080 திருவல்லவாழ் / Thiruvallavaazh

ஸ்ரீ செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் ஸமேத ஸ்ரீ கோலப்பிரான் திருவடிகள் போற்றி போற்றி

மலை நாட்டு திவ்ய தேசங்கள் பதின்மூன்று :

திருவனந்தபுரம், திருவண்பரிசாரம், திருகாட்கரை, திருமூழிக்களம், திருச்சிறு புலியூர், திருசெங்குன்றூர், திரு நாவாய், திரு வல்லவாழ், திரு வண்வண்டூர், திருவாட்டாறு, திருவித்துவக் கோடு, திருக்கடித்தானம் , திருவாறன் விளை (ஆரம்முளா).

திருவல்லவாழ் என்ற இந்த திவ்ய தேசம், கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது. இது இங்குள்ள மக்களால் திருவல்லா, திருவல்லா என்று இனிமை கொஞ்சி அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்கு கோட்டயத்தில் இருந்து எண்ணற்ற பேருந்துகள் உண்டு. கொல்லத்திலிருந்து எர்ணாகுளம் செல்லும் புகைவண்டி மார்க்கத்திலும் திருவல்லா புகைவண்டி நிலையத்தை அடையலாம். அங்கு இருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் இந்த திருதலம் உள்ளது. திருவல்லாவை தொடர்ந்து அதனை சூழ்ந்த மற்ற ஐந்து திவ்ய தேசங்களைச் சேவிக்கலாம்.

  • கோட்டயத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் செங்கனாச்சேரி
  • செங்கனாச்சேரியிலிருந்து 3 கீ.மி. தூரம் திருக்கடித்தானம்.
  • திருக்கடித்தானத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவல்லா.
  • திருவல்லாவிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவண்வண்டூர்
  • திருவண்வண்டூரிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருச்செங்குன்றூர்.
  • திருச்செங்குன்றூரிலிருந்து மேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் திருப்புலியூர்

இந்த திவ்ய தேசம் ஸ்ரீவல்லப ஷேத்ரம் என்று மிகவும் பிரபலம். இங்கு எழுந்து அருளி இருக்கும் எம்பெருமான் பிரம்மச்சார்ய விரதம் அனுஷ்டிக்கிறார். மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திரத்தின் அன்றும், சித்திரை மாதத்து விஷு (வருடப்பிறப்பு) அன்றும் மட்டுமே, எம்பெருமானுக்கு திருமார்பு தரிசனம் என்பதால், இத்தலத்தில் அந்த இரண்டு தினங்கள் மட்டும் பெண்கள் சன்னதி சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற எல்லா நாட்களிலும், பெண்கள் சன்னதிக்கு வெளியில் இருந்து சேவிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் 1967 க்கு முன்பு, கருவறைக்குள் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆண்டிற்கு இருமுறை வேடனைப் போன்று (தனுர் மாசம்-திருவாதரை நாள் மற்றும் சித்திரை மாசம்-விஷு தினத்தில்) இறைவன் வேட்டை ஆடுகிறார். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 7 மணி முதல் நடக்கும் பூஜைகள் சிறப்பானது.

மாசி மாதம், பூச நட்சத்திரத்தில் ஆறாட்டு என்ற விழா நடைபெறுகிறது. இது ஒரு பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா ஆகும். மார்கழி திருவாதிரை அன்று சிவன் எம்பெருமானின் கோலத்தை காண வந்ததாக ஐதீகம், அதனால் இந்த திருத்தலத்தில் விபூதி பிரசாதமும் அளிப்பார்கள். கண்டாகர்ணனின் சிவபக்தியைக் குறிக்கும் வகையில், சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் விபூதி வழங்கப்படுகிறது.

மே மாதத்தில், ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது, அருகிலுள்ள கோயில்களில் இருந்து 3 பகவதிகள் (காவில் கோயில் தேவதை, படப்பட் கோயில் மற்றும் ஆலம்துரத் கோவில்கள்) இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். கோவில் வடக்கு வாசலில் இருந்து போத்திகளால் சிறப்புப் பல்லக்குகளில் இந்த தெய்வங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த நாளில் மட்டுமே, இந்த கதவு திறக்கப்படுகிறது

மற்ற கேரளக் கோயில்களைப் போலவே, இந்த திருக்கோவிலும் கர்ப்பகிரகம் வட்ட வடிவில் உள்ளது. கிழக்குப் பக்கம், வல்லபப் பெருமானின் சன்னதியும், இக்கோயிலுக்குப் பின்னால் சுதர்சன ஆழ்வாருக்கு ஒரு சிறிய சன்னதியும் உள்ளது.

இந்த திருத்தலத்தில் உள்ள பெரிய குளம் தானாகவே உண்டானது என்றும் இன்றும் கூட பூமிக்கு அடியில் இருந்து ஊற்றுக்கள் மூலம் இந்தக் குளத்திற்கு தண்ணீர் வருவதாகச் சொல்லப் படுகிறது. புஷ்கரிணி பொதுவாக மலைநாட்டு திவ்ய தேசங்களில் கோவில் வளாகத்திற்கு வெளியே காணப்படும். அதேசமயம், இந்த திவ்ய தேசத்தில், கோவில் வளாகத்தினுள் உள்ளது மற்றும் இது ஒரு பெரிய குளம். மலையாளத்து பாணியில் இந்த திருத்தலத்திலும் பக்தர்களுக்கு பூக்களும் சந்தனமும், பிரசாதமாக ஒரு இலையில் அளிக்கப்படுகிறது.

இங்கு உள்ள இன்னொரு ஆச்சரியமான விஷயம், 50 அடி உயரம் 2 அடி சுற்றளவும் உள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் கருங்கல். இந்த கல் பூமிக்கடியில் இதே 50 அடி ஆழத்தில் சென்று இருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை. மேலும் இந்த சுற்றுப்புறத்தில் பாறைகளே இல்லை என்பது இன்னொரு தகவல். இந்த கல் தூணின் மீது பஞ்சலோகத்தால் உருவான ஒரு கருடாழ்வாரை வைத்து உள்ளார்கள். கருடாழ்வார் தமது ஒரு கரங்களையும் விரித்து உடனே புறப்படுவதை போல் உள்ளது. இந்தக் கல்தூண் துவஜஸ்தம்பத்திற்கு (கொடிக் கம்பம்) சற்று பின்புறம் அமைந்துள்ளது. நாலாம்பலம் (துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள பகுதிகள்) கிரானைட் கற்களால் ஆனது. த்வஜஸ்தம்பத்தின் உச்சியில் சுமார் 3 அடி உயரத்தில் கருடன் பஞ்சலோக சிலை உள்ளது. கோயில் மிகப் பெரியது, த்வஜஸ்தம்பமும் பெரியது.

மலையாள திவ்ய தேசங்களில், சுதர்சன ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கும் திருத்தலம் இது. அதே போல, துவஜஸ்தம்பத்திற்கு பொன் தகடு வேயப்பட்டுள்ளதும் மற்றொரு தனிச் சிறப்பாகும்..

இந்த கோவில் விஸ்வகர்மா நிரமாணித்த கோவில்.  பெருமாளின் திருமுகத்தைப் பார்த்தால் திருவடி தரிசனம் செய்ய முடியாத வகையிலும், தூரத்தில் இருந்து பெருமாளின் திருவடியை தரிசித்தால் திருமுகத்தை தரிசனம் செய்ய முடியாத வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் துர்வாச ரிஷியின் சிலை உள்ளது, மேலும் அவர் ஒவ்வொரு இரவும் பெருமாளுக்கு பூஜை செய்வதாக நம்பப்படுகிறது. சங்கு, மணி போன்ற சத்தம் கேட்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்

குழந்தைப்பாக்கியம் இல்லாதவர்கள் மக்கள் செல்வம் வேண்டி அவ்வப்போது கதகளி நிகழ்ச்சியை இங்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அந்நிகழ்ச்சியின் மூலமாக  எம்பெருமானிடம் புத்திரப்பேறு வேண்டுவது என்பது இதன் பொருள்.

திருவல்லாவாழ் என்ற இந்த திருவல்லா என்ற திவ்ய ஸ்தலத்தைப் பற்றி, கருடபுராணம், மத்ஸ்ய புராணம் போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன.

சங்கரமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், இந்த திவ்ய தேசத்திற்கு வந்து ஏகாதசி விரதம் இருந்து துவாதசியன்று அதிதிகளுக்கு உணவு படைத்து அதன்பின் விரதத்தை முடிக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தாள். அப்படி அவள் இந்த விரதத்தில் அதில் மிகுந்த பக்தி சிரத்தையுடன் ஈடுபட்டிருந்தாள். தோலகாசுரன் என்னும் அரக்கன் ஒருவன் இந்த விரதத்திற்கு இடையூறு செய்து. துன்பம் விளைவிக்கவே, அந்த பெண், இந்த அரக்கனை வதம் செய்ய எம்பெருமானை வேண்டிக் கொண்டாள். எம்பெருமான் அவளுக்கு தெரியாமல் அந்த அசுரனை வாமன ரூபத்தில் வந்து, சக்ராயுதத்தை ஏவினார். அது அவனை பல துண்டுகள் ஆக்கியது. அப்படி வதம் செய்து அவசரம் அவசரமாக துவாதசி பாரணை (விரதம் முடிக்க) செய்யவரும் போது, எம்பெருமான் திருமார்பில் மறைத்து வைத்து இருந்த மகாலக்ஷ்மியை தரிசனம் செய்து, இந்த சிறுவன் எம்பெருமான் தான் என்று நிச்சயம் செய்து, அவனிடம் எம்பெருமானின் திருமார்பு தரிசனம் வேண்டி இந்த பெண் மோக்ஷம் பெற்றாள் என்பது வரலாறு. அவளின் வேண்டுகோளின்படியே எம்பெருமான் இங்கே, திருவாழ்மார்புடன் இன்றும் பக்தர்கட்கு அருள்புரிவதாக ஐதீஹம். இதனையொட்டியே திருவல்லவாழ் என்ற பெயர் இந்த திருத்தலத்திற்கு உண்டானதாக வரலாறு.

இந்தப் பெண், பாளையில் எம்பெருமானுக்கு தயிர் சாதம் இட்டு உப்பு மாங்காயை சமர்ப்பித்தாள். இன்றும் அந்த வழக்கம் கோவிலில் உள்ளது. துவாதசி அன்று பிரம்மச்சாரிக்கு இட்டு பிறகு எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் வழக்கமும் உள்ளதாக சொல்கிறார்கள்.

கண்டாகர்ணன் என்ற ஒரு சிவபக்தன், சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டபடி மஹாவிஷ்ணுவைக் குறித்து தவமிருந்து எட்டெழுத்து மந்திரத்தை ஜபிக்கலானான். அந்த மந்திரத்தை ஜபிக்கும் போது வேறு எந்த சப்தமும் தன் செவியில் விழாமல் இருக்கும் பொருட்டு தங்கத்தால் செய்த இரண்டு மணிகளைத் தனது காதில் தொங்கவிட்டு, எந்நேரமும் அது ஒலித்துக் கொண்டே இருக்கும்படி தனது காதுகளை அசைத்தும் அதே சமயத்தில், அஷ்டாக்ஷர எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்து மோட்சம் பெற்றதாக வரலாறு.

கிருஷ்ணரின் விருப்பப்படி விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட சிலை, துவாபர யுகத்தின் முடிவில் கிருஷ்ணரின் நண்பன் சாத்யகிக்கு வழங்கப்பட்டது. எம்பெருமான் கருடனிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னார். கருடன் அதனை கலியுகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பாயும் நேத்ராவதி என்ற ஆற்றில் மறைத்து வைத்தார். பின்னர், சேர பெருமாளின் அரச துணைவி நேத்ராவதி நதிக்கரையில் கிருஷ்ணரின் சிலை கிடப்பதாகக் கனவில் கண்டார். அதனை கண்டு எடுப்பதற்கு முயற்சிகள் எடுக்கபட்டன. கிமு 59 இல், துளு பிராமணர்கள் மற்றும் உள்ளூர் போத்திகளின் கூட்டு முயற்சியால் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. துளு பிராமணர்களும் உள்ளூர் போத்திகளும் இணைந்து சிலையைக் கண்டெடுத்ததால், அந்தச் சம்பவத்தின் நினைவாக பூஜைகள் நடத்துவதும் இரு பிரிவினருக்கும் பிரித்து கொடுக்க பட்டது. . எனவே, துளு பிராமணர்கள் மாதத்தில் 15 நாட்களுக்கு பூஜை செய்கிறார்கள் மற்றும் 10 வீடுகளில் இருந்து உள்ளூர் போத்திகள் மீதி 15 நாட்களுக்கு பூஜை செய்கின்றனர். சிலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

துர்வாசர் இந்த பெருமாளை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள். அவர் அப்படி செய்யும் போது 12000 வாழை பழங்கள் எம்பெருமானுக்கு சமர்பித்ததாகவும், அதே போல இன்றும் வருடம் ஒருமுறை இந்த விழா, பன்னீராயிரம் விழா என்று இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

நம்மாழ்வார் பதினொரு பாடல்களும், திருமங்கை ஆழ்வார் பதினொரு பாடல்களும் இந்த திவ்ய தேசத்தின் எம்பெருமானுக்கு மங்களா சாசனம் செய்து உள்ளார்கள். நம்மாழ்வார் மோக்ஷம் வேண்டி பாடிய ஐந்து பதிகங்களில் இந்த திவ்ய தேச பதிகமும் ஒன்று. நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடிய பாசுரங்களை பற்றி கீழே காண்போம்.

நம்மாழ்வார் திருக்குடந்தை பதிகம் பாடிய பிறகு, தளர்ந்து, ‘திருவல்லவாழ்’ திவ்ய தேசத்திற்கு செல்ல நினைத்தார். ஆனால் அங்கு செல்ல முடியாமல், சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதீக செயல்களின் ஆரவாரமும், அவரை தடுத்து அவருக்கு துயர் கொடுத்தன. அதனால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் இங்கு ஒரு தலைவியாக இருந்து தன் தோழிகளுக்கு கூறும் கூற்றாக கூறுகிறார்.

தோழிகளிடம், திருவல்லவாழ் பெருமானின் திருவடிகளை என்று சென்று சேருவது என்று கேட்கும்படி அமைந்த பாசுரம். மானேய் நோக்கு நல்லீர்! – நான் திருவல்லவாழ் சென்று புகும்படி உங்கள் கண்களால் நன்றாக குளிர நோக்குங்கள் என்று ஒரு விளக்கம். மான் போன்ற நோக்கையுடைய பெண்களே, எனக்கு நல்லவர்களே, பிரிவு ஆற்றாமையாலே நோவு பட்டும், சோலை அழகிலே ஈடுபட்டும், உங்களின் இனிமையான வசனங்களால் தளர்ந்தும் இருக்கும் என்னை எம்பெருமானிடம் இருந்து விலக செய்யும் வார்த்தைகளை சொல்லியும், காரியங்களை செய்தும், அவன் மேல் இருக்கும் மோகத்தை அதிகரிக்க செய்யும் நல்லவர்களே என்று சொல்வதாகவும் கொள்ளலாம். ஒரு நாள் பிரிவு ஆற்றாமையால் மெலிந்து, மிகவும் நோவு பட்டாள் என்கிறார். திருவடி (ஹனுமான்) இலங்கையில் சீதா பிராட்டியை சந்தித்து திரும்பிய பின், இருந்த சீதா பிராட்டியின் மனநிலையை இவளுடன் ஒப்பிடுகிறார். அவள் மெலிய மெலிய நீர்ப் பண்டமாய் மாறி அழிகிறபோது, இவன் ஒன்றும் ஆகாமல் இருந்தான். அந்த ஊர் சோலைக்கு, இவளின் மெலிதல், நீர் ஆகும். கமுகு என்று சொன்னது, கொடிக்கு தன்னையே கொடுக்கும், அவனுடைய ஔதார்யம் சொல்லியது. மதுவை உடைய மல்லிகை, பரிமளம் இவள் இடத்தில் இருந்து வந்தது என்கிறார். எம்பெருமானும் அடியவர்களுக்கு உகந்த ஒரு திரவியத்தை திருமேனியாக்கி கொண்டு திவ்ய தேசத்தில் எழுந்து அருளி உள்ளார். இங்கு உள்ளவர்களும், தாவரங்களும், மிருகங்களும் அவனை விட மாட்டாதபடி நிற்கிறார்கள் என்கிறார்

என்னை பற்றி அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியதாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே குறியாக இருப்பதால், உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. நீங்கள் சொல்லும் வழியில் நான் திரும்ப போகிறேன் என்ற எண்ணமா உங்களுக்கு என்றும், அது ஒருநாளும் நடக்காது என்றும் சொல்கிறார். திருவல்லவாழ்நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் நீங்கள் சொல்லும் வழியில் வருவதற்கு சாத்தியம் இல்லை என்கிறார். இந்த திருத்தலத்து எம்பெருமானுடைய திருப் பாதங்களின் தூசியை தன்னுடைய தலை மீது அணியப் பெற வேண்டுமென்றோ என்னுடைய ஆவல் உள்ளது என்கிறார். அது பற்றி ஏதேனும் சொல்வதானால் சொல்லுங்கள் என்றும் என்னிடம் வீணாக பேச வேண்டாம் என்றும் சொல்வதாக அமைந்த பாசுரம்.

என்றுகொல் தோழிமீர்காள் என்று சொல்வது, இவள் நினைத்து இருப்பது சரியாகாது என்று சொல்பவர்களிடமே, தான் நினைப்பதை அடைவது எப்போது என்று கேட்கிறாள்.

தோழிகளே ! நீங்கள் உங்களுக்கு பிடித்தவற்றை சூடிக்கொண்டு வாழ்வதுபோல நானும் எனக்கு பிடித்ததை சூடிக் கொண்டு வாழ நினைத்தால் இதில் என்ன தவறு உள்ளது ? இதற்காக என்னை நீங்கள் கண்டிப்பது ஏன்? என்று கேட்க, அதற்குத் தோழிகள் ‘உனக்கு என்று ஒரு தனி வழியுண்டோ? எங்கள் வழியிலே தான் நீ வந்து தீரவேண்டும்” என்று பதில் சொன்னார்கள். அதற்குத் தலைவி “திருவல்லவாழ் நகரிலே பரம வைதிகர்கள் கானம் செய்கிற ஸாம வேதத்தின் ஒலியும் அங்குற்ற ஹோம புகையின் பரிமளமும் என்னை அவ்வழியே இழுப்பதை காணுங்கள், அந்த திருத்தலத்து எம்பெருமானுடைய திருவடிகளையே எப்போதும் கண்டு கொண்டிருக்க வேண்டும் என்ற என் காதலை நிறைவேற வழி சொல்வதானால் சொல்லுங்கள் என்கிறார்.

தோழிகளே! என்னுடைய நல்ல ஜீவன், (ஜீவாத்மா), என்னை பற்றி நினைத்து கொண்டு இருந்தால் அல்லவோ, நீங்கள் கண்டித்துச் சொல்லும் வார்த்தைகளுக்கு நான் செவி கொடுக்க முடியும்; அப்படி இல்லாமல், பார்க்கப் பார்க்கக் கண்ணும் நெஞ்சும் பிணி மற்றும் புண் உண்டாகும்படி இருக்கிற, பாக்கு மரங்களும் பலா மரங்களும் முதலியவை மச்சணி மாடங்களளவும் ஓங்கி வளர்ந்து உள்ள, திருவல்லவாழ் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள அனந்த சயனம் செய்து கொண்டு இருக்கின்ற எம்பெருமானுக்கு அன்றோ என்னுயிர் நினத்து கொண்டு உள்ளது. இனி உங்கள் பேச்சு இங்கே விலை போகாது என்றாள். “பச்சிலை நின்கமுகும், பச்சிலை நீள் பலவும், பச்சிலை நீள் தெங்கும், பச்சிலை நீள் வாழைகளும்” என்று கூட்டிக் கூட்டிப் பாடுவதும் உண்டு.

திருவல்லவாழில் எம்பெருமான் நின்ற திருக்கோலமே அன்றி சயனத் திருக்கோலம் அன்று. திருவல்லவாழ்நகருள் நின்றபிரான் என்று கீழே இரண்டாம் பாட்டிலும் அருளி செய்து உள்ளார். அப்படி இருக்க, இப்பாட்டில் “திருவல்லவாழ் நச்சரவினணை மேல் நம்பிரான்” என்று சயனத் திருக்கோலமாகக் கூறுகின்றார் என்று எடுத்து கொள்ளக் கூடாது. நச்சரவினணை மேல் நம்பிரான் என்று அந்த திருத்தலத்து இருக்கிறதை சொல்வது அன்று; எம்பெருமானுடைய பொது விசேஷணம் இருப்பதை சொல்கிறது. ‘அத்தியூரான்… அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்‘ (இரண்டாம் திருவந்தாதி 10) என்ற இடத்தில் சொல்வது போல் கொள்ளலாம்.

சிறந்த நேசமுள்ள தோழிகளே!, வைதிக ப்ராஹ்மணர்கள் செய்யும் யாகங்களில் உண்டான புகை, மையின் நல்ல நிறத்தைக் கொண்டு, உயர்ந்த ஆகாசத்தை மறைக்கும் இடமான குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளி இருப்பவனும், சக்கரை கட்டி போன்றவனும் பரிபக்குவமான பழம் போன்றவனும், இனிய அமுதமாயிருப்பவனும், என்னுடைய ஸர்வ நலத்தையும் கொள்ளை கொண்டவனும், அதனால் ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ என்று ஆழ்வார் ஏங்குவதாக அமைந்த பாடல்.

கனிபோன்ற வாயையுடைய தோழிகளே! எங்கு பார்த்தாலும் கான ரூபமான மிடற்றை உடைய வண்டுகளும் புது தென்றலும் உயர்ந்த பனைகளை கொண்டு வளருகிற மாசுகளையுடைய அழகிய கடற்கரைச் சோலைகளை கொண்ட திருவல்லவாழிலே நிற்கிற சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய தாமரை போன்ற திருவடிகளை பாவியான நான் என்று சேவிப்பது என்கிறார்.

பாவை போலே அழகிய தோழிகளே! கடல் போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்கழுநீர்ப் பூக்களும் ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான தலைவனும் இவ்வுலகங்களை எல்லாம்  பிரளயம் அழிக்காதபடி காத்தவனான எம்பெருமானுடைய திருவடிகளின் மேலே சாத்தின புஷ்பங்களையாவது நாள் தோறும் தொழுவோமோ என்று சொல்வது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பாடலில், திருவல்லவாழிலே, அருளி புரிவதற்கு என்றே நித்யவாஸம் பண்ணுகிற சர்வ சுலபனான எம்பெருமானுடைய, ஸெளசீல்யமே வடிவெடுத்த திருவடிகளில் இடைவிடாதே அடிமை செய்யும்படியான (தொழும்படியான) பாக்கியம் கிடைக்குமோ என்கிறாள்.

அழகிய நெறியையுடைய தோழிகளே! எல்லாவிடத்திலும் எப்போதும் ஆடும் தித்திப்பு அதிகம் நிறைந்த கரும்புகளும், எப்போதும் அறுப்பதற்கு பக்குவமாய் உள்ள (முற்றிய) செந்நெல் பயிர்களை உடைய, எல்லா பக்கங்களிலும் நெருங்கிய பூத்த தடாகங்களை கொண்ட கழனிகளால் சூழப்பட்ட குளிர்ந்த திருவல்லவாழிலே, நித்ய வாசம் செய்து அருளுகின்ற எம்பெருமானின், உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் அளந்த நீண்ட திருவடிகளை, நாள் தோறும் தொழ இயலுமோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இவளுக்கு கைங்கர்யத்தில் உகப்பு போல், அவர்களுக்கு இவள் பேறே உகப்பாய் இருப்பது என்கிறார். இந்த திருவல்லவாழ் சிரமகரமான ஊர் என்று சொல்லி, ஊரை, பூக்களால் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்து உள்ளது என்றும், தடாகங்களை வயல்கள் சூழ்ந்து உள்ளன என்றும், இவைகளால் எப்போதும் குளிரிந்து இருக்கும் திருவல்லவாழ் என்கிறார்.

பிரான் நிலந்தாவிய நீள்கழலே நாள்தோறும் வீடின்றியே தொழக்கூடுங்கொல் என்று சேர்த்து அனுபவிக்கலாம் என்கிறார். நல்ல குணம், தீய குணம் என்று எதையும் பாராமல், எல்லார் தலையிலும் பொருந்தும்படி சுலபமான திருவடிகளை கொண்டு தீண்டியது போன்ற திருஅவதாரங்கள், அவதார பயன் முடிந்தவுடன் செல்லாமல், நித்ய வாசம் செய்கிற உபகாரமே இங்கே ஏற்றம் பெறுகிறது.

தோழிகளே, தன்னுடைய அழிவற்ற கிருபையை இந்த உலகத்தில் ஸம்ஸாரத்தில் உள்ளவர்களும், மேல் உலகத்தில் உள்ளவர்களும் எப்போதும் கொண்டாடும்படி இருக்கும் இடம் இந்த திருவல்லவாழ். எம்பெருமானின் கல்யாண குணங்களை கொண்டாடும் ஆயிரக் கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வசிக்கும் இடம் இந்த திருவல்லவாழ். இங்கே மஹா க்ருபாளனான ஸ்வாமியான நாராயணனுடைய திருநாமங்களை, அவனுடைய திருவருளாலே, நாம் சொல்லி கொண்டே இருக்கலாமோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றுவர் பற்றி நின்ற * பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல் * அந்த மாயாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய * மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே! ….. 1

தகப்பன், தாய், புத்திரர், உறவு முறை உடையவர்கள், சம்பந்தி என்று இங்கே பற்று கொண்டு, தேவையற்ற ஒரு யாத்திரையை தொடர்ந்து கொண்டு உள்ளோம். மாதா, பிதா, துணை என்று அவன் ஒருவன் மட்டுமே எல்லா உறவுமாக இருக்க வேண்டிய அவனை விட்டு, மற்ற உறவுகளை நித்யமான, தேவையான உறவுகள் என்று பற்றி கொண்டு இருப்பதை வெறுத்து, ஈஸ்வரனுக்கு சேவை செய்பவனாக இருக்க வேண்டும் என்று நீ புத்தியை செலுத்தினால், ஈஸ்வர ஆத்ம ஸ்வரூபதிற்கு ஒரு வீணும் விளையாதே பிரளய காலத்தில், லயதிற்கு இடமாகவும், ஸ்ருஷ்டி காலத்தில் உற்பத்திக்கு இடமாகவும், சித் அசித் இவைகளுக்கு நிர்வாககன் ஆகவும், இந்த காரியங்களுக்கு மத்தியில் ஆயன் கோபால கிருஷ்ணனாக வந்து அவதரித்தவன் உறைகின்ற இடமான திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தை வாயினால் சொல்வதில் வல்லமை உள்ளவனாக பொருந்திடு என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

ஆபரணங்கள் விளங்குகின்ற மென்மயான முலைகளை உடைய பெண்களின் பொய் மற்றும் சூதுகளை, உண்மை இது என்று, ஆதரிப்பவர்கள் பேசுகின்ற அப்படிப்பட்ட வார்த்தைகளை தவறு என்று கருதுவாய் ஆனால், பரந்த நிலாவை போன்ற வெண்கொற்ற குடையுடன் வாழ்பவனான மாகாபலி சக்ரவர்த்தியின் யாகத்தில், தன்னுடையது அல்லாத ஒன்றை யாசிப்பது போல, மூன்று அடி மண் யாசகமாக கேட்ட பிரம்மச்சாரி வாமன மூர்த்தி, உறைகின்ற திருவல்லவாழ் என்ற திவ்ய தேசத்தை வாயினால் சொல்வதில் வல்லமை உள்ளவனாக பொருந்திடு என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

சீர்மை மிக்குள்ள, மிருதுவான பேச்சை உடையவரான, ஸ்த்ரீகளுடைய நெருங்கின முலைகளை அணையகடவோம் என்று நினைப்பவர்கள் மத்தியில், நீ அந்த நினைவை தவிர்த்து, உஜ்ஜீவித்து போக நினைப்பாயானால், நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு பரமபதத்தில் இருக்கிறவரும், திருவேங்கட மலையில் எழுந்து அருளி இருப்பவரும், அழகிய கடல் போன்ற வடிவை உடையவர் உறைகின்ற திருவல்லவாழ் திவ்ய தேசத்தில், அங்கு இருக்கிறவர் இருக்கிற வடிவு இருக்கும்படி பொருந்தி பார் என்று நெஞ்சுக்கு ஆழ்வார் சொல்கிறார்.

மேகம் அளவும் வியாபிக்கின்ற வெண்கொற்ற குடைகளை உடையவர்களாய், மன்னர்களாய், யானை சூழும்படி வாழ்ந்தவர்கள் முடிந்தார்கள் என்ற ஒரு வார்த்தையை நீ துக்கம் என்று கருதினால், விஷமானது நிறைந்து இருந்த பூதனையின் முலையில் அழகிய கையையும் வாயையும் வைத்து அவளுடைய உயிரினை முடித்த சிறுவனான கண்ணன் உறைகின்ற திருவல்லவாழ் என்று சொல்லி பொருத்தி பார் என்று நெஞ்சுக்கு ஆழ்வார் சொல்கிறார்.

சென்ற பாட்டில் ஐஸ்வர்யத்தின் நிலையில்லாமையை சொன்ன ஆழ்வார் இந்த பாடலில் இந்திரியங்கள் தங்களுக்கான விஷயங்களை தரச்சொல்லி படுத்தும் போது அந்த பாதைக்கு செல்ல அஞ்சினால், நாம் திவ்ய தேச பாதையை பொருத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்.

ஸூஷ்ம சரீரத்தோடு கூடிய நித்யமான ஆத்மாவிற்கு, ஜன்மம் என்பது ஸூதுல சரீரத்தில் பிரவேசிப்பது ஆகும் என்று சொல்கிறார். உடம்பு என்ற மாமிசத்தில் பொதிந்து கொண்டு நரம்பு தோல் ஆகிற குடிசைக்குள் (ஸூதுல சரீரம்) புகுந்து, எனக்கு உரிய விஷயத்தை காட்டு என்று பாதித்து மனதை சஞ்சல படுத்தும் ஐந்து இந்திரியங்கள் தாம் வாழ, அவைகளின் பாதகத்திற்கு அஞ்சினால், நித்ய தோஷ நிவர்த்திகளால் பூரணமான நான்கு வேதங்கள், ஐந்து அக்னிக்கள், ஐந்து மகா யாகங்கள், ஆறு அங்கங்கள் இவைகளையே வேலைகளாய் உடையவர்கள் வாழ்கின்ற திருவல்லவாழ் என்று பொருந்து என்று நெஞ்சுக்கு சொல்கிறார்.

நோய் எல்லாவற்றையும் கொண்டு செய்த நிச்சயம் இல்லாத இந்த சரீரத்தை மெய் என்று சொல்லி திரிகின்ற சிலர் சொல்லும் வார்த்தைகளை நீ பிழை என்று கருதுவாய் என்றால், நீர் களிப்புகளை அறுக்க கூடிய வெப்ப கதிர்களை உடைய ஆதித்தியனாய், அவனால் வந்த தாபத்தை ஆற்றுவதற்கு ஈடான நீரினை உடைய சந்திரனாய், மேக சஞ்சாரத்தை உடைய ஆகாயமாய் நிற்கின்ற, ஆச்சரியமான எம்பெருமானை, கண்கள் எல்லாம் கண்டு அனுபவிக்கலாம்படி திருவல்லவாழ் உறைகின்ற எம்பெருமானிடம் பொருந்து என்று நெஞ்சுக்கு உரைக்கிறார்.

மேகங்கள் சஞ்சரிக்க கூடிய ஆகாயம், அக்னி, நீர், நிலம், காற்று என்ற பஞ்ச பூதங்களினால் உருவாகி மயங்கி நின்ற இந்த சரீரத்தை நமக்கு பாதுகாப்பு (ரக்ஷகம்) ஆக மாட்டாது என்று கருதி, உஜ்ஜீவிக்கப் பார்த்ததால், சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட மிருதுவான திருமுலைத்தடங்களை உடைய, பொற்றாமரையை இருப்பிடமாக கொண்ட, பெரிய பிராட்டியாரும், அவருக்கு தகுந்த தாமும் தினந்தோறும் கிட்டி வந்து உறைகின்ற திருவல்லவாழ் திவ்ய தேச எம்பெருமானுடன் பொருந்து என்று நெஞ்சுகக்கு சொல்கிறார்.

சென்ற எட்டு பாசுரங்களிலும் அருளிச் செய்தபடி, உறவினர்கள் உற்ற துணையல்லர் என்கிற உணர்ச்சியும், இந்த உலக விஷய போகங்கள் நாம் அடையவ வேண்டிய ஒன்று அன்று என்கிற உணர்ச்சியும், இந்த உலகத்து செல்வம் நிலைநிற்காது என்ற உணர்ச்சியும், இவ்வுடல் துச்சம் என்ற உணர்ச்சியும் உண்டாகப் பெற்றாலும், கண்ட இடம் எங்கும் பரவிக் கிடக்கிற மற்ற சமயங்களில் ஆழ்ந்துவிடாமல், வேதங்களை நன்றாக அனுபவிப்பது அருமை ஆதலால் அதனை இப்பாசுரத்தில் ஆழ்வார் எடுத்து சொல்கிறார்.

வெள்ளியார் என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறுவர், வெள்ளி என்பது சுக்ரனுக்குப் பெயர் என்பதால், லோகாயத பிரிவினை சொல்வதாக கொள்ளலாம். வெள்ளிமலையாகிய கைலாஸகிரியை இருப்பிடமாக கொண்ட பசுபதியை சொல்வதால், பாசுபத பிரிவினை சொல்வதாக கொள்ளலாம். பிண்டி என்பது அசோக மரத்திற்குப் பெயர் ஆகையால், அதனை இருப்பிடமாக கொண்ட அருக தெய்வம் ஜைன பிரிவினை சொல்கிறார். போதியார் என்பது போதி என்ற பெயர் கொண்ட அரச மரத்தினை இருப்பிட கொண்ட புத்த சமய பிரிவினை சொல்கிறது. ஆக இப்படிப்பட்ட கொள்கைகள் நமக்கு உபாயம் அல்ல என்று துணிந்து நெஞ்சமே! உடம்பு நோக, கடல் கடைந்து அமுதம் அளித்தவருமான பெருமாள் நித்யவாஸம் பண்ணுமிடமான திருவல்லவாழிலே பொருந்தப்பார் என்கிறார்.

வேத அர்த்தம் நன்கு அறிந்த வல்லவர்கள், ஒருவித குறையுமற்று இருக்கிற பிராமணர்கள், வசிக்கின்ற திவ்ய தேசமான திருவல்லவாழில் எழுந்தருளி இருக்கின்ற, ஸ்வாமிகள் விஷயமாக, சிறகுகள் உடைய வண்டுகள் குலாவி நிற்கின்ற, பொழில்களால் சூழப்பட்ட அழகிய நெடியதான திருவாலியை நாடாக உடைய, எதிரிகளின் ரத்த கரையை உடைய வேல் ஆயுதத்தை கையாள்வதில் வல்லவரான திருமங்கை ஆழ்வார், திருவாய் மலர்ந்து அருளிய இந்த பத்து பாடல்களை கற்ற வல்லவர்கள் இந்த பூமியில் நிர்வாககரராய் ஆகி, பின்னர், நித்ய விபூதியையும் ஆண்டு கொண்டு, பரம ஆனந்ததை அடைவார்கள் என்று இந்த பதிகத்தை ஆழ்வார் முடிக்கிறார்.

வல்லவாழ் * பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை, * என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம் *

திருவல்லவாழிலே எழுந்தருளியிருக்கிற நப்பின்னை நாயகனாய், என்று ஆழ்வார் கூறுவது, நப்பின்னைப் பிராட்டியை மணம் புரிவதற்குக் கொண்ட கோலத்துடன் திருவல்லவாழில் இவ்வாழ்வார்க்கு ஸேவை ஸாதித்தது போல தோன்றுகிறது.

மீண்டும் இன்னொரு திவ்ய தேச அனுபவத்தில் சந்திப்போம், நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading