A Simple Devotee's Views
செங்கமலநாச்சியார் ஸமேத கோபாலக்ருஷ்ண பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்காவளம்பாடி (திருநாங்கூர் திவ்யதேசம் 1) | |||
மூலவர் | கோபாலகிருஷ்ணன் / ராஜகோபாலன் | |||
உத்ஸவர் | கோபாலகிருஷ்ணன் | |||
தாயார் | மடவரல்மங்கை / செங்கமலவல்லி நாச்சியார் (தாயார் தனிக்கோவில் இல்லை) | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் ( ருக்மணி , சத்யபாமாவுடன் திருக்கோலம்) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 275 478 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
திருநாங்கூர் பற்றி
திருநாங்கூர் திவ்யதேசங்கள் பதினொன்று. அவை
1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக்கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன் பள்ளி
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் இந்த 11 பெருமாள்களும் கருட சேவையில் மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் எழுந்தருளி திருவிழா காண்பர். இந்த 11 பெருமாள்களையும் ஒருவர் பின் ஒருவராக திருமங்கையாழ்வார் வந்து மங்களாசாசனம் செய்வார். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்வார். இந்த கண் கொள்ளா கருடசேவை திருவிழாவில் கலந்து கொள்ள, பெரும் திரளாக பக்தர்கள் கூடுவர்.
ஆண்டுதோறும் எம்பெருமான்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் திருநாங்கூரை சுற்றி உள்ள வயல் வெளிகளில் வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. கருடசேவைக்கு முன் நெற் பயிர்கள் காற்றினால் சலசல என்று சப்தமிட, அந்த சத்தத்தை கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரேவேசித்து விட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும் அவரால் மிதிக்கப்பட்ட வயல் வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்றும் இப்பகுதியில் மக்கள் பரிபூர்ணமாக நம்புகிறார்கள்.
இந்த பகுதிக்கு புரசங்காடு என்றும், பலாசவன க்ஷேத்திரம் என்றும், மதங்காச்சரமம் என்றும், நாகபுரி என்றும் உபய காவேரி மத்திமம் என்றும் பல பெயர்கள் உண்டு
திருநாங்கூர் ஸ்தல வரலாறு
பராசக்தியின் தந்தையான தட்சன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே பார்வதிதேவி நேரில் சென்று தட்சனுக்கு புத்திமதிகள் கூற அவன் சிவனை மேலும் இகழ்ந்து பேசினான். இதனால் கோபமுற்ற பார்வதி, தட்சனை சபித்து அவன் யாகத்தை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வர, சிவன் கோபம் அடங்காமல் இவ்வுலகமே அழியும்படியாக கொடூர ருத்ர தாண்டவம், இந்த உபயகாவேரி மத்திமத்தில் வந்து ஆடினார்.
அப்பொழுது சிவனின் தலையில் உள்ள சடாமுடித் தரையில் பட்ட உடன் அதில் இருந்து ஒரு சிவன் தோன்றி நடனம் ஆட, இவ்வாறு ஒவ்வொரு முறையும் சிவனுடைய தலைமுடி தரையில் பட அதிலிருந்து ஒவ்வொரு சிவனாக தோன்ற தேவர்களும், ரிஷிகளும் பேரழிவு வந்துவிடுமோ என்று எண்ணி உலகை காக்குமாறு மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். பரமபதத்தில் இருந்து மகாவிஷ்ணு புறப்பட்டு வரும்போது, இங்கு 11 சிவன்கள் (சிவ ரூபங்கள்) தோன்றி ஆடிக்கொண்டிருக்க, அவனை கண்டதும், சிவன் தனது கொடூரமான தாண்டவத்தை நிறுத்தி தன்னை போல் 11 திருமால்களாக காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டினார். அர்ச்சாவதார மூர்த்திகளாக உள்ள 10 பெருமாள்களை பரமபதநாதன் நினைத்த மாத்திரத்தில் இங்கு வந்து எழுந்தருளினர். சிவன், மஹாவிஷ்ணுவை, ஏகாதச மூர்த்தியாக காட்சி தரவேண்டும் என்று விண்ணப்பிக்க, அவரும் அப்படியே அருளினார். அந்த 11 பெருமாள்கள் நின்ற இடந்தான் இந்த 11 திருநாங்கூர் திவ்யதேசங்கள் ஆகும்.
திருநாங்கூர் 11 கோவில்கள் | வந்து சேர்ந்த 11 பெருமாள்கள் |
---|---|
திருக்காவளம்பாடி – கோபாலகிருஷ்ணன் பாமா ருக்மணியுடன் | துவாரகை – துவாரகதீசன் |
அரிமேயவிண்ணகரம் குடமாடு கூத்தர் | கோவர்த்தனகிரி – கிருஷ்ணன் |
வண்புருடோத்தமம் – புருஷோத்தமன் | அயோத்தி சக்ரவர்த்தி திருமகன் |
செம்பொன்செய் கோயில் – பேரருளாளன் | உறையூர் அழகிய மணவாளன் |
மணிமாடக் கோவில் நாராயணப்பெருமாள் | பத்ரிநாத் நாராயணன் |
வைகுந்தவிண்ணகரம் – வைகுண்ட நாதன் | பரமபதம் நாராயணன் |
திருத்தேவனார்த் தொகை – கீழச்சாலை – மாதவப்பெருமாள் | திருவடந்தை – லக்ஷ்மிவராஹ பெருமாள் |
திருதெற்றியம்பலம் – ரங்கநாத பெருமாள் | ஸ்ரீரங்கம் – திருவரங்கநாதன் |
திருமணிக்கூடம் – வரதராஜப்பெருமாள் | திருக்கச்சி (காஞ்சி) தேவப்பெருமாள் |
திருவெள்ளக்குளம் – அண்ணன்கோயில் ஸ்ரீனிவாசன் | திருப்பதி – ஸ்ரீனிவாச பெருமாள் |
பார்த்தன்பள்ளி – பார்த்தசாரதி | குருக்ஷேத்திரம் பார்த்தசாரதி |
இதன்பின் பதினொரு சிவரூபங்களை திருமால் ஒரு சிவரூபமாக மாற்றி, பார்வதியையும் ஏற்றுக் கொள்ள வைத்ததாக ஐதீகம்.
கோவில் பற்றி
சத்யபாமாவிற்கு பிடித்த பாரிஜாத மலர் செடியை பகவான் கிருஷ்ணன் நட்ட இடம் தான் இந்த திவ்யதேசத் திருத்தலமான திருக்காவளம்பாடி. காவளம் என்றால் பூஞ்சோலை என்று பொருள். இந்தமாதிரி இடங்களில் கிருஷ்ணனுக்கு பிரியம் அதிகம், துவாரகையில் இருந்து அவன் உகந்து வந்து தங்கும் இடமாக கருதப்பட்டு துவாரகைக்கு இணையாக புராணங்களில் பேசப்படுகிறது.
கோவில் சிறியது என்றாலும், அழகாக உள்ளது.
திருக்காவளம்பாடி ஸ்தல வரலாறு
கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசூரனை அழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்களுக்கே மீட்டுக் கொடுத்தான். பின்பு இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன்
இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுத்தான். எனவே சினங் கொண்ட கண்ணன் அவனோடு போர்புரிந்து அவனது பூம்பொழிலை அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக
துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற பொழிலைத் தேடினான். இந்தக் காவளம் பாடியில் நின்றுவிட்டான்.
ஆழ்வார்
திருமங்கையாழ்வாரால் 10 பாடல்கள் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய
மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகில் உள்ளது.
திருமங்கையாழ்வார், நாச்சியாரின் இனிய தமிழ் திருநாமமான “மடவரல் மங்கை” என்பதை மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே (பெரிய திருமொழி 4.6.5) என்று பாடி உள்ளார்.
Google Map
திருக்காவளம்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருக்காவளம்பாடி பற்றி சொல்வது