058 திருநின்றவூர் Thirunindravoor

ஸ்ரீ ஸுதாவல்லித் தாயார் ஸமேத பக்தவத்ஸல பெருமாள் திருவடிகள் சரணம்

திவ்யதேசம்திருநின்றவூர்
மூலவர்பக்தவத்சலப் பெருமாள் / பத்தராவிப் பெருமாள்
உத்ஸவர் பத்தராவிப்பெருமாள்
தாயார்என்னைப்பெற்ற தாயார் / ஸுதா வல்லி
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்2
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 2
தொலைபேசி+91 44 5517 3417

தொண்டைநாட்டைப் பற்றிய ஓர் முன்னுரையை இங்கே காணலாம், நன்றி.

கோவில் பற்றி

இத்தலம் சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகத் திருவள்ளூர்ச் செல்லும் சாலையில் உள்ளது. திருநின்றவூர் என்பதை விட திண்ணனூர் என்று சொன்னாலே பலருக்கு தெரிகிறது.

திருவாகிய மஹாலக்ஷ்மி, திருப்பாற்கடலை விட்டு இங்கு வந்து நின்றதால் இந்த திருத்தலம் திரு நின்ற ஊர் ஆயிற்று.

பக்தர்க்கு இரங்கும் பண்பினானதால், பக்தவத்சல பெருமாள் என்றும் பக்தர்கள் அவனுக்கு உயிர் ஆனதால், பக்தராவி பெருமாள் என்றும் எம்பெருமானுக்கு திருநாமம். பக்தர்களின்
உயிருக்குயிராய் இருப்பதால் பக்தராவி பெருமாள் என்றும் கொள்ளலாம்.

ஸமுத்திரராஜன் வந்து மஹாலக்ஷ்மியிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டும் போது, “என்னை பெற்ற தாயே” என்று வேண்டியதால், தாயார் திருநாம என்னை பெற்ற தாய் என்று ஆயிற்று. தெலுங்கில் ‘நன்னு கன்ன தல்லி’ என்பர்.

ஸமுத்திர ராஜன் இங்கே வந்தபோது, மேகத்திற்கு எடுத்து செல்ல சமுத்திர நீர் இல்லாததால், மழை தேவதையான வருணனும் இங்கே வந்தபோது அவனுக்கும் இங்கு எம்பெருமானும் தாயாரும் காட்சி அளித்துள்ளனர்.

இக்கோவிலில், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்சேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் இராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு சன்னதிகள் உண்டு.

இங்குள்ள ஆதிசேஷன் சந்நிதியில் பால்பாயசம் செய்து நிவேதனம் செய்வதன் மூலம் இராகு கேது தோஷங்கள் நீங்கும் என்று சொல்கிறார்கள்.

இராஜகோபுரம் பிரம்மாண்டமாக உள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி தாண்டி சென்றால் உள்மண்டபத்தில், எம்பெருமான் தாயாருடன் சுமார் 11 அடிஉயரத்தில் ஐந்து ஆயுதங்களுடன் சேவை சாதிக்கிறார்.

வருண தீர்த்தம் அருகில் (குளம்) ஏரி காத்த இராமர் சன்னதி உள்ளது ஆஞ்சநேயருக்கு சன்னதி உண்டு. மதுராந்தகம் போன்ற இங்கும் ஒரு ஏரி காத்த ராமன் உள்ளார்.

ஸ்தல வரலாறு

மஹாலக்ஷ்மி ஆதிசேஷனைத் தாங்கியுள்ள தன்னுடைய தந்தையான ஸமுத்திர ராஜனுடன் கோபம் கொண்டு, இவ்விடத்து வந்து நின்றார். பிறகு ஸமுத்திரராஜன் நேரில் வந்து மன்னிப்புக் கேட்டு மீண்டும் எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்தான். எவ்வளவு கூறியும், மஹாலக்ஷ்மி மறுத்துவிடவே ஸமுத்திர ராஜன் வைகுந்தம் சென்று, எம்பெருமானிடம் முறையிட்டுத் தாங்களே என்னை ரட்சிக்க வேண்டும் என்றும், ஸ்ரீதேவித் தாயாரை மீண்டும் எழுந்தருளச் செய்ய அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டினான். பக்தர்க்கு இரங்கும் பண்பினான பரந்தாமன், ஸமுத்திர ராஜனை முதலில் பிராட்டியிடம் செல்லச் சொல்லியும், பிறகு தான் பின்னால் வருவதாகவும் சொல்லியனுப்ப, அப்படியே ஸமுத்திர ராஜன் பிராட்டியிடம் திரும்ப வந்து, “என்னை பெற்ற தாயே, என்னை மன்னிக்கவேண்டும்” என்று வேண்டியும் திருமகள் சமாதானம் அடையவில்லை. அப்பொழுது அங்கு எம்பெருமானும் எழுந்தருளி, சமாதானம் செய்ய மஹாலக்ஷ்மி மீண்டும் வைகுந்தம் எழுந்தருள சம்மதித்தார். எம்பெருமானும் பிராட்டியும் ஸமுத்திர ராஜனைக் நோக்கி, என்ன வேண்டும் என்று
கேட்க, தாங்கள் இருவரும் இத்திருமணக் கோலத்தில் காட்சி தந்து இங்கேயே நின்றிருக்க வேண்டும் என்று வேண்ட அப்படியே திருமகளும், திருமாலும் அருளினார்கள்.

குபேரன் தன் செல்வதை இழந்தபோது, இந்த திருத்தலத்தின் என்னை பெற்ற தாயாரை வணங்கி செல்வதை திரும்ப பெற்றான் என்று ஒரு வாய்வழி செய்தியும் உள்ளது.

இந்த எம்பெருமானிடம் உண்மையான பக்தியுடன் வேண்டிக்கொண்டவர்களுக்கு அவர்களது பிரார்த்தனை ஈடேறுகிறது என்பதற்கு உதாரணம் இராமானுஜரின் மூத்த சகோதரிக்கு ராமபிரானின் அம்சமாக முதலியாண்டான் என்ற ஆசார்யன், அவர்களின் தாய் தந்தை இந்த எம்பெருமானிடம் மனதார வேண்டிக் கொண்டதால், பிறந்து அந்த பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்தது.

Google Map

திருநின்றவூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருநின்றவூர் பற்றி தினம் ஓர் திவ்யதேசம்

ஆழ்வார்

திருமங்கையாழ்வார் வடக்கில் இருந்து தொடங்கி, திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது எம்பெருமான் மஹாலக்ஷ்மியையே பார்த்துக் கொண்டு இருந்து, ஆழ்வாரை பார்க்காமல் இருந்ததால், இத்தலத்தின் வழியாகச் சென்றும் ஆழ்வார் இதனைப் பாடாது சென்றார். இதைக் கண்ட பிராட்டி, பெருமாளை ஆழ்வாரிடம் உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொல்ல, பெருமாள் வருவதற்குள் திருமங்கை ஆழ்வார் திருவள்ளூர், திருவல்லிக்கேணி, திருநீர்மலை மற்றும் திருவிடந்தை சென்று அதையும் தாண்டி, திருக்கடல்மல்லைக்கு (மாமல்லபுரம்) சென்று விட்டார். திருக்கடல் மல்லை திவ்யதேசத்தை பாடும் போது, அங்கு திருநின்றவூர் எம்பெருமானைக் கண்ட திருமங்கையாழ்வார், “நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை, காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே” என்று பக்தராவிப்பெருமாள் வந்து நின்றதை நான் கண்டது திருக்கடல்மல்லையில் என்று (பெரிய திருமொழி 2.5.2) பாடி உள்ளார்.

பாடல் பெற்றுவந்த எம்பெருமானை நோக்கிய பிராட்டி, ஒன்று தானா என்று கேட்க எம்பெருமான் மீண்டும் பாடல் பெற திருமங்கை ஆழ்வாரை தேட, அதற்குள் அவர் திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். திருநின்றவூர் எம்பெருமான் அங்கு வர, திருக்கண்ணமங்கை எம்பெருமானை பாடும் போது, திருநின்றவூர் பெருமாள் நிற்பதைக் கண்ட ஆழ்வார் “நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, காற்றி னைப் புனலைச் சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே” என்று திருநின்றவூர் எம்பெருமானை, திருநின்றவூரிலே முத்துத் திரள்போலே தாபஹரமான வடிவு கொண்டு எழுந்து அருளி இருப்பவன் என்றும், அவன் காற்றினும் மேலாக வந்த வேகத்தைக் குறித்தும் பெரியதிருமொழியில் (7.10.5) திருக்கண்ணமங்கை எம்பெருமானுடன் சேர்த்து மங்களாசாசனம் செய்து உள்ளார்.

Thanks to friends from whatsapp group for all the images

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading