A Simple Devotee's Views
Please click here to view the English Version, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்றொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடிஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.
முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லிய நழுவியபோது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை திருவரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் எம்பெருமான் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டுவிட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.
எம்பெருமான், திருவரங்கனாக
இதுவரை, எம்பெருமான் தனக்கு கொடுத்த அனுபவத்தை சொல்வது (1-3), தன்னுடைய அனுபவத்தை கொண்டு உபதேசம் செய்வது (4-14), மற்றும் எம்பெருமான் தனக்கு செய்த நன்மைகளை நினைத்துக் கொள்ளுதல்(15-24) என்ற முதல் மூன்று உட்பிரிவுகளை பார்த்த பின் தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்று ஒரு ஐந்து பாடல்களிலும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளன என்று அடுத்த ஐந்து பாடல்களிலும் ஆழ்வார் சொல்லும் 25 முதல் 34 வரை உள்ள பத்து பாசுரங்கள் கொண்ட ஆழ்வாரின் நைச்சானுசந்தானம் என்ற இந்த நான்காவது பகுதியை இப்போது அனுபவித்து வருகிறோம்.
தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்ற தலைப்பில் 25 முதல் 29 வரை உள்ள பாடல்கள்:
இனி வரும் ஐந்து பாடல்களில், தன்னிடம் எல்லாவிதமான தீமைகளும், மற்றும் கெட்ட குணங்களும் உண்டு என்று சொல்வதைப் பார்க்கலாம்,
இந்த வகையில், தன்னிடத்தில் இல்லாத தீமை, உலகத்திலேயே இல்லை என்றும், எல்லா வித தீமைகளும் தன்னிடம் குடி கொண்டு இருக்கின்றன என்றும் மற்றவர்கள் ஏற்றம் பெறுவதை பொறுக்காத தீயகுணம் தன்னிடம் உள்ளது என்றும் சொல்லும் மனத்திலோர் தூய்மையில்லை (30) என்ற பாடலை கண்டோம்.
தான், தவங்களை மேற்கொள்பவர்களின் கூட்டத்தில் இல்லை, அடியவர்களுக்கு ததியாராதனம் செய்வதற்காக பொருள் சேர்ப்பவர்களின் கூட்டத்திலும் இல்லை, சொந்த பந்தங்களுக்கு உப்புத் தண்ணீர் போல ஒரு பயனும் இல்லாதவனாகவும், கூடி இருந்த பெண்களுக்கும் சம்பந்தங்கள் அற்று போகும்படி, கள்வனாகவும் ஆனதாக ஆழ்வார் சொல்கிறார். அதனால் இந்த பிறவி வீணானதாக வருந்துவது தவத்துளார் தம்மில் அல்லேன் என்ற 31வது பாடலில் சொல்லப்பட்டது.
திருவரங்கம், கோவிலிலே கண்வளர்ந்து இருக்கும், எம்பெருமானை அடைவதற்கு ஒரு வழியும் அறியாதவனாய், மனிதரில் கள்வனாய், மனதிற்கு பிடித்தவற்றை, விட முடியாதவனாக, மூடனாக, தன்னிடம் இல்லாத யோக்கியதை மனதில் கொள்ளாமல் எம்பெருமான் முன் வந்து நின்றதை தன்னுடைய மூடத்தனம் என்று ஆழ்வார் ஆர்த்து வண்டு அலம்பும் சோலை என்ற 32வது பாடலில் சொல்கிறார்.
இனி அடுத்த பாசுரம், நன்றி.
மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு, பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே
தம்முடைய தாழ்வுகளை வாயாறச்சொல்லி தனக்கு போக்கிடம் வேறு எதுவும் இல்லை என்று கதறி, எம்பெருமானின் கருணையின் மேல் உள்ள ஆசையினால், அதனை மட்டுமே எதிர்பார்த்து கொண்டு அவன் முன் வந்ததாக ஆழ்வார் கூறும் பாடல்.
சென்ற எட்டு பாடல்களால் தன்னிடம் நன்மைகள் எதுவும் இல்லை; தீமைகளுக்கும் குறைவில்லை; இங்குள்ளவர்களுக்கு ஆகாதவன் ஆனேன் என்றும், மூர்க்கனேன் வந்து நின்றேன் என்று சொன்ன ஆழ்வாரிடம் எம்பெருமான், அந்த வார்த்தைகள் ஆழ்வாரின் இதயத்தில் இருந்து உண்மையாக வருகிறதா என்று திருவுள்ளமாக, ஆழ்வார் அதுவும் பொய் என்கிறார். அப்படி ஒரு உபாயமும் இல்லையாகில் தான் எப்படி அருள்வது என்று திருவுள்ளமாக, ஆழ்வார் எம்பெருமான் திருவடிகளின் சம்பந்தமும் கிருபையையும் மட்டுமே எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
மனம், மொழி, உடல் என்கிற மூன்றினாலும், உண்மையாய் இருக்க வேண்டியவராய் இருக்க முடியாமல் போனாலும் ஏதாவது ஒன்றிலாவது உண்மையானவனாக இருந்திருக்கலாம். ஆனால்; அப்படிப்பட்ட நிலைமையும் தனக்கு இல்லை; உலக விஷயங்களில் உள்ள ஆசையினால் பொய் தவிர வேறு எதுவும் இல்லாதவனாக இருக்கின்றேன். ஆயினும் எம்பெருமானின் திருவருள் இருக்குமானால், தனக்கு ஒரு குறையும் இல்லை என்கிற விசுவாசம் ஒன்று மட்டும் தன்னிடத்தில் உள்ளதால் அந்த ஆசையினால் வெட்கமும் அச்சமும் கொண்டு அவர் முன்பு வந்து நின்றேன் என்கிறார்.
இனி சற்று விளக்கமாக
மெய் என்பது உயிர்களுக்கு நன்மை விளைவிப்பதாக, உள்ளதை உள்ளபடியே பேசும் என்று அர்த்தம் ஆகும். முன் பாடல்களில், (25 – 29) தம்மிடம் இல்லை என்று ஆழ்வார் சொன்ன எல்லா நன்மைகளுக்கும் மூலம் சத்யம் என்ற மெய் ஒன்றே ஆகும்.
ஸத்ய மூலமிதம் சர்வம் லோக; ஸத்யே ப்ரதிஷ்டித : நாஹம் மித்யா ப்ரவஷ்யாமி ஸத்யமேவ வதாம்யஹம் : (கைசிக மஹாத்மியம், 32) என்றதன் படி, இந்த உலகம் உண்டானது சத்தியத்தினால், இந்த உலகம், சத்தியத்திலேயே நிலைநிற்கிறது. நம்பாடுவான், தான் எப்போதும் உண்மையே பேசுபவன், எம்பெருமானிடம் ஈடுபட்டவர்கள் எப்போதும் பொய் சொல்வதில்லை என்று சொல்வது இங்கே மேற்கோளாக காட்டப்படுகிறது.
உண்மை (மெய் ) பலவகை பட்டது; மனதில் நினைப்பது உண்மையாக இருக்க வேண்டும்; அதே போல் அதை சொல்வதும் உண்மையாக இருக்க வேண்டும். முடிவில் அது செயலிலும் உண்மையாக இருப்பது மட்டுமே மெய். இதில் ஏதாவது ஒன்று மாறுபட்டோ, அல்லது இவைகளை பலவிதமாக பலரிடம் சொல்வதிலோ செய்வதிலோ வெளிப்படுவது என்பது, முழுமையான உண்மை இல்லை. அதனால் தான் ஆழ்வார் மெய் எல்லாம் என்கிறார். ஆழ்வார், தான் மட்டும் மெய்யாக இல்லாமல், தன்னை சுற்றி இருப்பவர்களும், தான் இருக்கும் நாடு முழுவதிலும் மெய்யர்கள் இல்லாதவர்களாக பார்த்துக் கொண்டதை ‘போக விட்டு‘ என்பதன் மூலம் சொல்கிறார். அனைத்தும் அறிந்த எம்பெருமானிடம் , உண்மையே பேசித் தீர வேண்டும்; இருந்தும் அவர் முன்பும் பொய் பேசினேன் என்று ஆழ்வார் வருந்துகிறார்.
இப்படி உண்மையை அடியோடு கைவிடுவதற்கு என்ன காரணம் என்பதற்கு, ஆழ்வார் ‘விரி குழலாரில் பட்டு‘ என்று பிற பெண்களுடன் பழகியதை குறிப்பிடுகிறார். எப்படி எம்பெருமானை நேசிப்பவர்களுக்கு பொய் சிறிதும் ஆகாதோ, அதே போல் விரிகுழலாருடன் கூடி மகிழ்பவர்களுக்கு உண்மை ஆகாது என்பது கருத்து. இங்கு திருவாய்மொழி (5.10.2) மேற்கோள் சொல்லப்படுகிறது. ‘அது இது உது என்னல் ஆவன அல்ல, என்னை உன் செய்கை நைவிக்கும்’ என்று நம்மாழ்வார் சொல்வது எம்பெருமான் விஷயத்தில் எந்த செயலை நினைத்தாலும் அடியவர்கள் அவைகளில் நன்றாக ஈடுபடுவது போல், விரிகுழலாரில் ஆழ்ந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபடுவார்கள் என்று உரையாசிரியர் சொல்கிறார்.
‘பட்டு‘ என்பது, மீளமுடியாதபடி வலையில் அகப்பட்டு என்பதாகும். ஆச்சார்ய உபதேசத்தாலே எம்பெருமானின் திருமேனி அழகை நேரில் காண நிற்கும் போதும், நெஞ்சம் அந்த பெண்களை நினைக்கும்படி அன்றோ அவர்கள் வலையில் இவன் அகப்பட்டு இருப்பது என்கிறார்.
மெய்யை எப்படி அடியோடு விட்டது போல், பொய்யை ஒன்று விடாமல் முழுவதுமாக சேர்த்துக் கொண்டேன் என்கிறார். எம்பெருமானோடு கொண்ட தொடர்பு, பொய் பேசுபவர்களையும் உண்மை பேச வைப்பது போல், பிற பெண்களின் தொடர்பு, உண்மை பேசுபவர்களைக்கூட பொய் பேச வைக்கும் என்கிறார்.
உண்மை போலவே, பொய்யும் பலவகை படுவதால், அதையும் எல்லாம் என்று குறிப்பிடுகிறார். பொய் என்று சொல்லக்கூடிய எல்லாவற்றையும் தன்னுடன் வைத்து கொண்டார் என்கிறார்.
பொதிந்து கொண்ட என்பதற்கு, எல்லா பொய்களும் எங்கும் தப்பி போகாமல் தன்னுடன் சேர்த்து வைத்து கொண்டேன் என்று சொல்வதாகும். உலகத்தவர் யாராவது எப்போதாவது தங்கள் பெண்டிரிடம் பொய் செல்ல வேண்டுமானால் ஆழ்வாரிடம் வந்து கேட்டு பெற்று செல்ல வேண்டும், ஏனெனில், பொய் என்பதனை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டார் போல் சொல்லப்படுகிறது. கோட்டையின் எட்டு திக்குகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளே உள்ளவர்கள் வெளியே போகாதபடி வைத்து இருப்பது போல், பொய்கள் ஒன்றும் இவரைவிட்டு போகாமல் பார்த்துக்கொண்டு உள்ளதாக சொல்கிறார்.
மெய் பேசுபவர்கள் மட்டும் தான் எம்பெருமானை அணுக முடியும் ஆகையால், தன்னுடைய தாழ்வை மட்டும் எடுத்துக்கொண்டால் அவனை அணுக முடியாது என்றும் வேறு போக்கிடம் இல்லாததால் எம்பெருமான் முன் வந்து நின்றேன் என்று பாடுகிறார். எம்பெருமானை அடையவேண்டிய சாதனங்களை செய்தவர்கள் அவன் வாசல் முன், வேலை செய்தவன் கூலி பெறுவதற்கு நிற்பது போல், தானும் வந்து இருப்பதை ‘நின்றேன்‘ என்கிறார். போட்கனேன் என்றால் கதியற்ற நிலை, போக்கிடம் இல்லாமல் வந்து நின்றதாக ஆழ்வார் உரைக்கிறார்.
ஐயனே என்பதற்கு இயற்கையிலேயே எம்பெருமானிடம் தனக்கு உள்ள உறவினை பற்றி ஆழ்வார் கூறுகிறார். வெளி இந்திரியங்களையும் உள்ளிந்திரியங்களையும் அடக்கியவர் மட்டுமே அடையக்கூடிய பரமபத்திற்கு வர ஆசை கொள்வது ஏன், விரிகுழலாரிடமே செல்ல வேண்டியது தானே என்றதற்கு ஆழ்வார், தன்னால் அழித்துக்கொள்ள முடியாத இயற்கையிலேயே உண்டானதான உறவு எம்பெருமானிடம் உள்ளதால் வந்ததாக சொல்கிறார். தாய் தந்தையர்களிடம் பல தீங்குகளை செய்தவர்கள், பிறர் அறியாமல் பின்பக்கம் வழியாக வந்து அவர்களிடம் உதவி பெறுவதுபோல் வந்ததாக கூறுகிறார்.
‘இயற்கையிலே உறவினன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள், ஸாஸ்திரத்தை படித்தா, அல்லது ஆச்சார்யர்களின் உபதேசத்தின்படியாக இங்கு வந்தீர்’ என்பதற்கு, அரங்கனே என்ற பதத்தால், சம்சாரிகள் உஜ்ஜிவிக்க வேண்டும் என்பதையே பெரும் பயனாக கொண்டு திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானிடம் வந்ததாக கூறுகிறார். பரமபதத்தின் உயர்வினையும் கருத்தில் கொள்ளாமல், தம்மை வெறுப்பார்கள் இருக்கும் இடமாக இருந்தாலும், தான் வெறுப்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தாலும், இங்குள்ள அனைவரையும் பரம்பத்திற்கு அழைத்து செல்லும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று உறுதி செய்து கொண்டு வந்துள்ளதாலும், எம்பெருமான் சயன திருக்கோலம் கொண்டுள்ளதாக சொல்கிறார்.
எம்பெருமானின் கருணையை பெறுவதற்காக வந்து நின்றேன் என்று ஆழ்வார் கூறுகிறார். எம்பெருமானின் கருணை, தாம் அழியும்படியான அளவிற்கு தங்களுக்கு தீங்கை விளைவித்துக் கொண்டவர்களும் அவனின் கருணை வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அல்லவோ உள்ளது என்று ஆழ்வார் கூறுகிறார். அப்படி சொல்வதற்கு காரணம், இராமபிரான் காகாசுரனிடம் காட்டிய கருணை. ப்ரம்மாஸ்திரத்தினால் இராமன் காகாசுரனை அழிக்க முற்பட்ட நிலையிலும், அவன் இராமபிரானின் திருவடிகளில் விழலாம் போல் அல்லவோ இராமனின் கருணை இருக்கிறது. இராமாயணம், சுந்தர காண்டம், 38.34ல் சொல்வது, சரணம் அடைந்தவனும், பூமியில் விழுந்தவனுமான காகாசுரனை, கொல்ல தகுதியான இருந்தபோதிலும், சரணம் அடைய தக்கவனான இராம பிரான் தன் அருளாலே காப்பாற்றினான்.
தம்மிடம் நன்மைகள் எதுவும் இல்லை, தீமைகளும் ஒன்று விடாமல் உண்டு என்று அறிந்து, எம்பெருமானிடம் உள்ள உறவையும் அறிந்து ஆழ்வார் வந்துள்ளதை ஆமோதித்து அது போன்ற அதிகாரிகளையே தாம் எதிர்பார்த்து இருப்பதாக சொல்லி, ஆழ்வார் இப்படித்தான் வந்தாரா என்று எம்பெருமான் வினவ, ஆழ்வார், ஆராய்ந்து பார்க்கையில் அது உண்மை இல்லை, பொய்யாகவே இருந்தது என்கிறார். இயற்கையாகவே எல்லாவற்றையும் அறிந்த எம்பெருமானிடம் தான் மெய் என்று ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.
பொய்யனேன் என்று சொன்னது, தீமைகளில் தன்னிடம் இல்லாது எதுவும் இல்லை என்பது ஆகும். எம்பெருமான் முன், தமக்கு புகலிடம் இல்லை, அவனை தவிர வேறு போக்கிடம் இல்லை, அவனே தனக்கு உபாயம் என்று செய்வது சரணாகதி ஆகும். இது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது; இதை அவன் முன் செய்வதால் பயன் உண்டு என்று சொன்னதால் தானும் செய்ததாக சொல்கிறார். உண்மையாகவே தன் தாழ்வினை மனதில் கொண்டு சொல்லவில்லை என்ற கருத்து.
பொய்யனேனே என்று சொன்னது, இயற்கையிலேயே எல்லாவற்றையும் அறிந்திருக்கும் எம்பெருமானே மெய் என்று மயங்கும்படி பொய் சொன்னதாக சொல்கிறார். முன்பு சொன்ன பாசுரங்களில், ஆதரம் பெருக வைத்த அழகன் (16), கண்ணினை களிக்குமாரே (17), பனியரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று எல்லாம் சொன்ன வார்த்தைகளை பொய் மாலைகள் என்று இங்கே குறிப்பிட்டு, பொய்யனேன் பொய்யனேனே என்று சொல்கிறார். மெய்யே சொல்லி பிழைக்க வேண்டிய எம்பெருமான் முன் எத்தனை பொய்கள் சொன்னேன் என்று சொல்லி ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம். நன்றி.