A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
இந்த பதிவு சற்று விரிவாக உள்ளதால் இதனை சில பிரிவுகளாக பிரித்துப் பார்க்கலாம். அவை :
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் திருவரங்கனாக, தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். எம்பெருமான், பரமாத்மாவில் உள்ள சந்தேகங்களை ஆழ்வாருக்கு தீர்த்து, அவரின் நெஞ்சில் வந்து புகுந்து, தனது கடினமான நெஞ்சத்தை கரைத்து, அவனது சேவையையும் அருளையும் கொடுத்து, பலகாலங்களாக சேவிக்காத இழப்பை சரி செய்து, கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக வைத்து, நான்கு திசைகளை படைத்து, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அவற்றைக் கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்து, அவனின் திரு அவயவங்களின் அழகும், தேஜஸும், அடியவர்களுக்காகவே என்று மகிழ வைத்து, அவனிடம் மஹாவிஸ்வாசம் இல்லாததால், இத்தனை நாள் இழந்த பகவதனுபவத்தை எண்ணி கலங்கி, நாம் சிரமப்பட்டு புதிதாக கண்டு பிடித்து எம்பெருமானின் பெருமைகளை பேச வேண்டியது இல்லை என்று அவரை பாட வைத்து, அவன் அழகினை திருவரங்கத்தில் காண்பித்து, அதனை மறந்து ஆழ்வாரை வாழமுடியாதபடி செய்து, சரணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் தனக்கு இல்லை என்று ஆழ்வாரை உணரச் செய்து, அதற்கு அவரை தயார் செய்த உதவிகளை சொல்கிறார்.
எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை அனுபவித்தோம்.
ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:
அடுத்த ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும் உண்டு அல்லது எல்லா கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதை பார்த்தோம்.
ஆழ்வார் தன்னை விட்டு விலகுவதை அறிந்த எம்பெருமான், ஆழ்வாரை தம்மிடமே இருக்க செய்ய, எம்பெருமான் செய்த நன்மைகளை விளக்கும் பகுதி.
இந்த பகுதியில் உள்ள ‘தாவி அன்று உலகம் ‘ (35) என்ற முதல் பாசுரத்தில், “எல்லா உலகங்களையும் கடந்து எல்லா தலைகளிலும் அவர்கள் கேட்காமலே திருவடிபட வியாபித்து, திருவிக்கிரமனாக அருளிய எம்பெருமானைத் தவிர, பிறரை நினைக்க மாட்டேன், என்று ஆழ்வார் பாடலை பார்த்தோம்.
இந்திரன் கல் மழை பெய்வித்த காலத்திலே, அனைத்தும் கஷ்டப் படுவதற்கு முன், கோவர்த்தன மலையை ஒரு குடையாக ஏந்தி காத்த எம்பெருமான், மாதர்களின் கண்களின் வலைகளில் அகப்பட்டு துடிக்கிற தனக்கு அருள் புரியாமல் இருப்பதை மழைக்கன்று வரை என்ற அடுத்த பாடலில் சொன்னதை பார்த்தோம்.
தேஜஸ் உடைய பெரியபெருமாள் அன்றோ, நமக்கு தந்தையும் தாயும் ஆவார். நமக்கு வேண்டியது, அவனின் குளிர்ந்த பார்வை, ‘நம்முடைய பையல் ஆன இவன் நமது கருணைக்கு உரியவன்’ என்று சொல்வது தானே, அப்படி செய்யாமல் இவன் திருவுள்ளம் மிக கொடியதாக உள்ளதே என்று ‘தெளிவிலா கலங்கல்‘ என்ற பாடலில் சொல்கிறார்.
மகாபாரதத்திற்கு கீதா சரம ஸ்லோகம் போல, மேம்பொருள் போகவிட்டு என்ற அடுத்த பாசுரம், முக்கியமானதாகவும், இந்த பிரபந்தத்தின் ரத்னம் போலவும் உள்ளது என்றும் சொல்லப்பட்டு உள்ளது. அதனை அடியேனால் முடிந்தவரை, அடியேனுக்கு புரிந்த வரை, சொல்ல முயற்சிக்கிறேன். இந்த பாசுரத்தை பற்றி இதைவிட அருமையான, நிறைவான, விளக்கமான சிறந்த பதிவுகள் நிறைய உண்டு, அவற்றையும் படிக்க பிரார்த்திக்கிறேன்.
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, * ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி * காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் * சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத் தானே. (திருமாலை 38)
கோவில் எனப்படும் ஸ்ரீரங்கத்தில், காவேரி சூழ்ந்த திருத்தலத்தில் கண் வளர்ந்து அருளுகின்றவனே, மேன்மையை விளைவிப்பதாக பிரமிக்க செய்யும், இவ்வுலக விஷயங்களை வாசனையுடன் அறவே விட்டு, ஆத்ம ஸ்வரூபத்தை, உள்ளபடி உணர்ந்து, ஸ்வரூப ரூபமான பலனாகிய பகவத் கைங்கர்யத்தை தெரிந்து கொண்டு, ஐந்து இந்திரியங்களையும், தான் அனுபவிக்க வேண்டும் என்று இல்லாமல், அடக்கி, உபாயங்களில் பற்று ஒழியும்படி, தலையில் உள்ள சுமைகளை போக்கி, உன் திருவாசலில் காவல் புரிந்து, உஜ்ஜீவிக்கின்றவராய், தங்கள் நலத்தில் சோம்பி இருப்பவர்களான பக்தர்களை உகக்குமவன் அல்லவோ நீ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வியாசர், வேதம் என்ற கடலினை, அறிவு என்ற மத்தினை கொண்டு, கடைந்து, உலக க்ஷேமங்களுக்கு உண்டாக்கப்பட்டதாக சொல்லபடுகிற, மகாபாரதம், வேதங்களின் சாரமாகிறது. சர்வேஸ்வரன் திருப்பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு அம்ருதத்தை கொடுத்தார். வேத வியாசர், வேதத்தை கடைந்து மகாபாரதம் என்ற சாரத்தை ஸம்ஸாரிகளுக்கு உய்யும் உபாயமாக கொடுத்தார். எம்பெருமான் தேவர்களுக்கு அளித்த அமுதம், அவர்கள் துன்புறும் போதும் இறக்க முடியாதபடி கால்கட்டாக உள்ளது; ஆனால் வியாசர் கொடுத்த மகாபாரதம், ஸம்ஸாரத்தை போக்கக்கூடியது என்கிறார். அப்படிபட்ட மகாபாரதத்தை சக்கை என்று சொல்லும் வண்ணம் உள்ளது கீதை என்ற அதில் உள்ள ஒரு பகுதி. அந்த கீதையிலும் சாரமாக உள்ளது சரம ஸ்லோகம்.
இந்திரியங்களின் பலவகையான தாழ்வுகள் நெஞ்சில் பட்டு சோகம் உண்டாவதற்காக, கண்ணன் கீதையில், சரம ஸ்லோகத்தை சொல்வதற்கு முன் உள்ள ஸ்லோகங்களை சொன்னான். அப்படிபட்ட சோகம் தான் சரம ஸ்லோகம் கேட்பதற்கு உறுப்பாகும்.
இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி .. கீதை 18- 67
‘இதை எப்போதும் தவம் செய்யாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும், கேட்க விரும்பாதவனுக்கும், என்னிடத்தில் பொறாமை உடையவனுக்கும் சொல்லாதே’ என்று கண்ணன், அர்ஜுனனுக்கு சரமஸ்லோகத்தின் பெருமைகளாக சொல்ல தொடங்குகிறார்.
மேம்பொருள் போகவிட்டு என்ற இந்த 38ம் பாட்டு உருவாவதற்காகவே திருமாலை தோன்றியது என்று உரையாசிரியர் சொல்கிறார். திருமாலையில் இந்த பாடலுக்கு முன்னே சொன்ன பாடல்கள், இந்த பாட்டினில் உள்ள அர்த்தத்தை புரிந்தவர்களின் பெருமையை கூறுகிறது. இந்த பாடல்
இந்த பாடலின் விரிவான அர்த்தங்களை பார்க்கும் முன், வைஷ்ணத்தின் மேலே சொன்ன மூன்று முக்கிய ரகசியங்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம் பார்க்கலாம்.
திருமந்திரம், சரமஸ்லோகம் மற்றும் த்வயம் மூன்றும் சேர்ந்து ரகஸ்யத்ரயம் என்று வழங்கப் படும். முதல் இரண்டில், நம் ஆச்சாரியர்கள் அர்த்தங்களை ரகசியமாக வைத்தார்கள். த்வயத்தில் அர்த்தத்தோடு, சப்தத்தையும் சேர்த்து மறைத்து வைத்தார்கள். அதாவது எம்பெருமான் மேல் பற்று கொண்டு, இவற்றின் மதிப்பை தெரிந்து, மரியாதை செய்பவர்களுக்கு மட்டும், அர்த்தம், சப்தம் முதலிவற்றை ஆசார்யார்கள் மூலம் மட்டுமே உபதேசித்து வந்தார்கள்.
இறைவனது நாராயணன் என்னும் பெயரைக் கொண்ட எட்டெழுத்து மந்திரத்தைத் திருமந்திரம் எனச் சிறப்பாக கூறுவர்.
சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள். சரம ஸ்லோகங்கள் மூன்று முக்கியமானவை என்றும், அவை வராக, இராம மற்றும் கிருஷ்ண சரம ஸ்லோகங்கள் ஆகும். பரமாத்மா இந்த மூன்று சரம ஸ்லோகங்களின் மூலம் நமக்கு, தன்னை அடையும் வழியை சொல்லுகிறார்.
“ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||”
நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிஸ்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!. “உடல், மனது முதலியவை நன்றாக இருக்கும் போது, என்னை ஒருவன் நினைப்பானாகில், பின்பு அவன் மூச்சடங்கி முடியாதபோது, அவனை நான் நினைத்து நற்கதியை பண்ணுவிப்பேன்” என்று பூமிப் பிராட்டியிடம் வராகப்பெருமாள், கூறுகிறார்.
இராமாயணத்தில் வருவது விபீஷண சரணாகதி. ஸ்ரீராமபிரான், பகைவனுக்கும் அருளும் பண்பாளன். அந்த சரணாகதியின் உச்சத்தை கீழே உள்ள இந்த ஸ்லோகத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ளலாம்.
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே, அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம, (வால்மீகி இராமாயணம் ।6.18.32)
விபீஷணனை ஏற்றுக்கொள்ள அனுமனைத் தவிர, சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது, ஸ்ரீராமபிரான், “என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கு, தான் அபயம் அளிப்பதாகவும், அதுவே தன்னுடைய விரதம் என்றும் திருவாய் மலர்ந்து அருளுகிறார். ’என்னிடம், பாதுகாவல் தேடி வருவார்க்கு, எல்லா உயிர்கள் இடமிருந்தும் பாதுகாப்பு அளிப்பேன். இது எனது வாக்கு” என்பது ராம சரம ஸ்லோகம் ஆகும்.
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ” –
“எல்லாவற்றையும் முழுமையாக விட்டுவிட்டு என்னை மட்டுமே கதியாக அடைவாய். நான் உன்னை எல்லா பாவங்களிலும் விடுதலை செய்கிறேன். வருத்தம் வேண்டாம்” என்பதையே தன்னை அடையும் வழியாகச் சொல்கிறார். “மாம் ஏகம் சரணம் வ்ரஜ“, அதாவது, “என்னொருவனையே சரணம் புகுந்தவனைக் காத்து, வீடும் அளிப்பேன்” என்று சொல்கிறார்.
தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல், ஈஸ்வரனே உபாயமாக இருக்கும் போது, அவனை அனுபவிப்பதே வாழ்ச்சி அன்றோ என்கிறார்.
எம்பெருமானின் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவது என்பதே த்வய மகா மந்திரம் சொல்வதன் பயன் ஆகும் என்று நாம் அறிவதே, த்வயம் சொல்லும் பல விஷயங்களில் மிகவும் முக்கியமானதாகும்.
சுவாமி நம்மாழ்வார் ‘அகலகில்லேன் இறையும் என்று ‘ என்ற திருவாய்மொழி 6.10.10 பாடலில் மிக சிறப்பாக த்வய மகா மந்திரத்தின் அர்த்தத்தை வார்த்தைக்கு வார்த்தை சொன்னாலும், த்வய மகாமந்திரம் கேட்ட எம்பெருமான் எப்படி மகிழ்கிறான் என்று சொல்ல வில்லை. இந்த பாடலில் தொண்டரடிபொடி ஆழ்வார், த்வயம் சொல்லப் படுவதை கேட்டு, எம்பெருமான் அனுபவித்து அவன் திருமுக மண்டலம் மலர்ச்சி அடைவதை சொல்கிறார்.
அருளி செயல் ரகசியம் என்ற நூலில் அழகிய மணவாள பெருமாள் நாயனார் துவயத்தின் பெருமைகளை சொல்கிறார். அதில் இருந்து சில வரிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
இப்படி பல பெருமைகளை உடைய த்வயமஹா மந்திரத்தை தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இந்த பாடல் சொல்கிறது என்பதையும் இதனால் எம்பெருமான் எப்படி உகக்கிறான் என்பதையும் பார்க்கலாம்.
மீண்டும் இந்த பாடலுக்கு வருவோம்.
நாம் ஒரு பொருளை கற்றுக்கொள்ளும் போது, அதனை பற்றிய ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை கற்றுக் கொண்டு, அதற்கு பின் பழகினால் நமக்கு அதன் மேல் ஒரு பற்று ஏற்பட்டு, அதனை கடைபிடிப்பதற்கு சுலபமாகவும், நம்மை ஊக்கிவிப்பதாகவும் இருக்கும்.
எந்த பலனுக்கும் கற்பது என்றும் அனுஷ்டிப்பது என்றும் இரண்டு நிலைகள் உள்ளன. கற்கும் காலத்தில், அந்த பலனின் சிறப்புகள் பற்றி முழுவதும் அறிந்து கொண்டு (what), பிறகு அந்த பலனை அடைவதற்கான காரியங்களை (how) அனுஷ்டிக்க / பின்பற்ற வேண்டும். ஆனால், அனுஷ்டிக்கும் காலத்தில், முதலில் நாம் பின்பற்ற வேண்டியவைகளை (how) பின்பற்றிய பிறகே, அதன் பலன் (what) நமக்கு கிடைக்கும்.
த்வயத்தில் செய்ய வேண்டியது முதல் வாக்கியத்திலும் (how), அடையும் பலன் (what) இரண்டாவது வாக்கியத்திலும் சொல்லப் பட்டுள்ளது. எனவே த்வயம், முதலில் அனுஷ்டிக்க வேண்டிய காலத்திற்கு ஏற்ப சொல்லபட்டு உள்ளது.
இந்த திருமாலை பாடலில் அடையும் பலன் (what) முதல் இரண்டு அடிகளிலும், செய்ய வேண்டியது கடைசி இரண்டு அடிகளிலும் (how) சொல்லப் படுவதால், இந்த பாடல் பயனை (மோக்ஷத்தை) பற்றி நன்றாக தெரிந்து கொண்டு, பிறகு அதை எப்படி அடைவது என்று சொல்லி, கற்கும் காலத்தில் உள்ள பாடலாக அமைந்துள்ளது.
த்வய மஹா மந்திரத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தத்தை திருவாய் மொழி மூன்றாம் பத்தில், 3.3 ஒழிவில் காலமெல்லாம் என்ற பதிகத்தில் சொல்லி உள்ளார். த்வய மஹா மந்திரத்தின் முதல் வாக்கியத்தின் அர்த்தத்தை நம்மாழ்வார், ஆறாம் பத்தில் (திருவாய்மொழி 6.10.10) அகலகில்லேன் என்ற பாடலில் சொல்கிறார். ஆக நம்மாழ்வாரும் முதலில் மோக்ஷ பலன்களை சொல்லி, பிறகு எப்படி அடைவது என்று நம்மை மோக்ஷம் கற்கும் நிலைக்கு அழைத்து செல்கிறார்.
ஆண்டாள் கறவைகள் பின் சென்று என்ற திருப்பாவை 28 ல் த்வயத்தின் முதல் வாக்கிய அர்த்தமும் சிற்றம் சிறு காலை (திருப்பாவை 29) என்ற பாடலில் த்வயத்தின் இரண்டாம் வாக்கிய அர்த்தமும், சொல்லி, த்வயம் போலவே நாம் எப்படி மோக்ஷத்தை அடைவது என்றும் பின்னர் அதன் பலன்களை சொல்லி உள்ளார்.
பலன்களையும், அவற்றை எப்படி அடைவது என்பதையும் (உபேயம், உபாயம்) (What and How) ஒரே பாடலில் கொடுத்தவர், இந்த தொண்டரடிபொடி ஆழ்வார் ஒருவரே.
சரம ஸ்லோகம் மோக்ஷம் அடைய வழியை (உபாயத்தை) மட்டுமே சொல்கிறது. (சரம ஸ்லோகம், ‘என்னை உபாயமாக உறுதியாக கொள்’ என்ற சரணாகதியை காட்டுகிறது.) த்வயம் வழி, பலன் இரண்டையும் சொல்கிறது; இதில் ருசி உடையவர்கள் த்வயத்தை எப்போதும் அனுசந்தித்து / சொல்லிக் கொண்டு, அவனை அடைவார்கள். இந்த த்வயத்திலும், இதன் அர்த்தத்திலும் ஊற்றம் உள்ளவர்களிடத்தில் எம்பெருமானுக்கு உள்ள உகப்பை இந்த பாடல் சொல்கிறது.
சென்ற பாடலில் (திருமாலை 37) அளியல் நம் பையல் என்று எம்பெருமான் சொல்லவில்லையே என்று மிக வருத்தத்துடன் சொன்ன ஆழ்வாரை பார்த்து,
இத்தனை பெருமைகள் நிறைந்த
என்று பெரியபெருமாள் முன்பு நின்று அவரின் திருமுகத்தை பார்த்து இந்த பாசுரத்தில் விண்ணப்பம் செய்கிறார்.
மேம்பொருள் என்பதற்கு (1) மேலெழுந்த பொருளென்றும், (2) மேவின பொருளென்றும், (3) மேம்பாட்டை விளைக்கும் பொருளென்றும், மூன்று விதமாக பொருள் கூறுவார்கள். மூன்று பொருள்களிலும் உடலும் உடல் சம்பந்தமாக பொருள்களும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
(1) கர்மங்கள் காரணமாக தேகம் ஆத்மா என்ற இரண்டும் செயற்கையான தொடர்புடையதாய் இருக்கும். எம்பெருமானை பற்றிய அறிவு பிறந்தவுடன், தேகம் முக்கியமான பொருளாக கருதபடமாட்டாது. தேகத்தை இனியது என்று நினைத்து, இதை கொண்டு சுகம் அனுபவிக்கும் ஜீவாத்மா, மேலெழ பார்க்கும் போது, இனியதாக தோன்றி, ஆராய்ந்து பார்க்கும் போது, இனிமை ஒன்றும் இல்லாததாக இருக்கும் இந்த தேகத்தை ‘மேல் எழுந்த பொருள் ‘என்று சொல்வதாக கொள்ளலாம்.
(2) தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே – (கீதை 7-14)
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம், ‘தேவனாகிய என்னால் நியமிக்கப் பட்டதும், இந்த மூன்று குணங்களையும் உடையதான எனது மாயை கடப்பதற்கு அரியது ; என்னையே யார் சரணடைவரோ, அவர்கள்தான் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்” என்பது. இந்த அறிவுள்ள ஆத்மாவை கொண்ட அடியவனால் பிரிக்க முடியாதது அவனுடைய தேகம். தானே தேவன், தானே மனிதன் என்று உடம்பை தானாக நினைக்கும்படி இந்த உடலானது ஆத்மாவோடு பொருந்தி இருப்பதால், மேவின பொருள் என்று கொள்ளலாம்.
(3) மேம்பாட்டை விளைக்கும் பொருள் என்று சொன்னது, எல்லாம் அறிந்தவர்களில் தலை சிறந்தவர் என்று தங்களை தாங்களே நினைக்கும்படி செய்யவல்ல தேகத்தை குறிக்கிறது.
இப்படி மூன்றுவிதமான பொருள்களிலும் மேம்பொருள் என்பது தேகத்தையும் அதனோடு சேர்ந்த பொருள்களையும் குறிக்கின்றது.
போக விட்டு என்று சொன்னது, வாசனையோடு போக விட்டு என்று பொருள். இந்த சரீரத்தோடு இருக்கும் வரை, அதை விட முடியாததால், ‘இந்த சரீரமும் அதனோடு சேர்ந்தவைகளும் புருஷார்த்தம் அல்ல’ என்ற அறிவை உடையவன் ஆவதே வாசனையோடு விடுவது என்பதாகும். அப்படி அல்லாமல், சரீரத்தை நேரே விடுவதை பொருளாக எடுத்து கொள்வது பொருந்தாது.
ஈஸ்வரன் அல்லது பரமாத்மா ஏற்படுத்திய சரீர சம்பந்தத்தை ஜீவாத்மாவால் போக்க முடியாது; தான் அல்லாத தேகத்தை தான் என்று நினைக்கும் நினைவும், தன்னுடையது அல்லாத பொருள்களை தன்னுடையது என்று நினைக்கும் நினைவும் சம்சாரமாகிற மரம் வளர்ப்பதற்கு இரண்டு பருப்புகளை உடைய விதை ஆகும் என்று விஷ்ணு புராணம் (6.7.11) சொல்கிறது. இதன்படி, தேகத்தை ஆன்மா என்று நினைப்பதும், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களை தங்களுடையதாக நினைப்பதும்,
தேகத்தை காட்டிலும் வேறுபட்ட ஜீவாத்மாவை, ஸ்வதந்திரமாக நினைப்பதை தவிர்ப்பது என்பதை ‘போகவிட்டு‘ என்று சொல்கிறார். மஹா ஞானிகளும் ஜனகர் போன்றவர்கள் கூட செய்ய கூடியது இவை மட்டுமே என்கிறார்.
இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளரும் போது, ஒன்றுக்கு ஒரு பாதகமும் வராமல் ஒன்றை மட்டும் வெட்ட நினைத்தவன், வெட்ட வேண்டிய மரத்தின் வேரினை கொத்தி, அதில் பெரும்காயம் (மருந்து) வைத்தால் அது மட்டும் பட்டு போவதை போல், தேகம், ஆத்மா என்ற இரண்டு மரங்களில் தேகத்தை மட்டும் கழிக்க நினைப்பவன், அகங்காரம், மமகாரம் இல்லாமை, ஸ்வாதந்த்ரிய புத்தி இல்லாமை என்னும் நினைவுகளாகிய பெரும் காயத்தின் உதவியோடு தேகத்தை கழிக்கலாம் என்று கருத்து.
மெய் என்பது ஆத்மாவை குறிக்கும். மெய்பொருளாய் தனக்கு தானே பிரகாசிக்கும் ஆத்மாவை சொல்கிறது. சத்யம் (மெய் ) என்பது சேதன (அறிவுள்ள) தத்தவமாகவும், அசத்யம் என்பது அசேதன (அறிவற்ற) தத்துவமாகவும் அந்த பர வஸ்து (ஆத்மா) சத்யமாகவே, எப்போதும் மாறாததாக, நிர்விகாரமாகவே இருந்தது என்று உபநிஷத் சொல்கிறது. அதுபோல எப்போதுமே மாறிக்கொண்டு இருக்கும் அசேதன பொருளான உடலை, ‘பொய்’ என்றும், ஸ்வரூப மாறுபாடில்லாத சேதன பொருளான ஆத்மாவை, ‘சத்யம் – மெய் ‘ என்றும் சொல்லுகையாலே, இவரும் ஆத்மாவை மெய் என்கிறார்.
மாறாமல் இருக்கும் சேதனங்களான ஜீவாத்மாக்களையும், மாறிக்கொண்டே இருக்கும் அசேதனங்களான உடல்களையும் தாங்கி கொண்டு இருக்கும் ஈஸ்வரனான பரமாத்மா எப்போதும் மாறாததாக நிர்விகாரமாகவே தனக்கு தானே பிரகாசித்துக்கொண்டு எப்போதும் சத்ய மயமாய் நித்யமாக இருக்கிறது. இப்படி ஆத்ம ஸ்வரூபத்தின் நித்ய தன்மையை, உண்மை என்றும் மெய் என்றும் மெய்ம்மை என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
போல அல்லாமல்
ஜீவாத்மா என்று அறிவதே ‘மிக உணர்ந்து’ என்பதை குறிக்கும்.
தேகமும் தேகத்தோடு தொடர்புடைய பொருள்களும், கைவிடத்தக்கவை என்று உணர்ந்து, ஆத்மாவை உள்ளபடி அறிந்தால் அதற்கு பிறகு உண்டாகும் பயனாகிய, ‘ஆம் பரிசு’, பகவத் கைங்கர்யமே ஆகும். ஆம்பரிசு, என்பது வளர்வதற்கு உதவும் பயன். தன்னுடைய ஆத்மாவை எப்படி இவன் நினைத்து இருக்கிறானோ அதற்கு தக்கபடி இவன் வளர்வதற்கு பயன்கள் கிடைக்கின்றன.
இந்த தேகம், தேகத்தோடு தொடர்புடைய பொருள்களுடன் இருக்கும் போது, அவனது அறிவு மழுங்கி இருப்பதால், அந்த ஆத்மா பிரகாசிப்பது இல்லை. பரம பதத்திற்கு போய், அறிவு தெளிவு/விளக்கம் பெற்று, ஸ்வரூபத்தை உள்ளபடி அறிந்தால், ஆத்மாவின் இயல்பான கைங்கர்யமே, வளர்ச்சிக்கு உதவும் ஆம்பரிசு ஆகிறது.
தேகம் முதலானவை கைவிட வேண்டியவை என்கிற அறிவும், ஜீவாத்மா, எம்பெருமான் சொல்வதுபடியே நடக்க வேண்டியது என்ற அறிவும், தனக்கு கிடைக்க வேண்டியது கைங்கர்யம் என்கிற அறிவும் ஒவ்வொரு சேதனனுக்கும் தேவையான பெரும் செல்வம் ஆகும். இந்த அறிவு இருந்தால், வேறு எதுவும் இவனுடைய பேற்றுக்கு தேவை இல்லை. இவனை
‘விடுகை உபாயமா, பற்றுகை உபாயமா’ என்று கேட்டவருக்கு, ’இரண்டும் அன்று, விடுவித்து பற்றுவிக்கும் அவனே உபாயம்’ என்று நஞ்ஜீயர் அருளி செய்த வார்த்தைகளை இங்கு நினைவில் கொள்ளலாம். (விடுகை என்பது, எம்பெருமானைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விடுவது; பற்றுகை என்பது எம்பெருமானை பற்றுவது).
மேம்பொருள் என்பது தேகம் முதலானவை என்பதும், ‘மெய்ம்மை ‘ என்பது ஆத்ம ஸ்வரூபம் என்பதும் ‘ஆம் பரிசு ‘ என்பது கைங்கர்யம் என்பதும் நேரே பொருளாக குறிக்காது என்றாலும், அந்தந்த தன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு, அர்த்தத்தின் பெருமைகளை / சிறப்புகளை / ஏற்றத்தை / சீர்மையை கருதி, அந்த உயரிய வார்த்தைகளை மறைத்து இந்த சப்தங்களினால் பாடலை அருளி செய்கிறார். இந்த ஆழ்வார் முன்பும் ‘மூன்று எழுத்து உடைய பெயரால்‘ என்பது போல பல இடங்களில் இதே யுக்தியை பயன்படுத்தி உள்ளார்.
ஐம்புலன் அகத்து அடக்கி என்பதும் மேம்பொருள் போகவிட்டு என்பதும் ஒரே பொருள் தருவது போல இருந்தாலும் இங்கே ஆழ்வார் சொல்வது கைங்கர்யம் செய்வது எம்பெருமானின் உகப்பிற்கே என்பதை வலியுறுத்தவே ஆகும். இந்திரியங்களை தன்னுள்ளே அடக்கி, அதாவது தன் வசத்திலே இருக்கும்படி செய்வது என்பது மேல் எழுந்த பொருள். அதனை ‘மேம்பொருள் போகவிட்டு ‘ என்ற முதல் தொடரிலேயே, தேக சம்பந்த பொருள்கள் என்று ஆழ்வார் சொல்லி உள்ளார். பிறகு மீண்டும் இதனை இங்கு சொல்வது, ஆம்பரிசு, என்ற கைங்கரியத்தை செய்வதும், தனக்கு ஆனந்தம் தருவதற்காக இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த்ரியங்களை (ஐம்புலன்களை) வசப்படுத்துவது என்று மீண்டும் சொல்கிறார்.
கைங்கர்யத்திலும் ஓரு களையை அறுத்தாக வேண்டும். அதாவது,
இதனை நம்மாழ்வாரும் திருவாய்மொழி (2.9.4)ல் தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே என்றும், ஆண்டாள், திருப்பாவையில் (29) உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று சொல்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.
இராமாயணம், பாலகாண்டத்தில், (1.31)
ரம்யமாவஸதஂ கரித்வா ரமமாணா வநே த்ரய: தேவகந்தர்வஸங்காஷாஸ்தத்ர தே ந்யவஸந் ஸுகம்
சொல்லியபடி, இராமன் சீதா மற்றும் லக்ஷ்மணன் சித்திரகூட மலையில் அமைந்துள்ள காட்டில் இலைகளால் ஆன குடிசையில், தேவர்களையும் கந்தர்வர்களையும் ஒத்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் ; ஸ்ரீ ராமன், சீதா பிராட்டி, லக்ஷ்மணன் ஆகிய மூவரின் ஆனந்தத்தை சொல்லிய போதும், லக்ஷ்மணன், தனக்கு மகிழ்ச்சி என்று இல்லாமல், ஸ்ரீராமனும் சீதையும் கூடிய சேர்த்திக்கு கைங்கர்யம் செய்வது உகப்பு என்றும் இருந்தான் என்பதை விளக்குகிறது.
காம்பற என்று சொன்னது, எம்பெருமானை தவிர மற்று எல்லா உபாயங்களிலும் இருந்தும் எல்லா தொடர்பும் தமக்கு அற்று போகும்படி என்று சொல்கிறது.தலை சிரைத்துஎன்று சொன்னது, தன் தலையில் ஏற்றி கொண்டு இருப்பவைகளை, அதாவது மற்ற சாதனங்கள் தனக்கு மோக்ஷத்தை கொடுக்கும் என்று தவறாக எண்ணுபவற்றை சொல்கிறது. தாம் அடையவேண்டிய மோக்ஷத்தை அடையமுடியாமல் தடுக்கின்ற மற்ற சாதனங்களின் உள்ள தொடர்புகளை முழுவதும் அற்று போகும்படி என்று சொல்கிறது. தனக்கு தானே ரக்ஷகன் என்ற அபிமானத்தை விட்டு, என்ற கருத்தை சொல்கிறது.
தலை மயிரானது தன்னை அழகன் என்று அபிமானம் கொள்வதற்கு காரணமாவது போல மற்ற உபாயங்களை தலைமயிருடன் உருவகப் படுத்துகிறார். அதே போல அரசர்கள் தண்டனை கொடுக்கும் போது, தலை மயிரை சிரைப்பது என்பதும் அபிமானத்தை போக்குவதற்காகவே ஆகும். ஏகாந்திகளும் சந்நியாசிகளும் தலை முடியை சிரைத்து கொள்வதும் தங்களுடைய அபிமானத்தை தாமே போக்கிக் கொள்வதற்காகவும் ஆகும்.
தனக்கு பலன் கிடைப்பதற்கு தான், உபாயத்தை அனுஷ்டிக்கிறேன் என்ற அகங்காரத்தை உள் அடக்கி இருக்கின்ற உபாயந்திரங்களை, முற்றும் கைவிடுவதை சொல்கிறார். சரம ஸ்லோகத்தின் முதல் பகுதியில் சொன்னபடி மற்ற உபாயங்களை கைவிட்டு சித்தோபாயம் என்ற எம்பெருமானை உபாயமாக பற்ற வேண்டும். இந்த அர்த்தமும் முன் சொன்ன அர்த்தங்களை போல மிக சீர்மை பெற்று இருப்பதால், இதையும் ‘காம்பறத் தலை சிரைத்து ‘ என்று மறைத்து சொல்கிறார்.
தலைகடை என்பது மாறி கடைத்தலை என்று வந்துள்ளது. தலை வாசல் என்ற பொருளில் வரும். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லபட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார்.
மற்ற எல்லாரும் சரணாகதிக்கு ஆதாரமாக, எம்பெருமானின் திருவடிகளை பற்றுவது என்பது வழக்கம். ‘உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே‘ என்று நம்மாழ்வாரும், “சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்” என்று ஆண்டாளும், சொல்வது சில பிரபலமான உதாரணங்கள். ஆனால் ஆழ்வார் இங்கே தலைக்கடை அல்லது வாசலிலே நிற்கிறேன் என்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்ல கூச்சப் படுவதால், தலைக் கடை அல்லது வாசலிலியே நிற்கிறார். ஸம்ஸாரத்தினால் உண்டான பந்தத்தினால் எம்பெருமானை விட்டு மற்ற விஷயங்களுக்கு செல்ல முடியாததால் அங்கு இருந்து அகலாமல் அல்லது வெளியே செல்லாமல், எம்பெருமானின் திருவாசலையே பற்றி அங்கேயே ஆழ்வார் நிற்கிறார்.
நாதமுனிகளின் சிஷ்யரான திருக்கண்ணமங்கை ஆண்டான் என்பவருக்கு ஒருநாள் கண்ட காட்சி, அவருக்கு ஓரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தினமும் தன் வீட்டில் உணவு உண்ணும் ஓரு நாயை வளர்ப்பவன் அதற்கு துன்பம் கொடுத்த மற்றொருவனை கொன்று, அரச தண்டனையில் இருந்து தப்ப, தானும் தற்கொலை செய்து கொண்டான். தேகமே ஆத்மா என்று இருக்கும் ஸம்ஸாரிக்கு தன் நாயின் மீது இவ்வளவு பாசம் இருந்தால், பரம சேதனாக எம்பெருமானின் தலை வாசலைப் பற்றி கிடப்பவர்களை, எம்பெருமான் ஓரு நாளும் கைவிடமாட்டான் என்று அறுதி இட்டு, தன் மனைவி மக்கள் சுற்றம் எல்லாவற்றையும் கைவிட்டு, தன்னை தானே காத்து கொள்வதையும் தவிர்த்து விட்டு, திருக்கண்ணபுரம் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து அவன் கோவில் தலை வாசலிலேயே ஆயுள் உள்ளவரை வாழ்ந்து வந்தார் என்பது வரலாறு / ஐதீகம். ஸ்ரீவசன பூஷணத்தில், ‘திருக்கண்ணமங்கைஆண்டான் ஸ்வவ்யாபாரத்தை கைவிட்டான் என்று சொல்லப் பட்டுள்ளது.
மற்ற விஷயங்களில் ஈடுபாட்டாலே இரை தேடும் நாயை போல அலைபவன், கப்பலுக்கு நங்கூரம் போட்டது போலே, ஒரே இடத்தில் இருப்பதை சொல்கிறது. தைத்ரிய உபநிஷத் கூறுவது போல்,
இந்த பரமாத்மா மீது ஸம்ஸாரத்தில் பயம் இல்லாமைக்காக அவனிடம் அன்பு என்ற பக்தி நிலை அடைகிறானோ அவனுக்கு ஸம்ஸாரபயம் கிடையாது என்பதை சொல்கிறது. இதற்கு நாதமுனிகளின் சிஷ்யரான திருகண்ணமங்கை ஆண்டான் சரித்திரம் உதாரணமாக சொல்லப் படுகிறது.
தான் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லாமல் எம்பெருமானே உபாயமாக இருக்கும் போது, இவனுக்கு இருப்பது அவனை அனுபவிப்பது ஒன்றே ஆகும். அதுவே அவனுக்கு வாழ்வு. இருந்து வாழும் என்பதால், அவனை உபாயமாக கொண்டு இருப்பதே வாழ்வு ஆகும் என்கிறார்.
உன்னிடத்தில் தங்களை காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து, தங்களை தாங்களே காப்பாற்றி கொள்வதில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் சோம்பேறிகளை கண்டால் உனது திருவுள்ளம் இப்படியாகவா உகக்கும் என்றும் எம்பெருமானின் திருமுக மண்டலத்தின் உகப்பை கண்டு தொண்டரடிபொடி ஆழ்வார் அருளி செய்கிறார்.
தமக்காக வாழ்வதில் சோம்பேறிகளாகவும் எம்பெருமானுக்காக வாழ்வதில் சோம்பேறிகளாக இல்லாமல் வாழ்கின்றவர்களை ‘வாழும் சோம்பர்‘ என்கிறார். தங்களுக்காக வாழ்ந்து, எம்பெருமான் விஷயத்தில் சோம்பேறிகளாக இருப்பவர்களிடத்தில் இவர்களை இருந்து வித்யாசப்படுத்தி காண்பதற்காக ‘வாழும் சோம்பர்’ என்கிறார்.
இவர்கள் சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாதவர்களாகவோ, சோம்பேறித்தனத்தினால் நித்ய நைமித்திக கர்மங்களை கைவிடவோ மாட்டார்கள். எம்பெருமான் ஆணையாகவும், கைங்கர்யமாகவும் இவற்றை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆஸ்திகர்களில் தலைசிறந்த இவர்கள். உபாயமான எம்பெருமானை, உபாயமாக மட்டுமே பற்றி, வேறு எதையும் அவனிடம் எதிர்பாராமல், அவனை அனுபவிப்பதையே பொழுது போக்காக கொண்டு, தம்மை ரக்ஷித்துக் கொள்வதில் சோம்பேறிகளாக இருப்பார்கள் என்கிறார்.
எம்பெருமானே, நித்ய சூரிகளை உகப்பது போலவே இந்த சோம்பேறிகளையும் நீ உகக்கிறாய் போலும், என்கிறார்.
திருவரங்கத்திலே வந்து, கண் வளர்ந்து அருளுகிற இந்த செயலே, இத்தகைய சோம்பரை பார்த்து அவர் உகப்பது தெரிகிறது என்கிறார். மேலெழ பார்ப்பவர்களுக்கு சோலைகளும் நீர்வழிகளும் பார்த்து பெரிய பெருமாள் கண் வளர்ந்து இருப்பதாக தோன்றும், ஆனால், ஊன்றி பார்ப்பவர்களுக்கு, இத்தகைய ஒரு சோம்பேறியை பெறுவோமா என பெரியபெருமாள் ஆசையுடன் எதிர்பார்த்து ஆசையுடன், சோம்பல் இன்றி கண் வளர்ந்து அருளுகிறார் என்கிறார்.
இத்துடன் இந்த பாடலின் அர்த்தத்தை முடித்துக் கொண்டு, இனி இந்த பாடலில் எப்படி திருமந்திர, சரம ஸ்லோக மற்றும் த்வய அர்த்தங்கள் எப்படி சொல்லப்பட்டன என்று பார்ப்போம்.
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்ற இந்த இரண்டு அடிகள் திருமந்திரத்தின் அர்த்ததை சொல்கின்றன.
“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹ”
சூழ் புனல் அரங்கத்தானே உன் கடைத் தலை என்பது, த்வயத்தின் முதல் பகுதியில் உள்ள நாராயண சப்தத்தின் பொருளாய், அடியவர்களை தாங்குவதற்கு சௌகரியம் செய்யும் குணங்களான, சௌசீல்யம், சௌலப்யம், வாத்சல்யம், ஸ்வாமித்வம், இவற்றை சொல்கிறது.
பிராட்டி ஸ்வரூப நிருபக தர்மமாக இருப்பதாலும், நாராயண சப்தத்தில் உள் அடங்கியவளாலும், நாராயண சப்தமான உன் என்ற பதத்தில் லட்சுமி சம்பந்தம் இருக்கிறது என்கிறார். உன் என்ற பதத்தினால் நாராயண சப்தம் சொல்லப் படுகிறது.
கடைத்தலை என்றது சரணநௌ என்பதன் அர்த்தம். த்வயத்தில் சரண சப்தத்தால் சொல்லப் பட்ட திருவடிகளை ‘உன் கடைத்தலை‘ என்ற வாக்கியத்தால் சொல்கிறார். தன்னுடைய தாழ்ச்சியை நினத்து, திருவடி அருகே செல்லக் கூச்சப் படுவதால், வாசலிலேயே நிற்கிறார் என்று முன்பே சொல்லப்பட்டது.
இருந்து வாழும்” என்ற வினை சொல் ப்ரபத்யே என்பதில் உள்ள எம்பெருமானே உபாயம் என்று உறுதியாக சொல்வதுடன், அந்த உறுதியே இனிமையாக இருக்கும் என்பதையும் காட்டுகிறார். சரணமடைகிறேன் (ப்ரபத்யே) என்று சொல்லி, சோம்பரை என்று குறிப்பிட்டு, சரணாகதி வேண்டும் என்ற அதிகாரியின் லக்ஷணத்தை சொல்கிறார்.
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி என்று இரண்டு அடிகளின் மூலம், த்வய மகா மந்திரத்தின் இறுதி பகுதியின் பொருளான பிராப்யம் அல்லது நாம் அடைய வேண்டிய கைங்கர்யம் பற்றி சொல்லபட்டது. மேம்பொருள் போக விட்டு என்று சொல்லியபிறகு மீண்டும் ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வதால் கைங்கர்யம் செய்வதும் அவனுடைய உகப்பிற்காகவே என்பதை தெளிவாக்குகிறார். இதையே மீண்டும் தொண்டரடிபொடி ஆழ்வார் நாற்பதாவது பாசுரத்தில் ‘திருமறு மார்ப‘ என்று தெளிவாக காட்டவும் போகிறார்.
ஐம்புலன் அகத்து அடக்கி என்று சொல்வது, த்வய மகா மந்திரத்தில் இறுதியாக வரும் நம ஸப்தத்தின் அர்த்தமும் ஆகும்.
ஆக இந்த பாசுரம், த்வயத்தை மிக விரிவாக விளங்குவதாகவும், திருமந்திர, சரம ஸ்லோக அர்த்தங்கள் பலவற்றையும் காட்டுவதாகவும் அமைந்து இருக்கிறது.
இன்னொரு ஆழ்வார் பாடல் அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம், நன்றி.