082 திருச்செங்குன்றூர்

ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று : அவை

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயில் பாதையில் செங்கண்ணூர் ரயில் நிலையம் உள்ளது. பேருந்துகள் உண்டு ; தங்கும் வசதியும் உள்ளது .

இந்த திவ்ய தேசம் திருஆரன்விளைக்கு கிழக்கே சுமார் 9 கீமீ தொலைவிலும், திருப்புலியூர்க்கு மேற்கே 7 கீமீ தொலைவிலும், திருவண்வண்டூருக்கு வடமேற்கே 8 கீ மீ தொலைவிலும், திருவல்லவாழுக்கு வடக்கே 16 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதனை திருச்சிற்றாறு மகா விஷ்ணு கோவில் என்றும் அழைக்கிறார்கள்.

புனித நதியான பம்பை ஆற்றின் துணை நதியான திருச்சிற்றாறு எனும் நதியின் கரையில் அமைந்துள்ள, மிகவும் பழமை வாய்ந்த திருத்தலம். திருமால், ஸ்ரீ இமை யவரப்பன் எனும் திருநாமத்துடன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். தாயார் செங்கமலவல்லி நாச்சியார்.

வைகுண்ட ஏகாதசி மற்றும் திருவோணத் திருவிழா இத்திருத்தலத்தில் முக்கிய விழாக்களாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நகரத்தின் பெயர் செங்குன்றூர். இங்கே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. எம்பெருமானின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் மூன்று பெயர்களையும் ஒரு பாடலில் குறிப்பிட்டு உள்ளார்.

இது கேரளாவின் திருச்செங்கனூர் பகுதியில் உள்ள ஐந்து புராதன ஆலயங்களில் ஒன்றாகும், இது மகாபாரதத்தின் புராணக்கதையுடன் இணைக்கப்பட்டுள்ளது, இங்கு ஐந்து பாண்டவர்கள் தலா ஒரு கோவிலைக் கட்டியதாக நம்பப்படுகிறது; திருச்சிற்றாறு    – தர்ம புத்திரராலும், திருஆரமுளா அர்ஜு னனாலும், திருப்புலியூர் பீமனாலும், திருவண் வண்டூர் நகுலனாலும், திருக்கடித்தானம் சகாதேவனாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பார்கள்.

மகாபாரதத்தில் தர்மர் துரோணரை போரில் வெல்வதற்கு ‘அஸ்வத்தாமன் மரணம்’ என்பதை உரக்கச் சொல்லி, யானை என்பதை மெல்ல சொல்லியது அவரின் மனதை வருத்தியது; அதற்காக தர்மர் இந்த தலத்திற்கு வந்து இந்த கோவிலை செப்பனிட்டு, திருச்சிற்றாரில் ஸ்நானமும் மற்றும் பூஜைகளும் செய்து மனநிம்மதி அடைந்ததாக வரலாறு. இதனை தர்ம புத்திரர் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்வார்கள். அதனால் இத்திருத்தலம் ‘தருமர் கோவில்’, ‘தரும ஷேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

தர்மர் இங்கு வருவதற்கு முன்பே இந்த திருத்தலம் இருந்ததாகவும் தேவர்கள் இந்த எம்பெருமானை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. “இமையவர்” என்ற பெயர் தேவர்களைக் குறிக்கிறது, அவர்கள் இங்கு பலத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. துர்வாச முனிவரின் சாபங்களிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு தவம் செய்ததாக நம்பப்படுகிறது.

நம்மாழ்வார் பதினொரு பாடல்கள் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார். இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.

சென்ற பதிகத்தில், சர்வேஸ்வரன் ஸம்ஸாரிகளுடைய விருப்பத்தை மனதில் கொண்டு இங்கு வந்து அவதரித்ததும், அவர்கள் தங்களுக்கு விரும்பியவற்றை மட்டும் அடைவதற்கு இவனை அணுகினார்களே தவிர, இவனிடத்தில் ஒரு பரிவும் இல்லை என்பதையும் அறிந்து அஞ்சினான். அந்த அச்சம் தீரும்படி தம்மிடம் பரிவு காட்டுவது மட்டும் இல்லாமல் தாம் மிடுக்குடன் இருந்தாலும் தன்னை சமாதானம் செய்து பரிவு காட்டுவதை பார்த்தோம்.

இந்த பதிகத்தில் காதல் மையல் ஏறி கலங்கி, முக்தரும் நித்தியரும் இங்கு இல்லை என்றும் தவத்தையும் மனனத்தையும் தியானத்தையும் விடாத சனகர் முதலியவர் இங்கு இல்லை என்றும் பாற்கடலை கடைந்ததும் தெய்வப் பிறவியில் தான் என்றும் கலங்கி இருந்த போது, நம்மாழ்வார் எம்பெருமானின் சூர வீர முதலான குணங்களையும் படைத்தல் போன்ற ஆச்சர்யங்களையும், எதிரிகளை வேரோடு அழித்த ஆற்றலையும் காட்டிக் கொடுத்து, மேம்பட்ட ஞானத்தையும் சக்தியையும் உடையவராய் அவன் மேல் பரிவையும் உடைய மூவாயிரம் பிராமணர்கள் உளர் என்றும் சொல்லி அவன் வடிவழகில் நெஞ்சு சென்று அனுபவித்து இனியர் ஆகிறார்.

ஒழுகுகின்ற மதமாகின்ற அருவிகளை உடைய யானையாகிய பெரிய மலையின் தந்தங்களாகிய இரண்டு சிகரங்களை முறித்து அதனைக் கீழே தள்ளி, அந்த யானையைச் செலுத்தி வந்த வலிய பாகனுடைய உயிரையும் கவர்ந்து, சபையில் இருந்த மல்லர்களையும் கொன்று, சுற்றிலும் உள்ள மஞ்சத்தின் மேல் இருந்த, போரை செலுத்துகின்ற அரசர்கள் புறமுதுகு காட்டி ஓட, உயர்ந்த மாடத்தின் மேலே இருந்த கஞ்சனைக் கொன்ற சீரைக் கொண்ட பாலனான ஸ்ரீ கிருஷ்ணன் எழுந்து அருளி இருக்கின்ற திருச்செங்குன்றூரில் இருக்கின்ற திருச்சிற்றாறு ஆனது நாங்கள் சென்று அடைவதற்கு புகல்இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

நாங்கள் சென்று சார்வதற்குப் புகலிடமானவன், எங்களுக்கு அமுதமானவன், நித்ய சூரிகளுக்குத் தலைவன், எனக்குத் தலைவன், நிறைந்து இருக்கின்ற மூன்று உலகங்களையும் படைத்துக் காத்து, அழிக்கின்ற, பொருந்திய பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மூன்று வகையான உருவத்தை உடையவன், எனக்கு அந்தராத்மாவாக இருப்பவன், சிறந்த கயல் மீன்கள் துள்ளுகின்ற தேன் நிறைந்த மருத நிலங்கள் பக்கங்களில் சூழ்ந்த திருச்செங்குன்றூர் திருச் சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் எழுந்து அருளி இருக்கின்ற காரணப் பொருள் ஆனவன் அல்லாமல் எனக்குப் பொருந்திய துணை வேறு யாவர் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

எனக்கு பொருந்திய பெருமான், நித்தியசூரிகளுக்குப் பெருமான், பெரிய பூமியை இடந்து கொண்டு வந்த பெருமான், முன்னைய கொடிய தீ வினைகள் முழுவதும் ஒரு நொடிப் பொழிதில் அழியும்படி என்னை ஆள்கின்ற எம்பெருமான், தெற்குத் திசைக்கு அலங்காரமாய் விளங்குகின்ற திருசெங்குன்றூரில் திருச்சிற்றாங்கரையின் மேற்குப் பக்கத்தில் நின்ற திருக்கோலமாய் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானுடைய திருவடியே அல்லாமல் எனக்கு புகலிடம் நினைவிலும் கூட வேறு ஒன்றும் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இதன் விளக்கத்தை இங்கே காணலாம்.

பெரிய மூன்று உலகங்களும் நிறையும்படி பெரிய உருவமாகி நிமிர்ந்த அழகிய வாமனன் ஆன எம்மான், வழிக்கின்ற கடலைக் கடைந்த அழகிய மாணிக்கம் போன்ற வடிவை உடைய என் அம்மான், செறிந்த குலைகளை உடைய வாழைகளும் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அலங்காரமாய் சூழ்ந்து இருக்கின்ற திருசெங்குன்றூர் திருச்சிற்றாறு என்னும் திவ்ய தேசத்தில் வசிக்கின்றவர்கள் உள்ளபடி அறியும்படி உண்மைப் பெருமையோடு நின்ற எம்பெருமான் ஆகிய இறைவனுடைய இரண்டு திருவடிகள் அல்லாமல் மற்று ஒரு பாதுகாவல் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அடி இணை அல்லது பிறிது ஒரு அரண் இல்லை என்கிறார். அர்ச்சாவதாரம் பூரணம் ஆகையாலே, ‘மெய்ம்மையே நின்ற என்கிறார்.

மஹாபலியை வென்றும் கடலைக் கடைந்தும் அடியார்களுடைய ஆபத்தைப் போக்கித் திருசெங்குன்றூரில் நின்று அருளினவனின் திருவடிகள் அல்லது வேறு எனக்கு அரண் இல்லை என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

மற்றைய ஒப்பற்ற திவ்ய தேசங்களில் எழுந்து அருளி இருக்கின்றவனும் அவனைக் காட்டிலும் வேறுபட்டவன் அல்லன் என்கிற அதுவே உண்மைப் பொருள் ஆனாலும் திருச்சிற்றாற்று எம்பெருமானை ஒழிய என் உயிரானது வேறு ஒருவனைப் பொருந்தி விரும்ப மாட்டாது; ஆகையாலே அவன் எழுந்து அருளி இருக்கின்ற சிறந்த அந்தணர்களால் செய்யப்படுகின்ற யாகங்களிலே அவிர்பாகத்தின் நறுமணம் மிக்க புகையானது ஆகாயத்தின் பிரகாசத்தை மறைக்கின்ற சிறந்த நீண்ட மாடங்களை உடைய திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு சிறந்த புகலிடமாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. விளக்கத்தை இங்கே காணலாம்.

எனக்குச் சிறந்த புகலிடமானவனை, எனக்கு அரிய உயிராய் இருப்பவனை, நித்யசூரிகளுக்கு தந்தையாயும் தாயாயும் இருக்கின்றவனை, தனக்கும் தன்னுடைய தன்மையை அறிதற்கு அரியவனை, விரிந்த திருபாற்கடலில் அறிதுயில் செய்கின்றவனை, ஞான வளப்பத்தை உடைய சிவபிரானையும் பிரமனையும் தனையும் ஒப்பவர்களாகிய மனத்திலே கொள்ளப்பட்ட கல்யாண குணங்களை உடையவர்களான மூவாயிரம் அந்தணர்கள் வாழ்கின்ற செறிவைக் கொண்டு உள்ள வலிய மாடங்கள் சூழ்ந்த திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றில் கண்டேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அம்மானை திருச்சிற்றாற்றில் கண்டேன் என்றும் ஒப்பாராகிய மூவாயிரவர் வாழ் திருச்செங்குன்றூர் என்றும் கூறுகிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்ட அந்த சுவாமி, எப்போதும் அழகிய சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும் சிவந்த திருவாயும் சிவந்த திருவடியும் சிவந்த திருக்கைகளும் அழகிய சிவந்த திரு உந்தித் தாமரையும் சிவந்த பெரிய பிராட்டியார் எழுந்து அருளி இருக்கின்ற திருமார்பும் சிவந்த பீதாம்பரமும் அழகிய சிவந்த திருமுடியும் திரு ஆரமும் திவ்ய ஆயுதங்களும் விளங்கும்படியாக என் மனதில் எழுந்து அருளி இருக்கிறான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. திருவடி என் சிந்தை உளான் என்கிறார். திருச்செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன், தன் அழகோடே மறக்க முடியாதபடி என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

என் மனதிற்குள்ளே விளங்க இருந்தவனை, நான்கு வேதங்களிலும் வல்லவர்களும் பூ தேவர்களுமாகிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் திசை நோக்கிக் கை கூப்பி துதிக்கும்படியாகத் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை ஒளியைக் கொண்ட தேவர்களுக்கு புகலிடமாய் இருப்பவனை வலிய கையை உடையவரான அசுரர்கட்கு கொடிய யமனானவனை பொருந்திய மூன்று உலகங்களையும் படைத்து அழித்து காப்பாற்றுகின்றவனை புகழுமாற்றை அறியேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. காப்பவனை புகழுமாறு அறியேன். இப்படி நிறைவாக அனுபவித்த சீறி கொள் சிற்றாயனுடைய விலக்ஷணமான குணங்களிலும் அழகிலும் அழுந்தி அவனைப் புகழும்படி அறிகின்றிலேன் என்கிறார். இந்த பாடலின் விளக்கங்களை இங்கே காணலாம்.

கூர்மை பொருந்திய கல்வியோடு அனுஷ்டானமும் நாடோறும் செய்யப் படுகின்ற திருவாராதனமும் ஆகிய இவைகள் இயல்பாகவே அமைந்தவர்களான கொடையால் அமைந்த பெரிய புகழோடு கூடியவர்களும் ‘இன்னார்’ என்று பிரசித்தமானவர்களும் ஈஸ்வரனாகிய தன்னை ஒத்த ஞானம் சக்தி முதலியவற்றை உடையவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வசிக்கின்ற திருச்செங்குன்னூரில் திருச்சிற்றாரில் எழுந்து அருளி இருக்கின்ற சர்வேஸ்வரன் படைத்தல் அழித்தல் காத்தல் ஆகிய முத்தொழில்களை செய்கிறவனும் ஆவான்; பிரமனாகிய மேலானவனும் சிவபிரானும் ஆவான். பிரமனுக்கும் சிவனுக்கும் நடுவே காப்பாற்றுகின்றவனாய் புகுந்து ஒரு பொருளையும் விட்டு நீங்காமல் எல்லாப் பொருள்களிலும் அந்தர்யாமியாய் இருப்பவனும் ஆவான். எல்லாப் பொருள்களும் தன் அதீனமாய் இருக்கப் பெற்றவனும் ஆவான்; நான் கூறுவது புனைந்துரை அல்ல என்பது இந்த பாடலின் பொழிப்புரை. பிரமன் முதலான எல்லாப் பொருள்களினுடைய படைத்தல் முதலானவைகளைச் செய்கின்றவன் திருச்செங்குன்னூரில் நின்று அருளினவன் என்னும் இடம்; புனைந்துரை அல்ல, மெய் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

பொருந்திய தலைவனை, அவர்கள் அவர்களாகி அவர்களுக்கு விருப்பமானவற்றை கொடுக்கின்ற அம்மானை, பொருந்திய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரையில் எழுந்து அருளி இருக்கின்றவனை, பொருந்திய புகழை உடைய மூவாயிரம் பிராமணர்களுடைய தேசமாய், பூ தேவர்களான வைஷ்ணவர்களுடைய வாழ் ச்சிக்கு உரியதாய் இருக்கும் திருச்செங்குன்றூரில் எழுந்து அருளி இருக்கின்ற ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடையவனை சிவபெருமானுக்கும் பிரமனுக்கும் அந்தர்யாமியாய் உள்ள எம்பெருமானைப் பொருந்த பெற்றேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அமர்ந்த நாதனை அவர் அவராகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை *முக்கண் அம்மானை நான்முகனை ஆற்றங்கரையானை அமர்ந்த மாயோனை அமர்ந்தேன் என முடிக்க. சர்வேஸ்வரனாய் வைத்து எல்லாப் பொருள்கட்கும் பற்றப்படுமவன் ஆகைக்காக திருச்செங்குன்றூரில் நின்று அருளினவனை அனுபவிக்கப் பெற்றேன் என்கிறார். இந்த பாடலின் விளக்கத்தை இங்கே காணலாம்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

திருமாலை-39 அடிமையில் குடிமை

Please click here to view the English Version, thanks

இதுவரை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும், அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு  26), இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27), உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும், ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30), தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும், தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33), எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.

ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில், முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும், இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம். இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள் போகவிட்டு என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்யத்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. அதற்கும் மேல் இந்த பாசுரத்தை செவிசாய்த்த எம்பெருமான், மகிழ்ந்ததையும் சொல்கிறது.

இனி அடுத்த பாசுரம்,

பாசுரம் 39

திருமுடியில் , திருத்துழாய் மாலையை அணிந்தவனே, அரங்கநகர் உளானே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாதவராய் , அடிமையாய் சேவை செய்ய மாறுபட்டவர்களாய் நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்குமவனன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பாசுரம் தொடங்கி நாற்பத்து நான்காம் பாசுரம் முடிய ஆறு பாடல்களில், ‘மேம்பொருள் போகவிட்டு ‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறது. ‘பயிலும் சுடரொளி ‘ (திருவாய்மொழி 3.7) மற்றும் நெடுமாற்கடிமை (திருவாய்மொழி 8.10) என்னும் பதிகங்களில் அடியவர்களுடைய பெருமையை நம்மாழ்வார் அருளிச் செய்ததை இங்கே இந்த ஆழ்வார் அருளிச் செய்கிறார் . பிறப்பு, ஒழுக்கம், குணங்கள் ஆகியவற்றால் குறைவு பட்டவர்களானாலும் மேம்பொருளில் சொல்லப்பட்ட அறிவு உடைய அடியவர்கள் நமக்கு ப்ராப்யம் ப்ராபகம் முதலான எல்லாமாய் இருப்பவர்கள் என்பது இந்த பாசுரங்களின் திரண்ட கருத்து. இந்தப் பாசுரத்தில் எவ்வளவு தாழ்ந்த ஜாதியில் பிறந்தவர்கள் ஆனாலும் ‘மேம்பொருள் ஞானத்தில் ஊன்றி இருப்பவர்களாகில் திருத்துழாயைப் போலே எம்பெருமானாலே தலை மேல் வைத்து கொண்டாடப் பெறுவார் என்கிறார்.

இனி சற்று விளக்கமாகப் பாப்போம் .

அடிமையில் குடிமையில்லா

கைங்கர்யம் நமக்கு செய்யத்தக்கது என்னும் எண்ணம் அற்றவர்களாக இருப்பவர். கைங்கர்யம் நமக்கு இயல்பானது என்று இருப்பவர்கள் ‘உண்ணும் சோறு பருகுநீர் , தின்னும் வெற்றிலை (திருவாய்மொழி 6.7.1) என்பது போலே அது இல்லாமல் வாழ முடியாதவர்கள் .

அயல் சதுப்பேதிமாரில்

சதுப்பேதிமாரில் என்பது நான்கு வேதங்களையும் நன்கு கற்றவர்களை சொல்கிறது . ஈஸ்வரனே எல்லா உலகுக்கும் சுவாமி என்று அறிந்து இருப்பதும் , தன்னை அவனுக்கு சொத்தாக அறிந்து இருப்பதும் , நம் ஸ்வரூபத்திற்கு தக்க பலன் பகவத், பாகவத கைங்கர்யம் என்று அறிந்து இருப்பதும் வேதம் கற்று அறிந்து இருப்பதற்கு பயன். ‘அயல் ‘ ஆவது வேதம் கற்பது இந்த ஞானத்தை பெறுவது என்பதை அறியாதது . ஆக, அயல் சதுப்பேதிமாரில் என்பது, கைங்கர்யம் செய்வது என்பதில் இருந்து மாறுபட்டு இருக்கும் நான்கு வேதம் அறிந்தவர்கள் என்பதாகும். அப்படிப்பட்டவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பது கருத்து.

இனி , இவர்களைக் காட்டிலும் எம்பெருமானுக்கு உயர்ந்தவர்களை பாசுரத்தில் மீதி பகுதி சொல்லுகிறது.

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்

வேதத்தில் விதிக்கப்பட்டதை பின்பற்றாமல் இருப்பதும், விலக்கப்பட்டவைகளை பின்பற்றியும் பல ஜென்மங்களை கழித்ததால் வந்த பாவங்களால் மிக தாழ்ந்த பிரிவில் பிறந்தவர்களே ஆனாலும் குக்கர் எனப்படுவர். பிறப்பரேலும் என்று சொல்வதால் , மேம்பொருள் பாசுரத்தின் அறிவை அடைவதற்கு பிறப்பினுடைய உயர்வோ தாழ்வோ காரணம் அல்ல என்கிறார்.

வேதத்தை விவரிக்க வந்த ஸ்ரீ ராமாயணத்தில், ஸர்வத்ர கலு த்ருஷ்யந்தே ஸாதவோ தர்ம சாரிணஃ৷৷ * ஶூராஶ்ஶரண்யாஸ் ஸௌமித்ரே திர்யக் யோநி கதேஷ்வபி(ஆரண்ய காண்டம் 68.24)ல் சொல்லியது, ஸ்ரீராமன் , லக்ஷ்மணனிடம் “லட்சுமணரே! வீரம் மிக்க ஆன்மாக்களும், பாதுகாவலர்களுமானவர்களும், நீதிமான்களும், நேர்மையானவர்களும், விலங்குகள் மற்றும் பறவைகளிடையே கூட காணப்படுகிறார்கள் என்கிறார். ஸ்ரீராமன் ஜடாயுவை பார்த்தபோது இளைய பெருமாளை நோக்கி அருளிசெய்தது, இந்த அறிவு (மேம்பொருள் ) பறவை, விலங்குகள் போன்ற எல்லா பிரிவுகளுக்கும் ஏற்படக்கூடியது என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக என்கிறார் . காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவிச்சிகளும் அனுமன் சுக்ரீவன் போன்ற குரங்குகளும் , விபீஷணன் போன்ற ராக்ஷ்சர்களும் இந்த அறிவினை பெற்று இருந்தார்கள் என்பதை கண்டோம் என்கிறார்.

அதேபோல் , வேதத்தை விளக்க வந்த இன்னொரு இதிஹாசமான மஹாபாரதத்தில், தாழ்ந்த பிரிவில் வந்த விதுரர், வேடனாய் மாமிசங்களை வியாபாரம் செய்த தர்மவ்யாதன், கர்ணாகண்டன் போன்றவர்கள், ஆயர்பாடியில் வாழ்ந்த இடையர் இடைச்சிகள் முதலானவர்கள் இந்த அறிவினை உடையவர்களாக இருந்ததை பார்த்தோம்.

திருவிருத்தம் (79)ல் ‘பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார், விண்ணுளாரிலும் சீரியரே.’ என்று சுவாமி நம்மாழ்வார் அருளியபடி இவர்கள் நித்யஸூரிகளை விட சிறந்தவர்கள் ஆவார்கள் என்கிறார். எப்பொழுதும் எம்பெருமானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்கும் நித்ய சூரியர்களைக் காட்டிலும், இவ்வுலகில் அவதரித்து வந்து, எம்பெருமான் பெரும்பாடு பட்டு திருத்தியவர்கள் அன்றோ. ஆகையால் இவர்கள் நித்யசூரிகளைக் காட்டிலும் இவர்கள் சிறந்தர்வர்கள் என்ற கருத்து. தன் ஸ்பர்ஶத்தாலே இரும்பை பொன்னாக்கும் வேதகப்பொன், மற்ற தங்கத்தைக் காட்டிலும் சிறந்து இருப்பது போலே, தங்கள் தொடர்பால் மற்றவர்களையும் பாகவதர்கள் ஆக்க வல்ல இவர்கள், அந்த பெருமை இல்லாத நித்யஸூரிகளை விட சிறந்தவர்கள் என்கிறார்.

முடியினில் துளபம் வைத்தாய்

இப்படி எம்பெருமானை விசேஷிப்பதற்கு காரணம் என்னவென்றால் , திருத்துழாயைப் போல் இந்த அடியவர்கள், எம்பெருமானால் தலையினில் வைத்து கொண்டாடத் தக்கவர்கள் எனபதை தெரிவிக்கவே என்கிறார். பூவில் சிறந்த திருத்துழாயை தரித்து இருப்பது போலே, நீ தேவர்களில் சிறந்தவன் என்கிறார். இவர்களால் உன் பரம்பொருள் தன்மை விளக்கப்படுகிறது என்கிறார்.

மொய்கழற்கு அன்பு செய்யும்

ஐம்புலன் அகத் அடக்கி என்று சென்ற பாடலில் (38) சொல்லியபடி, உன் உகப்பிற்கு வேறுபட்ட தங்கள் உகப்பையும் விலக்கி, ‘உன் செவ்வடி செவ்வுத் திருக்காப்பு‘ (திருப்பல்லாண்டு 2) என்று பரிந்து உன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவதே பொழுதுபோக்காய், அதையே ப்ராப்யமாக நினைத்து இருப்பவர்கள். இனிமையோடு கூடிய எம்பெருமானையே உபேயமாகக் கொண்டவர்கள் என்று ஆயிற்று. இனி உபாயம்.

அடியரை

இரக்கத்தோடு கூடிய அவன் திருவடிகளை உபாயமாகக் கொண்டவர்கள். ‘சோம்பர் ‘ என்று 38ல் சொல்லியபடி ஜீவாத்மா ஸ்வரூபம் எம்பெருமானுக்கு, தான் பாரதந்திரன் என்பதை உணர்ந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதில் ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பவர்கள் . உகப்பதாகிற உபேயமும் திருவடிகளாய், தாரகமான உபாயமும் திருவடிகளாய் இருக்கும் அடியவர்கள். ‘நிழலும் அடி தாறும் ஆனோம்‘ (பெரிய திருவந்தாதி 31) என்று நம்மாழ்வாரும் அருளி செய்தார். அதாவது பாதநிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோம் என்கிறார்.

உகத்தி போலும்

இந்த ‘மேம்பொருள் போகவிட்டு ‘ பாசுரத்தில் அறிவு இல்லாத சதுர்வேதிகளைக் காட்டிலும், இந்த அறிவு உடைய அடியார்களை, அவர்களின் பிறந்த ஜென்மத்தின் தாழ்வையும் கவனிக்காமல் உகக்கிறீர் என்கிறார்.

அரங்கமா நகருளானே

தாழ்ந்த பிரிவில் பிறந்தவர்களாய் உன்னிடம் பரிவு உடையவர்களுக்கு முகம் கொடுப்பதற்காகவன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறீர், உயர்ந்தவர்களுக்கு முகம் கொடுப்பதாகில் பரமபதத்திலேயே இருந்திருக்க மாட்டீரோ என்று சொல்கிறார்.

இத்துடன் இந்த பாடல் நிறைவடைகின்றது. மீண்டும் அடுத்த பாசுரத்தில் சிந்திப்போம் . நன்றி

081 திருக்கடித்தானம் / Thirukadithaanam

ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருக்கடித்தானம் என்று இந்த திவ்ய தேசம், திருவல்லவாழில் இருந்து கோட்டயம் சாலையில், செங்கணச்சேரியில் இருந்து வேறு ஒரு சாலையில் கிழக்கே இரண்டு மைல் சென்றால் உள்ளது.

இந்த திருத்தலத்தில் நரசிம்மன், கிருஷ்ணன், சன்னதிகளும் உள்ளன.

கடிகை என்றால் நாழிகை. மூன்று திவ்ய தேசங்களின் பெயர்களில் ‘கடி’ என்று வருகிறது; அவை திருக்கடித்தானம், திருகண்டம் எனும் கடி நகர் மற்றும் திருக்கடிகை அல்லது சோளிங்கர். இந்த மூன்று திவ்ய தேசங்களிலுமே சுமார் ஒரு கடிகை (நாழிகை – 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று ஐதீஹம்.

திருக்கார்த்திகை மற்றும் கோகுலாஷ்டமி மிக விசேஷமாக இங்கே கொண்டாடப் பாடுகிறது. கோவிலில் சாஸ்தா, சுப்ரமணியர் மற்றும் நாகர் விக்கிரகங்கள் உள்ளன.

இங்கே நேர்த்திக் கடனாக தாயாருக்கும் பெருமாளுக்கும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்கு பால் பாயசம் நிவேதியம் செய்யப்படுகிறது.

ஒரே கர்ப்பகிரகத்தில் அற்புத நாராயணன் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் எழுந்து அருளி உள்ளனர். இருவருக்கும் தனித்தனி கொடி மரம் உள்ளது. மேலும் சந்நிதியில் தெற்கு நோக்கி தக்ஷிணாமூர்த்தியும், விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள்.

இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோர் மிக்க பேரழகு வாய்ந்தவர்கள். இத்தலத்திற்குள்ளாகவே தனித்தனி சன்னதிகளாக அமைந்துள்ளன.

இது ருக்மாங்கதன் என்ற சூரிய குல அரசன் ஆண்ட தேசம். இவனது தோட்டத்தில் உயர்ந்த புஷ்பங்களை எடுத்துச் சென்ற தேவர்களைப் பிடித்து அவர்கள் வேண்டியபடி, ஏகாதசி விரத பலன்களை கொடுத்து அவர்களை மீண்டும் அனுப்பி வைத்ததாக வரலாறு. இவை அனைத்தும் ஒரு நாழிகை காலத்தில் நிகழ்ந்ததாக சரித்திரம். அதனாலும் இந்த திவ்ய தேசத்திற்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்வார்கள்.

இங்குள்ள கோவிலின் முன் ஒரு மனித உருவ சிலை படுத்த நிலையில் உள்ளது. இது இந்த கோவிலின் மெய்க்காப்பாளின் சிலை என்றும் அது அவனுக்கு கிடைத்த தண்டனை என்றும் கூறப்படுகிறது. ஒருமுறை மன்னன் இந்த கோவிலுக்கு நடை சார்த்தியபின் வந்ததாகவும், அரசனிடம் பொருள் வாங்கி கோவில் கதவினை திறந்து விட்டதாகவும் அதனால் அவனுக்கு தண்டனை என்றும் சொல்லப்படுகிறது. ஆகையால் இன்றும் இந்த கோவிலில் நேரம் சரியாக பின் பற்றப்படுகிறது.

இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய ஸ்தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. சகல சாஸ்திரங்களும் கற்று மேதாவியான சகாதேவன் ஜோதிடக் கலை வல்லுனன். அவனால் பிரதிஷ்டை (ஸ்தாபிக்கப்பட்ட) செய்யப்பட்ட கிருஷ்ண விக்ரகம் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதிய சக்தியைப் பெற்றுக்கொண்டே சென்று கலியுகம் முடியும் தறுவாயில் ஜோதி மயமாய் மாறி விண்ணுள் கலக்கும் என்று கூறுகிறார்கள்.

நம்மாழ்வார் பதினொரு பாடல்கள் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார். இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.

நம்மாழ்வார் தன்னுடன் சேர்வதற்கு பிரியம் உள்ளவனாகவும், தன்னுடைய ப்ரீதியை பொறுப்புடன் காண்பித்து, திருக்கடிதானத்தில் எழுந்துயருளி, தம்மிடம் காட்டும் பிரேமத்தை நினைத்து இனியவராய் அதனை பேசி இந்த பதிகத்தில் அனுபவிக்கிறார். சென்ற பதிகத்தில் துக்கம் கொடுத்ததினால், இந்த பதிகத்தில் உஜ்ஜீவனம் அடைந்தவராய் ஆழ்வார் அனுபவிக்கிறார்.

இரவும் பகலும் தன்னையே நினைந்து வாழும்படியாக சிறந்த திருவருளை நமக்கே கொடுத்துக் கிருபை செய்கின்றவனான அல்லியை உடைய அழகு பொருந்திய குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்த என் தந்தையானவன் எழுந்தருளி இருக்கின்ற நகரம், கைங்கர்ய செல்வத்தை உடைய வைஷ்ணவர்கள் வாழ்கின்ற திருக்கடித்தானம் என்ற திவ்ய தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

என்னுடைய துன்பத்தை தீர்த்து அருளுவான் சர்வேஸ்வரன் அவன் ஊர் திருக்கடித்தானம் என்கிறார். பகல் இரவு என்று வேறுபாடு இன்றி, எல்லாக் காலத்திற்கும் உபகாரகன் என்கிறார். நல்ல அருள்கள் என்பது, என் குற்றத்தை பாராமல், என் அறிவு முழுமை ஆகாததை பாராமல், அவனுக்கு பேறு என்று மகிழ்வுடன் செய்த அருள் என்கிறார். நமக்கே என்பதில் உள்ள ஏகாரம், நித்ய சூரிகளும் தான் பெற்ற பேறு பெற்றிலர் என்கிறார்.

அக்காலத்தில் போரிலே சீற்றம் கொண்டு அறிவு மயங்கிய இராவணன் முதலான அரக்கர்களுடைய உருவங்கள் அழியும்படி அமுத மழையைப் பொழிந்த ஒருவன், திருக்கடித்தானத்தையும் என்னுடைய மனத்தினையும் ஒன்றாக நினைத்து உள்ளே வாசிக்கின்ற பிரான் ஆவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

என் பக்கம் வருவதற்கு உள்ள தடைகளையும் தானே போக்கி, திருக்கடித்தானத்திலும் என் மனத்திலும் ஒருசேர காதல் கொண்டு என் உள்ளே வசிக்கிறான், என்கிறார்.

அரக்கர்கள் பட்ட பாட்டினை விரோதி பட்டது என்கிறார். போரில் செருக்கு எடுத்து, ஒருவரையும் வணங்கேன் என்று அன்று திகைத்த அரக்கர்களை, சக்ரவர்த்தி திருமகனை வெல்லலாம் என்று நினைத்த மதி கேடர்களான இராக்கதர்களை, சின்னங்களாகவும் பின்னங்களாகவும் அம்புகளால் கொளுத்தப் பட்டவைகளாக அம்பு மழையை பெய்தார் அன்றோ என்று சொல்லி, ஏக வீரன் ஆனவன் என்கிறார்.

என்னிடத்தே வருகைக்கு இடையூறாக உள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே என்னுள்ளே எழுந்தருளினார். திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒன்றாக நினைக்கை, ஸ்ரீவசந பூஷணத்தில்(171) சொல்லியபடி, “அங்குத்தை வாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். என்பது போல ஆகும்.

ஒருவர் என்னும்படியாகவும், இருவர் என்னும்படியாகவும், ஒரு மூவர் என்னும் படியாகவும் நின்றும், சாரிகை வந்த வேகத்தாலே, கண்களால் காண முடியாதவாறு நின்றும் உருக்கெட வாளி பொழிந்த ஒருவனும், திரு அமர்ந்த மார்பனும், திருக்கடித்தானத்தை மருவி எழுந்து அருளி இருக்கிறான் என்றும் என் மாயப்பிரான் நினைக்கும் தோறும் இனியன் ஆகிறான் என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

கரந்து என்பதை சென்ற பாடலின் ‘பொழிந்த‘ என்பதுடன் சேர்த்து, கரந்து பொழிந்த ஒருவன், திரு அமர் மார்வன்; அவன் திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான் ஆவான்; அவன் உள்ளந்தோரும் தித்திப்பான் என்கிறார்.

பிராட்டியோடு திருக்கடித்தானத்திலே நித்திய வாசம் செய்கிற ஆச்சரியத்தை உடையவனான உபகாரகன் நினைக்கும்தோறும் இனியவனாக நின்றான் என்கிறார்.

சென்ற பாசுரத்தில் ‘வாளி பொழிந்தபடி’ என்று சொன்னது எங்கே என்று கேட்டு இங்கே என்று பதிலும் சொல்கிறார். ஒருவர் இருவர் மூவர் என்று தோன்றி செருக்கு எடுத்து அன்று இருந்த அரக்கரை உருக்கெட வாளி பொழிந்த ஒருவன், திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் உருக்கெடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் என்று சென்ற பாசுரத்துடன் சேர்த்து அனுபவிக்கலாம். மூல பலத்தை நிர்மூலம் ஆகும்படி ஒருவனாய் தோன்றி, வேகம் மிக மிக, இருவரும், மூவருமாய் தோன்றி, வேகம் அதிகமாகி, இந்திரியம் செயல் படுவதற்கு இடம் இல்லாதபடி வேகமாய், இருக்கிற ரூபம் அரியதாய், உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் என்று 24 ஆயிரம் படி உரையாயசிரியர் கூறுவது சிறப்பு.

திரு அமர் மார்வன் என்பது குற்றம் செய்யாதவர் யார் என்று கேட்ட பிராட்டியோடு கூட வந்தது கூறியது.

திருக்கடித்தானத்தை கோவில் கொண்டான், நேசத்தினால் நெஞ்சம் நாடு குடி கொண்டான்.

ஒளியை உடைய நித்திய சூரிகள் எழுந்து அருளி இருக்கிற வாசனையை உடைய சோலைகள் சூழ்ந்த திருக்கடித்தானத்தை நிலை பெற்ற கோவிலாக் கொண்டு நித்ய வாசம் செய்கின்ற மாயப் பிரான், என்னுடைய கொடிய வினைகள் எல்லாம் வாசனையோடு அழியும்படியாக அன்போடு என் நெஞ்சமாகிய நாட்டினைப் பரம பதத்தைப் போலக் குடி இருப்பாகக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

திருக்கடித்தானத்தைப் பகல் இருக்கை மாத்திரமாகக் கொண்டு, அன்பின் மிகுதியாலே என் மனத்தையே எப்பொழுதும் வசிக்கும் இடமாகக் கொண்டான் என்று ஈடு உரையாசிரியர் சொல்கிறார்.

மாயப்பிரான் என்று சொல்வது, ஆச்சரியமான குணங்களையும் செயல்களையும் உடைய உபகாரகன்;

என் வல்வினை மாய்ந்து அற என்றது சென்ற பாடலில் சொன்ன தன் துயரத்திற்கு தகுதியாக, தன்னை பிரிந்து ஆழ்வார் பட்ட துன்பம் எல்லாம் நசிந்து போகும் படி என்றது. அதே போல சென்ற பதிகத்தில் (மாயக்கூத்தா ) ‘காண வாராய் என்று கண்ணும் வாயும் துவர்ந்து’ என்று பட்ட கஷ்டங்கள் எல்லாம் வாசனையோடு அகலும்படி என்றது.

நெஞ்சம் நாடு என்று சொன்னது கலவியினாலும், பிரிவினாலும் ஒரு பரம பதத்தைப் போல இவர் திரு உள்ளத்தை ஆக்கினான் என்கிறார்.

குடி கொண்டான் என்றது பரிகரங்களோடு நித்ய வாசம் செய்கிறான் என்றது. பெரியாழ்வார் திருமொழி (5.2.10)ல் சொல்லியதை, “அரவத்து அமளியினோடும், அழகிய பாற் கடலோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து” நினைவில் கொள்ளலாம்.

தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை என்று சொன்னது, நித்ய அனுபவம் கொண்டதால் உண்டான ஜோதி / ஒளி உடைய நித்ய சூரிகள் அடையத்தக்க திருக்கடித்தானத்தை என்கிறார்.

தேசத்து அமரர் திருக்கடித் தானத்தை, நேசத்தினால், நெஞ்சம் நாடு குடி கொண்டான் என்று ரசிக்கலாம்.

ஒவ்வொரு கோவிலில் தங்கி இருக்கின்ற தெய்வங்கள் எல்லாம் தொழும்படியாக ஸ்ரீவைகுந்தத்தைக் கோவிலாகக் கொண்ட குடக்கூத்து ஆடிய அம்மான், திருக்கடித்தானத்தைத் தனக்குக் கோவிலாகக் கொண்டான்; திருக்கடித்தானத்தோடு கூட வந்து என் நெஞ்சினைக் கோவிலாக் கொண்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஈட்டு உரையாசிரியர், என் பக்கம் உண்டான மிக்க காதலால் திருக்கடித்தானத்தோடு கூட என் மனதிலே புகுந்து அருளினான் என்கிறார். திருவடி திருவனந்தாழ்வான் மற்றும் சேனை முதலியார் தொழும்படி ஸ்ரீ வைகுந்தத்தை தனக்குக் கோவிலாக் கொண்ட சர்வேசவரன், கிருஷ்ணனாய் அவதரித்த கூட கூத்த அம்மான் என்கிறார். அந்த சிரமம் ஆறும்படி திருக்கடித்தானத்தில் கோவில் கொண்டான். அதனோடு கூட என் மனத்தினை தனக்கு கோவிலாகக் கொண்டான் என்கிறார்.

திருக்கடித்தானத்தில் இருந்தது தன்னை பெறுவதற்காக என்று ஆழ்வார் சொல்லி, அது சாத்தியம் ஆனதால், அந்த சாதனத்தோடு (அந்த திவ்ய தேசத்தோடு) வந்து புகுந்தான் என்கிறார்.

குடக்கூத்து ஆடிய அம்மானும், கொடியேனுடைய துன்பம் முழுதினையும் அழித்த அம்மானும், மதுசூதனனாகிய அம்மானுமாகிய எம்பெருமான் எழுந்து அருளி இருக்கின்ற, மலர்ந்து இருக்கின்ற சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த திருக்கடித்தானத்தை துதித்த அளவிலே துன்பம் முழுவதும் நில்லாவாம்; இதனை நினையுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. தம்முடைய மிக்க பிரீதியாலே ‘திருக்கடித்தானத்தை எல்லோரும் அடையுங்கள்’ என்கிறார்.

கூத்தஅம்மான் என்று சொன்னது, எல்லோர் மனங்களையும் கொள்ளை கொள்ளுகின்ற செயல்களை உடைய சர்வேசவரன் என்பதாகும்.

இடர் முற்றவும் என்று சொன்னது, தன்னைப் பிரிந்து தான் பட்ட துன்பங்கள் எல்லாம் வாசனையோடு போக்கிய என் சுவாமி என்பதாகும்.

மதுசூத அம்மான் என்றது, பகைவர்களை அழிக்கும் தன்மையனான சர்வேசவரன் நித்ய வாசம் செய்கின்ற தேசன் என்பதாகும்.

அவன் நித்ய வாசம் செய்வதால் எப்போதும் மலர்களோடு கூடிய பொழில் என்றும், திருவருளாகிய மழை மாறினால் தானே பூக்கள் மாறுவது என்றும் கூறுகிறார்.

இனிமையாக ஏத்தினால் இடர் போகுமோ என்று கேட்டு, இனியதனைச் செய்ய, இடரானது, இது நமக்கு தேசன் அன்று என்று ஓடும் என்றும், இது ஓலக்க வாரத்தை என்று இல்லாமல் புத்தியில் கொள்ள வேண்டும் என்கிறார்.

கோவிந்தனுடைய மண்ணுலகம், விண்ணுலகம் முழுவதையும் அளந்த தாமரை போன்ற திருவடிகளை மக்கள் தொழ, நித்திய சூரிகள் வந்து சேரும் படியான, திருக்கடித்தானம் ஆகிற நகரத்தை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி மனத்திலே கொள்ளுங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டாம் ; திருக்கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் என்கிறார். அதாவது இடர்கெட உள்ளத்துக் கொண்மின் என்கிறார்.

கோவிந்தன் என்பது சர்வ சுலபன் என்பதைக் குறிக்கும். ஒரு தாமரைப் பூவைக் கொண்டு பூமியையும் வானுலத்தையும் அளந்து கொண்டது என்கிறார். மண்ணவர் தாம் தொழ என்றது, வலக்கை இடக்கை அறியாதவர், பூமியில் தொழுவது; பரமபதம் நித்திய சூரிகளுக்கே இருப்பதைபோலே, உகந்து அருளின தேசம் ஸம்ஸாரிகளுக்கே என்கிறார்.

இங்கு உள்ளார் அங்கு செல்வது, அவனின் மேன்மையை அனுபவிக்க, அங்கு உள்ளார் இங்கு (திருக்கடித்தானம்) வருவது அவனின் சீல குணத்தை அனுபவிக்க என்கிறார்.

பரமபதம் என்ன, இந்த உலகம் என்ன, திருப்பாற்கடல் என்ன, ஆகிய எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்குகிற தலங்கள் முழுவதும் எம் மாயவனுக்கே வசிக்கும் நகரங்கள் ஆனாலும் கூட என்னுடைய மனமும் திருக்கடித்தான நகரும் தன்னுடைய தாயம் (முறையாக வந்த) பதிகளாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

அவனுக்கு வேறுபட்ட சிறப்பினை உடைய நகரங்கள் பலவும் இருந்த போதும், என்னுடைய நெஞ்சத்தையும் திருக்கடித்தானத்தையும் தாயத்தால் கிடைத்த இடமாக விரும்பி இருக்கிறான் என்று கூறுகிறார்.

தாயப் பதிகள் எங்கெங்கும் மாயத்தினால் மன்னி தலை சிறந்து அற்புதன் தானே வீற்றிருந்தான் என்று கொள்ளலாம்.

எல்லா திருப்பதிகளும் அவனுக்கு அப்படியே இருந்தாலும், தான் கிடைப்பதற்கு காரணமாக இருந்த நிலம் திருக்கடித்தனாம் ஆகையால் அதன் மேல் மிக்க காதல் ஆனான் என்று ஆழ்வார் சொல்வதாக உரையாசிரியர் கூறுகிறார்.

மாயம் என்பது இங்கே ‘இச்சை’ அல்லது விருப்பம் என்ற பொருளில் வருகிறது. மன்னி என்பது தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோன்ற வீற்று இருந்தான் என்கிறார். மேலும் ஐஸ்வர்யத்தால் வந்த வேறுபாடு தோன்ற வீற்று இருந்தான் என்கிறார்.

தேயத்து அமரர் என்பது, ஒளி விளங்கும் நித்திய சூரிகள் அடையத்தக்க பூமியான திருக்கடிததானம் என்கிறார்.

உகந்து அருளின தேசங்கள் எல்லாவற்றிலும் விருப்பம் உண்டாகிலும், என்னைப் பெறுவதற்காக திருக்கடித்தானத்தில் தன் மேன்மையும் நேர்மையும் எல்லாம் பிரகாசிக்க நின்றான் என்கிறார்.

அற்புதனும் நாராயணனும் அறியும் வாமனனும் ஆன எம்பெருமான் பொருந்தி வீற்று இருப்பது என் நெஞ்சகமாகும். நின்று கொண்டு இருப்பது நல்ல புகழ் நிறைந்த பிராமணர்களுடைய நான்கு வேதங்களும் நிலை பெற்று முழங்கிக் கொண்டு இருக்கின்ற கற்பகச் சோலை சூழ்ந்த திருக்கடித்தானம் என்னும் நகரம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. ‘

மேவி இருப்பது என் நெஞ்சகம்; நிற்பது திருக்கடித்தானம் என்கிறார். என்னை பெறும் வரையில் திருக்கடித்தானத்தில் நின்றான்; என்னை பெற்ற பிறகு நிற்பதும் இருப்பதும் என் நெஞ்சிலே என்று கொள்ளலாம்.

நாராயணன் என்பது தன் உடைமையை விட்டுக் கொடுக்காத வத்சலன், அதாவது அன்பை உடையவன் என்கிறார். அரி என்று சொல்வதால், அடியவர்களின் விரோதிகளை அழிக்கின்ற ஆற்றல் பெற்றவன் என்கிறார்; வாமனன் என்பதால் தன்னை சிறுக விட்டு அடியார்களுடைய விருப்பங்கள் அனைத்தையும் முடிக்குமவன் என்கிறார். அற்புதன் என்பதால், மேற்சொன்னபடி எல்லாவற்றையும் செய்து ஆச்சரியத்தை உடையவன் என்கிறார்.

சுயம் பிரயோஜனர் என்று இல்லாமல், அநன்யப் பிரயோஜனர் என்னும் புகழை உடைய வைதிகராலே உச்சரிக்கப் படுகின்ற நான்கு வகை வேதங்களும் முழங்கும் கற்பக வனத்தை உடைய திருக்கடித்தானத்தில் அவன் நிற்பது; மேவி இருப்பது என் நெஞ்சகத்தில் என்கிறார்

மேலும், திருக்கடித்தானத்து நாராயணன், அரி, வாமனன் அற்புதன் நிற்பதும், மேவி இருப்பதும் என் நெஞ்சகம் என்றும் கொள்ளலாம்.

சோலை திருக்கடித்தானத்து உறை திருமாலை, என்பதால், சிரமத்தைப் போக்குவதாய்க் காட்சிக்கு இனியதான சோலைகள் உடைய திருக்கடித்தானத்தில் நித்திய வாசம் செய்கின்ற திருமகள் கேள்வனை சொல்கிறார்.

மதிள் குருகூர் என்பதால் சம்சாரம் காரணமாக உண்டாகின்ற பாவக் கூட்டங்கள் புக முடியாத அரணை உடைய திருநகரி என்கிறார்.

ரகுவரசரிதஂ முநிப்ரணீதம்‘ (பாலகாண்டம் 2.43) என்று சொன்னது, ‘வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட இந்த ராமர் கதை, கூட்டுச் சொற்கள், மற்றும் அர்த்தமுள்ள சொற்றொடர்களில் இயற்றப்பட்ட வரிகளைக் கொண்டுள்ளது’ என்பதைப் போல, ‘ பாலோடு அமுது அன்ன ஆயிரம்’ என்று சொன்னது, சொற்களின் பொருள் மற்றும் வாசகங்களின் சேர்த்தி என்கிறார். பால் என்றது திருக்கடித்தானத்து திருமாலை ; அமுது என்றது சடகோபன் சொல் என்கிற வாசகத்தை என்று ஆளவந்தார் நிர்வகிப்பார் என்கிறார்

‘மாயக் கூத்தா’ என்ற சென்ற பதிகத்தில் உண்டான விடாய் நடையாடாத தேசத்திலே வைத்து, ஒரு நாளும் பிரியாத அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

திருமாலை 38 “மேம்பொருள் போகவிட்டு”

Please click here to view the English Version, thanks

இந்த பதிவு சற்று விரிவாக உள்ளதால் இதனை சில பிரிவுகளாக பிரித்துப் பார்க்கலாம். அவை :

  1. திருமாலை இதுவரை
  2. பொழிப்புரை
  3. பாடலுக்கு முன்னுரை
  4. வைணவத்தின் மூன்று ரகசியங்கள்
  5. த்வயத்தின் சிறப்புகள்
  6. பாடலின் அமைப்பு
  7. பாடலின் விரிவான பொருள்
  8. இந்த பாடலில் திருமந்திர அர்த்தம்
  9. இந்த பாடலில் சரம ஸ்லோக அர்த்தம்
  10. இந்த பாடலில் த்வய அர்த்தம்

இதுவரை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாக கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளை பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.

ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இந்த பகுதியில் உள்ள ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற முதல் பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லா தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், என்று ஆழ்வார் பாடலை பார்த்தோம்.

இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான், மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருப்பதை மழைக்கன்று வரை என்ற அடுத்த பாடலில் சொன்னதை பார்த்தோம்.

தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். நமக்கு வேண்டியது, அவனின் குளிர்ந்த பார்வை, ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ என்ற பாடலில் சொல்கிறார்.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள் போகவிட்டு என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அதனை அடியேனால் முடிந்தவரை, அடியேனுக்கு புரிந்த வரை, சொல்ல முயற்சிக்கிறேன். இந்த பாசுரத்தை பற்றி இதைவிட அருமையான, நிறைவான, விளக்கமான சிறந்த பதிவுகள் நிறைய உண்டு, அவற்றையும் படிக்க பிரார்த்திக்கிறேன்.

பாசுரம் 38

கோவில் எனப்படும் ஸ்ரீரங்கத்தில், காவேரி சூழ்ந்த திருத்தலத்தில் கண் வளர்ந்து அருளுகின்றவனே, மேன்மையை விளைவிப்பதாக பிரமிக்க செய்யும், இவ்வுலக விஷயங்களை வாசனையுடன் அறவே விட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை, உள்ளபடி உணர்ந்து, ஸ்வரூப ரூபமான பலனாகிய பகவத் கைங்கர்யத்தை தெரிந்து கொண்டு, ஐந்து இந்திரியங்களையும், தான் அனுபவிக்க வேண்டும் என்று இல்லாமல், அடக்கி, உபாயங்களில் பற்று ஒழியும்படி, தலையில் உள்ள சுமைகளை போக்கி, உன் திருவாசலில் காவல் புரிந்து, உஜ்ஜீவிக்கின்றவராய், தங்கள் நலத்தில் சோம்பி இருப்பவர்களான பக்தர்களை உகக்குமவன் அல்லவோ நீ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பாடலுக்கு முன்னுரை

வியாசர், வேதம் என்ற கடலினை, அறிவு என்ற மத்தினை கொண்டு, கடைந்து, உலக க்ஷேமங்களுக்கு உண்டாக்கப்பட்டதாக சொல்லபடுகிற, மகாபாரதம், வேதங்களின் சாரமாகிறது. சர்வேஸ்வரன் திருப்பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு அம்ருதத்தை கொடுத்தார். வேத வியாசர், வேதத்தை கடைந்து மகாபாரதம் என்ற சாரத்தை ஸம்ஸாரிகளுக்கு உய்யும் உபாயமாக கொடுத்தார். எம்பெருமான் தேவர்களுக்கு அளித்த அமுதம், அவர்கள் துன்புறும் போதும் இறக்க முடியாதபடி கால்கட்டாக உள்ளது; ஆனால் வியாசர் கொடுத்த மகாபாரதம், ஸம்ஸாரத்தை போக்கக்கூடியது என்கிறார். அப்படிபட்ட மகாபாரதத்தை சக்கை என்று சொல்லும் வண்ணம் உள்ளது கீதை என்ற அதில் உள்ள ஒரு பகுதி. அந்த கீதையிலும் சாரமாக உள்ளது சரம ஸ்லோகம்.

இந்திரியங்களின் பலவகையான தாழ்வுகள் நெஞ்சில் பட்டு சோகம் உண்டாவதற்காக, கண்ணன் கீதையில், சரம ஸ்லோகத்தை சொல்வதற்கு முன் உள்ள ஸ்லோகங்களை சொன்னான். அப்படிபட்ட சோகம் தான் சரம ஸ்லோகம் கேட்பதற்கு உறுப்பாகும்.

இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி ..  கீதை 18- 67

‘இதை எப்போதும் தவம் செய்யாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க விரும்பாதவனுக்கும், என்னிடத்தில் பொறாமை உடையவனுக்கும் சொல்லாதே’ என்று கண்ணன், அர்ஜுனனுக்கு சரமஸ்லோகத்தின் பெருமைகளாக சொல்ல தொடங்குகிறார். 

மேம்பொருள் போகவிட்டு என்ற இந்த 38ம் பாட்டு உருவாவதற்காகவே திருமாலை தோன்றியது என்று உரையாசிரியர் சொல்கிறார். திருமாலையில் இந்த பாடலுக்கு முன்னே சொன்ன பாடல்கள், இந்த பாட்டினில் உள்ள அர்த்தத்தை புரிந்தவர்களின் பெருமையை கூறுகிறது. இந்த பாடல்

  • திருமந்திரத்தின் அர்த்ததை சொல்வதுடன்,
  • சரமஸ்லோகத்தின் அர்த்தத்தை சொல்வதுடன்,
  • த்வய மகா மந்திரத்தின் அர்த்தத்தையும் சொல்கிறது. 

இந்த பாடலின் விரிவான அர்த்தங்களை பார்க்கும் முன், வைஷ்ணத்தின் மேலே சொன்ன மூன்று முக்கிய ரகசியங்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம் பார்க்கலாம்.

மூன்று ரஹஸ்யங்கள் (ரஹஸ்யத்ரயம்)

திருமந்திரம், சரமஸ்லோகம் மற்றும் த்வயம் மூன்றும் சேர்ந்து ரகஸ்யத்ரயம் என்று வழங்கப் படும். முதல் இரண்டில், நம் ஆச்சாரியர்கள் அர்த்தங்களை ரகசியமாக வைத்தார்கள். த்வயத்தில் அர்த்தத்தோடு, சப்தத்தையும் சேர்த்து மறைத்து வைத்தார்கள். அதாவது எம்பெருமான் மேல் பற்று கொண்டு, இவற்றின் மதிப்பை தெரிந்து, மரியாதை செய்பவர்களுக்கு மட்டும், அர்த்தம், சப்தம் முதலிவற்றை ஆசார்யார்கள் மூலம் மட்டுமே உபதேசித்து வந்தார்கள்.

திருமந்திரம்

இறைவனது நாராயணன் என்னும் பெயரைக் கொண்ட எட்டெழுத்து மந்திரத்தைத்  திருமந்திரம் எனச் சிறப்பாக கூறுவர்.

சரம ஸ்லோகங்கள் (3)

சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  சரம ஸ்லோகங்கள் மூன்று முக்கியமானவை என்றும், அவை வராக, இராம மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் ஆகும். பரமாத்மா இந்த மூன்று சரம ஸ்லோகங்களின் மூலம் நமக்கு, தன்னை அடையும் வழியை சொல்லுகிறார். 

வராக சரம ஸ்லோகம்

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||”

நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிஸ்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!. “உடல், மனது முதலியவை நன்றாக இருக்கும் போது, என்னை ஒருவன் நினைப்பானாகில், பின்பு அவன் மூச்சடங்கி முடியாதபோது, அவனை நான் நினைத்து நற்கதியை பண்ணுவிப்பேன்” என்று பூமிப் பிராட்டியிடம் வராகப்பெருமாள், கூறுகிறார். 

இராம சரம ஸ்லோகம்

இராமாயணத்தில் வருவது விபீஷண சரணாகதி. ஸ்ரீராமபிரான், பகைவனுக்கும் அருளும் பண்பாளன். அந்த சரணாகதியின் உச்சத்தை கீழே உள்ள இந்த ஸ்லோகத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஸக்ருத்  ஏவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம, (வால்மீகி இராமாயணம் ।6.18.32)

விபீஷணனை ஏற்றுக்கொள்ள அனுமனைத் தவிர, சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது, ஸ்ரீராமபிரான், “என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கு, தான் அபயம் அளிப்பதாகவும், அதுவே தன்னுடைய விரதம் என்றும் திருவாய் மலர்ந்து அருளுகிறார். ’என்னிடம், பாதுகாவல் தேடி வருவார்க்கு, எல்லா உயிர்கள் இடமிருந்தும் பாதுகாப்பு அளிப்பேன். இது எனது வாக்கு” என்பது ராம சரம ஸ்லோகம் ஆகும்.

கிருஷ்ண சரம ஸ்லோகம்

 “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”  –

எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்” என்பதையே தன்னை அடையும் வழியாகச் சொல்கிறார்.   “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“,  அதாவது, “என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்” என்று சொல்கிறார்.

த்வயம்
முதல் வாக்கியம்
  • முதல் இரண்டு பதங்கள் –ஸ்ரீமன் நாராயண சரணௌ – எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து நாம் பாக்கியம் பெற, அவன் திருவடிகளே உதவி செய்யும்; இவ்வுலக பற்றுகளே விரோதிகள்; ஜீவாத்மாக்கள், ஐஸ்வர்யத்தையும், கைவல்யத்தையும் விட்டுவிட்டு பகவல்லாபார்த்திகள் ஆகவேண்டும் – ஐஸ்வர்யம்  மற்றும் கைவல்யம் விரோதிகள் ;  
  • மூன்றாம் பதம் – சரணம்  ப்ரபத்யே – விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை விட்டு விலகுவதற்கும் பெருமாள் திருவடிகளே உபாயம் ; எம்பெருமான் திருவடிகளே உபாயம்; ஆச்சார்யனைப் பற்றிக் கொள்வது ; பெரிய பிராட்டியாரை முன்னிட்டு சரணாகதி அடைவது.
இரண்டாம் வாக்கியம்

தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல், ஈஸ்வரனே உபாயமாக இருக்கும் போது, அவனை அனுபவிப்பதே வாழ்ச்சி அன்றோ என்கிறார்.

  • முதல் பதம் – ஸ்ரீமதே – ஸ்ரீதேவி தாயாருடன்  இணைந்த நாரயணன் 
  • இரண்டாம் பதம் – நாராயணாய – தலைவன், நாம் வணங்க வேண்டியவன் நாராயணன்; அவன் எல்லையற்ற உயர்ந்த குணங்கள் கொண்டவன்; அவன் திருவடிகளை வணங்கி நாம் தொழ வேண்டும்; அவனுக்கு சேவை செய்திட வேண்டும்; பரமபதம் சேர்வதே குறிக்கோள்; எம்பெருமானின் சிவந்த பாதங்களை அடியேனுடைய தலையில் சீக்கிரமாக சேர்க்கவேண்டும் என்பதே விண்ணப்பம் ; அவனுக்காக  மட்டுமே நாம் இருப்பது.
  • மூன்றாம் பதம் – நம – கைங்கரியத்தில் விருப்பம் உண்டாக வேண்டும் – நாம் கைங்கர்யம் செய்ய வேண்டும் – அவனுக்கு கைங்கர்யம் செய்வது சிறந்தது. அவன் அடியார்க்கு அடிமை செய்வது அதை விட சிறந்தது என்பர்.
த்வயத்தின் சிறப்புகள்

எம்பெருமானின் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவது என்பதே த்வய மகா மந்திரம் சொல்வதன் பயன் ஆகும் என்று நாம் அறிவதே, த்வயம் சொல்லும் பல விஷயங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

சுவாமி நம்மாழ்வார் ‘அகலகில்லேன் இறையும் என்று ‘ என்ற திருவாய்மொழி 6.10.10 பாடலில் மிக சிறப்பாக த்வய மகா மந்திரத்தின் அர்த்தத்தை வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலும், த்வய மகாமந்திரம் கேட்ட எம்பெருமான் எப்படி மகிழ்கிறான் என்று சொல்ல வில்லை. இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், த்வயம் சொல்லப் படுவதை கேட்டு, எம்பெருமான் அனுபவித்து அவன் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவதை சொல்கிறார்.

அருளி செயல் ரகசியம் என்ற நூலில் அழகிய மணவாள பெருமாள் நாயனார் துவயத்தின் பெருமைகளை சொல்கிறார். அதில் இருந்து சில வரிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

  • சரமஸ்லோகம் சரணாகதி செய்ய வேண்டும் என்று சொல்லியது. சரணாகதிக்கான ருசி உடையவர்கள் எப்போதும் த்வய மகா மந்திரம் சொல்லிகொண்டு இருப்பார்கள்.
  • த்வய மந்திரம், எம்பெருமான் திருவாக்கால் வந்தது என்பது இதன் சிறப்பு.
    • பெரிய திருமொழி 5.8.9 ஏழை ஏதலன் என்ற பதிக பாடலில், “வளங்கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு அடியேன் அறிந்து, உலகம் அளந்த பொன்னடியே அடைந்துய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம் மானே.” என்று சொன்னது எம்பெருமானே தொண்ட மன்னவனுக்கு திருமந்திரத்தையும், அதன் அர்த்ததையும் அருளி செய்ததை சொல்கிறது.
    • அதே போல, ‘மெய்ம்மை பெருவார்த்தை‘ (நாச்சியார் திருமொழி, 11.10) என்று ஆண்டாள் சொன்னது, எம்பெருமான் சொன்ன சரமஸ்லோகத்தை குறித்து ஆகும். (கண்ணபிரான் எந்தத் தேரில் இருந்து கொண்டு கீதை அருளிச்செய்தானோ, அந்தத் தேர் பெரியதிருவடியின் அம்சம் என்பதும், விட்டுசித்தரும் பெரியதிருவடியின் அம்சம் என்பதும் நம் ஸம்ப்ரதாயம். ஆகவே விட்டுசித்தர் அப்போதே தேராக இருந்து கொண்டு கீதையைக் கேட்டிருப்பர் என்கிற கருத்துப்பட ‘திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்’ என்று சொல்வது அழகு.)
    • இப்படி திருமந்திரத்தையும் சரமஸ்லோகத்தையும் அருளி செய்த திருவாக்கால், ‘துவயத்தை சொல்லிகொண்டு இரும்’ என்று சுவாமி ராமனுஜாரிடம் நம்பெருமாள் ‘சரணாகதி கத்யத்தில் துவயத்தை சொன்னவனின் சிறப்பையும், த்வயத்தை சொல்ல வேண்டும் என்பதையும் அருளி செய்ததை நினைவு கூறவும்.
  • த்வயம், சொல்லிக்கொடுத்ததவரே, அவரின் சிஷ்யர்கள் கற்றுக்கொண்டதை சொல்ல கேட்டால், கை கூப்பி, விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்படி பெருமை உடையது ஆகும்.
  • த்வயம் இப்போது யார் சொன்னாலும், எம்பெருமான், அதனை நாம் சொன்னோம் என்று பாராது, இதற்குமுன் ஆச்சாரியார் பலரும் சொன்ன வார்த்தைகள் இவை என்று எல்லோருக்கும் அருள் சுரப்பான் என்பது பெரியவர்கள் வாக்கு.
  • திருநாரணன்தாள் காலம் பெறச்சிந்தித்துய்ம்மினோ.‘ (திருவாய்மொழி, 4.1.1) என்று சுவாமி நம்மாழ்வார் சொல்வது, நாம் த்வய மகாமந்திரத்தை சொல்ல வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்வது ஆகும். அவரே ‘ஆர் எனக்கு நின் பாதமே சரணாக தந்தொழிந்தாய்‘ (திருவாய்மொழி 5.7.10) என்று சொல்லி, அவனிடம் ஒரு சிறிதும் ஈடுபாடு இல்லாதவனுக்கு கூட அவன் திருவடிகளை உபாயமாக தந்து அருள்வதையும் சொல்கிறார்.
  • ஆச்சாரியார்களுக்கு ருசி த்வய மகா மந்திரத்தில்; வேதம் அல்லது சாஸ்திரத்திற்கு ருசி திருமந்திரத்தில்; ஈஸ்வரனுக்கு ருசி சரமஸ்லோகத்தில் என்பது பெரியவர்கள் வாக்கு.
  • மாதவன் என்றென்று ஓத வல்லீரேல், தீதொன்றுமடையா ஏதம் சாராவே (திருவாய்மொழி, 10.5.7) என்பதன் பொருள், த்வய மகா மந்திரத்தை சொல்பவர்களுக்கு பாவங்கள் ஏதும் கிட்டாது என்பதாகும். மாதவன் என்பது, மகா லக்ஷ்மியுடன் கூடிய நாராயணனை சொல்கிறது. என்றென்று என்பதில், என்று என்பது இரண்டு முறை வருவது த்வய மகாமந்திரத்தில் ஸ்ரீ சம்பந்தம் உத்திர வாக்கியம், பூர்வ வாக்கியம் என்று முதல் மற்றும் இரண்டாவது வாக்கியங்களில் ‘ஸ்ரீ’ வருவதை குறிப்பிடுவார்கள். முதல் வாக்கியத்தில் உள்ள ஸ்ரீ என்ற பெரிய பிராட்டியாரை முன்னிட்டு கொண்டு சரணாகதி அடைவது. இரண்டாவது வாக்கியத்தில் உள்ள ஸ்ரீயுடன் கூடிய எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்வது.
  • திருவாய்மொழி (9.10.5), ‘சரணாமாகும் தனது தாள் அடைந்தார்க் கெல்லாம், மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்‘ என்று சொல்லியது போல, மரணமாகும் வரை துயவம் சொல்லிகொண்டு இருப்பவர்களுக்கு மோக்ஷம் கொடுக்கிறான் என்ற பெருமையும் த்வயத்தை சேரும்.
  • உய்யக்கொண்டார் என்ற ஆச்சாரியார் சொல்வது, ‘ஆச்சார்யன் பிரமாதா, அதாவது, மேன்மையான அறிவு அல்லது மிக உயர்ந்த புத்தி கூர்மை; அர்ச்சாவதாரம் பிரமேயம், அதாவது, நம் கண்ணால் பார்க்க கூடியது அல்லது கண்ணுக்கு புலப்படுவது; த்வயம் பிரமாணம் அதாவது, அளவுகோல், அல்லது அதிகார ஆணயம் அல்லது ஆதாரம்.
  • மணக்கால் நம்பி என்ற ஆச்சாரியார், ‘சம்சாரம் என்ற பாம்பினால் கடி பட்டவனுக்கு த்வயம் தான் ரசாயன சேவை, போல இருக்கும்’ என்பார்.
  • ஆளவந்தார், ‘அதனனுக்கு மகாநிதி போல்’ என்பார். சல்லி காசு இல்லாதவனுக்கு மகா நிதி கிடைத்ததை போல என்பது இதன் பொருள். அதாவது மோக்ஷத்திற்கு வழி தெரியாதவனுக்கு த்வய மகா மந்திரத்தை சொல்வது, அதனனுக்கு மிகப் பெரிய நிதி கிடைதத்து போல என்கிறார்.
  • திருமாலைஆண்டான் என்ற ஆச்சார்யான், பசி தாகம் மிக்கவனுக்கு அமிர்தம் போல சம்சார பசியில் இருப்பவனுக்கு த்வயம் இருக்கும் என்பார்.
  • திருகோஷ்டியூர் நம்பி, பசி எடுத்த குழந்தைக்கு தாயின் பால் சுரக்கும் மார்பகம் போலே, ஸம்ஸாரிகளுக்கு எம்பெருமானின் திருவடிகளில் இருந்து சுரக்கும் த்வயம் என்று அருளி செய்வார்.
  • ராமானுஜர், ராஜகுமாரனுக்கு முடியும் மாலையும் போலே, பிரபன்ன குலத்திற்கு த்வயம் சொல்வது என்று அருளி செய்வார். துவயத்தின் பூர்வ, உத்திர வாக்கியங்கள், இராஜகுமாரின் முடி மற்றும் மாலையை போல் என்கிறார்.
  • எம்பார், நன்றாக விலங்கு இடபட்டவனுக்கு, விடுதலை அளித்து முடி சூட்டியது போல் த்வயம் ஆகும் என்கிறார்.
  • பிள்ளை உறங்காவல்லி தாசர், தரித்ரன் ஒருவனுக்கு தொட்டதை தங்கம் ஆக்கும் சிந்தாமணி கிடைத்ததை போலே ஸம்ஸாரிக்கு த்வயம் , எதை தொட்டாலும் அது பரிமளிக்கிறது என்பார்.
  • திருக்குருகைபிரான பிள்ளான், எலுமிச்சை பழம் கொடுத்து ராஜ்யத்தையே கேட்பது போல, இரண்டு வரி த்வயம் சொல்லி, நாம் மோக்ஷம் கேட்டு பெறுவது என்பார்.
  • பட்டர் ஒரு இரவு முழுவதும் நஞ்ஜீயர் மடியில் தலை வைத்து படுத்து இருந்து எழுந்த போது, நம்ஜீயர் சிறிதும் நகராமல் அப்படியே இருந்தது கண்டு, அது தான் கொடுத்த த்வய மகா மந்திரம் கொடுத்த உறுதியினால் அல்லது பலத்தினால் தான் என்று சந்தோஷித்து அவருக்கு மீண்டும் ஒரு முறை த்வயத்தையே தனமாக கொடுத்தார்.
  • நஞ்ஜீயர், சொல்லப்படுகின்ற விஷயங்களில் எம்பெருமானுக்கு மேல் வேறு விஷயம் இல்லாததை போல், சொல்லபடுகின்ற வார்த்தைகளில் த்வயத்திற்கு மேல் ஒரு சப்தம் இல்லை என்று அருளி செய்வார்.
  • வேதாந்த தேசிகன் தன்னுடைய ரஹஸ்யத்ரய சாரத்தில், வேதாந்தத்திற்கு மேல் ஒரு சாஸ்திரம் கிடையாது; தத்துவம் என்று சொன்னால் அலைகடல் கடைந்து கொடுத்த மதுமதனம் செய்த எம்பெருமான்; சத்வ குணத்திற்கு மேல் ஒரு உடல் ஆரோக்கியம் கிடையாது; நம் ஆத்மாவிற்கு க்ஷேமம் என்றால், த்வயதிற்கு மேல் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்.
  • நம்பிள்ளை, பரம சுகுமாரார்களாகிய இராஜகுமார்களுக்கு கற்பூர நிகரம் போலே (பச்சை கற்பூரம் வாயில் அடக்கி கொண்டு பேசினால், தொண்டை வறண்டு விடாமல் இருப்பதை போல), பிரபன்னர்களுக்கு, த்வயம் என்று அருளி செய்வார்.
  • திருமந்திர விளக்கதிற்கு வேண்டுமானால் த்வயம் தேவைபடலாம், ஆனால் த்வய விளக்கத்திற்கு எதுவும் தேவை இல்லை என்பது ஆச்சாரியார்கள் வாக்கு.
  • கூரத்தாழ்வானை திருநாட்டிற்கு (பரமபதம்) எழுந்தருள செய்யும் போது, ‘இராஜகுமாரன் பேசும் போது கற்பூரம் அடக்கி கொள்வதை போல், அவருக்கு த்வயம் சொல்லிகொண்டே போங்கள், அது கேட்டு அவர் திருஉள்ளம் ஆனந்தம் அடைந்து, அது அவர் போகும் வழிக்கு துணையாக இதமாக இருக்கும் என்று சுவாமி ராமானுஜர் அருளி செய்ததை நினைவில் கொள்ளலாம்.
  • அனந்தாழ்வான், நஞ்ஜீயரை, திருமந்திரத்தில் பிறந்து, த்வயத்தில் வளர்ந்து த்வயைகநிஷ்டர் ஆவீர் என்று வாழ்த்தியதையும் நினைவில் கொள்ளலாம்.

இப்படி பல பெருமைகளை உடைய த்வயமஹா மந்திரத்தை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாடல் சொல்கிறது என்பதையும் இதனால் எம்பெருமான் எப்படி உகக்கிறான் என்பதையும் பார்க்கலாம்.

மீண்டும் இந்த பாடலுக்கு வருவோம்.

பாடலின் அமைப்பு

நாம் ஒரு பொருளை கற்றுக்கொள்ளும் போது, அதனை பற்றிய ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை கற்றுக் கொண்டு, அதற்கு பின் பழகினால் நமக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு, அதனை கடைபிடிப்பதற்கு சுலபமாகவும், நம்மை ஊக்கிவிப்பதாகவும் இருக்கும்.

எந்த பலனுக்கும் கற்பது என்றும் அனுஷ்டிப்பது என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. கற்கும் காலத்தில், அந்த பலனின் சிறப்புகள் பற்றி முழுவதும் அறிந்து கொண்டு (what), பிறகு அந்த பலனை அடைவதற்கான காரியங்களை (how) அனுஷ்டிக்க / பின்பற்ற வேண்டும்.  ஆனால், அனுஷ்டிக்கும் காலத்தில், முதலில் நாம் பின்பற்ற வேண்டியவைகளை (how) பின்பற்றிய பிறகே, அதன் பலன் (what) நமக்கு கிடைக்கும்.

த்வயத்தில் செய்ய வேண்டியது முதல் வாக்கியத்திலும் (how), அடையும் பலன் (what) இரண்டாவது வாக்கியத்திலும் சொல்லப் பட்டுள்ளது. எனவே த்வயம், முதலில் அனுஷ்டிக்க வேண்டிய காலத்திற்கு ஏற்ப சொல்லபட்டு உள்ளது.

இந்த திருமாலை பாடலில் அடையும் பலன் (what) முதல் இரண்டு அடிகளிலும், செய்ய வேண்டியது கடைசி இரண்டு அடிகளிலும் (how) சொல்லப் படுவதால், இந்த பாடல் பயனை (மோக்ஷத்தை) பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, பிறகு அதை எப்படி அடைவது என்று சொல்லி, கற்கும் காலத்தில் உள்ள பாடலாக அமைந்துள்ளது.

த்வய மஹா மந்திரத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தத்தை திருவாய் மொழி மூன்றாம் பத்தில், 3.3 ஒழிவில் காலமெல்லாம் என்ற பதிகத்தில் சொல்லி உள்ளார். த்வய மஹா மந்திரத்தின் முதல் வாக்கியத்தின் அர்த்தத்தை நம்மாழ்வார், ஆறாம் பத்தில் (திருவாய்மொழி 6.10.10) அகலகில்லேன் என்ற பாடலில் சொல்கிறார். ஆக நம்மாழ்வாரும் முதலில் மோக்ஷ பலன்களை சொல்லி, பிறகு எப்படி அடைவது என்று நம்மை மோக்ஷம் கற்கும் நிலைக்கு அழைத்து செல்கிறார்.

ஆண்டாள் கறவைகள் பின் சென்று என்ற திருப்பாவை 28 ல் த்வயத்தின் முதல் வாக்கிய அர்த்தமும் சிற்றம் சிறு காலை (திருப்பாவை 29) என்ற பாடலில் த்வயத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தமும், சொல்லி, த்வயம் போலவே நாம் எப்படி மோக்ஷத்தை அடைவது என்றும் பின்னர் அதன் பலன்களை சொல்லி உள்ளார்.

பலன்களையும், அவற்றை எப்படி அடைவது என்பதையும் (உபேயம், உபாயம்) (What and How) ஒரே பாடலில் கொடுத்தவர், இந்த தொண்டரடிபொடி ஆழ்வார் ஒருவரே.

சரம ஸ்லோகம் மோக்ஷம் அடைய வழியை (உபாயத்தை) மட்டுமே சொல்கிறது. (சரம ஸ்லோகம், ‘என்னை உபாயமாக உறுதியாக கொள்’ என்ற சரணாகதியை காட்டுகிறது.) த்வயம் வழி, பலன் இரண்டையும் சொல்கிறது; இதில் ருசி உடையவர்கள் த்வயத்தை எப்போதும் அனுசந்தித்து / சொல்லிக் கொண்டு, அவனை அடைவார்கள். இந்த த்வயத்திலும், இதன் அர்த்தத்திலும் ஊற்றம் உள்ளவர்களிடத்தில் எம்பெருமானுக்கு உள்ள உகப்பை இந்த பாடல் சொல்கிறது.

சென்ற பாடலில் (திருமாலை 37) அளியல் நம் பையல் என்று எம்பெருமான் சொல்லவில்லையே என்று மிக வருத்தத்துடன் சொன்ன ஆழ்வாரை பார்த்து,

  • ‘மற்ற உலக விஷயங்களில் ஈடுபடுத்தும் இந்த சம்சாரத்தில், ஸ்வரூபத்திற்கு தகுந்த புருஷார்த்தமான, எம்பெருமான் விஷயமான கைங்கர்யத்தை வேண்டுவதும், 
  • அது கிடைப்பதற்கு தாம் ஒரு முயற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதும்
  • அதனை அவன் கண் விடுவதும் அல்லது அதற்கு அவன் கையை எதிர்பார்த்து இருப்பதும், 
  • அப்படி கிடைக்க பெறும் புருஷார்த்தம் தாமதமானால் அதற்காக வருந்துவதும் ஆகிற

இத்தனை பெருமைகள் நிறைந்த

  • மகாத்மாவான ஆழ்வாரை கிடைக்க பெற்றோம் என்று எம்பெருமான் / பெரியபெருமாள் திருவுள்ளம் மிக உகந்து,
  • திருவுள்ளத்தில் உள்ள உகப்பு எல்லாம் திருமுக மண்டலம் மூலம் வெளியே தெரியும்படி
  • ஆழ்வார்க்கு சேவை சாதிக்க,
  • ஆழ்வார், “எம்பெருமானே, தேவரீரை அடைந்து, எங்களை ரக்ஷிக்கும் பொறுப்பை தேவரீரிடம் ஒப்படைத்து,
  • தாங்களே தங்களை ரக்ஷிப்பதில் இருந்து பின் வாங்கியவர்களை கண்டால், தேவரீர் திருவுள்ளம் உகந்து இருப்பது’,

என்று பெரியபெருமாள் முன்பு நின்று அவரின் திருமுகத்தை பார்த்து இந்த பாசுரத்தில் விண்ணப்பம் செய்கிறார்.

விரிவான பொருள்

மேம்பொருள்

மேம்பொருள் என்பதற்கு  (1) மேலெழுந்த பொருளென்றும்,  (2) மேவின பொருளென்றும், (3) மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்று விதமாக பொருள் கூறுவார்கள். மூன்று பொருள்களிலும் உடலும் உடல் சம்பந்தமாக பொருள்களும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

(1) கர்மங்கள் காரணமாக தேகம் ஆத்மா என்ற இரண்டும் செயற்கையான தொடர்புடையதாய் இருக்கும். எம்பெருமானை பற்றிய அறிவு பிறந்தவுடன், தேகம் முக்கியமான பொருளாக கருதபடமாட்டாது. தேகத்தை இனியது என்று நினைத்து, இதை கொண்டு சுகம் அனுபவிக்கும் ஜீவாத்மா, மேலெழ பார்க்கும் போது, இனியதாக தோன்றி, ஆராய்ந்து பார்க்கும் போது, இனிமை ஒன்றும் இல்லாததாக இருக்கும் இந்த தேகத்தை ‘மேல் எழுந்த பொருள் ‘என்று சொல்வதாக கொள்ளலாம்.

(2) தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே –
 (கீதை 7-14)

இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், ‘தேவனாகிய என்னால் நியமிக்கப் பட்டதும், இந்த மூன்று குணங்களையும் உடையதான எனது மாயை கடப்பதற்கு அரியது ; என்னையே யார் சரணடைவரோ, அவர்கள்தான் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்” என்பது. இந்த அறிவுள்ள ஆத்மாவை கொண்ட அடியவனால் பிரிக்க முடியாதது அவனுடைய தேகம். தானே தேவன், தானே மனிதன் என்று உடம்பை தானாக நினைக்கும்படி இந்த உடலானது ஆத்மாவோடு பொருந்தி இருப்பதால், மேவின பொருள் என்று கொள்ளலாம்.

(3) மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்று சொன்னது, எல்லாம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர் என்று தங்களை தாங்களே நினைக்கும்படி செய்யவல்ல தேகத்தை குறிக்கிறது.

இப்படி மூன்றுவிதமான பொருள்களிலும் மேம்பொருள் என்பது தேகத்தையும் அதனோடு சேர்ந்த பொருள்களையும் குறிக்கின்றது.

போகவிட்டு

போக விட்டு என்று சொன்னது, வாசனையோடு போக விட்டு என்று பொருள். இந்த சரீரத்தோடு இருக்கும் வரை, அதை விட முடியாததால், ‘இந்த சரீரமும் அதனோடு சேர்ந்தவைகளும் புருஷார்த்தம் அல்ல’ என்ற அறிவை உடையவன் ஆவதே வாசனையோடு விடுவது என்பதாகும். அப்படி அல்லாமல், சரீரத்தை நேரே விடுவதை பொருளாக எடுத்து கொள்வது பொருந்தாது.

ஈஸ்வரன் அல்லது பரமாத்மா ஏற்படுத்திய சரீர சம்பந்தத்தை ஜீவாத்மாவால் போக்க முடியாது; தான் அல்லாத தேகத்தை தான் என்று நினைக்கும் நினைவும், தன்னுடையது அல்லாத பொருள்களை தன்னுடையது என்று நினைக்கும் நினைவும் சம்சாரமாகிற மரம் வளர்ப்பதற்கு இரண்டு பருப்புகளை உடைய விதை ஆகும் என்று விஷ்ணு புராணம் (6.7.11) சொல்கிறது. இதன்படி, தேகத்தை ஆன்மா என்று நினைப்பதும், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களை தங்களுடையதாக நினைப்பதும்,

தேகத்தை காட்டிலும் வேறுபட்ட ஜீவாத்மாவை, ஸ்வதந்திரமாக நினைப்பதை தவிர்ப்பது என்பதை ‘போகவிட்டு‘ என்று சொல்கிறார். மஹா ஞானிகளும் ஜனகர் போன்றவர்கள் கூட செய்ய கூடியது இவை மட்டுமே என்கிறார்.

இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளரும் போது, ஒன்றுக்கு ஒரு பாதகமும் வராமல்  ஒன்றை மட்டும் வெட்ட நினைத்தவன், வெட்ட வேண்டிய மரத்தின் வேரினை கொத்தி, அதில் பெரும்காயம் (மருந்து) வைத்தால் அது மட்டும் பட்டு போவதை போல், தேகம், ஆத்மா என்ற இரண்டு மரங்களில் தேகத்தை மட்டும் கழிக்க நினைப்பவன், அகங்காரம், மமகாரம் இல்லாமை, ஸ்வாதந்த்ரிய புத்தி இல்லாமை என்னும் நினைவுகளாகிய பெரும் காயத்தின் உதவியோடு தேகத்தை கழிக்கலாம் என்று கருத்து. 

மெய்ம்மையை மிக உணர்ந்து

மெய் என்பது ஆத்மாவை குறிக்கும். மெய்பொருளாய் தனக்கு தானே பிரகாசிக்கும் ஆத்மாவை சொல்கிறது. சத்யம் (மெய் ) என்பது சேதன (அறிவுள்ள) தத்தவமாகவும், அசத்யம் என்பது அசேதன (அறிவற்ற) தத்துவமாகவும் அந்த பர வஸ்து (ஆத்மா) சத்யமாகவே, எப்போதும் மாறாததாக, நிர்விகாரமாகவே இருந்தது என்று உபநிஷத் சொல்கிறது. அதுபோல எப்போதுமே மாறிக்கொண்டு இருக்கும் அசேதன பொருளான உடலை, ‘பொய்’ என்றும், ஸ்வரூப மாறுபாடில்லாத சேதன பொருளான ஆத்மாவை, ‘சத்யம் – மெய் ‘ என்றும் சொல்லுகையாலே, இவரும் ஆத்மாவை மெய் என்கிறார்.

மாறாமல் இருக்கும் சேதனங்களான ஜீவாத்மாக்களையும், மாறிக்கொண்டே இருக்கும் அசேதனங்களான உடல்களையும் தாங்கி கொண்டு இருக்கும் ஈஸ்வரனான பரமாத்மா எப்போதும் மாறாததாக நிர்விகாரமாகவே தனக்கு தானே பிரகாசித்துக்கொண்டு எப்போதும் சத்ய மயமாய் நித்யமாக இருக்கிறது. இப்படி ஆத்ம ஸ்வரூபத்தின் நித்ய தன்மையை, உண்மை என்றும் மெய் என்றும் மெய்ம்மை என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

மிக உணர்ந்து
  • ‘தேகமே ஜீவாத்மா’ என்று சொல்பவர்களையும்,
  • ‘தேகத்தை காட்டிலும் வேறுபட்டவனாக நித்யமாய் சுதந்திரமாக இயங்குபவன் ‘ ஜீவாத்மா என்று சொல்பவர்களையும்,
  • ‘ஜீவாத்மாவிற்கு கிடைக்கும் அறிவு ‘வந்தேறி’ என்றும் ‘கல்லை போல அறிவற்றவன் ஆக்குவதே மோக்ஷம் ‘ என்றும் சொல்பவர்களையும்

போல அல்லாமல்

  • ஜீவாத்மாவை உள்ளபடி உணர்ந்து,
  • உடல், மனம், புத்தி இவற்றில் இருந்து வேறுபட்டதாக,
  • தானே பிரகாசிப்பவனாக,
  • நித்யனாக,
  • நித்தியமான அறிவை குணமாக உடையவனாக,
  • அணு அளவான ஸ்வரூபம் உடையவனாக,
  • ஈஸ்வரனுக்கே / பரமாத்மாவிற்கே உரியவனாக,
  • அவன் அடியவர்களுக்கு ஆட்பட்டவனாக இருப்பதே

ஜீவாத்மா என்று அறிவதே ‘மிக உணர்ந்து’ என்பதை குறிக்கும்.

ஆம்பரிசறிந்து கொண்டு

தேகமும் தேகத்தோடு தொடர்புடைய பொருள்களும், கைவிடத்தக்கவை என்று உணர்ந்து, ஆத்மாவை உள்ளபடி அறிந்தால் அதற்கு பிறகு உண்டாகும் பயனாகிய, ‘ஆம் பரிசு’, பகவத் கைங்கர்யமே ஆகும். ஆம்பரிசு, என்பது வளர்வதற்கு உதவும் பயன். தன்னுடைய ஆத்மாவை எப்படி இவன் நினைத்து இருக்கிறானோ அதற்கு தக்கபடி இவன் வளர்வதற்கு பயன்கள் கிடைக்கின்றன.

  • பசு முதலிய விலங்குகளிடம் உள்ள ஆத்மா, அதனை பசுவாக நினைத்து இருக்கும் போது, புல்லுக்கட்டு அது வளர்வதற்கு உதவும் ஆம்பரிசாக ஆகிறது.
  • ஒரு மனிதனிடம் உள்ள ஆத்மா, அவனை மனிதனாக நினைக்கும் போது, அன்னம் முதலியவை அவன் வளர்வதற்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது.
  • தேவ சரீரத்தில் இருக்கும் ஆத்மா தன்னை தேவனாக நினைக்கும் போது, அம்ருதம், அது வளர்வதற்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது. 
  • எந்த சரீரத்தில் இருந்தாலும், ‘நான் அடியேன்’ என்று ஒரு ஜீவாத்மா நினைத்து, அது வளர்வதற்கு உதவும் ஆம் பரிசாவது, கைங்கர்யமே.

இந்த தேகம், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களுடன் இருக்கும் போது, அவனது அறிவு மழுங்கி இருப்பதால், அந்த ஆத்மா பிரகாசிப்பது இல்லை. பரம பதத்திற்கு போய், அறிவு தெளிவு/விளக்கம் பெற்று, ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால், ஆத்மாவின் இயல்பான கைங்கர்யமே, வளர்ச்சிக்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது.

அறிந்து கொண்டு

தேகம் முதலானவை கைவிட வேண்டியவை என்கிற அறிவும், ஜீவாத்மா, எம்பெருமான் சொல்வதுபடியே நடக்க வேண்டியது என்ற அறிவும், தனக்கு கிடைக்க வேண்டியது கைங்கர்யம் என்கிற அறிவும் ஒவ்வொரு சேதனனுக்கும் தேவையான பெரும் செல்வம் ஆகும். இந்த அறிவு இருந்தால், வேறு எதுவும் இவனுடைய பேற்றுக்கு தேவை இல்லை. இவனை

  • சம்சார பந்தங்களில் இருந்து விடுவிப்பவனும்
  • புண்ணிய பாவங்களில் இருந்து விடுவிப்பவனும்,
  • தன்னை பற்றுவதற்கு உபாயமானவனும் எம்பெருமானே ஆவான். 

‘விடுகை உபாயமா, பற்றுகை உபாயமா’ என்று கேட்டவருக்கு, ’இரண்டும் அன்று, விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்’ என்று நஞ்ஜீயர் அருளி செய்த வார்த்தைகளை இங்கு நினைவில் கொள்ளலாம். (விடுகை என்பது, எம்பெருமானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விடுவது; பற்றுகை என்பது எம்பெருமானை பற்றுவது).

மேம்பொருள் என்பது தேகம் முதலானவை என்பதும், ‘மெய்ம்மை ‘ என்பது ஆத்ம ஸ்வரூபம் என்பதும் ‘ஆம் பரிசு ‘ என்பது கைங்கர்யம் என்பதும் நேரே பொருளாக குறிக்காது என்றாலும், அந்தந்த தன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, அர்த்தத்தின் பெருமைகளை / சிறப்புகளை / ஏற்றத்தை / சீர்மையை கருதி, அந்த உயரிய வார்த்தைகளை மறைத்து இந்த சப்தங்களினால் பாடலை அருளி செய்கிறார். இந்த ஆழ்வார் முன்பும் ‘மூன்று எழுத்து உடைய பெயரால்‘ என்பது போல பல இடங்களில் இதே யுக்தியை பயன்படுத்தி உள்ளார்.

ஐம்புலன் அகத்து அடக்கி

ஐம்புலன் அகத்து அடக்கி என்பதும் மேம்பொருள் போகவிட்டு என்பதும் ஒரே பொருள் தருவது போல இருந்தாலும் இங்கே ஆழ்வார் சொல்வது கைங்கர்யம் செய்வது எம்பெருமானின் உகப்பிற்கே என்பதை வலியுறுத்தவே ஆகும். இந்திரியங்களை தன்னுள்ளே அடக்கி, அதாவது தன் வசத்திலே இருக்கும்படி செய்வது என்பது மேல் எழுந்த பொருள். அதனை ‘மேம்பொருள் போகவிட்டு ‘ என்ற முதல் தொடரிலேயே, தேக சம்பந்த பொருள்கள் என்று ஆழ்வார் சொல்லி உள்ளார். பிறகு மீண்டும் இதனை இங்கு சொல்வது, ஆம்பரிசு, என்ற கைங்கரியத்தை செய்வதும், தனக்கு ஆனந்தம் தருவதற்காக இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த்ரியங்களை (ஐம்புலன்களை) வசப்படுத்துவது என்று மீண்டும் சொல்கிறார்.

கைங்கர்யத்திலும் ஓரு களையை அறுத்தாக வேண்டும். அதாவது,

  • தனக்கு இனிதாக செய்யும் கைங்கர்யங்களும்,
  • தனக்கும் அவனுக்கும் இனிதாக செய்யும் கைங்கர்யங்களும் புருஷார்த்தங்கள் ஆகமாட்டாது என்பதையும்,
  • தனக்கு என்பதை முற்றுமாக களை எடுத்து, அவனுக்கு மட்டுமே இனிமையாக இருக்கும் கைங்கர்யங்கள் புருஷார்த்தமாகும் என்பதையும் சொல்கிறார்.  

இதனை நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2.9.4)ல் தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே என்றும், ஆண்டாள், திருப்பாவையில் (29) உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

இராமாயணம், பாலகாண்டத்தில், (1.31)

ரம்யமாவஸதஂ கரித்வா ரமமாணா வநே த்ரய:  தேவகந்தர்வஸங்காஷாஸ்தத்ர தே ந்யவஸந் ஸுகம்

சொல்லியபடி, இராமன் சீதா மற்றும் லக்ஷ்மணன் சித்திரகூட மலையில் அமைந்துள்ள காட்டில் இலைகளால் ஆன குடிசையில், தேவர்களையும் கந்தர்வர்களையும் ஒத்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் ; ஸ்ரீ ராமன், சீதா பிராட்டி, லக்ஷ்மணன் ஆகிய மூவரின் ஆனந்தத்தை சொல்லிய போதும், லக்ஷ்மணன், தனக்கு மகிழ்ச்சி என்று இல்லாமல், ஸ்ரீராமனும் சீதையும் கூடிய சேர்த்திக்கு கைங்கர்யம் செய்வது உகப்பு என்றும் இருந்தான் என்பதை விளக்குகிறது.

காம்பறத் தலை சிரைத்து 

காம்பற என்று சொன்னது, எம்பெருமானை தவிர மற்று எல்லா உபாயங்களிலும் இருந்தும் எல்லா தொடர்பும் தமக்கு அற்று போகும்படி என்று சொல்கிறது.தலை சிரைத்துஎன்று சொன்னது, தன் தலையில் ஏற்றி கொண்டு இருப்பவைகளை, அதாவது மற்ற சாதனங்கள் தனக்கு மோக்ஷத்தை கொடுக்கும் என்று தவறாக எண்ணுபவற்றை சொல்கிறது. தாம் அடையவேண்டிய மோக்ஷத்தை அடையமுடியாமல் தடுக்கின்ற மற்ற சாதனங்களின் உள்ள தொடர்புகளை முழுவதும் அற்று போகும்படி என்று சொல்கிறது. தனக்கு தானே ரக்ஷகன் என்ற அபிமானத்தை விட்டு, என்ற கருத்தை சொல்கிறது.

தலை மயிரானது தன்னை அழகன் என்று அபிமானம் கொள்வதற்கு காரணமாவது போல மற்ற உபாயங்களை தலைமயிருடன் உருவகப் படுத்துகிறார். அதே போல அரசர்கள் தண்டனை கொடுக்கும் போது, தலை மயிரை சிரைப்பது என்பதும் அபிமானத்தை போக்குவதற்காகவே ஆகும். ஏகாந்திகளும் சந்நியாசிகளும் தலை முடியை சிரைத்து கொள்வதும் தங்களுடைய அபிமானத்தை தாமே போக்கிக் கொள்வதற்காகவும் ஆகும்.

தனக்கு பலன் கிடைப்பதற்கு தான், உபாயத்தை அனுஷ்டிக்கிறேன் என்ற அகங்காரத்தை உள் அடக்கி இருக்கின்ற உபாயந்திரங்களை, முற்றும் கைவிடுவதை சொல்கிறார். சரம ஸ்லோகத்தின் முதல் பகுதியில் சொன்னபடி மற்ற உபாயங்களை கைவிட்டு சித்தோபாயம் என்ற எம்பெருமானை உபாயமாக பற்ற வேண்டும். இந்த அர்த்தமும் முன் சொன்ன அர்த்தங்களை போல மிக சீர்மை பெற்று இருப்பதால், இதையும் ‘காம்பறத் தலை சிரைத்து ‘ என்று மறைத்து சொல்கிறார்.

உன் கடைத்தலை இருந்து வாழும்

தலைகடை என்பது மாறி கடைத்தலை என்று வந்துள்ளது. தலை வாசல் என்ற பொருளில் வரும். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லபட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார்.

மற்ற எல்லாரும் சரணாகதிக்கு ஆதாரமாக, எம்பெருமானின் திருவடிகளை பற்றுவது என்பது வழக்கம். ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே‘ என்று நம்மாழ்வாரும், “சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்று ஆண்டாளும், சொல்வது சில பிரபலமான உதாரணங்கள். ஆனால் ஆழ்வார் இங்கே தலைக்கடை அல்லது வாசலிலே நிற்கிறேன் என்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்ல கூச்சப் படுவதால், தலைக் கடை அல்லது வாசலிலியே நிற்கிறார். ஸம்ஸாரத்தினால் உண்டான பந்தத்தினால் எம்பெருமானை விட்டு மற்ற விஷயங்களுக்கு செல்ல முடியாததால் அங்கு இருந்து அகலாமல் அல்லது வெளியே செல்லாமல், எம்பெருமானின் திருவாசலையே பற்றி அங்கேயே ஆழ்வார் நிற்கிறார்.

நாதமுனிகளின் சிஷ்யரான திருக்கண்ணமங்கை ஆண்டான் என்பவருக்கு ஒருநாள் கண்ட காட்சி, அவருக்கு ஓரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தினமும் தன் வீட்டில் உணவு உண்ணும் ஓரு நாயை வளர்ப்பவன் அதற்கு துன்பம் கொடுத்த மற்றொருவனை கொன்று, அரச தண்டனையில் இருந்து தப்ப, தானும் தற்கொலை செய்து கொண்டான். தேகமே ஆத்மா என்று இருக்கும் ஸம்ஸாரிக்கு தன் நாயின் மீது இவ்வளவு பாசம் இருந்தால், பரம சேதனாக எம்பெருமானின் தலை வாசலைப் பற்றி கிடப்பவர்களை, எம்பெருமான் ஓரு நாளும் கைவிடமாட்டான் என்று அறுதி இட்டு, தன் மனைவி மக்கள் சுற்றம் எல்லாவற்றையும் கைவிட்டு, தன்னை தானே காத்து கொள்வதையும் தவிர்த்து விட்டு, திருக்கண்ணபுரம் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து அவன் கோவில் தலை வாசலிலேயே ஆயுள் உள்ளவரை வாழ்ந்து வந்தார் என்பது வரலாறு / ஐதீகம். ஸ்ரீவசன பூஷணத்தில், ‘திருக்கண்ணமங்கைஆண்டான் ஸ்வவ்யாபாரத்தை கைவிட்டான் என்று சொல்லப் பட்டுள்ளது.

இருந்து

மற்ற விஷயங்களில் ஈடுபாட்டாலே இரை தேடும் நாயை போல அலைபவன், கப்பலுக்கு நங்கூரம் போட்டது போலே, ஒரே இடத்தில் இருப்பதை சொல்கிறது. தைத்ரிய உபநிஷத் கூறுவது போல்,

  • பிறர் தன்னை காண முடியாதவனாகவும் ,
  • ஒரு சரீரம் இல்லாதவனும்,
  • தேவன், மனிதன் என்று சொல்ல முடியாதவனும்,
  • தனக்கு ஓரு ஆதாரம் அற்றவனாகவும் இருக்கும்,

இந்த பரமாத்மா மீது ஸம்ஸாரத்தில் பயம் இல்லாமைக்காக அவனிடம் அன்பு என்ற பக்தி நிலை அடைகிறானோ அவனுக்கு ஸம்ஸாரபயம் கிடையாது என்பதை சொல்கிறது. இதற்கு நாதமுனிகளின் சிஷ்யரான திருகண்ணமங்கை ஆண்டான் சரித்திரம் உதாரணமாக சொல்லப் படுகிறது.

வாழும்

தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல் எம்பெருமானே உபாயமாக இருக்கும் போது, இவனுக்கு இருப்பது அவனை அனுபவிப்பது ஒன்றே ஆகும். அதுவே அவனுக்கு வாழ்வு. இருந்து வாழும் என்பதால், அவனை உபாயமாக கொண்டு இருப்பதே வாழ்வு ஆகும் என்கிறார்.

சோம்பரை உகத்தி போலும்

உன்னிடத்தில் தங்களை காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து, தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளை கண்டால் உனது திருவுள்ளம் இப்படியாகவா உகக்கும் என்றும் எம்பெருமானின் திருமுக மண்டலத்தின் உகப்பை கண்டு தொண்டரடிபொடி ஆழ்வார் அருளி செய்கிறார்.

தமக்காக வாழ்வதில் சோம்பேறிகளாகவும் எம்பெருமானுக்காக வாழ்வதில் சோம்பேறிகளாக இல்லாமல் வாழ்கின்றவர்களை ‘வாழும் சோம்பர்‘ என்கிறார். தங்களுக்காக வாழ்ந்து, எம்பெருமான் விஷயத்தில் சோம்பேறிகளாக இருப்பவர்களிடத்தில் இவர்களை இருந்து வித்யாசப்படுத்தி காண்பதற்காக ‘வாழும் சோம்பர்’ என்கிறார்.

இவர்கள் சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களாகவோ, சோம்பேறித்தனத்தினால் நித்ய நைமித்திக கர்மங்களை கைவிடவோ மாட்டார்கள். எம்பெருமான் ஆணையாகவும், கைங்கர்யமாகவும் இவற்றை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆஸ்திகர்களில் தலைசிறந்த இவர்கள். உபாயமான எம்பெருமானை, உபாயமாக மட்டுமே பற்றி, வேறு எதையும் அவனிடம் எதிர்பாராமல், அவனை அனுபவிப்பதையே பொழுது போக்காக கொண்டு, தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் சோம்பேறிகளாக இருப்பார்கள் என்கிறார்.

உகத்தி போலும்

எம்பெருமானே, நித்ய சூரிகளை உகப்பது போலவே இந்த சோம்பேறிகளையும் நீ உகக்கிறாய் போலும், என்கிறார்.

சூழ்புனல் அரங்கத்தானே

திருவரங்கத்திலே வந்து, கண் வளர்ந்து அருளுகிற இந்த செயலே, இத்தகைய சோம்பரை பார்த்து அவர் உகப்பது தெரிகிறது என்கிறார். மேலெழ பார்ப்பவர்களுக்கு சோலைகளும் நீர்வழிகளும் பார்த்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து இருப்பதாக தோன்றும், ஆனால், ஊன்றி பார்ப்பவர்களுக்கு, இத்தகைய ஒரு சோம்பேறியை பெறுவோமா என பெரியபெருமாள் ஆசையுடன் எதிர்பார்த்து ஆசையுடன், சோம்பல் இன்றி கண் வளர்ந்து அருளுகிறார் என்கிறார்.

இத்துடன் இந்த பாடலின் அர்த்தத்தை முடித்துக் கொண்டு, இனி இந்த பாடலில் எப்படி திருமந்திர, சரம ஸ்லோக மற்றும் த்வய அர்த்தங்கள் எப்படி சொல்லப்பட்டன என்று பார்ப்போம்.

திருமந்திர அர்த்தம்

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்ற இந்த இரண்டு அடிகள் திருமந்திரத்தின் அர்த்ததை சொல்கின்றன.

  • மேம்பொருள் போகவிட்டு ‘ என்பது ‘ஒம் நம‘ என்று சொல்கிறது.
  • ஐம்புலன் தனை அடக்கி ‘ என்று சொன்னது, ‘நமோ நாராயணாய ‘ குறிக்கிறது.
  • மெய்மையை மிக உணர்ந்து” என்று சொல்வது, ஆத்ம ஸ்வரூபத்தின் சேஷத்வத்தை சொல்கிறது. நாராயண பதத்தில் உள்ள நார சப்தத்தில் பொருளை சொன்னது ஆகிறது. அந்த சேஷத்வம் ஸ்வாமியான எம்பெருமானிடத்தில் நிறைவேறுகிறது ஆகையால் எம்பெருமானின் சேஷித்வமும் இதில் அர்த்தம் சொல்லப்பட்டதாகிறது. ஆக நாராயணன் அர்த்தம் சொல்லபட்டது.
  • ஆம்பரிசு அறிந்துகொண்டு என்று சொன்னது, கடைசியில் உள்ள ‘ஆய’ என்றதன் அர்த்தமான கைங்கரியத்தை சொல்லுகிறது.
  • உணர்ந்து‘ என்று அறிபவனான ஜீவனை சொல்லுகையால் அவனை சொல்லும் பிரணவத்தின் (ஓம்காரம்) பொருளும் சொல்லப்பட்டது.

சரம ஸ்லோக அர்த்தம்

 “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”

  • காம்பறத் தலை சிரைத்து என்பது சர்வ தர்மான் பரித்யஜ்ய என்ற சரம ஸ்லோகத்தின் தொடக்கத்தில் எம்பெருமானை உபாயமாக பற்றுவதற்கு அங்கமாக சொல்லபட்ட உபாயாந்திரம் சொல்கிறது. காம்பறத் தலை சிரைத்து என்றது மற்ற உபாயங்களில் இருந்து தனக்கு தொடர்பு அற்று போகும் படி என்று சொல்லியது. தலை மயிரானது தன்னை அழகானவன் என்று அபிமானிப்பதற்கு ஏதுவாக இருப்பதால், தனக்கு தான் ரக்ஷகன் என்ற அபிமானதிற்கு காரணமான மற்ற உபாயங்களை தலைமயிருக்கு ஒப்பீடு செய்கிறார். ராஜாக்கள் தண்டனை கொடுக்கும் போதும், சந்நியாசிகள் தலை சிரைத்து கொள்வதும் அபிமானம் அழிவதற்காகவே.
  • மற்ற உபாயங்களை முற்றுமாக விட்ட பின்பே சித்தோபாயமான எம்பெருமானை உபாயமாக பற்ற வேண்டி உள்ளது.
  • கடைத்தலை இருந்து வாழும் என்று சொன்னது, தன்னுடைய தாழ்ச்சியை மனதில் கொண்டு வாயில் நின்று சொன்னதாக பார்த்தோம். அதனால் திருவடி பற்றி இங்கு ஆழ்வார் சொல்லவில்லை. இருந்து என்று சொன்னதால் சம்சார பயத்தினால் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்ததை சொல்கிறார். இதனால் எம்பெருமான் இவரை ஏற்று கொள்வார் என்ற உறுதியான நம்பிக்கையை சொல்லியது.

த்வய மஹா மந்திரத்தின் அர்த்தம்

சூழ் புனல் அரங்கத்தானே உன் கடைத் தலை என்பது, த்வயத்தின் முதல் பகுதியில் உள்ள நாராயண சப்தத்தின் பொருளாய், அடியவர்களை தாங்குவதற்கு சௌகரியம் செய்யும் குணங்களான, சௌசீல்யம், சௌலப்யம், வாத்சல்யம், ஸ்வாமித்வம், இவற்றை சொல்கிறது.

பிராட்டி ஸ்வரூப நிருபக தர்மமாக இருப்பதாலும், நாராயண சப்தத்தில் உள் அடங்கியவளாலும், நாராயண சப்தமான உன் என்ற பதத்தில் லட்சுமி சம்பந்தம் இருக்கிறது என்கிறார். உன் என்ற பதத்தினால் நாராயண சப்தம் சொல்லப் படுகிறது.

கடைத்தலை என்றது சரணநௌ என்பதன் அர்த்தம். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லப் பட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்லக் கூச்சப் படுவதால், வாசலிலேயே நிற்கிறார் என்று முன்பே சொல்லப்பட்டது.

இருந்து வாழும்” என்ற வினை சொல் ப்ரபத்யே என்பதில் உள்ள எம்பெருமானே உபாயம் என்று உறுதியாக சொல்வதுடன், அந்த உறுதியே இனிமையாக இருக்கும் என்பதையும் காட்டுகிறார். சரணமடைகிறேன் (ப்ரபத்யே) என்று சொல்லி, சோம்பரை என்று குறிப்பிட்டு, சரணாகதி வேண்டும் என்ற அதிகாரியின் லக்ஷணத்தை சொல்கிறார்.

மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்று இரண்டு அடிகளின் மூலம், த்வய மகா மந்திரத்தின் இறுதி பகுதியின் பொருளான பிராப்யம் அல்லது நாம் அடைய வேண்டிய கைங்கர்யம் பற்றி சொல்லபட்டது. மேம்பொருள் போக விட்டு என்று சொல்லியபிறகு மீண்டும் ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வதால் கைங்கர்யம் செய்வதும் அவனுடைய உகப்பிற்காகவே என்பதை தெளிவாக்குகிறார். இதையே மீண்டும் தொண்டரடிபொடி ஆழ்வார் நாற்பதாவது பாசுரத்தில் திருமறு மார்ப‘ என்று தெளிவாக காட்டவும் போகிறார்.

ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வது, த்வய மகா மந்திரத்தில் இறுதியாக வரும் நம ஸப்தத்தின் அர்த்தமும் ஆகும்.

ஆக இந்த பாசுரம், த்வயத்தை மிக விரிவாக விளங்குவதாகவும், திருமந்திர, சரம ஸ்லோக அர்த்தங்கள் பலவற்றையும் காட்டுவதாகவும் அமைந்து இருக்கிறது.

இன்னொரு ஆழ்வார் பாடல் அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி.

Thirumaalai – 37 Thelivilaa

Please click here to view the Tamil Version, thanks

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan.

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan. When people raised objections, Azhwaar responded to them to follow Sri Rama, by  saying silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, by saying ‘katrinam meytha kazhalinai panimin; and finally asked them to follow Aranganathan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Favours from Emperuman to Azhwaar

Azhwaar described the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on Paramathma, the suprememost concept among the twenty six concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced him with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, in Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

Devoid of any good virtue

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “Kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaaha” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers, using all or any of the three actions, thinking through mind, offering flowers by hands and reciting holy chants from mouth, to Emperumaan. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think of Emperumaan.
  • Initially Azhwaar said that he did not use all the three actions together in his prayers, and said he had not done individually, even one of them, in the subsequent hymns.

In Oorlien, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with any Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Thirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Full of all bad qualities

The fourth part of Azhwaar’s Naichyanusandhanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there was no bad quality left in this world, which he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even a single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the reqiurements to reach Him and that was his stupidity.

In the 33rd hymn, Meiyellaam Poga Vittu, Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

In the next hymn 34, Ullathey uraiyum Maalai, Azhwaar laughed at himself loudly, when he was trying to cheat Emperuman and his devotees, realised that he could never do that, as He knows everything directly by staying in the heart of everyone, which is the source of all the intelligence and origin of all thoughts. Azhwaar felt ashamed as he had also thought that he had moved away from Emperumaan.

Paramathmaa’s Good things to all

In the next hymn 35, Thaavi Andru Ullagamellam” Emperumaan crossed all the worlds and spread the image of His Holy feet (thiruvadi) on all heads, thus bestowing each and everyone moksham, without anyone asking for His favour.

In the next hymn 36, ‘Mazhaikku Andru Varai’, Emperumaan carried the Govardhana mountain as an umbrella in His right hand, to protect the cow, the calf and everyone, even before the trouble and who were under the threat of the heavy rain of stones caused by Indra for seven days in Vrindavan. But azhwaar who did not get immediate Grace from Periyaperumaal, was afraid of hostile things, that could surround him in this world, called out with a loud voice so that Periyaperumaal could not lay down peacefully in Thiruvarangam, and everyone watching this, melted into water seeing the cries of Azhwaar.

Now let us move on to the next hymn.

Hymn 37 Thelivila kalangal neer

Thelivilaa kalangal neer soozh Thiruvarangathul ongum, oli ulaar thaame anre thandhaiyum thaayum aavaar; eliyadhor arulum anre emthirathu Empiraanaar, aliyan nam paiyal enaar ammavo kodiyavaare (Thirumaalai 37)

Is not Periyaperumal in Thiruvarangam, radiant with brilliant Tejas, both our father and mother, encircled by the murky and tumultuous Cauvery? All that is needed from Him, in my situation, is to bestow a serene, gentle look upon me. Yet He, my benefactor, has not spoken a word, ‘Azhwaar is our child, deserving of Our compassion.’ Alas, His sacred heart seems utterly unmerciful. Such is the essence conveyed by this hymn.

Even as Azhwaar wept, Periyaperumal remained unmoved, offering no words of comfort. Azhwaar wondered if Emperumaan’s silence suggested the presence of other protectors for Azhwaar, or if it implied that Azhwaar was still attached to worldly desires. Azhwaar believed survival was possible if only Emperumaan acknowledged him as His child. It was disheartening for Azhwaar that Periyaperumal, without offering even this solace, could remain so indifferent as to sleep through his cries.

Now let us see more details in the following sections.

Thelivila kalangal

Water becomes clear only when there is a change in the inflow. As the floods increase, the Cauvery remains turbulent. The Azhwaar, too, was as perplexed as the tumultuous river, troubled by the inability to reach Emperuman and disturbed by his love even after meeting Him. In the same way, the Kaveri feels unsettled before arriving at Srirangam, anxious about meeting Periyaperumal, and saddened upon departure. Hence, the Azhwaar observes that both living and non-living beings equally experience disturbance.

Neer Soozh

Adhanil Periya en Avavara soozhndhaai‘ (Thiruvaimozhi 10.10.10) says that Emperumaan surrounds the Azhwars with great love. Similarly, Kaveri surrounds Periyaperumal in this Thiruvarangam with great love.

The Ocean Thirupaarkadal is the Father, and I, the Kaveri River, am the Mother; Sriranga Nayaki is the Daughter, and Periyaperumaal is the Son-in-law. Kaveri is concerned about the right gifts to present Them. She carries in her hands, represented by the waves of the river, shining ‘chamaras’ (flying whisk), ‘pacchai karpooram’ (edible camphor), sandalwood, and beautiful pearls and gems for the Son-in-law and Daughter. We can recall the sloka from Parasara Bhattar that says the glorious Cauvery should be used for His Holy bath.

Every mother in the world desires to present fitting gifts to her daughter and son-in-law. In this narrative, Sridevi Pirattiyaar, the deity of wealth and sovereign of riches, or Sriranga Naachiyaar, is the Daughter. The groom is the exceedingly handsome Azhahiya Manavaalan, the finest of all; the bride’s father is Thirupaarkadal, the realm of exquisite gems; I am the river Cauvery, the mother, more sacred than the Ganges. Bhattar narrates that amidst such supreme entities, she, carrying camphor, sandalwood, and pearls in her hands (the waves) as offerings for her Daughter and Son-in-law, advances with the hesitance of a mad elephant.

Thiruvarangathul ongum oli ullaar

Azhwaar compares the rarity of seeing a riverbed after a flood to the difficulty of discerning the real beauty of Periyaperumal adorned with radiant light. He observes that in Paramapadam, His presence is like a light during day time, but in Thiruvarangam, it shines even brighter, like a light piercing the darkness of night. This divya desam, Thiruvarangam, aids the common man in attaining moksham. Azhwaar notes that while Paramapadha Nathan is like one sun among many in the company of Nithyasoories, resulting in diminished brightness, whereas His presence in Thiruvarangam is intensely bright, offering protection to the samsaris who endure the trials of everyday life, akin to a brilliant light in the night, its luminosity magnified.

Oli ulaar thaame andre thandhaiyum thaayum aavaar

Subhalopa Upanishad (16), says, that Narayana, is the mother and the father, the siblings, the abode, the route to moksha, the friend and the attainer in moksha. Here azhwaar calls that Narayanan, as ‘thaame’. Azhwaar says that He is not the Parampada Nathan who is generally common to all; He is not the one, Who is in Vyuga or Vibhava incarnations as seen by some people, and He is not the one, in Archavathaarams in other places or Who is not the one as seen by other Azhwaars; Instead He is Periyaperumal in Thiruvarangam, Who is this azhwaar’s own father and mother. Azhwaar was wondering, when Periyaperumaal was not talking to Azhwaar, thinking that Azhwaar has other relatives apart from Him, when actually He is the only relation to Azhwaar.

Here we recall the meaning of a verse from the Mahabharata (192.56). When Dharma was in exile and faced danger, Lord Sri Krishna and Satyabhama visited him, along with many sages like Parasara and Markandeya. In their gathering, Dharma asked the sages why, despite following all dharmas, he suffered while others like Dhuryodhana, who ignored dharmas, were happy. The sages advised Dharma to perform more dharmas, but Markandeya suggested surrendering to Lakshmi Nathan, who is the ultimate source of all beings. He stated that true bliss comes from surrendering to Madhava, the natural relative of all His followers, and that any actions apart from this would lead back to the cycle of worldly life, or samsara. This directly addressed Dharma’s query.

Parasara Bhattar said to his younger brother Seerama Pillai this sloka and its meaning when he was suffering. Periyaperumal is the only one who does likeable things like a mother and good things like a father and this is what Azhwaar meant, when he said Periyaperumal is my father and mother.

Eiyathor arulum andre emthiraththu

In my case there is no need to do hard things to protect me, as you did for the Aayars in Brindhavan and Ayarpaadi. Azhwaar says that he was not asking for any other benefit other than Him. According to Azhwaar, Emperumaan may be thinking that Azhwaar may want some other benefits which were reasonable that could be granted to him at an appropriate time and hence He might be keeping quiet.

Azhwaar expressed that Emperumaan does not need to wield the bow for Azhwaar’s protection, as He did for Vibishana and others; nor does He need to carry the Holy stick (Kollaamaakkol) as with the Pandavas. Azhwaar believes that all that is required for his protection is a mere serene glance from Emperumaan.

Empiraanaar

Azhwaar laments that Emperumaan, despite being benevolent, has not bestowed upon him a comforting glance. Yet, Azhwaar remembers the aid previously provided by Periyaperumal. He acknowledges that Periyaperumal remains a benefactor, even without offering a soothing look at present. Azhwaar seeks the grace of receiving this kindness as well. Among Periyaperumal’s past benevolences, he enlightened Azhwaar about their bond and the realization that Periyaperumal is the savior for attaining moksha. Even now, He responds to Azhwaar’s pleas and draws him close.

Aliyan nam paiyal

When Emperumaan inquired about the next favour Azhwaar desired, he replied that ‘Ali’ signifies grace, and ‘Aliyan’ denotes one who is deserving of His grace. Azhwaar wished to be deemed worthy by Emperumaan and to receive blessings from Periyaperumal (Thiruvarangan), aspiring to be His son so that he might be endowed with His benevolence. However, when Emperumaan addressed Azhwaar as ‘Azhveer’ instead of as His child, Azhwaar was disheartened. Azhwaar pondered if being recognized as Emperumaan’s son, to whom he was devoted, was necessary. Azhwaar affirmed it was essential, as such recognition from Emperumaan would confirm and strengthen their bond as Him being the Master and azhwaar being the servitude to Him.

Here we can recall the incident, when Manakkal Nambi, was teaching Raksyathiriya in a closed-door training session, his disciple Thirumagizh Malaimarvan came and knocked the door. Manakkal Nambi said, ‘Open the door to our son Thiru Mahizh Malai Marvan’. ‘Pillai Pillai Aalvan was extremely happy that Manakal nambi had told explicitly ‘nam paiyal’ to Tambi Appillai Aalvan’ and this was a great blessing from his guru.

Ammavo kodiyavaare

In the depths of grief, someone’s cries could awaken everyone from sleep, but this Emperumaan remains asleep. Oh Mother, such is His nature, so unyielding and impassive is His heart. Here, ‘Amma’ signifies an overwhelming sorrow.

Gita charama slokam is the most important aspect of Bhagawath Geetha in Mahabharatam. Likewise, the next hymn, ‘Memporul Pogavittu’, is the most important aspect of this Prabantham, Thirumalai, and is said to be the Gem of this Prabantham. We will catch up again in the experience of the same. Thank you.

திருமாலை 37 – தெளிவிலா

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று (1-3) பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு (4-14) பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

ஆழ்வார், எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து (15-24) பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான்,

  1. பரமாத்மாவிடம் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து,
  2. அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, அவரது கடினமான நெஞ்சத்தை கரைத்து,
  3. சேவையையும் அருளையும் பலகாலங்களாக சேவிக்காததற்கும் சேர்த்து கொடுத்து,
  4. கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து,
  5. நாம் உய்வதற்கு தன்னுடைய அங்கங்களை தான் படைத்த திசைகளில் வைத்து,
  6. தன் அவயவங்களின் அழகு, அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து,
  7. விஸ்வாசம் இல்லாததால் இதுவரை இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி,
  8. அவன் பெருமைகளை பேச, சிரமம் இல்லை, என்று ஆழ்வாரை பாட வைத்து,
  9. திருவரங்கத்தில் இருக்கும் அவன் அழகை மறந்து வாழமுடியாதபடி செய்து,
  10. சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

அடுத்து பத்து பாசுரங்கள் கொண்ட நைச்சானுசந்தானம் என்ற நான்காவது பகுதி.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் ஒரு ஐந்து பாடல்களிலும்(25-29),

  • ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்று 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை)  சொல்கிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்பதை, ஆழ்வார் போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரத்தில் சொல்கிறார்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்து, தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் / கெட்ட குணங்களும் உண்டு என்று ஐந்து பாடல்களிலும்(30-34)

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானது என்று தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.

ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இந்த பகுதியில் உள்ள ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற முதல் பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானின் பெருமைகளை பார்த்தோம்.

இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் பெருமையை மழைக்கன்று வரை என்ற அடுத்த பாடலில் (36) பார்த்தோம்.

இனி, அடுத்த பாசுரம்,

பாசுரம் 37

தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கங்கத்துள் ஓங்கும், * ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார், * எளியதோர் அருளுமன்றே, எந்திறத்து எம்பிரானார், * அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடிய வாறே. (திருமாலை 37)

தெளிவில்லாமல், கலங்கிய காவிரியால் சூழப்பட்டுள்ள திருவரங்கத்துள் பிரகாசிக்கும்படியான, தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். என் விஷயத்தில் செய்ய வேண்டியது, சாமானியமான குளிர்ந்த பார்வை அன்றோ, எனக்கு உபகாரகரான அவர், ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே, ஐயோ, இவர் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்பது இந்த பாடலின் பொருளுரை.

ஆழ்வார் இப்படி கதறிய போதும், பெரியபெருமாள் இரக்கம் கொண்டு, ‘வருந்தாதே’ என்று கூறாததால், ‘தம்மை தவிர வேறு யாராவது உதவி செய்பவர்கள் இருப்பார்களோ என்று எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ, ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கும் மற்ற பயன்களை விரும்பி இருக்கிறேன் என்று நினைக்கிறாரோ, நம்முடைய பையல் என்று சொன்னாலே உயிர் பிழைத்து விடுவேனே, என்கிறார். இதைக் கூட செய்யாமல், நாம் கதறுவதையும் கேட்டு கண் உறங்கும்படி இவன் திருவுள்ளம் இப்போது இவ்வளவு கொடியதாய் போனதே, என்று வெறுக்கிறார்.

இனி சற்று விளக்கமாக,

தெளிவிலா கலங்கல்

நீர் வரத்து மாறினால் அன்றோ தெளிய இடம் உண்டு. அதற்கு இடம் இல்லாதபடி வெள்ளம் மேலும் மேலும் பெருகி வருகிற படியால் காவிரியில் கலக்கம் மாறாது இருக்கும். இந்த ஆழ்வாரும் காவிரி ஆற்றை போல் கலங்கியே இருப்பார். எம்பெருமானை பெறுவதற்கு முன்பு இவன் கிடைக்கவில்லையே என்று கலங்குவார். எம்பெருமான் கிடைத்த பின் காதலால் கலங்கி இருப்பார். அதே போல காவிரியும் திருவரங்கத்திற்கு மேற்கில் பெரிய பெருமாளை காணப் போகிறோம் என்ற கலக்கத்திலும், கிழக்கில் பிரிந்து போகிறோமே என்று வருத்தத்துடன் கலங்கி செல்லும். ஆகையால் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை என்று பேதம் இல்லாமல் கலங்கும் என்கிறார்.

நீர் சூழ்

அதனில் பெரிய என் அவாவர சூழ்ந்தாய்‘ (திருவாய்மொழி 10.10.10) என்று பெரியபெருமாள் ஆழ்வார்களை பெரும் காதலால் சூழ்ந்து கொள்வது போல, காவிரியும் பெரியபெருமாளிடத்தில் உள்ள காதலால் அவரை இந்த இடத்தில் சூழ்ந்து கொண்டபடியை சொல்கிறது.

திருப்பாற்கடல் தந்தை, அந்த கடலின் மனைவியான நான் தாய், இந்த ஸ்ரீரங்க நாயகியே மகள், இப்படிபட்ட இவர்கள் விஷயத்தில் என்ன தகுந்த சீர் செய்வேன் என்று காவிரி ஆறானது வருத்தம் அடைந்து, பிரகாசம் உடைய சாமரங்களையும், பச்சை கற்பூரத்தையும், சந்தன மரங்களையும், நல் முத்துக்களையும், மணிகளையும், அலைகளாகிய கைகளால் ஏந்தி வருகின்றாள்; அப்படிபட்ட காவிரி உங்களால் நீராடப் பட வேண்டும் என்று பாராசர பட்டாரால் அருளி செய்யபட்ட ஸ்லோகத்தை இங்கே நினைவில் கொள்ளலாம்.

உலகில் ஒவ்வொரு தாயும் தன்னுடைய மாப்பிள்ளை மகளுக்கு தகுந்த சீர் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்கே மகள், ரங்கநாச்சியார், செல்வங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆன, ஐஸ்வர்யங்களுக்கு எல்லாம் அதிபதியான, ஸ்ரீதேவி பிராட்டியார். மாப்பிள்ளையோ எல்லோரையும் விட சிறந்த பரமாத்மாவான அழகிய மணவாளன்; பெண்ணின் தந்தையோ சிறந்த ரத்தினங்களுக்கு உறைவிடமான திருப்பாற்கடல் ஆகும்; பெண்ணை பெற்ற தாயோ, கடல் அரசியின் நாயகியான, கங்கையில் புனிதமாகிய காவிரியாகிய நான்; இப்படி எல்லாம் தலைசிறந்தவைகளாக இருக்கும் போது, தகுந்த சீர் என்ன செய்ய போகிறேன் என்று கலங்கி, காவிரி தாய், கற்பூரம், சந்தனம், முத்து மாணிக்கம் என்ற பல சீர்களை அலைக்களாகிய கைகளில் ஏந்தி, தயங்கி தயங்கி, மத யானை போல வருகிறாள் என்று பட்டர் சொல்கிறார்.

திருவரங்கங்கத்துள் ஓங்கும் ஒளிஉளார்

ஆற்று வெள்ளத்தை நீக்கி, அடித்தரையை கண்டு உள்ளே புக அரியதாக இருப்பது போல, பெரியபெருமாளின் மேல் உள்ள ஒளி வெள்ளத்தை நீக்கி, உள்ளே புகுந்து அதற்கு இருப்பிடமான வடிவழகு காண அரியதாக உள்ளது என்கிறார். திருவரங்கதிற்கு எழுந்தருளிய பின் பரமபதத்தில் பகல் விளக்கு என்றபடி ஒளி குன்றி காணப்படுவதாக சொல்கிறார். இரவில் ஒளி போல, ஸம்ஸாரிகளுக்கு உதவும் திருவரங்கதில் ஒளி கூடி இருப்பதை போல என்கிறார். நித்ய சூரிகளுக்கு இடையே பரமபத நாதன் இருப்பது, சூரியர்களுக்கு நடுவே சூரியன் நிற்பது போல இருக்கிறது என்றும், ஸம்ஸாரிகளுக்கு, தாபங்களால் வருந்துபவர்களுக்கு நடுவே அவர் ரக்ஷித்துக் கொண்டு இருப்பது, ஒளி மிகுந்து இருப்பது போல உள்ளது என்கிறார்.

ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயுமாவார்

சுபாலோப உபநிஷத்தில்(16) கூறுவது போல, நாராயணன் தாயாகவும் தந்தையாகவும், தன்னுடன் பிறந்தவனாகவும், தங்கும் இடமாகவும், மோக்ஷத்திற்கு உபாயமாகவும், நண்பனாகவும் மோக்ஷத்தில் அடையபடுபவனாகவும் இருப்பவன் என்று கூறியதை தாமே என்ற ஏகாரத்தாலே தெரிவிக்கிறார். இப்படி இங்கே சொல்லபட்ட நாராயணன், எல்லோருக்கும் பொதுவான பரமபத நாதன் இல்லை என்றும், சிலருக்கு பொதுவான வியூக, விபவங்களும் இல்லை என்றும், மற்றைய ஆழ்வார்களுக்கு பொதுவான மற்ற அர்ச்சாவதாரங்களும் இல்லை என்றும், எனக்கே உரிய தந்தையும் தாயும் ஆன பெரியபெருமாள் என்கிறார். இப்படி எனக்கு எல்லா உறவுகளுமாய் இவரே இருக்கும் போது இவரை தவிர எனக்கு வேறு ஒரு உறவு உண்டு என்று நினத்து எம்பெருமான் பேசாமல் இருக்கிறாரோ என்கிறார்.

இங்கே மகாபாரதத்தில் வரும் (192.56) ஸ்லோகத்தின் பொருளை நினைவில் கொள்ளலாம். தர்மன் வனவாசம் செய்யும் போது, ஆபத்து காலத்தில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும் சத்யபாமையும் எழுந்தருளிய போது, பாராசரர், மார்க்கண்டேயர் போன்ற பல மகரிஷிகள் வந்து பெரிய சபையாக இருக்க, தர்மன் அங்கு இருந்த மகரிஷிகளிடம், தான் எல்லா தர்மங்களையும் பின்பற்றுவதாகவும் தனக்கு துன்பங்களே வருவதாகவும், துரியோதனன் போன்றவவர் தர்மங்களை பின் பற்றுவதில்லை என்றாலும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே என்றும் கேட்க, பலர் மேலும் தர்மங்களை பின்பற்ற சொல்ல, மார்க்கண்டேயர் சொல்லும் இந்த ஸ்லோகம் தர்மருக்கு விளக்கம் கொடுக்கிறது. இதன் அர்த்தம், எல்லா உலகங்களுக்கும் தந்தையும் தாயும் ஆனவன், லக்ஷ்மி நாதனே சரணடையத் தகுந்தவன், இவனைச் சரண் அடையுங்கள் என்று சொல்வது. எல்லா அடியவர்களுக்கும் இயற்கையிலேயே உறவினனாக இருக்கும் மாதவனை சரண் அடைவதே உண்மையான சுகத்திற்கு உதவுவது ஆகும் என்கிறார். அவனை அல்லாமல் மற்றவற்றை செய்வது ஸம்ஸாரத்தில் உழல செய்யும் என்றும் சொல்கிறார்.

பாராசர பட்டரும் தன் தம்பியான சீராம பிள்ளைக்கு துன்பம் வந்த போதும் இந்த ஸ்லோகத்தையும் அதன் அர்த்ததையும் அருளி செய்கிறார். தந்தையும் தாயும் ஆவார் என்று சொன்னது, தாயை போல இனியதையும், தந்தையை போல நல்லதையும் செய்ய கூடியவர் பெரியபெருமாளே ஆவார் என்பதாகும்.

எளியதோர் அருளுமன்றே எந்திறத்து

என் விஷயத்தில் ஆயர்களுக்கு செய்தது போல கடினமான காரியங்கள் செய்து காக்க வேண்டியது இல்லை; உங்களை தவிர நான் வேறு பலன் வேண்டுகின்றேன், அதையே தகுந்த காலத்தில் கொடுத்து விடலாம் என்று பேசாமல் இருக்கிறீர்களா என்று கேட்கிறார். விபீஷணன் போன்றவர்களைக் காக்க, வில்லை எடுத்தது போலவோ, பாண்டவர்களை காப்பாற்ற கொல்லாமாக்கோல் எடுத்தது போலோ என்னை காக்க வேண்டும் என்று இருக்கிறாரோ என்கிறார். என் விஷயத்தில் ஒரு குளிர்ந்த பார்வை பார்த்தாலே போதும் என்கிறார்.

எம்பிரானார்

எமக்கு உபகாரராக இருப்பவர், என்னைக் குளிர நோக்க வில்லையே என்று வருந்துகிறார். ஏற்கனவே பெரிய பெருமாள் செய்த உதவிகளை ஆழ்வார் மறக்காதவர் ஆகையால், இன்னும் குளிர நோக்காத போதும், உபகாரகர் என்று சொல்கிறார். இந்த உபகாரத்தையும் செய்து அருள வேண்டும் என்று வேண்டுகிறார். பெரியபெருமாள் முன்பு செய்த உபகாரங்களில் சில : தமக்கும் பெரியபெருமாளுக்கும் உள்ள உறவை ஆழ்வாருக்கு உணர்த்தியது, அதற்கு மேல் மோக்ஷத்திற்கு உபாயமும், அடைய வேண்டியவனும் அவனே என்றும் உணர்த்தியவன்; இப்போதும் நம்முடைய கூக்குரல் கேட்டு அருகில் வந்து இருப்பவன் என்பவை.

அளியன் நம் பையல்

இனி செய்ய வேண்டிய உபகாரம் என்ன என்று கேட்டதற்கு ஆழ்வார் சொல்லும் பதில். அளி என்றால் அருள் என்றும் அளியன் என்றால் அருள் புரிய தகுந்தவன் என்றும் பொருள் தரும். இவனை நாம் கருணை செய்யலாம் என்னும்படி நன்மை உடையவன், நம்முடைய பையல் என்று பெரிய பெருமாள் அருளி செய்ய கேட்கிறார். ஆழ்வாருக்கு இப்போது நம் பையல் என்று பெரியபெருமாள் சொல்லாமல் ‘ஆழ்வீரே’ என்று சொல்வது வருத்தமாக இருக்கிறது. அவனுக்கு அடிமை பட்டிருக்கும் நம்மை, நம் பையல் என்று நினைத்தால் போதாதா, கூப்பிடவும் வேண்டுமோ, என்று கேட்டு கொண்டு, அவனும் அப்படி கூப்பிட்டு உறுதிப் படுத்தினால் தான் தன்னுடைய சேஷத்துவம் நிலை நிற்கும் என்று ஆழ்வார் கருதுகிறார்.

மணக்கால் நம்பி, கதவை சாத்திக் கொண்டு ரகஸ்யார்த்தம் உபதேசம் செய்து கொண்டு இருந்த போது, அவரது சிஷ்யரான திருமகிழ் மாலைமார்வன், வந்து கதவை தட்ட, மணக்கால் நம்பி, ‘நம் பிள்ளையான திரு மகிழ் மாலை மார்வனுக்கு கதவை திற ‘ என்று அருளி செய்ததையும், பிள்ளை, பிள்ளை ஆழ்வான் வாயாலேயே, ‘தம்பி அப்பிள்ளை ஆழ்வான், நம்பிள்ளை என்னப்பெற்றேன்’ என்று அப்பிள்ளை ஆழ்வான் அருளி செய்ததையும் அனுசந்திப்பார்.

அம்மவோ கொடிய வாறே

வருத்தத்தால் அழும் கூக்குரல் கேட்டால் எழுந்திருக்க வேண்டாமோ, அக்குரல் கேட்டதும் கண் உறங்குவதே, இவன் திருவுள்ளம் இப்படி கொடியதாய் இருக்கின்றதே, அம்ம, என்ன இவன் தன்மை என்று கூறுகிறார். இங்கே அம்ம என்பது, வருத்தத்தின் மிகுதியை குறிக்கும். இத்துடன் இந்த பாசுரம் நிறைவு பெறுகிறது.

மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, இந்த பிரபந்தத்திற்கு அடுத்த பாடல் என்ற அளவிற்கு முக்கியமான பாடல், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போல் என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அத்தகைய பாடல் அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி.

080 திருவல்லவாழ் / Thiruvallavaazh

ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருவல்லவாழ் என்ற இந்த திவ்ய தேசம், கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது. இது இங்குள்ள மக்களால் திருவல்லா, திருவல்லா என்று இனிமை கொஞ்சி அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு கோட்டயத்தில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு. கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.

  • கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி
  • செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.
  • திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.
  • திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்
  • திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.
  • திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்

இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 1967 க்கு முன்பு, கருவறைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆண்டிற்கு இருமுறை வேடனைப் போன்று (தனுர் மாசம்-திருவாதரை நாள் மற்றும் சித்திரை மாசம்-விஷு தினத்தில்) இறைவன் வேட்டை ஆடுகிறார். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7 மணி முதல் நடக்கும் பூஜைகள் சிறப்பானது.

மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.

மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது

மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.

இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. புஷ்கரிணி பொதுவாக மலைநாட்டு திவ்ய தேசங்களில் கோவில் வளாகத்திற்கு வெளியே காணப்படும். அதேசமயம், இந்த திவ்ய தேசத்தில், கோவில் வளாகத்தினுள் உள்ளது மற்றும் இது ஒரு பெரிய குளம். மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.

மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..

இந்த கோவில் விஸ்வகர்மா நிரமாணித்த கோவில்.  பெருமாளின் திருமுகத்தைப் பார்த்தால் திருவடி தரிசனம் செய்ய முடியாத வகையிலும், தூரத்தில் இருந்து பெருமாளின் திருவடியை தரிசித்தால் திருமுகத்தை தரிசனம் செய்ய முடியாத வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. சங்கு, மணி போன்ற சத்தம் கேட்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக  எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.

திருவல்லாவாழ் என்ற இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி, கருடபுராணம், மத்ஸ்ய புராணம் போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.

இந்தப் பெண், பாளையில் எம்பெருமானுக்கு தயிர் சாதம் இட்டு உப்பு மாங்காயை சமர்ப்பித்தாள். இன்றும் அந்த வழக்கம் கோவிலில் உள்ளது. துவாதசி அன்று பிரம்மச்சாரிக்கு இட்டு பிறகு எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வழக்கமும் உள்ளதாக சொல்கிறார்கள்.

கண்டாகர்ணன் என்ற ஒரு சிவபக்தன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து எட்டெழுத்து மந்திரத்தை ஜபிக்கலானான். அந்த மந்திரத்தை ஜபிக்கும் போது வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழாமல் இருக்கும் பொருட்டு தங்கத்தால் செய்த இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும் அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்தும் அதே சமயத்தில், அஷ்டாக்ஷர எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம் பெற்றதாக வரலாறு.

கிருஷ்ணரின் விருப்பப்படி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட சிலை, துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணரின் நண்பன் சாத்யகிக்கு வழங்கப்பட்டது. எம்பெருமான் கருடனிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னார். கருடன் அதனை கலியுகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பாயும் நேத்ராவதி என்ற ஆற்றில் மறைத்து வைத்தார். பின்னர், சேர பெருமாளின் அரச துணைவி நேத்ராவதி நதிக்கரையில் கிருஷ்ணரின் சிலை கிடப்பதாகக் கனவில் கண்டார். அதனை கண்டு எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கபட்டன. கிமு 59 இல், துளு பிராமணர்கள் மற்றும் உள்ளூர் போத்திகளின் கூட்டு முயற்சியால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. துளு பிராமணர்களும் உள்ளூர் போத்திகளும் இணைந்து சிலையைக் கண்டெடுத்ததால், அந்தச் சம்பவத்தின் நினைவாக பூஜைகள் நடத்துவதும் இரு பிரிவினருக்கும் பிரித்து கொடுக்க பட்டது. . எனவே, துளு பிராமணர்கள் மாதத்தில் 15 நாட்களுக்கு பூஜை செய்கிறார்கள் மற்றும் 10 வீடுகளில் இருந்து உள்ளூர் போத்திகள் மீதி 15 நாட்களுக்கு பூஜை செய்கின்றனர். சிலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

நம்மாழ்வார் பதினொரு பாடல்களும், திருமங்கை ஆழ்வார் பதினொரு பாடல்களும் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார்கள். நம்மாழ்வார் மோக்ஷம் வேண்டி பாடிய ஐந்து பதிகங்களில் இந்த திவ்ய தேச பதிகமும் ஒன்று. நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.

நம்மாழ்வார் திருக்குடந்தை பதிகம் பாடிய பிறகு, தளர்ந்து, ‘திருவல்லவாழ்’ திவ்ய தேசத்திற்கு செல்ல நினைத்தார். ஆனால் அங்கு செல்ல முடியாமல், சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதீக செயல்களின் ஆரவாரமும், அவரை தடுத்து அவருக்கு துயர் கொடுத்தன. அதனால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் இங்கு ஒரு தலைவியாக இருந்து தன் தோழிகளுக்கு கூறும் கூற்றாக கூறுகிறார்.

தோழிகளிடம், திருவல்லவாழ் பெருமானின் திருவடிகளை என்று சென்று சேருவது என்று கேட்கும்படி அமைந்த பாசுரம். மானேய் நோக்கு நல்லீர்! – நான் திருவல்லவாழ் சென்று புகும்படி உங்கள் கண்களால் நன்றாக குளிர நோக்குங்கள் என்று ஒரு விளக்கம். மான் போன்ற நோக்கையுடைய பெண்களே, எனக்கு நல்லவர்களே, பிரிவு ஆற்றாமையாலே நோவு பட்டும், சோலை அழகிலே ஈடுபட்டும், உங்களின் இனிமையான வசனங்களால் தளர்ந்தும் இருக்கும் என்னை எம்பெருமானிடம் இருந்து விலக செய்யும் வார்த்தைகளை சொல்லியும், காரியங்களை செய்தும், அவன் மேல் இருக்கும் மோகத்தை அதிகரிக்க செய்யும் நல்லவர்களே என்று சொல்வதாகவும் கொள்ளலாம். ஒரு நாள் பிரிவு ஆற்றாமையால் மெலிந்து, மிகவும் நோவு பட்டாள் என்கிறார். திருவடி (ஹனுமான்) இலங்கையில் சீதா பிராட்டியை சந்தித்து திரும்பிய பின், இருந்த சீதா பிராட்டியின் மனநிலையை இவளுடன் ஒப்பிடுகிறார். அவள் மெலிய மெலிய நீர்ப் பண்டமாய் மாறி அழிகிறபோது, இவன் ஒன்றும் ஆகாமல் இருந்தான். அந்த ஊர் சோலைக்கு, இவளின் மெலிதல், நீர் ஆகும். கமுகு என்று சொன்னது, கொடிக்கு தன்னையே கொடுக்கும், அவனுடைய ஔதார்யம் சொல்லியது. மதுவை உடைய மல்லிகை, பரிமளம் இவள் இடத்தில் இருந்து வந்தது என்கிறார். எம்பெருமானும் அடியவர்களுக்கு உகந்த ஒரு திரவியத்தை திருமேனியாக்கி கொண்டு திவ்ய தேசத்தில் எழுந்து அருளி உள்ளார். இங்கு உள்ளவர்களும், தாவரங்களும், மிருகங்களும் அவனை விட மாட்டாதபடி நிற்கிறார்கள் என்கிறார்

என்னை பற்றி அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியதாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே குறியாக இருப்பதால், உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. நீங்கள் சொல்லும் வழியில் நான் திரும்ப போகிறேன் என்ற எண்ணமா உங்களுக்கு என்றும், அது ஒருநாளும் நடக்காது என்றும் சொல்கிறார். திருவல்லவாழ்நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் நீங்கள் சொல்லும் வழியில் வருவதற்கு சாத்தியம் இல்லை என்கிறார். இந்த திருத்தலத்து எம்பெருமானுடைய திருப் பாதங்களின் தூசியை தன்னுடைய தலை மீது அணியப் பெற வேண்டுமென்றோ என்னுடைய ஆவல் உள்ளது என்கிறார். அது பற்றி ஏதேனும் சொல்வதானால் சொல்லுங்கள் என்றும் என்னிடம் வீணாக பேச வேண்டாம் என்றும் சொல்வதாக அமைந்த பாசுரம்.

என்றுகொல் தோழிமீர்காள் என்று சொல்வது, இவள் நினைத்து இருப்பது சரியாகாது என்று சொல்பவர்களிடமே, தான் நினைப்பதை அடைவது எப்போது என்று கேட்கிறாள்.

தோழிகளே ! நீங்கள் உங்களுக்கு பிடித்தவற்றை சூடிக்கொண்டு வாழ்வதுபோல நானும் எனக்கு பிடித்ததை சூடிக் கொண்டு வாழ நினைத்தால் இதில் என்ன தவறு உள்ளது ? இதற்காக என்னை நீங்கள் கண்டிப்பது ஏன்? என்று கேட்க, அதற்குத் தோழிகள் ‘உனக்கு என்று ஒரு தனி வழியுண்டோ? எங்கள் வழியிலே தான் நீ வந்து தீரவேண்டும்” என்று பதில் சொன்னார்கள். அதற்குத் தலைவி “திருவல்லவாழ் நகரிலே பரம வைதிகர்கள் கானம் செய்கிற ஸாம வேதத்தின் ஒலியும் அங்குற்ற ஹோம புகையின் பரிமளமும் என்னை அவ்வழியே இழுப்பதை காணுங்கள், அந்த திருத்தலத்து எம்பெருமானுடைய திருவடிகளையே எப்போதும் கண்டு கொண்டிருக்க வேண்டும் என்ற என் காதலை நிறைவேற வழி சொல்வதானால் சொல்லுங்கள் என்கிறார்.

தோழிகளே! என்னுடைய நல்ல ஜீவன், (ஜீவாத்மா), என்னை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் அல்லவோ, நீங்கள் கண்டித்துச் சொல்லும் வார்த்தைகளுக்கு நான் செவி கொடுக்க முடியும்; அப்படி இல்லாமல், பார்க்கப் பார்க்கக் கண்ணும் நெஞ்சும் பிணி மற்றும் புண் உண்டாகும்படி இருக்கிற, பாக்கு மரங்களும் பலா மரங்களும் முதலியவை மச்சணி மாடங்களளவும் ஓங்கி வளர்ந்து உள்ள, திருவல்லவாழ் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள அனந்த சயனம் செய்து கொண்டு இருக்கின்ற எம்பெருமானுக்கு அன்றோ என்னுயிர் நினத்து கொண்டு உள்ளது. இனி உங்கள் பேச்சு இங்கே விலை போகாது என்றாள். “பச்சிலை நின்கமுகும், பச்சிலை நீள் பலவும், பச்சிலை நீள் தெங்கும், பச்சிலை நீள் வாழைகளும்” என்று கூட்டிக் கூட்டிப் பாடுவதும் உண்டு.

திருவல்லவாழில் எம்பெருமான் நின்ற திருக்கோலமே அன்றி சயனத் திருக்கோலம் அன்று. திருவல்லவாழ்நகருள் நின்றபிரான் என்று கீழே இரண்டாம் பாட்டிலும் அருளி செய்து உள்ளார். அப்படி இருக்க, இப்பாட்டில் “திருவல்லவாழ் நச்சரவினணை மேல் நம்பிரான்” என்று சயனத் திருக்கோலமாகக் கூறுகின்றார் என்று எடுத்து கொள்ளக் கூடாது. நச்சரவினணை மேல் நம்பிரான் என்று அந்த திருத்தலத்து இருக்கிறதை சொல்வது அன்று; எம்பெருமானுடைய பொது விசேஷணம் இருப்பதை சொல்கிறது. ‘அத்தியூரான்… அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்‘ (இரண்டாம் திருவந்தாதி 10) என்ற இடத்தில் சொல்வது போல் கொள்ளலாம்.

சிறந்த நேசமுள்ள தோழிகளே!, வைதிக ப்ராஹ்மணர்கள் செய்யும் யாகங்களில் உண்டான புகை, மையின் நல்ல நிறத்தைக் கொண்டு, உயர்ந்த ஆகாசத்தை மறைக்கும் இடமான குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளி இருப்பவனும், சக்கரை கட்டி போன்றவனும் பரிபக்குவமான பழம் போன்றவனும், இனிய அமுதமாயிருப்பவனும், என்னுடைய ஸர்வ நலத்தையும் கொள்ளை கொண்டவனும், அதனால் ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ என்று ஆழ்வார் ஏங்குவதாக அமைந்த பாடல்.

கனிபோன்ற வாயையுடைய தோழிகளே! எங்கு பார்த்தாலும் கான ரூபமான மிடற்றை உடைய வண்டுகளும் புது தென்றலும் உயர்ந்த பனைகளை கொண்டு வளருகிற மாசுகளையுடைய அழகிய கடற்கரைச் சோலைகளை கொண்ட திருவல்லவாழிலே நிற்கிற சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய தாமரை போன்ற திருவடிகளை பாவியான நான் என்று சேவிப்பது என்கிறார்.

பாவை போலே அழகிய தோழிகளே! கடல் போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்கழுநீர்ப் பூக்களும் ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான தலைவனும் இவ்வுலகங்களை எல்லாம்  பிரளயம் அழிக்காதபடி காத்தவனான எம்பெருமானுடைய திருவடிகளின் மேலே சாத்தின புஷ்பங்களையாவது நாள் தோறும் தொழுவோமோ என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பாடலில், திருவல்லவாழிலே, அருளி புரிவதற்கு என்றே நித்யவாஸம் பண்ணுகிற சர்வ சுலபனான எம்பெருமானுடைய, ஸெளசீல்யமே வடிவெடுத்த திருவடிகளில் இடைவிடாதே அடிமை செய்யும்படியான (தொழும்படியான) பாக்கியம் கிடைக்குமோ என்கிறாள்.

அழகிய நெறியையுடைய தோழிகளே! எல்லாவிடத்திலும் எப்போதும் ஆடும் தித்திப்பு அதிகம் நிறைந்த கரும்புகளும், எப்போதும் அறுப்பதற்கு பக்குவமாய் உள்ள (முற்றிய) செந்நெல் பயிர்களை உடைய, எல்லா பக்கங்களிலும் நெருங்கிய பூத்த தடாகங்களை கொண்ட கழனிகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருவல்லவாழிலே, நித்ய வாசம் செய்து அருளுகின்ற எம்பெருமானின், உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் அளந்த நீண்ட திருவடிகளை, நாள் தோறும் தொழ இயலுமோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இவளுக்கு கைங்கர்யத்தில் உகப்பு போல், அவர்களுக்கு இவள் பேறே உகப்பாய் இருப்பது என்கிறார். இந்த திருவல்லவாழ் சிரமகரமான ஊர் என்று சொல்லி, ஊரை, பூக்களால் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்து உள்ளது என்றும், தடாகங்களை வயல்கள் சூழ்ந்து உள்ளன என்றும், இவைகளால் எப்போதும் குளிரிந்து இருக்கும் திருவல்லவாழ் என்கிறார்.

பிரான் நிலந்தாவிய நீள்கழலே நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் என்று சேர்த்து அனுபவிக்கலாம் என்கிறார். நல்ல குணம், தீய குணம் என்று எதையும் பாராமல், எல்லார் தலையிலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளை கொண்டு தீண்டியது போன்ற திருஅவதாரங்கள், அவதார பயன் முடிந்தவுடன் செல்லாமல், நித்ய வாசம் செய்கிற உபகாரமே இங்கே ஏற்றம் பெறுகிறது.

தோழிகளே, தன்னுடைய அழிவற்ற கிருபையை இந்த உலகத்தில் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களும், மேல் உலகத்தில் உள்ளவர்களும் எப்போதும் கொண்டாடும்படி இருக்கும் இடம் இந்த திருவல்லவாழ். எம்பெருமானின் கல்யாண குணங்களை கொண்டாடும் ஆயிரக் கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வசிக்கும் இடம் இந்த திருவல்லவாழ். இங்கே மஹா க்ருபாளனான ஸ்வாமியான நாராயணனுடைய திருநாமங்களை, அவனுடைய திருவருளாலே, நாம் சொல்லி கொண்டே இருக்கலாமோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றுவர் பற்றி நின்ற * பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல் * அந்த மாயாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய * மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! ….. 1

தகப்பன், தாய், புத்திரர், உறவு முறை உடையவர்கள், சம்பந்தி என்று இங்கே பற்று கொண்டு, தேவையற்ற ஒரு யாத்திரையை தொடர்ந்து கொண்டு உள்ளோம். மாதா, பிதா, துணை என்று அவன் ஒருவன் மட்டுமே எல்லா உறவுமாக இருக்க வேண்டிய அவனை விட்டு, மற்ற உறவுகளை நித்யமான, தேவையான உறவுகள் என்று பற்றி கொண்டு இருப்பதை வெறுத்து, ஈஸ்வரனுக்கு சேவை செய்பவனாக இருக்க வேண்டும் என்று நீ புத்தியை செலுத்தினால், ஈஸ்வர ஆத்ம ஸ்வரூபதிற்கு ஒரு வீணும் விளையாதே பிரளய காலத்தில், லயதிற்கு இடமாகவும், ஸ்ருஷ்டி காலத்தில் உற்பத்திக்கு இடமாகவும், சித் அசித் இவைகளுக்கு நிர்வாககன் ஆகவும், இந்த காரியங்களுக்கு மத்தியில் ஆயன் கோபால கிருஷ்ணனாக வந்து அவதரித்தவன் உறைகின்ற இடமான திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தை வாயினால் சொல்வதில் வல்லமை உள்ளவனாக பொருந்திடு என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

ஆபரணங்கள் விளங்குகின்ற மென்மயான முலைகளை உடைய பெண்களின் பொய் மற்றும் சூதுகளை, உண்மை இது என்று, ஆதரிப்பவர்கள் பேசுகின்ற அப்படிப்பட்ட வார்த்தைகளை தவறு என்று கருதுவாய் ஆனால், பரந்த நிலாவை போன்ற வெண்கொற்ற குடையுடன் வாழ்பவனான மாகாபலி சக்ரவர்த்தியின் யாகத்தில், தன்னுடையது அல்லாத ஒன்றை யாசிப்பது போல, மூன்று அடி மண் யாசகமாக கேட்ட பிரம்மச்சாரி வாமன மூர்த்தி, உறைகின்ற திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தை வாயினால் சொல்வதில் வல்லமை உள்ளவனாக பொருந்திடு என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

சீர்மை மிக்குள்ள, மிருதுவான பேச்சை உடையவரான, ஸ்த்ரீகளுடைய நெருங்கின முலைகளை அணையகடவோம் என்று நினைப்பவர்கள் மத்தியில், நீ அந்த நினைவை தவிர்த்து, உஜ்ஜீவித்து போக நினைப்பாயானால், நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு பரமபதத்தில் இருக்கிறவரும், திருவேங்கட மலையில் எழுந்து அருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவர் உறைகின்ற திருவல்லவாழ் திவ்ய தேசத்தில், அங்கு இருக்கிறவர் இருக்கிற வடிவு இருக்கும்படி பொருந்தி பார் என்று நெஞ்சுக்கு ஆழ்வார் சொல்கிறார்.

மேகம் அளவும் வியாபிக்கின்ற வெண்கொற்ற குடைகளை உடையவர்களாய், மன்னர்களாய், யானை சூழும்படி வாழ்ந்தவர்கள் முடிந்தார்கள் என்ற ஒரு வார்த்தையை நீ துக்கம் என்று கருதினால், விஷமானது நிறைந்து இருந்த பூதனையின் முலையில் அழகிய கையையும் வாயையும் வைத்து அவளுடைய உயிரினை முடித்த சிறுவனான கண்ணன் உறைகின்ற திருவல்லவாழ் என்று சொல்லி பொருத்தி பார் என்று நெஞ்சுக்கு ஆழ்வார் சொல்கிறார்.

சென்ற பாட்டில் ஐஸ்வர்யத்தின் நிலையில்லாமையை சொன்ன ஆழ்வார் இந்த பாடலில் இந்திரியங்கள் தங்களுக்கான விஷயங்களை தரச்சொல்லி படுத்தும் போது அந்த பாதைக்கு செல்ல அஞ்சினால், நாம் திவ்ய தேச பாதையை பொருத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஸூஷ்ம சரீரத்தோடு கூடிய நித்யமான ஆத்மாவிற்கு, ஜன்மம் என்பது ஸூதுல சரீரத்தில் பிரவேசிப்பது ஆகும் என்று சொல்கிறார். உடம்பு என்ற மாமிசத்தில் பொதிந்து கொண்டு நரம்பு தோல் ஆகிற குடிசைக்குள் (ஸூதுல சரீரம்) புகுந்து, எனக்கு உரிய விஷயத்தை காட்டு என்று பாதித்து மனதை சஞ்சல படுத்தும் ஐந்து இந்திரியங்கள் தாம் வாழ, அவைகளின் பாதகத்திற்கு அஞ்சினால், நித்ய தோஷ நிவர்த்திகளால் பூரணமான நான்கு வேதங்கள், ஐந்து அக்னிக்கள், ஐந்து மகா யாகங்கள், ஆறு அங்கங்கள் இவைகளையே வேலைகளாய் உடையவர்கள் வாழ்கின்ற திருவல்லவாழ் என்று பொருந்து என்று நெஞ்சுக்கு சொல்கிறார்.

நோய் எல்லாவற்றையும் கொண்டு செய்த நிச்சயம் இல்லாத இந்த சரீரத்தை மெய் என்று சொல்லி திரிகின்ற சிலர் சொல்லும் வார்த்தைகளை நீ பிழை என்று கருதுவாய் என்றால், நீர் களிப்புகளை அறுக்க கூடிய வெப்ப கதிர்களை உடைய ஆதித்தியனாய், அவனால் வந்த தாபத்தை ஆற்றுவதற்கு ஈடான நீரினை உடைய சந்திரனாய், மேக சஞ்சாரத்தை உடைய ஆகாயமாய் நிற்கின்ற, ஆச்சரியமான எம்பெருமானை, கண்கள் எல்லாம் கண்டு அனுபவிக்கலாம்படி திருவல்லவாழ் உறைகின்ற எம்பெருமானிடம் பொருந்து என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

மேகங்கள் சஞ்சரிக்க கூடிய ஆகாயம், அக்னி, நீர், நிலம், காற்று என்ற பஞ்ச பூதங்களினால் உருவாகி மயங்கி நின்ற இந்த சரீரத்தை நமக்கு பாதுகாப்பு (ரக்ஷகம்) ஆக மாட்டாது என்று கருதி, உஜ்ஜீவிக்கப் பார்த்ததால், சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட மிருதுவான திருமுலைத்தடங்களை உடைய, பொற்றாமரையை இருப்பிடமாக கொண்ட, பெரிய பிராட்டியாரும், அவருக்கு தகுந்த தாமும் தினந்தோறும் கிட்டி வந்து உறைகின்ற திருவல்லவாழ் திவ்ய தேச எம்பெருமானுடன் பொருந்து என்று நெஞ்சுகக்கு சொல்கிறார்.

சென்ற எட்டு பாசுரங்களிலும் அருளிச் செய்தபடி, உறவினர்கள் உற்ற துணையல்லர் என்கிற உணர்ச்சியும், இந்த உலக விஷய போகங்கள் நாம் அடையவ வேண்டிய ஒன்று அன்று என்கிற உணர்ச்சியும், இந்த உலகத்து செல்வம் நிலைநிற்காது என்ற உணர்ச்சியும், இவ்வுடல் துச்சம் என்ற உணர்ச்சியும் உண்டாகப் பெற்றாலும், கண்ட இடம் எங்கும் பரவிக் கிடக்கிற மற்ற சமயங்களில் ஆழ்ந்துவிடாமல், வேதங்களை நன்றாக அனுபவிப்பது அருமை ஆதலால் அதனை இப்பாசுரத்தில் ஆழ்வார் எடுத்து சொல்கிறார்.

வெள்ளியார் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர், வெள்ளி என்பது சுக்ரனுக்குப் பெயர் என்பதால், லோகாயத பிரிவினை சொல்வதாக கொள்ளலாம். வெள்ளிமலையாகிய கைலாஸகிரியை இருப்பிடமாக கொண்ட பசுபதியை சொல்வதால், பாசுபத பிரிவினை சொல்வதாக கொள்ளலாம். பிண்டி என்பது அசோக மரத்திற்குப் பெயர் ஆகையால், அதனை இருப்பிடமாக கொண்ட அருக தெய்வம் ஜைன பிரிவினை சொல்கிறார். போதியார் என்பது போதி என்ற பெயர் கொண்ட அரச மரத்தினை இருப்பிட கொண்ட புத்த சமய பிரிவினை சொல்கிறது. ஆக இப்படிப்பட்ட கொள்கைகள் நமக்கு உபாயம் அல்ல என்று துணிந்து நெஞ்சமே! உடம்பு நோக, கடல் கடைந்து அமுதம் அளித்தவருமான பெருமாள் நித்யவாஸம் பண்ணுமிடமான திருவல்லவாழிலே பொருந்தப்பார் என்கிறார்.

வேத அர்த்தம் நன்கு அறிந்த வல்லவர்கள், ஒருவித குறையுமற்று இருக்கிற பிராமணர்கள், வசிக்கின்ற திவ்ய தேசமான திருவல்லவாழில் எழுந்தருளி இருக்கின்ற, ஸ்வாமிகள் விஷயமாக, சிறகுகள் உடைய வண்டுகள் குலாவி நிற்கின்ற, பொழில்களால் சூழப்பட்ட அழகிய நெடியதான திருவாலியை நாடாக உடைய, எதிரிகளின் ரத்த கரையை உடைய வேல் ஆயுதத்தை கையாள்வதில் வல்லவரான திருமங்கை ஆழ்வார், திருவாய் மலர்ந்து அருளிய இந்த பத்து பாடல்களை கற்ற வல்லவர்கள் இந்த பூமியில் நிர்வாககரராய் ஆகி, பின்னர், நித்ய விபூதியையும் ஆண்டு கொண்டு, பரம ஆனந்ததை அடைவார்கள் என்று இந்த பதிகத்தை ஆழ்வார் முடிக்கிறார்.

வல்லவாழ் * பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, * என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம் *

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற நப்பின்னை நாயகனாய், என்று ஆழ்வார் கூறுவது, நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவை ஸாதித்தது போல தோன்றுகிறது.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

Thirumaalai 36 – Mazhaikku anru

Please click here to view the Tamil Version, thanks

Thirumalai Till Now

As the saying goes “Thirumaalai (the prabandham) ariyaadhaar, Thirumaalaye (Perumalai) ariyaadhaar”, we all need to learn and understand Thirumaalai , sung by Thondaradipodi Azhwaar, to know more and more about Perumal/Emperumaan. .

Azhwaar’s Experience and Preaching

In the first three hymns (1-3) of this Divyaprabandham, Azhwaar enjoyed the experiences, graced by Emperumaan on him and in the subsequent eleven hymns, (4-14) Azhwaar was preaching us his experiences with Emperumaan. When people raised objections, Azhwaar responded to them to follow Sri Rama, by  saying silaiyinaal ilangai setra devane devan aavaan”; and asked them to follow Sri Krishna, who is simple and easy to approach, by saying ‘katrinam meytha kazhalinai panimin; and finally asked them to follow Aranganathan, by mentioning ‘uybavarku uyyum vannam Thiruvarangam kaatinaan”. 

Emperumaan’s Favours to Azhwaar

Azhwar described the great favours he received from Periyaperumal in the next ten hymns, 15 to 24.

  • Emperumaan clarified Azhwaar’s doubts on Paramathma, the most supreme concept among the twenty six concepts of our tradition (sampradhayam) in Meyyerke meyyanaagum.
  • Emperumaan entered the heart of Azhwaar in Soodhanaai Kalvanaai, and made Azhwaar’s devotion and affection towards Periyaperumal to swell.
  • Emperumaan melted the hardened heart of Azhwaar and graced Azhwaar with His dharsan and blessings, in spite of Azhwaar’s belief that he was not worth to receive any favours from Periyaperumal, Virumbi ninru.
  • Emperumaan nullified Azhwaar’s long time loss of not seeking Emperumaan’s dharsan and made Azhwaar to worship Him, which made Azhwaar’s eyes to pour out tears of joy, in ini thirai thivalai modha.
  • Emperumaan created the four directions and kept His holy parts of His form in each of these directions so that He can be worshipped to get abode / Moksham in Kuda Thisai mudiyai.
  • Emperumaan made Azhwaar happy by making him realise that His lustrous and effulgent Holy form and parts are only for the happiness of His devotees in Paayum Neer Arangam.
  • Emperumaan made Azhwaar realise, that he missed experiencing Him for a such a long time, mainly because Azhwaar did not surrender to Him completely, which shattered Azhwaar, Panivinal manamadhu onri.
  • Emperumaan made Azhwaar sing that we can simply follow what the Vedas had already said about Him and we need not toil to create anything new to speak about Him in, Pesitre pesal allaal.
  • Emperumaan showed the beauty of His reclining posture to Azhwaar in Thiruvarangam, that made Azhwaar to realise that he would not live without His dharsan, in Gangaiyil punidhamaaya.
  • Emperumaan made Azhwaar realise and sing that he did not have any pre-requisites for total surrender, and that helped Azhwaar to get prepared for total surrender to Him in Vella Neer parandhu paayum.
Naichyaanusandhaanam

After the first three subtopics of Thirumalai, namely, Azhwaar’s experience (1-3), Azhwaar’s preaching based on his experience (4-14), and the favours graced by Him to Azhwaar (15-24), now Azhwaar sings that he did not have any good qualities but only bad qualities in the next 10 hymns (25-34), which is the fourth subsection, known as naichiyaanusandhaanam in our tradition.

Devoid of any good virtue

In Kulithu Moondru Analai (25), Azhwaar mentioned that he did not have any of the qualification that were needed to practice Karma, Gnana or Bakthi yogams (Actions, Knowledge or Devotion) and Azhwaar requested Periyaperumal to bless him with everything including the qualifications onward.

In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not do the normal poojas and singing slokas on Him, which anyone could have done, even if they were not qualified to practice, karma, gnana or bakthi yogams.

In “Kurangugal malaiyai nooka” (27), Azhwaar stated that he did not do any service similar to the ones done by squirrels and monkeys, with good intention during the Rama incarnation.

In Umbaraal ariyalaagaa” (28), Azhwaar said that his mind did not think about Paramaatma as his saviour, like the elephant Gajendra, which was saved by Emperumaan. after a crocodile caught its legs.

  • In Kulithu moondru analai (25) Azhwaar, said that he did not do prayers, using all or any of the three actions, thinking through mind, offering flowers by hands and reciting holy chants from mouth, to Emperumaan. In Podhellam Podhu Kondu (26), Azhwaar mentioned that he did not chant prayers. In kurangugal malayai nooka, (27), Azhwaar mentioned that he did not do any service. In Umbaraal ariyalaaha” (28) Azhwaar mentioned that he did not think of Emperumaan.
  • Initially Azhwaar said that he did not use all the three actions together in his prayers, and said he had not done even one of them, in the subsequent hymns.

In Oorilen, kaani illai, (29) Azhwaar said that he did not have any association whatsoever, with any Divyadesams, as He is committed to protect all those who have any association with Divyadesams like chanting of Thirupallandu, or holding any piece of land for doing some service to Him.

Full of all bad qualities

The fourth part of Azhwaar’s Naichyanusandhanam, consists of ten verses 25 to 34, where Azhwaar says that he had no good qualities, in the five hymns from 25 to 29 and from 30 to 34, has all kinds of bad qualities.

In Manathilor thooymai illai (30), Azhwaar declared that he had all the bad qualities and there wasn’t any bad quality left in this world, that he did not have, as Emperumaan would have graced Azhwaar with moksham, as long as he did not have any bad qualities, even if AZHWAAR did not have any good quality.

In Thavathulaar thammil allen (31) Azhwaar said that he did not possess any of the means, that the Shastras meant for attaining salvation, like doing yagnas, or donating to others, instead he had wasted the birth, by drowning himself into the worldly pleasures, showing hatred towards everyone, thereby he became undesired even to his own relatives.

In the 32nd song Arthu Vandu Alambum Solai, Azhwaar states that he did not know or understand even a single way to reach Him. Azhwaar also stated about himself as a human being, who was unable to let go of what he liked, and behaved like a stupid, came in front of Emperumaan without knowing the reqiurements to reach Him and that was his stupidity.

In the 33rd hymn, Meiyellaam Poga Vittu, Azhwaar, sang about his lowly qualities and cried that he had nowhere else to go and came in front of Emperumaan, only due to Azhwaar’s desire for the Emperumaan’s mercy.

In the next hymn 34, Ullathey uraiyum Maalai, Azhwaar laughed at himself loudly, when he was trying to cheat Emperuman and his devotees, realised that he could never do that, as He knows everything directly by staying in the heart of everyone, which is the source of all the intelligence and origin of all thoughts. Azhwaar felt ashamed as he had also thought that he had moved away from Emperumaan.

Paramathmaa’s Good things to all

In the next hymn 35, Thaavi Andru Ullagamellam” Emperumaan crossed all the worlds and spread His Holy feet (thiruvadi) on all heads, thus providing each and everyone moksham, without anyone asking for His favour.

Now let us move on to the next hymn.

Hymn 36 Mazhaikku Andru Varai

Mazhaikku Anru Varai munendhum maindhane madhura aare, uzhaikandre pola nokkam udaiyavar valaiyul pattu, uzhaikandrerkku ennai nokkaa ozhivadhe unnaiyanre azhaikinren Aadhi Moorthi, Aranga Maa Nagarulaane. (36)

At that time when Indra’s wrath caused havoc with rain for seven days in Vrindavan, the strong and valourous Youth who lifted the Govardhana mountain as an umbrella in His right hand, to protect everyone, and all the cows and calves, in advance and without them asking for His help, the mighty Youth, the Arbiter of everyone’s wishes like a sweet river. Azhwaar was caught in the nets of the eyes of women, like the eyes of a young deer caught in the nets. Azhwaar says that he is not receiving His grace, in spite of him calling out to the Supreme God, Arangama Nagarulan. This is the summary of this song.

In the last hymn, Azhwaar could not leave Emperumaan as ‘unapproachable’ as He showered His grace with simplicity towards Azhwaar. After taking Azhwaar into His fold, Azhwaar wished that He would take him immediately to Paramapadham, as his desire to reach Emperumaan was more, and also He has taken those to Paramapadham who desired so. But Emperumaan did not do that immediately. Like a mother who would wait for the indigestion of the child to be completely cured before feeding the child with food, Emperumaan wanted Azhwaar to wait for some time. But Azhwaar, afraid of hostile things, he was surrounded with, in this world, calls out loudly, so that Periyaperumaal could not lie down peacefully in Thiruvarangam, as everyone melted, upon hearing the cries of Azhwaar.

Now let us see in more details in the following sections.

Mazhaikku

Wherever rain’ is mentioned in all Azhwaars’ hymns, it refers to the stone rain of Indra, when Krishna lifted and protected everyone under the Govardhana Hill. This is the same as when Azhwaars sing ‘elephant’, it refers to Gajendran, the elephant . The people of Ayarpadi, to escape from the havoc of Indra’ s rain, took refuge under the Lord’s hand, that held the Govardhana mountain. Similarly Azhwaar also wanted to take refuge in the Lord to get rid of his samsara sorrows. Just as the starving people look forward to the rich for their survival, Azhwaar prayed to the Lord who generally removes the dangers of all, to remove his dangers too.

Azhwaar said that the danger caused by the worldly life to him today was similar to the danger caused by hailstorm to shepherds, cows and calves on that day, so Emperumaan must protect him.

Azhwaar asked whether the Lord would save only those who were affected by the hailstorm. Azhwaar asked whether should He not protect everyone who was suffering in the normal worldly life. He further asked whether He would protect only if the people of an entire town were suffering. Should He not save Azhwaar whose total sufferings was as severe as that of the entire town suffered during the hailstorm.

Varai

Emperuman realized that Indra was causing rain due to his hunger and anger, gathering clouds and gathering rain. Emperumaan did not have time to call Chakarathazhvaan, His discus. He immediately took the nearby available mountain in His hand and saved the entire Ayarpadi town. Thus it can be understood that there is no specific weapon that is needed for the Lord to save any danger and hence does not need any specific weapon to save Azhwaar too. Therefore, it is the expectation of Azhwaar that Emperumaan cannot complain that there is no tool available around Him to protect Azhwaar.

Anru

Earlier here means that the Lord saved the cows even before they suffered due to rain and before they cried for help. Azhwaar also said that the people of Ayarpadi and the cows and others etc. had no one to depend upon except the Lord, so He saved them, before they were put into danger. Here the narrator quotes the 49th sloka from Alavandar’s Sthothra Ratnam. According to that sloka, Alavandaar prays to the Lord, who is full of wise and powerful qualities and who never abandons His devotees, to protect and bless him, the devotee who lost his ways due to the dark clouds and rains of worldly life, In this song, Thondaradipodi Azhwaar cries out that even though he was drenched in the rain of this kind of sorrow, Emperumaan did not come to save him.

Yendhum

At the age of seven He could effortlessly, lift the Govardhana hill like a ball of flower. Azhwaar was worried that he was still not saved because he might be a burden to Emperumaan if He had to save him. As Nammazhwaar says in song Thiruvirutham 21, ‘Soottu Nan Malaigal Thooyana yendhi ” like Nithyasoories carrying, nice fragrant filled flower garlands with ease to shower on Him, Thondaradipodi Azhwaar here says that the Lord carried the mountain to save his devotees with such ease.

Maindhane

The word ”Maindhu’ shows the strength needed to lift the mountain easily. It can be assumed that Maindhan is also a young boy and because He saved His neighbours, he became younger. Just as humans become happy and seem to age less when they get food they love, it is very dear to the Lord to protect his devotees. So He became younger. Azhwaar regrets that though Emperumaan is desirous to protect people like him, He did not come, even when Azhwaar kept calling Him.

Madhuravaare

Azhwaar says that Emperumaan takes a sweet form and is like a river. Azhwaar says that His form and beauty are such that Azhwaar could not not leave Him, even if He is not a protector. The reason why Azhwaar says Him sweet river, instead of Sweet sea, is, because the sea water is salty and cannot be drunk. The sea does not run to a place, whereas the river flows. When the flood comes, the river breaks all the restrictions and flows through. Azhwaar says that when he tried to leave Him, calling himself as sinner, but could not leave Him, instead, hugged Him. Just as the river goes in search of its potential users, as Paramaathma, this Sweet river also appears, starts from Paramapadham and runs in search of Azhwaar in Thiruvarangam.

Uzhaikandre pola nokkam udaiyavar valaiyul pattu, uzhaikindrenerku

Emperumaan saved all in the Ayarpadi, from the danger that came from the rain of stones hurled by Indra on that day, and from whom should He save Azhwaar today. Azhwar responds that he was suffering because he was caught in the trap of women, whose eyes were so beautiful and as those of a young deer. Even though there is no love inside the hearts of such women, they acted as if, they were left with no means and Azhwaar was the only refuge to them. The word ”Uzhai’ in Tamil means ‘deer’ and ‘‘kanru‘ in Tamil means calf. By uzhaikanru, Azhwaar said that he fell in the trap of net from which a young deer could not escape. The commentator said as the net was neither useful, nor escapable, for the entrapped person, the women’s eyes entrapment that was not sweet that rendered Azhwaar, unable to escape the trap and made him incapable of thinking about Emperumaan.

Enakku

The word ‘enakku’ means ‘for me’ in Tamil. Here Azhwaar says that

  • it is the same ‘me’, who was in hardship, like the cows during the rain of stones,
  • who understood that it is only Him, who could save Azhwaar from such sufferings
  • who prayed that He alone, shall protect Azhwaar.

Nokkaadhu Ozhivadhe

It is as if Azhwaar was asking should not the danger brought by the eyes, be saved by the grace of the eyes of Emperumaan, just as the danger brought by the stones was saved by a stone, the Govardhana giri. Saving Azhwaar would not be as difficult as lifting a mountain. It would be enough if Emperumaan graces Azhwar with His glance, so that Azhwaar’s heart cools down. Azhwaar asked like a question to Emperumaan, than a prayer as to why He has not looked at Azhwaar. The reason, may be, Azhwaar was keeping in his mind, his relationship with Him and His steadfast simplicity.

The reason why Emperumaan did not come even now, was because He thought that if He immediately had graced Azhwaar, he would again declare to Him, that he was not a good person and might leave Him. Therefore, Emperuman said that experience can be given only after sometime, like a good and rich food given after the indigestion and hunger are cured. Just as the pleasure that the mother would get, when a sick child after recovery, getting hungry calls out for food again, Emperumaan also waited to hear Azhwaar’s calling for Him.

Unnai anre azhaikinren

Azhwaar questions, is he standing in front of someone inferior and shouting to save him. But he is standing in front of Periyaperumal, Who is waiting to save him. He is asking Emperumaan, who was unable to say that He has other work. When Emperumaan was thinking what was the compulsion for Him to come when Azhwaar calls, Azhwaar responded to Emperumaan in the next word, namely, Adhimurthy, meaning You Who are the Reason for Everything.

Aathi Moorthi

During the deluge, He protected all, in His womb. Azhwaar said that The Creator of everything should save Azhwaar by Sankalpa. Azhwaar said that the responsibility of saving the child was on the parents, and the crying child always would call its mother only.

Aranga Maa Nagar Ulaane

Azhwaar asked to protect Azhwaar, was it necessary to go through the whole old history of the creation of the world to , like an old well being unsilted. He further questioned whether we need to give more reasons, other than Him coming down from Paramapadham and lying down in a reclining position in Thiruvarangam. He asked whether there are any other good benefits for Him other than protecting people in His reclining position in Thiruvarangam. If everyone gets Ujjivana depending on their good deeds and sins, then He could have done that by staying in Paramapatham itself, rather than coming down to Thiruvarangam.

Azhwaar called Him as ‘Arangama nagar ullaane” meaning that He is residing in Thiruvarangam. Azhwaar said that he could call only Periyaperumaal in Thiruvarangam and he did not have any ability to call Emperumaan in Paramapatham. Emperumaan came here for people, only to increase the taste towards Him. After coming here to taste Him, if Azhwaar does not to try to mreach Him, it would be a big loss for Azhwaar. Even after calling Him like this, the reason why Emperumaan did not grant His grace was because He had a habit of listening to the calls of the people in the Paramapadham. The common people (samsaris) were till now, had called for only worldly things. It was only Azhwaar then tried to call for Him, and Emperumaan found and got Azhwaar . So Emperumaan was enjoying this voice of this samsari asking for a different thing and He wanted to hear a little more of Azhwaar. With this Azhwaar ended this song.

Let us catch up on the experience of the another Hymn of Azhwaar in our coming weblogs. Thanks

079 திருமூழிக்களம் / Thirumoozhikalam

ஸ்ரீ மதுரவேணி நாச்சியார் ஸமேத ஸ்ரீ சுக்தி நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

கேரளாவில் உள்ள ஆலவாயிலிருந்து இத்தலத்திற்கு எண்ணற்ற பேருந்துகள் செல்கின்றன. எர்ணாகுளத்திலிருந்தும் அங்கமாலி ரயில் நிலையத்திலில் இருந்தும் இத்தலத்திற்குப் பேருந்து வசதியுள்ளது. எழில் கொஞ்சும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த இத்தலம் தற்போது ஒரு சிறிய நகருக்கு ஓப்பாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. மிக அமைதியான சூழலில் இயற்கை எழிலோடு இணைந்து நிற்கிறது. இத்தலம் பரதனும் லட்சுமணனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலம். எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது

பாரதப் புழா ஆற்றங்கரையில் எழில் தரும் சூழ்நிலையில் அமைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்ரமாக விளங்கி இருக்கிறது. ஸ்ரீஸுக்தி இங்கு அருளப்பட்டதால் எண்ணற்ற நூல்கள் இங்கு ஆராயப்பட்டு கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் ஒரு போது சிறப்புற்று இருந்துள்ளது. 

ராமாயணத்தின் புராணக்கதையுடன் இந்த கோவில் தொடர்புடையது, இங்கு ராமரின் சகோதரர் லக்ஷ்மணன் ராமனை அவர்களின் மற்ற சகோதரர் பரதனுடன் வழிபட்டார். இங்கு அதிபதி லட்சுமண ரூபம் எடுத்து வழிபட்டார். நாலாம்பலம் (நான்கு அம்பலம்) யாத்திரையின் ஒரு பகுதியாக இருக்கும் நான்கு கோவில்களில் இதுவும் ஒன்று – திரிபிரயாரில் ராமர், இரிஞ்சாலக்குடாவில் பரதம், மூழிக்குளத்தில் லக்ஷ்மணன் மற்றும் பாயம்மாள் சத்ருக்னன் என்பவை மற்ற மூன்று அம்பலங்கள் / கோவில்கள்.

இங்கு லட்சுமணப் பெருமாளையே (ஸ்ரீராமானுஜர்) மூலவராக எண்ணி வழிபடும் வழக்கம் பிற்காலத்தே ஏற்பட்டது. அதாவது இலட்சுமணைப் பெருமாளின் திருப்பணிக்கும் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபட தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு. இதனால் இந்த எம்பெருமானை லெட்சுமண பெருமாள் என்ற திருநாமத்துடன் வழிபடுகிறார்கள்.

இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி, தாயார் மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம், பூர்ண நதி ஆகியன. விமானம்: சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. 

வெவ்வேறு காலங்களில் ஆளும் பேரரசுகளின் பங்களிப்புகளுடன் கோயில்கள், கேரள பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இந்த கோவில் கிரானைட் சுவர்களுக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். மற்றும் கேரள அரசின் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 

கேரளத்தில் இராமயணத்திற்கும் பரதனுக்கும் சிறந்த மரியாதையும் வரலாறும் சொல்லபடுகிறது. இந்த கோவிலில், எம்பெருமானின் திவ்ய தரிசனமும் அண்ணன் தம்பிகளுக்கு இடையே உள்ள பிரிவுகளும் இந்த ஸ்தலத்தை தரிசித்தபின் அரை நொடியில் தீர்ந்து விடும் என்பதற்கு உதாரணமாக திருமூழிகளம் விளங்குகிறது.

சித்திரை மாதம் ஸ்ரவண / திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு முந்தைய பத்து நாட்கள் கொடியேற்றம் மற்றும் திருவிழா.  சித்திரை தவிர மற்ற மாதங்களில் திருவோண நாளில் சிறப்பு வழிபாடு கொண்டாட்டம்.  ஆடி மாதம் முழுவதும் கேரளா முழுவதும் இராமயண மாதம் என்பதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். 

எம்பெருமான் நான்கு திருக்கரங்களுடன், மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், மற்றும் கீழ் இரண்டு திருக்கரங்களில் கதை, தாமரை மலர் இடுப்புடன் வைத்து காட்சி அளிக்கிறார்.  சிவனுக்கு தனி சன்னதி உள்ளது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த திருத்தலத்தில் ஸ்ரவண பூஜை செய்வது வழக்கம். இது ஒரு பிரபலமான பூஜை என்பதால், ஒரு வருடம் வரை கூட காத்து இருக்க வேண்டி இருக்கலாம். 

வேத பாடங்களை கற்க, இறை பக்தி குறையாமல் இருக்க, செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட, பிளவுபட்ட உறவுகள் மீண்டும் ஒன்று சேர திருமூழிக்கள பெருமாள் அருள்புரிவார்.

இந்த எம்பெருமானுக்கு சந்தன காப்பு சாத்துவதும் இன்னொரு வழக்கம்.

இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் ஆழ்வாருக்கு காட்டிய கல்யாண குணம், மென்மை; மகாத்மாக்களை பிரிந்தால் தன்னால் தாங்கவே முடியாது என்று கூறும் குணம் இது. மார்த்தவம் என்று கூறுவார்கள்.

ஹரித மஹரிஷி என்பவர் ஸ்ரீமந் நாராயணனைக் குறித்து இவ்விடத்தில் தவம் இருந்தார். இவரின் தவத்திற்கு உகந்து இங்கு எழுந்தருளிய எம்பெருமான், உமது விருப்பம் என்ன வென்று கேட்க, எம்பெருமானை யாவரும் இலகுவில் அடையக் கூடிய வழியை உபதேசிக்குமாறு பிரார்த்திக்க அதற்கு, அவரவர்கள் கொண்டிருக்கும் தொழிலுக்கு ஏற்ப (வர்ணாசிரம தர்மப்படி) எளிதில் தன்னை அடைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸு க்தியை’ திரு மொழியை இவ்விடத்தில் அந்த முனிவர்க்கு வழங்கினார். 

எனவே இதற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக் களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் பொருள் காண இயலா வண்ணம் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே நெடுங்காலமாய் பிரசித்தமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. 

இராமன் வனவாசம் செல்லும் போது சித்திர கூடத்தில் தங்கியிருந்த சமயம், இராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போக பரதன் வந்து கொண்டிருந்த காட்சியைக் கண்ட இலக்குவன், பரதன் இராமனுடன் யுத்தத்திற்கு வருகிறான் என்று நினைத்து பரதனைக் கொல்ல எத்தணித்தான். இந்த பாவத்தைப் போக்கிக்கொள்வதற்காக இலக்குவன் திருமூழிக்களத்து அப்பனிடம் வந்து அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து, இலக்குவனை ஆரத்தழுவி, இன் சொல்லால் உபசரித்ததாகவும், இவ்விதம் இன்சொல் விளைந்த ஸ்தலமாதலால் திருமொழிக்களம் ஆயிற்று என்றும் கூறுவர். இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட ஸ்தலமாகும் இது. இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். 

கிருஷ்ண பகவான் துவாரகையில் இராமர், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருக்னன் ஆகியோரின் விக்ரகங்கள் வைத்து பூஜை செய்து வந்தார். ஒரு சமயம் அவை கடலில் மூழ்கியது. பின்னர் வாக்கேல் கைமல் என்ற முனிவரின் கையில் கிடைத்ததாகவும் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், இவற்றை பாரத புழா ஆற்றின் கரையில் பிரதிஷ்டை செய்யவும் கூறினார். அதன்படி, திருச்சூர் மாவட்டம் திருபறையார் ஸ்ரீ ராமன் கோவிலாகவும், ஈரிஞ்சால குடாவில் பரதன் கோவிலாகவும், பாயமல்லில் சத்ருக்னன் கோவிலாகவும் எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம் லட்சுமணன் கோவிலாகவும் அமைந்ததாக சொல்வார்கள்.

நம்மாழ்வார் பதினொரு பாடல்களும், திருமங்கை ஆழ்வார் மூன்று பாடல்களும் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார்கள். அவற்றை சிறிது காண்போம்.

நம்மாழ்வார் எம்பெருமானுடன் சேர்ந்து இருந்தால் வாழ்வு, இல்லை என்றால் முடிதல் என்ற நிலையை இந்த பதிகத்தில் அருளி செய்கிறார். எம்பெருமானை பிரிந்த ஒருத்தி, தன்னுடைய ஆற்றாமையின் காரணமாக, தன்னுடைய வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்திற்கு சென்று, அங்குள்ள பறவையிடம் தூது செல்ல சொல்லி உணர்த்துகிறாள். தூது போவோர் வருந்தி அழைக்க வேண்டாதபடி, திருமூழிக்களத்தில் நின்று அருளுபவன் என்கிறாள்; அவன் தனக்கு நல்லாரை விடமாட்டாதவன் ஆகையால், நம் நிலை அறியாது இவ்வளவு காலம் இருந்தான் என்றும், அருளை உடையவன் என்றும், உம்மை பிரிந்தோர் தரிப்பரோ என்று அவனிடம் சொல்ல வேண்டும் என்கிறாள். இப்படி ஒரு பெண் பேச்சாக ஆழ்வார் அருளி செய்கிறார்.

ஆழ்வார் இதற்கு முன் மூன்று முறை தூது விட்டு இருக்கிறார். அவைகளுக்கும் இந்த தூதுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கே சொல்கிறார்.

அஞ்சிறைய மட நாராய்’ (1.4) என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் தன் பக்கம் உள்ள குற்றங்களை சொல்லி, குற்றங்களை பொறுக்கும் அவனுடைய பொறை உடமையை சொல்கிறார். ‘வைகல் பூங்கழிவாய் ‘ (6.1) என்ற திருவாய்மொழியில் துன்புறுவர்களை காப்பாற்றுதலை தன் கடமையாக கொண்டு இருப்பதை சொல்கிறார். ‘பொன்னுலகு ஆளீரோ’ (6.8) என்ற திருவாய்மொழியில், அடியவர்களுடன் ஒன்று பட்ட இன்பத்தை உடையவன் என்றும், தனக்கு நல்லாரை இருப்பவர்களை விட மாட்டான் என்ற கருத்து தோன்றும்படியும் சொல்கிறார்.

இந்த பதிகத்தில்,(9.7), ‘இது என் வடிவழகு, இவை என் குணம், என்று ஆன பின்பு, பிரிந்தார்க்கு பிழைத்திருக்க முடியுமோ என்று அவன் வடிவழகும் குணங்களையும் பற்றாக கொண்டு தூது விடுகிறாள்.

பறவைகளைத் தூது விடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார்கள் என்பதை இந்த முதல் பாட்டில் தெளிவாக ஆழ்வார் கூறுகிறார். எம்முடைய கடற்கரையின் சோலையின் உள்ளே இருக்கிற உப்பங்கழியில் இரையை தேடி கொண்டு, இங்கே இனிதாக தங்கி இருக்கின்ற சிவந்த கால்களையும், மடப்பத்தையும் உடைய நாரையே, திருமூழிக்களம் என்ற திவ்ய தேசத்தில், எழுந்து அருளி இருக்கின்ற, தேன் பொருந்திய அழகிய திருத்துழாயை முடியிலே தரித்த குட கூத்து ஆடிய என் கண்ணனிடத்தில் என்னுடைய தூதராக சென்று, அவன் அழகாலும் குணங்களாலும் என்னை தோல்வி அடைய செய்தான் என்ற என் நிலையை அவனுக்கு சொல்லி, திரும்பி வந்து, உன் உறவினர்களோடு, உன்னுடைய கால்களையும் என் தலையின் மேல் சேர்க்க வேண்டும் என்கிறாள்.

எம்பெருமானுடைய திருவடியின் கீழ்த் தம்மைச் சேர்ப்பிக்க வல்ல ஆற்றல் வாய்ந்த ஆசாரியர்களையே தூதர்களாகக் கொண்டதாய் நன்கு காட்டியருளினார்.  அப்படிப்பட்ட ஆசாரியர்கள் தம் தலைமீது அவரின் திருவடிகளை வைக்கப் பெறுவதே பெறாப்பேறு என்று முடிப்பது, இத்தூது பதிகத்திலே உயிராக வைத்து அருளிச் செய்கிறார். எம்பெருமானுக்கு தன்னை உறுப்பாக ஆக்கியவனுக்கு(ஆசாரியனுக்கு) தன்னுடைய அத்தனையும் உரிமையாக்குவது என்பதை ‘எங்கானல்’ என்பதன் மூலம் தெரியப் படுத்துகிறார். ஆத்மாவை அவன் திருவடியில் இடுவதற்கும் இதுவே ஒருபடி ஆகும். கடற்கரை சோலை என்று சொன்னது, நுழைவதற்கு அனுமதி வேண்டாதபடி இருப்பதை சொல்கிறது. திருமூழிக்களத்தில் உறைவது என்று சொன்னது, தூது செல்வார்க்கு அணுக்கமாக உள்ளதால், பரமபதத்தை காட்டிலும் உள்ள ஏற்றத்தை சொல்கிறது. எம்பெருமானின் ஒப்பனையிலும் செயலிலும் தோற்று, அவனை அடைந்தால் உய்வு, இல்லை என்றால் முடிதல் ஆகிறது என்ற தன் நிலையை தூது சொல்லும் தொழிலை செய் என்று சொல்லுகிறாள். இப்படி உதவி செய்கின்ற உங்கள் கால்களை தன் தலை மேலே வைத்து கொள்வது என்கிறாள்.

ஸ்வாபதேசத்தில் ஆசாரியர்களைத் தூது விடுவதாகச் சொல்லுகையாலே, எம்பெருமானார் திருமாளிகையிலேயே வந்திருந்து ப்ரவசநம் செய்தருளின பெரிய நம்பியைப் போன்ற ஆசாரியர்களை இங்கு சொல்வதாக கொள்ளலாம்.  செங்கால மடநாராய்  என்று கால்களை விசேஷித்துச் சொல்லுகையாலே ஆசாரியன் திருவடிகளே தஞ்சம் என்கிற அர்த்தமும் காட்டப்படுகிறது.

உறவினர்களோடு பிரியாமல் நீரும், உம்முடைய சேவலுமாய் பொருந்திய காதலை உடைய குருகு கூட்டங்களே, அழகிய திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற தலைவர், தம்மாலும் இழிக்கப்பட்டு, எம் உறவினர்களாலும் பழிக்கப்பட்டு இங்கு இருப்பதால் என்ன பயன் ? தம் பரிஜனத்தோடு திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு நாங்கள் தகுந்தவர்கள் ஆக மாட்டாமோ என்று கேளுங்கள் என்கிறார்.

சேவல், நினைவு அறிந்து கலக்கும், அதே போல எம்பெருமானும் அவனுடைய கருத்து அறிந்து கலப்பதாக ஆழ்வார் சொல்கிறார்.

திருமூழிக்களத்திலே தாமும் தாம் உகந்த அடியார்களுமாக எழுந்தருளி இருக்கும் இருப்பிலே, ஆழ்வாரும் வந்து அடிமை செய்ய வேண்டுமே என்றும், அந்த கோஷ்டியிலே சேர்ந்து இருக்க, தான் ஏற்றவன் இல்லையோ என்றும் கேட்கச் சொல்லி, சில குருகினங்களை தூது செல்ல சொல்லுகிறாள். மேலே எம்பெருமானைச் சொல்லும் போது, “தமரோடு அங்குறைவார்க்கு” என்று சொல்வது, அவன் அடியவர்களோடு கூடி வாழுகிறப் போலே, தானும் எம்பெருமானோடு கூடி வாழும்படி செய்யவேண்டாவோ என்ற கருத்து தெரியும்படி சொல்கிறார்.

திருமூழிக்களத்து எம்பெருமான் ஒருகால் ஆழ்வாரை கைவிட்டார் என்றால், அதுவே காரணமாக கொண்டு தன்னுடைய உறவினர்களும் கைவிடுவார்கள் என்கிறார். இப்படி எம்பெருமானுக்கும், உறவினர்களுக்கும் ஆகாதே, தான் இருக்கும் இருப்பு, பலன் எதுவும் இல்லாமல் இருக்கிறது என்று சொல்கிறார்.  

எம்பெருமான் என்னை ஏற்றுக்கொள்ள வில்லை என்றாலும், திருமூழிக்களத்திலே அவன் உகந்த பாகவதர்களோடு கூடி வாழ்ந்த இனிமையினால் ஆழ்வாரை மறந்து இருக்கிறான் என்று அவன் கருதினாலும், அந்த அடியவர்களோடு, தானும் ஒருவனாகத் திருவுள்ளம் பற்ற ப்ராப்தி இல்லையோ என்று கேளுங்கள் என்கிறார்.

விசாலமான தண்ணீரில் இரையை தேடுகின்ற கொக்கு கூட்டங்களே, குருகு இனங்களே, குளிர்ந்த திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கின்ற, செந்தாமரை போன்ற திருக்கண்களும், திருக்கைகளும், திருவடிகளையும் சிவந்து கனிந்த திருவாயினையும் அந்த தாமரையின் இலை போன்ற திருமேனியை உடைய ஸ்வாமிகளை கண்டு இந்த அழகினை அனுபவிப்பதற்கு நாங்கள் தக்கவர்கள் இல்லையா என்று கேளுங்கள் என்கிறார்.

இந்த பாடலில், இரண்டில் ஒன்று கேட்டு சொல்லுங்கள் என்கிறார். அவன் இன்னும், இவள் வேண்டும் என்று இருக்கிறானா, அல்லது இவள் வேண்டாம் என்று இருக்கிறானா என்பதை அறுதியிட்டு சொல்லும்படி ஆழ்வார் கேட்கிறார். இவள் வேண்டும் என்று அவன் இருந்தால், உயிரை வருத்தியாவது பிழைத்து இருப்பாள் என்றும், இவள் வேண்டாம் என்றால் நாம் ஏதாவது ஒன்றுக்கு துணிவோம் என்றும் ஆழ்வார் சொல்கிறார். உபவாசத்தால் இளைத்து இருக்கும் இவளை, மிகுதியாக தண்ணீர் நிறைந்து இருக்கும் பொய்கையிலே, இரை தேடும் அளவுக்கு இருக்கின்ற தன்மையை சொல்கிறார்.

விரகதாபத்தால் தவிக்கின்ற தனக்கு, சிரமத்தை போக்கக்கூடியதான அந்த திருமூழிக் களத்தை அடைவது அரிது ஆகிறது என்கிறார். செக்கமலத்து அலர் போலும் கண், கை, கால், செம் கனி வாய் என்று சொல்லி,

  • முதல் தொடர்பு கொள்ளும் கண்,
  • அந்த நோக்குக்கு வீழ்ந்தாராய் அணைக்கும் கை,
  • அந்த இன்பம் பொங்கி எழுந்து கீழே விழுந்து வணங்கும் திருவடிகள்,
  • கீழே விழுந்தாரை நல் வார்த்தை சொல்ல ஆரம்பிக்கும் முன் வரும் புன்முறுவல்
  • அந்த கமலத்து இலை போன்ற திருமேனி என்று ஆழ்வார் சொல்கிறார்.

இப்படி அவன் புருஷர்களில் உத்தமன் என்றால், இவள் பெண்களுக்குள் உயர்ந்தவள் அன்றோ என்று சொல்லி, இது தகுமோ என்கிறாள்.

அழகிய மேகங்களே, திருமூழிக்களம் என்ற வளப்பமான நகரில் எழுந்து அருளி இருக்கின்ற, வடிவழகினை உடைய ஸ்வாமிகள் பக்கம், தீ வினையேன் ஆகிய நான் விடுகின்ற தூதாக சென்று, உம்முடைய திருமேனியை அவளுக்கு தந்து அருள்வீர் என்று சொன்னால், தன் திருமேனியின் ஒளியை போன்று இருக்கின்ற உங்கள் உடலின் ஒளியை போக்கி உங்களையும் தெளிந்த ஆகாயத்தில் இருந்து நீக்கி தண்டிப்பானோ என்று சொல்கிறாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.  எம்பெருமானுக்குத் திருமேனி அடிகள் என்ற ஒரு திருநாமம் சொல்கிறாள். வடிவழகையே நிரூபகமாகக் கொண்ட ஸர்வஸ்வாமி என்று பொருள்.  ஸ்வரூப குண சேஷ்டிதங்களினால் ஜகத்தைத் தோற்கக்கடிப்பது ஒரு அர்த்தம்; வடிவழகாலே உலகம் முழுவதும் தோற்கடித்து அடிமை கொள்வது அல்லது அனைவர்க்கும் தலைவர் என்று தோற்றுவிப்பது, இன்னொரு அர்த்தம்.

சுழல் மன்னர் சூழக்கதிர்போல் விளங்கி எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் சூழலைப் பெரிதுடைத்துச் சோதனன் என்று பெரியாழ்வார், கண்ணன் பாண்டவ தூதனாய், கௌரவ சபைக்கு எழுந்து அருளும் போது, துரியோதனன் உறுதி தடுமாறி, மரியாதை செய்ததை இங்கே குறிப்பிட்டு, பரமாத்மாவின் சோதி, பகைவர்க்கும் மனக் கவர்ச்சியாக அல்லவோ எம்பெருமானின் வடிவழகு இருப்பது என்கிறார்.

செழுநகர் என்று சொன்னது, பரமபதத்தை விட ஏற்றம் உள்ள தேசம் என்கிறார்.

எம்பெருமானுடைய திருமேனியை, ஸர்வ ஸாதாரணமானது என்று எண்ணி, அப்படிப்பட்ட திருமேனியை இழந்து, மேகங்களாகிய உங்கள் காலிலே விழ வேண்டும் படியான பாபத்தைப் பண்ணியதால் தீவினையேன் என்கிறாள்; பாகவதர்களின் திருவடிகளில் விழுவது நல்வினை ஆகும். பிறர்க்கு(பக்தர்களுக்காகவே) உரிய திருமேனியை அதனை விரும்புவார்களுக்கு தந்து அருளாமல் இருக்கலாமா என்கிறாள். காதலிக்கு ஸ்வரூபம், குணம் முதலியவற்றை விட, வடிவழகே விருப்பம் அன்றோ என்கிறாள்;

இப்படி வாக்கால் தூது செய்கின்ற உங்களுக்கு, முன்பு இல்லாதவற்றையும் கொடுத்து, தொன்று தொட்டு இருக்கின்றவை போக்கி, உங்களை ஆகாயத்தில் இருந்து போக்கி தண்டிப்பானோ என்கிறார். மேலான ஒப்புமையை அடைகிறான் என்ற பொருளும் கொள்ளலாம். ஆகாயத்தில் மட்டும் இருப்பதும் அன்றி, பரம ஆகாயத்தையும் தருவானோ என்ற பொருளில் வரும். உங்களுடைய தூது வார்த்தைகளால் உங்களுக்கும் எனக்கும் பயன் உண்டு என்று முடிப்பதாக கொள்ளலாம்.

தெளிவான ஆகாயத்தில் விரைவாக ஓடி, தீ வளைத்தார் போல கொல்லி வட்டம் போல், மின்னலை தேடி தோற்றுவித்து விளங்குகின்ற ஒளியோடு கூடிய மேகங்களே, தெளி விசும்பாகிய பரமபதத்தை போன்று, தீ வினையேன் ஆகிய என்னுடைய மனத்தில் எழுந்து அருளி இருக்கின்ற துளித்து ஒழுகின்ற தேன் பொருந்திய மயிர்முடி உடையவராகிய திருமூழிக்களத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஒளி பிழம்பான எம்பெருமானுக்கு என் தூது வார்த்தையை சொல்லுங்கள் என்கிறார்.

முகில்காள், குழல் அழகராகிய எம்பெருமானுக்கு என் தூது வார்த்தை சொல்லுங்கள் என்கிறார். சென்ற பாசுரத்தில் இருந்த ‘திருமேனி ஒளி அகற்றி’ போன்ற வார்த்தைகள் மேகங்களுக்கு அச்சத்தை தருவதாக இருந்ததால், அவை, தங்கள் வார்த்தையை எம்பெருமான் கேட்பானோ என்று அஞ்சி இருந்ததால் அதற்கு விடை இந்த பாசுரத்தில் சொல்கிறார். பரமபதத்தில் செய்கின்ற ஆதரத்தை (அருளை) என் பக்கம் செய்தவன் உங்கள் சொல்லை கேட்பான் என்கிறார்.

விசும்பு என்றால் பற்றுக்கோடு இல்லாதன என்று பொருள். குற்றம் இல்லாதவனாய், பற்றுக்கோடு இல்லாத ஆகாயத்தில், பூமியில் சஞ்சரிப்பது போன்று கடு நடையில் ஓடி என்று சொன்னது, இந்த வேகம் எல்லாம் தன் காரியத்திற்காக என்று இருக்கிறாள்.

அவன் வடிவுக்கு போலியாக அல்லவோ உள்ளது உங்கள் வடிவு என்கிறாள். மனதில் பிரகாசமாக இருப்பவன் நேரில் காண முடியாதவனாக இருக்கும்படி பாவத்தை செய்தவள் நான் என்கிறாள். மிகப் பெரிய காதலை உடையவராய் தானே வருவார் என்று சொல்லி, இப்போது தூது விடும் நிலையில் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்கிறாள்.

தூய சொற்களை பேசக்கூடிய வாயினை உடைய வண்டு கூட்டங்களே, ஒலித்துக் கொண்டு மலர்களில் உள்ள தேனை நுகர்வதற்கு தக்கவாறு சோலைகளால் சூழப்பட்ட திருமூழிக்களம் என்ற திவ்ய தேசத்தில், எழுந்து அருளி இருக்கின்ற, பெரிய பிராட்டியாரை தன்னுடைய திருமார்பில் வைத்து கொண்டு இருக்கின்ற எம்பெருமானிடத்தில் சென்று தூது வார்த்தைகளை சொல்வீர்கள் என்றால், சுடர் வளையல்கள் பற்றியும், கலையை பற்றியும் சொல்லுங்கள் என்கிறார்.

உங்கள் வார்த்தைகள் விலை செல்லும்படி பிராட்டி சன்னதியில் சொல்லுங்கள் என்கிறார். அவன் விரும்பாவிட்டாலும், உங்கள் பேச்சு இனிமையாக இருக்க வேண்டும் என்கிறார். இராமாயணத்தில் (கிஷ்கிந்தா காண்டம் 5.18)ல் சுக்ரீவன் சொன்னது போல வார்த்தைகள் இனிமையாக இருக்க வேண்டும் என்கிறார். சுக்ரீவன் இராமனிடத்தில், “நீங்கள் எனக்கு அன்பான நண்பர். உன் துக்கம் என் துக்கம், உன் இன்பம் என் இன்பம். நாம் ஒன்றுதான்’ என்று ராமனிடம் சுக்ரீவன் கூற, அவன் உள்ளம் மகிழ்ச்சியில் பொங்கி வழிந்ததது போல பேச வேண்டும் என்கிறார்.

“த்வஂ வயஸ்யோஸி மே ஹரித்யோ ஹ்யேகஂ துஃகஂ ஸுகஂ ச நௌ৷৷ * ஸுக்ரீவோ ராகவஂ வாக்யமித்யுவாச ப்ரஹரிஷ்டவத். – (கிஷ்கிந்தா 5.18)

அதே போல, யுத்த காண்டம், (16-50) ல் கூறியது போல, ‘வளமான கலாச்சாரம் கொண்ட ஹனுமான் இந்த மென்மையான, இனிமையான மற்றும் அர்த்தமுள்ள வார்த்தைகளை சுருக்கமாக கூறுவதும் சொல்லப் படுகிறது.

அத ஸம்ஸ்கார ஸம்பந்நோஹநுமாந் ஸசிவோத்தமः । * உவாசவசநம்ஶ் லக்ஷ்ண மர்தவந் மதுரம்லகு ।யுத்த காண்டம் 17.50।।

பூக்களில் இருக்கும் மதுவை குடிக்கும் வண்டுகள் போல அன்றி, பூக்கள் மலரும் போதே குடிக்கும் வண்டுகள் என்கிறார். ததிமுகன் போன்றவர் காவலில் இல்லை, ஆகவே குடிக்கலாம், அப்படி குடித்தால் நித்யசூரிகள் இருக்கும் இடம் சென்று அவர்களுடன் தேன் உண்ணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறார். தூது வார்த்தை சொல்லும்போது, என்னுடைய வளையும், களையும் சீர் கேடு அடைந்ததை சொல்லுங்கள் என்கிறார். அப்படி அறிவித்தால் அவன் வருதல் தப்பாது என்கிறாள்.

படர்ந்த சோலைகளில் தங்கி இருக்கின்ற குருகினங்காள், ஒளி வலையலையும் கலையும் கொண்டு, என்னை விட்டு நீங்கிய தாமரை மலர் போன்ற திருகண்களை உடைய, பரந்த புகழை உடையவனும், திருமூழிகளத்தில் எழுந்து அருளி இருக்கின்றவனும், ஒளி பொருந்திய பவளம் போன்ற திரு வாயினை உடையவனும் ஆன எம்பெருமானை கண்டு, ஒப்பற்றதான ஒரு தூய வார்த்தையை ஒரு நாள் அவனிடம் சொல்லுங்கள் என்கிறார்.

சில குருகு இனங்களை அழைத்து, ‘சிலரோடு கலந்து, அவர்களை துறந்து அதுவே புகழாக இருக்குமோ” என்று கேளுங்கள் என்கிறார். தனக்கு பயன் உள்ள பொருட்களை (வளை மற்றும் கலை ) எடுத்து கொண்டு, என்னை விட்டு சென்றான் என்கிறாள். கைக்கு அடங்கினதையும், மடிச்சரக்கையும் கொண்டு சென்றான் என்கிறாள். ஆதரித்து வந்து கலந்தவன், என்னை விட்டு செல்லும்படியான பாவத்தை செய்து உள்ளேன் என்கிறாள்.

தோள் துறந்த என்று சொல்வதன் மூலம், அந்த காதல் எல்லாம் எடுத்து கொண்டு அவன் தோளுக்கு அருகில் போக விடவில்லை என்கிறாள். தான் பட்டினியினால் மலிந்து இருக்க குருகு இனங்கள் இப்படி களித்து இருப்பது தகுமா என்கிறாள். இவள் ஜனக வம்சத்தில் வந்தவளாகவும், பறவைகளை எம்பெருமானிடத்தில் தூது சென்று எம்பெருமானிடம் சேர்ப்பாரை போன்ற ஆசார்யர்களை போலவும் எடுத்து கொள்ளலாம்.

பெரிய சோலையில் இரையை தேடி உண்டு, மனத்திற்கு இன்பம் பொருந்தும் படியாக தங்கி இருக்கின்ற வண்டுகாள், தும்பிகாள், கனம் மிகுந்த, வலிமை மிகுந்த மதில்கள் சூழ்ந்து உள்ள, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற, உலர் தானியத்திற்கு ஏற்ற நிலம், பொதுவாக மலைகளில்.இருக்கின்ற காயாம் பூவை போன்ற திருமேனியையும், திருத்துழாய் சூடிய திருமுடியையும் உடைய எம்பெருமானை கண்டு எனக்காக ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்கிறார்.

‘நீங்கள் ஒரு வார்த்தை சொல்லாவிடில், உயிர் போகும் நிலையில் உள்ளது’ என்கிறாள்; விரகத்தால் வரும் கிலேசம் வராதபடி சேர்வது என்றும், பிரிவிலும் துன்பம் வராதபடி சேர்வது என்றும் சொல்வது, ‘மனதிற்கு இன்பம் பட’ என்பதில் தெரிகிறது. இயற்கையான வடிவழகு, காயா நிறத்திருமேனி; அதற்கு மேல் ஒப்பனை அழகு திருத்துழாய் மாலை. அப்படிபட்ட வடிவழகையும், ஒப்பனை அழகையும் அனுபவித்து பிரிந்த எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்கிறார்.

நிறைந்த நீர் நிலையில் தங்கி இருக்கின்ற இளம் குருகே, அழகிய திருதுழாயை திருமுடியில் அணிந்தவற்கு, அழகிய சக்கரத்தை திருக்கரங்களில் உடையவற்கு, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருப்பவற்கு, ஆபரணத்தை அணிந்த முலைகள் பசலை நிறத்தை அடையவும், மலர் போன்ற இரண்டு கண்களிலும் நீர் நிறைந்து இருக்கும்படியாகவும் தாம் தம்மை கொண்டு நீங்குதல் தகுதி அன்று, என்று கூறுங்கள் என்கிறார்.

நிறைந்த நீரில் தரையில் நடப்பாரை போல நடக்க வல்ல இளம் குருகே என்கிறார், நீ பறந்து செல்லும் வல்லமை பெற்றது தனக்கு உதவுவதற்கே என்கிறார்.

பூந்துழாய் முடியார்க்கு, பொன் ஆழி கையாருக்கு என்பதால் அவனது வடிவழகு சொல்லப்பட்டது. திருமூழிக்களத்தாருக்கு என்று சொல்வதால் அவன் குணம் சொல்லப்பட்டது. அவனை, அவன் வடிவை, பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டால், பிழையார் என்று சொல்கிறார். ஆழ்வார் பிரிந்த நிலையை, இராமனை பிரிந்த தசரதன் இதே போல, ராமாயணம், அயோத்தியா காண்டத்தில் (2.59.30) புலம்புவது மேற்கோளாக காட்டப் படுகிறது.

அதோ நுகிம் துக்க தரம் ஸ : அஹம் இக்ஷ்வாகு நந்தநம் * இமாம் அவஸ்த்தாம் ஆபந்நோ : ந இஹ பஷ்யாமி ராகவம்৷৷ (இந்த நிலையை அடைந்தும் இன்னும் ராமனைக் காண முடியாமல் தவிக்கும் எனக்கு இதைவிடப் பெரிய வருத்தம் வேறென்ன இருக்க முடியும்?)

எம்பெருமானின் திருமேனி பக்தர்களுக்காகவே என்றும், தனக்காகவே தன்னை கொள்ள வேண்டும் என்றும் பாடுகிறார். காதலுக்கும் மிருது தன்மைக்கும் சேராததோடு, அருளே இல்லாதவர் செய்யும் செயல் என்றும் பெண் கொலைக்கு அஞ்சாதவர் செய்யுமவற்றை செய்கிறீர்கள் என்றும் சொல்கிறார்.

மிக்க நீர் வளத்தை உடைய பொய்கையிலே இரையை தேடி புசித்து இனிமை கரை புரளும் படி கலக்கின்ற மெல்லிய நடையை உடைய அன்னங்காள், சரீரம் மிக மிக மெலிந்து மேலே உள்ள புடவையும் கட்டுக்குலைந்து என்னுடைய அகவாயில் சொரூபம் குலைவதற்கு முன்னே, திருமூழிக்களத்தில் எழுந்து அருளி இருக்கின்ற எம்பெருமானை கண்டு இது தக்கது அல்ல என்று சொல்லுங்கள் என்கிறாள். மேனி மிக மிக மெலிந்து மேகலையும் ஈடு அழிந்தது; இனி அகமேனி குலைவதற்கு முன் திருமூழிக்களத்தாருக்கு சொல்லுங்கள் என்கிறாள்.

சில அன்னங்களை குறித்து தான் முடிவதற்கு முன்பு அவனிடம் தெரிவியுங்கள் என்கிறார்.

எம்பெருமானின் உண்மை தன்மை (நிரூபகம்) அருள் புரிவது. அவனுடைய உண்மை தன்மை அழிவது என்பது தகவு இல்லை என்ற சொல்ல சொல்கிறார். இவர்கள் சேர்ந்து இருப்பது இன்பம் கரை புரளும்படி மிக அதிகமாக இருப்பது, என்றும், இவர்கள் பிரியாவிட்டால் இருவரும் அழியும்படி ஆயிற்று என்றும் சொல்கிறார்.

திருமூழிக்களத்தில் நீங்காமல் எழுந்து அருளி இருக்கின்ற ஒளிப்பிழம்பான எம்பெருமானை, அவனை பிரிந்து தரிக்க மாட்டாத, அழகிய மழலை பொருந்திய கிளியின் மொழி போன்ற மொழி பேசுகின்ற ஒரு பெண் கூறுகின்ற கூற்றிலே வைத்து, குற்றம் இல்லாத வளம் மிகுந்த திருகுருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த அழிவு இல்லாத ஆயிரம் திருபாசுரங்களில் இந்த பத்து திரு பாசுரங்களும் பகவானை பிரிந்து இருத்தல் ஆகின்ற நோயினை அறுக்கும் என்று எடுத்து உரைக்கிறார்.

இந்த திருவாய்மொழியை கற்பவர் பிரிவிற்கு காரணமான பிறப்பாகிய நோயினை இது தானே அறுத்து கொடுக்கும் என்கிறார். ஒண் சுடர் என்றது பின்னானார் வணங்கும் சோதி என்று சொல்வது போல என்கிறார். திருநாட்டில் விளங்கப்பெறாத திருக்குணங்களும் இருட்டறையில் விளக்குப்போலே பிரகாசிப்பது இங்கே ஆதலால் ஒண்சுடரை என்றது.

அணிமழலைக் கிளிமொழியாள் என்றது ஆழ்வார் தம்மை அன்று. எம்பெருமானைப் பிரிவில் தரிக்கமாட்டாத சீதா பிராட்டியை ஆகும். ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹம் அபி ராகவ * முஹூர்தம் அபி ஜீவா வோ ஜலாந் மத்ஸ்யாவி நோத்தரிதௌ (இராமாயணம் அயோத்யா 53.31) என்ற மேற்கோள், ஸ்ரீராமா, உன்னிடம் இருந்து பிரிக்க படுகின்ற சீதை பிழைக்க மாட்டாள் எனப்படுபவள் அன்றோ என்பதை சொல்வதற்காக என்று கொள்ளலாம்.

இந்த பாசுரத்தை கேட்டவற்கு அக்காலத்தை போல எக்காலத்திலும் இன்பம் பிறக்கும்படி ஆயிற்று என்கிறார். பகவானை பிரிதல் ஆகிற நோயை அறுக்கும் என்றும், கலந்து பிரிந்து துக்க பட வேண்டாம் என்றும் பிரிவு இல்லாத தேசத்தில் புக பெறுவர் என்றும் சொல்கிறார்.

பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே, * முனியே திருமூழிக் களத்து விளக்கே, * இனியாய் தொண்டரோம் பருகின இன் அமுதாய * கனியே உன்னைக் கண்டு * கொண்டு உய்ந்து ஓழிந்தேனே!

பனி அதிகம் உள்ள, திருப்பிரிதியில் எழுந்து அருளி இருக்கின்ற, பவளங்கள் திரண்டு அழகாக இருப்பது போல, அடியார்களுக்கு நன்மை செய்வதையே நினைத்து கொண்டு இருப்பவனே, திருமூழிக்களத்தில் விளக்கு போல விளங்குபவனே, பரம போக்கியமானவனே, தொண்டர்கள் பருகுவதற்கு இனிமையானவனே, கனியே உன்னை சேவித்து உஜ்ஜீவிக்க பெற்றேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான், * என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்ன அறிவன ஏழையேன், உலகம் ஏத்தும் * தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபால தாயினாய் இமையோர்க்கு என்றும் முன்னானாய் *பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.

எம்பெருமானே! பலவழிகளாலும் உன்னைச் சொல்லிக் கதறுவதை தவிர வேறு ஒன்றும் நான் அறியேன் என்று ஆழ்வார் சொல்கிறார்.

தெற்கே, உலகம் முழுவதும் துதிக்கத்தக்க திருமாலிருஞ்சோலை மலையில் நின்ற யானை போன்றவனே! வடக்கே திருவேங்கடத்தில் நின்ற யானை போன்றவனே! மேற்கில் திருவரங்கம் கோயிலில் திருக்கண்வளர்ந்தருளுகிற யானை போன்றவனே! கிழக்கில் திருக்கண்ணபுரத்தில் மதயானை போன்றவனே! எக்காலத்திலும் நித்யசூரிகள் கண்ணால் கண்டு அனுபவிக்கலாம்படி அவர்கள் முன்னால் நிற்பவனே, திருஅவதாரங்கள் காலத்திற்கு பின்னால் பிறந்தவர்கள் ஆச்சர்யப்படும் வகையில் ஜோதியாக திருமூழிக்களத்தில் உறைபவனே ! முழுமுதற் கடவுளே! பொன் போன்றவனே! ஏழு லோகங்களையும் காத்து அருள்வதால் வந்த புகழுடையவனே! இகழ்வையே வடிவாக உடைய தொண்டனான அறிவிலியான நான், என்னுடைய யானையே! என்னுடைய யானையே!, என்று சொல்லுவதை தவிர வேறு என்னவென்று சொல்வது ? என்கிறார்.

பொன்னானது தன்னைப் பெற்றவர்களையும் பெற விரும்புவர்களையும் இரவும் பகலும் கண் உறங்க விடாது. எம்பெருமானும் அப்படியே; காண்பதற்கு முன்பு முக்தி வேண்டுவர்களை உறங்க விட மாட்டான்; கண்டபின்பும் நித்ய முக்தர்களை கண் உறங்க விட மாட்டான்.

பொன்னானது தன்னை இழந்தவனைக் கதறிக் கதறி அழச் செய்யும். எம்பெருமானும் அப்படியே: ஸ்ரீராமபிரானை இழந்த பரதன் சபையில் புரண்டு கதறி அழுதது ஸ்ரீ ராமாயணத்தில் பிரசித்தம். இன்னும் பல ஆழ்வார்களின் பாடல்களும் உதாரணமாக தரலாம்.

பொன்னானது தன்னையுடையவனை கர்வம் கொண்டு பெருமையுடன் பேச செய்யும். எம்பெருமானும் அப்படியே; “இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிரே’ என்று எம்பெருமானை உடையவர்கள் செருக்குடன் பேசுபவர்கள் ஆயிற்றே.

ஏழுலகங்களையும் ஆளிட்டு ரக்ஷிக்கை என்று இல்லாமல், தானே முன்னின்று ரக்ஷிப்பதனால் வந்த புகழ்படைத்தவனே! காத்தல் தொழிலைத் தனக்கு ஒரு அணிகலனாகப் பூண்டு இருப்பவனே என்கிறார். ஸ்ரீவிபீஷணாழ்வான் கடற்கரையிலே வந்து சரண் புகுந்த போது ஸுக்ரீவமஹாராஜர் முதலானார் இவனை ரக்ஷிக்கக்கூடாது என்று தடை செய்த போதும் ரக்ஷித்தே தீரும்படியான விரதம் பூண்டவன் எம்பெருமான் என்கிறார்.

பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்! என்று சொன்னது, திருமூழிக்களம் போன்ற எம்பெருமான் உகந்து அருளிய அர்ச்சாவதார தேசங்கள் என்று எடுத்து கொள்ளலாம். பரத்வத்திலும் வ்யூகத்திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்வத்திலும் அனுபவிக்க பெறாதவர்கள் இங்கு பின்னானார் என்று கூறப்படுகின்றனர். அப்படிபட்டவர்களுக்காக திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்குமவனே! என்று சொல்கிறார்.

என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம் * முன்னவனை மூழிக் களத்து விளக்கினை, 

தேவாதிராஜனாய், திருமூழிக்களத்தில் விளங்குபவனாய் இருப்பவனை இங்கே குறிப்பிடுகிறார்.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

திருமாலை 36 – மழைக்கு அன்று

Please click here to view the English Version, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடிஆழ்வார்   எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார்,  அடுத்த  பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் எம்பெருமான் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாக கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளை பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.

எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.

ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:

  • 25வது பாடலில்  (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும் தகுதி முதல் எல்லாவற்றையும் அருள வேண்டும் என வேண்டுகிறார்.
  • அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்று ஆழ்வார் சொல்வதாக அமைந்த போதெல்லாம் போது கொண்டு ( 26) பாசுரம்.
  • இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், நல்ல நெஞ்சத்தோடு செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்று குரங்குகள் மலையை நூக்க (27) வது பாசுரத்தில் சொல்கிறார்.
  • உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்று ஆழ்வார் வருந்துகிறார்.
  • ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தங்கள் இல்லை என்று ஆழ்வார் மறுக்கிறார்.

அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.

  • தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்வது மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடல்.
  • தான், தவம் செய்பவர்கள் கூட்டத்திலும், நல்லது செய்ய பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, தன்னால் சொந்தங்களுக்கு ஒரு பயனும் இல்லை, கூடி இருந்த பெண்களுக்கும் கள்வனாக மாறி தன்னுடைய இந்த பிறவி வீணானதை நினைத்து தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் வருந்துகிறார்.
  • எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக, மூடனாக, எம்பெருமான் முன் வந்து நின்றதை ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் தன்னுடைய மூடத்தனம் சொல்கிறார்.
  • தம்முடைய தாழ்வுகளைச் சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாக ஆழ்வார் மெய் எல்லாம் போக விட்டு என்ற 33வது பாடலில் சொல்கிறார்.
  • உள்ளத்தே உறையும் மாலை என்ற 34 வது பாடலில், எம்பெருமான் எல்லோருடைய நெஞ்சத்தில் இருந்து, எல்லாவற்றையும் அறிகின்றான் என்ற அவனது குணத்தை புகழும்போது, அவனுக்கு அடிமை செய்பவன் போல தான் போட்ட, கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக நினைக்கிறார்.

ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், அவரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.

இந்த பகுதியின் முதல் பாசுரமான ‘தாவி அன்று உலகம் ‘ (35) , என்ற பாடலில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், என்று ஆழ்வார் கூறுகிறார்.

இனி, அடுத்த பாசுரம், நன்றி.

பாசுரம் 36

மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே மதுர வாறே * உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு * உழைக்கின்றேற் கென்னை நோக்கா தொழிவதே உன்னை யன்றே*அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே. (திருமாலை 36)

இந்திரன் பசிக்கோபத்தாலே ஏழு நாள் விடாமல் மழை பெய்வித்த அந்த காலத்திலே பிருந்தாவனத்தில் பசு, கன்று மற்றும் அங்குள்ள அனைவரும் மழையினால் கஷ்டப் படுவதற்கு முன், மழையைத் தடுப்பதற்காக கோவர்த்தன மலையை தன்னுடைய திருக்கரத்தில் ஒரு குடையாக ஏந்திய பலம் பொருந்திய இளைஞனான எம்பெருமானை, இனிய ஆறுபோல், எல்லார்க்கும் விருப்பங்களையும் தீர்ப்பவனான எம்பெருமானை, மான் குட்டியின் விழிபோன்ற விழியையுடைய மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருக்கிறாரே, அந்த முழுமுதற் கடவுளை , அரங்கமா நகருளானை நோக்கியன்றோ தான் கூப்பிடுகிறேன் என்று ஆழ்வார் சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

சென்ற பாட்டில் ‘அணுகத்தகாதவன்’ என்று ஆழ்வார் விலக முடியாதபடி தன்னுடைய நீர்மையை (எளிமையை ) காட்டி, எம்பெருமான் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அப்படி சேர்த்துக் கொண்டு பின்பு, எம்பெருமானை அடைய வேண்டும் என்ற அவா, ஆழ்வாருக்கு அதிகமாக, அப்படி அவா கொண்டவர்களை எம்பெருமான் அழைத்து செல்லும் பரமபதத்திற்கு தன்னையும் உடனே கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைபட்டார். ஆனால் எம்பெருமான் ஆழ்வாருக்கு அஜீர்ணம் தீர்ந்து நன்றாக பசித்த பின், முழுமையாக உண்டு களிப்பது போல ஆழவாரும் தன்னை நன்றாக, முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாரை காக்க வைக்க, ஆழ்வாரோ, விரோதி விஷயங்களை கண்டு பயந்தவராய், பெரியபெருமாள் நிம்மதியாக கண் வளரந்தருள முடியாதபடி, எல்லோரும் நீராய் உருகும்படி பெரும் குரலிட்டு கூப்பிடுகிறார்.

இனி சற்று விளக்கமாக,

மழைக்கு

ஆழ்வார் கோஷ்டியில் ‘மழை ‘என்று குறிப்பிட்டால் அது எம்பெருமான் கோவர்த்தன மலையை தூக்கி கல் மழையில் இருந்து அனைவரையும் காப்பாற்றிய இந்திரனின் கல் மழையையே குறிக்கும். ஆனை என்று பொதுவாக சொன்னாலும் அது கஜேந்திர ஆழ்வானையே குறிப்பது போல் இதுவும் ஒன்று. ஆயர்கள், இந்திரனால் வந்த கல்மழை ஆபத்தினை தீர்த்த எம்பெருமானை தஞ்சம் அடைந்தது போல் தானும் தன்னுடைய சம்சார துக்கங்களில் இருந்து விடுபட எம்பெருமானிடம் தஞ்சம் புகுகிறார். பசியினால் வாடுபவர்கள் செல்வந்தர்களை பார்த்து யாசிப்பது போல், ஆபத்தினை போக்கும் எம்பெருமானை நோக்கி, தன்னுடைய ஆபத்தினை போக்குமாறு வேண்டுகிறார்.

அன்று ஆயர்களுக்கும், பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினைப் போன்றதே இன்று ஆழ்வாருக்கு சம்சாரத்தினால் ஏற்பட்ட ஆபத்து, அதனால் தன்னையும் காக்க வேண்டும் என்கிறார்.

கல்மழையினால் ஏற்பட்ட ஆபத்தினால் பாதிக்கபட்டவர்களை மட்டும் தான் எம்பெருமான் காப்பாற்றுவாரா என்றும், துன்ப மழையில் கஷ்டப்படும் எல்லோரையும் காப்பாற்ற கூடாதா என்றும், ஒரு ஊராக உள்ள எல்லோரும் துன்பப்பட்டால் தான் காப்பாற்றுவாரா என்றும், ஒரு ஊர் பட்ட துன்பங்களை தான் ஒருவனே படுவதாகவும் தன்னை காக்க கூடாதா என்றும் ஆழ்வார் கேட்கிறார்.

வரை

இந்திரன் ஏவ, மேக கூட்டங்கள், திரண்டு மழையை தொடர்ந்து கொட்ட, பசிக் கோபத்தாலே இப்படி மழை பெய்விக்கிறான் என்று உணர்ந்த எம்பெருமான், சக்ரத்தாழ்வானை கூப்பிடக்கூட நேரம் இல்லாமல், உடனே கையில் கிடைக்கக்கூடிய மலையை கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இதனால் எம்பெருமானுக்கு இந்த பொருளை கொண்டுதான் இந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எந்த நியதியும் இல்லை என்பது விளங்கும். ஆகையால் ஆழ்வாரை ரக்ஷிப்பதற்கும் எந்த கருவியும் இல்லை என்ற குறையும் எம்பெருமான் சொல்லமுடியாது என்பது ஆழ்வாரின் எதிர்பார்ப்பு.

பசுக்களுக்கு மழையினால் துன்பம் ஏற்படுவதற்கு முன்னரே எம்பெருமான் காத்தான் என்பதை தெரிவிக்கவே முன்பு என்று கூறுகிறார். ஆயர்கள் முதலானோர் எம்பெருமானை தவிர வேறு ஒருவரை சார்ந்து இருப்பவர் இல்லாததால் அவர்களுக்கு ஆபத்து வரும் முன்னரே காப்பாற்றுகிறான் என்றும் ஆழ்வார் கூறுகிறார். இங்கு உரையாசிரியர் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தில் இருந்து 49வது ஸ்லோகத்தை எடுத்துக்காட்டுகிறார். அந்த ஸ்லோகத்தின்படி, ஞான, சக்தியாதி குணங்கள் நிறைந்தவரும், அடியவர்களை கை விடாதவனும் ஆன எம்பெருமானிடம், , விவேகம் இல்லாத மேகங்களால் இருள் அடைந்த திசைகள் உடைய இடத்தில், இடைவிடாமல் பொழிவதால், பலவிதமாக இன்னல்களை கொடுப்பதும் ஆகிய சம்சாரமாகிய இருள் மழையில் இருந்து வழி தவறிய அடியேனை காத்து அருள்வாயாக என்று ஆளவந்தார் வேண்டுகிறார். இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், தான் இப்படி சம்சார துன்ப மழையில் நனைந்து வருந்தி அழைத்த போதும், காப்பாற்ற வரவில்லையே என்று கதறுகிறார்.

ஏந்தும்

ஏழு வயதில் எளிதாக ஒரு பூ பந்தை தூக்குவது போல் தூக்குகிறார். ஆழ்வார் தன்னை காப்பாற்றுவதால் எம்பெருமானுக்கு ஒரு பாரமாக இருக்குமோ என்ற காரணத்தினால் தான் இன்னும் காப்பாற்ற படாமல் இருக்கிறோமோ என்று கவலை படுகிறார். நம்மாழ்வார் திருவிருத்தம் 21 பாடலில் சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி என்று கூறியதைப்போல், நித்ய சூரிகள் இவனுக்கு சாற்றுவதற்கு மாலைகளை ஏந்தி இருப்பது போல், எம்பெருமான் அடியவர்களை காப்பாற்றுவதற்காக ஒரு மலை ஏந்தி நிற்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார்.

மைந்தனே

மலையை எளிதாக எடுப்பதற்கு தேவையான வலிமையை, மிடுக்கை, மைந்து என்ற சொல் காட்டுகிறது. மைந்தன் என்பது பாலகன் என்றும் தன்னை அண்டியவர்களை காப்பாற்றியதால் வயது குறைந்தவன் போல் ஆனான் என்றும் கொள்ளலாம். மனிதர்கள் தங்களுக்கு பிரியமான உணவு கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்து வயது குறைந்தது போல் தோன்றுவது போல், எம்பெருமானுக்கு அடியார்களை ரக்ஷிப்பது மிகவும் பிரியமான ஒன்று ஆகும். அதனால் அவன் வயது குறைந்து இளையவன் ஆகிறான். இப்படி ஆழ்வாரான தன்னை காப்பது, எம்பெருமானுக்கு விருப்பானான ஒன்றாக இருந்தும், தான் இப்படி கூப்பிட்டும் வராமல் இருக்கிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

மதுரவாரே

இனிமையான வடிவை எடுத்து நதியைப் போன்றவனே என்கிறார். முன்பு சொன்னது போல் காப்பவனாகவே இல்லாமல், அடித்து விழுங்குபவன் ஆனாலும் அவனை விட்டு செல்ல முடியாதபடி அவனுடைய வடிவழகு இருக்கிறது என்று ஆழ்வார் கூறுகிறார். மதுர கடலே என்று சொல்லாமல் மதுர ஆறே என்று ஆழ்வார் சொல்வதற்கு காரணம், கடல் நீர் உப்பு கலந்தது, குடிப்பதற்கு முடியாது, கடல், ஆறு போல் இருக்கும் இடத்தைத்தேடி ஓடி வராது; ஆறானது வெள்ளம் வந்தால், அணையை கடந்து அடித்து கொண்டு வருவது போல், ஆழ்வார் தன்னை பாவி என்று சொல்லி விலக நினைத்த போது, ஆழ்வார் விட்டு செல்ல முடியாமல் அவரை அணைத்து கொண்டதை சொல்கிறார். ஆறு பயன்படுத்துபவன் இருக்கும் இடம் தேடி செல்வது போல், இந்த மதுர ஆறும் பரமபதத்தில் தோன்றி, இடைச்சேரியில் இருக்கும் ஆழ்வாரை தேடி வருகிறது என்கிறார்.

உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற்கு

இந்திரனால் பொழிந்த கல் மழையில் இருந்து வந்த ஆபத்தில் இருந்து அன்று காப்பாற்றியதாகவும் இன்று யாரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் ஆக அதற்கு ஆழ்வார் விடை தருகிறார். மான் குட்டியின் கண் போன்ற கண் அழகை உடைய பெண்களின் பார்வை ஆகின்ற வலையில் அகப்பட்டு துன்பப் படுகிறேன் என்கிறார். உள்ளே அன்பு ஒன்றும் இல்லாது இருந்தாலும், எல்லாம் இவனே என்பது போல், இவனை விட்டால் வேறு கதி இல்லாதவர்கள் போலவும், வெளி வேஷம் போட்டு, அழகிய மான் குட்டியின் பார்வையாகிய வலையில் சிக்கிய ஆழ்வாரை என்பதை, உழை என்பதால் மானையும், உழைக்கன்று என்பதால் மான் குட்டியையும் சொல்கிறார். வலையானது அகப்படுத்திக் கொள்வதாய், தப்பி போக முடியாததாக உள்ளதாய், அகப்பட்டவர்க்கு எந்த பலனும் தராததாய் இருப்பது போல் இந்த பெண்களின் கண் வலை, ஆழ்வார் எம்பெருமானை பற்றி ஈடுபட முடியாததாய், இனிமை இல்லாததாய், அதில் இருந்து தப்பி போவது அரிதாவதாக உள்ளதாய் இருக்கிறது என்கிறார்.

எனக்கு

கல் மழையின் போது காப்பாற்றப்பட்ட பசுக்களை போல் துன்பப்பட்டேன் என்று தெரிந்தும், இத்தகைய துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டியவன் எம்பெருமான் மட்டுமே என்பதையும் உணர்ந்தும், நீயே என்னை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியும் என்ற ‘என்னை‘ என்று ஆழ்வார் கூறுகிறார்.

நோக்காது ஓழிவதே

கல்லால் வந்த ஆபத்திற்கு கல்லை எடுத்து காப்பாற்றியது போல், கண்ணால் வந்த ஆபத்தை கண்ணால் அருள் புரிந்து காப்பாற்ற வேண்டாமா என்று ஆழ்வார் கேட்பது போல் உள்ளது. என்னை காப்பாற்றும் போது மலையை தூக்கி காப்பாற்றும் சிரமம் இருக்காது. ஆழ்வாரின் நெஞ்சம் குளிரும்படி நோக்கினால் போதும் என்று சொல்கிறார். நோக்க வேண்டும் என்று பிரார்த்திக்காமல், நோக்காமல் இருக்கிறாயே என்று கேள்வி கேட்பதன் காரணம், தனக்கும் அவனுக்கும் உள்ள உறவை எண்ணியும், அவனது உறுதியான எளிமையை மனதில் கொண்டும் இருக்கலாம்.

இப்போதும் எம்பெருமான் வராததின் காரணம், உடனே கொடுத்து விட்டால், தான் ஒரு அயோக்கியன் என்பதை மீண்டும் சொல்லி, ஆழ்வார் தன்னை விட்டு விலகி விடுவார் என்ற எண்ணத்தினால் தான். ஆகவே அஜீரணம் தீர்ந்து பசி ஏற்பட்ட நன்றாக உண்டு அனுபவிப்பது போல, பின்னர் அனுபவம் கொடுத்து ஆழ்வார் தம்மை நன்றாக அனுபவிக்கட்டும் என்று எம்பெருமான் இருந்தான். நோய் வாய்ப்பட்ட குழந்தை மீண்டும் பசி என்று அழைப்பது, எப்படி தாய்க்கு இன்பம் கொடுக்குமோ அதே போல் எம்பெருமானும் ஆழ்வாரின் இது பற்றிய குரல் கேட்க, காத்து கிடந்தான்.

உன்னை அன்றே அழைக்கின்றேன்

ஆழ்வார், தான் யாராவது தாழ்ந்தவர் முன்னே நின்று தன்னை காப்பாற்று என்று கதறுகின்றேனா, காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார் என்று காத்து இருக்கும் பெரியபெருமாள் முன்னே தானே இருக்கிறேன், வேறு வேலை இருக்கிறது என்று சொல்ல முடியாதபடி இருக்கும் எம்பெருமானிடத்தில் தானே கேட்கிறேன் என்கிறார். ஆழ்வார் அழைத்தவுடன் வர வேண்டிய நிர்பந்தம் என்ன என்று, எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வாரின் சமாதானம் ஆதிமூர்த்தி என்ற அடுத்த பதத்தில் கொடுக்கிறார்.

ஆதிமூர்த்தி

பிரளய காலத்தில் எல்லா ஜீவாத்மாக்களையும் ஒன்றாக தன்னுடைய திருவயிற்றில் வைத்து காப்பாற்றி பின் சங்கல்பத்தால் எல்லாவற்றையும் படைத்த எம்பெருமான் தானே காப்பாற்ற வேண்டும் என்கிறார். குழந்தையை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோருக்கு தானே உள்ளது, அழும் குழந்தை அம்மா என்று தானே கூப்பிடும் என்று ஆழ்வார் உரைக்கிறார்.

அரங்க மா நகருளானே

ஆழ்வாரை ரக்ஷிக்க பழைய கிணறுதனை தூர் வாருவது போல், உலகை படைத்த வரலாற்றை எல்லாம் சொல்ல வேண்டுமோ, பரமபதத்தில் இருந்து இந்த திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கின்ற காரணம் போதாதா என்று கேட்கிறார். இங்கே பள்ளி கொண்டு இருப்பதற்கு, ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது இல்லாமல் வேறு என்ன பலன் உள்ளது என்று பெரிய பெருமாளை கேட்கிறார். எல்லோரும் அவரவர் பாவ புண்ணியங்களை மட்டும் பொறுத்து உஜ்ஜீவனம் கொடுப்பதனால், பரமபதத்தில் இருந்தே செய்து இருக்கலாமே இங்கே வந்து பள்ளி கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லையே என்கிறார்.

அரங்க மா நகருளானே உன்னை அன்றே அழைக்கின்றேன் என்று சேர்த்து பார்த்தால், எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்து அழைக்க வல்லமை பெற்றவன் இல்லை என்றும், தனக்கு ருசி விளைவிக்க இங்கு, திருவரங்கத்தில், வந்து இருந்த பின், ருசி விளைந்த பின், தான் அதை இழப்பதோ என்கிறார். இப்படி கூப்பிட்ட பின்பும் எம்பெருமான் அருள் பாலிக்காமல் இருப்பது ஏன் என்றால், எம்பெருமானுக்கு பரமபதத்தில் உள்ளவர்கள் கூப்பிடுவதை தான் கேட்டு பழக்கம். சம்சாரிகள் குரல் உலக விஷயங்களுக்காகவே மட்டுமே எம்பெருமானை அழைப்பது என்று இது வரையில் இருந்தன. ஆனால் ஆழ்வார் ஒருவர் மட்டுமே, எம்பெருமான் முயற்சி செய்து தேடி பெற்றது, அதனால் இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் கொண்டதாக சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

மீண்டும் இன்னொரு பாடலின் அனுபவத்தில் சந்திக்கலாம், நன்றி.

RSS
Follow by Email