A Simple Devotee's Views
அணிமாமலர்மங்கை தாயார் ஸமேத நீர்வண்ணபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருநீர்மலை தோயாத்ரிகிரி (காண்டவனம்) | |||
மூலவர் 1 தாயார் திசை திருக்கோலம் இடம் | நீர்வண்ணன், நீளமுகில்வண்ணன் , நீலவண்ணப்பெருமாள், காண்டபவனப் பெருமாள், காண்டபவன நாதன் அணிமாமலர் மங்கை (தனிக்கோவில் நாச்சியார்) கிழக்கே திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம் மலை அடிவாரக்கோவில் | |||
மூலவர் 2 திசை திருக்கோலம் இடம் | சாந்த நரசிம்மன் , பாலநரசிம்மர் கிழக்கே திருமுகமண்டலம் வீற்று இருந்த திருக்கோலம் மலைக்கோவில் | |||
மூலவர் 3 தாயார் திசை திருக்கோலம் இடம் உற்சவர் | ரங்கநாதன் ரங்கநாயகி (தனிக்கோவில் நாச்சியார்) தெற்கே திருமுகமண்டலம் மாணிக்க சயன திருக்கோலம் (கிடந்த) மலைக்கோவில் அழகிய மணவாளன் (இவர் இருப்பது மலையடிவார கோவிலில்) | |||
மூலவர் 4 திசை திருக்கோலம் இடம் | த்ரிவிக்ரமன் , உலகளந்த பெருமாள் கிழக்கே திருமுகமண்டலம் நின்ற திருக்கோலம் (நடந்தான்) மலைக்கோவில் | |||
பாசுரங்கள் | 20 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 19 பூதத்தாழ்வார் 1 | |||
தொலைபேசி | 91- 44-2238 5484, +91 98405 95374, +91 94440 20820. |
கோவில் பற்றி
இது ஒரு மலைக்கோயில் ஆகும். சுமார் 200 அடிஉயரம் உள்ள மலை இது ஆகும். மலைக்கு மேல் ஏறிச்செல்ல படிகள் வசதியாக உள்ளன. மலையடிவாரத்திலும், மலையின் மேலும் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. இங்கு எம்பெருமான் நான்கு திருக்கோலங்களில், மூன்று அவதார பெருமைகளோடு காட்சி அளிக்கிறார். நின்றான்(நீர்வண்ணன்), இருந்தான்(நரசிம்மன்), கிடந்தான்(ரங்கநாதன்), நடந்தான்(த்ரிவிக்ரமன்) என்ற நான்கு திருக்கோலங்களில் இந்த எம்பெருமான் நரசிம்மன், த்ரிவிக்ரமன், இராமபிரான் என்ற அவதாரங்களாக திருநீர்மலையில் காட்சி தருகிறார்.
தாமரை மலர் பீடத்தில் ஹஸ்த முத்திரை பொருந்திய
அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன், திருமார்பில் சாளக்கிராம மாலையுடன் நீர்வண்ண எம்பெருமான், மலையடிவாரத்தில் காட்சி தருகிறார். நீர் சூழ்ந்த மலையின் நடுவில் காட்சி கொடுப்பதால், இவருக்கு நீர்வண்ணன் என்ற பெயர் உண்டாயிற்று. இந்த எம்பெருமான் நீல வண்ணத்தில் இருப்பதால், நீலவண்ணப்பெருமாள் என்றும் பெயர் உண்டு.
இராமன் தனி சன்னதியில் மலையடிவார கோவிலில் தரிசனம் தருகிறார். வால்மீகி இராமரை வணங்கிய நிலையில் சுயம்புவாக இந்த சந்நிதியில் உள்ளார்.
பொதுவாக கோவில்களில் சுவாமி, கோபுரம், கொடிமரம், பலிபீடம் என்று எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். வால்மீகிக்கு நீர்வண்ணனாகவும், ராமனாகவும் காட்சி அளித்ததால் இரண்டு எம்பெருமான்களுக்கும் மரியாதை செய்யும் வண்ணம், கோபுரம் ராமர் சன்னதிக்கு எதிராகவும், கொடிமரம் நீர்வண்ணனுக்கு எதிராகவும் அமைக்கப்பட்டு உள்ளது.
மலைமேல் உள்ள நரசிம்மர் பாலநரசிம்மராக காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்மனும் த்ரிவிக்ரமனும் பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின், அவதார பயன் கிடைத்தபின், மகிழ்ச்சியுடன் ஸ்ரீ வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது என்கிறார்கள். அதாவது வீற்றுஇருந்த திருக்கோலத்தில் பாலநரசிம்மராகவும், நடந்த நிலையில் உலகளந்த திரிவிக்ரமனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
மேலும், மலைமேல் சயன திருக்கோலத்தில், ரங்கநாதனாகவும், மலையடிவாரத்தில் திருமணக் கோலத்தில் இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் போகும் முன் உள்ள சீதாராமனாகவும், நின்ற திருக்கோலத்தில் நீர்வண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்கள்.
பொதுவாக மூலவரும் உற்சவரும் ஒரே இடத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு, மலைமேல் உள்ள மூலவரான ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் வருடத்தில் மூன்று முறை தான் மலைமேல் காட்சி அளிக்கிறார். மற்ற நாட்களில் மலையடிவார கோவிலிலே தான் இருக்கிறார். சித்திரை ப்ரம்மோத்ஸவத்தின் போது கொடியேற்றம் நாள் அன்றும், விடையாத்தி (உற்சவ கடைசி நாள்) நாளன்றும், பங்குனி திருக்கல்யாண வைபவத்தின் போதும் மட்டும் மலைமேல், அழகியமணவாளன் மூலவருடன் காட்சி அளிக்கிறார்.
மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என்று ஐந்து தீர்த்தங்கள் பெயர்களுடன், இங்கு உள்ள திருக்குளம் மூன்று ஏக்கர் பரப்பில், நடுவில் நீராழி மண்டபத்துடன் அமைந்து உள்ளது.
காண்டபவனப் பெருமாள் என்றும், காண்டபவன நாதன் என்றும், இந்த பிரதேசத்தின் பெயரில் இந்த எம்பெருமானை அழைத்து வந்தார்கள். திருமங்கை ஆழ்வார் வந்த போது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால் நீர்மலை என்றும் திருநீர்மலை என்றும் பெயர் வந்தது. திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த இடம் இன்று திருமங்கைஆழ்வார்புரம் என்னும் பெயருடன் இங்கிருந்து சமீபத்தில் உள்ளது.
மலைமேல் உள்ள கோவில் என்பதால் பௌர்ணமி அன்று கிரிவலம் செய்வதும் இங்கு ஒரு விஷேசம். தோயம் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். இங்குள்ள மலைக்கு தோயாத்ரி, நீரால் சூழப்பட்ட மலை என்று பெயர்.
திரு நீர் மலை என்று பிரித்துப் பார்த்தால் நீர் என்பது எம்பெருமானின் நீர்மை என்ற குணத்தை குறிக்கும். நீர்மை என்பது எளிமை, அல்லது அடியார்களைக் கண்டால் உருகும் தன்மை. மலை என்பது எம்பெருமானின் உறுதியை குறிக்கும், அதாவது அடியார்களை ஏற்றுக்கொள்வதில் அவருக்கு உள்ள உறுதியை குறிக்கும். நீர் என்பது எம்பெருமானின் சௌலப்யத்தையும் (எளிமை), மலை என்பது எம்பெருமானின் பரத்துவத்தையும் (உயர்ந்தவன்) என்பதையும் குறிப்பதாக கொள்ளலாம்.
கோவில் திருவிழாக்கள்
சித்திரையில் ப்ரம்மோத்ஸவம் 10 நாட்கள் மலைமேல் உள்ள ரங்கநாதருக்கும், வைகாசியில் வசந்த உற்சவம், ஆனியில் கோடை உற்சவம், புரட்டாசியில் சனிகிழமைகள், பவித்ரோத்ஸவம், என்று பல திருவிழாக்கள் மலைக்கோவில், மற்றும் மலையடிவாரக் கோயில்களில் கொண்டாப்படுகின்றன. ப்ரம்மோத்ஸவத்தின் போது ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் எம்பெருமான் புறப்பாடு காண்கிறார்.
தைமாதம், ரதசப்தமி அன்று ஒரே நாளில் ரங்கநாதர் ஏழு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிப்பார். அன்று சூரிய உதயத்திற்கு முன்பு சூரிய பிரபை வாகனத்தில் புறப்பட்டு தீர்த்தக்கரையில் சூரிய உதயத்தின் போது, எம்பெருமானின் பாதம் முதல் கேசம் வரை படிப்படியாக தீபாராதனை காண்பார். இது எம்பெருமானுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவார்கள். பின்னர் அன்று, அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம், சிம்ம வாகனம் என்று தொடர்ந்து, சந்திரப்பிரபையுடன் என்று அன்றைய திருவிழா நிறைவுபெறும். ரதசப்தமி திருவிழா திருமலையிலும் சிறப்பாக ஏழு வாகன புற்பாடுகளுடன் நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசியின் போது அழகிய மணவாளன் சொர்க்கவாசல் கடக்கிறார். மாசி மகத்தின் போது கருடவாகனம் காண்பதும் அவரே. பங்குனி உத்திரத்தில் ரங்கநாதருக்கும் ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஆனியில் ஒரு நாள் உற்சவம் நரசிம்மருக்கும், ஆடியில் ஒருநாள் உற்சவம் உலகளந்த பெருமாளுக்கும் நடைபெறுகிறது. அப்பொழுது அவர்கள் மலையடிவார கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவையும் சாதிக்கிறார்கள்.
பங்குனியில் நீர்வண்ண பெருமாளுக்கு மலை அடிவாரத்தில் ப்ரம்மோத்ஸவம். சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் நீர்வண்ணனுக்கும் அணிமாமலர் மங்கை தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
சித்திரை மற்றும் பங்குனி ப்ரமோத்ஸவத்தின் போது 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி அன்றும் என்று மூன்று துவாதசி நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.
ஸ்தல வரலாறு
இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக ஒரு வரலாறு உண்டு. வால்மீகி மலை மீது ஏறி சயனத் திருக்கோல ரங்கநாதன், அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே வந்தார்.
வால்மீகிக்கு இம்மூவரைச் சேவித்தும் ஏனோ பூரண திருப்தி உண்டாகவில்லை. உள்மனத்தை ஏதோ வருத்தியது. மலையில் இருந்து இறங்கியதும் கிழக்கு நோக்கி நின்று, வால்மீகி தன்னுடைய இனிமையான, பிரியமான, பேரழகு வாய்ந்த ஸ்ரீராமபிரான் எங்கே என்று கண்ணீர்நீர் மல்க பிரார்த்தித்து வணங்கினார்.
ஸ்ரீமன் நாராயணன் வால்மீகியின் பிரார்த்தனைக்கு இரங்கி, இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் மூலமாகவே வால்மீகிக்கு இராமராக காட்சி அளித்தார். அதாவது இங்குள்ள ரங்கநாதனே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவும், மகாலட்சுமியே சீதா பிராட்டியாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும், சக்ரத்தாழ்வான் பரதராகவும், சங்கு சத்ருக்னனாகவும், விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும், கருடன் ஆஞ்சநேயராகவும், ரம்யமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து வால்மீகியின் துக்கத்தைப் போக்கி, கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம். நீர்வண்ணனாக ராமனின் பேரழகுடன், காட்சி அளித்த திருக்கோலத்துடன் இங்கேயே எப்பொழுதும் தரிசனம் கொடுக்க வேண்டும் என்று வால்மீகி வேண்ட, அப்படியே எம்பெருமான் காட்சி அளிக்கிறார் என்பது வரலாறு.
மிகுந்த கோபத்துடன், ஹிரண்யகசிபுவை இரண்டாக பிளந்த பின், இருந்த உக்ர நரசிம்ம தோற்றத்தைக் கண்டு சிறுவன் பிரஹலாதன் பயந்து நடுங்கியபோது, அவனுக்காக, சாந்த சுவரூபியாய், பாலநரசிம்மனாக காட்சி அளித்தார்.
பிருகு முனிவருக்கும் மார்கண்டேய மகரிஷிக்கும் அவர்களின் வேண்டுதலின் படி ரங்க நாயகி சமேத ரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயன சேவையில் இங்கு காட்சி கொடுத்ததும் அவர்களும் மூலவரின் சந்நிதியில் வணங்கி நிற்கிறார்கள்.
ஆழ்வார்
இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய வந்த போது தொடர்ந்து மழை பெய்ததால், மலையைச் சுற்றிலும் அரண் போல் நீர் சூழ்ந்து கொண்டது. ஆழ்வாரால், எம்பெருமானை தரிசிக்க முடியவில்லை. ஆறு மாதங்கள் காத்து இருந்து நீர்வற்றிப் போன பின்பு இந்த எம்பெருமானை சேவித்து சென்றார் என்பது வரலாறு.
திருநரையூரில் நின்ற திருக்கோலத்திலும், திருவாலியில் வீற்றுஇருந்த திருக்கோலத்திலும், திருகுடந்தையில் சயனத் திருக்கோலத்திலும், திருக்கோவிலூரில் நடந்த திருக்கோலத்திலும் காணும் எம்பெருமான்களை இவ்வூரில் நான்கு நிலைகளிலும் காணலாம். அதனால் நீர்மலையான இந்த திவ்யதேசம், மாமலை ஆயிற்று என்று பெரிய திருமொழி (2.4.1) பாடலில் திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்களுக்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாடி உள்ளார் பூதத்தாழ்வார்.
பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறுவற்கு பல வழிகள் சொல்லப்பட்டாலும், அவற்றுள் மணிகர்ணிகா வழிபாடு விசேஷமானது. காசிக்குச் செல்பவர்கள் கங்கைக்கரையிலுள்ள ‘மணிகர்ணிகா காட்’ என்ற தீர்த்தக் கட்டத்துக்குச் சென்று பித்ருக்களை நினைத்து வழிபட்டு வரலாம். ஒருமுறை, இந்த தீர்த்தக்கட்டத்துக்கு எழுந்தருளிய ஆதிசங்கரர், அங்கே தன் தாயாருக்குத் தர்ப்பணம் செய்தார். அப்போது, தமது ஞானதிருஷ்டியால் மணிகர்ணிகாவின் பெருமையையும் சக்தியையும் அறிந்து வியந்து மணிகர்ணிகா அஷ்டகம் என்ற ஸ்லோகத்தை இயற்றினார். எவரொருவர், மணிகர்ணிகா தீர்த்தக் கரையில் அமர்ந்து பித்ரு பூஜை செய்து, இந்தத் துதியை மூன்று முறை படிக்கிறாரோ, அவர் பிரம்மனைப் போன்று மதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள நான்கு மணிகர்ணிகா தீர்த்தங்களில், திருச்சிக்கு அருகில் உள்ள திருவெள்ளறையில், ஸ்ரீசெண்பகவல்லி உடனுறை ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலத்தில் உள்ள தீர்த்தமும் சென்னை திருநீர்மலையில், ஸ்ரீஅணிமாமலர் தாயார் சமேத ஸ்ரீநீர்வண்ணர் சந்நிதிக்கு எதிரில், புஷ்கரிணி தீர்த்தமும் அடங்கும். திருநீர்மலை மணிகர்ணிகா தென்னகத்து விஷ்ணு கயா ஆகும்.
1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ
வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!
மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!
தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!
ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹரனும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணி மரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.
2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:
ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:!
யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:
ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!
தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!
3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா
தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!
ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா
காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!
புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிக கனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.
4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா
தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I
தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்
பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!
கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகை ஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.
5.து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:
ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!
லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா:
காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!
உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோ தர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.
6.ஏகோ வேணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார
யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: !
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:
ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !!
புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்ணே. நினது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.
7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே
சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: !
ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா
புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!
ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறான்.
8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:
ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: !
யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !!
மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.
9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்
தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!
ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்
தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!
கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர், ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.
*- Thanks to friends from whatsapp group for the details on Manikarnika.