திருமாமகள் ஸமேத அருள்மாகடல் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருச்சிறுபுலியூர், பாலவியாக்ரபுரம் | |||
| மூலவர் | அருள்மாகடல் பெருமாள் / சலசயனப்பெருமாள் | |||
| உத்ஸவர் | க்ருபாசமுத்திர பெருமாள் | |||
| தாயார் | திருமாமகள் நாச்சியார் / உத்சவர் தயாநாயகி | |||
| திருக்கோலம் | கிடந்த திருக்கோலம் (புஜங்க சயனம்) | |||
| திசை | தெற்கு | |||
| பாசுரங்கள் | 10 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
| தொலைபேசி | +91-4366-233 041, +91 4366 233 826 |
கோவில் பற்றி
திவ்யதேசத்தின் பெயரில் தான் சிறியது இருக்கிறதே தவிர, எம்பெருமானின் கருணையில் மிகப்பெரிய கடல். ஆம், எம்பெருமானின் திருநாமம், அருள்மாகடல்.
மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி அருகில் இந்த திவ்யதேசம் இருக்கிறது. சுற்றிலும் அருமையான வயல்வெளிகளுக்கு இடையே அழகான திவ்யக்ஷேத்திரம். அதைவிட அழகான சிறிய திருவுருவில் சந்நிதியில் சயனத்தில் எம்பெருமான். அடியேன் சேவித்த தினம் ஒரு பௌர்ணமி, மாலை 6 மணிக்கு பிறகு. அன்று அங்கு எம்பெருமான் தரிசனம், மின்சாரம் இல்லாமல், இயற்கையின் ஒளியில் தான். அந்த அழகு மனதை விட்டு நீங்காமல் இன்னும் பசுமையுடன் உள்ளது.
ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ஸ்தலம் நாகதோஷங்கள் நீங்க சிறப்பான ஒன்று. பால் பாயசம் நிவேதனம், ஆதிசேஷனுக்கு செய்வது சிறப்பு.
கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், உயர்ந்த இடத்தில்
ஆதிசேஷனுக்கு சன்னதியும் உள்ளன.
இத்தலத்தின் எம்பெருமானை பூஜித்து மோக்ஷம் அடைந்த வியக்கிரபாதர் எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகிலேயே உள்ளார். பதஞ்சலியும் எம்பெருமான் சன்னதியில் உள்ளார்.
கருடாழ்வார் சன்னதி, உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர், மூலவர் சன்னதி, வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.
ஸ்தலபுராணம்
ஒரு சமயம் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைக் குறித்து ஆதிசேஷன் இந்த க்ஷேத்திர குளக்கரையில் தவம் புரிந்தார். எம்பெருமான் மகிழ்ந்து ஒரு மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி அன்று இந்த ஸ்தலத்தில், பால சயனத்தில் எழுந்துஅருளினார். ஆதிசேஷனை அனந்த சயனமாக்கிக்கொண்டு குழந்தை வடிவில் சேவை சாதிக்கிறார்.
வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, அவர் சிவலிங்க ரூபமாக
வழிகாட்ட, அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் அவரை தொடர்ந்து, இத்தலத்திற்கு வந்து சேர்ந்து எம்பெருமானின் கருணையால் முக்தி பெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என்று ஆயிற்று.
ஆழ்வார்கள்
இத்திருத்தலத்தில், எம்பெருமான் புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாக இருந்ததைக் கண்டு
திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர திருக்கண்ணமங்கையில், நமது மிகப்பெரிய உருவை காணும் என்று எம்பெருமான் அருளிச் செய்த க்ஷேத்திரம்.
நம்மாழ்வார் “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத்து உள்ளேயுறையும் பிரான் கண்டீர்” (திருவாய்மொழி 8.6.2) என்றருளிச் செய்ததுபோலே இவரும் “சிறுபுலியூர்ச் சலசயனத் துள்ளும் எனது உள்ளத்து உள்ளும் உறைவாரை” (பெரியதிருமொழி 7.9.1) என்றார்.
Google Map
திருச்சிறுபுலியூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருச்சிறுபுலியூர் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது
