072 Thiruvaaipaadi திருவாய்ப்பாடி

ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஸமேத நவமோஹன கிருஷ்ணன் திருவடிகள் போற்றி போற்றி !!

திவ்யதேசம்திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல் )
மூலவர்நவமோஹன கிருஷ்ணன்
உத்ஸவர்
தாயார் ருக்மணி சத்தியபாமா
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்22
மங்களாசாசனம் பெரியாழ்வார் – 10
ஆண்டாள் – 5
திருமங்கை ஆழ்வார் – 7
தொலைபேசி

வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.

Google Map

திருவாய்ப்பாடி பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்

திருவாய்ப்பாடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

திருத்தலம் பற்றி

டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் மதுரா புகைவண்டி நிலையம் உள்ளது. அங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் திரு ஆய்ப்பாடி என்றும் ஆயர்பாடி என்றும் கோகுலம் என்றும் சொல்லப்படும் இந்த திவ்யதேசம் உள்ளது.

கண்ணனின் லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக வ்ரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் வ்ரஜ பூமி’யில் உள்ளன.

யமுனா நதி இங்கே ஓடுகிறது. அருகில் புராண கோகுல் என்ற இடம் உள்ளது. இங்கே நந்தகோபர், யசோதை, பலராமர் மற்றும் கிருஷ்ணருக்கு மரத்தினால் ஆன சிலைகள் உள்ளன. இங்குள்ள மர விக்கிரகங்கள் காண்பதற்குப் பேரெழில் உடையனவாக உள்ளன. சிறு வயது கண்ணன் இங்கே மண் உண்டு தன்னுடைய திருவாயில் ஏழு உலகங்களையும் யசோதைக்கு காட்டியதை நினைவுகூறும் வண்ணம், மண்ணே பிரசாதமாக தரப் படுகிறது.

சிறைச்சாலையில் தேவகிக்கு மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் நந்தகோபர் வீட்டில், வந்து சேர்ந்த, கண்ணன் பிறந்த நாளுக்கு அடுத்த நாள், அதாவது ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் இங்கே நந்தோற்சவம் என்று ஆயர்பாடி வந்த திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.

ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும், மூர்த்திகளும் இப்போது இல்லை என்றாலும், இப்போது இருப்பவை, பிற்காலங்களில் ஏற்பட்டவை என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஆழ்வார்களின் மங்களாசாசனம் ஆயர்பாடி முழுமைக்கும் மங்களாசாசனம் பொருந்தும். மதுராவில் கோவில்களையும், யமுனையையும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்ததாகவே கொள்ளலாம்.

எம்பெருமானை “ரஸோ வைஸா” என்று வேதம் வர்ணிக்கிறது. அதாவது நீதான் சிறந்த ரஸம். பகவானை விட சிறந்த ரஸனை உள்ளவன் இல்லை என்று வேதம் வர்ணிக்கிறது. இந்த ரஸோ வைஸ என்பது கிருஷ்ணவதாரத்திற்கே அதிலும் குறிப்பாக கோகுல வாசத்திற்கே மிகவும் பொருந்தும் என்பது பெரியோர் வாக்கு. கிருஷ்ணரின் ரஸா அனுபவத்தை ரசித்தே உலகில் உயிரினங்கள் காலம் கடத்துகின்றன என்பதே உண்மை.

பார்க்க வேண்டிய இடங்கள்

  • கோகுலம்
  • புராண கோகுல் (சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில்)
  • மதுரா திவ்யதேசத்தில் குறிப்பிட்ட இடங்கள்
    • மதுரா சிறைச்சாலை கண்ணன் கோவில் – கிருஷ்ண ஜென்ம பூமி / கேசவதேவ் கோவில்
    • கோவர்த்தன கிரி, மலை, பரிக்ரமா அல்லது சுற்றி வருதல்
    • கேசீ காட், காளிய மதன் காட், சீர் காட், ரமண்ரேதீ, வம்சீ வட், சேவா குஞ்ச், நிதிவனம், பங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர், ரங்கஜி மந்திர் / ரங்கமந்திர்

ஸ்தல வரலாறு

இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, ஸ்ரீமத் பாகவதத்தில் கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து திருஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.

கண்ணனின் சிறு வயதில் நடத்திய லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன்
சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த விளையாட்டுக்கள் எல்லாம்
பல நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. வீடுகளில் வெண்ணெய் திருடி உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்று பலவிதமான லீலைகளை செய்த இதன் இந்த கோகுலம்.

பூதகியை கொன்றது, கன்றுகள் மேய்த்து திரும்பியது, நந்த கோபர் வீட்டுக்கு முன் இருந்த மரங்களை முறித்தது, கொக்காசுரன், சகடாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்தது, கோபியரோடு ஆடியது, காளிங்க நர்த்தனம் செய்தது, குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தது, கோபியரோடு குரவை கூத்து ஆடியது, வேணுகானம் இசைத்தது, கம்ச வதம் செய்தது என்று ஆயர்ப்பாடி வரலாற்றை நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

கோகுலத்தில் கண்ணன் செய்த லீலைகளை தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள்.

ஆழ்வார் ஆச்சார்யர்கள்

பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய 3 ஆழ்வார்களால் 22 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த கோகுலம் என்ற திவ்யதேசம்.

கண்ணன் வளர்ந்த ஊர் என்பதால் ஆயார்பாடிக்கு பெருமை உண்டானது. ஆயர்பாடியின் செல்வத்தை, அதன் வளத்தை, சீர்மல்கும் ஆய்ப்பாடி, என்று ஆண்டாள் பெருமை பேசுகிறார். அங்கே ஆயர்கள் பாலை கறக்க குடத்தை எடுத்ததும், ஒரு சில நொடிகளில் குடத்தை நிறைந்ததும், அதனால் வள்ளல் பெரும்பசுக்கள் என்று அவள் போற்றி பாடுகிறார். பரம் பொருளாகிய நாராயணனின், கிருஷ்ணனின், தங்கள் வீடு வந்த சந்தோஷத்தை ஆயர்கள் கொண்டாடினர். கண்ணன் பால் தயிர் வெண்ணையை திருட வருவான் என்று நினைத்து பால், தயிர் வெண்ணை என்று வீடு எங்கும், நிறைத்து வைத்துஇருப்பார்கள் என்று பெரிய ஆழ்வார் பேசுகிறார்.

பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

14ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார் நம்பிரான் எங்குற்றான் என்பார், பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப் பாடியே. (பெரியாழ்வார் திருமொழி 1.2.2)கோகுலத்தில், எல்லோரும் தங்கள் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆனந்தம் அடைந்து, தாம் என்ன செய்வது என்று தெரியாமல், ஓடினார்கள்; சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; உரக்க கோஷம் செய்தார்கள்; குழந்தை எங்கே என்று தேடினார்கள்; பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதற்கு ஏற்றபடி கூத்தாடினார்கள்; ஆக பஞ்சலக்ஷம் குடியில் இருந்த எல்லோரும் கோலாகலமாக இருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தால் திருவாய்ப்பாடியில் சந்தோஷம் அடையாதவர் ஒருவரும் இல்லை; ஆய்ப்பாடியே ஓடுவாரும் ஆடுவாருமாக ஆயிற்று என்பர்.
16
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார், நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார், செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. பெரியாழ்வார் திருமொழி 1.2.4
கண்ணன் பிறந்த சந்தோஷம் அடங்காமல், நெய்யும் பாலும் தயிரும் இருக்கிற உறிகளை அறுத்துக் கொண்டு, முற்றத்திலே கொட்டி உருட்டி விட்டு ஆடினார்கள்; நெய் பால் தயிர் முதலியவற்றை அதிக அளவில் தானம் செய்தார்கள்; தலைமுடி அவிழ்ந்ததும் தெரியாமல் கூத்தாடினார்கள்; கோகுலத்து இடையர்கள் எல்லாரும் பெருமையினால் இன்னதுதான் செய்வதென்று தெரியாமல் சந்தோஷத்துடன் ஆடினார்கள்; நன்றாக தூவுவார் என்று சொன்னதை, நன்று ஆக தூவுவார் என்று கொண்டு, பிறந்த பிள்ளைக்கு நன்மை உண்டாகும்படி என்றும் பொருள் கொள்ளலாம்.
132தீயபுந்திக் கஞ்சன்உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து மாயந் தன்னால் வலைப் படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போகவேண்டா ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே. பெரியாழ்வார் திருமொழி 2.2.5)கண்ணபிரானே, கெட்ட புத்தியையுடைய கம்சன், உன்னிடத்தில் கோபம் கொண்டு, நீ தனியாக இருக்கும் சமயம் பார்த்து, வஞ்சனையால் உன்னை கைப்படுத்திக் கொண்டால் நான் உயிருடன் இருக்கும் சக்தி அற்றவளாக இருப்பேன், தாய்மார்கள் சொல்லும் வார்த்தைகள், மிகவும் முக்கியமான அவசியமான வார்த்தைகள் ஆகும். மீண்டும் வற்புறுத்தி சொல்கிறேன், நீ எங்கும் செல்ல வேண்டாம், திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபமானவனே! அமர்ந்து வந்து என் முலை உணாயே என்கிறார். உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், இத்திருவாய்ப்பாடி முழுவதும் இருள் சூழ்ந்து விடும் என்கிறார்.
145முலையேதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்து விட்டு மலையை யெடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசுநிரை மேய்த்தாய் சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திருவாயர்பாடிப் பிரானே தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே யன்றே. (பெரியாழ்வார் திருமொழி 2.3.7)முலையையும் மற்றும் உள்ள பக்ஷ்ணங்களையும் வேண்டாம் என்று சொல்லி காதில் இட்ட காதணியை தூக்கி எறிந்து விட்டு கோவர்த்தன மலையை குடையாக தூக்கி ஆலங்கட்டி மழையில் இருந்து ஆயர்குல மக்களையும், ஆடு மாடுகளையும் மனம் உகந்து காத்துஅருளினவனே, இராமாவதாரத்தில், சிவ தனுசுவை முறித்து, பிராட்டியை மணம் கொண்டவனே, த்ரிவிக்ரமனே, திருஆய்ப்பாடிக்கு உபகாரகனே, என்று பலவிதமாக யசோதை கண்ணனை புகழ்ந்து மீண்டும் அந்த காதணியை அணிவிக்க முயல, அவன் இசையாமலிருக்க யசோதையானவள் ‘அப்பா! உன்மேல் ஒரு குற்றமும் இல்லை; தலை செவ்வனே நில்லாத இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டது என்னுடைய குற்றமே’ என்று வெறுத்துக் கூறுகின்றாள்.
231தாய்மார் மோர் விற்கப் போவர் தகப்பன்மார் கன்று ஆநிறைப் பின்பு போவர் நீ ஆய்ப்பாடி இளங் கன்னி மார்களை நேர்படவே கொண்டு போதி காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழறத் திரியும் ஆயா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவேபெரியாழ்வார் திருமொழி 3.1.9தாய் மோர் விற்பதற்கு வெளியே செல்வார்கள்; தந்தை இளம் பசுக்கூட்டங்களை மேய்பதற்காக அவற்றின் பின்னே போய்விடுவர்கள்; அப்படிப்பட்ட சமயங்களில், ஆயர்பாடியில் தனியே இருக்கும் அந்த இளம் பெண்களை நீ விருப்பம் போல், இஷ்டமான இடங்களுக்கு அழைத்து செல்கிறாய்; உன்மீது பகைமை பாராட்டும், சிசுபாலன், கம்சன் முதலானவர்களுக்கு உன்மீது பழிச்சொல் சொல்லி சந்தோஷம் படுபவர்களுக்கும், உன்னை விரும்புபவர்களும் உன் செயல்களை கண்டு, உன்னை வெறுக்கும்படி, திரியும் ஆயனே, உன்னை சாதாரண மனிதன் அல்ல என்றும், அருந்தெய்வம் என்றும் நான் அறிவேன்; உனக்கு முலை தர அஞ்சாமல் நின்றேன் என்று யசோதை சொல்வது போல் அமைந்த பாடல்.
235பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில் சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே, கற்றுத் தூளி உடை வேடர் கானிடைக் கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.2திருவாய்ப்பாடியில் இடைப்பெண்கள் மஞ்சள் அரைத்தால் ‘இது பற்றும், பற்றாது’ என்பதை சோதித்து பார்ப்பதற்கு கண்ணனுடைய கரிய திருமேனியிலே பூசிப் பார்ப்பார்கள் ; ஆதலால் அம்மஞ்சள் பற்றுமஞ்சள் எனப் பெயர் பெற்றது. சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடுகளை தன் திருவடிகளால் சிதைத்து விளையாடி திரியாமல், முன்னே வருபவர்கள் தெரியாதபடி கன்றுகளின் தூளிகளால் நிறைந்து இருக்கும், அடித்து பிடுங்கும் வேடர்கள் நிறைந்த காடுகளுக்கு கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், கண்ணபிரானுடைய பொன் போல் மேனி நிறம் மழுங்குமே என்றும், எல்லாம் நான் செய்த பாவமே என்று யசோதை வருந்துவதான பாடல்.
237வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிட பண்ணிப் பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கண்ணுக்கே இனியானைக் கான் அதர் இடைக் கன்றின் பின் எண்ணற் அரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. பெரியாழ்வார் திருமொழி 3.2.4 எவ்வளவு தீங்கு செய்தாலும் இந்த கண்ணனின் வடிவழகை நினைத்தால் ஆகிலும் கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் என்பதைப்போல், இவனை விடமுடியாதே என்ற கருத்துடன் உள்ள பாடல். அழகியதான கறுத்த கூந்தலை உடைய பெண்டிர், தலைமுடி கலைந்து ஓடி கண்ணனின் தாயான என்னிடம் வந்து, பல தீமைகளை செய்ததாக பழி தூற்றிடும் படி அவனை எங்கும் திரியவிடாமல் செய்து, காட்டுவழியில் கன்றுகளின் பின்னே ஏன் அனுப்பினேன், எல்லாம் தான் செய்த பாவமே என்கிறார். தீங்குகளால் நெஞ்சங்கள் புண் பட்டாலும், கண்கள் அவற்றை பதிவிடாமல் செய்யும் அழகை உடையவன் என்பதை கண்ணுக்கு இனியானை என்று கூறுகிறார். இந்த தன்மையானவன் என்று யாராலும் நினைக்க முடியாதவன் கண்ணன் என்பதை எண்ணற் அரியானை என்று கூறுகிறார்.
239மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கிப் போய் படிறு பல செய்து இப்பாடி எங்கும் திரியாமே கடிறு பல திரி கான் அதர் இடை கன்றின் பின் இடற என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. (பெரியாழ்வார் திருமொழி 3.2.6)கண்ணபிரானை வெண்ணெயை தொண்டையில் உறுத்தாமல் மெழுமெழுத்து ஓடும்படி விழுங்கி பல இடங்களுக்கு சென்று, பல கள்ள வேலைகளை செய்து, இந்த ஆய்ப்பாடி முழுவதும் திரியவிடாமல், பல யானைகள் திரியும் காடுகளில் கன்றுகளின் பின் போக விட்டேனே, எல்லாம் என் பாவமே என்று வருந்தும் ன்பாடல்;
மிடறு மெழுமெழுத்து ஓட வெண்ணெய் விழுங்கி என்பதற்கு, மற்ற பக்ஷணம், உணவு என்றால் பார்த்து சாப்பிட வேண்டும், வெண்ணை என்றால், அப்படியே விழுங்கிவிடலாம் என்கிறார். தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கிய பேழை (பெரியாழ்வார் திருமொழி 1.1.5), என்றும், தடாநிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கி யிட்டு (பெரிய திருமொழி 10.7.3) என்றும், ஈட்டிய வெண்ணை தொடுவுண்ண வந்து அவதரித்தவன் என்றும் விளக்கப்படுகிறது.
படிறு பல என்பதால் எண்ணில் அடங்காமையை சொல்லியது. பந்து பறித்துத் துகில் பற்றிக் கீறிப் படிறன் படிறு செய்யும் (பெரிய திருமொழி 10.7.5) என்றும், தொட்டு தைத்து நலியேல் கண்டாய்  (நாச்சியார் திருமொழி, 2.8) என்றும், எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால்
(நாச்சியார் திருமொழி 2.9) என்றும் படிறு பல விளக்கப் படுகிறது.
263விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மறைத்து ஆயர் பாடியில் வீதியூடே கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னி மார் காமுற்ற வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும் பண்ணின இன்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே (பெரியாழ்வார் திருமொழி 3.4.10)ஸ்ரீவைகுண்டத்திலே நித்யஸூரிகள் விரும்பி சேவித்த போதும், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் இருந்து தன்னை மறைத்து, திருவாய்ப்பாடியில் வந்து திருஅவதாரம் செய்து, பசுக்களின் பின்னே நின்றது, ஸ்ரீவைகுந்தத்தில் உள்ள அவனது மேன்மைக்கு எதிரிடையான, அவனுடைய சௌலப்யத்தை / நீர்மையை ஜீவாத்மாக்களுக்கு காட்டவே என்கிறார். பெரியாழ்வார் அருளி செய்த சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் இனிமையாக பாட வல்லவர்கள் வைகுந்தம் பெறுவார் என்று பலம் கூறி முடிக்கிறார்.
281புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங் கோவலர் கூட்டத்து அவையுள் நாகத் தணையான் குழலூத அமர லோகத்தது அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர் பாடி நிறையப் புகுந்து ஈண்டி செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. (பெரியாழ்வார் திருமொழி 3.6.7)பூமியில் நான் கண்ட ஒரு ஆச்சர்யத்தை காணுங்கள்; கன்றுகள் மேய்கின்ற கோபாலன் இருக்கிற கூட்டத்திலே, திருவனந்தாழ்வான் மேல் பள்ளிகொண்டு இருக்கின்ற சர்வேஸ்வரன் திருகுழலை ஊத, அந்த இசையானது தேவலோகம் முழுவதும் பரவ, வானவர் அனைவரும், அந்தணர்கள் தங்களுக்கு அளிக்கும் ஹவிஸை (யாகங்களில் அக்நிக்கு அளிக்கப்படும் பிரசாதம்) உண்ண மறந்து, திருஆய்ப்பாடியானது நிறைந்து வழியும்படி, நெருங்கி செவியின் உள்நாவால் குழல் ஓசையின் இனிமையை உட்கொண்டு, உள்ளம் களித்து பசு மேய்க்கும் கண்ணனை ஒரு நொடிப்பொழுதும் விடாமல் இருந்தார்கள்.
பெரியாழ்வார் திருமொழி

ஆண்டாள் – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி

474மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால், நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர், சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம், கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய். (திருப்பாவை 1)இந்த பாடல், திருவாய்ப்பாடி சிறுமிகள் “நாம் நோன்பு நோற்பதற்கு ஏற்ற காலம் ஏது” என்று மார்கழி நீராட்டத்தில் விருப்பமுடைய பெண்களிடம் கூறுவது, பகவத் கீதையில் கண்ணபிரான், மாதங்களில் தான் மார்கழி மாதமாகிறேன் என்று மார்கழி மாதத்தின் பெருமையை கூறினார். இங்கு, நீராட எனக் கூறியது நெடுநாளாகக் கண்ணபிரானைப் பிரிந்து இருந்தமையால் பிறந்த தாபம் அடங்க நீராட விருப்பமுடையீர், வாருங்கள் என்று அழைப்பது. “மார்கழித் திங்கள்” என்று கூறியது ஸத்துவகுணம் நிரம்பிய கால விசேஷத்தைக் குறிக்கும்.
கீழ்மையான ஸ்வர்க்கலோக அனுபவத்திற்கு ஹோமம் யாகம் முதலிய அரிய காரியங்களை செய்ய வேண்டும்; மீண்டும் திரும்ப முடியாத வைகுந்த மாநகர் புகுவதற்கு ஆசை மட்டும் இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பது, “போதுவீர் ! போதுமினோ” என்ற சொற்களால் விளங்கும்.  
பால், நெய் மற்றும் வெண்ணெய் முதலியவற்றால் சீர்மை பொருந்திய திருவாய்ப்பாடியில் திருநாட்டுத் தலைவனான கண்ணபிரான் வந்து பிறந்தமையால், “சீர்மல்கும் ஆய்ப்பாடி” எனப்பட்டது. 
எம்பெருமானிடம் அன்பு காட்டுவதைத் தவிர மேன்மையானது வேறு எதுவும் ஜீவாத்மாவிற்கு இல்லை என்பதாலும், தண்டகாரண்ய வாசிகளான முனிவர்கள் இராமபிரானது வடிவழகின் அதிசயத்தில் ஈடுபட்டு அன்பு மிகுதியால் அடுத்த பிறவியில் பெண்மையை விரும்பி ஆயர்பாடியில் மங்கையராய் பிறந்து, கண்ணணைக் கூடினர் என்பதாலும் “செல்வச் சிறுமீர்காள்” என்று கூறப்பட்டது.
எறும்பு முதலிய சிறிய உயிர்களின் அழிதலுக்கு அஞ்சிப் புல்லின் மேல் காலை வைத்து நடந்து அறியாத நந்தகோபன், கண்ணனை மகனாகப் பெற்ற பின்பு அவனிடத்தில் இருந்த அளவு முகுந்த பாசத்தினால், தொட்டிலின் கீழ் ஒரு சிறிய எறும்பு ஊர்ந்தாலும் அதனைக் கொல்வதற்காக எப்போதும் கூரிய வேலுடன் இருந்தான் என்பதை “கூர்வேற் கொடுந்தொழிலன் ” என்று கூறப்பட்டான்.  
உலகில் சிறுவர்கள் தந்தையரிடம் அஞ்சி நிற்பதும், தாய்களிடம் அடங்காமால் இருப்பதும் போல் கண்ணபிரானும் நந்தகோபனிடம் கன்றாகவும், யசோதையிடம் சிங்கமாகவும் இருந்தமையை “நந்தகோபன் குமரன்,” “யசோதை யிளஞ்சிங்கம்” எனப்பட்டது.
நாராயணனே என்று சொல்லும் போது உள்ள ஏகாரம் நாராயணன் அடியார்க்குக்கு அருளும் போது எதையும் எதிர்பாராது செய்பவன் என்று உணர்த்தும்.  நமக்கே என்ற இடத்தில் உள்ள ஏகாரமும் அதே பொருளுடன் நாராயணன், ஆகிஞ்சந்யம், அநந்யகதித்வம் ஆகியவற்றுடன் உள்ள நமக்கன்றி மற்றவர்க்கு காரியம் செய்ய மாட்டான் என்று கூறுகிறார்.
பறை என்பது நோன்புக்கு ஒரு விசேஷமான வாத்யம் ஆகும். பறை என்பதற்கு கைங்கர்ய பிரார்ப்த்தி என்ற ஒரு உள்ளுறை அர்த்தமும் உண்டு. எம்பெருமானிடம் ஆண்டாள் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று பிரார்திக்கிறார். இந்த பறை என்ற வார்த்தையும் அர்த்தமும் திருப்பாவையில் பல இடங்களில் பார்க்கலாம்.
618மற்று இருந்தீர்கள் அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்றிருந்தேனுக்கு உரைப்பதெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை பெற்றிருந்தாளை ஓழியவே போய்ப் பேர்த்தொரு தாய் இல் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமற் களமடைந்த மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின் (நாச்சியார் திருமொழி 12.1)
எம்பெருமானை இப்பொழுதே பெற்று விட வேண்டும் என்று வருந்தி இருக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் தாயும் ‘அம்மா! இது நம்மால் முடிவதில்லை, பேறு, அவன் தான் கொடுக்க வேண்டும் என்பதே ஸித்தாந்தமான பின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே, பேறு பெறுபவர் என்று ஆனபின்பும் அதற்காக காத்து இருப்பதே முறை, அசோக வனத்தில், சீதா பிராட்டி சொன்னதும் செய்தவைகளும் உனக்குத் தெரியாததா, அவளைப் போலே நீயும் பொறுத்து இருக்க வேண்டும், நீ இப்படி பதற கூடாது’ என்று சொல்லும் போது , ஆண்டாள் ‘எனக்கு இப்போது நிகழ்கிற துன்பங்களை சிறிதும் அறியாத நீங்கள், எம்பெருமான் விஷயத்தில் எனக்கு இருக்கின்ற ஆசை, மிகவும் அதிகமாக உள்ளதால், நீங்கள் எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண், உங்கள் பேச்சு என் காதுகளில் புகாது. புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி கொடுக்கும் நிலையிலும் நான் இல்லை. ஆகையாலே நீங்கள் எனக்கு சமாதானம் சொல்வதை விட்டுவிட்டு, “ஒருத்தி மகனாப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்து, முஷ்டிக சாணுரர் என்ற மல்லர்களோடு போர் புரிந்து, வெற்றி பெற்ற கண்ணன் எழுந்து அருளி இருக்கின்ற மதுரா நகர் புறம் என்னை சேர்த்து விடுங்கள்” என்கிறாள். இதுவே இந்த பாடலின் கருத்து.
‘இப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசலாமா’ என்று தாய் வினவ, அதற்கு ஆண்டாள், “அந்த கண்ணனே, பெற்ற தாயை விட்டு ஒரே இரவில் மற்றொரு இடத்தில வளர்ந்தவன் தானே”, தானும் அதேபோலே என்பது போல் உள்ளது.
ஆண்டாள், தான் கண்ணனை அணைக்க வேண்டும் என்று காத்து கொண்டு இருக்கையில் , அவன் முஷ்டிக சாணுர்களுடன் உடம்போடு உடம்பு கட்டி மல் யுத்தம் செய்வதற்கு முன், தான் இடையில் சென்று கண்ணனை அணைக்கும்படி, தன்னை மதுராவிற்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்வதாக உரை ஆசிரியர் சொல்வது சுவாரஸ்யமான ஒன்று.
630ஆரே உலகத்து ஆற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும், கார் ஏர் உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே (நாச்சியார் திருமொழி 13.4)திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளை கொண்டு அநுபவிக்கின்ற ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன் துன்புறுத்த, அதனால் தான் மிகவும் துன்பப்பட்டதாகவும் பலவிதமாய் சிதலமடைந்து நொந்து கிடக்கிற தன்னை இந்த உலகத்தில், தேற்றுபவர் யார் உண்டு என்று கேட்க, தாய்மார்கள் தாங்கள் இருப்பதாக சொல்ல, எவ்வளவு அனுபவித்தாலும் மீண்டும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்று எப்பொழுதும் திருப்தி அடைய முடியாதபடி இருக்கின்ற கண்ணபிரானுடைய அமுதம் சுரக்கிற திருவாயில் ஊறி இருக்கின்ற மணம் மிகுந்த திரவத்தையாவது (ரசத்தையாவது ) ஈரப்பசையுடன் உலராமல், கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து அதை தான் பருகும்படி செய்து, தன்னுடைய இளைப்பை போக்க முயற்சி செய்யுங்கள் என்று ஆண்டாள் கூறும் பாசுரம்.
இராமபிரானை விரும்பி இருந்தால், அவனுடைய தெய்வீக திருக்குணங்களை எண்ணி அனுசந்தித்து சீதா பிராட்டியை போல் காத்திருக்கலாம் என்றும், கண்ணனை நம்பியவர்கள் அப்படி காத்திருக்க முடியாது என்றும் சொல்வது போல் உள்ளது. திருவாய்ப்பாடியில் உள்ள அத்தனை பெண்களிடமும் நன்றாக விளையாடிய கண்ணன் தன்னிடம் மட்டும் வராமல் இருந்தால் தான் எப்படி உயிருடன் இருப்பது என்கிறார். அம்பு பட்டு இருந்தால், மருந்து போட்டு கொள்ளலாம் என்றும் இப்படி தளர்த்தும் சிதைந்தும் இருந்தால் தன்னை தேற்றுவார் உண்டோ என்று ஆண்டாள் கேட்கிறார். சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாம் என்று எண்ணி, ஆராமுவது போன்ற எம்பெருமான் திருநாமங்களைச் அவள் செவிகளுக்கு கேட்கும்படி சொல்ல, அது கேட்டு சிறிது தெளிந்து, தான் உலர்ந்து போவதற்கு முன் தனக்கு எம்பெருமானின் வாயமுதம் என்ற பானத்தை பருகவைத்து தன்னுடைய இளைப்பை நீக்கப் பாருங்கள் என்கிறார்.
636அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணிவிளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடளுள் துவளாரே 13.10)
இந்த பதிகம் படித்தவர்களுக்கு இந்த பாடல் மூலம் பலன் சொல்லி முடிக்கிறார். நிச்சலும் தீமைகள் செய்யும் (பெரியாழ்வார் திருமொழி 3.7.1) எம்பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச் செய்த இந்த சொல் மாலைகளைப் புகழ்ந்து பாட வல்லவர்கள் ஸம்ஸாரம் என்கிற பிறவி பெருங் கடலிலே விழுந்து நோவு படமாட்டார்கள் என்கிறாள்.
பஹவோ ந்ருப! கல்யாணருணா புத்ரஸ்யஸந்திதே என்பதில் நல்ல குணவான் என்று இராமபிரான் புகழ் பெற்றதை போல் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ் பெற்று இருப்பதால், கண்ணன் செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கு போல் திகழ்கிறது என்று “அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை“ புகழ்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊரே இருண்டு கிடக்கும்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஆகும்.
வில்லை துலைத்த புருவத்தாள் என்று சொல்வதை ‘துலா‘என்ற வடமொழி சொல்லின் ஆதாரமாக கொண்டு வில்லை தோற்கடித்த புருவம் உடையவள் என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், அதனை பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் பற்றவில்லை; தன்னுடன் சமமாக இருக்கும் மற்ற பொருட்கள் எல்லாம் தோற்கும்படியான வில்லும் போராடி தோற்கும்படி உள்ள புருவங்களை உடையவள் என்ற பொருள் சொல்கிறார். ஆக துலைத்த என்பதற்கு தொலைத்த என்பது ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.
638அனுங்க என்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்
குணுங்கு நாளி குட் ஏற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே கணங்களோடு மின் மேகம் கலந்தாற் போல வனமாலை மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
தான் மிகவும் தளர்ச்சி அடையும்படி என்னைப் பிரிந்து போய்த் திருவாய்ப்பாடி முழுதையும் கொள்ளை கொண்டு திரியும், ‘வெண்ணெயளைந்த குணுங்கு‘ (பெரியாழ்வார் திருமொழி 2.4.1) நாற்றம் கமழும் எம்பெருமானை (கண்ணனை) கண்டீர்களா என்று கேட்பது பாடலின் முதல் பகுதி. மின்னலும் மேகமும் சேர்ந்தது போல் திருமேனியில் வனமாலை அசைய அசைய ஆயிரக்கணக்கான பிள்ளைகளோடு விளையாடி இருக்குப்பதை விருந்தாவனத்தே கண்டோம் என்று விடை சொல்வது போல் இருப்பது பாசுரத்தின் பின் பகுதி.
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் என்பதில், ஆயர்பாடி எனபது, திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய் பால் முதலிய பொருட்களையும் குறிக்கும்.
குட்டேறு என்பதற்கு இளைய காளை என்று பொருள்.
கோவர்த்தனன் என்பதற்கு பசுக்களை ஒன்று நூறாக வளர்க்கும் ஆற்றல் பெற்றவன் என்று பொருள்.
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான் என்பது பெரியாழ்வார் திருமொழி (3.1.1).
ஆண்டாள் பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார்

1021பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர், கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த வெங்கோவலன், ஏத்துவார்த் தம் மனத்துள்ளான் இடவெந்தை மேவிய எம்பிரான், தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே. (பெரிய திருமொழி, 1.8.4)பாண்டவர்களுக்காக மஹாபாரத யுத்தம் நடத்தி வெற்றி பெற்றவனும், இப்படி அடியவர்களுக்காக காரியம் செய்வதனால் திருமேனி மிக விளங்கப் பெற்றவனும், திருவாய்ப்பாடியில் இடைச்சிகளோடு ராஸக்ரீடை என்கிற குரவைக்கூத்து ஆடினவனும், தன்னைத் துதிப்பவர்களின் நெஞ்சை விட்டுப் பிரியாதவனும், இடவெந்தை என்கிற திவ்யதேசத்திலே இனிதாக எழுந்தருளி இருப்பவனுமான எம்பெருமானுடைய, பலபல புண்ய தீர்த்தங்களாலும் பெரிய பூஞ்சோலைகளாலும் சூழப்பட்டதான திருவேங்கட மலையைச் சென்று சேர் மனமே என்கிறார். பாரதம் கை செய்திட்டு என்று சொன்னது, பாரத யுத்தத்திலே அணிவகுத்தல் முதலிய உபகாரங்களைச் செய்த கண்ணன் என்கிறார்.   குரவை கூத்து என்பது ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணபிரானாகப் பல உருவங்கள் எடுத்துக் கை கோத்து ஆடும் கூத்து.
அடியவர்களுக்காக காரியம் செய்தது என்பது, தர்மனுக்கு பட்டாபிஷேகம் செய்தது, திரௌபதி குழல் முடிக்க வகை செய்தது, குரவைக் கூத்திலே தன்னையும் ஒருவனாக இணைத்தது போன்றவை.
1392பூண் முலை மேல் சாந்தணியாள் பொரு கயல் கண் மையெழுதாள் பூவை பேணாள், ஏணறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும், நாண் மலராள் நாயகனாய் நாமறிய வாய்ப்பாடி வளர்ந்த நம்பி, ஆண்மகனா என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர அறிகிலேனே, (பெரிய திருமொழி 5.5.5) திருமங்கையாழ்வாரின் தாயார் தன் மகளின் நிலையைப்பற்றி பாடும் பாடல்; தன் மகள் முத்தாரம் போன்ற ஆபரணங்கள் அணிந்த முலையின் மேல் சந்தனத்தை பூசுவில்லை ; ஒன்றோடு ஒன்று சண்டை செய்யும் இரண்டு மீன்கள் போன்றுள்ள கண்களிலே மையிட்டுக் கொள்ளவில்லை; தான் வளர்த்துக் கொண்டிருந்த பூவைப் பட்சியையும் ஆதரிக்கவில்லை; எந்த பொருளையும் நெஞ்சினால் நினைக்கவில்லை; ‘என் ஸ்வாமியின் திருவரங்கம் எங்கே?’ என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள்; செவ்வித்தாமரைப் பூவில் பிறந்த பிராட்டிக்கு வல்லவனானவனும், நமக்கெல்லாம் தெரியும் படியாகத் திருவாய்ப்பாடியில் வளர்ந்த கண்ணபிரான், பெரிய ஆண்பிள்ளையாய்க் கொண்டு என் மகளை செய்தவைகளை அறிய முடியாதவளாக இருக்கிறேன்.
தாயார் சொல்வது, ‘ஸ்ரீரீயப்பதி என்றே எம்பெருமான் அறியப்படுகிறான், இப்படி அவன் அவளுக்கு துன்பம் கொடுத்தால், அவள் எப்படி அவனுக்கு முகம் கொடுப்பாள், இது தெரியாதவனா எம்பெருமான்’ என்று வியக்கிறாள்;
1435அம் பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள், கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான், செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென்திருப்பேர் அருள் மேவும், எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்தவாறே, (பெரிய திருமொழி 5.9.8)அழகிய பொன் போன்ற சிறந்த ஏழு உலங்களும் அறியும் படியாக திருவாய்ப்பாடியிலே நப்பின்னைப் பிராட்டியினுடைய கைப்பிடிக்க ஏழு எருதுகளை வீழ்த்தியவன் சிவந்த பொன் போல் அழகிய திருமதிள்களாலே சூழப்பட்ட தென் திருப்பேர் நகரில் இருந்து அருள் செய்கிறான். அவனுடைய திருநாமங்களை நாள் தோறும் சொல்லி தான் உஜ்ஜிவனம் அடைந்ததாக சொல்கிறார்.
1993தந்தை தளை கழல்த் தோன்றிப் போய், ஆய்ப்பாடி நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் காணேடீ, நந்தன் குலமதலை யாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண், எந்தை பெருமான் காண் சாழலே. (பெரிய திருமொழி 11.5.2)தோழீ, தந்தையாகிய வஸுதேவருடைய விலங்கு கழன்று விழும்படியாக திருஅவதாரம் செய்து, மதுரையில் இருந்து ஆயர்பாடி சென்று நந்தகோபருடைய குலத்திற்கு விளக்காக வளர்ந்தான். இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான்முகனுக்கு தகப்பன் ஆவான். என்னுடைய எம்பெருமான் என்கிறார்.
கம்ஸனால் விலங்கிடப்பட்டுச் சிறையில் இருந்த வஸுதேவன், தேவகி இவர்களின் விலங்குகள் கண்ணபிரான் திரு அவதாரம் செய்த போது உடைந்த வரலாறு தந்தை தலைகழல என்பதால் சொல்லப்பட்டது.
1994ஆழ்கடல் சூழ் வையகத்தார் ஏசப்போய், ஆய்ப்பாடித் தாழ்குழலார் வைத்த தயிர் உண்டான் காணேடீ, தாழ் குழலார் வைத்த தயிருண்ட பொன் வயிறு, இவ் ஏழு உலகம் உண்டும் இடமுடைத்தால் சாழலே. (பெரிய திருமொழி 11.5.3)தோழீ, நீ பெருமையாக பேசுகின்ற எம்பெருமான் எல்லா ஆசைகளையும் நிறைவேற பெற்றவனாக இருந்தால் அன்றோ அவனுக்கு பெருமை. அவனுடைய சரித்திரங்களை ஆராய்ந்தால் அவனும் நம்மைப் போலவே பிறர் பொருள்களில் விருப்பமுள்ளவனாகக் காணப்படுகிறான். திருஆய்பாடியில் கண்ணாகப் பிறந்து கள்ளத்தனத்தினால் தயிர் வெண்ணெய் பால் முதலியவற்றை வாரி உண்டான் என்பது தெரிவதால் இப்படி பிறர் பொருள்களில் ஆசையுள்ளவன் பரம புருஷனாக இருக்கத் தகுமோ? என்று பாசுரத்தின் முன்பகுதியில் கேட்கிறாள்; அதற்கு மறுமொழியாக இன்னொருத்தி, தோழீ, திருவாய்ப்பாடியில் இடைச்சிகள் சேமித்து வைத்திருந்த தயிரை அமுது செய்தான் என்பது உண்மை; நம்முடைய வயிறு போலே ஏதேனும் சிலவற்றை உண்டு, அதனால் நிறைந்து விடுகிற வயிறு இல்லை அவனது திரு வயிறு. காரேழ் கடலேழ் மலை ஏழ் உலகுண்டும் ஆராவயிற்றான் (திருவாய்மொழி, 10.8.2) என்று இருப்பவன். . ஏழு உலகங்களையும் திருவயிற்றினுள் சேர்த்துக் கொண்டாலும், இன்னமும் வயிற்றை நிறைக்க வேணும் என்கிற எண்ணத்தினால் தயிர் முதலியவற்றை அவன் வாரி உண்டால் அவன் பெருமைக்கு குறை உண்டு எனலாம். ஆனால், அவன் கொண்டாடத்தக்க எளிமை குணத்தை காண்பிக்கவே இவாறு செய்தான் என்கிறாள்; அதனால் அவன் பெருமைக்கு ஒரு குறையும் இல்லை என்பது கருத்து.
1995அறியாதார்க்கு ஆன் ஆயனாகிப் போய், ஆய்ப்பாடி உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காணேடீ உறியார் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிறுக்கு, எறி நீர் உலகு அனைத்தும் எய்தாது ஆல் சாழலே. (பெரிய திருமொழி 11.5.4)தோழி, ஒன்றும் அறியாதவர்களுக்கு மாடு மேய்க்கும் இடையர் குல மகனாக ஆய்ப்பாடியில் உறிகளில் உள்ள வெண்ணையை களவாடி உண்டு மகிழ்ந்தவன். உறிகளிலே இருந்த மணம் மிக்க வெண்ணெயை உண்டு உகந்தவனின் திருவயிற்றுக்கு கடல் சூழ்ந்த உலகங்கள் போதாது என்று ஆச்சரியப்படுகிறார்.
எம்பெருமான் மனிதனாக திரு அவதாரம் செய்தாலும் அவனுடைய மேன்மை குணங்களை அறியாதவர்களுக்கு, அவன் தயிரை கடைந்து உறியிலே சேமித்து வைத்தவன் இல்லை. கடைந்த வெண்ணையை உண்டு உகந்தான் என்றும் சம்சாரிகளுக்கு எப்படி பகவத்லாபமோ அது போல் அவனுக்கு இது என்று உரையாசிரியர் கூறுகிறார்.
2673ஆராத தன்மையனா ஆங்கொரு நாள் ஆய்ப்பாடி சீரார்க் கலையல் குல் சீரடிச் செந்துவர் வாய் (சிறிய திருமடல், 28)பல செயல்களாலே தனது திருக்குணங்களை வெளிப்படுத்தினன், இருந்தாலும் திருப்தி அடையாமல், தன்னுடைய ஸௌலப்ய (எளிய) குணத்தை நன்கு விளக்க வேண்டி ஒரு நாள் அந்தத் திருவாய்பாடியிலே அழகிய சேலையை அணிந்த அல்குலை உடையவளும், அழகிய கால்களை உடையவளும் மிகவும் சிவந்த அதரத்தை உடையவளும் (ஆன யசோதை மத்தை அழுத்தப் பிடித்துக் கொண்டு அழகிய இடுப்பு நோகும்படி வெகுகாலமாக சிறந்த தயிரைக் கடைந்து அதில் திரண்ட வெண்ணையை வேர்வை மிக்க நெற்றியை உடைய யசோதை வேறொரு பாத்திரத்திலே இட்டு பத்திரமாக வைத்துவிட்டு சென்றாள்.)
திருமங்கையாழ்வார்

மீண்டும், இன்னொரு திவ்யதேச யாத்திரையில் சந்திப்போம், நன்றி

சில புகைப்படங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: