத்திரம் உள்ளது. இங்கிருந்து மேலும் இரண்டு மைல் தொலைவு சென்றால் நரசிம்ம அவதாரம் எடுத்த, ஸ்ரீ நரசிம்மன் தூணில் இருந்து வெளிப்பட்ட ஸ்தம்பம் உள்ளது. இது ஸ்தம்ப நரசிம்மர் என்று கூறுவார். இங்கு செல்வது மிகவும் கடினம், தகுந்த துணையுடன் செல்ல வேண்டும். . பொதுவாகவே இங்கு மலை மேல் உள்ள எல்லா நரசிம்மர்களையும் நடந்து சென்று சேவிப்பது என்பது மிகவும் கடுமையான, கரடுமுரடான பாதைகள் மட்டுமின்றி செங்குத்தாக மலைமேல் ஏறுவது மட்டுமின்றி காட்டு மிருகங்கள் நடமாடக் கூடிய பகுதிகளும் உண்டு. இங்கு சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற காட்டு விலங்குகள் பார்க்கப்பட்டு உள்ளன.

நரசிம்ம ரூபத்தின் அர்ச்சா மூர்த்திகளான ஒன்பது மூர்த்திகளில் எட்டு உற்சவ
மூர்த்திகள் இந்தக் கோவிலில் உள்ளனர். மாலோல நரசிம்மருக்கான உற்சவமூர்த்தி மட்டும் தனியாக உள்ளார். சுயம்புவான இந்த உற்சவர் சக்கரவர்த்தி திருமகனாக (ஸ்ரீ ராமபிரானாக) சேவை சாதிக்கிறார்.

நவநரசிம்மர்கள்

இங்கு மலையடிவாரத்திலும், மலையின் மேலுமாகமொத்தம் ஒன்பது நரசிம்மர் கோவில்கள்/சன்னதிகள் உள்ளன. எனவே இதனை நவநரசிம்ம க்ஷேத்திரம் என்றும் வழங்குவர்.

  • அஹோபில நரசிம்மன்
  • வராஹ நரசிம்மன்
  • பாவந நரசிம்மன்
  • காரஞ்ச நரசிம்மன்     
  • சத்ரவட நரசிம்மன்
  • பார்கவ நரசிம்மன்
  • ஜ்வாலா நரசிம்மன்
  • மாலோல நரசிம்மன்
  • யோகாநந்த நரசிம்மன்

இதனைத் தவிர ஸ்தம்ப நரசிம்மர், எட்டு உத்சவர்களை உள்ளடக்கிய கீழ் அஹோபிலத்தில் உள்ள அஹோபில மடத்தை சேர்ந்த கோவிலும் உள்ளன.

நரசிம்மர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

1. அஹோபில நரசிம்மன்

இந்த உக்ர நரசிம்மர் மலைமேல் உள்ள முக்கியமான கோவில். கருடனின் கடும் தவத்தினை மெச்சி இரணியனை மடியில் போட்டுகொண்டு வதம் செய்யும் கோலத்தில் சக்ராசனத்தில் சத்திய ஸ்வரூபனாக மலை குகையில் நெருப்பின் உக்கிரத்தோடு சுயம்புவாக தோன்றிய எம்பெருமான். எதிரே கருடன். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சீதா ராம பரமேஸ்வர லிங்கம், நரசிம்ம சுதர்சன சக்ரம் மற்றும் செஞ்சு லட்சுமியை இந்த கோவிலில் சேவிக்கலாம். சுக்கிர தோஷத்தினால் ஏற்படும் கஷ்டங்களை களைகிறார்.

2. வராக நரசிம்மன் / க்ரோட நரசிம்மன்

க்ரோட என்றால், கோரைப்பல்; இவர் வராஹ நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகிறார். ஹிரண்யனின் சகோதரன், ஹிரண்யாட்சன் பூமாதேவியை பாதாளத்தில் ஒளித்து வைத்தபோது, பிராட்டியை வராக உருவில், தன்னுடைய கோரைப்பற்களில் ஏந்தியவாறு காப்பாற்றி, சரம ஸ்லோகத்தை உபதேசித்த கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கூடவே லட்சுமி நரசிம்மரும் சேவை சாதிக்கிறார். குருவினால் ஏற்படும் சிரமங்களை வராஹ நரசிம்மன் களைகிறார்.

3. பாவன நரசிம்மர்

நம்முடைய பாவங்களை களைந்து இந்த சம்சார சூழலில் இருந்து காப்பற்றுபவர். மாலோலநரஸிம்ஹர் போலவே செஞ்சுலக்ஷ்மியுடன் சேர்ந்து சேவை சாதிக்கிறார். செஞ்சு இனத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக ஒரு உயர்ந்த மலையில் காட்சி அளிக்கிறார். வேடர் குல வழக்கம் போல் சனிக்கிழமை தோறும் செஞ்சு லக்ஷ்மிக்கு மாமிசம் படைத்து வழிபட அதனை எம்பெருமானும் ஏற்று அருள் பாலிக்கிறார். பாவன நரசிம்மர் இராகுவால் ஏற்படும் பாபங்களை களைகிறார்.

4. காரஞ்ச நரசிம்மர்

அனுமன் செய்த தவத்தின் பலனாக இந்த நல்ல கொண்டா மலையில் புங்க மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றிய நரசிம்மர். அனுமனின் வேண்டுகோளின் பேரில் நரசிம்மராக இல்லாமல், வில் அம்பு ஏந்தி இராமபிரானாகவே காட்சி கொடுத்த கராஞ்ச நரசிம்மர். ஆதிசேஷன் குடை தாங்க வைகுண்ட நாதனாகவும் காட்சி அளிக்கிறார். இராவண வதத்திற்கு அனுமனை மெச்சி, எம்பெருமான் அனுமனை தழுவியதால், அனுமனின் கைகளில் சங்கு சக்கரம் காண முடிகிறது. கேதுவினால் ஏற்படும் தோஷங்களை கராஞ்ச நரசிம்மர் போக்குகிறார்.

5. ஸ்ரீ சத்ர வட நரசிம்மர்

சத்ரம் என்றால் குடை; வடம் என்றால் ஆலமரம். ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் ஆனந்தமாக அமர்ந்து இரண்டு கந்தர்வர்களின் இனிமையான சங்கீதத்தை செவி மடுத்து சேவை சாதிக்கும் இந்த சத்ர வட நரசிம்மர். கந்தர்வர்கள் எம்பெருமானின் கோபத்தை தணிப்பதற்காக சங்கீதம் பாடுவதாக ஐதீகம். பத்மாசனத்தில் அமர்ந்து கந்தர்வர்களின் இசைக்கு ஏற்ப இடது தொடையில் தாளம் போட்டு கொண்டும், சங்கு சக்கரங்களை தரித்துக்கொண்டும், வலது கீழ் கரம் அபய முத்திரையுடன் அற்புதமாக சேவை சாதிக்கின்றார். அவரது சிரிப்பு நம்மை வா என்று அருகே அழைக்கும் வண்ணம் உள்ளது. ஒன்பது மூர்த்திகளின் பெரிய மூர்த்தி இவரே. சூரியனால் ஏற்படும் தோஷங்களை போக்குகிறார்.

6. பார்கவ நரசிம்மர்

பார்கவ முனிவர் என்பவர் எம்பெருமானை நரசிம்மராக தரிசிக்க வேண்டும் என்று விரும்பி தவம் இயற்றியதால் பார்கவ நரசிம்மர், கீழ் அஹோபிலத்தில் ஒரு சிறிய குன்றல் தோன்றினார். பார்கவ புஷ்கரணி குன்றின் அடிவாரத்தில் உள்ளது. இரணியனை வதம் செய்யும் காட்சியாக, அவனை மடியில் கிடத்தி, குடலை உருவி மாலையாக போடும் உக்கிர நரசிம்மராக காட்சி அளிக்கிறார். ஹிரண்யன் கையில் வாளுடன் இருக்கிறான். அருகில் பக்தியுடன் ப்ரஹ்லாதன் எம்பெருமானின் கருணையை வியந்து காண்பது தெரிகிறது. தசாவதார காட்சிகளையும் இந்த சந்நிதியில் காணலாம். சந்திரனால் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து இந்த பார்கவ நரசிம்மர் தீர்வு தருகிறார்.

7. ஜ்வாலா நரசிம்மர்

எங்கு இருக்கிறன் உன் நாராயணன் என்று ஹிரண்யன் கேட்டவுடன், பதிலாக தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று பிரஹலாதன் சொன்னவுடன், கோபத்தின் உச்சியில் தன்னுடைய கதையினால் அரண்மனையின் ஒரு தூணினை தாக்க அதில் இருந்து, சிங்க முகமும், மனித உடலும் கொண்டு, வஜ்ர நகங்களுடன், தோன்றிய கோலமே ஜ்வாலா நரசிம்மர் ஆவார். தற்பொழுது வேதகிரியில் உக்கிர ஸ்தம்பத்தின் கீழ் ஒரு குகையில் உள்ள சன்னதியில் சேவை சாதிக்கிறார். எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இரண்டு திருக்கரங்களால் இரணியனை மடியில் கிடத்தி நன்றாக இரண்டு பக்கமும் பிடித்து கொள்கிறார்; அடுத்த இரண்டு கரங்களால் அவனுடைய மார்பினை கீறி அவன் நெஞ்சினுள்ளே ஈரத்தை தேடியதை சொல்கிறார் ; இன்னும் இரண்டு திருக்கரங்களால் அவனுடைய குடலினை உருவி தன்னுடைய கழுத்தினில் மாலையாக அணிந்து கொள்கிறார்; மேலும் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார்.

உக்ரம் வீரம் மகா விஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் |

என்ற ஸ்லோகத்தின் படி உக்ரராகவும், வீரராகவும், மஹா விஷ்ணுவாகவும், ஜுவாலா நரசிம்மராகவும் சேவை சாதிக்கிறார். இவருக்கு ஸ்ரீ மஹா மிருத்யுஞ்ஜயர் என்ற திருநாமமும் உண்டு. அசுர குரு சுக்ராச்சாரியரும், மஹாவிஷ்ணுவும் உடன் சேவை சாதிக்கிறார்கள்.

குகைக்கு அருகில் பாறைகளின் இடுக்கில் அமைந்து உள்ள, இரணியன் வதம் செய்த பின் எம்பெருமான் திருக்கரங்களை கழுவிக்கொண்ட ‘இரத்த குண்டம் உள்ளது. இந்த நீர் இன்னும் சிவப்பாகவே உள்ளது. அதனை எடுத்து தலையில் தெளித்து கொண்டால் பித்ரு தோஷம் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதன் அருகில் தான் ஸ்தம்ப நரசிம்மர் மலை உள்ளது. கீழ் இருந்தே மலையை தரிசிக்கலாம்.

இவர் சனி பகவானின் தொல்லைகளில் இருந்து காக்கிறார்.

8. மாலோல நரசிம்மர்

மா என்றால் பிராட்டி, லோல என்றால் ஆசை, மஹாலக்ஷ்மியின் மீது தீராத காதல் கொண்டவர் என்பது இதன் பொருள். எம்பெருமானின் இடது தொடையில், சுகாசனத்தில் அமர்ந்து ஆனந்தமாக சேவை சாதிக்கிறார். ஹிரண்ய வதத்திற்கு பிறகு, எம்பெருமானின் கோபத்தை தணிக்க தேவர்களின் வேண்டுகோளின் பேரில் வந்த மஹாலக்ஷ்மியை ஆனந்தமாக சேர்த்து காட்சி தரும் கோலம். அஹோபில மடத்தின் திருவாராதன மூர்த்தி இவரே. செவ்வாயினால் ஏற்படும் எல்லா தோஷங்களையும் போக்கி மாலோல நரசிம்மர் அருள் புரிகிறார்.

9. யோகானந்த நரசிம்மர்

பிரகலாதனுக்கு குருவாக இருந்து யோக நெறி கற்பித்த நரசிம்மர் இவர். ஆதிசேஷன் மேல் கால்களை மடக்கி யோக கோலத்தில் யோக முத்திரையில் சேவை சாதிக்கிறார். ஹிரண்ய வதம் முடிந்த பின்னர், நரசிம்மர் பிரகலாதனுக்கு சில யோக முத்திரைகள் கற்று தருவதாக சொல்லப்படுகிறது. அதன் ஒரு நிலையே இந்த யோகானந்த நரசிம்மர். தெற்கு திசை நோக்கி, மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, கீழ் இரண்டு திருக்கரங்களால் யோக முத்திரை காட்டி அமர்ந்திருக்கும் திருக்கோலம். புதன் கிரகத்தாள் ஏற்படும சகல பாவங்களையும் தோஷங்களையும் தீர்க்க அருள் பாலிக்கும் இந்த யோகானந்த நரசிம்மர். ராமர் சன்னதியும் யோகநரசிம்மர் சன்னதியும் அருகில் உள்ளது. ஒரு அன்னதான மண்டபமும் உள்ளது.

இந்த நவ நரசிம்மர் தவிர, கீழ் அஹோபிலத்தில் ப்ரஹ்லாத வரதன், சாந்த நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. மூன்று பிரகாரங்கள், புஷ்கரணி, துவஜஸ்தம்பம் என்று விரிவாக அமைந்துள்ளது.

இதனை தவிர பிரஹலாதன் படித்த பள்ளி, அவர் எழுதிய மந்திரங்களையும் காணலாம் என்று சொல்லப் படுகிறது.

திருவிழாக்கள்

மாசி மாத ப்ரம்மோத்ஸவம், மற்றும் நரசிம்ம ஜெயந்தி இக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள். மேலும், பாவனவார உத்சவம், ஆனி ஸ்வாதி கருட சேவை, புரட்டாசி மாத ஸ்ரீமத் ஆதி வண் சடகோபன், ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருநட்சத்திர உத்சவம், திருவாடிப்பூரம், ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி இராமானுஜர் திருநட்சத்திரம் என்று இவை சிறப்பாக கொண்டாப்படுகிறது. மாதாமாதம் ஸ்வாதி திருமஞ்சனம் இங்கு இன்னொரு சிறப்பு.

ஸ்தல வரலாறு

பிரம்மாண்ட புராணம், பாகவத புராணம், மற்றும் விஷ்ணு புராணம் இவற்றில் அகோபிலத்தை பற்றிய தகவல்கள் உள்ளன.

படைக்கும் தொழிலை நடத்தி வருவரான பிரம்மா, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிள்ளை. ஹிரண்யகசிபு, தன்னை யாரும் அழித்து விடக்கூடாது என்பதற்காக, பிரம்மாவைக் குறித்து, கடுமையாக தவம் புரிந்தார்.  ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் இருந்து கீழ்கண்ட வரங்களை பெற்றார்.   இரவிலோ அல்லது பகலிலோ, மனிதனலோ அல்லது மிருகதாலோ, ஆயுதம் கொண்டோ அல்லது ஆயுதம் இல்லாமலோ, வீட்டின் உள்ளேயோ அல்லது வீட்டிற்கு வெளியிலேயோ, பிரம்மாவோ அல்லது அவரால் படைக்கப் பட்டவர்கள் மூலமாகவோ, ஆகாயத்திலேயோ அல்லது பூமியிலேயோ, உயிர் உள்ளதாலேயோ அல்லது உயிர் அற்றதாலேயோ, தான் இறக்கக்கூடாது என்று ஹிரண்யகசிபு வரம் வேண்டி பெற்றுக் கொண்டான்.     

ஹிரண்யகசிபு  இப்படி வரங்களைப் பெற்ற பின் அவன் மக்களை மிகவும் கொடுமைப் படுத்தினான்.  கடவுளை வணங்குவதற்கு பதில் தன்னையே வணங்கவேண்டும் என்றும் பிரகடனம் செய்தான். ஆனால் ஹிரண்யகசிபுவின் மகனான ப்ரஹ்லாதன் தன் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப் படவில்லை. அவன் ஸ்ரீ விஷ்ணுவை வணங்கவேண்டும் என்று நல்வழி காட்டினான்.   இதனால் கோபம் கொண்ட ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனுக்கு பல கஷ்டங்களை கொடுத்து அவனை கொல்லவும் முயற்சிகள் செய்தான்.  ஆனால் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒவ்வொரு முறையும் பிரகலாதனைக் காப்பாற்றினார்.   இதனால் மிகவும் கோபமடைந்த ஹிரண்யகசிபு  ஒரு நாள் மாலைப் பொழுது ஸ்ரீவிஷ்ணு எங்கு உள்ளார் என்று உரக்கக் கேட்டான்.  ப்ரஹ்லாதன், “எம்பெருமான் எங்கும் வியாபித்து உள்ளார், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்,” என்றார். கம்பன் சொல்வது போல்,  “நீ கேட்கும் சொல்லிலும் அவன் உறைகிறான்”, என்று ப்ரஹ்லாதன் சொல்கிறார். அங்குள்ள ஒரு தூணைக் காட்டி அதில் விஷ்ணு உள்ளானா என்றான்.  அதற்கு ஆம் என்று பிரகலாதன்  சொல்ல ஹிரண்யகசிபு அந்த தூணை உதைக்க அதில் இருந்து ஸ்ரீ விஷ்ணு, மனித உடம்புடனும் சிங்கத் தலையுடனும், பகலும் இரவும் இல்லாத மாலை நேர பிரதோஷ காலத்தில், நரசிம்மமாக வெளிப்பட்டார்.   அவர் ஹிரண்யகசிபுவை, தூக்கிக்கொண்டு வாசல் படியில், தான் அமர்ந்து கொண்டு, தன் மடியில் அவனை கிடத்தி, தன்னுடைய கூரிய நகங்களால் அவனை கிழித்துக் கொன்று ப்ரஹ்லாதனின் பக்தியை உலகுக்கு காட்டிய அவதாரம் இந்த நரசிம்ம அவதாரம்.  

ப்ரஹ்லாதனுக்கு கருணை வடிவும், ஹிரண்யகசிபுவிற்கு உக்கிர வடிவும் ஒரே சமயத்தில் காட்டிய திருஅவதாரம் இது. அதே போல் மகாலட்சுமிக்கு மலர் பீடமும் அதே சமயம் பலி பீடமாகிய தன மடியையும் கொடுத்த திருஅவதாரம்.

ஹிரண்யனை வதம் செய்வதற்கு முன், அவனது மார்பினை தனது நகங்களால் துழாவி, அங்கு சிறிது ஈரமாவது இருக்கிறதா என்று பார்த்து, அது இல்லை என்று தெரிந்ததும் அவனை வதம் செய்தார் என்று எம்பெருமானின் கருணையை காட்டும் திருஅவதாரம்.

தன்னிடம் அபராதம் செய்தால் கூடப் பகவான் பொறுத்துக்கொள்வான்; தன் பக்தர்களுக்கு அபராதம் செய்தால், பொறுத்துக்கொள்ள மாட்டான் என்பதைக் காட்டும் திருவவதாரம்.

பல ஆண்டுகளைக் கொண்ட ராம(10,000 மேற்பட்ட வருடங்கள்), கிருஷ்ண (சுமார் 120 க்கும் மேற்பட்ட வருடங்கள்) அவதாரங்களைப் போல் இன்றி நரசிம்ம அவதாரம் இந்த பூவுலகில் இருந்தது மிகச் சிறிய காலமே. துணினை அடித்த கைகளை, பிடித்தவன் இந்த நரசிம்மன்தோன்றிய உடனேயே அவதரித்ததன், பலனை அளித்து, தான் ஒரு விரைவு அவதாரம் என்று நிலை நாட்டினார்.

மற்ற எல்லா அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரமே மிக அழகு என்பது ஆழ்வார்களுக்கும் மற்றும் நம் பெரியவர்களுக்கும் உள்ள கருத்து. அதனாலேயே அவரை அழகிய சிங்கர் என்று குறிப்பிட்டு உள்ளனர். நான்முகன் திருவந்தாதி என்னும் பிரபந்தத்தின், 21 மற்றும் 22 பாசுரங்களில், நரசிம்ம அவதாரத்தின் அழகினை, ஆழ்வார் விவரிக்கிறார். தன்னுடைய பக்தர்களுக்கு விரோதம் இழைக்கும் எதிரிகளிடம் அவர் காட்டும் சீற்றம் எவ்வளவு அற்புதமானது என்ற அவதார பெருமையை விளக்குகிறார். எம்பெருமானின் தெளிவான தோற்றத்தைக் காட்டிலும் அவரது சீற்றமே பக்தர்களுக்கு சிறந்தது என்பதை சொல்லும் 21வது பாசுரம். நெருப்பை உமிழும் பெரிய வாய், உருண்டு, சிவந்து ஜொலிக்கின்ற கண்கள், மற்றும் அக்னி போன்று பொங்கும் திருமேனி என்பவை ஆழ்வாரின் சொல்லும் நரசிம்மனின் அழகு. அந்த சிந்தனையிலே தொடர்ந்து, ஆழ்வார், “அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று அடுத்த பாசுரத்தில் பன்னெடுங்காலமாக நம்மை காத்து வரும் அவனின் திருவடிகளை நாடுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.

இங்கு நரசிம்மன் வேடுவனாக வந்து லட்சுமி தேவியை மணந்ததாக ஐதீஹம். அதாவது கருடனுக்கு காட்சி கொடுக்க எம்பெருமான் வைகுண்டத்தை விட்டு வந்ததும், பிராட்டியும் இந்த திருத்தலம் வந்து வேடுவர் குலமகளாய் அவதாரம் செய்தார். லட்சுமி தேவி இங்கு செஞ்சுலட்சுமி என்ற பெயரில் வளர்ந்து வர எம்பெருமான் வேடனாக வந்து திருமணம் புரிந்தார். வைகுண்டத்தை விட்டு, இங்கு வந்து பிராட்டியும் அவதரித்ததை முன்னிட்டு
செஞ்சுலட்சுமியைத் திருமணம் செய்யும் வரை இங்கேயே தங்கி விட்டதாக ஐதீகம். எம்பெருமான் இங்கு வேடர்களுடன் வேடராய் ஆகிவிட்டதை “கனைந்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்” என்று திருமங்கைஆழ்வார் பெரிய திருமொழியில் (1.7.8) சொல்கிறார்.

எம்பெருமான் நரசிம்ம திருஅவதாரம் எடுத்த போது, கருடன் மேல் வராததால், நித்ய சூரியான, கருடனுக்கு எம்பெருமானின் நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க வேண்டும்
என்ற ஆவல் உண்டாக அந்த திருஅவதாரத்தை தரிசிக்க, இந்த மலைகள் அடங்கிய
காட்டுப் பகுதியில் வந்து கடும் தவம் இருந்து வர, கருடனின் தவத்தை மெச்சிய
எம்பெருமான், இந்த அஹோபிலம் மலையில் மீண்டும் நரசிம்ம அவதாரத்தை செய்து காட்டினார். தூணிலிருந்து வெளிப்பட்டது. இரணியனைப் பிடித்து, கூர்நகங்களால் குடலை வகிண்டு எடுத்து. ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது. மஹாலக்ஷ்மி மற்றும் பிரகலாதனின் வேண்டுகோள்களுக்கு இசைந்து சாந்த நரசிம்மனாக அமர்ந்தது, போன்ற நரசிம்ம அவதாரத்தின் ஒன்பது தத்துவங்களை அர்ச்சா ரூபமாக ஒன்பது திருக் கோலங்களில் காட்டி கொடுத்ததாக ஐதீகம். கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாசலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயருண்டு.

சீதா தேவியைத் தேடிவரும் போது இராமபிரானும் இலக்குவனும் இந்த திருத்தலத்திற்கு வந்து நரசிம்மனை ஐந்து ஸ்லோகங்களால் அர்ச்சித்து, வெற்றிப்பாதையில் சென்றதாக வரலாறு. இப்பெருமானைத் துதித்தவுடன் சீதை கிடைத்துவிட்டதாகவே ஸ்ரீ ராமபிரான் எண்ணிச் சென்றார்.

திருவேங்கடம் ஸ்ரீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார் திருக்கல்யாணத்தின் போது தயாரிக்கப்பட்ட உணவினை அஹோபில நரஸிம்ஹர்க்கே திருவாராதனம் செய்யப்பட்டது.

ஆதிசங்கரர் இந்த மலைக்கு விஜயம் செய்தபோது சிலர், அவரைக் கொலை செய்ய முயன்றபோது ஸ்ரீநரசிம்மப் பெருமாளே அவரைக் காப்பாற்றினார் என்பதோர் வரலாறும் உண்டு.

அழகிய சிங்கர் என்ற பெயரில் இங்குள்ள நரசிம்மனைச் சேவிக்க ஒரு 17 வயது இளைஞர் வந்தார். அப்போது எம்பெருமானே ஒரு சந்நியாசி ரூபத்தில் வந்து, அவருக்கு காட்சி கொடுத்து, மந்திர உபதேசம் செய்து, அவரைத் துறவறத்தில் சேர்த்து, இங்குள்ள ராமானுஜர் சன்னதியில் இருந்து துறவு ஆடையினையும், திரி தண்டத்தையும் கொடுத்து, ஸ்ரீ சடகோப ஜீயர் என்ற திருநாமத்தையும் இட்டு ஒரு வைணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளியதாக ஐதீஹம். எம்பெருமானால் ஜீயர் சுவாமிகளுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத்திற்கு பிரேக்ஷ மந்திரம் என்று பெயர். தான் எந்த உற்சவ மூர்த்தியை வைத்துக் கொண்டு திருவாராதனத்தில் ஈடுபடுவது என்று ஜீயர் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமான் இங்குள்ள உற்சவ மூர்த்தியான மாலோல நரசிம்மனை ஜீயரின் கரங்களில் ஒப்படைத்தார். அன்று முதல் தொடர்ந்து வரும் அனைத்து ஜீயர்களும் இந்த மூர்த்தியைத் தான் தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் எழுந்தருளப் பண்ணி, ஆராதனை செய்து வருகின்றார்கள். ஸ்ரீரங்கம் கோபுரத்தை கட்டி முடித்த அழகிய சிங்கர் ஜீயர் திருவரங்கம் வந்த போது இந்த திருவாராதனப் பெருமாள் திருவரங்கம் வந்து விட்டார்.

அஹோபில மடத்தின் 6வது பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீஷஷ்ட பராங்குச யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் இங்குள்ள மலை மேல் உள்ள நரசிம்மன் சன்னதியில் (அகோபில நரசிம்மர்) ஒரு குகையினுள் சென்று இன்னும் தியானத்தில் இருப்பதாக ஐதீகம். தற்போது இந்தக் குகை மூடப்பட்டுள்ளது. அங்கு அந்த ஜீயர் சுவாமிகள் சிரஞ்சீவியாய் வாழ்ந்து
கொண்டிருக்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

நரசிம்மரை நரசிங்கம், சிங்கப்பிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆளரி என்று பலவாறாக ஆழ்வார்கள் பாடி உள்ளனர். (மதுரகவி ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், குலசேகர ஆழ்வார் தவிர, மற்ற ஆழ்வார்கள்) பல ஆழ்வார்களாலும் இந்த திருஅவதாரம் பாடப்பட்டுள்ளது. அதனை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

மற்ற எல்லா அவதாரங்களைக் காட்டிலும் நரசிம்ம அவதாரமே மிக அழகு என்பது ஆழ்வார்களுக்கும் மற்றும் நம் பெரியவர்களுக்கும் உள்ள கருத்து. அதனாலேயே அவரை அழகிய சிங்கர் என்று குறிப்பிட்டு உள்ளனர். நான்முகன் திருவந்தாதி என்ற இந்த பிரபந்தத்தின், 21 மற்றும் 22 பாசுரங்களில், நரசிம்ம அவதாரத்தின் அழகினை, ஆழ்வார் விவரிக்கிறார். தன்னுடைய பக்தர்களுக்கு விரோதம் இழைக்கும் எதிரிகளிடம் அவர் காட்டும் சீற்றம் எவ்வளவு அற்புதமானது என்ற அவதார பெருமையை விளக்குகிறார். எம்பெருமானின் தெளிவான தோற்றத்தைக் காட்டிலும் அவரது சீற்றமே பக்தர்களுக்கு சிறந்தது என்பதை சொல்லும் 21வது பாசுரம். நெருப்பை உமிழும் பெரிய வாய், உருண்டு, சிவந்து ஜொலிக்கின்ற கண்கள், மற்றும் அக்னி போன்று பொங்கும் திருமேனி என்பவை ஆழ்வாரின் சொல்லும் நரசிம்மனின் அழகு. அந்த சிந்தனையிலே தொடர்ந்து, ஆழ்வார், “அழகியான் தானே, அரி உருவம் தானே “(நான்முகன் திருவந்தாதி 22) என்று அடுத்த பாசுரத்தில் பன்னெடுங்காலமாக நம்மை காத்து வரும் அவனின் திருவடிகளை நாடுங்கள் என்று உபதேசம் செய்கிறார். (இது நரசிம்ஹற்காகவே இங்கே சொல்லப்பட்டது, மற்றபடி இந்த பாசுரங்கள் அஹோபிலம் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் கொள்வது இல்லை).

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி – 1.7

திருமங்கையாழ்வாரால் 10 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம். சென்று சேவிப்பது கடினமாக இருப்பதை திருமங்கையாழ்வார் தமது பாடல்களில், சென்று காண்டற்கரிய கோவில் சிங்கவேள் குன்றமே என்றும் “தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே” என்றும், “திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே” என்றும் “தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே” என்றும் அஹோபிலத்தை தரிசிக்க செல்ல இருக்கும் பக்தர்களுக்குள்ள சிரமங்களையும் பகவானின் பெருமைகளையும் திருமங்கையாழ்வார் சேர்த்து சேர்த்து எடுத்து சொல்கிறார். இன்று அஹோபில மட ஜீயர்கள் மற்றும் நிர்வாகத்தின் விடா முயற்சிகள் காரணமாக அஹோபிலம் சென்று தரிசிக்க எளிமை ஆகி உள்ளது.

அங்கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆளரியாய் அவுணன், பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதனிடம், பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச் செங்கண் ஆளியிட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றமே. (1)

பிரஹலாதன், எங்குமுளன் கண்ணன் என்று சத்யம் செய்த போது, ஹிரண்யன், இங்கே இல்லை, என்று சொன்ன இடத்திலேயே, அனைவரும் பயப்படும்படியான நரசிங்க மூர்த்தியாய் எம்பெருமான் வெளிப்பட்டு ஹிரண்யனின் உடலை கூர்மையான நகங்களினால் இரு பிளவாக பிளந்த பரம புனிதனான எம்பெருமான் இருக்கும் இடம், பசுமையான யானைகளின் தந்தங்களை எடுத்து வந்து பக்தியினால் சிவந்த கண்களை உடைய சிங்கங்கள், எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்து வணங்கும் அஹோபிலம் என்ற சிங்கவேள்குன்றம் என்ற திவ்யதேசம் என்கிறார்.

தன்னுடைய பக்தனான ப்ரஹ்லாதனுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்க முடியாததால் எம்பெருமான் அளவற்ற சீற்றம் கொண்டு பயங்கரமான ஒரு திருவுருவத்தை எடுத்தான். அந்த சீற்றம் இரணியனின் மேல் மாட்டும் இருந்தாலும், அது அளவற்ற நிலையில் இருந்ததால், இந்த உலகமே அஞ்சும்படி இருந்தது என்கிறார்.  

போழ்ந்த புனிதன் என்று சொன்னது, தன் பக்தனான ப்ரஹ்லாதனை காக்க ஒரு தேவதையை ஏவிவிடாமல், தானே நேராக வந்து தோன்றி, தன் திருக்கரங்களால் காரியம் செய்தது இங்கு புனிதம் ஆயிற்று.

யதந்நஃ புருஷோ பவதி ததந்நாஸ்தஸ்ய தேவதாஃ৷৷2.103.15৷৷” (இராமாயணம், அயோத்தியா காண்டம்) – எந்தெந்த உயிர்களுக்கு எது எது ஆஹாரமோ, அந்தந்த உயிர்கள், அந்த ஆஹாரத்தைக் கொண்டு, தம் தேவதைகளை ஆராதிக்கும் என்பது சாஸ்திரம் ஆகையால், யானைகளை கொன்று அவற்றின் அவயவங்களை ஆஹாரமாக உடைய சிங்கங்களும் யானைத் தந்தங்களைக் கொண்டு திருஆராதனம் செய்கின்றன.
அஹோபிலம், சிங்கம் யானை முதலிய காட்டு விலங்குகள் திரியுமிடம் என்கிறார். அவ்விடத்து மிருகங்களும் பகவத் பக்தி கொண்டு இருந்தன என்கிறார். சிங்கங்கள் யானைகளைக் கொன்று அவற்றின் தந்தங்களைப் பிடுங்கிக் கொண்டு வந்து எம்பெருமான் திருவடிகளிலே ஸமர்ப்பித்து வணங்குகின்றன என்கிறார்.

வலிமை மிக்க சிங்கம், ஆனைகளின் மேலே சீற்றம் மாறாமல் இருக்கும் போதே, இராமானுஜரை போல் பகவத் பக்தி, ஒரு குறையும் இன்றி இருக்கும் என்கிறார்.

அலைத்த பேழ் வாய் வாள் ஏயிறு ஓர் கோளரியாய், அவுணன் கொலைக் கையாளன் நெஞசு இடந்த கூர் உகிராளனிடம், மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வல் துடி வாய் கடுப்ப, சிலைக்கை வேடர்த் தெழிப்பு அறாத சிங்கவேள் குன்றமே. (2)

கோபத்தினால், கடைவாயுடன் நாக்கினை ஏற்றிக்கொள்ளுகிற பெரிய வாயை உடைய நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி, மனிதர்களை துன்புறுத்துவதையே தொழிலாக கொண்ட இரணியனுடைய மார்பைப் பிளந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
தீர்த்த யாத்திரையாக வரும் மனிதர்களிடம் அவ்விடத்து வேடர்கள் பெரும் சண்டை செய்யும் போது வேடர்களின் பறை சப்தமும், வில்லோசையும் இடை விடாது ஒலிக்கும் சிங்கவேள்குன்றம் என்கிறார்.

ஏய்ந்த பேழ்வாய் வாள் எயிறு ஓர் கோளரியாய், அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம், ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால், தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேள் குன்றமே.  (3)

தன்னுடைய வடிவினுக்கு தகுதியாக, பெரிய வாயையும், ஒளி பொருந்திய வாள் போன்ற கோரப் பற்களையும் உடைய நரசிங்கமாகத் தோன்றி இரணியனுடைய பெரிய உடலை பிளந்த எம்பெருமான் உறையுமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.

ஆனை குதிரை சிங்கம் புலி முதலிய மிருகங்கள் இங்குமங்கும் ஓடி அலைந்து ஓய்ந்து நிற்க, உடைந்து கிடக்கும் கற்பாறைகளுடன், மூங்கில்கள் நெருப்புப் பற்றி எரிந்து குறைக் கொள்ளிகளாய் இருக்கும் இடம் இந்த சிங்கவேள்குன்றம்  என்கிறார்.

அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்” என்ற படி எம்பெருமானுடைய சரித்திரம் எதுவாக இருந்தாலும் அவை ஆழ்வார்களுடைய நெஞ்சைக் கவர்வது போல், அந்த எம்பெருமான் உகந்தருளின நிலங்களில் உள்ளவை எதுவாக இருந்தாலும் அவை தக்கவை’ என்கிற காரணத்தினால், எல்லாம் ஆழ்வாருக்கு உகந்ததே.

எவ்வம் வெம்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை வவ்வி, ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த எம்மானது இடம், கவ்வு நாயும் கழுகும் உச்சிப் போதொடு கால் சுழன்று, தெய்வமல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (4)

கையும் வேலுமாக இருக்கிற இருப்பைக் கண்ட காட்சியிலே, எல்லாரையும் துக்கப் படுத்த வல்லவனான இரணியனுடைய உயிரைக் கவர்ந்து அவனது மார்பைப் பிளந்து அருளின எம்பெருமான் உறையும் இடமாவது சிங்கவேள்குன்றம் என்கிறார்.
வேற்று மனிதரைக் கண்ட உடன் வந்து தொடைகளிலே கவ்விக் கடிக்கின்ற நாய்களும், அப்படி கடிக்கப் பட்டு மாண்டு ஓழிந்த பிணங்களைக் கவ்வுகின்ற கழுகுகளும் அங்கு மிகுதியாக இருக்கும். செடி மரம் என்று ஒன்றும் இல்லாததால் நிழல் என்பது பார்க்க முடியாது. உச்சி வேளையில் எப்படி வெய்யில் காயுமோ, அப்படி காய்கின்றது; சுழல் காற்றுகள் சுழன்று கொண்டே இருக்கும். இப்படிபட்ட திருத்தலத்திற்கு சாதாரண மனிதர்கள் செல்வது மிக அரிது. மிக்க சக்தி வாய்ந்த தேவதைகளே அங்குச் செல்ல முடியும் என்ற அளவிற்கு கடினமான திருத்தலம் என்கிறார்.
தாம் சென்று சேவிக்க ஆசைப்படுகிற திருத்தலத்தை, ஆழ்வார் ‘தெய்வமல்லால் செல்ல வொண்ணா‘ என்று பாடலாமா என்று கேட்டுக் கொண்டு, அதற்கான விளக்கத்தையும் சொல்கிறார். விஷ்ணுபக்தி பரோ தேவ என்ற படி, விஷ்ணுபக்தி இல்லாதவர்களுக்கு செல்ல வொண்ணாதது என்கிறார். ஆழ்வார் போன்று ஆசை படுபவர்களுக்கு “சீதா பவஹநுமத‘ என்பது போல், அந்த நிலவெப்பமே குளிர்ச்சியை கொடுக்குமாம்.

மென்ற பேழ் வாய் வாள் எயிறு ஓர் கோளரியாய், அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதனிடம், நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு உரிய, சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள் குன்றமே. (5)

மிகுந்த கோபத்தினால், பற்களுக்கு இடையே நாக்கை சுழற்றி கொண்டே இருக்கிற பெரிய வாயையும், ஒளி விடுகிற கோர பற்களையும் எயிற்றையும் உடைய நரசிங்கமாய்த் தோன்றி, பார்த்தவுடன் இரணியன் உயிர் போகும்படியான தோற்றத்துடன், அவனது மார்பினை பிளந்த எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார். 

தொடர்ந்து நின்று எரிகின்ற சிவந்த தீயை, சுழல் காற்றானது முகந்து கொண்டு ஆகாயம் மீது வீசி ஏறிவதனால், அது ஆகாயம் முழுவதும் பரந்து, ஜுவலித்துக் கொண்டு இருப்பதால், அந்த தீயின் வெப்பமும் ஒளியும் சேர்ந்து, சென்று காண்பதற்கு அரிதாக உள்ள திருத்தலம் இந்த கோவில் என்கிறார். இதனால் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிக்கு கண் எச்சில் படாது, ஹிரண்யன் போன்றவர்கள் வந்து எம்பெருமானுக்கு தொல்லை கொடுக்கா மாட்டார்கள் என்று பல்லாண்டு பாடுகிறார்.

அகோபில மடத்தின் ஜீயர் ஸ்வாமிகளின் தொடர்ந்த அயராத முயற்சிகளால், இப்பொழுது சென்று காண்டற்கு எளியதான திவ்யதேசம் ஆக மாறி உள்ளது.

எரிந்த பைங்கண் இலங்கு பேழ் வாய், எயிற்றோடு இது எவ்வுருவு என்று, இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மான் இடம், நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறி வாய் உழுவை, திரிந்த வானைச் சுவடு பார்க்கும் சிங்கவேள் குன்றமே.(6)

கோபத்தினால், தீயின் ஜுவாலையைப் போல் சிவந்த ஒளிவிடும் கண்களையும் பெரிய வாயையும் கோரப்பற்களையும் கண்டு, “அப்பப்பா ! இதென்ன உருவம் !” என்று பயப்பட்டு தேவர்கள்கூட அங்கும் இங்கும் கால் தடுமாறி சிதறி ஓடும்படியான நரசிங்க உருவம் கொண்டு எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
யானைகளை அடித்துத் தின்பதற்காக, அவை உலாவின இட அடையாளங்களை தேடி, மூங்கில் புதர்களில் இருந்து வந்து திரிகின்ற புலிகள் நிறைந்த திருத்தலம் இது என்கிறார்.

முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும், அனைத்தும் அஞ்ச வாளரியாய் இருந்த அம்மான் இடம், கனைத்த தீயும் கல்லும் அல்லா வில்லுடை வேடருமாய், தினைத் தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள் குன்றமே. (7)

நரசிங்க மூர்த்தி இரணியன் மீது கொண்ட கோபம் அளவில்லாமல் இருந்ததனால், அந்தக் கோபத் தீ, மேல்உலகம் வரையில் போய்ப் பரவி எங்கும் வெப்பம் உண்டாக்கவே, இப்போது எல்லா உலகங்களும் அழிய போகும் சமயம் நெருங்கி விட்டது என்று மூவுலகத்தில் உள்ளவர்களும் அஞ்சி நடுங்கும் படியாக உக்ர நரஸிம்ஹன் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார்.
எரிகிற போது உண்டாகும் படபட என்ற ஓசையை உடைய நெருப்பும், அந்த நெருப்பிலே ஒரு வைக்கோல் போர் போலே வேகும் கற்களும், இவற்றைக் காட்டிலும் கொடியவர்களான வேடர்கள் வேலும் கையுமாக திரிவதும் அஹோபிலத்தில் நிறைந்து இருப்பதனால் ஒரு நொடிப் பொழுதும் சென்று அடைய முடியாத திருத்தலம் என்கிறார்.

நாத் தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த அங்கே ஓர் ஆளரியாய் இருந்த அம்மானது இடம், காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல் அதர் வேய்ங் கழை போய், தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள் குன்றமே. (8)

நான்முகக் கடவுளாகிய பிரமனும், சிவனும் முறை வழுவாது துதிக்கும் நர சிங்க உருவம் கொண்டு எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம் சிங்கவேள் குன்றம் என்கிறார். சில இடங்களில், காய்கள், காய்த்துத் தொங்குகின்ற வாகை மரங்களின் உலர்ந்த பழங்கள், காற்றடித்துக் கலகல என்று ஒலிக்கும், சில இடங்களில் ஆகாயம் வரை ஓங்கி வளர்ந்து இருக்கின்ற மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பற்றி எரிந்து விண்ணுலகத்தையும் சிவப்பாக மாற்றும் சிங்கவேள்குன்றம் ஆகும் என்கிறார்.
ஈசனுமாய் என்றதால் இதற்கு முன்பு ஹிரண்யனுக்கு பயந்து மனித வேஷம் கொண்டு திரிந்தார்கள் என்றும் இப்போது முறையாக துதிக்கிறார்கள் என்கிறார்.
பாலை நிலத்தில் விண் சிவக்கும்படி இருக்கும் அக்னிக்கு அஞ்சி, காட்டில் உள்ள வாகை மரங்கள் தங்களின் உலர்ந்த பழங்கள் மூலம் துதிப்பது போல், நரசிம்மத்தின் சீற்றத்திற்கு அஞ்சி, அது மாற, ப்ரம்மா சிவன் வந்து முறையாக துதிப்பது உள்ளது என்கிறார். என்றது
அகவாய் அடங்க இவர்களின் சோஸ்திரமும் புறவாய் அடங்க உலர்ந்த பழங்களின் சப்தமும் என்று உரையாசிரியர் சொல்வார். அகவாய் என்றது உள்ளிருக்கும் நரசிம்மத்தையும் புறவாய் என்றது வெளியில் இருக்கும் மூங்கில்களையும் சொல்வது.

நல்லை நெஞ்சே. நாந்தொழுதும் நம்முடை நம் பெருமான், அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன் இடம், நெல்லி மல்கிக் கல் உடைப்பப் புல்லிலை ஆர்த்து, அதர் வாய்ச் சில்லி சில்லென்று ஒல் அறாத சிங்கவேள் குன்றமே. (9)

பெரியதிருமொழி (1.6.9) ல், ‘தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே!” என்று பெரிய பிராட்டியாரை முன்னிட்டுச் சரணாகதி செய்தது போலவே இத்திருமொழியிலும் ஒன்பதாம் பாட்டில் “அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன்” என்று திருமகள் ஸம்பந்தத்தை முன்னிட்டு அநுபவிக்கிறார்.

கீழ்ப்பாட்டுகளில் இந்த திவ்யதேசம் செல்வது எவ்வளவு கடினமானது என்று சொன்ன ஆழ்வார், அது பகவத் விரோதிகளுக்கே தவிர, இங்கு வருவதற்கு ஆசையுடன் உகந்து இருக்கும் அடியவர்களுக்கு இல்லை என்று இந்த பாட்டில் நெஞ்சிற்கு சொல்கிறார். பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு நாம் அஞ்சாமல் சிங்கவேள் குன்றத்திலே சென்று தொழுவோம் என்கிறார் . தாமரைப்பூவினை இருப்பிடமாக கொண்ட பிராட்டியோடே அணைந்து இருப்பதனாலே, நரசிங்க மூர்த்தியின் கோபத்தீக்கு நாம் அஞ்ச வேண்டியது இல்லை என்றும், அவன் நம்முடைய நம் பெருமான் ஆகையால், அந்த திவ்யதேசத்தில் இருக்கும் கஷ்டங்களுக்கும் நாம் அஞ்ச வேண்டியது இல்லை என்றும் சொல்லி, நம்பெருமான் என்றாலே போதுமாயிருக்க “நம்முடை நம்பெருமான்” என்றது அடியவர்கள் இடத்தில் அவன் மிகவும் ப்ரியமுடன் இருக்கின்றதை காட்டுகிறது.
அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந்தோளன் என்றதால், பிராட் டியை அணைக்கும் போது எம்பெருமானுக்கு ஆனந்த மிகுதியினால் தழுவுதற்கு உதவியாக, தோள்கள் ஆயிரம் முகமாக வளர்கின்றதை சொல்கிறது. இதையே பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சார்யாரும் “இவளை அணைத்தால் இவளைக் கட்டிக்கொள்ள ஆயிரம் தோள் உண்டாயிற்று” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக்கு கைம்மாறாத், தோள்களை ஆரத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன்” (திருவாய்மொழி, 8.1.10), என்று ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணியதால் உண்டான ஆனந்தத்தால் “தோள்கள் ஆயிரத்தாய், முடிகள் ஆயிரத்தாய், துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய், தாள்கள் ஆயிரத்தாய், பேர்கள் ஆயிரத்தாய்” என்று சொன்னால், பிராட்டியின் சேர்த்தியினால் உண்டாகக் கூடிய உடல் பூரிப்பினை சொல்ல வேண்டுமோ என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.

நெல்கி மல்கி என்று சொல்வது, நெல்லி மரங்கள், மலையின் கற்களின் நடுவே முளைத்து கற்களை உடைக்கும் அளவுக்கு வளர்கிறது என்றும், நெல்லி மரங்களில் உள்ள நெல்லிக்காய்கள் உயர்ந்த கிளைகளில் இருந்து கீழே விழுந்து கற்கள் உடைகின்றன என்றும் இரண்டு விதமாக பொருள் கூறுவார்கள்.

பனை ஓலை ஓசையும், சிலிக்கா என்ற சுவர்க்கோழியின் ஓசையும் கேட்டுக் கொண்டு இருக்கும் சிங்கவேள்குன்றம் என்கிறார்.

செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்க வேள் குன்றுடைய, எங்கள் ஈசன் எம்பிரானை இருந் தமிழ்நூல் புலவன், மங்கையாளன் மன்னு தொல்சீர் வண்டறை தார்க் கலியன், செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர்த் தீதிலரே (10)

வீரலக்ஷ்மி விளங்கும் கண்களை உடைய சிங்கங்கள், யானை தந்தங்கள் முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பித்து வணங்கும் இடமான சிங்கவேள் குன்றத்திலே எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமான் விஷயமாகத் திருமங்கை மன்னன் அருளிச் செய்த சொல் மாலையை ஓத வல்லவர்கள் தீங்கின்றி வாழ்வார்கள் என்று இத்திருமொழி கற்றவர்களுக்கு பலன் சொல்லி முடிக்கிறார்.

மீண்டும் இன்னொரு திவ்யதேச அனுபவத்தில் இணைவோம், நன்றி.

073 திருத்துவாரகை

ஸ்ரீ கல்யாணநாச்சியார் சமேத கல்யாணநாராயணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருத்துவாரகை
மூலவர்கல்யாணநாராயண பெருமாள் துவாரகாதீசன் – துவாரகாநாத்ஜீ
உத்ஸவர்
தாயார் கல்யாண நாச்சியார் / லக்ஷ்மிஸ்ரீ / ருக்மணி தேவி / அஷ்ட மகிஷிகள்
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் – 5
ஆண்டாள் – 4
திருமங்கை ஆழ்வார் – 2
திருமழிசையாழ்வார் – 1
நம்மாழ்வார் -1
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

திருத்தலம் பற்றி

குஜராத் மாநிலத்தில், ஜாம்நகரில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் துவாரகை உள்ளது. மேற்கு சௌராஷ்டிராக் கடலோரம் அமைந்துள்ள ஒகா துறைமுகத்திற்கு அருகில், கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. கோமதி நதி சுமார் ஐந்து மைல் தூரமே ஓடும் சிறிய நதி. இந்த திருத்தலத்தை பாடாத, சொல்லாத வடநாட்டுப் புராணங்களே இல்லை என்று சொல்லலாம்.

அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு முக்தி தரும் க்ஷேத்திரங்களுக்குள் இதுவும் ஒன்று. கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு இங்கிருந்து மோட்சம் கொடுப்பதால் மோட்சத்திற்கு துவாரமாக இந்த ஸ்தலம் கருதப் படுவதால் இது துவாரகை என்று அழைக்கப் படுகிறது.

திருத்துவாரகைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

Google Map

திருத்துவாரகை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஸ்ரீகிருஷ்ணன் ஆட்சி செய்த தலம். ‘அடியேனின் அடியவர்களைக் காக்கிற ஊர் இது’ என ஸ்ரீகிருஷ்ணனால் கொண்டாடப்பட்ட திவ்யதேசம். துவாரகையின் பெருமையால், புழு, பட்சி, மிருகங்கள், பாம்புகள் போன்ற ஜந்துக்கள்கூட, ஆசையிருப்பின் ஒரு நாள் முக்தி அடையும் என்றும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு முக்தி உண்டு என்றும், துவாரகையில் வசிப்பவரைப் பார்ப்பதாலும் தொடுவதாலும் கூட மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அனைத்தும் பாவங்களிலிருந்து விடுபட்டு, மோக்ஷத்தை அடையும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு, பாவிகளுக்குக்கூட முக்தியைத் தரவல்லது என்கிறது ஸ்கந்தபுராணம்.

Nava Dwaraka – Thanks to google map நவ துவாரகா google க்கு நன்றி

நவ துவாரகா மற்றும் பஞ்ச துவாரகா

பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.

இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது.  

துவாரகாவில் எங்களின் திருத்தாயார்

துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். பஞ்ச துவாரகை தரிசனம் என்பது நெடுங்காலத்து வழக்கம் அல்ல. எனினும், கிருஷ்ண அனுபவத்தின் பெருமையினால், துவாரகைக்கு நிகரான பெருமைகள் கொண்ட இன்னும் சில கிருஷ்ண ஸ்தலங்களை சேர்த்து ‘பஞ்ச துவாரகைகள்’ என்றும், நவ துவாரகா என்றும் நம் முன்னோர்கள் கொண்டாடுகிறார்கள்.

கோமதி துவாரகா

With Kannan anna
Nice art work at the temple

துவாரகையை துவாரவதி என்றும் கோமதி துவாரகா என்றும் அழைப்பார்கள். துவாரகை, மகாபாரதத்தில், யது குலத்தின் ஒரு பிரிவான  விருஷ்ணிகள் ஆண்ட ஆனர்த்த இராச்சியத்தின் தலைநகராக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டதாகும். புராணங்களில் குறிப்பிட்ட துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. இங்குள்ள கோவிலை துவாரகா நாத்ஜி ஆலயம் என்று அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாகக் கட்டப்பட்டதாகும். இப்போதுள்ள கோவில் கண்ணனின் வழிவந்தவர்களில் ஒருவரான வஜ்ரநாபி கட்டியது என்றும் ருக்மணி தேவி பூஜித்த மூர்த்தி என்றும் சொல்கிறார்கள். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றங்களாலும் பிற இன்னல்களாலும் இந்த கோவில் பாதிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

இங்குள்ள ஸ்ரீகண்ணன் கோவில் மிகப் பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கே பல படிகள் (56) ஏறித் தான் கண்ணனை தரிசிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணன் 56 கோடி யாதவர்களை இங்கே கொண்டு வந்து தங்க வைத்தான், அதனால் 56 படிகள் என்று சொல்வார்கள்.

இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான். மேலும் எந்த குறையும் இல்லாமல் தன் மகனுக்கு எல்லா சீர்களும் நடைபெறுகின்றதா என்று அன்னை கவனித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை.

இத்தலத்தின் ஸ்ரீ கிருஷ்ணன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகா நாதன், துவாராகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் கருப்பு நிறத்தில் சிரசில் கொண்டையுடன் அற்புதமாக காட்சியளிக்கிறார். தாயார் கல்யாண நாச்சியார் (இலக்குமி) ருக்மணி, அஷ்டமகிஷிகள் (எட்டு பட்டத்தது அரசிகள்). இத்தலத் தீர்த்தம் கோமதி நதி.விமானம் ஹேம கூட விமானம் என்னும் அமைப்பைச் சேர்ந்தது.

temple view
கோமதி ஆறு கடலில் சேரும் இடம்

இங்கே ஆஹாரப்ரியன் க்ருஷ்ணனுக்கு கண்டருளச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள். காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.

இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,

துவாரகநாத்ஜீ பிரதான கோவிலின் மேல் உள்ள கொடிகம்பம் தனித்துவமானது, மற்றும் புனிதமானது. இது 52 கெஜம் துணியால் ஆனது. ஒவ்வொரு நாளும் இந்த கொடி கோபுரத்தின் மேல் ஏற்றப்படுகிறது. ஒவ்வொரு முற்றத்திலும் 52 சிறிய கொடிகள் தனித்தனியாக நெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முற்றமும் பண்டைய நகரமான துவாரகாவின் நுழைவாயில்களைக் குறிக்கிறது. சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்ட இக்கோவிலின் கொடி ஒருநாளில் ஐந்து முறை ஏற்றப்படுகிறது என்றும் மூன்று முறை ஏற்றப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறன. அடியேன் ஒருமுறை ஏற்றும் போது பார்த்து உள்ளேன். வாயிலில் இருக்கும் பலராமன் சன்னதியில் சமர்ப்பித்து அனுமதி பெற்று கொடி ஏற்றப்படுகிறது. இந்த 52 கெஜ கோடி, 10 கிலோமீட்டர் தூரம் வரை தெரிகிறது என்பார்கள். 27 நக்ஷத்திரம், 12 ராசி, 9 கிரகங்கள் 4 திசைகள் – இவற்றின் கூட்டுத்தொகை 52. இதுவே கொடியின் நீளத்திற்கான காரணம்.

இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி. இந்த ஸ்தலம் உலக பாரம்பர்ய ஸ்தலம் என்று அறிவிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

கோகுலாஷ்டமி, தீபாவளி, குஜராத் புத்தாண்டு, ஹோலி, மட்கோபாட் என்ற உறியடி திருநாள் ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகின்றன. கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.

காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.

இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள். சாளக்ராமத்திற்கு உள்ள பலன்கள் இதற்கும் உண்டு என்று சொல்கிறார்கள். இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா  மகாலட்சுமியின்  அம்சம்,  சாளக்கிராமத்துடன் துவாரகசிலாவையும் சேர்த்து வழிபடுவது மிகச்சிறப்பானது என்றும், இவ்வாறு வழிபடுவது கோடிக்கணக்கான பலன்களை தரும் என்பதும் இந்துக்களின் நீண்ட நாள் நம்பிக்கை.

ருக்மணி துவாரகா

துவாரகையிலிருந்து ஒகா துறைமுகத்திற்குச் செல்லும் வழியில் சுமார் 4 KM தூரத்தில் ருக்மணி தேவி கோவில் உள்ளது. இந்த ருக்மணி தேவியின் சன்னதியில் தான் ஸ்ரீகிருஷ்ணன் ருக்மணி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப் படுகிறது.

ருக்மணி தேவிக்கு ஊருக்கு வெளியே தனியாக கோவில் உள்ளது. துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையிலிருந்து வெளியேறி ருக்மணி சில காலம் இந்த இடத்தில் தனித்து வாழ்ந்ததால் இங்கு தனிக்கோவில். ருக்மணி ஊருக்கு வெளியே இருந்தாலும் ராஜ களை ஜொலிக்க சிரித்த முகத்துடன் வீற்றிருக்கிறாள். இது ருக்மணி துவாரகா என்று கூறப்படுகிறது.

Rukmani Devi Temple = a separate temple in Dwarka

பேட் துவாரகா

இங்கு கடலுக்குள் தற்போதும் ஒரு துவாரகை உள்ளது. இதனை பேட் துவாரகை என்று பெயர். இது ஒரு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்பர். இங்குள்ள மக்கள் இதனை பேட்துவாரகா என்று அழைக்கின்றனர். மகாபாரதத்தில், இந்த இடம் ‘அந்தர்த்வீபா’ அல்லது ‘சங்கிதர்’ என்று குறிப்பிடப்படுகிறது. துவாரகாவில் இருந்து ஒகா துறைமுகம் (சுமார் 33 கிலோ மீட்டர்) வரை சென்று அங்கிருந்து விசைப்படகு மூலம் (சுமார் 2 கிலோமீட்டர்) இத்தலத்தை அடையலாம்.

இங்கு மூலவர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கும் துவாரகா நாத்ஜி என்றே பெயர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினம் தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு ராஜாவைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இதனை நாம் நேரில் நின்று காணலாம். இங்கு பெருமாளின் திருமார்பில் லட்சுமி காட்சி தருகிறாள். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவதி, லட்சுமி நாராயணன், பலராமன் என்று தனித்தனி சன்னதிகள் உண்டு.

With Manni, Kannan in Bhet Dwarka

இங்கு தான் கண்ணனின் குருகுல நண்பனாகிய குசேலர், அவனிடம் உதவி கேட்க நினைத்து பேட்டி கேட்க வந்த இடம், பேட் துவாரகா. ஆனால் கண்ணனின் உபசரிப்பையும் பரிவையும் கண்டு ஒன்றும் கேட்காமலே திரும்ப சென்று விட்டார். இருந்தும், கண்ணன் அவர் கேட்காமலேயே அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பலவித நன்மைகளை செய்தார் என்பது வரலாறு.

சுதாமா துவாரகா

நம்முடைய தேச தந்தை மஹாத்மா காந்தி பிறந்த போர்பந்தர் அருகே குசேலருக்கு என்று ஒரு கோவில் உள்ளது. குசேல பட்டினம் என்று ஒரு பெயரும் உண்டு. இது சுதாமா துவாரகா ஆகும்.

தூய நட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன்-சுதாமா. சுதாமா தான் குசேலர். துவாரகையிலிருந்து சோம்நாத் செல்லும் வழியில் 105 கி.மீ தொலைவில் போர்பந்தர் எனும் சுதாமா துவாரகை அமைந்துள்ளது.  ஊரின் மையமாக சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் நடுவே ஆலயம் அமைந்துள்ளது.

Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar
Kuchelar place in Porbandar
Kannan anna explaining to Ravi in Sudama Temple, Porbandar

ஒரே   ஒரு மண்டபம், அழகிய தூண்களுடன்  பிரம்மாண்டமான இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையும் தரிசிக்கலாம்.

முக்தி துவாரகா

Sri Krishna side view
Somnath

ஸ்ரீகிருஷ்ணர் யோக நித்திரையில் இருந்து அம்பினால் அடி பட்ட இடத்தின் பெயர் விராவல்.  அந்த ஆலமரம் இன்றும் உள்ளது,  நன்றாகப் பாராமரிக்கப்பட்டு வருகின்றது. அதனடியில் ஸ்ரீகிருஷ்ணர் சங்கு சக்ர கதாதாரியாக, ஒரு காலை மற்றொரு காலின் மேல் வைத்த கோலத்தில் இருக்கிறார். அறியாமல் அம்பு எய்த வேடன் மண்டியிட்டு எம்பெருமானை வணங்குகின்றான். அதனடியில் விஷ்ணு பாதமும் உள்ளது.

பேட்துவாரகையைச் சேவித்துவிட்டு விராவல் என்னும் ரயில் நிலையம் அமைந்துள்ள பிரபாஸ் பதான் (ப்ரபாஸ தீர்த்தம்) என்ற இடத்தில் ஒரு கிருஷ்ணன் ஆலயம் உள்ளது. கிருஷ்ணன் வைகுண்டம் திரும்புவதற்கு முன் இங்குள்ள அரசமரத்தடியில் சயன திருக்கோலத்தில் இருந்ததாக ஐதீஹம். இன்றும் இந்த இடத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை சயன திருக்கோலத்தில் காணலாம். இது முக்தி துவாரகா என்கின்றனர். இதற்கு அருகில் பிரசித்தி பெற்ற சோமநாதர் ஆலயம் உள்ளது.

Kannan Anna in Prabasa Theertham
Krishna in Prabasa Theertham with Hunter apologising

இந்த சமயத்தில் கிருஷ்ணன் பற்றிய சில தகவல்கள் (சுருக்கமாக)

கிருஷ்ணன் திருஅவதாரம் செய்தது இன்றைக்கு (22 Feb 2023) சுமார் 5255 ஆண்டுகளுக்கு முன்னர். ஆவணி மாதம், ரோஹிணி நக்ஷத்திரம், அஷ்டமி திதி, நடுநிசியில் (0:00 hrs). ஸ்ரீ கிருஷ்ணன் இந்த உலகத்தில் 125 ஆண்டுகளும், 8 மாதங்களும் 7 நாட்களும் வாழ்ந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் 89 வயதில் மஹாபாரத போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 36 வருடம் சென்று அவர் பரமபத்திற்கு மீண்டும் எழுந்தருளினார்.

ஸ்ரீ கிருஷ்ணரை, கிருஷ்ணா என்று மதுராவிலும், ஜகன்னாதா என்று ஒரிசாவிலும், விதோபா என்று மஹாராஷ்ட்ராவிலும், ஸ்ரீநாத்ஜீ என்று ராஜஸ்தானிலும், துவாரகாதீஷ் என்றும், ரன்சோடராய் என்றும் குஜராத்திலும், கிருஷ்ணா என்று உடுப்பியிலும், அன்புடன் அழைத்து வணங்குகிறார்கள்.

ஸ்ரீகிருஷ்ணனை பெற்ற தாய் தேவகி, தந்தை வசுதேவர்; வளர்த்த தாய் யசோதா, வளர்த்த தந்தை நந்தகோபன்; பலராமன் அண்ணன், சுபத்ரா சகோதரி, பிறந்த இடம் மதுரா.

கண்ணனின் மனைவிகள், ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ராவிந்தா, நக்நாஜிதி, பாத்ரா, லக்ஷ்மணா.

கிருஷ்ணர் மதுராவிற்கு திரும்பிய பின் நான்கு பேர்களை கொன்று இருக்கிறார்; அவர்கள், சாணூரன் (மதுராவில் கண்ணனுடன் மற்போர் புரிந்தவன்), கம்சன், (கண்ணன் மாமா) சிசுபாலன், தந்தவக்ரன் (இவர்கள் இருவரும் கண்ணனின் உறவினர்கள்). சிறு வயதில் பூதனையில் தொடங்கி, தன்னுடைய தாய் மாமன் கம்சன் அனுப்பிய பல அரக்கர்களை முடித்து உள்ளான்.

ஸ்ரீகிருஷ்ணரின் தாய் உக்ரா குலத்தைச் சேர்ந்தவர், தந்தை யாதவ குலத்தைச் சேர்ந்தவர், இனங்களுக்கு இடையேயான திருமணம். அவர் கருமையான நிறத்துடன் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்தில் அவருடைய உயிருக்கு ஆபத்தான பல சூழ்நிலைகள் கொண்டது.

அவர் தன்னுடைய 14-16 ஆண்டுகள் வரை கோகுலம் மற்றும் பிருந்தாவனத்தில் இருந்தார். பிறகு மதுராவிற்கு சென்று தனது மாமனைக் கொன்று, மாமனால் சிறையில் அடைபட்டு இருந்த தன்னுடைய தாய் மற்றும் தந்தையை விடுவித்தார். இதற்கு பின் அவர் பிருந்தாவனம் திரும்பவே இல்லை; தன்னுடைய வளர்த்த தாய் தந்தை மற்றும் அவனுடன் விளையாடி காலம் கழித்த ஆயர்குல சிறுவர் சிறுமியர்களை சந்திக்கவே இல்லை.

தன்னுடைய குடிமக்களுக்கு காலயவனின் அச்சுறுத்தல் காரணமாக மதுராவிலிருந்து துவாரகாவிற்கு குடிபெயர வேண்டியிருந்தது. கோமந்தக மலையில் (இப்போதைய கோவா) பழங்குடியினரின் உதவியுடன் ‘ஜராசந்தனை’ தோற்கடித்தார்.

16-18 வயதில் பள்ளிப்படிப்பைத் தொடங்க உஜ்ஜயினியில் உள்ள சாந்திபனியின் ஆசிரமத்திற்குச் சென்றார். குசேலர் அங்கு தான் அவருக்கு நண்பர் ஆனார்.

தனது கல்விக்குப் பிறகு, வனவாசத்தில் பாண்டவர்களுக்கு “மெழுகு இல்லத்தில்” ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து காப்பாற்ற வந்தார், பிறகு மஹாபாரதத்தில் திரௌபதிக்கும் பாண்டவர்களுக்கும் துணையாக இருந்த அவரது பங்கு அளப்பற்றது.

யாதவர்களின் கேலி பேச்சினால் தங்களுடைய குலமே அழிவதை கிருஷ்ணர் பார்க்க நேரிட்டது. இறுதியில் ஜரா என்ற வேடன் தவறாக அம்பு எய்ததால் அதையே காரணமாக கொண்டு இந்த திருவவதாரத்தை முடித்துக்கொண்டு பரமபதத்திற்கு திரும்பினார்.

வாழ்நாள் முழுவதும் அவருக்கு சவால்கள் மற்றும் இன்னும் பெரிய சவால்கள் இருந்தன.
அவர் எல்லாவற்றையும் மற்றும் அனைவரையும் பொறுப்புணர்வுடன் எதிர்கொண்டு எல்லாவற்றில் இருந்தும் விலகியே இருந்தார். இதையே அவர் நம் எல்லோருக்கும் பகவத் கீதை என்ற பெரும் விலை மதிப்பிட முடியாத பொக்கிஷத்தில் அளித்தார்.

மீண்டும் துவாரகா பற்றி தொடர்வோம்.

மூல துவாரகா

துவாரகையிலிருந்து 75 கி.மீ தொலைவில் , சுமார் ஒன்றரை மணி நேரத்தில் இருக்கும் விசாவாடா எனும் கிராமத்தில் உள்ள  ஒரு புராதமான ஆலய வளாகத்தை  மூலத் துவாரகை என்றழைக்கின்றனர். மூல துவாரகா என்பது கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம். காலயவனன் ஸ்ரீகிருஷ்ணரை துரத்தி வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் அவனுக்கு சாமர்த்தியமாக வழி காண்பித்த முசுகுந்தன்  குகை அருகில் உள்ளது. மதுராவிலிருந்து துவாரகை செல்லும் வழியில்  முதன் முதலில் ஸ்ரீகிருஷ்ணர் தம் பாதத்தை இவ்விடம் பதித்துத் தங்கினார் என்பது சரித்திரம். விஷ்ணு தன் பாதத்தை இங்கு பதித்ததால் ரண்சோட்ராய் ஜீ சன்னதியில் விஷ்ணு பாதம் உள்ளது. விஷ்ணு பாதம் என்பதே  மருவி விசாவாடா ஆகிவிட்டதாம்.     தற்போதைய முக்கிய துவாரகையான கோமதி துவாரகா ஆலயத்திற்கும் முற்பட்ட ஆலயம் என்பதால் இது மூலத் துவாரகை ஆயிற்று. ஆலய முகப்பில் அலங்கார வளைவு நம்மை வரவேற்கின்றது. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் ரண்சோட்ராய்ஜீ,  நீலகண்டேஸ்வரர் ஆகியோருக்கு முக்கிய சன்னதிகள் உள்ளன. அருகில் மற்றொரு ஆலய வளாகம் உள்ளது. அதில் சிவன், கார்த்திகேயன், தத்தாத்ரேயர் சன்னதிகள் அமைந்துள்ளன.

குஜராத் மாநிலத்தில், குர் ஸோமன்த் மாவட்டத்தில் கோடிநார் என்ற ஊர் அருகில் உள்ள இன்னொரு கிருஷ்ணன் கோவிலையும் மூல துவாரகா என்று சிலர் கூறுகின்றனர். இது ப்ரபாஸ தீர்த்தம் அல்லது முக்தி துவாரகாவில் இருந்து தெற்கில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிருஷ்ணர் துவாரகைக்கு முதலில் காலடி எடுத்து வைத்த இடம் என்பதை தெரிவிக்கும் வகையில் இங்கு ஒரு கல்வெட்டு உள்ளதாக சொல்கிறார்கள். மஹாபாரத நாட்களின் போது இது ஒரு சிறந்த துறைமுகமாக இருந்தது என்று சொல்லப் படுகிறது. இங்கு ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் துவாரகாவிற்கு செல்வதற்கு முன்னால் வாழ்ந்தார்கள். இங்குள்ள கோவில் சிறிது பாழடைந்த நிலையில் உள்ளது. அதில் ஸ்ரீ கிருஷ்ணர், ராதா, ராமர் சீதா ஆகியோரில் விக்ரகங்கள் உள்ளன. கோவில் அருகில் உள்ள கிணற்றில் ஸ்ரீ கிருஷ்ணன் குளித்ததாக மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர் இந்த இடத்தைத் துறந்து பேட் துவாரகாவுக்குச் சென்றதாகத் தெரிகிறது.

காங்கோர்லி துவாரகாதீஷ்

காங்கோர்லி கோயில் அல்லது துவாரகீஷ் என்ற பஞ்ச துவாரகையில் ஒன்றானது ராஜஸ்தானில் உதய்பூருக்கு அருகில் உள்ளது. இது உதய்பூரில் இருந்து 65 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது துவாரகாதீஷ் கோயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது வைணவர்களின் மிக முக்கியமான கோவில். கிருஷ்ணரின் சிவப்புக் கல் சிலை மதுராவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக பலர் நம்புகிறார்கள்.

இத்தலத்தில் எம்பெருமான், வலது  மேல் திருக்கரத்தில் கதை, இடது மேல் திருக்கரத்தில் சக்கரம், வலது கீழ்கரத்தில் பத்மம், இடது கீழ் கரத்தில் சங்கம் ஏந்தி  நின்ற கோலத்தில்  சதுர்புஜ விஷ்ணுவாக சேவை சாதிக்கின்றார்.

நாத் துவாரா / ஸ்ரீநாத் ஜீ

ராஜஸ்தானில் உதய்பூரில் நாத துவாரா என்ற ஸ்ரீநாத்ஜி கோவில் உள்ளது. நாதத்வாரா என்றால் கடவுளின் வாசல் என்று பொருள். இது உதய்பூருக்கு வடகிழக்கில் சுமார் 48 கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீநாத்ஜி அசல் கருப்பு பளிங்கு சிலையினால் ஆன இவர் முதலில் 14ம் நூற்றாண்டில் சுயம்புவாக கோவர்தனில் தோன்றினார். பின்னர் முகலாயர்கள் படையெடுப்பின் போது இவரைப் பாதுகாத்து, அங்கிருந்து ஸ்ரீநாத்ஜீ இந்த ஸ்தலத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து, இக்கிராமத்தில் கோவில் அமைத்தனர். ஸ்ரீநாத்ஜீ கோவில் கொண்டதால் பின்னர் இவ்வூர்  நாத்துவார் என்று அழைக்கப்படலானது.

எம்பெருமான் ஸ்ரீநாத்ஜி, ‘கோவர்த்தன’ மலையை தூக்கியபோது, இருந்த கிருஷ்ணரின் ஒரு வடிவத்தை அடையாளப் படுத்துகிறார். கோவர்த்தன கிரிதாரியாக, நின்ற கோலத்தில் இத்தலத்தில் ஸ்ரீகிருஷ்ணர்  சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீநாத்ஜீ இடது திருக்கரத்தால் கோவர்த்தனகிரியைத் தாங்கி வலக்கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்துக் கொண்ட அற்புதக் கோலம். பக்த மீராபாயை ஆகர்ஷித்த கோலம். மாயக்கண்ணனின்  கண்கள் இத்தலத்தில் விரிந்து பரந்தனவாக இல்லாமல் பாதி மூடிய நிலையில் கீழ் நோக்கிய பார்வையாக தனி அழகுடன் அமைந்திருக்கும். .

காய்கறிகள் வெட்டுதல், கோவில்களை துடைத்தல், மாலைகள் கட்டுதல் மற்றும் விறகு சுமந்து செல்வது என பல சேவைகளை இங்கு பக்தர்கள் செய்கிறார்கள். கோயில்களின் பணியாளர்கள் அரசர்கள் மற்றும் ராணிகளின் காலத்து ஆடைகளை அணிந்து கிருஷ்ணரை பிரியமான இளவரசராக சேவிப்பார்கள். இதனாலேயே இந்த ஆலயம் ‘ஹவேலி’ அதாவது பணக்கார வணிகர்களின் பெரிய மாளிகைகள் என்று பொருள்படும். அனைத்து வாசல்களிலும் யானைகள், குதிரைகள், கன்னிகள் மற்றும் பல அழகான பெரிய ஓவியங்கள் உள்ளன. நுணுக்கமான மர வேலைப்பாடுகள் மற்றும் கட்டிடக்கலை அழகுடன் கூடிய அற்புதமான ஆலயம் மற்றும் இறைவன் தனது அனைத்து மகிமையிலும் நிற்கிறார். கேரளாவில் இருக்கும் குருவாயூரப்பன் போல் உள்ளார்.

இவருக்கு தினமும் எட்டு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. அப்போது மட்டுமே பக்தர்கள் இவரை தரிசிக்க முடியும், மற்ற சமயங்களில் திரை போடப்படுகிறது. கிருஷ்ணரைக் காண எப்போதும் கோபியர்கள் யசோதையின் வாயிலில் காத்துக் கிடப்பதால், தனது செல்லப்பிள்ளை உரிய சமயத்தில் உணவு உட்கொள்ளவும், சிறுவர்களுடன் விளையாடவும், தோழர்கள் பின் செல்லவும், கோபியர்களுடன் இராசலீலை ஆடவும் யசோதை அன்று செய்தது போல இன்று இங்கு அமைத்து உள்ளார்கள். அதுவும் இரவு, பகல், கோடை, குளிர், வசந்தகாலம் என்று கால நேரத்தைப் பொறுத்து இவருக்கு செய்யும் அலங்காரமும் மாறுபடுகின்றது. அவசியம் இரண்டு நாட்களாவது தங்கி இருந்து தரிசிக்க வேண்டும்.

அந்தந்த காலங்களுக்கு ஏற்ற இராகத்தில் பாடல்கள் இசைக்கப்பட்டு, அந்தந்த நேரத்திற்கு ஏற்றவாறு பிரசாதம் (போக்),  உடை மற்றும் அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுகின்றது. கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார், குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார்.

முதல் பூஜை, மங்களா எனப்படும்; கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம். இந்த பூஜை, திருக்கதவுகள் மூடிய நிலையில், குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால்  எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்ய விடமாட்டான் என்பதாக ஐதீகம்.

இரண்டாவது பூசை சிருங்கார்  என்றழைக்கப்படுகின்றது. கண்ணனுக்கு அலங்காரம் செய்து வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர் தன் மகனைக் காண யசோதை அனுமதிக்கின்றாள். அப்பொழுது கண்ணனுக்கு புல்லாங்குழல் தரப்படுகிறது.

மூன்றாவது பூசை க்வால்.மாடு கன்றுகளை  ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.

அடுத்த பூஜை, மதிய நேரத்தில் நடைபெறும் ராஜ் போக்ஆகும். மிக விமரிசையாக நடக்கும் இந்த பூஜைக்குப்பின், மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது.

அடுத்த பூஜை,  உத்தப்பன் என்று அழைக்கப்படுகிறது.  மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம்.

அடுத்த பூசை போக் ஆகும். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல ஒரு அறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம்.

மாலை பூசை சந்தியா ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.

நாளின் நிறைவு பூசை  சயன்  ஆகும். சயன ஆரத்திக்குப் பிறகு திரையிடப்படுகின்றது. எம்பெருமான் திருப்பள்ளி கொள்கிறார். .

டாகூர் துவாரகா

அசல் துவாரகாதீஷ் சிலை தனது சொந்த விருப்பத்தின் பேரில் டாகோரில் உள்ள தனது பக்தரின் இடத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. அகமதாபாத் நகரில் இருந்து பரோடா செல்லும் வழியில், ஆனந்த் எனும் ஊருக்கு அருகில் ஆமதாபாத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் டாகோர் நகரம் அமைந்துள்ளது. இங்கு கண்ணனின் திருநாமம் ரணசோட் ராய்; ‘யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்’ என்று அர்த்தம், மதுரா நகர மக்களும், யாதவ குல மக்களும் போரில் அவதி படுவார்களே என்று கண்ணன் யுத்தத்தை துறந்ததை சொல்வது. ஆக, காலயவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்தது.

கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறார். துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, என்னும் பக்தர், தன்னுடைய தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்கு நடந்து சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். வரும் காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியாதோ என்ற கலக்கத்துடன் பகவானை வேண்ட, அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான். தன்னை எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியிலேயே அழைத்து செல்ல போடானாவிற்கு எம்பெருமான் கட்டளை இட்டாராம். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக கண்ணன் ஒரு வேப்ப மரக் கிளையில் சாய்ந்து நின்றதாகவும், அந்த மர இலைகள் மட்டும் இனிப்பாக உள்ளதாகவும் சொல்லி, அந்த மரத்தை இன்றும் மக்கள் வழிபடுகிறார்கள்.

டாகோர் துவாரகை ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் ஒரு கோட்டை போல அமைந்துள்ளது. மிகப் பிரம்மாண்டமான மதிற்சுவர்,  நாற்புறமும் வாயில்கள், கோட்டை வாயில்களைப் போலவே உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தின் உட்புறத்தில்  இரு புறமும் பிரம்மாண்டமான தீபஸ்தம்பங்கள் இச்சுற்றில் மற்ற அலுவலக அறைகளும் உள்ளன. ஆலயத்தை வலம் வரும் போது துவாரகை கிருஷ்ணரை எடையை அளந்த துலாபாரத்தைக் காணலாம். தற்போது தங்கக் கவசத்தில் கண்ணாடி பெட்டிக்குள் மின்னுகின்றது அந்த தராசு.

கருவறையும் சபா மண்டமும் உயரமாக அமைந்துள்ளன. வண்துவாராபதி மன்னனைச் சேவிக்க   சுமார் 20 படிகள் மேலேறிச் செல்ல வேண்டும். சியாமள வண்ணத்தில் சங்கு, சக்கரம், கதை, அபயத் திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில்  சேவை சாதிக்கின்றார் மனமோகனன். அபயத் திருக்கரத்தில் தாமரையும் உள்ளது. கிரீடத்தில் கண்ணனுக்கே உரித்தான மயிற்பீலி, பட்டுப் பீதாம்பரம், வனமாலை மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் திருமேனியை அலங்கரிக்க எழிலாக, ஒயிலாக பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். துவாரகையிலிருந்து வந்த சக்கரவர்த்தி   என்பதால் பொன் சிம்மாசனத்தில்  நின்ற கோலத்தில் எழிலாகச் சேவை சாதிக்கின்றார்.

பெருமானுக்கு மிக அருகில் பெண்களுக்குக்கென்றே தனி இடம் ஒதுக்கியிருக்கின்றனர். கிருஷ்ணருக்கு அருகில் சென்று தரிசிக்க உரிமை, அவர்கள் கோபிகைகளாக இருந்ததனால் அந்தச்சலுகையை இக்கோவிலில் வழங்கியுள்ளனர்.

அடியேன் இதுவரை தரிசித்தவை, துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா.  ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில்களுக்கு அந்த கண்ணன் தான் அழைத்து செல்ல வேண்டும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • துவாரகநாத்ஜி கோவில்
  • பேட் துவாரகா
  • குசேலர் பவன்
  • ப்ரபாஸ தீர்த்தம்
  • மூல துவாரகா
  • ருக்மணிதேவி கோவில்
  • கோமதி நதி

ஸ்தல வரலாறு

காலயவனன்‘ என்று ஒருவன் செருக்குடன் திரிந்து கொண்டு இருந்தான்; ஒருமுறை நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகில் யாராவது சூரர்கள் உண்டா?’ என்று கேட்க, அதற்கு நாரதர் ‘வட மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார். காலயவனன் அதைக் கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு வடமதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர் செய்யத் தொடங்கினான், கண்ணபிரான் இதையறிந்து மேற்கு கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ர ராஜனிடம் கேட்டு, பன்னிரண்டு யோஜனை பரப்புள்ள இடத்தை வாங்கி அங்கு துவாரகை என்ற தங்க மயமான இந்த நகரத்தை ஒரே நாள், ஒரே இரவில் அமைத்து வடமதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக் கொண்டு போய்ச் சேர்ந்து அவர்களுடைய அச்சத்தை அழித்தான். பிறகு திரும்பி வந்து காலயவனனையும் முடித்தான். காலயவனனை முடித்த இடம், ரண சோட ராய் என்று அழைக்கப்படும் பஞ்ச துவாரகையில் ஒன்றான டாகூர் துவாரகா ஆகும்.

இதே போல் கண்ணன் மதுரையின் மஹாராஜாவாக இருந்த போது, ஜராசந்தன் என்னும் அரக்கன் மதுராபுரி மக்களுக்கு பல துன்பங்கள் விளைவித்து வந்த வேளையில் அவனால் மக்கள் துன்பம் அடையாதவாறு உள்ள ஒரு நகரத்தை நிர்மானிக்க வேண்டும் என்று கடலுக்குள் துவாரகா நகரத்தை சிருஷ்டிக்க கிருஷ்ணன் விஸ்வகர்மாவை அழைக்க அவனால் வடிவமைக்கப்பட்டதே துவாரகாபுரி என்ற ஒரு வரலாறும் உண்டு. இந்த துவாரகாபுரி முன்பு சொன்னது போல் கடல் சீற்றத்தால் விழுங்கப்பட்டு விட்டது.

ருக்மணியின் அண்ணன் ருக்மி, ருக்மணியை சிசுபாலனுக்கு மணம் செய்விக்க விரும்பினான். ஆனால் ருக்மிணி,  ஸ்ரீகிருஷ்ணரை மணாளனாக வரித்து விட்டார். எனவே  கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். கண்ணனின் ஆலோசனைப்படி காத்யாயினி ஆலயத்திற்கு பூசை செய்ய வந்த போது ஸ்ரீகிருஷ்ணர் தேரில் வந்து தாயாரை அழைத்துச் சென்றார். எதிர்த்து வந்த சிசுபாலனையும், ருக்மியையும் போரில் தோற்கடித்து துவாரகை வந்து சித்திரை மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசியன்று திருமணம் செய்து கொண்டார்.  ருக்மிணித் தாயார் எழுதிய கடிதத்தை தினமும் படித்து வந்தால் எல்லா  நன்மைகளும் கிட்டும், வீட்டில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகும் என நம்பிக்கை.

ப்ரபாஸ தீர்த்தத்தில் தான் கண்ணன் மீண்டும் இந்த திருஅவதாரத்தை முடித்து மீண்டும் பரமபதம் திரும்பியது. யாதவர்கள் ஒரு முனிவரிடம் பெற்ற சாபத்தினால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு முடிந்தனர். இறுதியில் கண்ணன் ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறி கொண்டு இருந்த போது, ஒரு வேடன் கண்ணனின் திருவடிகளை மான் கொம்பு என்று தவறாக நினைத்து மறைந்து இருந்து அம்பு எய்தியதால், அதையே காரணமாக கொண்டு கண்ணன் பரமபதம் அடைந்தான்.

வேடன் மறைந்திருந்து எய்தது, முன்பு இராம அவதாரத்தில், வாலியை தாக்கியதற்கு பரிகாரமாக இந்த அவதாரத்தில் இப்படி தன் திருஅவதாரத்தை முடித்து என்று சொல்பவர்கள் உண்டு. அதே போல் மஹாபாரதத்தில் காந்தாரியின் சாபத்தினால் கண்ணன் தன் குலத்தோர் அனைவருடன் மறைந்ததாகவும் சொல்வது உண்டு. இவைகளுக்கு ஆதாரம் சேகரிக்க வேண்டும்.

மஹாபாரதத்தில் துவாரகையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சில நிகழ்வுகள்;

துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160). பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அர்ச்சுனன் சில ஆண்டுகள் துவாரகையில் தங்கி சுபத்திரையை மணந்தான். பாண்டவர்கள் காடுறை வாழ்க்கையின் போது, பாண்டவர்களின் புதல்வர்களான அபிமன்யு, உபபாண்டவர்கள் மற்றும் பணியாட்கள், இந்திரசேனன் என்பவன் தலைமையில் துவாரகையில் தங்கினர். (4, 72) துவாரகைக்கும்  இந்திரப்பிரஸ்தத்திற்கு இடையே ஒரு பாலைவனம் (தார் பாலைவனம்) பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. (14-53, 55). குருக்ஷேத்திரப் போரில் துவாரகையின்  கிருதவர்மன்,  கௌரவர்  அணியிலும்;  சாத்யகி  பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர். மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார். (9, 35).

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் துவாரகாவில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சியில் இருந்து செப்பு நாணயங்கள், கற்பாறைகள், தூண்கள் மற்றும் பானை வகைகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். எனவே, 2 ஆம் நூற்றாண்டில் நன்கு நிறுவப்பட்ட நகரம் இருந்தது என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், 1983 மற்றும் 1990 க்கு இடைப்பட்ட ஆய்வுகள், நகரம் ஆறு பிரிவுகளைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறது. அவை கரையிலிருந்து ஒரு மைல் தூரம் வரை நீட்டிக்கப்பட்டன. கடல் ஆய்வுகள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல் தூண்கள், துறைமுகங்கள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளன. எனவே, பகவான் கிருஷ்ணரின் காலத்தில் ஒரு பழங்கால நகரம் இருந்ததை இது ஆதரிக்கிறது. மேலும், பண்டைய கையெழுத்துப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நகரத்தின் அமைப்பு, இந்தியாவின் கடல் தொல்லியல் துறையால் (The Marine Archaeology Unit of India) கண்டுபிடிக்கப்பட்ட நகரத்துடன் பொருந்துகிறது.

1963ல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், துவாரகையின் கடற்கரையிலும், கடலிலும் தொல்லியல்  அகழ்வாய்வுப்  பணிகள் மேற்கொண்டதில் பழம்பெரும் நகரத்தின் தொல்பொருட்களை கண்டெடுத்து ஆய்வு செய்தது. கடல் பகுதியில் இரண்டு இடத்தில் தொல்லியல் அகழ்வாய்வு செய்ததில் பண்டைய இந்தியாவின் மத்திய கால இராச்சியங்களில் ஒன்றான துவாரகை நகரமும், துறைமுகமும் மண் அரிப்பால் கடலில் மூழ்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. வல்லபியை தலைநகராக் கொண்டு, ஆனர்த்த இராச்சியத்தை ஆண்ட மன்னர்  சிம்மாதித்தியன் கிபி 574ல் வெளியிட்ட செப்புப் பட்டயத்தில்  துவாரகை நகரத்தை குறித்துள்ளது. துவாரகை அருகே உள்ள பேட் துவாரகை இந்துக்களின் புனிதத் தலமாகவும், கிமு 1570 காலத்திய, பிந்தைய ஹரப்பா தொல்லியல் களங்களில் ஒன்றாக உள்ளது. 

துவாரகையில் தான் பக்த மீரா  கண்ணனை ஆரத்தழுவி அவனுடன் கலந்தது. அவளுக்கு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதும் இங்கே கதவுகள் மூடி கொண்டன, அதே போல் மீரா கண்ணனை தேடி இங்கே வந்ததும் அந்த கதவுகள் தானாகவே திறந்தன.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம், இந்த திருத்துவாரகை ஆகும்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி அஞ்சப் புணர் முலை வாய் மடுக்க, வல்லானை மாமணி வண்ணனை மருவும் இடம் நாடுதிர் எல், பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பெளவம் ஏறி துவரை, எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டார் உளர். (4.1.6)

சிறு குழந்தையாக இருந்த, கண்ணனை வஞ்சனையால் கொல்ல நினைத்த, வறண்டு வளைந்து எலும்பும் நரம்பும் தோண்டும் படியாக, பொல்லாத உருவம் கொண்ட பூதனை என்ற அரக்கி, கம்ஸனால் ஏவப்பட்டு, தன்னுடைய உருவத்தை மறைத்து, பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி என்றபடி, முலையில் விஷத்தைத் தடவிக் கொண்டு, யசோதை போல் தாய் உருவம் எடுத்து முலை கொடுக்க, அதனை வாயில் வைத்து, விஷப்பாலை, அமுதமாகவே அமுது செய்து, உண்ண வல்லவன் இந்த கண்ணன். நீலமணி போன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான் கண்ணன், அவனை தேடுகிறீர்கள் என்றால், கடல் அலைகள் வீசி எறிகின்ற துவாரகையில், பதினாறாயிரம் தேவிமாரோடு கூட சிம்மஹாசனத்தில் எழுந்தருளி எல்லோரும் சூழ இருப்பதை கண்டார் உண்டு என்கிறார்.

நரகாசுரனால் பல திசைகளில் இருந்தும் கொண்டு செல்லப்பட்டு, மந்தரகிரியின் சிகரமான ரத்தகிரியில், சிறை வைக்கப்பட்டிருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும், கண்ணபிரான் நரகாஸுரனை வதம் செய்த பின்னர், மணந்துகொண்டு வந்தது சரித்திரம். இது ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவார் என்று சொல்லப் படுகிறது. கண்ணன் சத்தியபாமாவிற்காக கொண்டு வந்த, பரிஜாதம் முதலிய எல்லா பொருட்களையும் சேர்த்து எல்லாரும் சூழ என்று சொல்கிறார்.  

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டமென்னும் கடி நகரே. (4.7.8)

கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக் கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியை கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக் கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போக்கிவிடுகிறான் என்பது கருத்து. பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் கங்கை எனும் கடிநகர் திவ்யதேசம் (தேவப்ரயாகை) என்று பெருமையுடன் கூறுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை தட வரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (4.7.9)

தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமார்கள் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார்.

பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார் பணி செய்ய துவரை என்னும் அதில் நாயகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் புது நாண் மலர்க் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் பொது நாயகம் பாவித்து இருமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே. (4.9.4)

பதினாறாயிரவர் தேவிமார் சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா என்று முன்பு (4.1.6 மற்றும் 4.7.9) சொன்னவர் இங்கும் அதனை குறிப்பிடுகிறார். தேவிமார் பதினாறாயிரத்து ஓரு நூற்றுவர் என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காணப் படுகிறது. திருவரங்க மாநகரைச் சுற்றிச் சூழ்ந்துள்ள காவேரியில் எம்பெருமானது திருநாபிக் கமலம் போன்ற பல தாமரை மலர்கள் ஓங்கி விளங்குகின்றன என்றும், அப்பூக்களுக்கு சமமான அழகிய பூக்கள் மற்றோர் இடத்தில் இல்லை என்றும் கூறுகிறார். எல்லா உலகங்களையும் அதனுள் எல்லா ஜீவராசிகளையும் படைப்பதற்கு தானே காரணமாக இருந்து அவை எல்லாவற்றிற்கும் நிர்வாஹகமாக இருக்கின்ற இருப்பை நினைத்து கர்வத்துடன் அருள்பாலிக்கிறார் என்று சொல்கிறார்.

Somnath

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங் கொடி போல் சுடர் ஒளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே.(5.4.10)

ஸ்ரீ வைகுண்ட விரக்தாய சுவாமி புஷ்கரிணி தடே ! ரமயா ரமமாணாய  வேங்கடேசாய மங்களம் ” என்பது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின் மங்கள ஸ்லோகம்.    இதன் படி, வெங்கடேச பெருமாள், தனது நிரந்தர வாசஸ்தலமான பரமபதம் அல்லது ஸ்ரீ வைகுந்ததில் இருந்து, மிக புனிதமானதும் வராக புஷ்கரணியும், உயர்ந்த மலைகளை உடையதுமான திருவேங்கடம் என்ற இந்த ஸ்தலம் வந்து, விண்ணோர்களுக்கும், இந்த மண்ணில் உள்ளவர்களுக்கும் அருள் பாலிக்கிறார்.   இப்படிப்பட்ட திருவேங்கடத்தை   விட்டு விலகி, ஆழ்வாரின் மனதிற்குள் வந்து விட்டார் என்று பெரியாழ்வார், தனது திருமொழியின்  (5.4.10) கடைசி பாடலில் “வடதடமும், வைகுந்தமும், மதிள் துவராபதியும், இட வகைகள் இகழிந்திட்டு என் பால் இட வகை கொண்டனையே” என்று முடிக்கிறார். இதற்கு முன் பாட்டில், தாம் உகந்து அருளின நிலங்களுடன் ஒப்பிட்டு பெரியாழ்வாரின் திருமேனியையும் எம்பெருமான் விரும்பினார் என்று கூறினார், இந்த பாடலில், அவற்றை விட்டு தம்மையே விரும்பியதை சொல்கிறார்.
ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டும், பின்பு அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பது போல் அன்றி, அந்த பொருளில் சில குற்றம் குறை காரணமாக அதனை இகழ்ந்து விட்டால், மீண்டும் ஒருநாளும் அவற்றை நினைக்க மாட்டாது போல், எம்பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்திபூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்ததனால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளக் கருத்து. 
பெரிய பரப்பை உடைய உயரமான மலையின் உச்சியில் விளங்குகின்ற ஒரு பரிசுத்தமான கோடி எல்லாரும் காண எளிதாக இருப்பதைப்போல் தன்னுடைய இதயத்தில் பளிச்சென்று இருந்த தேஜஸ்ஸ்வரூபியே என்று எம்பெருமானை விளிக்கின்றார். 

சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் என்று பொருள் கொள்ளலாம். எம்பெருமான் தன்னுடைய திருவுள்ளத்தில் புகுந்த பின்பு, தன் உடல் பூரித்ததை, பூர்ணமானதை, சொல்கிறார். மேலே சொன்ன திவ்ய ஆத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணங்கள் எல்லாம், ஆழ்வார் தனக்கு பிரகாசித்ததாக சொல்கிறார்.

கொண்டனையே” என்றதற்கு, இப்படியும் ஒரு ஸௌசீல்யம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு ஸௌலப்பயம் இருக்கின்றதே, இப்படியும் ஒரு வாத்ஸல்யம் இருக்கின்றதே என்று எம்பெருமானை ரசிக்கலாம் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

“உனக்குரித்தாக்கினையே”என்பாலிடவகை கொண்டனையே’ என்பதற்கு, ‘இப்படி செய்தாயே’ என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட ஆழ்வாரை எடுத்து தன் மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய் இந்த பிரபந்தத்தை முடிக்கிறார். “அதனிற் பெரியவென்னாவா‘ என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசம் எல்லாம், இப்பெரியாழ்வார் பக்கம் எம்பெருமானுக்கு பிறந்தபடி இத்திருமொழி என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி

One Siva temple on the way to Bhet Dwarka
The SunSet in Western India

சுவரில் புராண நின் பேரேழுதிச் சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும் கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயந் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – 1.4

முதல் இரண்டு வரிகளில், கண்ணபிரானைக் காண வேண்டும் என்ற ஆவலுடைய ஆண்டாள், அவனைக் கண்ட பின்பு காமதேவனை மறக்கக் கூடும் ஆகையால், அப்படி மறதி நேர்ந்திடாமல் இருக்க, அந்த மன்மதன் பெயரையும் மற்றும் அவனது அம்சங்களையும் சுவரில் எழுதியதை கூறுகிறார். இறுதி இரண்டு அடிகளில், கண்ணபிரானை அன்றி மற்ற எவரையும் அனுபவிக்கத் தனக்கு ருசி இல்லாததையும், பிரிந்தாரை சேர்த்து வைப்பவன் என்று பழைய காலத்தில் இருந்து பெயர் பெற்று இருக்கும் மன்மதன், கண்ணபிரானிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்பதையும் கூறுகிறார்.

தனது பருத்த முலைகளை துவாரகைக்குத் தலைவனான அக்கண்ணபிரானே அனுபவிக்க தகுந்தவன் என்று அவனை சங்கல்பித்து, அவற்றை தொழுகின்றேன் என்கிறார். பக்திசெல்வம் மிகுந்தவனான இளைய பெருமாள் (லக்ஷ்மணன்) எல்லா உலகங்களையும் ஆனந்திக்க செய்பவனும், தன் அண்ணனுமான ஸ்ரீ ராமபிரானிடம், சிறு வயது முதல் எப்பொழுதும் அன்பு கொண்டவனாக இருந்தான். அது போல், ஆண்டாள் நாச்சியாரின் திருமுலைகளும் பருவம் நிரம்புவதற்கு முன்பே கண்ணனை அணைக்க ஆசைப்பட்டதால் அவனே அனுபவிக்க தக்கவன் என்கிறார். இப்போது அவனாலும் அனுபவித்து முடிக்க முடியாதபடி பெருத்து உள்ளதாகவும் கூறுகிறார். அவனுக்கு என்று சங்கல்பித்த பின்பு அவைகளும் தொழ தக்கவைகளே என்கிறார். இவை வாடுவதற்கு முன்பு அவனோடே சேர்ப்பிக்க வேண்டுமாக கேட்கிறார்.

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி மேவலன் விரை சூழ் துவராபதிக்கு காவலன் கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில் கூடிடு கூடலே 4.8

தனக்கு அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, அவனுடைய ரக்ஷகத்வத்திற்கும் (பாதுகாக்கும் தன்மைக்கும்) ஸௌலப்யத்திருக்கும் (எளிமையாக பழகும் தன்மை) குறையில்லை; கூடல் கூடாததுதான் காரணம் என்று ஆண்டாள் சொல்வதான பாடல்.

ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும் நல்ல வாசனை சூழ்ந்த துவாரகையை நிர்வகிப்பவனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனான கண்ணனுடன் கூடிட, கூடலே நீ கூடு என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அவன் கல்யாண குணங்கள் நிறைந்தவன், ஆகையால் நம்மை ஏற்றுக்கொண்டே தீருவான், எனவே அவன் வரும்வரை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதே நமக்கு நல்லது என்று சீதா பிராட்டி இருந்ததைப்போல் என்று ஆண்டாள் உபவாசம் இருந்தாலும், ஆர்வம் மிகுதியால் அவனை பெறுவதற்காக, நோன்பு நோற்பது, காமனிடம் சொல்வது, சிற்றில் இழைப்பது, பனி நீராடுவது, கூடலிழைப்பது என்று தங்களுடைய ஸ்வரூபத்திற்கு ஒவ்வாத காரியங்கள் செய்பவர்கள் ஆவல் உடையார்.

மல்லாண்ட திருத்தோள் மணிவண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பாடுவதும், “உரகல் உரகல்” என்று எப்போதும் விழித்திருக்கும் நித்யஸூரிகளை பார்த்து , உறங்காமல் இருந்து எம்பெருமானை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொங்கும் பிரிவால் பெரியாழ்வாரை போல், காரியங்கள் செய்பவர்கள் அன்புடையோர்.

ஆழ்வார் குடிப் பிறப்பால் தன்னுடைய அன்புக்கும் ஆவலுக்கும் குறைவில்லை, என்பதை ஆண்டாள் சொல்கிறார்.

விரைசூழ் துவராபதிக்கு என்று சொல்வதன் மூலம் இயற்கையிலேயே வாசம் நிறைந்த பதினாயிரம் தேவிமார்களை காப்பாற்றி துவாரகைக்கு அழைத்து வந்தது சொல்லி அவனது ரக்ஷகத்துவம் சொல்கிறார். இவள் அளவுக்கு ஆவல் அன்பு இல்லாதவர்கள் ஆதலால் எம்பெருமான் தன்னை சேர்த்துக்கொள்வார் என்கிறார்.

நித்யஸூரிகளை ரக்ஷிப்பதைக் காட்டிலும் பசுக்களை காப்பதில் உவந்து இருப்பான் (திவத்திலும் பசுநிரை மேய்ப்பு என்று நம்மாழ்வார் திருவாய்மொழி10.3.10) என்று சொல்வது போல் இங்கே கன்று மேய்த்து விளையாடும் கோவலன் என்று சொல்லி அவனது எளிமை (சௌலப்யம்) சொல்லப்பட்டது.

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள், மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ, சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே (9.8)

கரியகுருவிக் கூட்டங்கள் விடியற்காலையில் மனிதர்களுக்கு முன்னம் எழுந்திருந்து திருமாலிருஞ்சோலை மலை மற்றும் துவாரகைக்கு தலைவனாகவும், ஆல மரத்தின் இலையில் எழுந்தருளிய ஸர்வேஸ்வரனாகவும் உள்ள எம்பெருமானின் வார்த்தைகளை சொல்லி அவன் வருவதை மருள் என்ற பண்ணினை பாடுகின்றன, இது உண்மையா என்று ஆண்டாள் சொல்கிறார்.

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய பேரும் தார்களுமே பிதற்ற, என்று நம்மாழ்வார் (திருவாய்மொழி 6.7.2) சொல்வதுபோல், ஆண்டாள் தன்னுடைய ஊரில் அறிவற்ற குருவிக்கூட்டங்களும், எம்பெருமானைப்பற்றி பேசுகின்றன என்கிறார்.

ஆலின் இலை பெருமான் என்றதால், எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கிக்கொண்டு, அப்போது துளிர்த்த ஓர் ஆலிலையில் சயனித்து, சேராதவற்றை சேர்த்து வைக்கும் திறமையை உடையவன் என்று சொல்லிற்று.

கூட்டிலிருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும், ஊட்டக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும், நாட்டிற்றலைப் பழி எய்தி உங்கள் நன்மை அழிந்து தலையிடாதே, சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின். (12.9)

தான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எல்லா நேரங்களிலும் கோவிந்தா கோவிந்தா என்று கூறுகின்றது, உணவு கொடுக்காமல் இருந்தால் உலகளந்த பெருமானே என்று உரக்க கூவுகிறது, இந்த திருநாமங்களை கேட்டாலே தான் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறது என்கிறார். பெரும் பழியை ஏற்றுக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி தன்னை துவாரகைக்கு கொண்டு விடுங்கள் என்கிறார்.

தான் எம்பெருமானுடன் சேராமல் தவித்துக்கொண்டு இருக்கும் போது, தான் வளர்த்த கிளி முன்பு சொல்லி கொடுத்த திருநாமங்களை சொல்லி தன்னுடைய துயரத்தை அதிகரிக்க, அந்த கிளியை கூண்டில் அடைத்தாள். அது கோவிந்தா கோவிந்தா என்று கூவ ஆரம்பித்தது. இவள் சொன்ன ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்ற பரமபத நாதன் திருநாமத்தை சொல்லாமல், சௌலப்யத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பசுக்களை மேய்த்த கண்ணனின் திருநாமத்தை சொன்னால் அது அவளுக்கு மேலும் துயர் கொடுக்கும் என்று தெரிந்து இன்னும் உரக்க சொன்னது. அந்த கிளிக்கு பட்டினி போட்டால் அது பேசாமல் இருக்கும் என்று நினைத்தது தவறாக சென்று அந்த கிளி, த்ரிவிக்ர அவதார நாமத்தை, எம்பெருமானின் திருவடிகள் சென்ற வானத்தில் எல்லாம் கேட்கும்படி உரக்க கூவ ஆரம்பித்தது. கோவிந்தன் பசுக்களின் பின்னே தனிமையில் செல்லும்போது அந்த பசுக்களின் ரக்ஷகத்துவத்திற்கு அடிமையானவள் இவள்; அதனால் தான் அது கோவிந்தா என்று கூவிற்று.

திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதியாக் காலிப்பின்னே, இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர் இனவளை கொண்டானடிக் கீழெய்தகிற்பீர் மலைத்தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளங் கொடுக்கும் வரு புனலம் பொன்னி நாடன் சிலைத் தடக்கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணி மாடம் சேர்மின்களே. (6.6.7)

பூதனையானவள் முடியும்படியாக, அவளின் பெருத்த முலையில் சுரந்த விஷம் நிறைந்த பாலை அமுது செய்தவனாய், துவாரகைக்கு நிர்வாககனாய், பசுக்களின் பின்னே பெரிய இலையினால் செய்யப்பட்ட குழல் கொண்டு, ஊதிக்கொண்டு போனவனாய், இடை பெண்களுடைய வளை மற்றும் ஆபரணங்களை விளையாட்டுக்காக (லீலை) அபகரித்தவனின் திருவடிகளை அடைய விரும்புபவர்களே, மலைகளில் இருந்து மணிகளை திரட்டிக்கொண்டு, உலகமெல்லாம் உஜ்ஜீவிக்கும்படி, வளத்தை கொண்டு தருகின்ற, பெருகி வருகின்ற தண்ணீரை கொண்டு உள்ள, காவேரியை உடைய நாட்டுக்கு அதிபதியாய், வில்லை கையில் ஏந்திய க்ஷத்ரிய வம்சத்து சோழன் சேர்ந்த கோவில் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே. (6.8.7)

காண்டவ வனம் என்பது தேவேந்திரனுக்கு உரிய இந்த உலகத்தில் உள்ள ஒரு காடு. ஒரு நாள் அக்னி, ஓரு அந்தணன் வேடம் பூண்டு அர்ஜுனனும் கண்ணனும் யமுனா நதி கரையில் கூடி இருந்த இடத்தில வந்து சேர, அந்த அந்தணனை அவர்கள் நன்கு உபசரிக்க, அக்னி அவர்களிடம் உணவு வேண்ட, ‘வேண்டிய உணவை அளிப்போம்’ என்று அவ்விருவரும் உறுதி கூற, உடனே அந்த அந்தணன் தான் யார் என்ற உண்மையை தெரிவித்து காண்டவ வனத்தைத்  தனக்கு இரையாக அளிக்குமாறு வேண்ட, அவர்கள் பல கொடிய அசுரர்களும் அரக்கர்களும் துஷ்ட மிருகங்களும் நிரம்பியிருக்கும் இந்த காடு அழித்து ஒழிவதே நாளது என்று நிச்சயித்து அக்னியிடம், ‘அப்படியே உண்பாயாக’ என்று அனுமதி கொடுத்ததினால் அக்னி அந்த காடு முழுவதையும் ஆக்ரமித்துப் பூர்ண திருப்தியுடன் உண்டான் என்பது கதை மஹாபாரத்தில் ஆதி பருவத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனான கண்ணபிரான் தனது அன்பனான இந்திரன் வருந்தும்படி அவனது காட்டை அழிக்க அனுமதித்தது அவதார பலன் நிறுவுவதற்காக என்று அறிந்து கொள்ளலாம். காட்டில் உள்ள அளவற்ற கொடுமையான விஷ உயிரினங்களை அழித்து பூமியி்ன் பாரத்தைக் குறைத்து அருளினதை உணரலாம். . 

திருமெய்யத்தில் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்வாமியும், தேன் மிகுந்த கல்பவிருக்ஷத்தை சத்தியபாமாவிற்காக துவாரகையில் கொண்டு நட்டவனான எம்பெருமானை திருநறையூரில் கண்டனே என்கிறார்.

திருமழிசையாழ்வார் – நான்முகன் திருவந்தாதி

சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன், ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன், அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார், உலகத்தில் ஏதிலராய் மெய் ஞானம் இல். (71)

மஹா பிரளயத்தின் போது, பூமியை எடுத்து காப்பாற்றியதை அறியாததை போல், இந்த பூவுலகில் இருந்து உய்ய (சம்சார பிரளயத்தில் இருந்து மீள) அவன் கூறிய வார்த்தைகளை இத்தனை நாள் அறியாமல் இருந்தோமே என்று வருந்துகிறார். இப்பாட்டில் சேயன் என்பது மிகப்பெரியன் என்பதோடும் அணியன் என்பது சிறியன் என்பதோடும் சேர்ந்து வரும். எம்பெருமான் எளியவனாகவும் மிக உயர்ந்தவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பான் என்று சொல்வது மாயன் என்பதால் விளங்கும்.

ருத்ரன், பிரமன் போன்ற தங்களுக்கே, மிக தூரத்தில் இருப்பவன் என்று இராமாயணம் உத்ரகாண்டத்தில் சொன்னது போல், இவன் எக்காலத்திலும் எவனாலும் காண அரியவன் என்று பிரமன் சொன்னதை இங்கே குறிப்பிட்டு உள்ளார். இதேபோல், வராக புராணம், கீதை, மற்றும் விஷ்ணு தர்மம் இவற்றில் இருந்தும் மேற்கோள் காட்டப்படுகிறன. வேதத்தில் மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவன் என்று சொல்லி அளவிடமுடியாதபடி பெரியவன் என்று சொல்கிறது. அவன் மிகவும் பெரிய ரூப, ஸ்வரூப, குண விபூதிகளை கொண்டவன் ஆகையால், இப்படி அரியவனாக இருக்கிறான்.

அணியன் என்று சொன்னது, ஆசையுள்ளவர்களுக்கு மிக அருகிலேயே எளிமையாக அறியலாம்படி உள்ளவன் என்கிறார். அணியன் சிறியன் என்று சௌலப்யத்தை சொல்லும். சேயன் பெரியன் என்பது அவனுடைய பரத்வத்தை சொல்லும்.

துரியோதனன் போன்றவர்களுக்கும் தன் முயற்சியால் அறிய முயல்பவர்களுக்கும் தூரத்தில் உள்ளவன்; யசோதை, ஆய்ச்சியர் போன்ற ஆசை உடையவர்களுக்கு மிக அருகில் உள்ளவன் என்று நம்மாழ்வார் திருவாய்மொழியில் சொன்னதும் (1.3.4) இங்கே குறிப்பிட்டுள்ளார்.

துவரைக்கோனாய் என்று சொன்னதில் துவாரகைக்கு நிர்வாககன் என்ற பெருமை உடையவனாய், பதினாயிரம் ஸ்திரீகளுக்கு ஒரே காலத்தில், ஆடல் கொடுக்கவல்ல ஆச்சர்யமான கண்ணன் என்பது விளங்கும். பாரத போரில், சொன்ன சரம ஸ்லோகத்தை அறியாதவர்கள் எம்பெருமானுக்கு எதிரிகள் என்கிறார். அவர்கள் சரம ஸ்லோகத்தை அறியாததற்கு காரணமே அவர்கள் எம்பெருமானை வெறுப்பவர்களாக இருப்பது தான் என்கிறார்.

எல்லா தர்மங்களையும் அடியோடு விட்டுவிட்டு, என் ஒருவனையே உபாயமாக அடைவாய் என்று சொன்னது சரம ஸ்லோகம். ‘ஞான சக்திகளுடன் கூடிய நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுகின்றேன்’ என்று சொன்னதில் மாம் என்ற சௌலப்பியம் அணியன் சிரியன் ஓதிய வாக்கு என்றும் அஹம் என்ற பதத்திற்கு சொன்ன ஞான சக்தி முதலியவை சேயன் பெரியன் ஓதிய வாக்கு என்றும் கூறுகிறார். துவரைகோன் என்றது ஸ்வாமித்யம் சொல்கிறது. மாயன் என்பது சௌலப்யதோடு ஞான சக்திகளை சேர்த்து சொன்னது.

நம்மாழ்வார் – திருவாய்மொழி 5.3.6

அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லி என் தோழிமீர், என்னை இனியும் உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன், முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி மன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.

தோழிமார்களே! அழகிய துவாரகைக்கு அரசனும் நித்யஸூரிகளுக்கு தலைவனும் மணிவண்ணனும் ஆன கண்ணனின் கண் வலையில் அகப்பட்டுக்கொண்டதாகவும், அதனால் தோழியர்களும், தாயாரும் தன்னை பற்றி இனி ஆசைவைக்க நியாயம் இல்லை, ஊரார் என்ன செய்தால் என்ன என்று ஆழ்வார் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

முதல்வன் வண் துவராபதி மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன், ஆகையாலே தன்னைப் பற்றி இனி உமக்கு ஆசை இல்லை என்று தாயாருக்கும் தோழிக்கும் சொல்கிறார். கண்ணபிரானுடைய குணசேஷ்டிதங்களில் தான் அகப்பட்டதாகவும் இனி யார்  என்ன செய்தால் என்ன என்றும் கூறுகிறார். “வாசுதேவன் வலையுளே அகப்பட்டேன்” என்றது தப்ப முடியாதபடி அகப்பட்டு விட்டேன் என்று சொல்வதாகும். எம்பெருமானுடைய வலை என்பது அவனது திருக்கண்களை வலையாக கொள்வது ஆகும்.

மீண்டும் இன்னொரு திவ்யதேச அனுபவத்தோடு சந்திக்கலாம். நன்றி.

திருமாலை – உள்ளத்தே உறையும் மாலை (34)

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

எம்பெருமான், திருவரங்கனாக

  • 26 தத்துவங்களில் உயரிய தத்துவமான பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து வைத்தான். (‘மெய்யெற்கே மெய்யனாகும்’)
  • ஆழ்வாரின் நெஞ்சில் வந்து புகுந்து அவனிடத்தில் அன்புவெள்ளம் பெருக வைத்தான். (“சூதனாய் கள்வனாய்“)
  • தனது கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அவனது சேவையையும் அருளையும் கொடுத்தான் (விரும்பி நின்று)
  • பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து அவனை தரிசிக்க வைத்து கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்தான் (‘இனித்திரை திவலை மோத “)
  • நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்தான். (குடதிசை முடியை வைத்து‘)
  • அவனின் திரு அவயவங்களின் அழகும், அவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று ஆழ்வாரை மகிழ செய்தான். (“பாயும் நீர் அரங்கம் தன்னுள்“)
  • அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாமல் போனதால் இத்தனை காலம் பகவதனுபவத்தை இழந்ததை எண்ணி ஆழ்வாரை கலங்க வைத்தான். (பணிவினால் மனம் அது ஒன்றி)
  • வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களைக் கொண்டே நாம் அவனின் பெருமைகளை எளிதாக பேசமுடியும் என்றும், நாம் சிரமப்பட்டு புதிதாக ஒன்றும் கண்டுபிடித்து சொல்ல வேண்டியதில்லை என்றும் ஆழ்வாரை பாட வைத்தான். (பேசிற்றே பேசல் அல்லால்)
  • அவனின் சயனத் திருக்கோலத்தின் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடிச் செய்தது. (கங்கையில் புனிதமாய)
  • சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச்செய்து அவரை, சரணாகதிக்கு தயார் செய்தான். (வெள்ளநீர் பரந்து பாயும்)

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • திருமாலையின் 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி கூட இல்லை, திருவரங்கன் அந்தத் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் எனக் கேட்டு கொள்கிறார்.
  • மற்றவர்கள் செய்யக்கூடிய அர்ச்சனை, துதி போன்றவற்றை செய்யலாமே என்று பெரியபெருமாள் கேட்பதாகவும், அவைகளும் தன்னிடம் இல்லை என்று ஆழ்வார் சொல்வதாகவும் அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போலும், நல்ல நெஞ்சத்தோடும் செய்தது போல், ஆழ்வாரும் ஏதாவது நல்ல கைங்கர்யம் செய்யலாமே என்று பெரியபெருமாள் வினவுவது போலவும், அதுவும் இல்லை என்று ஆழ்வார் சொல்வது குரங்குகள் மலையை நூக்க (27) பாசுரம்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் தன்னை காத்தருள வேண்டும் என்று கதறிய கஜேந்திரன் என்ற யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்தியது கூறப்பட்டது.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடன் சம்பந்தங்கள் உள்ளவர்களை எம்பெருமான் ரக்ஷித்தே தீர்வான் என்று இருப்பதால், அது போல் ஏதாவது உண்டா என்று எம்பெருமான் கேட்பது போலவும் அதுவும் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்க்கலாம்,

தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை, எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன, மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.

தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக ஆனதாகவும் ஆழ்வார் வருந்தி இந்த பிறவி வீணானதாக தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்கிறார்.

திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.

தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால் அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற பாடலில் சொல்கிறார்.

இனி அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 34

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா, கள்ளத்தே நான் உன் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன், உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.

ஆழ்வார் இந்தப் பாடலில், ஆத்மாவை தன்னுடையதாக எண்ணிக் கொள்ளும் கள்ளவனாகிய தான், அவனுக்கு அடிமை செய்பவன் போலத் தோன்றி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக்கொண்டு திரிந்த போதிலும், எம்பெருமான் ஒவ்வொருடைய நெஞ்சத்தில் இருந்து கொண்டு எல்லாருடைய நினைவுகளையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை, புகழும்போது, தன்னுடைய கள்ளவேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே தன் விலா எலும்பு நோகும்படி சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

  • நாம் எங்கும் தேடி ஓட வேண்டாதபடி, நம் இதயத்திலுள்ளே எப்போதும் நெருக்கமாக இருக்கும் எம்பெருமான் என்கிறார்.
  • நெஞ்சத்தின் உள்ளே, எப்பொழுதும் வசிக்கின்ற, எங்கும் வெளியே செல்லாத, எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமான் என்கிறார்.
  • சிந்திப்பதற்கு உறுப்பான, அறிவு சிறிதும் இல்லாதவன் என்று ஆழ்வார் தன்னை பற்றி கூறுகிறார்.
  • “ஆழ்வார் பரம பாகவதன், பரமபக்தன்” என்று அனைவரும் புகழும்படியாகவும் “தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப் பொடி” (திருப்பள்ளியெழுச்சி, 10) என்று கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு திரிந்ததாக சொல்கிறார்.
  • எல்லை கடந்து சிரித்துக் கொண்டதாக சொல்கிறார்.

கள்வனாகிய தான், எம்பெருமானுக்கு தொண்டு செய்பவனாக, தொண்டு செய்வதற்கு வேண்டிய வேஷங்களை போட்டு கொண்டு இருப்பதை, சிந்திப்பவர்களின் சிந்தனைகளை எல்லாம், கூடவே இருந்து அறிந்துகொள்ளும் எம்பெருமான் தெரிந்து கொண்டு இருப்பான் என்று ஆழ்வார் தெரிந்து கொண்டு, அதனால், தனக்குள்ளே, வெட்கம் அடைந்து, எம்பெருமானை விட்டு விலகிச் சென்றதாக நினைத்துக் கொண்டு தன்னுடைய விலா பக்கத்துக்கு எலும்பு உடைந்து விழும்படி ஆழ்வார் சிரித்தார் என்பது பாடலின் பதவுரை.

அறிவு வெளிப்படும் வழியான மனதிலே, எப்போதும் வாழ்கின்றவனாய், அதனால் நம்முடைய குற்றங்களை நேரே எல்லாவற்றையும் அறிபவனான (சர்வக்ஞனான) இவனை, பொய்யனாக தான் அணுகி, இவனுக்கும் தோஷத்தை விளைவித்து, என்ன காரியம் செய்து விட்டேன் என்று வெட்கமடைந்து, இருட்டும், சூரியனின் தேஜஸும் ஒன்றாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, இப்படி எம்பெருமானுக்கு குற்றம் விளைவிப்பதை காட்டிலும், நம்முடைய குற்றங்களை அறிந்து கொள்வதற்கு அறிவில்லாமல் இருக்கிற சம்சாரிகளோடு கூடியிருந்து அழிந்து போவதே நல்லது என்று நினைத்து பெரியபெருமாள் திருவடிகளில் உள்ள ஆசையை விட்டு அகல நினைக்கிறார். இங்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த வளவேழ் உலகின் (5.1) பதிகத்தை நினைவில் கொண்டால், ஸ்வாமியும் எம்பெருமானின் பெருமையும் தன்னுடைய தாழிச்சியையும் சொல்லிக்கொண்டு அவனை விட்டு அகல பார்த்ததையும் ஒரு வித ஒப்புமையாக கொள்ளலாம்.

இனி சற்று விளக்கமாக.

உள்ளத்தே உறையும் மாலை

எண்ணங்களின் ஊற்று வாயாக உள்ள நெஞ்சத்தில் வாழ்பவன் என்பதை உள்ளத்தே என்று ஆழ்வார் கூறுகிறார். வெளியிலே உள்ளவன் கண்ணால் கண்டதை தவிர வேறு ஒன்றையும் அறிய மாட்டான் என்றும், உள்ளத்திலே இருப்பதனால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. உறையும் என்பதால் எப்போதும் வசிப்பவன் என்று பொருள். அவன் எங்காவது, எப்போதாவது வெளியே போய்விட்டு வந்தால், அந்த சமயத்தில், சரியான வழியாகவோ (சாஸ்திரப்படி நடப்பது), அல்லது நம் இஷ்டப்படி (மூளை சொன்னபடி) நடக்கலாம், எப்போதும் வசிப்பதால் இவனை ஏமாற்ற முடியாது என்று கருத்து. மாலை என்பதால் எல்லோரையும் விட பெரியவன் என்று பொருள் கொள்ளலாம். அதனால் இவனை ஏமாற்ற முடியாது.

ஜீவாத்மா இந்த உடலின் உள்ளே இருந்த போதும், அதனால் இந்த உடலினுள்ளே இருப்பவற்றை எல்லாம் அறியாது. ஆகாயம் எல்லா இடத்தில வியாபித்து இருந்தாலும் அதனால் எல்லாவற்றையும் நியமிக்க முடியாது. ஆனால் இவன் எல்லாவற்றையும் அறிந்தவனாய், அனைத்தையும் நியமிப்பவனாய் பெரியவனாக இருப்பதால் இவனை ஏமாற்றுவது என்பது அடியோடு முடியாது என்று கருத்து.

பெரியாழ்வார் திருமொழியில் (5.4.11) பெரியாழ்வார் “விட்டுசித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலனை” என்று அருளிச் செய்தார்.

ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.6.1) “என் நெஞ்சத்துள் இருந்து இருந்தமிழ் நூல் இவை மொழிந்து” என்று கூறுகிறார். இவரே திருவாய்மொழி (7.9.3) ல், “என் நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி, தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன, என் வாய் முதல் அப்பனை ” என்று எம்பெருமான், ஆழ்வாரின் நாவின் மூலமாக அவருள் புகுந்ததை சொல்கிறார். “பேரே உறைகின்ற பிரான், இன்று வந்து பேரேன் என் நெஞ்சு நெறையப் புகுந்தான்” (திருவாய்மொழி 10-8-2)  என்றும் திருமாலிரின்சோலை பதிகத்தில் சொல்கிறார். இதேபோல், திருவட்டாறு பதிகத்தில் (திருவாய்மொழி 10.6.8), “மெய் நின்று கமழ் துளவ விரையேறு திருமுடியன், கை நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல், மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு, எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே?” அருளிச்செய்த பாடலையும் சொல்லலாம். ஆழ்வார் திருமேனியில் நின்ற எம்பெருமான் என்று ஒரு அர்த்தம்; எம்பெருமான் திருமேனியில் அணிந்திருந்த திருத்துழாய் மாலையின் மணம் அவர் திருமேனியில் இருந்து அவரது திருமுடிக்கு மேலே சென்றதாக இன்னொரு பொருள். ஆழ்வார், “என்ன நன்மை செய்தேன் என்று என் நெஞ்சில் புகுந்து, ஏதோ பெறாப் பேறு பெற்றார் போலே விளங்குகிறான்! ” என்று மகிழ்கிறார்.

எம்பெருமான் நம்மாழ்வாரின் வாக்கிலும் உடம்பிலும் அவருக்கு நல்லது செய்வதற்காக அவருள்ளே வசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆசார்யன் தெரிவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் “வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை, எந்தாய் போய் அறியாய்” என்று பெரிய திருமொழி திருக்கண்ணபுரம் சௌரிப்பெருமாள் பதிகத்தில், (8.9.5) திருக்குடந்தை பெருமானை பற்றி சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

உள்ளுவான் உணர்வு ஓன்றில்லா

நமக்குள்ளே அந்தர்யாமியாக வாழ்கிறான் என்று சிந்திப்பதற்கு உறுப்பான அறிவு இல்லை என்று கருத்து. பரமாத்மாவான அவனை பற்றி அறிவு இல்லாததோடு ஜீவாத்மாவாகிற தன்னைப்பற்றிய அறிவும் இல்லை, தன்னை பற்றி அறிந்தால் மட்டுமே தன்னை உடையவனாக அவனை பற்றிய அறிவு வரும் என்பது கருத்து. ஒன்றில்லா என்பதற்கு விளக்கம் சொல்கையில்,

  • ஜீவாத்மாவான தன்னை பற்றிய அறிவு இல்லை
  • அறியவேண்டிய பரமாத்மாவை பற்றிய அறிவு இல்லை
  • இந்த உடல், தாழ்ந்தது, தற்காலிகமானது, ஜீவாத்மாவை விட வேறு பட்டது, பரமாத்மாவிற்கு தொண்டு செய்வதற்காகவே ஜீவன் ஏற்பட்டது என்ற தன்மைகளை பற்றிய அறிவு இல்லை

என்று சொல்கிறார்.

அந்தர்யாமி என்பதும், அந்தராத்மா என்பது இரண்டு வேறு வேறு விஷயங்கள். அந்தராத்மா என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவிற்குள்ளே இருக்கும் பரமாத்மாவின் ஐந்து நிலைகளில் ஒன்று. அந்தர்யாமி என்பது அந்த ஜீவாத்மாவின் உள்ளே இருக்கும் அந்தராத்மாவின் / பரமாத்மாவின் நியமிக்கும் (நியந்த்ருத்வம்) தன்மை அல்லது குணம். வேறு விதத்தில் சொல்வதென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா. ஒவ்வொருவருடைய ஹ்ருதயத்திலும் கட்டைவிரல் அளவுள்ள இதயக்கமலத்தில் மஹாலக்ஷ்மியுடன் கூடிய எம்பெருமான் முழுவதுமாக வியாபித்து கம்பீரமாக வீற்றிருக்கிறார் என்று சாஸ்திரம் கூறுகிறது. (எம்பெருமான் அந்தராத்மாவாக கட்டைவிரல் அளவிற்கு இருக்கிறார் என்று சொல்வது தவறு. எம்பெருமான் தன்னை சுருக்கி கொண்டு இருக்கும் தன்மை இன்னொரு நிலையான அர்ச்சைக்கு மட்டுமே பொருந்தும் என்பது நம் முன்னவர்கள் கருத்து.)

கள்ளத்தே நான்

அறிவற்றவன் என்று உலகத்தார் அறியமுடியாதபடி வெளி வேஷங்களால் தன்னை மறைத்து கள்ளன் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அறிவு இல்லாதவர்களிடம் தன்னிடம் தன்னுடைய அந்தராத்மா அறிய தீய குணங்கள் ஒன்றும் கிடையாது என்று சொல்லி ஏமாற்றுவாராம். அறிவாளிகளிடம் தன்னிடம், தன் அந்தராத்மா அறிய ஒரு நல்ல குணமும் கிடையாது என்று சொல்லி நைச்சானுசந்தானம் வேஷம் தரித்து, அவர்களும் இவருக்கு ஆத்மாவை பற்றிய அறிவும், பரமாத்மாவைப் பற்றிய அறிவும் அவசியம் இருக்கும் என்று நினைக்கும்படி செய்து அவர்களையும் ஏமாற்றுவாராம்.

பிறப்பில் இருந்தே தீய குணங்களுக்கு கொள்கலமாக இருந்ததாகவும், அவை ஒன்றும் தமக்கு இல்லை என்று மற்றவர்களை நம்ப செய்ததாகவும், அதுவும் எம்பெருமான் சாட்சியாக இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் போதே இந்த கள்ளத்தனங்களை செய்ததாக சொல்கிறார். கள்ளத்தனங்களை செய்த போதும், இப்போது அப்படி இல்லை என்று காட்டிக்கொள்ளும் இந்த சமயத்திலும், எம்பெருமான் கூடவே சாட்சியாக இருந்தார் என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்.

நானும் தொண்டாய்

ராமாயணத்தில் பகவத் சம்பந்தம் இல்லாதவனை குறித்து வால்மீகி தன்னை தானே நிந்தித்து கொள்வதை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.

யஶ்ச ராமஂ ந பஶ்யேத்து யம் ச ராமோ ந பஶ்யதி, நிந்தித ஸ்ஸர்வல்லோகேஷு ஸ்வாத்மாப்யேநம் விகர்ஹதே“. இராமாயணம் அயோத்யா காண்டம் (17-14)

‘யார் ராமனைப் பார்க்கவில்லையோ அல்லது ராமனைக் காணவில்லையோ, அவர் மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்து மனிதர்களாலும் குற்றம் சாட்டப்படுவார். தன்னை தானே கூட இகழ்ந்து கொள்வான்.” என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இங்கு ஆழ்வார், ஆத்ம குணங்கள் நிரம்பியவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகளை ஒரு நன்மையும் இல்லாத தானும் செய்ய வந்ததாக சொல்லி, நல்லவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய வந்ததால் தன்னை தானே இகழ்ந்து கொள்கிறார்.

தொண்டுக்கே கோலம் பூண்டு

எம்பெருமான் விஷயத்தில் கள்ளத்தனம் செய்வதோடு மட்டும் இல்லாமல், சத்வ குணங்களை கொண்ட நல்லவர்களும் தன்னை கொண்டாடும்படி வேஷங்களையும், பெயர்களையும் வைத்துக்கொண்டு உள்ளதாக ஆழ்வார் கூறுகிறார். தன் உடம்பு முழுவதும் 12 திருமண் இட்டுக்கொண்டும் பஞ்ச ஆயுதங்களை தரித்துக்கொண்டும் மற்றவர்களை ஏமாற்றியதாக சொல்கிறார்.

ஆழ்வார் பஞ்ச ஆயுதங்களையும் தரித்து கொண்டதாக சொல்கின்ற உரைநூல் ஆசிரியர் காலத்திலோ அல்லது அதற்கு முற்பட்ட காலங்களிலோ பஞ்சசம்ஸ்கார நிகழ்வின் போது ஐந்து ஆயுதங்களையும் தரிக்கும் வழக்கம் இருந்து இருக்கலாம், அது தற்பொழுது சங்கு சக்கரங்களை தரிப்பதோடு உள்ளது.

கோலம் பூண்டு என்று சொல்வதால், கோலம் மட்டும் பூண்டு கொண்டு, அடிமைத்தனம் (கைங்கர்யம்) எதுவும் செய்யாமல் என்றும் கொள்ளலாம். ஆத்ம குணம் நிறைந்தவர்கள் செய்ய வேண்டிய அடிமைத்தனங்களை செய்யாமல் இருந்தேன் என்பதை “தொண்டுக்கே” என்ற ஏகாரத்தின் மூலம் சொல்கிறார்.

மனப்பூர்வமாக இல்லாமல், வெளி வேஷத்திற்காக அச்சுதா, அமரர் ஏரே, ஆயர் தம் கொழுந்தே (திருமாலை 2), என்று எம்பெருமான் பெயர்களை சொல்லியும், இச்சுவை தவிர, யான்அச்சுவை பெறினும் வேண்டேன் (2) என்று அவன் இனிமையை பேசியதாகவும், நாவலிட்டுழி தருகின்றோம், நமன் தமர் தலைகள் மீது (1) என்று பிறர் மயங்கும்படி எமன் முதலியோர் தலையில் கால் வைக்கின்றேன் என்றும், தன்னை ஒரு பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு பிறருக்கு உபதேசம் செய்கிறேன் என்றும் இப்படி எத்தனை பிதற்றினேன் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

எண்ணங்கள், ஊற்று போல் புறப்படும் நெஞ்சத்தில் எழுந்தருளி இருப்பதால் நினைப்பவர்கள் நினைப்பதையெல்லாம் கூடவே இருந்து அறிகிறான் என்பதை தான் உணர்ந்ததாக சொல்கிறார்.

சகுந்தலை, துஷ்யந்தனைப் பார்த்து சொன்ன வார்த்தைகளை இங்கே உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார். “துஷ்யந்த மஹாராஜனே, நான் ஒருவனே இருக்கிறேன் என்று நீ எண்ணுகிறாய், இதயத்தில், நித்யவாசம் செய்கின்ற ஆதிபுருஷனான பகவானை நீ அறியவில்லை, எவரொருவர் பாப கர்மங்களை அறிபவரோ, அவர் அருகிலேயே, நீ பாபத்தைச் செய்கிறாய்” என்று சகுந்தலை கூறிய வார்த்தைகள் இங்கே கவனிக்க தக்கவை. எல்லாம் அறிந்தவன் ஆன, எல்லாவற்றையும் நியமிக்கின்றவன் ஆன, எம்பெருமான் நெஞ்சினில் இருக்கும்போதே, யாருக்கும் தகாத காரியங்களைச் செய்ததாக ஆழ்வார் கூறுகிறார்.

வெள்கிப் போய்

தன்னுடைய கள்ளத்தனத்தையும், அவன் எல்லாம் அறிபவன் என்பதையும், அவன் நெஞ்சினில் எப்பொழுதும் இருப்பவன் என்பதையும் நினைத்தவுடன் ஆழ்வார் வெட்கம் அடைகிறார். இப்படி வெட்கம் அடைந்து, தலை குனிந்து எம்பெருமான் முன் நிற்கமுடியாமல், அவரை விட்டு விலகி போனார். மற்ற விஷயங்களில் வெட்கம் அடைந்தால், அது இல்லாத இடமாக பார்த்து விலகி போவது போல், எம்பெருமான் இல்லாத இடம் இல்லை என்பதை சிந்திக்க மறந்து, பெரியபெருமாள் இல்லாத இடமாக, ஆழ்வார் தேடி போவதாக சொல்கிறார்.

என்னுள்ளே நான்

சம்சாரிகள் சுத்தமாக வெட்கம் அற்றவர்கள் ஆகையால், அவர்கள் விலவறச் சிரிக்கும் விஷயத்தில் ஆழ்வாரோடு சேர மாட்டார்கள்; பெரிய பெருமாளை விட்டு ஆழ்வார் விலகி விட்டதாக நினைத்தாலும், முன்னே இருந்தால் கூட ஆழ்வாரை பார்த்து சிரிப்பது என்பது எம்பெருமானுக்கு இஷ்டம் இல்லாத ஒன்று, ஆகையால், பெரியபெருமாளும் ஆழ்வாருடன் இந்த விஷயத்தில் சேர மாட்டார்; இதனால், ஆழ்வார் மட்டும் தனக்கு தானே சிரித்து கொள்ள வேண்டி உள்ளது. தாம் சிரிக்க தக்கவன் என்பதை உணர்ந்து, கூட சிரிப்பவர் யாரும் இல்லாமையால், இவ்விஷயத்தில், இவரே இவர்க்கு துணை ஆனார் என்று உரை ஆசிரியர் கூறுகிறார்.

விலவறச் சிரித்திட்டேனே

விலா எலும்புகள் முறியும் படி சிரித்தேன் என்று ஆழ்வார் கூறுகிறார். தாம் செய்த காரியம், சிரிக்கத்தக்க காரியங்களின் எல்லையில் நிற்பதால், தன் சிரிப்புக்கும் எல்லை இல்லை என்று சொல்கிறார். தீக்குளிக்க நினைப்பவர்கள், முதலில் வெற்றலை போட்டுகொண்டு தீக்குளிக்கலாம் என்று நினைப்பது போல், பெரிய பெருமாளை விட்டு அகன்று அழியலாம் என்று நினைப்பதுவும் ஒன்றே என்று எண்ணி சிரிக்கிறார்.

பரத பெருமான், இராமபிரானை தேடி, அந்த பரத்துவாச முனிவர் சொன்ன ஆசிரமத்தை அடைந்தேனோ என்று சத்ருக்னனிடம் மகிழ்ச்சியுடனும் ஒளிரும் முகத்துடனும் சொல்கிறார்.

கச்சந்நேவ மஹாபாஹுர்த்யுதிமாந் பரத ஸ்ததா.

ஷத்ருக்நம் ச அப்ரவீத்தரிஷ்டஸ்தாநமாத்யாம் ச ஸர்வஷஃ৷৷

மந்யே ப்ராப்தாஃ ஸ்மதஂதம் தேசம் பரத்வாஜோ யம் அப்ரவீத். நா அதிதூரே ஹி மந்யே அஹம் நதீஂம் மந்தாகிநீமிதஃ (இராமாயணம், அயோத்தியா காண்டம் 2.99.8 மற்றும் 9)

சரம ஸ்லோகம் கேட்பதற்கு முன்னால், அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் அதனை அடைய வழிகளை கேட்டு அறிந்து, அவை அரியனவை என்று சோகத்துடன் இருந்தான். கிருஷ்ணனிடம் மீண்டும் கேட்டால் அவன் அதற்கும் அவன் ஒரு பரிகாரம் சொல்வான், அவனை அதன் மூலம் அடையலாம் என்ற எண்ணத்தில் அங்கேயே இருந்தான். அதே போல், அர்ச்சுனன் சோகத்துடன் இவ்விஷயத்தை விட்டு அகன்று விடுவானோ என்று எம்பெருமான் சரம ஸ்லோகம் அருளி செய்கிறார்.

அதே போல் ஸ்வாமி நம்மாழ்வார் (திருவாய்மொழி 1.1.3)ல், “அந் நலனுடை ஓருவனை நணுகினம் நாமே” என்று சொல்வதும் “எம்பெருமானை நீசரில் நீசரான நாமோ நணுகினோம்!” என்ற பொருளில் வரும்.

பரதனும், அர்ச்சுனனும் நம்மாழ்வாரும் எம்பெருமானை நெருங்கும் போது, இங்கே தொண்டரடிப்பொடி ஆழ்வார், இவ்விஷயத்தில் இனி பெரியபெருமாளை அணுக கூடாது என்று ஆசையற்று நீங்க பார்க்கிறார். ஆகையால், வெற்றிலை தின்று, பூச்சூடி, தீக்குளிப்பவர்களை போலே சிரித்துக்கொண்டே எம்பெருமானை விட்டு அகலப் பார்க்கிறார்.

இந்த பாடலுடன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னிடம் நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை, கெட்ட குணங்கள் அத்தனையும் உண்டு என்று சொல்லும் நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி நிறைவடைகிறது. இனிஅடுத்து வரும் பகுதி, ஆழ்வார் அருளி செய்த திருமாலையின் மிக முக்கிய பகுதிக்கு நம்மை அழைத்து செல்லும். அதனை அடுத்த பாசுரம் பற்றிய பதிப்பில் அனுபவிக்கலாம். நன்றி.

திருவேங்கடமுடையான் – திருமங்கையாழ்வார் (5)

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்கு தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே  சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் பற்றி காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதிதிருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு பார்த்து உள்ளோம். இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பார்ப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை முன்பு பார்த்தோம். இப்பொழுது திருவாய்மொழியில் உள்ள 40 பாசுரங்களை மூன்று பகுதிகளாக காண்போம்.

பெரியதிருவந்தாதியில் திருவேங்கடமுடையானை பற்றிய ஒரு (1) பாடலை இங்கே காணலாம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் அருளிச்செய்த 61 பாசுரங்களைப் பற்றி இங்கே சுருக்கமாக காணலாம்.

பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் ஆறு திவ்யப்ரபந்தங்களை அருளி உள்ளார். அவை,

  • பெரிய திருமொழி
  • திருவெழுகூற்றிருக்கை
  • சிறிய திருமடல்
  • பெரிய திருமடல்
  • திருகுறுந்தாண்டகம்
  • திருநெடுந்தாண்டகம்

ஆழ்வார் பெரிய திருமொழியில் பற்பல திவ்யதேச எம்பெருமான்களை பற்றி பாடுகிறார். முதலில் ஜோஷிர்மட், பத்ரிகாசிரமம் என்று தொடங்கி வடநாட்டு திவ்யதேசங்களில் தொடங்கி தெற்கு நோக்கி தன்னுடைய ஆடல்மா என்ற குதிரையில் பயணம் செய் து பற்பல திவ்யதேசங்களுக்கு சென்று அங்குள்ள எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்கிறார். அதில் திருவேங்கடம் பற்றி நான்கு பதிகங்கள் பாடி உள்ளார்.

அவற்றில் முதல் பதிகமான கொங்கு அலர்ந்த என்பதை இங்கே பார்த்தோம். அடுத்த பதிகமான தாயே தந்தையே என்ற பதிகத்தில் உள்ள பாசுரங்களை இங்கே கண்டோம். அடுத்த பதிகமான கண்ணார் கடல் சூழ் என்ற பதிகத்தின் பாசுரங்கள் பற்றி இங்கு பார்த்தோம். அடுத்த பதிகமான வானவர் தங்கள் சிந்தை என்ற பெரிய திருமொழி (2.1) இரண்டாம் பத்தின் முதல் பதிகத்தை பற்றி இங்கே கண்டோம்.

இனி திருமங்கையாழ்வார் திருவேங்கடமுடையான் மீது பாடிய மற்ற பாடல்களை கீழே காண்போம். நன்றி.

பெரியதிருமொழி

4.3.8

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை, மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை, தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்  செம்பொன் செய் கோயிலி னுள்ளே, மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஓழிந்தேனே.

இங்கே, பாலோடு சக்கரையும் சேர்த்து பருகுவார் போல் க்ருஷணாவதாரத்தோடு திருவேங்கடமுடையானையும் சேர்த்து அனுபவிக்கிறார். தன்னுடைய பேரனோடு பகைத்த பாணாசுரனின் ஆயிரம் தோள்கள் கீழே விழும்படி அன்று திருவாழியை தொட்டவனை, இன்னமும் விரோதிகள் வந்தால் என்ன செய்வது என்று ஒளிபடைத்த சிகரங்களை உடைய திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற, வேதங்களை பிரதிபலிக்கின்றவனாய், தானே பிரகாசம் மிக்கவனாய், தெற்கே திலகம் போல் இருக்கின்றவர்கள் எல்லோரும் கூடும் திருநாங்கூர் செம்பொன்கோவிலில் கண்டு தொழுதேன்.

4.7.5

வேடார் திருவேங்கடம் மேய விளக்கே, நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், சேடார் பொழில் சூழ் திருவெள்ளக் குளத்தாய், பாடா வருவேன் விணையாயின பாற்றே.

திருவெள்ளக்குளத்தில் இருப்போருக்கு முகம் காட்டிக் கொண்டுள்ள எம்பெருமானிடம் , தன் பாவங்களை நீக்கு என்ற ஆழ்வாரிடம், அங்குள்ள புகழ் பெற்ற வேதியர்கள் போல் சில தர்மங்களை செய்து ஆழ்வாரும் விரோதிகளை போக்கிக்கொள்ள கூடாதோ என்ற எம்பெருமானிடம், கானமும், வானரமும், வேடுவரும் என்று எல்லாவற்றிற்கும் முகம் காட்டி கொண்டுள்ளவன் அன்றோ அவன்; தனக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டுகிறார்.

பரிவிற்கும் ஆண்பிள்ளைத்தனத்திற்கும் குறைவற்றும், திருமலையில் நின்றும், வேடுவர்கள் நிறைந்திருக்கின்ற அங்கே நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமான் தன்னுடைய ரூப, ஸ்வரூப குணங்களுக்கு தானே பிரகாசம் கொடுக்கின்றான் என்றும், தேசம் எங்கும் இருக்கின்ற கீர்த்தியுடைய வேதியர்கள் நிறைந்துள்ள, தளிர் சோலைகளில் சூழப்பட்ட திருவெள்ளக்குளம் என்ற திருநாங்கூர் திவ்யதேசத்தில் எழுந்தருளி இருப்பவனே என்றும் எம்பெருமானுடைய குணங்களை பாடி வருகின்ற தன்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் சிதற அடிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
வடநாட்டுத் திருப்பதிகளில் வேங்கடமலைக்கு உள்ள சிறப்பு சோழநாட்டுத் திருப்பதிகளில் இத்திருவெள்ளக் குளத்திற்கு உண்டு என்பது வழக்கம். இந்த ஒற்றுமை விளங்கவே “வேடார் திருவேங்கடம் மேயவிளக்கே!” என்று இங்கே விளிக்கின்றார்.  திருவேங்கடமலை விஷயமான “கண்ணார் கடல் சூழ” என்ற திருமொழியில் அடியேன் இடரைக்களையாயே என்றதும், இந்த ஒற்றுமையை குறித்தே என்று கொள்ளலாம்.

5.3.4

வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்க்கட்கு அரசளித்த, காம்பின் ஆர்த் திருவேங்கடப் பொருப்ப. நின் காதலை அருள் எனக்கு, மாம் பொழில் தளிர் கோதிய மடக்குயில் வாயது துவர்ப்பு எய்த, தீம் பலங்கனித் தேனது நுகர் திருவெள்ளறை நின்றானே!

மாஞ்சோலையிலே சென்று அங்குள்ள தளிர்களைத் தின்ற பெண்குயில் வாய் துவர்ப்படைந்து போக, அதனை போக்க வேறு சுவை வேண்டி, இனிய பலாப்பழத்தின் தேனினை சுவைக்கின்றது. அத்தகைய திருவெள்ளரையில் நின்ற எம்பெருமானிடம், பாரத போரில் மேல் விழுகின்ற குதிரைகள் மாய்ந்து போகும்படியும், எதிரிகள் உயிர் போகும்படியும் செய்து, பஞ்ச பாண்டவர்களை வெற்றி பெற செய்த உதவி செய்தவனும் மூங்கில்கள் நிறைந்த திருவேங்கட மலையில் உள்ள அவனிடத்தில் பரமபக்தியை பிறப்பித்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

காவ்யங்களிலும், நாடகங்களிலும் ஆகமங்களிலும் ஈடுபட்டு அவைகள் கசந்து வெறுப்புற்றவர்கள் வேதாந்த நூல்களினால் பகவத் அனுபவம் செய்து களிக்கின்றார்கள் என்று உள்ளுறை பொருளாக கூறுகிறார்.

5.5.1

வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளாள், மருவாளா என்குடங்கால் வாள் நெடுங்கண் துயில் மறந்தாள், வண்டார் கொண்டல் உருவாளன் வானவர் தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவங் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே.

இது திருமங்கையாழ்வார் பாடும் தாய் பாசுரம் ஆகும். திருவரங்கம் பற்றி ஆழ்வார் பாடிய ஐந்து பதிகங்களில் இரண்டாவது பதிகம். ஆனால் இதில் திருவரங்கமே என்று சொல்லாமல், வேங்கடமே வேங்கடமே என்று திருவேங்கடத்தைப்பற்றி ஆழ்வார் சொல்வதை உரையாசிரியர் பெரியபெருமாள் இங்கு வந்து சேர்ந்த வரலாறு கூறுவதாக கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அங்கு உள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக ரிஷிகளும் நம் ஆச்சார்யார்களும் சொல்வார்கள். பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு இருந்து பயணம் தொடங்கி, வரும் வழியில் திருவேங்கட மலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சயனிப்பதாக சொல்வார்கள்.

திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் என்ற திவ்ய ப்ரபந்தத்தின் முதல் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்று சொல்லி, விண்ணவர் கோனான எம்பெருமான், வேங்கடவனான வந்தான் என்கிறார். இரண்டாம் பாட்டில் அன்று நேர்ந்த நிசாசரரை என்று, நம்பெருமாள் (உத்ஸவர்) இராவண வதத்திற்கு பிறகு தெற்கு வாசல் வழியாக வந்து சேர்ந்ததை சொன்னார். மூன்றாம் பாட்டில் “மந்திபாய் வடவேங்கடமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான் அரங்கத்தரவினணையான்” என்று சொன்னதை, திருவேங்கடமலையில் இருந்து, வடக்கு வாசல் வழியாக பெரியபெருமாள் (மூலவர்) வந்து திருவரங்கத்திலே நுழைந்தான் என்று பட்டர் என்ற ஆச்சாரியார் சொல்வார்.

மேலும், திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலமாக இருப்பதால், அடுத்த பயணத்திற்கு காத்து இருப்பவர் போல் தெரிகிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக ஸேவை சாதிப்பதால் இனி எங்கும் போகவேண்டாம் என்ற தோற்றத்தோடு இருப்பது போல் உள்ளது பொருத்தமாக இருக்கும். ஆக, திருவரங்கத்துக்கு மூலம் திருமலை என்பதால், இப்போது திருவரங்கத்திலே  ஆழ்வார்க்கு ஏற்படும் பற்று, திருமலையளவும் சென்றதனால் ‘வேங்கடமே வேங்கடமே’ என்கிறார் என்று விளக்கம் கொடுக்கிறார்.

தன் வயது, பருவத்தின் காரணமாக, ஒரு சில விஷயத்தை சிலருக்கு சொல்லி, ஒரு சில விஷயத்தை சிலருக்கு மறைத்து என்று மனிதர்கள் இருப்பார்கள்; உதாரணமாக தோழிகளுக்கு சொல்லும் மகள் சில விஷயத்தை தாய்க்கு சொல்ல மாட்டாள்; ஆனால் தன்னுடைய பெண், அப்படி இல்லாமல், வேங்கடமே, வேங்கடமே என்று எவருக்கும் அஞ்சாமல் / வெட்கப்படாமல் பிதற்றுகின்றாள், என்கிறாள்.

பரத்துவத்தை பற்றி சொல்லாமல், வியூகத்தை சொல்லாமல், விபவங்களை சொல்லாமல், விட்டு விட்டு, அவன் உகந்து அருளின தேசத்தை மட்டுமே (வேங்கடமே) என்று பிதற்றுகிறாளே தவிர அதனுள் புகுந்து செல்வதற்கு அறியாதவள், தன் மகள் என்கிறாள். காட்கரை ஏற்றும் அதனுள் கண்ணா (திருவாய்மொழி, 9.6.7) என்று நம்மாழ்வார் திவ்ய தேசத்தையும், எம்பெருமானையும் சேர்த்து சொன்னது போல் இல்லாமல், இங்கு திருவேங்கடமுடையான் என்று குறிப்பிடவில்லை.

நீண்ட கண்களில் உறக்கத்தை மறந்துவிட்டாள் ; தன்னுடைய மடியிலும் பொருந்த மாட்டேன் என்கிறாள்; வேறு யார் மடியில் தான் பொருந்துகிறாளோ ? திருப்பாற்கடலில் பிராட்டியை கைகொண்டவனான எம்பெருமான் தன் மகள் விஷயத்தில் செய்த காரியங்களை தான் நினைக்க முடியுமோ என்று சொல்வதாக பாசுரம். கணவனின் ஊர் பெயரை அஞ்சாமல் கூச்சம் கொள்ளாமல் பிதற்றுகின்றாள்; தன்னுடைய வடிவைக்காட்டி முன்பு திருப்பாற்கடலில் இருந்து பிராட்டியை கொள்ளை கொண்டான், இன்று ஸம்ஸாரக் கடலில் இருந்து தன் மகளை கொள்ளை கொண்டான் என்றும் எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைகளைக் கொள்ளை கொள்வதே வேலை என்றும் உரையாசிரியர் கூறுகிறார்.

ஸம்ஸாரத்துக்கு ஆளாகாதபடி செய்யும் அனைத்தும் கொள்ளை கொண்டது போல் என்று சொல்லி, தாய் வசத்தில் இருக்கும் மகளைகூட, எம்பெருமான் கொள்ளை கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமானால் ஏற்று கொள்ள கூடிய பெருமை ஒருவரால் சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக இருகின்ற ஸம்ஸாரத்திலே இன்று இப்படிப்பட்ட பகவத் விஷயம் கிடைத்தது என்றால் அதற்கான காரணம் தன் பெண் அறிய மாட்டாள் என்றும், கரையிலே நிற்கிற தான் எப்படி அறிவேன் என்று தாய் சொல்வது போல் உள்ள பாசுரம்.

5.6.7

சிந்தனையைத் தவநெறியைத் திருமாலை, பிரியாது வந்து எனது, மனத்திருந்த வடமலையை, வரி வண்டார் கொந்தணைந்த பொழில் கோவல் உலகளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை, யான் கண்ட தணி நீர்த் தென் அரங்கத்தே

“ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்” (திருவாய்மொழி 3.3.1) என்று நம்மாழ்வார் சொன்னது போல், ஒருவருக்கு உண்டாகிற கைங்கரிய மனோரதங்களுக்கு இலக்கானவனும், அவைகளுக்கு உபாயமாக இருப்பவனும், உபாயத்திற்கு புருஷகாரத்வம் செய்யும் திருமகளுடன் சேர்த்தி கொள்பவனும், திருவேங்கட மலையின் நிர்வாகம் செய்பவனும், எம்பெருமானே ஆவார்.

அப்படியிருந்தும், அதனை விட்டு எழுந்து, தன்னுடைய நெஞ்சத்தில் ஒரு நொடி கூட விட்டு பிரியாமல் இருப்பவனும் அவனே; அழகிய பூங்கொத்துகள் உள்ள வண்டுகள் இருக்கும் சோலைகளைக் கொண்ட பூங்கோவலூரில், உலகங்களை அளப்பதற்குகாகத் திருவடிகளை நீட்டின ஸ்வாமியாக ஸேவை ஸாதிப்பவனுமான எம்பெருமானை தான் கண்டது திருவரங்கத்தில் என்கிறார்.

அந்தணனை என்று சொன்னது, வேதத்தை காப்பவன் என்று சொல்லி, பிரம்மச்சர்ய வேஷத்தை குறிப்பிட்டு, உலகளந்த விஷயத்திற்கு நம்மை கூட்டிச்சென்றது.  அந்தணன் என்பது, அழகிய தண்மை பொருந்தியவன், பரம தயாளு என்ற அர்த்தத்தில் வருகிறது.

6.8.1

மான் கொண்ட தோல் மார்வில் மாணியாய், மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திரு வேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே.

மான் தோலை மார்பிலே போர்த்திக்கொண்டு, மஹாபலியிடம் பூமியை யாசித்து பெற்று, அவனை தன் திருவடிகளால் ஆக்ரமித்துக்கொண்ட தேனை உடைய சாரல்களை கொண்ட திருமலையில் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானை தான் தேடி சென்று திருநாரையூரில் சேவித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

எம்பெருமான் தன்னைப் பெறுதற்குப் பல அவதாரங்கள் எடுத்தார் என்றும், அந்த சமயங்களில் தான் ஒரு புக்தி அற்றவனாக இருந்ததாகவும், இன்று தான் அவனைத் தேடித் திரிய வேண்டி உள்ளது என்றும் ஆழ்வார் கூறுகிறார். நீண்ட பயணம் சென்று திருமலை உச்சியிலே காண வேண்டாமல், தாகம் எடுத்தவார் தண்ணீர் கண்ட இடத்திலே குடிப்பதை போலே திருநறையூரிலே கண்டு சேவித்தேன் என்கிறார்.

கொண்டல்லது போகேன் என்று தானம் வாங்கியதை சொல்கிறார். மாவலி தன்னையுடையது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பூமியை, தன்னுடையதாக ஆக்கிக்கொண்ட எம்பெருமான் என்கிறார். அவனல்லாததை அவனுடையதாக்கி, தனக்கு இதுவே போதும் என்று மாவலியிடம் கேட்டு வாங்கியதை சொல்கிறார். கையில் நீர் விழுந்தவுடன், மனம் மாறுவதற்குள் சுகுமாரமான திருவடிகளாலே காடும் மேடையும் எல்லை நடந்து அளந்து கொண்டவன் என்கிறார். எல்லோரையும் அடிமை கொள்ள கூடியவன், (சர்வசேஷி), எல்லோருக்கும் அதிகாரி (சர்வாதிகாரனாய்) இருக்கும் எம்பெருமான் தன்னை தாழ விட்டுக்கொண்டது தான் தோற்றதால் அல்ல என்றும் தன்னை தாழ விட்டுக் கொள்ளும் நல்ல குணம் உடையவன் என்றும் சொல்கிறார். உலகளந்த போது, எம்பெருமானை தவறவிட்டவர்கள், இப்போது தவறவிட கூடாது என்பதற்காக திருமலையில் நிற்பதை சொல்கிறார்.

7.3.5

ஆங்கு வெந் நரகத்து அழுந்தும் போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு, தாமரை யன்ன பொன்னார் அடி எம் பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற, வேங்கடத்து அரியைப் பரி கீறியை வெண்ணெயுண்டு உரலினிடை யாப்புண்ட தீங் கரும்பினை, தேனை நன் பாலினை அன்றி யென் மனம் சிந்தை செய்யாதே.

கொடிய நரகங்களிலே நோவுபட நேர்ந்த போது, அங்கு வந்து, பயப்படவேண்டாம் என்று அடியேனை, அழகு மிக்க திருவடிகளையுடையனும், தனக்கு உபகாரம் செய்பவனும், மேல் உலகங்களுக்கு எல்லாம் அலங்காரமாய் இருக்கின்ற, திருமலையில் எழுந்தருளி இருக்கிற, சிங்கம் போன்றவனும், குதிரை முகத்துடன் வந்த அசுரன் வாயைக் கிழிந்தவனும், வெண்ணையை திருடி உண்டு, உரலோடு கட்டுண்டு இருந்தவனும், கரும்புச்சாறு மற்றும் தேன் போன்றவனும், இனிய பால் போன்ற திருநறையூர் நம்பியை தவிர வேறு எவரையும் தன் நெஞ்சம் நினைக்காது என்கிறார்.

7.10.3

எங்களுக்கு அருள் செய்கின்ற ஈசனை வாசவார் குழலாள் மலை மங்கை தன் பங்கனை, பங்கில் வைத்த உகந்தான் தன்னைப் பான்மையைப் பனி மா மதியம் தவழ் மங்குலைச், சுடரை வட மாமலை உச்சியை, நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை, பகலைச் சென்று நாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே.

தங்கள் விஷயத்தில் கிருபை பண்ணுகிற ஸர்வேச்வரனும், வாசம் வீசுகின்ற கூந்தலை உடைய பார்வதியைத் தன்னுடலில் பாதி உடையவனான ருத்ரனை, தனது ஒரு பக்கத்திலே இடம் கொடுத்து அதிலே ஒரு உகப்பை உடையவனும் இப்படிப்பட்ட சீல குணமே சுபாவம் உள்ளவனும், குளிர்ந்த முழு சந்திரன் தவழ்கின்ற ஆகாசமாய் நிற்பவனும், சூரியனை அந்தர்யாமியாக உள்ளவனும், திருவேங்கடமலையின் உச்சியில் இருப்பவனும், நம்மால் விரும்பி வணங்கப் படுபவனும், இரவு பகல் என்ற இரண்டிற்கும் நிர்வாஹகனை சென்று நாடி திருகண்ணமங்கையில் கண்டு கொண்டேன் என்று ஆழ்வார் கூறுகிறார்.

8.2.3

அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள், உள் மெலிந்தாள் இது வென்கொலோ.

பரகாலநாயகியானவள் (திருமங்கை ஆழ்வார் நாயகியாக பாடுவது) அருவிகள் பொழியும் திருமலை என்றும், திருநீர்மலை என்றும் சொல்லி வாய் பிதற்றுகின்றாள். திருமெய்யத்தைப் பற்றி, அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்த இடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று என்று கேள்வி கேட்டு அதற்கும் பதில் எதுவும் கிடைக்காததால் பெருமூச்சு விடுகிறாள். சீர் மிகுந்த திருக்கண்ணபுரம் என்று சொல்லியபோது, நீர் பண்டமாக உருகுகிறாள். நெஞ்சு தளர்கின்றாள்; இதற்கு இவள் செய்த பாவமே அன்றி வேறு எந்த காரணமும் தெரியவில்லை என்கிறாள்.

9.7.4

பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று, எண்ணுவார் எண்ணம் அது ஓழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல், விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடத்து உளார் வளங் கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே.

இசை விளக்குகின்ற இனிய பேச்சுக்களுடைய பெண்களை அணைப்போம் என்ற சிந்தையில் உள்ளவர்களை சிந்தனையை மாற்றி, நாம் உஜ்ஜிவிக்க வேண்டுமானால், நித்யஸூரிகளுக்காக பரமபதத்தில் காட்சி கொடுக்கின்றவரும் திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவருமான திருவல்லவாழ் எம்பெருமானுடைய பெருமையை பேசவேண்டும் என்கிறார்.

9.9.9

வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன் தன்னை, புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனை, சிலம்பு இயல் ஆறு உடைய திரு மாலிருஞ் சோலை நின்ற, நலந் திகழ் நாரணனை நணுகும் சகால் என் நல் உதலே

சங்கும் சக்கரமும் உடையனும், மலை போன்ற திரண்ட திருத்தோள்களை உடையவனும், யஜ்ஞோபவீதத்தை உடையவனும், சோலை சூழ்ந்த திருவேங்கட மலையில் உள்ளவனும், வேதியனை, ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுர கங்கையை உடைய திருமாலிருஞ் சோலை என்ற திவ்யதேசத்தில் நிற்பவனும், திருக்கல்யாண குணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந் நாராயணனை, அழகிய நெற்றியை உடையவளான தன்னுடைய மகள் கிடைக்க பெறுவாளா என்று ஆழ்வார் கூறுகிறார். வட திருவேங்கட மலையையும் தென் திருமாலிருஞ்சோலையையும் சேர்த்து ஆழ்வார் அனுபவிக்கிறார்.

10.1.2

பொன்னை மாமணியை அணியார்ந்த ஓர் மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய் என்னை ஆளுடை ஈசனை எம் பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்கா விலே.

நேற்று திருவேங்கடத்தில் கண்ட எம்பெருமானை இன்று திருத்தண்காவில் கண்டேன் என்கிறார். திருத்தண்கா என்பது காஞ்சியில் உள்ள விளக்கொளி பெருமாள்; பொன்போல விரும்பத் தகுந்தவனும் நீலமணி போன்றவனும், அழகு மிக்க ஒரு மின்னல் போன்று ஜவாலை ஸ்வரூபமானவனும் தன்னை அடிமை கொண்ட ஸ்வாமி என்கிறார்.

10.10.5

சொல்லாய் பைங்கிளியே, சுடராழி வலன் உயர்த்த, மல்லார் தோள் வட வேங்கடவன் வர, சொல்லாய் பைங்கிளியே.

பசுமை தங்கிய கிளியே! ஒளிமிக்க திருவாழியை வலத் திருக் கையிலே உயர தாங்கி பிடித்தவனும், மிடுக்குடைய திருத்தோள்களை உடையவனும் வட திருவேங்கட மலையில் எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானை இங்கே வரச்சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். தன்னை அணைப்பதற்கு என்றே பயணம் மேற்கொண்டு திருவேங்கட மலையிலே நிற்கின்ற எம்பெருமானை இங்கு வரச் சொல்கிறார்.

11.3.7

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன் மேய, அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.

கண்ணபிரான் என் நெஞ்சில் எழுந்தருளி இருக்கச் செய்தேயும், எனது கைகளில் வளைகளானவை ஏனோ கழன்று போயின; இவை என்ன ஆச்சரியம் ; பெண்குடியிலே பிறந்துள்ள நாம் வெகு அழகாகப் பெண்மையை உடையவர்களாய் இருக்கின்றோம் ; அந்த எம்பெருமான் விரும்பி இருக்கும் இடமான திருவரங்கமும் திருவேங்கடமலையும், பாடாமல் இருக்கிறோமோ என்கிறார்.

11.5.10

கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான், வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, வெள்ளத்தான் வேங்கடத்தானேலும், கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உலன் கண்டாய் சாழலே.

தோழி, கபட வேடித்தினால் மஹாபலியிடம் இருந்து மூன்றடி மண்ணை இரந்து பெற்று அளந்து கொண்டவன், திருப்பாற்கடலிலே உள்ளான், திருமலையிலே உள்ளான் என்று சொல்கின்றார்களோ ? திருப்பாற் கடலிலும் திருமலையிலும் உள்ளவனே ஆயினும் கலியனுடைய நெஞ்சத்தில் உள்ளான் என்கிறார்.

திருக்குறுந்தாண்டகம்

இம்மையை மறுமை தன்னை எமக்கு வீடாகி நின்ற, மெய்ம்மையை விரிந்த சோலை வியந் திருவரங்கம் மேய, செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமையானை, தன்மையை நினைவார் எந்தன் தலைமிசை மன்னுவாரே. (7)

அமரர் சென்னி பூவினை என்று இதற்கு முந்தைய பாடலில், நித்ய ஸூரிகளுக்குத் தலை மேலணியும் பூவாயிருக்கும் எம்பெருமான், என்று பாடியதை தொடர்ந்து, எம்பெருமான் ஆழ்வார் தலைமீதும் அணியாக இருக்க விரும்புவதை தெரிவிக்க, ஆழ்வார் அதைவிட அவன் சீலத்தை போற்றி பாடும் அடியவர்களை தன் சிரத்திலே ஏற்க விரும்புகிறார் போலும்.

இந்த பிறவியில் இவ்வுலக இன்பத்தையும், மறுபிறவியில் பரமபத இன்பத்தையும் தருபவரும், பல சோலைகளை உடைய வியப்பு தரும் திருவரங்கத்தில் நித்யவாஸம் செய்பவரும், வெவ்வேறு யுகங்களில் கருப்பு சிவப்பு என்று வெவ்வேறு நிறம் கொண்டு உள்ளவரும், விண்ணவருக்கும் மண்ணில்உள்ளவருக்கும் ஒருமையாக திருவேங்கடமலையில் நின்று கொண்டு இருப்பவனுமான எம்பெருமானை நினைப்பவர்கள், தன்னுடைய சிரத்திலே பொருந்த தக்கவர்கள் என்று ஆழ்வார் பாடுகிறார்.

திருமலையில் உள்ள எம்பெருமானை, இங்கு உள்ளவர் பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள் என்றும், மேலுலகத்தில் உள்ளவர்கள் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள் என்று உரையாசிரியர் கூறுவது சிறப்பு.

திருநெடுந்தாண்டகம்

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய், உலக மேத்தும் காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய், பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே. (8)

பல திவ்யதேசங்களையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.

காஞ்சியில் திருநீரகம், என்பது ஸ்ரீ உலகளந்த  பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. அந்த எம்பெருமானை நீரின் ஸ்வபாவத்தை உடைய எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திவ்யதேசம் என்பார்கள்;

நெடுவரையின் உச்சி மேலாய் என்று சொன்னது, இந்த உலகத்தில் உள்ளவர்களும், மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கும்நாடி ஓங்கியுள்ள திருமலையிலே நின்று அருள்பவன் என்பதை குறிக்கும். “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வட வேங்கட மாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற பாசுரங்களிலும் இது சொல்லப் படுகிறது.

நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது பெரிய காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு திவ்யதேசம் ஆகும்.

ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரக ரூபியாக (ஆதிசேஷன் வடிவமாக) இத்தலத்தில் ஸேவை சாதிக்கிறார். நிறைந்தகச்சி என்று சொல்வது பல திவ்யதேசங்கள் நிறைந்த காஞ்சி என்று சொல்வதாகவும், ஆதிசேஷனின் ஒளியால் நிறைந்த கச்சிநகர் என்றும் கொள்ளலாம்.

ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய் என்பது திருவெஃகா திவ்யதேசத்தை சொல்லும். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண் வளர்ந்து அருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை”என்கிறார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா என்ற திருமழிசை ஆழ்வாரின் சொற்களுக்கும், “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா!  நீ கிடக்க வேண்டும் “என்ற சொற்களுக்கும் கட்டுப்பட்டு அந்த ஆழ்வாரின் பின்னே அவன் சென்றும் பிறகு திரும்பி வந்ததும் எம்பெருமானின் ஆச்ரித பாரதந்திரியம் என்ற குணம் இருப்பது என்கிறார். ஆச்ரித ஸ்பர்சமுள்ள ஒரு துறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யம் என்கிறார்.

தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருப்பவன் என்பதை உள்ளுவார் உள்ளத்தாய் என்கிறார். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் (திருவரங்கத்தில்), திருமலை (திருவேங்கடம்) பெருமாள் கோயில் (திருக்கச்சி) முதலான உகந்தருளின இடங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரம உத்தேச்யம் என்றும், சமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற இடங்களில் / திவ்யதேசங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும், நம் ஆசார்யர்கள் சொல்வது இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகமேத்துங் காரகத்தாய் என்பது திருகாரகம் என்ற திவ்யதேசத்தை சொல்வது. இதுவும் திருக்கச்சி மாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ளது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் இருக்கும் இடம் என்பதால் இந்த திருத்தலத்திற்கு திருகாரகம் என்று பெயர் என்பார்கள்.

கார்வானத்துள்ளாய் என்பது திருகார்வானம் என்ற தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியில் உள்ள நான்கு திவ்யதேசங்களில் ஒன்று.

கள்வா என்பது ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்தில் உறைபவனே என்ற பொருளில் வரும். பிறர் அறியாதபடி காரியம் செய்பவனைக் கள்வன் என்பர்; இவன் காத்திருந்து சிறந்தவர்களையே (சத்தான) பிடித்துக்கொள்வார் என்பதால் கள்வன் எனப்படுகிறான்.  

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்“என்று சோழநாட்டு திவ்யதேசங்களில் ஒன்றான ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளி கொண்டருள்கின்றவனை கூப்பிடுகிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய். என்றும், கடிபொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும், மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும், வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும், வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும், விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும், துன்று குழல் கருநிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோரச் சோர்க்கின்றாளே. (16)

இது திருத்தாயார் பாடும் பாடலாக ஆழ்வார் அருளி உள்ளார். “மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே“ என்று கீழ்ப்பாட்டில்(15) சொன்னபோது நாயகன் எதிரே நிற்பதாக நினைத்து மென்மையான கிளி போல் வார்த்தைகள் சொல்லியபோதும் அவன் ஒன்றும் சொல்லவில்லை என்பதால் நிலைகுலைந்து கூப்பாடு போடத் தொடங்கினாள் தன் மகள் என்று திருத்தாயார் சொல்கிறார். அவனுடைய திருகுணங்களான ரக்ஷகத்வமும் லௌலப்யமும் ளெஸசீல்யமும் பாவியாகிய தன்னிடத்தில் பலிக்க இல்லையே என்று கண்ணீருடன் கதறுகிறதை சொல்கிறார்.

கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றது ரக்ஷகத்வத்தை சொல்லியது. நித்யஸூரிகளுக்கு மட்டும் என்று இருந்தாலோ, ராம கிருஷ்ணராக அவதரித்து இடக்கை வலக்கை அறியாத இடையர்களோடு மட்டும் என்று இருந்தாலோ தான் பொறுத்து இருந்திருக்க கூடும் என்றும் அறிவுக்கு கீழ் எல்லையான கன்றுகளையும் ரக்ஷித்த எம்பெருமான், அவனை தவிர வேறு எங்கும் செல்லாத தன்னை ரக்ஷிக்காமல் விட்டது ஏன் என்று கேட்டு கன்றாக பிறக்கவில்லை என்பதாலோ என்று கூறுகிறார். கண்ண பிரானுக்குப் பசுக்களை மேய்ப்பதில் ஸாதாரணமான உவப்பும், கன்றுகளை மேய்ப்பதில் இனிது உவப்பும் ஆகுமாம் என்பது சொல்வழக்கு. நம்மாழ்வாரும் “திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி“ என்கிறார்.

கடி பொழில்சூழ் கணபுரத்து என் கனியே என்றது அக்காலங்களில் மட்டும் அல்லாது பின்னாட்களில் உள்ளவர்களையும் ரக்ஷிக்க திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளி இருப்பது சொல்லப்பட்டது. கடிபொழில்சூழ் என்றது “ஸர்வகந்த;“ என்கிறதன்படி, பரிமளமயனாய் இருக்கிற எம்பெருமானையும் தன்னை தாழ்த்திகொள்ள வல்லவனாய் இருப்பதையும் சொல்கிறது.

கணபுரத்தென் கனியே என்றது அச்சோலையில் பழுத்த பழம் போல இருக்கும் திருக்கண்ணபுர எம்பெருமானான, சௌரிராஜனை சொன்னது. என் கனியே என்பது ப்ரபன்னர்களுக்கு சரியான சமயத்தில் அவர்களது அனுபவத்திற்கு கனியாகவும் மற்றவர்களுக்கு காயாகவும் இருப்பான் என்கிறது.

மன்றமரக்கூத்தாடி மகிழ்ந்தாய் என்றது கண்ணபிரான் குடக்கூத்தாடினதை சொல்கிறது. “இடையர்க்குச் செல்வம் மிகுந்தால், ஆடுவதொரு கூத்து, குடக்கூத்து” என்று சொல்வார்கள். தானும் இடையர்களுடன் சேர்ந்தவர்தான் என்பதை மெய்ப்பிப்பதற்காக இவனும் குடக்கூத்தாடி மகிழ்ந்தான் என்று சொல்கிறார்.

வடதிரு வேங்கடம் மேய மைந்தா என்பது ஒரு ஊரிலே இருந்து தன்னை கொடுத்தது மாத்திரம் இன்றி வைகுந்தத்திற்கும் இந்த பூமிக்கும் இடையே நடுவான திருமலையில் நின்று தன்னைக் கொடுக்கிறதை சொல்கிறது. “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே“ – “வானவர் வானவர்கோனொடும் ஈமன்றெழுந் திருவேங்கடம் என்றும் “கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்“ என்று சொல்வது போல், உயர்ந்தாரோடு தாழ்ந்தாரோடு வித்தியாசம் பாராமல் அனைவரும் கொள்ளை கொள்ளும் வடிவும் (சௌலப்ய சௌசீல்யங்கள்) தனக்கு அரிது என்று பரிதாபமாக ஆழ்வார் சொல்கிறார்.

வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்று சொன்னது, அவனுடைய விரோதிகளை அழிக்கும் சக்தியையும் அசுர ராக்ஷஸர்களின் கூட்டங்களை அடியோடு வெற்றி பெற்ற பெரு வீரனாய் அவன் விளங்கும்போதும் தான் இழக்கிறனே என்று வருந்திச் சொல்கிறார்.

வீரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாயென்றும் என்று சொன்னது, பிராட்டி விஷயத்தில் பித்துபிடித்து, தன்னுடைய ஊரை அவள் பெயராலே சிறப்புறச் செய்து, “நாச்சியார் கோவிலாக்கி”, இப்படி ஒருத்திக்கு எல்லாவற்றையும் செய்பவன் தன் விஷயத்தில் விஷமாக நினைப்பது ஏன் என்ற உள்ளுறை பொருளில் வருகிறது.

சிறிய திருமடல்

மற்று எனக்கு இங்கு கற்பிப்பார் நாயகரே,  நான் அவனை, காரார் திருமேனி காணுமளவும் போய் சீரார் திருவேங்கடமே திருக்கோவல் ஊரே மதிட் கச்சி ஊரகமே பேரகமே பேராமனுதிருத்தான் வெள்ளறையே வெஃகாலே, பேராலி தண்கால் நரையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்த வரங்கம் கணமங்கை (36)

இங்கே ஆழ்வார் பல திவ்யதேசங்களை குறிப்பிடுகிறார்.

பெரிய திருமடல்

தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், என்னும் இவையே முலையா வடிவமைந்த, அன்ன நடைய அணங்கே, – அடியிணையைத்  (4)

திருமாலிருஞ் சோலை மலையையும் திருவேங்கட மலையையும் முலைகளாக உடையவளாய், பொருத்தமான ரூபத்தை உடையவளாய் அன்னத்தின் நடைபோன்ற நடை உடையளாய் தெய்வப் பெண்ணாகிய பூமிப்பிராட்டியின் அழகிய கைகளாலே திருவடிகளைப் பிடிக்கப்பெற்ற எம்பெருமான் என்று திருமங்கை ஆழ்வார் தொடர்கிறார்.

மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை, மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை, கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர் (68)

பளபள என்று மின்னும் சிகரங்களை உடைய திருவேங்கட மலையில் எழுந்தருளி இருக்கின்ற எம்பெருமானை, ஆச்சரியமான திருகுணங்களை கொண்டவனை, திருமாலரின்சோலை மணவாளனை, பகைவரை கொல்ல வல்ல சுதர்சன சக்கரத்தை கொண்டவனை, திருக்கோட்டியூர் பெருமானை என்று பல திவ்யதேச பெருமான்களை இந்த பகுதியில் அழைக்கிறார். தன்னை அடைந்தவர்களது பாவங்கள் அனைத்தையும் ஒழிப்பதனால் வேங்கடம் எனப் பெயர் பெற்றது.

மீண்டும் இன்னொரு ஆழ்வார் / இன்னொரு திவ்யதேசம் பற்றிய சிந்தனையில் சந்திக்கலாம், நன்றி.

RSS
Follow by Email