A Simple Devotee's Views
கனகவல்லி தாயார் ஸமேத வைத்ய வீரராகவப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருஎவ்வுள் திருவள்ளூர் புண்ணியாவர்த்த க்ஷேத்திரம் விஷாரண்யக்ஷேத்திரம் | |||
மூலவர் | வீரராகவ பெருமாள், வைத்யவீரராகவப்பெருமாள் , க்ரும்க்ருஹேசன் | |||
உத்ஸவர் | வீரராகவ பெருமாள் | |||
தாயார் | கனகவல்லி, வஸுமதி (தனிக்கோயில் நாச்சியார்) | |||
திருக்கோலம் | கிடந்த (புஜங்க சயனம்) | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 12 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 11 திருமழிசையாழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44-2766 0378, +91 97894 19330 |
கோவில் பற்றி
இந்த திவ்யதேசத்திற்கு திருவள்ளூர் என்பதே பிரசித்தமான பெயர். சென்னை திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 50 கீ மீ தூரத்தில் உள்ளது.
சாலிஹோத்திரர் முனிவரின் சிரசில் வலது கரத்தால் ஆசி செய்து பிரம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் இடது கரத்தை ஞான முத்திரையாகக் காட்டி கிழக்கே திருமுகம் வைத்து காட்சி அளிக்கிறார். மூலவர் சுமார் 15 அடி நீளமும் 5 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக எழுந்து அருளி உள்ளார். மூலவருக்கு சந்தனத்தில் மட்டுமே திருமஞ்சனம். இந்த எம்பெருமானுக்கு திருக்கோவிலில் கிடைக்கும் பப்பிளி துப்பட்டி என்ற மேல் வஸ்திரம் வாங்கி சாத்தலாம்.
எம்பெருமானுக்கு வடமொழியில் கிங்க்ருஹேசன், என்னும் திருநாமம். அதுவே தமிழில் எவ்வுள் கிடந்தான் என்னும் திருநாமமாக மாறியது.
இந்த தாயாருக்கு வசுமதி என்றும், கனகவல்லித் தாயார் என்றும் திருநாமங்கள் உண்டு. அவருக்கு தனி சன்னதியும் உண்டு.
இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், நரசிம்மர் சன்னதிகள் பிரசித்தி பெற்றவை.
இந்த திருத்தலத்தில் உள்ள விமானம், விஜயகோடி விமானம் ஆகும்.
இங்கு செய்யப்படும் புண்ணியமாவது பல்லாயிரம் மடங்காக விருத்தியாவதால் புண்யாவர்த்த க்ஷேத்ரம் என்று பெயர்.
அமாவாசை அன்று இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, குளத்தில் வெல்லம் கரைத்து, இந்த எம்பெருமானை சேவித்தால் எல்லா வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. வீரராகவன், வைத்ய வீரராகவனாக கருணை புரிவான் என்பது ஐதீகம். தை அமாவாசை அன்று இங்கு பக்தர்கள் பெருந்திரளாக கூடியிருந்து நீராடுவர்.
ஹ்ருதபாபநாசினி என்பது இங்குள்ள திருக்குளத்தின் பெயர். ஹ்ருதயத்தில் உள்ள பாபங்களை கூட நாசம் செய்யவல்ல இந்த திருக்குளம் கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படும்.
இத்தீர்த்தமும் திருக்கோவில் சன்னதியும் அஹோபில மடத்தின் நிர்வாகத்திற்குட்பட்டதாகும்.
தீர்த்தக் கரையின் முன்னால் இப்பெருமானைத்
தரிசித்தபடி சிவன் நின்றுள்ள காட்சியைக் காணலாம்.
தைமாத ப்ரமோத்ஸவம், சித்திரை மாதம் ப்ரமோத்ஸவம் பத்து நாட்கள் என்று சிறப்பாக கொண்டப்படுகின்றன. பவித்ரோத்ஸவம் 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
Google Map
திருவள்ளூரைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
Thanks to friends from whatsapp group for all the images
ஸ்தல வரலாறு
இது பல சரித்திரங்கள் கொண்ட புண்ணியம் நிறைந்த திவ்யதேசம் ஆகும்.
க்ருதயுகத்தில் புரு புண்ணியர் என்பவர் பத்ரியில் புத்திரப்பேறு வேண்டி சாலி எனப்படும் நெல்மணிகளால் செய்யப்படும் சாலியக்ஞம் என்னும் யாகம் செய்தார். யாகத்தின் முடிவில் தோன்றின மகாவிஷ்ணு அவரின் யாகத்தை மெச்சி, அவரது விருப்பனான புத்திர பாக்கியத்தையும் அளித்தார். சாலி யக்ஞம் செய்து புத்திரப்பேறு பெற்றதால், சாலிஹோத்ரன் என்ற பெயருடன் பிரசித்தி பெற்று, தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இந்த திவ்யதேசத்தை அடைந்தார். இங்கு, பல ரிஷிகள், தவம் செய்வதும், இங்குள்ள ஹ்ருதபாபநாசினி என்னும் தீர்த்தத்தில் தேவர்கள் வந்து நீராடி செல்வத்தையும் பார்த்து, இங்கேயே தங்கி எம்பெருமானிடம் பக்தியுடன் தொண்டு செய்து வந்தார். அரிசியை மாவாக்கி எம்பெருமானுக்கு அமுது படைத்து அதனை அதிதிக்கு கொடுத்த பின்னே தான் உண்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், தானே ஒரு முதியவர் ரூபத்தில் அதிதியாக வர, தாம் வைத்திருந்த மாவில் ஒரு பகுதியை சாலிஹோத்ரர் கொடுத்தார். அதை உண்ட பின்பும் தமது பசி அடங்கவில்லை என்று முதியவர் கேட்க தனக்கு வைத்திருந்த மீதி மாவினையும் கொடுத்தார். அதனையும் உண்டு முடித்த எம்பெருமான் மிகவும் களைப்பாக உள்ளது என்றும், படுக்கச் சற்று இடம் வேண்டும் என்றும், எங்கு படுக்கலாம் என்றும் கேட்டது “எவ்வுள்” என்பதால், இந்த திருத்தலம் திரு எவ்வுள் என்று ஆனது.
சாலி ஹோத்ரர் அங்குள்ள ஒரு இடத்தைக் காட்டி, “இந்த அறையில் சயனிக்கலாம்” என்று சொல்ல, தனது முதிய சொரூபத்தை மாற்றி, எம்பெருமான் கிழக்கே திருமுகம் வைத்து சயனித்தார். சாலிஹோத்ரர் தாம் செய்த பாக்கியத்தை எண்ணி எம்பெருமானிடம் பணிந்து நிற்க அவரும், தமது வலது திருக்கரத்தை சாலிஹோத்ர முனிவரின் தலையில் வைத்து அவரை ஆசீர்வதித்து அருள்பாலித்து சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார்.
சாலிஹோத்ர முனிவருக்காக எம்பெருமான் இங்கே சயனித்துவிட, எம்பெருமானைச் சேரும்பொருட்டு மகாலட்சுமி வஸு மதி என்ற பெயரில், தர்மசேனபுரம் என்னும் நாட்டை ஆண்ட திலீப மகாராஜாவுக்குப் பெண்ணாக அவதரித்து, இந்த எம்பெருமானை மணம் முடித்ததாக வரலாறு.
ஒரு சமயம் சிவனை அழைக்காது அவரது மாமனார் தட்சன் யாகம் செய்ய, அவனுக்குப் புத்திமதி கூறி திருத்துவதற்காகச் சென்ற உமையவளின் பயணம் பயனில்லாது போயிற்று. இதனால் சிவனுக்கும் பார்வதிக்கும் பெரும் போராட்டம் உண்டாகி பின்பு சிவன் தனது நெற்றியின் வியர்வைத் துளிகளிலிருந்து தோன்றிய வீரபுத்திரனை ஏவி தட்சனை அழித்தான்.
பிரம்ம வித்தான தட்சனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் சிவனுக்கு ஏற்பட்டது. அதனில் இருந்து விடுபட, சிவன் இத்திருத்தலம் வந்து திருக்குளத்தில் நீராடி, எம்பெருமானை வணங்கியதால், சிவனுக்குப் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்கியது என்ற வரலாறும் உண்டு.
பயங்கர ரூபங்கொண்ட மது கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் பிரம்மாவின் படைப்புத் தொழில் ரகசியத்தை திருடி பிரம்மாவை அச்சுறுத்த, பிரம்மன் திருமாலிடம் வேண்டினார். திருமால், இவ்விருவரையும் போர் செய்து ஓட விட்டார். அவர்கள் சூர்ய சந்திரர்களின் ஒளியை மறைத்து இந்த உலகை இருளில் மூழ்கடித்தனர். இறுதியில் எம்பெருமான் அவர்கள் மீது சக்ராயுதத்தை ஏவ, இருவரும் ஓடி ஒழிந்தார்கள்.
அவ்விதம் ஓடிவந்த இவ்விருவரும் இறுதியில் ஹ்ருதபாபநாசினி என்னும் இந்த தீர்த்தத்தில் மூழ்கி தம்மை மறைத்துக்கொண்டனர். இந்த தீர்த்தத்தில் மூழ்கியதால் எம்பெருமான் சினம் தணிந்து அவர்களையும் ரட்சித்தான் என்பர்.
இந்த மது கைடபர்கள் வரலாறு, ஸ்தல புராணமாக வானமாமலை திருமய்யம் போன்ற திவ்ய தேசங்களுக்கும் சொல்லப் பட்டுள்ளன. ஓடி ஒளிந்த மது, கைடபர் மீண்டும் மீண்டும் தவம் செய்து வலிமை பெற்று பல முயற்சி செய்தார்கள் என்றோ வேறு வேறு மது கைடபர்கள் என்றோ கொள்ளலாம்.
பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள கங்கா தீர்த்தத்தில் தேவ பாகர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு முறை மார்க்கண்டேய முனிவரை சகல பாபங்களையும் போக்கவல்ல புண்ய தீர்த்தமும், மோக்ஷத்தைத் தரக் கூடிய எம்பெருமான் எழுந்து அருளியுள்ள திருத்தலம் எது என்று வினவ அவர் தேவபாகரிடம் இந்த திருத்தலத்தின் மேன்மைகளை எடுத்துக் கூறியதாக புராணம் கூறுகிறது.
கௌசிகன் தனது முதுமை பருவத்தில் இங்குள்ள ஹ்ருதபாபநாசினியினில் நீராடி உயிர் நீத்தான். அன்று தை அமாவாசை என்றும் இவனை யமலோகத்திற்கு எடுத்து சென்ற யமதூதர்கள் இவன் செய்த பாவங்களால் நரகத்திற்கு கொண்டு வந்ததாக சொல்ல, எமன் இவன் தை அமாவாசையன்று ஹ்ருதபாபநாசினி நீராடியதால் இவனுடைய பாவங்கள் தீர்க்கப்பட்டன என்றும் சொல்லி, கௌசிகனை மோக்ஷத்திற்குக் கொண்டு செல்லவும் உத்தரவு விட்டதாக புராணம் கூறும்.
ஆழ்வார்கள்
இராவணனைக் கொன்ற இராமபிரான் தான் இந்த திருத்தலத்தில் சயன திருக்கோலத்தில் (கிடக்கிறார்) என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டு உள்ளது. திருமழிசையாழ்வாரால் ஒரு பாடலாலும் திருமங்கையாழ்வாரால் பத்து பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்.
திருமழிசையாழ்வார், நான்முகன் திருவந்தாதி (3.6) என்ற பாசுரத்தில், ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே எம்பெருமான் திருஎவ்வுள் போன்ற ஏழு திவ்யதேசங்களில் சயனித்துள்ளான் என்று சொல்லி உள்ளார். அந்த ஏழு திவ்ய தேசங்களாவன, “திருக்குடந்தை, திருவெஃகா, திருவெவ்வுளுர், திருவரங்கம், திருப் பேர்நகர், அன்பில் மற்றும் திருப்பாற்கடல்.
நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுள், நாகத்தணை அரங்கம் பேரன்பில், – நாகத் தணைப் பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால், அணைப்பார் கருத்தனாவான்.
ஸ்ரீகிங்கிருஹேச ஸ்துதி என்ற பெயரால் சுவாமி தேசிகன் இப்பெருமானுக்கு தனி ஸ்துதி நூல் ஒன்று எழுதி உள்ளார்.