A Simple Devotee's Views
ருக்மிணி சத்யபாமா ஸமேத பாண்டவ தூதப்பெருமாள் திருவடிகள் போற்றி
திவ்யதேசம் | திருப்பாடகம் | |||
மூலவர் | பாண்டவ தூதப்பெருமாள் | |||
உத்ஸவர் | பாண்டவ தூதப்பெருமாள் | |||
தாயார் | ருக்மணி சத்யபாமா | |||
திருக்கோலம் | வீற்றுஇருந்த திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 6 | |||
மங்களாசாசனம் | திருமழிசையாழ்வார் 2 திருமங்கையாழ்வார் 2 பூதத்தாழ்வார் 1 பேய்ஆழ்வார் 1 | |||
தொலைபேசி | +91 44 – 27231899 |
தொண்டைநாட்டு திவ்யதேசங்களை பற்றிய ஒரு முன்னுரையை இங்கே காணலாம், நன்றி
கோவில் பற்றி
பாடு என்பது மிகப் பெரிய என்றும் அகம் என்பது இருப்பிடம் என்றும் அர்த்தம். இங்கே பாடகம் என்பது மிகப்பெரிய இடம் என்ற பொருளில் வருகிறது.
அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 27 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் அழகுத் திருமேனியுடன் இந்த எம்பெருமான் காட்சி அளிக்கிறார். அமர்ந்த திருக்கோலத்தில், இந்த அளவிற்கு உயரமான மூலவர் வேறு எந்த திவ்யதேசத்திலும் இல்லை.
கர்ப்ப கிரஹத்தின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையில் இருந்து பார்ப்பது போல், இருக்கும்.
ரோஹிணி நக்ஷத்ரகாரர்களுக்கு இது உகந்த திருத்தலம் அவர்கள் இங்கு வந்து சேவித்தால் வேண்டியவைகள் யாவும் நடப்பதாக நம்பிக்கை.
எம்பெருமானின் நின்ற, அமர்ந்த, மற்றும் கிடந்த திருக்கோலங்களுக்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று திருத்தலங்களே அதிக அளவில் பேசப்படுகிறது. அதாவது நின்ற திருக்கோலத்திற்கு ஊரகம், வீற்றுஇருந்த திருக்கோலத்திற்கு பாடகம், மற்றும் கிடந்த திருக்கோலத்திற்கு திருவெஃகா தான் என்று சொல்லப்படுகிறது.
எம்பெருமானுக்கு ஆயிரம் ஆயிரம் திருநாமங்கள் இருக்க, தான் தன் அடியவர்களுக்கு செய்த தூது கைங்கர்யத்தை நினைவு படுத்தும் திருநாமமாகிய பாண்டவ தூதன் என்ற திருநாமத்தோடு இங்கு காட்சி அளிப்பது விஷேசம்.
ஸ்தல வரலாறு
எம்பெருமான் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது போனான். பாண்டவர்களின் பலம், இந்த கண்ணன் மட்டும் தான், அதனால், இந்த கண்ணனை சிறைபிடித்தால் பாண்டவர்களை எளிதில் வென்றுவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்ட துரியோதனன், கண்ணனுக்கு என்று அமைத்த ஆசனத்தின் கீழ் ஒரு நிலவறையை உண்டாக்கி, கண்ணன் அமர்ந்தவுடன் அது சரிந்து நிலவறையை அடையும்படி செய்தான். கண்ணன் நிலவறையை அடைந்தவுடன் அவனை கைது செய்யவும் ஏற்பாடு செய்து வைத்து இருந்தான். துரியோதனன் திட்டப்படி நிலவறைக்குள் சென்ற கண்ணன் நொடிப்பொழுதில் அங்கு இருந்தவர்களைக் கொன்று மஹாபாரதத்தில் முதல் முறையாக விஸ்வரூபம் எடுத்து சபையில் உள்ளவர்களுக்கு காட்சி தந்தான். மீண்டும் கண்ணன் பாரத யுத்தம் தொடங்குமுன் அர்ச்சுனனுக்கு போர்க்களத்தில் விஸ்வரூப தரிசனம் கொடுத்தது இரண்டாவது முறை.
பாரத யுத்தம் முடிந்த பிறகு ஜெனமேஜெயன் என்ற அரசர், வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்டு வரும் போது ஸ்ரீகிருஷ்ணர் எடுத்த இந்த முதல் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்று ஆசைப்பட்ட்டார். முனிவர் சத்யவ்ரத க்ஷேத்ரமான காஞ்சியில் அஸ்வமேதயாகம் செய்தால், யாகத்தின் முடிவில் அந்தத் திருக்கோலத்தைக் தரிசிக்கலாம் என்று
கூற மன்னன் அவ்விதமே செய்தான்.
யாகத்தின் முடிவில் கண்ணன் தோன்றி, இந்த திருக்கோலத்தில் ஜெனமேஜயனுக்கும் ஹாரித முனிவர்க்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு.
ரோஹிணி கிருஷ்ண பகவானிடம் வணங்கி, சந்திரனை அடையும் பேற்றினை பெற்றாள். தனக்கு ஞான சக்தியை அதிகம் கொடுத்த விஸ்வரூப கிருஷ்ணனை இங்கு தினமும் ரோஹிணி வழிபடுவதாக ஐதீகம். சந்திரன், தான் 27 பெண்களிடமும் ஒரேபோல் அன்பு செலுத்துவதாக தகப்பனாக தக்கனிடம் கூறியத்திற்கு மாறாக, தான் திருமணம் புரிந்துகொண்ட 27 நட்சத்திர மனைவிகளில் ரோகிணி என்ற ஒரு தேவிக்கு மட்டும், அதிக அன்பு செலுத்தி வந்தான் என்று தலைச்சங்க நாண்மதிய பெருமாள் ஸ்தலவரலாற்றில் பார்த்தோம். சந்திரன் ரோஹிணியின் ஞான சக்திக்கு முன்னுரிமை கொடுத்துள்ளான்.
ஆழ்வார் ஆச்சார்யர்
நம்மாழ்வாரின் “நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன, ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள் – (திருவாய்மொழி 5.10.6) என்ற பாடல், எம்பெருமானின் நிலைகளில் விபவத்திற்கு என்று சொல்லப்பட்ட பாடல். அர்ச்சைக்குக்கு என்று எந்த திவ்யதேசத்தையும் பாடலில் சுவாமி நம்மாழ்வார் குறிப்பிடவில்லை. இருந்தாலும், இதற்கு விளக்கம் எழுதிய உரையாசிரியர், திருவூரகத்தில் நின்றபடியும், திருப்பாடகத்திலே இருந்தபடியும் திருவெஃகாவிலே கிடந்த படியும் என்று எழுதி உள்ளது கவனிக்க வேண்டியது.
பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்,
திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டது இந்த திவ்யதேசம்.
யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி, ஸ்ரீஇராமானுஜரின் வாதிட்டு, அதில் தோற்று, ராமாநுஜரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றினார். இந்த அருளாளப் பெருமாள் இந்த திவ்ய தேசத்தில்தான் வாழ்ந்து பல கைங்கர்யங்கள் செய்து உள்ளார். அவருக்கும் பல சீடர்கள் உண்டு. அவருக்கு இங்கு தனி சன்னதி உண்டு.
மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம்
செய்து உள்ளார்.
Google Map
ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருப்பாடகம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்