Site icon Vaishnavism

065 திருஅயோத்தி Thiru Ayodhi

Advertisements

ஸீதா ஸமேத சக்கரவர்த்தி திருமகனார் திருவடிகள் போற்றி போற்றி

வடநாட்டு திருப்பதிகள் – முன்னுரை

இன்று தமிழகம் என்று சொல்கின்ற பகுதிக்கு வடக்கு பக்கம் தான் விபவத்தில் அமைந்த அத்தனை அவதாரங்களும் நிகழ்ந்தது. ஆனால் வட இந்தியாவில் காலச் சூழ்நிலைகளாலும், அன்னியர் வருகையாலும், அடிக்கடி நிகழ்ந்த யுத்தங்களாலும், படையெடுப்புகளாலும், திருத்தலங்கள் அதிக அளவில் பாதிப்படைந்து மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. கூம்பு வடிவமைந்த கோபுரங்களும், சிறிய அளவிலான மூலஸ்தானங்களும் தமிழகத்தில் நாம் கண்டு களிக்கும் அர்ச்சாவதார மூர்த்திகளின்றும் வித்தியாசமான வடிவில் அமைந்த மூர்த்திகளோடு இத்தலங்கள் திகழ்கின்றன.

இந்த வடநாட்டுப் எம்பெருமான்கள், வேதங்களுக்கும், வேத வாக்கியங்களுக்கும், புராண இதிகாசங்களுக்கும் மத்தியில் புகழில் மண்டிக் கிடக்கின்றார்கள். தமிழ் மொழி தவிர்ந்த மற்ற மொழி கவிகளின் வார்த்தைகளிலும் பிரகாசித்து இருக்கிறார்கள். வால்மீகி, வியாசர், துளசிதாசர், காளிதாசன் என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டு போகும். அதே போல், புண்ணியங்கள் நிறைந்த புகழ் மலிந்த கங்கை, யமுனை, சரஸ்வதி, கோமதி, பிரம்மபுத்திரா, அளகநந்தா ப்ராயாகை, சரயு என்னும் பல புண்ணிய தீர்த்தங்களையும் தன்னகத்தே அடக்கியுள்ளது. ஸ்தலவரலாறுகளுக்கும் குறைவில்லை, காலம் காலமாக, யுகம் யுகமாக நீண்டுகொண்டே இருக்கும்.

திருப்பாற்கடல், சாளக்கிராமம், துவாரகா, திருபிரிதி போன்ற திவ்யதேசங்கள் இருந்த இடம், இன்று இருக்கும் இடம் பற்றியும் நிறைய தொடர் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மூர்த்திகள் சில ஸ்தலங்களில் இல்லை.  சிலவற்றை பிரதேச அளவில் மங்களாசாசனம் செய்து உள்ளார்கள். அதாவது கோகுலம் என்றும், பிருந்தாவனம் என்றும், அயோத்தி என்றும்
சரித்திர நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடம் முழுமையும் பாடி பரவசம் அடைந்துள்ளார்கள்.
பனி மூடிய சிகரங்களுக்கிடையே பளிச்சென மின்னும் திவ்ய தேசமும் உண்டு. வேத, இதிகாச, புராண ஸ்மிருதிகளோடு, தர்மம், ஞானம், யாகம் என்ற கோட்பாடுகள் சூழ திகழும் திவ்யதேசங்களாகும்.

ஓம் என்பது, அ உ ம என்பதின் சேர்க்கை என்பது ஒரு புறமும், வியூக வாசுதேவன், பிரத்யும்ன, சங்கர்ஷண, அநிருத்த என்று தன்னையும் சேர்த்து நான்காக பிரிந்ததை இன்னொரு புறமாகவும் கொண்டு, சரஸ்வதி, யமுனை, கங்கா என்ற புண்ணிய நதிகளை இன்னொரு புறமும் கொண்டு அவற்றை எல்லாம் இணைக்கும் அவதார ரகசியங்களை விளக்கும் சாஸ்திரங்களுக்கு பிரிதிநிதியாக இந்த திவ்யதேசங்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

துவாரகா என்ற திவ்யதேசமும் பஞ்ச துவாரகா என்ற பெயரில் ஐந்து வெவ்வேறு இடங்களில் பரந்து பக்தர்களை பரவசப்படுத்துவதும், நரனாக, தீர்த்தமாக, வனமாக, சங்கமித்துக் கொண்ட நதிகளின் அரவணைப்பில், வேதம், பரமபதத்திலிருந்து எம்பெருமான் தன்னை வ்யூக நிலைக்கு எழுந்தருளப் பண்ணியதை விவரிக்கும் இத்தலங்கள், சில ஆழ்வார்களால் பாடப்பட்டவை, சில புஷ்கர், கயா, குருஷேத்திரம், சித்திரகூடம், பஞ்சவடி, போன்ற அபிமான ஸ்தலங்கள்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட வடநாட்டுத் திருப்பதிகள் 11.  அவை, திருஅயோத்தி, திருநைமிசாரண்யம், திருப்பிரிதி, திருகண்டமென்னும்கடிநகர், திருப்பத்ரிகாச்ரமம், திருசாளக்ராமம், திருவடமதுரை (கோவர்த்தனம் பிருந்தாவனம் சேர்ந்தது), திருஆய்ப்பாடி, திருதுவாரகை, திருசிங்கவேள்குன்றம், திருவேங்கடம்.

Thanks Google Map
திவ்யதேசம்திருஅயோத்தியா
மூலவர்ஸ்ரீ இராமன், சக்ரவர்த்தி திருமகன், ரகு நாயகன்
உத்ஸவர்ஸ்ரீராமன்
தாயார்ஸீதாப்பிராட்டி
திருக்கோலம்அமர்ந்த திருக்கோலம்
திசைவடக்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்பெரியாழ்வார் 6
குலசேகராழ்வார் 4
நம்மாழ்வார் 1
தொண்டரடிபொடியாழ்வார் 1

திருமங்கையாழ்வார் 1
தொலைபேசி
தீர்த்தம் பரமபத சத்ய புஷ்கரணி சரயு நதி
விமானம் புஷ்கல விமானம்

சக்ரவர்த்தி திருமகன்

இராமன், சித்திரை மாதத்தில், வளர்பிறை நவமி அன்று, புனர்வசு கூடிய நக்ஷத்திரத்தில் கடக லக்கினத்தில் அவதரித்தான். இராமனின் அவதார தினத்தை ஒரு விரதமாகவே கொண்டாடும் படி நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. நம் ஸம்ப்ரதாயத்தில் இராமனை சக்ரவர்த்தி திருமகன் என்று அழைப்பது வழக்கம்.

இராமன் பற்றி சொல்லி முடிக்க முடியாது என்பது உண்மை. இருந்தாலும், ஒரு சில வரிகள் இராமன் பற்றி பிறர் சொல்லியது.

மண்டோதரி, இராவணன் மனைவி.  ராமனைப் பற்றி கூறுகிறாள். ரகு வம்ச மணி ராமன், விஸ்வரூபன். அவனுடைய ஒவ்வோர் அங்கத்திலும் லோகங்கள் இருக்கிறது. பாதாளம் அவரது பாதங்கள். பிரம்மலோகம் அவரது சிரசு. சூரிய சந்திரர்கள் அவனது கண்கள். மேகம் அவனது கேசம். அஸ்வினி குமாரர்கள் அவனது நாசி. அவர் இமைப்பதே இரவு பகல். பத்து திசைகளும் அவனது செவி. அவனது நாமம் ஒன்றே எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்க வல்லது, என்று வேதம் ஒலிக்கிறது. எனவே சாட்சாத் ஸ்ரீராமனே தெய்வம் என்பதில் சந்தேகமில்லை. அவர் மீது கொண்ட பகைமையை விடுக என்று ராவணனிடம் அவனது மனைவி மண்டோதரி மன்றாடுகிறாள்.

வாலியின் மனைவி தாரை, இராமனை நேரே பார்த்த பின்பும், மனதிற்கு அப்பாற்பட்டவன் என்று சொல்கிறார். த்வம் அப்ரமேயஶ்ச, துராஸதஶ்ச, ஜிதேந்த்ரியஶ்ச, உத்தம தார்மிகஶ்ச. அக்ஷய்யகீர்திஶ்ச விசக்ஷணஶ்ச, க்ஷிதிக்ஷமாவாந்க்ஷதஜோபமாக்ஷஃ (4.24.31) – “நீங்கள், அளவிடமுடியாதவர், கட்டுப்படுத்த முடியாதவர், சுய கட்டுப்பாடு உடையவர், நீதிமான்களில் சிறந்தவர், உங்கள் புகழ் ஒரு நாளும் குறையாது”, என்று சொல்லிக் கொண்டே போகிறாள். இதில் ‘நீங்கள்’ என்று சொன்னதால், நேரில் இருக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். அளவிட முடியாதவர் என்பதால், மனதினால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கொள்ள வேண்டும்.

இராவணனின் நண்பன் மாரீசன் இராமனின் பெயரை கேட்டவுடன், தன்னுடைய வாய் உலர்ந்து, மிகவும் கவலையுற்று, உலர்ந்த தன் உதட்டினை ஈரப்படுத்திக் கொண்டு, உயிரற்றவனின் கண்கள் இமைக்காது இருப்பதுபோல் இராவணனை பார்த்தான். ராமனின் வீரத்தை நேரில் பார்த்ததால் மாரீசன், கரம் கூப்பி இராவணனிடம் தங்கள் இருவருடைய நன்மைக்காக சொன்னது. இராமனின் வீரத்தை நேரில் பார்த்த ஒற்றன் ஒருவனையும், இராவணன் நியமிக்கவில்லை என்றும், ராமனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் ஒரு ராக்ஷசன் கூட இல்லாமல் செய்துவிடுவார் என்றும், சீதை இராவணனுடைய உயிரைக் குடிப்பதற்காக பிறக்கவில்லை என்று தான் நம்புவதாகவும், ராமன் தர்மத்தை விட்டு ஒரு சிறிதும் பிசகாதவன் என்றும், ராமன் உண்மைக்கு இலக்கணம் என்றும், இராமன் புலன்களை அடக்கியவன் என்றும், இராமனிடம் சண்டைக்கு செல்வது இராவணனுக்கு உசிதம் இல்லை என்றும் ஒரு சர்க்கம் முழுவதும் உபதேசம் செய்கிறான்.

இராமனை புகழ்ந்து மேலே கொடுத்துள்ள வார்த்தைகளை சொன்ன மூவருமே, இராமனுக்கு எதிரிகள்.

இராம நாம மஹிமை

அயோத்தியில் திரேதாயுகத்தில் உதித்த ராமனால், அவனது திருநாமம், உலகம் முழுவதும், எந்நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. ராம நாமத்தின் மகிமையும் எழுத்தில் எழுதி சொல்லி முடித்து விட முடியாது. சொன்ன மாத்திரத்தில் ராம பாணம் போல் பாவங்களைச் சுட்டு எரிக்க வல்லது. லவ குசர்கள், இராமாயணம் பாடும் போது இராமனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, அனுமன் சொன்னதால், சீதைக்கு உயிரை தக்க வைத்தது. அனுமன் சொன்னதால், பரதனுக்கு உயிரை மீட்டுக்குக் கொடுத்தது. ம்ருத சஞ்சீவனம் ராம நாமம் – போகிற உயிரை மீட்டுக் கொடுக்கும்.

திருவாரூரில் பிறந்த தியாகராஜ சுவாமிகள். ராம நாம மகத்துவம் பற்றி இயற்றியுள்ள கீர்த்தனங்கள், அழியா மகத்துவம் உடையவை.

ராம நாமத்தை உலகிற்குக் கொடுத்த சிறப்பே அயோத்தியின் தனிச் சிறப்பும், தலையாய சிறப்பும் ஆகும். அது அயோத்தியில் தொடங்கி, கோசல நாட்டில் வளர்ந்து, இந்தியா எங்கும் பரவி, இன்று உலகளவில் பெரிதும் பேசப்படும் நாமமாக உள்ளது. இராமாயணம், அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட / எழுதப்பட்ட சரித்திரமாக இன்று உள்ளது.

கோசல நாட்டின் ஆட்சியாளர்கள் சூரிய குல  இக்ஷ்வாகு மன்னரின் வழித்தோன்றல்கள் எனப்படுகின்றனர். இக்ஷ்வாகு குலத்தின் புகழ் பெற்றவர்களாக பகீரதன்,  தசரதன்  மற்றும் இராமன்  கருதப்படுகிறார்கள்.

கம்பர், ராமநாமத்தின் மகிமையை, “ நன்மையும், செல்வமும் நாளும் பெருகுமே, தின்மையும், பாவமும் சிதைந்து தேயுமே, சென்மமும், மரணமும் இன்றித் தீருமே, இம்மையே ராமாவென்ற இரண்டு எழுத்தினால்” என்றும், “நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம், விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும், நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே” என்றும் கூறுகிறார். பகவான் ஸ்ரீ ராமனை மனதில் நிலை நிறுத்தி “ஸ்ரீ ராம ஜெயம்”  அல்லது  “ராம், ராம்” என்ற மந்திரத்தை தினமும் கூறுவதன் பயனாக செல்வம் சேரும், பாவம் கரைந்து போகும்,புகழ் கிடைக்கும்,  ஞானம் பெருகும்,  பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடலாம்,  வேண்டியவை அனைத்து கிடைக்கும் இப்படி பல நன்மைகளை பெறலாம்.

இத்திருத்தலம் பற்றி

சிற்றன்னையின் சொல் காரணமாக தந்தை தயரதன் ஆணையை சிரமேற்கொண்டு கானகம் அடைந்த ஸ்ரீராமனே, ஞானம் அற்றவர்கட்கு அருமருந்தாய் திகழும் அயோத்தி நகருக்கு அதிபதியே, என்று குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் திருத்தலம் வட இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்து உள்ளது. எங்கு நோக்கினும் ராம, சீதா பிராட்டியின் கோவில்களும், ஆஞ்சநேயர் கோவில்களும், ராம பஜனையும் ராம பக்தர்களுமாகத் திகழ ஒரே ராம மயமாகத் திகழ்கிறது இந்த ராம ஜென்ம பூமி.

முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் முதல் க்ஷேத்திரம் இது. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.

அயோத்யா என்ற சொல்லுக்கு எதிர்த்து வெற்றி பெற முடியாதது என்று சொல்வார்கள். அதாவது தோல்வியே இல்லாத ஊர்.

அயோத்தியின் வாசலில் அனுமனும், அதற்கு தெற்கில் சுக்ரீவனும், அவனுக்கு அருகில் அங்கதனும், தெற்கு வாசலில் நளனும் நீலனும், மேற்கில் வக்த்ரனும், வடக்கில் வீபீஷணனும் வாழ்ந்துகொண்டு இந்த நகரத்தை காப்பாற்றி வருகிறார்கள் என்று ஐதீகம்.

அயோத்தி, சரயு நதியின் தெற்கு கரைக்கும் தமஸா நதியின் வடக்கு கரைக்கும் இடையில் அமைந்து உள்ளது. பண்டைய கோசல நாட்டின் தலைநகர் ஆகும். சரயு நதிக்கரையில் கோ (பசு) தானம் செய்வது சிறந்ததாக கருதப்படுகிறது. சரயு நதியின் மூலம் தான் முதலில் ஸ்ரீ லக்ஷ்மணனும் பின்னர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியும் பரமபதம் அடைந்தார்கள் என்றும், அவனைத் தொடர்ந்த மக்கள், மரம், செடி, கொடி, விலங்கு என எல்லா ஜீவராசிகளும் பரமபதத்தை கொடுத்தான் என்றும் வரலாறு கூறுகிறது.

தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்கள்

இராம ஜென்ம பூமி, இது இராமர் அவதரித்த இடம். வாழ்ந்த இடம். பல வரலாறுகளை சுமந்து கொண்டு உள்ள இடம். கூடிய விரைவில் மிக பெரிய இராமர் கோவில் கட்டப்பட்டு வருகின்ற இடம். இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடம்.

அநுமான்கார்ஹி என்றழைக்கப்படும் மிகப்பெரிய ஆஞ்சநேய மூர்த்தி கோவில் ஒன்று இந்த ராமஜென்ம பூமிக்கருகில் உள்ளது. 76 படிக்கட்டுகளை உடைய இத்தலம் சிறந்த வேலைப்பாடுகளுடன் அழகிய சிலைகளையும் கொண்டு கம்பீரத்தோறறத்துடன் பேரழகு பொருந்தி திகழ்கிறது. ஆஞ்சேநேயரின் பெரிய திருவுருவ சிலையைத்தவிர, அவருக்கும், அவரது தாயார் அஞ்சனாதேவிக்கும் இங்கே சிலைகள் உண்டு. இங்கு போகும் வழியில் நிறைய கடைகள், அங்கு விற்கப்படும் பிரசாதங்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி, ஆஞ்சேநேயர்க்கு சமர்பிக்கிறார்கள். இந்த ஆலயத்தின் சுற்றுப்புறங்களிலும், மண்டபங்களிலும், படிக்கட்டுகளிலும் இடைவிடாமல் பக்தர்கள் ராமாயணம் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இங்கு தான் ஹனுமான் வாழ்ந்துகொண்டு எல்லோரையும் காத்துகொண்டு இருப்பதாக நம்பிக்கை. இராம ஜென்ம பூமிக்கு போவதற்கு முன் இவரை தரிசித்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு அமைந்துள்ள கனக பவன் என்னும் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் யாவும். வெகு நேர்த்தியாகவும்.
பேரழகு பொருந்திய ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இதன் முகப்பில் தங்கம் பதித்திருப்பதால் இதற்கு கனக பவன் என்னும் பெயருண்டாயிற்று. மூன்று தங்க சிலைகள், வெள்ளி மண்டபத்தில் இருப்பது இங்கு சிறப்பு. இது ராமர் சீதையின் இடம் ஆகும், கைகேயி அவர்களுக்கு உகந்து அளித்த அரண்மனை என்றும் சொல்லப்படுகிறது.

வால்மீகி பவன், இது ஒரு அருமையான இடம். இங்கு வால்மீகி, லவ குசர்களுடன் காட்சி அளிக்கிறார். இது வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்ட பார்க்க வேண்டிய இடம் ஆகும். வால்மீகி ராமாயணத்தின் 24,000 ஸ்லோகங்களும் இங்கே பொறிக்கப்பட்டு உள்ளன.

சீதா பவன், இது சீதை சமையல் செய்த இடமாக கருதப்படுகிறது. இங்கு இரண்டு சமையல் அறைகள் உண்டு, கீழ்த்தளத்தில் உள்ளது சீதா தேவியின் சமையல் செய்யும் இடம் என்றும் அங்கு சில பாத்திரகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் இங்கே, ராமர், சீதை, பரதன் மாண்டவி, லக்ஷ்மணன், ஊர்மிளா, சத்ருக்னன் ஸ்ருதகீர்த்தி என்று அவரவர் மனைவியுடன் தரிசனம் செய்யும் கோயிலாகவும் உள்ளது. சீதாவை அன்னபூரணி என்றும், இது அவருடைய கோவில் என்றும் சொல்வதுண்டு.

தசரத பவன், என்பது தசரதனின் அரண்மனை, இராமன் வளர்ந்த இடம், பெரிய அரண்மனை, தசரத மஹால் என்றும் சொல்லப்படும்.

சரயு நதி இமயமலையில் உற்பத்தியாகி அயோத்தியில் நுழைகிறது. அயோத்திக்குள் நுழையுமுன் இதனுடன் காக்ரா என்னும் நதி கலக்கிறது. சரயு நதியில் உள்ள ராம்காட் என்னுமிடத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து நீராடி சங்கல்பம் செய்வதை இன்றும் காணலாம். மேலும் குப்தகாட், லட்சுமணகாட் போன்றனவும் முக்கிய படித்துறைகள் ஆகும்.

ஸ்ரீராம அவதாரத்தின் காலகட்டம் முடிவுக்கு வரும் போது, ராமன் சரயு நதிக்கு வந்து, தமது சரீரத்தை சரயுநதியில் கரைத்து விட்டுப் பரமபதம் சென்றார். இந்த இடம் குப்த காட் என்று அழைக்கப்படுகிறது. ராமன் தனது சரீரத்தைக் களைந்த சரயுநதியில் நீராடுவது மோட்சத்தை நல்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அம்மாஜி மந்திர் என்றழைக்கப்படும் ஒரு தென்னிந்திய பாணி கோவில் உள்ளது. தென்னிந்திய வைணவர்களே பூஜை செய்கின்றனர். ரெங்கநாதன் சன்னதியுடன் இராமபிரான் சன்னதியும் அமைந்துள்ளது. இராமன் சந்நிதியில், ராமன், சீதை, லக்ஷ்மணன், பரதன், சத்ருக்கனன், அனுமன், மற்றும் கருடன் என்று எல்லோரும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமானுஜர் மணவாளமாமுனிகள் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

இராமாயணத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை இன்றும் அயோத்தியில் காணலாம். ஸ்ரீதா தேவி தினமும் துளசி பூஜை செய்த துளசி மாடம், ராமன் பட்டாபிஷேகம் செய்த இடம், அஸ்வமேத யாகம் நடத்தப் பட்ட இடம், சீதையைப் பிரிந்த பிறகு ராமர் ஜடாமுடி தரித்த இடம் இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்த இடங்களை பற்பல படையெடுப்புகளுக்கு பிறகு இன்றும் காண்பது ஆச்சர்யமாக உள்ளது.

ஸ்தல வரலாறு

புராணங்கள், எண்ணற்ற இலக்கியங்கள், கணக்கில் அடங்கா நூல்கள் என்று எல்லா இடங்களிலும் இந்த அயோத்தி விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. மீன் வடிவில் அமைந்திருக்கும் நகரம் என்று சொல்லப் படுகிறது. வேதத்திலேயே அயோத்யா என்ற சப்தம் இடம் பெற்றுத் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

பிரம்மாவின் முதல் புத்திரனான ஸ்வாயம்பு மனுவுக்கு, ஸ்ரீமந்நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியென்னும் பாகத்தை பிரம்மா மூலம் கொடுக்க, அதை அவர் மனுச் சக்கரவர்த்திக்கு அளிக்க, அவர் பூலோகத்தில் சரயு நதியின் தென் கரையில் ஸ்தாபித்தார் என்பதே பிரதானமான ஸ்தல வரலாறு. இதனால்தான் அம்புயத்தோன் அயோத்தி மன்னனுக்கே அளித்த கோயில் என்னும் வழக்கு உண்டாயிற்று. மனு விஸ்வகர்மாவைக்கொண்டு அதை பெரிய நகரமாக மாற்ற, எம்பெருமான் வசிஷ்டரை அங்கேயே வாசம் செய்ய அனுப்பி வைத்தான்.

தான் பின்னொரு காலத்தில் அவதாரம் எடுப்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணன் வைகுந்தத்தை முதலிலேயே இங்கு கொண்டு வைத்து விட்டார் போலும்.

பரமபதத்தின் ஒரு பகுதி பூலோகத்திற்கு வந்ததும் இந்த அயோத்திக்குத் தான். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டவன் பூவுலகிற்கு வந்து முதன் முதலாக வழிபாடுகளையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டது இங்குதான். திரேதாயுகத்தில் ஸ்ரீமந் நாராயணனே (விபவ அவதாரமாக) ஸ்ரீராமனாக இங்கு அவதரித்தார்.

இக்ஷ்வாகு வம்சத்தார்கள் தவமிருந்து பிரம்மனிடம் பெற்ற பள்ளிகொண்ட நாதனை முதன்முதலில் பூவுலகில் வைத்து தலைமுறை தலைமுறையாக வழிபட்டது இங்குதான். பிற்காலத்தில் தான் அந்த இக்ஷ்வாகு குலதனம் விபீடணன் மூலமாக திருவரங்கத்தில் அரங்க நாதனாக பள்ளி கொண்டது.

அயோத்தியில் பார்க்க வேண்டிய இடங்கள்

  1. ராம ஜென்ம பூமி, இதற்கு வடக்கே பரதன் அவதரித்த இடமும், ராமஜென்ம பூமியின் கிழக்கே லக்ஷ்மண, சத்ருகுண ஜென்மபூமிகளும் உள்ளன.
  2. ஹனுமான் கடி
  3. சரயு நதி (ராம் காட், லக்ஷ்மண் காட், குப்தார் காட்) லக்ஷ்மண் காட், இங்கிருந்து தான் லக்ஷ்மணன் தன்னுடைய அவதார முடிவின் போது தன்னுடைய சுய ரூபமான ஆயிரம் தலைகளுடன் ஆதிசேஷனாக மாறி பரமபதம் அடைந்தான். அதனால் இது சஹஸ்ராதார தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். குப்த காட் என்ற இடத்தில இருந்து தான் ராமன் பரமபத்திற்கு எழுந்து அருளினான்.
  4. வால்மீகி பவன்
  5. தசரத பவன்
  6. அம்மாஜி மந்திர் தெற்கு பக்க கோவில்போல் அமைப்பும், பூஜைகளும்
  7. கனகபவனம் என்று அயோத்தியிலேயே பெரிய மாளிகையாகத் திகழும் கைகேயியின் அரண்மனை – இராமன் சீதை அந்தப்புரம்
  8. லகட்மண்டி / பரத் பவன் என்று தசரதன் புத்திர காமேஷ்டி செய்த இடம்
  9. வசிஷ்ட ஆஸ்ரமம்
  10. பரதன் ராமபிரானின் பாதுகைகளுடன் இராமன் வரும் வரை காத்திருந்து நாட்டை ஆண்ட நந்திகிராமம் (இது அயோத்தியிலிருந்து சுமார் 20 மைல்)

இராமாயணம் பற்றி இன்னும் சில இடங்கள்

  1. பிட்டூர் – இது கான்பூருக்கு அருகில் உள்ளது, வால்மீகி ஆஸ்ரமம் உள்ளது. லவ குசர் பிறந்த இடம். துருவன் தவம் செய்த இடம்.
  2. ப்ரயாக்ராஜ் அருகில், ஶ்ருங்கிபேரபுரம் என்று குகன் ராமனை சந்தித்து கங்கையை கடந்த இடம், குகன் மந்திர்
  3. ப்ரயாக்ராஜ் நகரில் பரத்வாஜமுனிவரின் ஆஸ்ரமம், த்ரிவேணி சங்கமம்
  4. சீதாமர்ஹி (பிஹார்) – சீதா அவதரித்த இடம்
  5. பஸ்ர் பிஹார் – தாடகா வனம், வதம், யாக சம்ரக்ஷணம், வைகுந்தநாதர் கோவில் . வாமன அவதார ஸ்தலம் (தற்போது, பிஹார் ஜெயில்)
  6. ஜனக்புரி (நேபாளம்) – தனுஷாதம், ஜனகபவன்
  7. சித்திரகூட் – மந்தாகினி ஆறு, ராமன் காட், துளசிதாசர் பவன்

அயோத்தியா யாத்ரா பலன்கள்

ஒருவர் அயோத்திக்கு போக எண்ணினாலும், போகும்படி சொன்னாலும், போகிறவர்களுக்கு ஏதாவது உதவி செய்தாலும், அவர்களுக்கு அச்வமேத யாக பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. அயோத்தி செல்பவர்களுக்கு ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் தொலையும். அயோத்தி செல்ல தொடங்கி, பிறகு தடைகள் ஏற்பட்டு செல்ல முடியாவிட்டாலும், அஸ்வமேத யாக பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

சரயு நதியில் நின்று இராமனை நினைத்தால், அவர்களுக்கு ஒரு குறையும் இராது என்று சரயு நதியே, தசரதனிடம் கூறியதாக பார்வதி தேவிக்கு பரமசிவன் கூறியுள்ளார். சரயு நதி, வசிஷ்டரின் வேண்டுதலால் ஸ்ரீமன் நாராயணானால் அனுப்பப்பட்ட மானஸ சரஸ். ப்ரம்மா ஸ்ரீமன் நாராயணனை ஸ்தோஸ்திரம் செய்யும் போது, எம்பெருமானின் கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீரை பிரம்மன் குளம் போல் சேர்த்து வைத்ததே மானஸ சரஸ்.

சரயூநதியின் குப்தா காட்டில், சவரம் செய்து இராமனை வழிபடுவர்களுக்கு சகல சம்பத்துகளும் கிடைக்கும்.

சீதையின் சமையல் அறையை பார்த்ததினால், பரசுராமர் க்ஷத்திரிய வத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும், பலராமர், சூதவத பாவத்தில் இருந்து விடுபட்டார் என்றும் சொல்லப்டுகிறது. இந்த இரண்டு சரித்திரங்களை சீதை வாழ்ந்த காலத்திற்கு பிறகு என்று தெரிகிறது.

அயோத்தியில் ஹனுமனை பூஜிப்பவர்களுக்கு ஒரு குறையும் வராது என்று சொல்லப்படுகிறது.

ஆழ்வார்கள்

பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். அயோத்தி நகரத்தையே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளதால் இங்குள்ள அனைத்து வைணவத் தலங்களும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகவே கொள்ளலாம். குலசேகராழ்வார் ராமாயணம் முழுவதையும் 10 பாடல்களால் ராமாயண காவியத்தையும் மங்களாசாசனம் செய்துவிட்டார்.

நன்றி whatsapp group நண்பர்கள் மற்றும் dinamalardaily

Google Map

திருஅயோத்யா பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஅயோத்யா பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

கம்ப ராமாயணத்தில் அயோத்தி பற்றிய சில பாடல்களை தொகுத்து வழங்கிய நண்பர் சுவாமிநாதனுக்கு நன்றி

பெரியாழ்வார்

பெரியாழ்வார் : ஒரு தொகுப்பில், அனுமான் தன்னை எப்படி, லங்காவில் உள்ள அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் அடையாளம் காட்டிக் கொண்டார் (3.10) என்றும், ஸ்ரீ ராமபிரானின் உயர்ந்த குண நலன்களை மற்றொரு தொகுப்பிலும் (3.9) பாடி உள்ளார்.

முடி ஒன்றி மூவுலகங்களும் ஆண்டு உன், அடியேற்கு அருள் என்று அவன்பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.6) இங்கு பரதன் இராமனை பிரிந்து வாடும் மனநிலையை, அந்த குணநலனை ஆழ்வாரை படியில் குணத்துப் பரத நம்பி என்று புகழ்கிறார்.

தார்க்கு இளந் தம்பிக்கு அரசு ஈந்து தண்டகம் நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடைச் சூர்ப்பணகாவைச் செவியொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற  அயோத்திக்கு அரசனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.8) இங்கு பரதனுக்கு அரசை ஈன்றதையும், சூர்ப்பனகையின் செவி, மூக்கு அறுத்த வரலாற்றினை இராமனின் சிறப்பாக கூறியுள்ளார்.

காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு, ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும் நேரா, அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த, ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. (பெரியாழ்வார் திருமொழி 3.9.10) . இங்கு சமுத்திரத்தில் பாலம் கட்டியதையும், இராவணனை வென்றதையும், விபீஷணனுக்கு அரசு ஈந்ததையும் அளித்த இராமனின் சிறப்புகளை சொல்கிறார்.

வாரணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம், தேரணிந்த அயோத்தியர்கோன் பெருந்தேவீ கேட்டருளாய் கூரணிந்த வேல்வலவன் குகனோடும் கங்கைதன்னில் சீரணிந்த தோழமையைக் கொண்டதும் ஓர் அடையாளம் (பெரியாழ்வார் திருமொழி 3.10.4) இங்கு, அசோக வனத்தில் இருந்த, சீதாபிராட்டியிடம் இராமபிரான் குஹனுடன் ஸ்நேஹம் செய்து கொண்ட வரலாற்றை அனுமன் ஒரு அடையாளமாக சொன்னதை, தெரிவிக்கின்றார்.

மைத் தகு மா மலர்க்குழலாய் வைதேவீ விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத் தேட அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாள இவை மொழிந்தான் இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே. (பெரியாழ்வார் திருமொழி 3.10.8) இங்கு அனுமன், சீதையிடம் இராமன் தன்னுடைய திருக்கரத்தில் அணிந்து கொள்ளும் மோதிரமாகும் என்று சொல்லி கொடுத்ததை ஒரு அடையாளமாக பாடுகிறார்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி, இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை, தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப் பற்றிக் கரை மரம் சாடி கடலினைக் கலங்கக் கடுத்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே. (பெரியாழ்வார் திருமொழி 4.7.9) இது கண்டம் எனும் கடி நகர் என்ற திவ்யதேச எம்பெருமானை பாடும் போது ஆழ்வார், வைகுந்தம், துவாரகை, அயோத்தி, பத்ரிகாச்ரமம் இடங்களில் வாசம் செய்யும் எம்பெருமானையும், பகீரத சக்கரவர்த்தி தனது தபோபலத்தினால் கங்கையை இறக்கிக்கொண்டு வருகிறபோது இறங்குகின்ற வேகத்தையும் சொல்கின்றார்.  

குலசேகராழ்வார்

குலசேகராழ்வாருக்கு ராமச்சந்திரமூர்த்தியின் மேல் இருந்த அபரிமிதமான அன்பினால், அவரை குலசேகரப்பெருமாள் என்று குறிப்பிடுவர். குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி என்னும் பிரபந்தத்தை பாடி உள்ளார். நம் சம்பிரதாயத்தில், பெருமாள் என்றால், அது ஸ்ரீராமனை குறிக்கும். (பெரியபெருமாள் என்றால் திருவரங்கனைக் குறிக்கும்). பெருமாள் திருமொழியில், 105 பாசுரங்கள், 10 பதிகங்களாக உள்ளன. இதில் மூன்று பதிகங்களில், இராமாயணத்தின் காட்சிகளை தனக்கே உரிய தனித்துவத்துடன் சொல்லி உள்ளார். எட்டாவது பதிகத்தில், கோசலை இராமனை தாலாட்டு பாடுவதையும், ஒன்பதாவது பதிகத்தில், இராமனை பிரியும் தசரதனின் புலம்பல்களையும், பத்தாவது பதிகத்தில், இராமாயணத்தை முழுமையாக தில்லைநகர் திருச்சித்திரகூடம் கோவிந்தராஜ பெருமாளை அருகில் வைத்துக்கொண்டு சொல்லியுள்ளார்.

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!, அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!சிற்றவை தன் சொற் கொண்ட சீராமா! தாலேலோ! (பெருமாள் திருமொழி 8.6) என்ற பாடலில், எல்லோரும் செய்யும் தொண்டுகளை இலக்குவன் ஒருவனே செய்ததால் அதுவே சுற்றம் எல்லாம் சென்றார்கள் என்பதுபோல் ஆயிற்று என்கிறார்.  அயோத்தி நகர்க்கதிபதியே என்றது அயோத்திக்கு மட்டும் மன்னராக இருந்ததை குறிப்பிடுவது அல்ல, அயோத்தி என்னும் பகுதியை வைகுந்தத்திலிருந்து கொடுத்தருளிய அதிபதி என்பது பொருளாகும்.

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே, வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே, காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க்கு அதிபதியே அயோத்திமனே தாலேலோ (பெருமாள் திருமொழி 8.7) இங்கு அயோத்தி நகர்க்கு அரசனே!, ஆல் இலையில் குழந்தையாய், உலகங்களை எல்லாம் வயிற்றில் அடக்கியவனே, வாலியைக் கொன்று அவன் தம்பி சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தை அரசைக் கொடுத்தவனே என்று பாடுகிறார்.

அம் கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி, வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண் முழுதும் உயக்கொண்ட வீரன் தன்னை செங்கண் நெடும் கருமுகிலை இராமன் தன்னைத் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம் பெருமான் தன்னை என்று கொலோ கண் குளிரக் காணு நாளே. ((பெருமாள் திருமொழி 10.1) இங்கு, அயோத்தியின் புகழை ஆழ்வார், அழகிய இடத்தையுடையதும், உயர்ந்த மதில்களினால் நாற்புறமும் சூழப்பட்டதும் அயோத்யா என்று ப்ரஸித்தமுமான அழகிய நகரம் என்று குறிப்பிட்டு, ஸகல லோகங்களையும் விளங்கச் செய்கிற தனது ஒளியின் அம்சத்தாலே தேவர்களெல்லாரையும் துன்பம் தீர்ந்து வாழச்செய்த இராமபிரான் என்கிறார்.

அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் தன் பெருந் தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச் சித்ர கூடந் தன்னுள் எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதை மதியோம் இன்றே (பெருமாள் திருமொழி 10.8). இங்கும் அயோத்தியின் பெருமையை அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு அமைக்கப்பட்ட உப்பரிகை வீடுகளையுடைய அயோத்தி என்று கூறுகிறார். ஆராவமுதமாக உள்ள எம்பெருமானுடைய ஸேவையின் மிக்க இனிமைக்கும், அதேபோல் உள்ள அந்த எம்பெருமானின் சரித்திரத்தின் மிக்க இனிமைக்கும் தேவாம்ருதத்தின் இனிமை சிறிதும் ஈடாகாது என்பதை இன் அமுதை மதியோம் என்கிறார். லவ குசர் இராமாயணத்தை சொல்லக்கேட்டு அதனால் உலகத்தை நன்னெறியில் செலுத்தினார்கள் என்றும், இராமபிரான் காலத்திற்குப்பின் அப்பெருமான் போலவே நீதிமுறை தவறாது உலகத்தை இனிது ஆண்டு வந்ததால், உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் என்றார்.

தொண்டரடிபொடியாழ்வார்

தொண்டரடிபொடியாழ்வார் எம்பெருமானை திருப்பள்ளியெழுச்சி செய்யும் பிரபந்தத்தில், அயோத்தியாவை அரசுசெய்வதால், எங்களுக்கு ஸ்வாமியானவனே! என்று சொல்கிறார்.

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள், வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும், ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள், இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை, வாட்டிய வரிசிலை வானவர் ஏறே, மாமுனி வேள்வியைக் காத்து அவ பிரதம். ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே, அரங்கத்தம்மா பள்ளி யெழுந்தரு ளாயே. (திருப்பள்ளியெழுச்சி 4)

திருமங்கையாழ்வார்

திருமங்கை ஆழ்வார், யானைகளும் குதிரைகளும் தேர்களுமாகிய சேனை ஆகிய எல்லாவற்றோடும் அரக்கர் தொலையுமாறு கொன்று, வெற்றி பெற்ற அந்த சக்ரவர்த்தி திருமகன் கண்டு மகிழும்படியாகக் குழமணிதூர கூத்து ஆட எங்களோடே வந்து கூடுங்கள் என்கிறார்.

கவள யானை பாய் புரவித் தேரோட அரக்கர் எல்லாம், துவள, வென்ற வென்றியாளன், தன் தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன் தன் சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர் குழமணி தூரமே. (பெரியதிருமொழி 10.3.8)

நம்மாழ்வார்

நம்மாழ்வார் இங்கு இராம பிரானுடைய ஒரு விசேஷமான தன்மையை / குணத்தை அருளிச் செய்கிறார். இராமன் காட்டுக்கு சென்றபோது, அயோத்தியில் உள்ள உயிருள்ள, உயிரற்ற எல்லாம் துக்கத்தால் பிடிக்கப்பட்டன. அதாவது துயரத்தினால் மரங்களெல்லாம் வாடி உலர்ந்துபோயின; நதிகள், குளங்கள், குட்டைகளெல்லாம் கரையருகிலும் காலடி வைக்க முடியாதபடி, கொதிப்படைந்தன; சிறிய தோட்டங்கள் பெரிய தோட்டங்கள் என்ற பிரிவின்றி அவையெல்லாம் பசுமையை இழந்து இலையுலர்ந்து அழகு அழியும்படி ஆயின என்றும், பதினாலாண்டுகள் கடந்த பிறகு மீண்டும் அவன் திருஅயோத்திக்கு எழுந்தருளிய போது, அவை துயரம் நீங்கி, மீண்டும் செழிப்புற்று மகிழ்ச்சி அடைந்தன என்றும் சொல்லி, இராமபிரானின் பிரிவும் அருகாமையும் உயிரற்ற பொருள்களுக்கும் உயிருள்ளவை போல், பிரிவில் துக்கத்தையும் சேரும்போது மகிழ்ச்சியையும் தோற்றுவிக்கக்கூடிய தன்மையை உடைய இந்த பாடலில் காணலாம். இம் மஹாகுணத்தை உடையனாயிருந்த இராமபிரானையல்லாமல் மற்றுங் கற்பரோ வென்று அவனுடைய குணங்களை ஆழ்வார் அனுபவிக்கிறார். நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே என்று சொன்னதற்கு, தான் பரமபதம் செல்லும் போது எல்லாவற்றையும் அழைத்து சென்றான் என்று ஒரு பொருள் கொண்டாலும், அயோத்தியில் அவன் ஆட்சி செய்யும் போதே அங்கேயே அவர்கள் எல்லோரையும் நல்ல சுபாவங்களை கொண்டு இருக்கும்படி செய்தான் என்றும் கொள்ளலாம்.

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?, புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே, நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும், நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே. (திருவாய்மொழி, 7.5.1)

வார்த்தை இராமாயணம் ( நன்றி whatsapp group நண்பர்கள்)

“பிறந்தார் வளர்ந்தார் கற்றார் பெற்றார்
மணந்தார் சிறந்தார் துறந்தார் நெகிழ்ந்தார்
இழந்தார் அலைந்தார் அழித்தார் செழித்தார்
துறந்தார் துவண்டார் ஆண்டார் மீண்டார்

விளக்கம்:

  1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
  2. வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
  3. கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.
  4. பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
  5. மணந்தார்: ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
  6. சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
  7. துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
  8. நெகிழ்ந்தார்:
    *அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
    *குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
    *பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும் தன்னலமற்ற குணத்தையும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
    *அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
    *சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
    *விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
    *எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, ‘கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது’ எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
  9. இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.
  10. அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.
  11. அழித்தார்: இலங்கையை அழித்தது.
  12. செழித்தார்: *சீதையை மீண்டும் பெற்று அகமும் முகமும் செழித்தது ; *ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.
  13. துறந்தார்: அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.
  14. துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
  15. ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
  16. மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது”.

ஜெய் ஸ்ரீராம்.

Exit mobile version