Site icon Vaishnavism

056 திருப்பரமேச்சுர விண்ணகரம் Thiruparamechura vinnagaram

Advertisements

வைகுந்தவல்லி ஸமேத வைகுந்தநாதர் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருப்பரமேச்சுர விண்ணகரம் , ஸர்ப்ப க்ஷேத்ரம்
மூலவர்பரமபதநாதன், வைகுந்தநாதன்
உத்ஸவர்வரம்தரும் மாமணிவண்ணன்
தாயார்வைகுந்தவல்லி தாயார்
திருக்கோலம்வீற்றுஇருந்த திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 44 2723 5273

தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றி ஒரு சிறு முன்னுரையை இங்கே காணலாம். நன்றி

கோவில் பற்றி

இந்த கோவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு பூஜைகள் முதல் நிலையில் மட்டும் தான், மற்ற இரண்டு நிலைகளில் கிடையாது.

இத்திருத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில் தான்
இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது.

இந்த கோவிலின் விமானம், மூன்று அடுக்குகளாக, அஷ்டாங்க விமானமாக உள்ளது. கீழ் அடுக்கில், அமர்ந்த திருக்கோலத்திலும், நடு தளத்தில் ஸ்ரீதேவி, பூதேவி இவர்களுடன் ரங்கநாதனாக சயனத் திருக்கோலத்திலும், மேல் நிலையில், நின்ற திருக்கோலத்தில் உள்ளனர். நடு நிலையில் செல்வதற்கு சன்னதிக்கு பின் பக்கத்தில் வழி உள்ளது. அது ஏகாதசி அன்று மட்டும் திறக்கபடுகிறது. ரங்கநாதருக்கு ஒரு உத்சவர் உள்ளார்.

ஸ்ரீவைகுந்ததில் உள்ள விரஜா நதி, இங்கே தீர்த்தமாக உள்ளது. இதுவும் ஆறு விண்ணகர திவ்யதேசங்களில் ஒன்று. இங்கு சொர்க்கவாசல் கிடையாது.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

பரமேஸ்வர பல்லவனுக்கு இந்த எம்பெருமான் 18 கலைகளை சொல்லி கொடுத்தார் என்றும், அவைகளைச் சொல்வதற்காக நின்ற திருக்கோலத்தில் இருந்தார் என்றும், சீடனுக்கு உபதேசிக்கும் போது குருவாக அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தார் என்றும், அவனுக்கு
சேவை சாதிக்க, கிடந்த திருக்கோலத்தில் இருந்ததாகவும் கூறுவர்.

மாமல்லபுரத்தைப் போன்று சிறந்த சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டு உள்ளது. பல்லவ காலத்து குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் மூலவரும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டன.

பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்திகரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு எம்பெருமான் கலைகளை கற்றுக்கொடுத்த சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் செதுக்கி வைக்க பட்டுள்ளன. 18 பல்லவ மன்னர் முடிசூடும் காட்சிகளும் சிற்பங்களாக உள்ளன.

இக்கோவிலின் மேல் மாடியில் இரண்யவதம் செய்த நரசிம்ம அவதாரம், நரகாசுர வதம் செய்த கிருஷ்ணவதாரம், வாலி வதம் செய்த இராமவதாரம், போன்ற காட்சிகள் தத்ரூபமாய் செதுக்கப்பட்டு உள்ளன.

இந்த கோவிலில் இருந்து மாமல்லபுரத்திற்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும், பரமேஸ்வர வர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக சொல்வதுண்டு.

ஸ்தலவரலாறு

விதர்ப்ப நாட்டு மன்னன் சந்ததி வேண்டி காஞ்சியில் உள்ள கைலாச நாதனை வணங்க, விஷ்ணுவின் துவார பாலகர்கள் இருவரும் பல்லவன், வில்லவன் என்ற பெயர் கொண்டு பிறந்ததாகவும், அவ்விருவரும் மஹா விஷ்ணுவைக் குறித்து இக்கோவிலின் வாயு மூலையில் அஸ்வமேத யாகம் செய்ய மஹாவிஷ்ணு ஸ்ரீ வைகுண்ட நாதனாக வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுத்து அதே நிலையிலிருந்து இன்றும் பக்தர்கட்கு அருளுவதாக ஐதீஹம்.

பரத்வாஜ முனிவர் தவம் செய்து கொண்டிருக்கும்
போது அவரின் தவத்தைக் கெடுக்க வந்த காந்தர்வக் கன்னியின் மேல் மோகம் கொண்டு, ஒரு ஆண் மகவு உண்டாக அதற்கு மஹாவிஷ்ணுவும் சிவபெருமானும் இக்குழந்தையின் வளர்ச்சி குறித்து தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி, மஹாவிஷ்ணுவும் லட்சுமியும் வேடர் உருக்கொண்டு அக்குழந்தைக்கு
உயிர் கொடுத்து வளர்க்க தொடங்கினார்கள்.

அந்த சமயத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தின் வம்ச வீழ்ச்சி
ஏற்படவே, தங்கள் குலம் தழைக்க நல்ல வாரிசு வேண்டுமென இந்த எம்பெருமானை வேண்ட, வேடன் வேடத்தில் வந்த எம்பெருமான் இந்த குழந்தையை அவர்களிடம் கொடுத்து மறைந்தார். சிவனும் விஷ்ணும் பொறுப்பு எடுத்து கொண்டு வளர்த்ததால், பரமேஸ்வரன் என்ற பெயர் வந்ததாக சொல்வார்கள். பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளை தானம் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு.

பல்லவர்களின் வம்ச வழியை அடையாளம் காணும் போது அந்த அரசர்கள் பரத்வாஜ கோத்ரம் என்று குறிப்பிட்டது இந்த சரித்திரத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.

ஆழ்வார்கள்

பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் போர் மேற்கொள்வது போன்ற தனது அரசு சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களுக்கும், இந்த எம்பெருமானையே குருவாகக் கொண்டு வெற்றி பெற்றான் என்பதை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழி (2.9.2) பாடலில், தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் – பரமேச்சுர விண்ணக ரமதுவே என்று பாடுகிறார்.

திருமங்கையாழ்வார், எல்லா பாடல்களிலும் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரம் என்று அந்த மன்னனுக்கும் இந்த திவ்யதேசத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்து சொல்லி உள்ளார்.

Google Map

திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருப் பரமேச்சுர விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

Exit mobile version