Site icon Vaishnavism

021 திருநந்திபுர விண்ணகரம் thirunandhipura vinnagaram

Advertisements

செண்பகவல்லித்தாயார் ஸமேத ஜகந்நாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருநந்திபுர விண்ணகரம் / நாதன் கோவில் / தக்ஷிண ஜெகந்நாதம்
மூலவர்ஜகந்நாதன், நாத நாதன் , விண்ணகரப்பெருமாள், நந்தி நாதன் , போக ஸ்ரீனிவாசன்
உத்ஸவர் ஜகந்நாதன்
தாயார் செண்பகவல்லித் தாயார்
திருக்கோலம்வீற்றிந்த திருக்கோலம்
திசைமேற்கு
பாசுரங்கள்10
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 10
தொலைபேசி+91 435 2417575 / +91 98430 95904 / +91 94437 71400

கோவில் பற்றி

இந்த கோவில், வானமாமலை மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

எம்பெருமான் ஜகந்நாதன் ஆனபடியால், அவர் பெயரில் உள்ள நாதனுடன் கோவில் சேர்ந்து நாதன் கோவில் ஆயிற்று.

இப்பெருமான் கையில் 5 ஆயுதங்களைக் கொண்ட பஞ்சாயுதனாகத் திகழ்கிறார், வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு இந்த ஐந்து ஆயுதங்களைப் பெற்றுள்ளார்.

108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :

  • திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில்)
  • நந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்)
  • காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி த்ரிவிக்ரமப் பெருமாள்)
  • அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், குடமாடு கூத்தன் கோவில்)
  • வைகுண்ட விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம், வைகுண்ட நாதர் கோவில்)
  • பரமேச்சுர விண்ணகரம் (பரமபத நாதன், காஞ்சிபுரம்)

அதிகார நந்தி, சந்நிதியின் இடதுபுறம் உள்ளது.

ஸ்தல புராணம்

திருமகள், திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று செண்பகாரண்ய க்ஷேத்திராமான இந்த ஸ்தலத்தில், கிழக்கு நோக்கி திருமாலை நினைத்து தவம் செய்ய, எம்பெருமான் மேற்கு நோக்கி தாயாருக்கு காட்சி கொடுத்து திருமகளின் பிரார்த்தனையை நிறைவேற்றினார். செண்பகாரண்ய க்ஷேத்திராமானதால், தாயார் செண்பகவல்லி ஆனார்.  திருமகளின் எண்ணத்திற்கு இசைந்து பிராட்டியை நெஞ்சில் ஏற்றுக்கொண்டதால் பெருமானுக்கு போக ஸ்ரீனிவாசன் என்பது பெயர்.

அதிகார நந்தி என்றும், நந்திகேஸ்வரர் என்றும் அழைக்கப்படும் சிவபெருமானின் வாகனமான நந்தி, ஒரு சமயம் மஹா விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்கு வந்தபோது காவலில் நின்ற துவார பாலகர்களை கேளாது உள்ளே புக முயன்றபோது, துவார பாலகர்கள் தடுத்து, தங்கள் அனுமதி பெறாமல் செல்ல முயற்சித்ததால், காரணம் காணா அளவுக்கு அவர் உடம்பில் உஷ்ணம் எரிந்துகொண்டிருக்கக்கடவது என்று சபித்துத் திருப்பி அனுப்பினர். நந்தி, சிவபெருமானை உதவி கேட்க, அவர் இவ்வியாதியைப் போக்க நந்தியை செண்பகாரண்ய க்ஷேத்திரத்தில் கடும் தவம் இருக்க சொன்னார். எனவே அங்கு சென்று நந்தி, திருமாலைக் குறித்து தவமிருந்து சாபத்தைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு.

நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில் என்றே அழைக்கப்பட்டது, பின்னர், நந்தியின் இந்த தவத்திற்கு பிறகு, நந்திக்கு அருள் புரிந்ததால் நந்திபுர விண்ணகர் என்று ஆயிற்று.

சிபி சக்ரவர்த்தி புறாவின் உயிரைக் காப்பற்ற தராசின் ஒரு பக்கத்தில் தான் அமர்ந்து புறாவின் எடைக்கு எடை சமமாக மாற்றி அவன் உயிர் தியாகம் செய்ய இருந்ததை காண்பதற்காக எம்பெருமான், கிழக்கில் இருந்து திரும்பி, மேற்கு நோக்கி உள்ளான் என்றும் சொல்கிறார்கள்.

ஆழ்வார்

நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்” என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் பயின்று வந்துள்ளது. நந்தி பணி செய்த நகர் என்று திருமங்கை ஆழ்வார் கூறுகிறார். ” வாளும் வில்லும் வளையாழி கதை சங்கமிவை யங்கை யுடையான்” என்று ஐந்து ஆயுதங்களையும் ஏந்தி உள்ள எம்பெருமான் என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.  

நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்ற பாடல் திருவட்டாறு என்ற திவ்யதேசத்திற்கு மட்டுமே. இந்த திவ்யதேசத்திற்கு கிடையாது. இருந்தாலும், இந்த பாசுரத்தை இங்கே நினைவில் கொள்ளலாம், ஏன் என்றால், திருமகள், திருமாலின், திருமார்பில் நிரந்தரமாக இருக்க வேண்டி தவம் செய்த திருத்தலம் ஆயிற்றே. திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து, அவை, ஒன்றோடு ஒன்று சேர்வதால் மேலும் மேலும் அழகு கூட்டிக்கொள்வதை நினைத்து ரசிக்கலாம்.

Google Map

ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருநந்திபுர விண்ணகரம் பற்றி

தினம் ஒரு திவ்யதேசம், திருநந்திபுர விண்ணகரம் பற்றி

Exit mobile version