பூர்ணவல்லித்தாயார் ஸமேத புருஷோத்தமப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
| திவ்யதேசம் | திருக்கரம்பனூர் / உத்தமர்கோவில் / பிச்சாண்டார்கோவில் / கதம்ப க்ஷேத்திரம் | |||
| மூலவர் | புருஷோத்தமன் | |||
| உத்ஸவர் | புருஷோத்தமன் | |||
| தாயார் | பூரணவல்லித்தாயார், பூர்வாதேவி | |||
| திருக்கோலம் | கிடந்த | |||
| திசை | கிழக்கு | |||
| பாசுரங்கள் | 1 | |||
| மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 1 |
பிரம்மா, விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் இருந்து அருளும் ஸ்தலம்.
ஜனக மன்னன் இங்கு யாகம் செய்தாதாகவும் எம்பெருமான், பிரஹ்மாவுடனும் சிவனுடன் அவருக்கு காட்சி கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
சிவன் பிச்சாடனராக வந்து தன் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் பிச்சாண்டார்கோவில் என்றும், மஹாவிஷ்ணு கதம்ப மரமாக நின்றதால், கதம்பனூர் என்றும் அழைக்கப்படுகின்றன. சப்த குரு ஸ்தலம் என்ற பெயரும் உண்டு.
“கரம்பனூர் உத்தமனை” என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்திற்கு விளக்கம் அளித்த பெரியவாச்சான் பிள்ளை “வழிக்கரையிலே திருவாசலுக்கு ஒரு கதவிடாதே வந்து கிடக்கிறவனை.” என்று சொன்னார். அது அன்று அவ்விடத்துக் கோபுர வாசலுக்குக் கதவு இல்லாமல் இருந்ததை சொன்னது. அது திருமாலின் திவ்யகுணங்களில் ஒன்றான ஸௌலப்யம் என்பதை பிரதிபலிக்கும். ஸௌலப்யம் என்பது பெரியவர், தாழ்ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது. இப்படிப்பட்ட சௌலப்யத்தைக் கொண்டே உத்தமன் என்று திருநாமமிடப் பெற்றான். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வாரும், ஆண்டாளும் தான் எம்பெருமானை உத்தமன் என்று பெயரிட்டுள்ளனர். (ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி)
Google Map Location
பிரம்மாவிற்கு கோவில் உள்ள ஒரே ஸ்தலம் இது மட்டும் தான். சரஸ்வதியுடன் இங்கு இவர் அருள் பாலிக்கின்றார். கார்த்திகை தினத்தில், சிவனும், விஷ்ணுவும் திருவீதி உலா வருவது ஒரு சிறப்பு. பிரம்மாவிற்கு இடப்புறத்தில், ஞான சரஸ்வதி தனி சன்னதியில் தெற்கு நோக்கி சேவை புரிகிறார். இவர் கைகளில் வீணை இல்லாமல், ஓலைச்சுவடி மற்றும் ஜெபிக்கின்ற மாலைகளுடன் காட்சி அளிக்கிறார்.
விஷ்ணு உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்று சேவை சாதிக்கின்றார். மூலவர் கிழக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பூர்ணவல்லி தாயார் தனி சந்நிதியில் அருளுகிறார். உணவு பஞ்சமில்லால் இருக்க இவர் அருளுகிறார். அருகே மஹாலக்ஷ்மி தாயாருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. சிவன் மேற்கு நோக்கி, பெருமாளுக்கு பின் புறத்தில் லிங்க ரூபத்தில் காட்சி அளிக்கிறார். உத்சவர் பிச்சாண்டாராக காட்சி தருகிறார்.
பிரம்மாவின் ஒரு தலையை கொய்த சிவபெருமான், அந்த பாவம் தீர, பிச்சாண்டாராக இந்த ஸ்தலத்திற்கு வந்தபோது மஹாலக்ஷ்மி அவருக்கு உணவு அளித்து, அவரின் பசியைத் தீர்த்ததால் மகாலட்சுமிக்கு பூர்ணவல்லி என்ற திருநாமம் உண்டானது.
திருமங்கையாழ்வார் இங்கு இருந்தபடிதான், திருவரங்கத்திற்கு மதில் மண்டபம் போன்ற திருப்பணிகள் செய்தார் என்றும் அதனாலேயே இங்கு ஆழ்வார் பட்டவர்த்தி என்று ஒரு இன்றும் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
திருக்கரம்பனூர் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருகரம்பனூர் பற்றி சொல்வது
