A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரிசெய்து ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கிய போது, நாம் புதிதாக எம்பெருமானின் பெருமைகளை தேடி பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
பிறகு, தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
ஒரு நல்ல குணமும் இல்லை என்று, 25வது பாடலில் (குளித்து மூன்று அனலை) ஆழ்வார் தனக்கு கர்ம, ஞான, பக்தி யோகங்கள் செய்வதற்கான தகுதி இல்லை என்றும், அர்ச்சனை, துதி போன்றவற்றையும் தான் செய்வதில்லை என்றும் (போதெல்லாம் போது கொண்டு 26), இராமாயண காலத்தில் குரங்குகளும், அணில்களும், செய்த கைங்கர்யம் போல் தான் எந்த கைங்கர்யமும் செய்தது இல்லை என்றும் (குரங்குகள் மலையை நூக்க 27), உம்பரால் அறியலாகா (28) என்ற பாடலில், எம்பெருமான் காத்தருள வேண்டும் என்று கதறிய யானையின் சிந்தனையும் தனக்கு இல்லை என்றும், ஊரிலேன் காணியில்லை (29) பாசுரத்தில், எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களுடனும் தனக்கு சம்பந்தம் ஏதும் இல்லை என்றும் ஆழ்வார் அருளியதை பார்த்தோம்.
அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான கெட்ட குணங்களும் உண்டு என்பதை, தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், (மனத்திலோர் தூய்மையில்லை 30), தன்னால் சொந்தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பயனும் இல்லை என்று இந்த பிறவி வீணானதை நினைத்து (தவத்துளார் தம்மில் அல்லேன் 31) வருந்துவதும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனதிற்கு பிடித்தவற்றை விட முடியாதவனாக அவன் முன் வந்து நின்றது (ஆர்த்து வண்டு அலம்பும் சோலை 32) தன்னுடைய மூடத்தனம் என்றும், தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அவன் முன் வந்ததாகவும் (மெய் எல்லாம் போக விட்டு 33), எல்லோர் நெஞ்சத்திலும் இருந்து எல்லாவற்றையும் அறியும் அவன் முன், அடிமை செய்பவன் போல தான் போட்ட கள்ள வேஷம் கலைந்ததே என்று வெட்கமடைந்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அவனை விட்டு விலக (உள்ளத்தே உறையும் மாலை 34) நினைத்ததையும் பார்த்தோம்.
ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் எல்லோருக்கும் செய்த சில நன்மைகளை விளக்கும் அடுத்த பகுதியில், முதலில், ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லார் தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளியதையும், இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான் (மழைக்கன்று வரை(36) என்பதையும் பார்த்தோம். இருந்தும், ஆழ்வாரின் மனம், ‘தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். அவனின் குளிர்ந்த பார்வை தானே நமக்கு வேண்டியது , ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று அவன் சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ (37) சொல்கிறார்.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள் போகவிட்டு என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாசுரம் வைஷ்ணவ சம்பிரதாய ரகஸ்யத்ரயங்களை (மஹாமந்திரம், த்வயம் , சரமஸ்லோகம்) என்ற மூன்றினையும் சொல்கிறது. அதற்கும் மேல் இந்த பாசுரத்தை செவிசாய்த்த எம்பெருமான், மகிழ்ந்ததையும் சொல்கிறது.
இனி அடுத்த பாசுரம்,
அடிமையில் குடிமை யில்லா அயல் சதுப்பேதிமாரில், * குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் * முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற்கு அன்பு செய்யும் * அடியரை உகத்தி போலும் அரங்கமா நகருளானே. (திருமாலை 39)
திருமுடியில் , திருத்துழாய் மாலையை அணிந்தவனே, அரங்கநகர் உளானே, உனக்கு கைங்கர்யம் செய்வதில் ஊற்றம் இல்லாதவராய் , அடிமையாய் சேவை செய்ய மாறுபட்டவர்களாய் நான்கு வேதங்களையும் ஓதினவர்களான வேதியர்களைக் காட்டிலும் குடிப்பிறப்பினால் கீழ்ப்பட்ட ஜாதியில் பிறந்தவர்களேயானாலும் உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு காட்டும் அடியவர்களையே நீ உகக்குமவனன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்த பாசுரம் தொடங்கி நாற்பத்து நான்காம் பாசுரம் முடிய ஆறு பாடல்களில், ‘மேம்பொருள் போகவிட்டு ‘ பாசுரத்தில் சொன்ன அறிவு உடையவர்களுடைய பெருமையைச் சொல்கிறது. ‘பயிலும் சுடரொளி ‘ (திருவாய்மொழி 3.7) மற்றும் நெடுமாற்கடிமை (திருவாய்மொழி 8.10) என்னும் பதிகங்களில் அடியவர்களுடைய பெருமையை நம்மாழ்வார் அருளிச் செய்ததை இங்கே இந்த ஆழ்வார் அருளிச் செய்கிறார் . பிறப்பு, ஒழுக்கம், குணங்கள் ஆகியவற்றால் குறைவு பட்டவர்களானாலும் மேம்பொருளில் சொல்லப்பட்ட அறிவு உடைய அடியவர்கள் நமக்கு ப்ராப்யம் ப்ராபகம் முதலான எல்லாமாய் இருப்பவர்கள் என்பது இந்த பாசுரங்களின் திரண்ட கருத்து. இந்தப் பாசுரத்தில் எவ்வளவு தாழ்ந்த ஜாதியில் பிறந்தவர்கள் ஆனாலும் ‘மேம்பொருள் ஞானத்தில் ஊன்றி இருப்பவர்களாகில் திருத்துழாயைப் போலே எம்பெருமானாலே தலை மேல் வைத்து கொண்டாடப் பெறுவார் என்கிறார்.
இனி சற்று விளக்கமாகப் பாப்போம் .
கைங்கர்யம் நமக்கு செய்யத்தக்கது என்னும் எண்ணம் அற்றவர்களாக இருப்பவர். கைங்கர்யம் நமக்கு இயல்பானது என்று இருப்பவர்கள் ‘உண்ணும் சோறு பருகுநீர் , தின்னும் வெற்றிலை (திருவாய்மொழி 6.7.1) என்பது போலே அது இல்லாமல் வாழ முடியாதவர்கள் .
சதுப்பேதிமாரில் என்பது நான்கு வேதங்களையும் நன்கு கற்றவர்களை சொல்கிறது . ஈஸ்வரனே எல்லா உலகுக்கும் சுவாமி என்று அறிந்து இருப்பதும் , தன்னை அவனுக்கு சொத்தாக அறிந்து இருப்பதும் , நம் ஸ்வரூபத்திற்கு தக்க பலன் பகவத், பாகவத கைங்கர்யம் என்று அறிந்து இருப்பதும் வேதம் கற்று அறிந்து இருப்பதற்கு பயன். ‘அயல் ‘ ஆவது வேதம் கற்பது இந்த ஞானத்தை பெறுவது என்பதை அறியாதது . ஆக, அயல் சதுப்பேதிமாரில் என்பது, கைங்கர்யம் செய்வது என்பதில் இருந்து மாறுபட்டு இருக்கும் நான்கு வேதம் அறிந்தவர்கள் என்பதாகும். அப்படிப்பட்டவர்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்பது கருத்து.
இனி , இவர்களைக் காட்டிலும் எம்பெருமானுக்கு உயர்ந்தவர்களை பாசுரத்தில் மீதி பகுதி சொல்லுகிறது.
வேதத்தில் விதிக்கப்பட்டதை பின்பற்றாமல் இருப்பதும், விலக்கப்பட்டவைகளை பின்பற்றியும் பல ஜென்மங்களை கழித்ததால் வந்த பாவங்களால் மிக தாழ்ந்த பிரிவில் பிறந்தவர்களே ஆனாலும் குக்கர் எனப்படுவர். பிறப்பரேலும் என்று சொல்வதால் , மேம்பொருள் பாசுரத்தின் அறிவை அடைவதற்கு பிறப்பினுடைய உயர்வோ தாழ்வோ காரணம் அல்ல என்கிறார்.
வேதத்தை விவரிக்க வந்த ஸ்ரீ ராமாயணத்தில், ‘ஸர்வத்ர கலு த்ருஷ்யந்தே ஸாதவோ தர்ம சாரிணஃ৷৷ * ஶூராஶ்ஶரண்யாஸ் ஸௌமித்ரே திர்யக் யோநி கதேஷ்வபி” (ஆரண்ய காண்டம் 68.24)ல் சொல்லியது, ஸ்ரீராமன் , லக்ஷ்மணனிடம் “லட்சுமணரே! வீரம் மிக்க ஆன்மாக்களும், பாதுகாவலர்களுமானவர்களும், நீதிமான்களும், நேர்மையானவர்களும், விலங்குகள் மற்றும் பறவைகளிடையே கூட காணப்படுகிறார்கள் என்கிறார். ஸ்ரீராமன் ஜடாயுவை பார்த்தபோது இளைய பெருமாளை நோக்கி அருளிசெய்தது, இந்த அறிவு (மேம்பொருள் ) பறவை, விலங்குகள் போன்ற எல்லா பிரிவுகளுக்கும் ஏற்படக்கூடியது என்ற கருத்தை வலியுறுத்துவதற்காக என்கிறார் . காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவிச்சிகளும் அனுமன் சுக்ரீவன் போன்ற குரங்குகளும் , விபீஷணன் போன்ற ராக்ஷ்சர்களும் இந்த அறிவினை பெற்று இருந்தார்கள் என்பதை கண்டோம் என்கிறார்.
அதேபோல் , வேதத்தை விளக்க வந்த இன்னொரு இதிஹாசமான மஹாபாரதத்தில், தாழ்ந்த பிரிவில் வந்த விதுரர், வேடனாய் மாமிசங்களை வியாபாரம் செய்த தர்மவ்யாதன், கர்ணாகண்டன் போன்றவர்கள், ஆயர்பாடியில் வாழ்ந்த இடையர் இடைச்சிகள் முதலானவர்கள் இந்த அறிவினை உடையவர்களாக இருந்ததை பார்த்தோம்.
திருவிருத்தம் (79)ல் ‘பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார், விண்ணுளாரிலும் சீரியரே.’ என்று சுவாமி நம்மாழ்வார் அருளியபடி இவர்கள் நித்யஸூரிகளை விட சிறந்தவர்கள் ஆவார்கள் என்கிறார். எப்பொழுதும் எம்பெருமானின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்கும் நித்ய சூரியர்களைக் காட்டிலும், இவ்வுலகில் அவதரித்து வந்து, எம்பெருமான் பெரும்பாடு பட்டு திருத்தியவர்கள் அன்றோ. ஆகையால் இவர்கள் நித்யசூரிகளைக் காட்டிலும் இவர்கள் சிறந்தர்வர்கள் என்ற கருத்து. தன் ஸ்பர்ஶத்தாலே இரும்பை பொன்னாக்கும் வேதகப்பொன், மற்ற தங்கத்தைக் காட்டிலும் சிறந்து இருப்பது போலே, தங்கள் தொடர்பால் மற்றவர்களையும் பாகவதர்கள் ஆக்க வல்ல இவர்கள், அந்த பெருமை இல்லாத நித்யஸூரிகளை விட சிறந்தவர்கள் என்கிறார்.
இப்படி எம்பெருமானை விசேஷிப்பதற்கு காரணம் என்னவென்றால் , திருத்துழாயைப் போல் இந்த அடியவர்கள், எம்பெருமானால் தலையினில் வைத்து கொண்டாடத் தக்கவர்கள் எனபதை தெரிவிக்கவே என்கிறார். பூவில் சிறந்த திருத்துழாயை தரித்து இருப்பது போலே, நீ தேவர்களில் சிறந்தவன் என்கிறார். இவர்களால் உன் பரம்பொருள் தன்மை விளக்கப்படுகிறது என்கிறார்.
ஐம்புலன் அகத் அடக்கி என்று சென்ற பாடலில் (38) சொல்லியபடி, உன் உகப்பிற்கு வேறுபட்ட தங்கள் உகப்பையும் விலக்கி, ‘உன் செவ்வடி செவ்வுத் திருக்காப்பு‘ (திருப்பல்லாண்டு 2) என்று பரிந்து உன் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுவதே பொழுதுபோக்காய், அதையே ப்ராப்யமாக நினைத்து இருப்பவர்கள். இனிமையோடு கூடிய எம்பெருமானையே உபேயமாகக் கொண்டவர்கள் என்று ஆயிற்று. இனி உபாயம்.
இரக்கத்தோடு கூடிய அவன் திருவடிகளை உபாயமாகக் கொண்டவர்கள். ‘சோம்பர் ‘ என்று 38ல் சொல்லியபடி ஜீவாத்மா ஸ்வரூபம் எம்பெருமானுக்கு, தான் பாரதந்திரன் என்பதை உணர்ந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதில் ஒரு தொடர்பும் இல்லாமல் இருப்பவர்கள் . உகப்பதாகிற உபேயமும் திருவடிகளாய், தாரகமான உபாயமும் திருவடிகளாய் இருக்கும் அடியவர்கள். ‘நிழலும் அடி தாறும் ஆனோம்‘ (பெரிய திருவந்தாதி 31) என்று நம்மாழ்வாரும் அருளி செய்தார். அதாவது பாதநிழலாகவும் பாதரேகையாகவும் உடன்பட்டோம் என்கிறார்.
இந்த ‘மேம்பொருள் போகவிட்டு ‘ பாசுரத்தில் அறிவு இல்லாத சதுர்வேதிகளைக் காட்டிலும், இந்த அறிவு உடைய அடியார்களை, அவர்களின் பிறந்த ஜென்மத்தின் தாழ்வையும் கவனிக்காமல் உகக்கிறீர் என்கிறார்.
தாழ்ந்த பிரிவில் பிறந்தவர்களாய் உன்னிடம் பரிவு உடையவர்களுக்கு முகம் கொடுப்பதற்காகவன்றோ இங்கு வந்து கண் வளர்ந்து அருளுகிறீர், உயர்ந்தவர்களுக்கு முகம் கொடுப்பதாகில் பரமபதத்திலேயே இருந்திருக்க மாட்டீரோ என்று சொல்கிறார்.
இத்துடன் இந்த பாடல் நிறைவடைகின்றது. மீண்டும் அடுத்த பாசுரத்தில் சிந்திப்போம் . நன்றி