A Simple Devotee's Views
ருக்மணி தாயார் ஸமேத பார்த்தசாரதி திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவல்லிக்கேணி பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம் அல்லது துளசிக் காடு) பஞ்சமூர்த்தி ஸ்தலம் | |||
மூலவர் 1 உத்ஸவர் 1 தாயார் 1 மற்றவர்கள் | வேங்கடகிருஷ்ணன் (கிழக்கே திருமுகமண்டலம்- நின்ற திருக்கோலம் ) பார்த்தசாரதி ருக்மணி தாயார் (மூலவர் 1 சன்னதியில்) பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யும்னன் | |||
மூலவர் 2 தாயார் 2 | ரங்கநாதன், மன்னாதன் ( கிழக்கே திருமுகமண்டலம் -புஜங்க சயனம்) வேதவல்லி தாயார் (தனிக்கோவில் நாச்சியார்-மன்னாதனுக்கு) | |||
மூலவர் 3 தாயார் 3 மற்றவர்கள் | ஸ்ரீ ராமன் (தெற்கே திருமுகமண்டலம், நின்ற திருக்கோலம்) சீதா தேவி (மூலவர் 3 சந்நிதியில்) பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கனன் | |||
மூலவர் 4 | ஸ்ரீ வரதராஜன் (கிழக்கே திருமுகமண்டலம், கருடன்மேல் அமர்ந்த திருக்கோலம்) | |||
மூலவர் 5 | தெள்ளிய சிங்க பெருமாள் (மேற்கே திருமுகமண்டலம், அமர்ந்த திருக்கோலம்) | |||
திசை | கிழக்கு (மூலவர் 1,2 மற்றும் 4); மேற்கு (மூலவர் 5), தெற்கு (மூலவர் 3) | |||
பாசுரங்கள் | 12 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 பேய் ஆழ்வார் 1 திருமழிசையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 – 2844 2462, +91 44 2844 2449. |
திருவல்லிக்கேணி பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவல்லிக்கேணி தொடர்பான நம் பதிப்புகள்
கோவில் பற்றி
திருவேங்கடவனால் காட்டப்பட்ட எம்பெருமான், ஆதலால் வேங்கட கிருஷ்ணன் என்னும் திருநாமம் உண்டாயிற்று. வலதுபுறம் ருக்மிணி பிராட்டியுடன் தெற்கே பலராமன், இடது புறம் ஸாத்யகி, வடக்குப்புறம் அநிருத்தன், பிரத்யும்னன் இவர்களோடு குடும்ப சகிதமாக கிழக்கு நோக்கி 9 அடி உயரம் கொண்ட நின்ற திருக்கோலம். 108 திவ்ய தேசங்களிலே தன் குல வழக்கப்படி பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்றுதான். மார்கழி மாதம் பகல் பத்து உற்சவத்தில், ஆறாம் நாள் முதல் பத்தாம் நாள் வரை மட்டும் இவரை மீசை இல்லாமல் சேவிக்க முடியும். மூலவர் திருவடிகளில், அனந்தாழ்வான், நின்றால் திருவடியாம் என்பதைக் காட்டும் திருக்காட்சியை காணலாம்.
இங்கு பார்த்தசாரதி எம்பெருமான், இரண்டு திருக்கரங்களுடன் தான் காட்சி அளிக்கிறார். ஒரு திருக்கரத்தில் சங்கும், இன்னொரு திருக்கரத்தால், திருமலையில் உள்ளது போல் தன் திருவடியைக் காட்டியபடி சேவை சாதிக்கிறார். தன் முக்கிய ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமல் காட்சி தருகிறார். மஹாபாரத போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால், போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.
கண்ணன் அர்ஜு னனுக்குத் தேரோட்டியாக இருந்த போது, பீஷ்மர் விட்ட அம்புகளை ஏற்றுக் கொண்டதை காண்பிக்க இன்றைக்கும், பார்த்தசாரதி (உற்சவர்) திருமுகத்தில் வடுக்களைக் காணலாம். அதனால் இந்த கோவிலில் செய்யப்படும் பிரசாதங்களில் அதிகம் நெய் சேர்க்கப்படுகிறது. இங்கு உற்சவ மூர்த்தி கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
நம் ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும், அதிகமாக ஈடுபட்டு வந்த ஒரு சில திவ்ய தேச மூர்த்திகளில் திருஅரங்கம், திருப்பதி, மற்றும் காஞ்சி தேவப் பெருமாள் என்ற மூன்று ஸ்தலங்களின் பெருமையாக ஸ்வாமி ராமானுஜர் இயற்றிய ”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம், ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம், ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்” என்ற ஸ்லோகம் உள்ளது. அந்த முக்கிய திவ்யதேசங்களான வேங்கடம், அரங்கம், கச்சி என்ற மூன்று எம்பெருமான்களையும் இந்த ஒரு இடத்திலேயே தரிசிப்பது ஒரு சிறப்பு. (ஸ்லோகத்தில் உள்ள மற்றொரு திவ்யதேசமான மேல்கோட், 108 திவ்யதேசங்களுக்குள் இல்லை).
ஒரே கோவிலில் உள்ள ஐந்து மூலவர்களும் ஆழ்வார்களிடம் இருந்து பாடல் பெற்ற ஸ்தலம் இது ஒன்று தான். ராமர், ரங்கநாதர், நரசிம்மர், வரதராஜர், பார்த்தசாரதி என்ற ஐந்து எம்பெருமான்களுக்கும் தனியே பாசுரங்கள் பெற்ற திவ்யதேசம். இவர்களில், பார்த்தசாரதியை நின்ற திருக்கோலமாகவும், நரசிங்க பெருமானை அமர்ந்த திருக்கோலமாகவும், ரங்கநாதனை சயன திருக்கோலமாகவும், ராமனை நடந்த திருக்கோலத்திலும், வரதராஜனை பறந்த திருக்கோலத்திலும் சேவிக்கலாம் என்று சொல்வார்கள்.
நித்யம் கருட சேவை சாதிக்கும் பெருமாள் என்று இந்த கஜேந்திர வரதராஜ பெருமாளை கூப்பிடுகிறார்கள்.
திருப்பதியில் வராக பெருமாள் ஸ்தலத்து பெருமாளாக இருப்பது போல், இங்கு ஸ்தலத்து பெருமாள், மன்னாத பெருமாள் என்று அழைக்கப்படும் ரங்கநாதன் ஆவார். ரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் ஒரு ஆயுதமும் இல்லாமல் சயனித்து காட்சி அளிக்கிறார்.
இக்கோயிலிலுள்ள யோக நரசிம்மர் யோகபீடத்தில் வீற்றுஇருந்த திருக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சி அளிக்கிறார் அங்கு அவரை வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை முகத்தில் தெளித்தால், அந்த தீர்த்ததை அருந்தினால், பீடித்திருக்கும் “துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள்” போன்ற பாதிப்புகள் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டு. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால் எந்த சப்தமும் வரக்கூடாது என்பதால், இந்த சந்நிதியில் உள்ள மணிகளில் நாக்கு கிடையாது.
இங்கே, பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனி வாயில்கள், கொடிமரங்கள் உற்சவங்கள் உண்டு. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.
ஐப்பசி மாதம் திருமூல நட்சத்திரத்தில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் தெப்போத்ஸவம் மாசி மாதம் ஏழு நாட்கள் நடைபெறுகின்றன. பார்த்தசாரதிக்கு 3 நாட்கள், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கஜேந்திர வரதருக்கு தலா ஒரு நாள் என்று ஐந்து எம்பெருமான்களும் வெவ்வேறு தினங்களில் தெப்பத்தில் இருந்து தரிசனம் தருகிறார்கள். தெப்பத்திலேயே ஒரு நாள் பார்த்தசாரதிக்கு நடைபெறும் திருமஞ்சனம் மிகவும் விசேஷம்.
வேதவல்லி தாயார், வரதராஜர், நரசிம்மர், ஆண்டாள், ராமர், ரங்கநாதர், சக்ரத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள், இராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் சன்னதிகள், பிரகாரத்தில் உள்ளன.
ஆனந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம் என்று ஐந்து விமானங்களுடன், இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ள கைரவிணி (அல்லிக்கேணி) என்ற தீர்த்தமும் அடங்கிய திருத்தலம். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், இந்த தீர்த்தத்தில் (குளத்தில்) மீன்கள் வசிப்பதில்லை. அழகிய அல்லிமலர்கள் நிறைந்த குளத்தை கொண்டதால், திரு அல்லிக் கேணி என்ற பெயர் வந்தது என்பர்.
இக்கோவிலில், சக்கரை பொங்கல் பிராசாதம் மிகவும் பிரசித்தமானது.
தமிழ் மாதம் | ஆங்கில மாதம் | திருவிழாக்கள் |
---|---|---|
சித்திரை | Apr-May | ப்ரம்மோத்ஸவம், உடையவர் உற்சவம் |
வைகாசி | May-Jun | வசந்தோத்ஸவம், கஜேந்திரவரதர்உற்சவம் , ரங்கநாதஸ்வாமி வேதவல்லி உற்சவம் |
ஆனி | Jun-Jul | ஸ்ரீ நரசிம்ம சுவாமி ப்ரம்மோத்ஸவம் மற்றும் கோடை உற்சவம் |
ஆடி | Jul-Aug | கஜேந்திரமோக்ஷம், பார்த்தசாரதி ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, திருஆடிப்பூரம் |
ஆவணி | Aug-Sep | பவித்ரோத்ஸவம் ஸ்ரீ ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜெயந்தி |
புரட்டாசி | Sep-Oct | நவராத்திரி, வேதவல்லி தாயாருக்கு லக்ஷார்ச்சனை, புரட்டாசி சனி |
ஐப்பசி | Oct-Nov | ஸ்ரீ மணவாள மாமுனிகள் உற்சவம், தீபாவளி, அன்னக்கூட உற்சவம் |
கார்த்திகை | Nov-Dec | கார்த்திகை தீபம் |
மார்கழி | Dec-Jan | மார்கழி பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து |
தை | Jan-Feb | பார்த்தசாரதி பெருமாளுக்கு லக்ஷார்ச்சனை, ரத சப்தமி |
மாசி | Feb-Mar | மாசி மகம், தெப்போத்ஸவம் |
பங்குனி | Mar-Apr | பங்குனி உத்திரம், ஸ்ரீ ராம நவமி |
புகழ் பெற்ற மனிதர்களான “சுவாமி விவேகானந்தர்”, “மகாகவி பாரதியார்”, “கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம்” போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர். தியாகப்ரம்மம், முத்துஸ்வாமி தீக்ஷிதர், பாரதியார் இந்த எம்பெருமானைப் பாடி உள்ளார்கள்.
சுவாமி விவேகானந்தர், பார்த்தசாரதியின் பக்தர். 1893 ஆம் ஆண்டில் தனது சீடரான அலசிங்காவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ‘திருவல்லிக்கேணியின் பார்த்தசாரதி பகவான் முன் சிரம் தாழ்ந்து (குனிந்து), ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் தியாகத்தை செய்ய முன் வாருங்கள், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் பார்த்த சாரதி இறைவன் அவ்வப்போது வருகிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் அவர்களை நேசிக்கிறான்’ என்று எழுதி உள்ளார். அவரது சீடருக்கு எழுதிய இந்த கடிதத்தை கோவில் நடைபாதையில் சுவர்களில் ஒன்றில் பொறிக்கப்பட்டு உள்ளதை இன்றும் காணலாம்.
ஸ்தல வரலாறு
வேத வியாசருக்கு, ஆத்ரேய முனிவர் என்னும் ஒரு சீடர் இருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி, தவம் செய்ய பிருந்தாரண்யத்திற்கு வந்தார். அப்பொழுது வியாசரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த விக்ரகம் ஒரு திருக்கரத்தில் சங்குடனும், மற்றொரு திருக்கரத்தை தன் திருவடியில் சரணம் அடைய சொல்லி அருள் புரியும் வண்ணமும் விளங்கியது.
சுமதி என்னும் மன்னன் வேங்கட மலையில் ஸ்ரீனிவாசப் பெருமாளை வழிபட்டு, பார்த்தனுக்கு சாரதியாக தேரோட்டிய கண்ணனாக எம்பெருமானை தரிசிக்க விரும்புவதாக பிரார்த்தித்து தவம் செய்ய தொடங்குகிறார். தவத்தின் பலனாக ஸ்ரீனிவாசப் பெருமாள் வானில் தோன்றி, மன்னன் விரும்பிய தோற்றத்துடன் கைரவிணி தீர்த்தம் உள்ள பிருந்தாரண்யத்தில் எழுந்தருளி உள்ளேன் என்றும் அங்கு சென்று தரிசிக்கவேண்டும் என்றும் சொன்னார். சுமதி என்ற மன்னனும் அவ்வாறே செய்தான் என்பது வரலாறு. சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கு இசைந்து, ஆத்ரேய முனிவர் பிரதிஷ்டை செய்த எம்பெருமானே இங்கு வேங்கட கிருஷ்ணனாக / பார்த்தசாரதியாக எழுந்து அருளி உள்ளார்.
அத்ரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால் அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்து அருளினார்.
மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து அவர் விரும்பிய வண்ணம் ராமனாக இத்தலத்து எழுந்தருளினார். சீதை, இலக்குவன், பரத சத்ருக்னரும் பின் தொடர்ந்தனர்.
சப்தரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்கு உகந்து கஜேந்திரவரதர் கோலத்தில் இங்கு காட்சி தந்தார்.
திருமகள் இவ்விடத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த பிருகு மகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் அவதரிக்க, வேதங்களில் கூறப்பட்ட தேவ பெண் இவளே என்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். ரங்கநாதனே இளவரசர் வடிவம் பூண்டு திருமகளான இந்த வேதவல்லியை திருமணம் புரிந்து ரங்கநாதராக இங்கேயே எழுந்து அருளி ஏற்றுக் கொண்டார். திருமகள் ரங்கநாதரைக் கண்டதும் இவரே என் கணவர் (மந்நாதர்) என்று கூறியதால், மந்நாதர் என்ற பெயரும் இந்த ரங்கநாதருக்கு உண்டு. இங்கே உள்ள தனிக்கோவில் நாச்சியாரான வேதவல்லித் தாயார், இந்த மந்நாதரான ரங்கநாதனுக்குத் தேவி.
ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள்
முதலாழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழிசையாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இந்த எம்பெருமான்களைப் பாடி உள்ளார்கள்.
தெள்ளிய சிங்கம் ஆக அவதரித்த தேவன் என்று ஆழ்வார் அழைத்ததால் திருவல்லிக்கேணியில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளை “தெளிசிங்கப்பெருமாள்” அல்லது தெள்ளிய சிங்க பெருமாள் என்று திருநாமம் கொண்டு அழைப்பர். ‘துளசிங்கப் பெருமாள்’ என்று அழைப்பது பிழை ஆகும்.
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில் (2.3.1) பாசுரத்தில், “விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ, செற்றவன் தன்னை, புரமெரி செய்த சிவனுறு துயர்களை தேவை, பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர்முன் நின்றானை, சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று பார்த்த சாரதியையும்,
பெரிய திருமொழியில் (2.3.7) பாசுரத்தில், “பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும், இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவண அந்தகனை எம்மானை,” என்று ராமரையும்,
பெரிய திருமொழியில் (2.3.8) பாசுரத்தில், “பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிர நாமம், ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதற்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி, பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்பப் பிறை எயிற்று அனல்விழிப் பேழ்வாய், தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக் கேணிக் கண்டேனே” என்று நரசிம்மரையும்,
பெரிய திருமொழியில் (2.3.9) பாசுரத்தில் “மீன் அமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த, கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ, ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை, தேன் அமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே” என்று கஜேந்திர வரதனையும் பாடி உள்ளார்.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில், (35), “தாளால் உலகம் அளந்த அசைவே கொல், வாளா கிடந்து அருளும் வாய்திறவான், – நீள் ஓதம்வந்து அலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்து தலைவாய் நாகத்தணை” என்று பள்ளிகொண்டு காட்சி கொடுக்கும் ரங்கநாதனைப் பார்த்து, வாமனனாக இந்த உலகத்தை அளந்ததால் வந்த களைப்பின் மிகுதியால், பேசாமல் இந்த கடற்கரையில் ஐந்து தலை நாகத்தின் மேல் அயர்ந்து சயனித்துக் கொண்டுவிட்டாயோ என்று பாடி உள்ளார்.
ஸ்ரீ பிள்ளைலோகச்சாரியார் தனது “ராமானுஜ திவ்யசரிதம்” என்ற படைப்பில், ஸ்வாமி ராமானுஜரின் தந்தை ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜி, திருவல்லிகேணியில் உள்ள கோயில் குளத்தில் புத்ரகாமேஷ்டி யாகத்தை நிகழ்த்தினார் என்றும், அவருக்கு புத்திர பாக்கியம் வேண்டி இந்த எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்தார் என்றும் எழுதி உள்ளார். பார்த்தசாரதி எம்பெருமான் ஸ்ரீ அஸூரி கேசவ சோமயாஜியின் கனவுகளில் தோன்றி, மனிதகுலத்தின் நலனுக்காக தனது கீதையின் போதனைகளை வழங்க, தானே அவருக்கு மகனாகப் பிறப்பதாக உறுதியளித்தார். பார்த்தசாரதிப் பெருமானே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது. பின் காலத்தில் ஸ்ரீ ராமானுஜரால் கீதா பாஷ்யம் என்ற நூல், பகவத் கீதை பற்றிய மதிப்பாய்வு மற்றும் வர்ணனைகளை உள்ளடக்கி எழுதப்பட்டது.
திருவிழாக்களின் போது மேற்கண்ட மரபுக்கு இணங்க, மற்ற ஆழ்வார் மற்றும் ஆச்சார்யர்களைப் போல் அல்லாமல், ஸ்ரீ ராமானுஜர் காலையிலும் மாலையிலும் தனியே புறப்பாடு காண்பார். அதாவது பார்த்தசாரதி எம்பெருமான், அவரே ராமானுஜராக அவதரித்ததால், ராமானுஜருடன் சேர்ந்து புறப்பாடு காண்பதில்லை.
இப்படி குடும்பத்துடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பார்த்தசாரதிக்கு மங்களம் பாடும் போதும், “ப்ருந்தாரண்ய நிவாஸாய, பலராம அநுஜாய ச, ருக்மிணி ப்ராண நாதாய, பார்த்தஸூதாய மங்களம்“ என்று எல்லோருக்கும் சேர்த்து வணக்கம் செலுத்தி, அவர்களுடைய பரிபூர்ண அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்தித்து, இந்தத் திருத்தலம் பற்றிய மேல் விவரங்கள் கிடைத்தால், திரும்ப வந்து பதிவு செய்வோம் என்றும் கூறி, இந்தப் பதிவில் இருந்து இப்போது விடைபெறுவோம். நன்றி.
திவ்விய தேசம் பற்றிய விரிவான விளக்கம் அருமை! மிக்க நன்றி!🙏🏽🙏🏽
Many thanks for your continued support, with best regards adiyen
”ஸ்ரீரங்க மங்கள நிதிம் கருணா நிவாஸம், ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம், ஸ்ரீ ஹஸ்திசைல சிகரோஜ்வல பாரிஜாதம், ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்” என்ற ஶ்லோகம் திருவரங்கம், திருவேங்கடம், அத்திகிரி என மூன்று தலங்களை மட்டுமல்லாது , நான்கவாதாக “ஸ்ரீசம் நமாமி சிரஸா யது சைல தீபம்” – என்ற இறுதி வரியில் ‘யது சைல’ என மேல்கோட் யாதவகரி செல்வ நாராயணப் பெருமாள் கோயில் தலத்தையும் குறிப்பதாகும்.
நன்றி. சிறப்பாக உள்ளது. இங்கு இந்த மூன்று திருத்தலங்களை மட்டும் குறிப்பிட்டது, திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில், இந்த மூன்று எம்பெருமான்களும் இருக்கிறார்கள் என்பதால் தான். இந்த பாடலின் முழு விளக்கத்தை இங்கு கொடுக்காதது ஒரு குறையே. அதை நிவர்த்தி செய்யும் வண்ணம் தங்குளுடைய உரை சிறப்பாக அமைந்து உள்ளது. இன்னொரு பதிப்பில் அடியேன் இது பற்றி கூறி உள்ளேன், https://rvenkatesan2307.com/2016/07/08/archais-glories-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ நன்றி.
‘யாதவ கிரி’ என வாசிக்கவும்.