A Simple Devotee's Views
ஸ்ரீ சத்யபாமா நாச்சியார் ஸமேத கோவர்த்தனகிரிதாரி திருவடிகள் போற்றி போற்றி !!
திவ்யதேசம் | திருவடமதுரை (பிருந்தாவனம், கோவர்தனகிரி சேர்ந்தது) | |||
மூலவர் | கோவர்தனேஸன் பாலகிருஷ்ணன் | |||
உத்ஸவர் | ||||
தாயார் | சத்தியபாமா நாச்சியார் | |||
திருக்கோலம் | நின்ற திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 50 | |||
மங்களாசாசனம் | பெரியாழ்வார் – 17 ஆண்டாள் – 18 தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 1 திருமங்கை ஆழ்வார் – 4 நம்மாழ்வார் – 10 | |||
தொலைபேசி |
வடநாட்டு திவ்யதேசங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பை இங்கே காணலாம்.
Google Map
திருவடமதுரை பற்றி ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள்
திருவடமதுரை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்
திருத்தலம் பற்றி
இந்த திருத்தலம் பற்றி எழுதுவதற்கு முன், சொல்லவேண்டிய விஷயம், மதுரா செல்வதற்கு நானும் என் மனைவியும் டெல்லி சென்று அங்கு தங்கியபோது, என்னுடைய உறவினர் என்னிடம் கேட்ட கேள்வி, என்னை சிலிர்க்க வைத்தது. அவர் கேட்ட கேள்வி, ” மதுராவில், அதனை சுற்றி உள்ள பகுதிகளில், சுமார் 5000 ( ஆம், ஐயாயிரம்) கோவில்கள் உள்ளன என்று கேள்விப்பட்டு உள்ளேன், அவற்றில் எத்தனை கோவில்களை நீங்கள் இந்த மூன்று நாட்களில் காண போகிறீர்கள் என்று கேட்டதை என்னால் இன்று அளவும், மறக்க முடியவில்லை, ஏன் என்றால், அதைவிட அதிகம் கோவில்கள் உள்ளனவோ என்ற அளவிற்கு அமைந்துள்ள மதுரா, ஆய்ப்பாடி, பிருந்தாவன், மற்றும் அதனை சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் அங்குள்ள ஆலயங்களும், தீர்த்தங்களும், க்ஷேத்திரங்களும் சரித்திரமும், மற்றும் எங்கும் தவழும் எளிமையும், பக்தி மயமும். எப்படியும் ஒரு ஏழு நாட்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக தரிசனம் செய்து இருக்கலாமோ என்ற நினைவு இன்றும் உண்டு. இருந்தாலும் நாங்கள் தங்கியிருந்த மூன்று நாட்களையும் எங்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த ஹரே ராம ஹரே கிருஷ்ணா , இஸ்கான், அலுவலகத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
டெல்லியிலிருந்து ஆக்ரா வரும் வழியில் மதுரா புகைவண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் பிருந்தாவனம் உள்ளது. இதே போல் இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் கோவர்த்தனம் எனப்படும் கோவர்த்தன கிரியும் உள்ளது. கிருஷ்ண ஜென்ம பூமியாகிய மதுரா, மற்றும் கிருஷ்ணன் ஆடியும் பாடியும் ஆடுமாடுகளை மேய்த்தும் கன்றுகள் பின்திரிந்தும் மகிழ்ந்து இருந்த பிருந்தாவனம், இவைகளையும், கோபியர் மற்றும் தன் நண்பர்களையும், காக்க குன்றைக் குடையாக ஏந்திய கோவர்த்தன கிரி என்னும் கோவர்த்தனம் இம்மூன்றும் சேர்த்தே இந்த திவ்யதேசமாக கொள்வர். இந்த மூன்று இடங்களும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது. கண்ணனின் லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன.
முக்தி தரும் 7 ஸ்தலங்களுள் இந்த க்ஷேத்திரமும் ஒன்று. முக்கியமான க்ஷேத்திரமும் கூட. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரி த்வாரவதிஶ்சைவ சப்த ஏகா மோக்ஷ தாயகா’ என்ற வாக்கியத்தின் படி அயோத்யா, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகா என்ற ஏழு க்ஷேத்திரங்களும் முக்தி தரும் ஸ்தலங்களாகும். இந்த ஏழும் நாராயணனுக்கு அவயங்கள் ஆகும். அயோத்தி சிரசு, காசி மூக்கு, மதுரா கழுத்து, மாயா மார்பு, துவாரகா கொப்பூழ், காஞ்சி இடுப்பு, அவந்திகா பாதம்.
இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர் சிலர் அது கோவர்தன பரிக்ரமா எனப்படும். சிலர் மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. இப்படி பரிக்ரமா பல உள்ளன. நேர, கால, தேக சௌகர்யங்களுக்கு ஏற்ப மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை இன்றும் நாம் கண்கூடாக காணலாம்.
கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, கண்ணன் வளர்ந்த இடமான ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவன நகரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. அவை, மகாவனம், காம்யவனம், மதுவனம், தாளவனம், குமுத வனம், பாண்டிரவனம், பிருந்தாவனம், கதிரவனம், லோஹவனம், பத்ரவனம், பஹுளாவனம், பில்வவனம்.
மதுராவில் ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் ஜென்மபூமி என்ற பெயரில் ஒரு புதிய கோவில் கட்டப்பட்டுள்ளது. மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, கேசவ தேவ் கோயில் என்று பெயரிட்டுள்ளனர். தற்பொழுது பாதுகாப்பு படையினரால் காக்கப்பட்டு வருகிறது. கோவிலுக்குள் சென்று விட்ட பின் மிகவும் அருமையாக அனுபவிக்க வேண்டிய இடம். எல்லாவற்றையும் அடைந்த கண்ணன், நமக்காக இந்த சிறைச்சாலையில் வந்து பிறந்து பற்பல லீலைகள் புரிந்ததை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் குடிகொண்டுவிடும்.
கிருஷ்ணனின் அவதார ஸ்தலமான கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கோவில்களில் அதிக அளவில் பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்றவாறு பெரிய மண்டபங்களும், மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பிருந்தாவனத்தில் தமிழ்நாட்டு முறைப்படி அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்று அழைக்கப்படும் விசாலமான கோவில் அல்லது ஸ்ரீரெங்கநாதர் கோவில் ஒன்று உள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீஆண்டாள், திருவேங்கடமுடையான், ஸ்ரீஇராமானுஜர் ஆகியோர் களுக்கு சன்னதிகள் உண்டு.
கோகுலாஷ்டமி அல்லது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சமயத்தில் இங்கே ஆடல் பாடல்களும் திவ்ய நாம பஜனைகளும் உபன்யாசங்களும், கிருஷ்ண நாடகங்களும் ஒரே விழாக் கோலமாகத் தான் இருக்கும்.
பார்க்க வேண்டிய இடங்கள்
ஸ்தல வரலாறு
இத்திருத்தலம் பற்றி பற்பல நூல்கள் உள்ளன, உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் மதுரா, கோவர்த்தனம், பிருந்தாவனம் ஆகிய மூன்றும் சேர்த்து பாடப்பட்டுள்ளது. கண்ணன் பிறப்பிற்கு முன், வசுதேவர் சிறை வைக்கப்பட்டது, தன்னுடைய தங்கையான தேவகியின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை தனக்கு மரணம் விளைவிக்கும் என்பதை அறிந்த கம்சன், தேவகியின் கணவன் வசுதேவர் மற்றும் தேவகியை சிறை வைப்பது, பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொன்றது, கண்ணன், ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதி ரோஹிணி நட்சத்திரத்தில் திரு அவதாரம் செய்தவுடன் / பிறந்தவுடன், அன்று இரவே யமுனையை கடந்து ஆயர்பாடிக்கு/ஆய்ப்பாடிக்குக்கு கொண்டு செல்லப்பட்டது, வசுதேவரின் நண்பர் நந்தகோபாலன் வீட்டில் அவள் மனைவி யசோதையின் மகனாக வளர்ந்தது, அங்கு பலவித லீலைகளை / விளையாட்டுக்களை நடத்தியது, கோபிகைகளுடன் ஆடியது, அதன் பின் வாலிபனாகி, மீண்டும் மதுரா வந்து கம்சனை வதம் செய்தது என்று இவ்வாறான பல வரலாறுகளுடன், துவாரகையில் கண்ணன் புதிய நகரத்தை நிர்மாணித்து, அரண்மனை கட்டிச் செல்லும் வரை உள்ள ஸ்ரீகிருஷ்ண வரலாற்று நிகழ்ச்சிகள் இந்த மதுராவின் தல வரலாற்றாகப் பேசப்படுகிறன.
இந்த மதுரா நகரம் எல்லா யுகங்களிலும் பிரசித்தி பெற்ற வடநாட்டு நகரமாகும். ஸ்ரீவாமனனாய் எம்பெருமான் திருஅவதாரம் செய்த போது, இங்கு தவம் புரிந்து இருந்தார்.
பின்பு, த்ரேதா யுகத்தில், மது என்னும் பெயரில் சிறந்து விளங்கியது. ஒரு சமயம், அந்நகரை அரசாண்டு வந்த லவணாசுரன் என்னும் அசுரன் மிகவும் கொடியவனாக இருந்து, ரிஷிகள் நடத்தும் யாகங்களை அழித்து அவர்களுக்கு துன்பம் கொடுத்து வந்தான். இதனால் சில ரிஷிகள் இராமபிரானிடம் சென்று விசுவாமித்திரருக்கு உதவியது போல, லவணாசுரனை கொன்று தங்களை காத்திட வேண்டும் என்று வேண்டினர். ராமன் தன் தம்பி சத்ருக்னனை அனுப்பி லவணாசுரனை அழித்தான். சத்ருக்னன் மாத்ரா நகரத்தை விரிவாக்கி நெடுங்காலம் ஆண்டு வந்தான் .
கிருஷ்ணனாய் இங்கு அவதரித்ததாலும், இப்படி பல யுகங்களில் திருவடமதுரைக்கு பகவத்ஸம்பந்தம் தொடர்ந்து வருவதால், ஆண்டாள் மன்னு வடமதுரை என்று கூறுகிறார்.
கண்ணன் ஆயர்பாடியில் வாழ்ந்த சமயம், அங்கு இந்திர பூஜை நடப்பது வழக்கம். அதன்படி இந்திரனுக்கு, ஆண்டுதோறும் யாதவர்கள் பூஜை நடத்தி மழையை வேண்டுவார்கள். கண்ணன், இந்திர பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுஇருந்த போது, என்னவென்று கேட்டான். இந்திர பூஜைக்காக, இந்திரனுக்குப் பிடித்தமான
உணவு வகைகளைச் செய்து அவனுக்கு படைப்போம், அதனைக்கொண்டு அவன் மழை கொடுப்பான் என்று சொன்னார்கள். அதற்கு கண்ணன், மழையை கொடுப்பது இந்த கோவர்த்தன மலை தான் என்றும், இந்திரனுக்கு படைக்க வேண்டாம் என்று சொன்னான். அந்த ஊரில், கண்ணன் சொன்னதை மறுப்பவர் கிடையாது, அவன் அந்த மக்களுக்கு மிக பிரியமானவன். கோவர்த்தன மலைக்கு அவ்வுணவுகளை கொடுக்க சொல்லி, தானே கோவர்த்தன மலையாக இருந்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான்.
இதனால் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையை உண்டாக்கி, அங்கிருந்த ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் தொல்லை கொடுத்து ஏழு நாட்கள் கடுமையான மழையால் அவதிக்குள்ளாக்கினான். மனிதர்களும், ஆடுமாடுகளும் கஷ்டப்படுவதை கண்ட கண்ணன், அந்த அருகில் இருந்த ஒரு மலையைத் தன் ஒரு விரலால் குடை போல் தூக்கினான். குடை போல் காட்சி அளித்த அம்மலைக்கடியில் நுழைந்த ஆயர்களும், ஆவினங்களும் மழையிலிருந்து காக்கப்பட்டனர். அந்த மலை கோவர்தன மலை என்றும், அதனை குடையாக பிடித்து அவர்கள் அனைவரையும் காப்பாற்றினான் என்பது குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் வரலாறு என்றும் கூறப்படும். கண்ணனின் இச்செயலைக் கண்டு வியந்த இந்திரன், கிருஷ்ணரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார் . அந்த மலை, அவர்களை காத்ததால், கோவர்த்தன மலை என்றும், அதைத் தாங்கிய கண்ணன், கோவர்தனன் என்றும் பெயர் பெற்றார். அந்த கோவர்த்தன மலை இன்றும் கொண்டாப்பட்டு, மக்கள் பரிக்ரமா என்ற கால்நடையாக அந்த மலையை சுற்றி வருகிறார்கள்; இது சுமார் 26 கிலோமீட்டர் தூரம் இருக்கும்.
கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணர் கன்று வடிவில் இருந்த வத்சாசுரனை வதம் செய்த பிறகு, அவருடைய தோழர்கள் கங்கையில் நீராடி புனிதப்படுத்திக் கொள்ளும்படி கிருஷ்ணரை அறிவுறுத்தினர். கிருஷ்ணர் தனது மனதாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார்; அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.
ஹரிதேவரின் கோயில் என்ற இடத்தில கிருஷ்ணர் நாராயண ரூபத்தில் வீற்று இருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே. இக்கோயிலுக்கு அருகில் பிரம்ம குண்டம் அமைந்துள்ளது. இந்திரன், ஸ்ரீ கிருஷ்ணரை நீராட்டிய பிறகு, அனைத்து தேவர்களும் புனித நதிகளும் சாதுக்களும் கிருஷ்ணரை நீராட்டினார்கள். அப்போது பிரம்மாவும் கிருஷ்ணரை நீராட்டினார். அந்த நீரே குளமாக மாறி பிரம்ம குண்டம் என்று அறியப்படுகிறது.
லக்ஷ்மி நாராயண கோயில்: ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 திவ்ய தேச கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் இருக்கும் விக்ரஹங்கள் கோவர்தன மலையின் உற்சவ விக்ரஹங்களாக கருதப்படுகின்றனர்.
இதற்கு அருகில் இருக்கும், தான கடி என்னுமிடத்தில் கிருஷ்ணரும் அவரது தோழர்களும் கோபியர்களிடம் வரி வசூல் செய்தனர். அதாவது, கோபியர்கள் சுமந்து சென்ற பால், தயிர் போன்ற பொருட்களில் சிலவற்றை வலுக்கட்டாயமாக வரியாக பெற்று கொண்ட லீலை இவ்விடத்தில்தான் நடைபெற்றது.
அடுத்து, அனியோர், இங்கு சாதம், இனிப்புகள், காய்கறிகள், பால் பதார்த்தங்களை மலைபோல அமைத்து கோவர்தன மலைக்கு அன்னப் படையல் அர்ப்பணிக்கப்பட்ட இடம். இஃது அன்னகூட க்ஷேத்திரம் என்றும் அறியப்படுகிறது.
கதம்ப வனத்தில், சுரபி குண்டம், இந்திர குண்டம், ஐராவத குண்டம், ருத்ர குண்டம், உத்தவ குண்டம் அமைந்துள்ளன. ராதா குண்டம், இப்பிரபஞ்சத்தில் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுவது. ராதாராணியின் பிரேமையின் ஸ்வரூபத்தை இங்கு திரவ நிலையில் காணலாம். ராதாராணிக்கும் ராதா குண்டத்திற்கும் வித்தியாசமில்லை. கிருஷ்ணர் அரிஸ்டாசுரனை வதம் செய்த பிறகு, எல்லா புனித நதிகளையும் ஓரிடத்திற்கு வரவழைத்தார். அதன்படி உருவான குளம், சியாம குண்டம் என்று அழைக்கப்படுகிறது. சியாம குண்டமும் ராதா குண்டமும் அருகருகில் அமைந்துள்ளன.
குசும சரோவர் என்ற இடத்தில், கோபியர்கள் கிருஷ்ணருக்காக மலர்களை எடுத்துச் செல்வர். இதற்கு அருகில் உத்தவரின் கோயிலும் உள்ளது. கோபியர்களின் உயர்ந்த பக்தியை கண்ட உத்தவர், விருந்தாவனத்தில் ஒரு புல்லாகப் பிறக்க வேண்டும் என்றும், கோபியர்களின் பாதங்கள் தன்மீது பட வேண்டும் என்றும் பிரியப்பட்டார். இங்கே உத்தவர் புல்லின் வடிவில் வசிக்கிறார். இவ்விடத்திற்கு அருகில் நாரத வனம் இருக்கிறது. இங்கு நாரத முனிவர் நாரத பக்தி சூத்திரத்தை இயற்றியதோடு, விருந்த தேவியின் உபதேசத்தை ஏற்று இவ்விடத்தில் தவமும் புரிந்தார்
ஆழ்வார் ஆச்சார்யர்கள்
பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் 50 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் தான் இந்த வடமதுரை என்ற திவ்யதேசம்.
கோவர்த்தனத்தையும், பிருந்தாவனத்தையும் தந்தையும் மகளுமாய் (பெரியாழ்வாரும் ஆண்டாளும்) பாடல்கள் பாடி, அந்தப் பகுதி முழுவதையுமே திவ்யதேசமாக்கி விட்டார்கள்.
பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி இங்கே கிளிக் செய்யவும்
ஆண்டாள் – திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி இங்கே கிளிக் செய்யவும்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலை
வளவெழும் தவளமாட மதுரைமா நகரந் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை, துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல், இளைய புன் கவிதை யேலும் எம்பிறார்க்கு இனிய வாறே. (45) | அழகு மிகுந்து இருப்பதும், வெண்ணிறத்தில் மாடங்களை கொண்ட பெருமை தங்கிய வடமதுரையில் கம்சனின், குவலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனின் கோவிலில் எம்பெருமானுக்கு திருத்துழாய்க் கைங்கர்யம் செய்யும், இயற்கையிலே எம்பெருமானுக்கு தொண்டு செய்வதில் நிலை நின்றவரான தொண்டரடிபொடியாழ்வார் அருளிச்செய்த இந்த திருமாலை என்ற பிரபந்தம் குறைகள் கொண்ட கவிதையாக இருந்த போதிலும் பெரியபெருமாளுக்கு (அரங்கநாதர்) மிகவும் போக்யமாக இருக்கிறது என்று ஆழ்வார் பாடியுள்ளார். குவலயாபீடம் என்ற யானையை ஒழித்தது போல் தன்னுடைய குறைகளை போக்கி அருளி செய்த எம்பெருமானின் விருப்பமே தமக்கு பயன் என்கிறார். எம்பெருமானைக் குறித்து அடியேன் சொன்ன சொற்கள் குற்றம் குறைகள் நிரம்பியவை ஆயினும், தனது நெஞ்சில் உருக்கத்தையும் ஊற்றத்தையும் அறிந்திருக்கும் பெரியபெருமாளுக்கு இது ஆராவமுதமாக இருக்கிறது என்கிறார். “இப் பிரபந்தம் கற்றார்க்குப் பயன் என்று தனியாக ஒன்றும் சொல்லாமல் ஆழ்வார் இந்த பிரபந்தத்தை முடித்தார் என்று சொல்பவர்களுக்கு ‘இந்த உகப்பே இந்த பிரபந்தத்தை படித்தவர்களுக்கு பலம் / பயன் ஆகும்’ என்ற வயாக்யான ஸூக்தி இங்கு நினைவில் கொள்ளதக்கது. |
திருமங்கை ஆழ்வார்
1 | வில்லார் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல்லடர்த்து, கல்லார் திரடோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் சொல்லார் சுருதி முறையோதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர்வாழும் நறையூர் நின்ற நம்பியே. (பெரிய திருமொழி 6.7.5) | கம்ஸன் நடத்தின விழாவில் கலந்து கொள்ள வடமதுரைக்கு ஆசைப்பட்டு எழுந்தருளி, எதிரிகளை ஒழித்து, பின்னர் மலைபோல் உள்ள தோள்களை கொண்ட கம்சனையும் சீறி எழுந்து, கொன்றவனும், காளிங்கனின் மேல் குதித்து நர்த்தனம் செய்தவனுமான கண்ணபிரான், வேதங்களை முறைப்படி ஓதி வைதிகர்கள் பலர் வாழும் திருநறையூரில் நின்ற நம்பியே. |
2 | மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை நன் நறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார், கன்னவிலும் தோளான் கலியன் ஓலி வல்லார் பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே. (பெரிய திருமொழி 6.8.10) | பகவத் ஸம்பந்தம் ஒரு நாளும் மாறாமல் நித்யமாக இருக்கிற வடமதுரையில் வசுதேவருடைய வாழ்வுக்கு ஆணிவேராக வந்து பிறந்தவனான நறையூர் நின்ற நம்பியை, வாசனை மிகுந்த மாலையை அணிந்து, மலை போல் புஜங்களை உடைய திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இத்திருமொழியை ஓத வல்லவர்கள் பரமபதத்திற்கு சென்று அங்குள்ள நித்யஸூரிகளால் கொண்டாடப் பெறுவர். நித்ய பகவத் சம்பந்தம் என்று சொல்வது, வெவ்வேறு யுகங்களில் வாமனனாக தவம் செய்தது, சத்ருக்கனன் ஆட்சி செய்தது, மற்றும் கண்ணன் திருஅவதரித்தது. |
3 | நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான், வாச மலர்ப் பொழில் சூழ் வட மாமதுரைப் பிறந்தான், தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற, கேசவ நம்பி தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணுங்கொலோ. (பெரிய திருமொழி 9.9.6) | பரபக்தியில்லாதவர்களுக்கும், நெஞ்சால் எண்ணாதவர்கட்கும் கிடைக்க மாட்டாதவனாகவும் மணம் மிகுந்த மலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட, திருவடமதுரையில் எல்லா தேசத்தவர்களாலும் வணங்கப்படுபவனே, திருமாலிருஞ்சோலையில் இருப்பவனும், சிறந்த குழல் கற்றையை உடையனுமான எம்பெருமானை, கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள், பரகால நாயகி காணப்பெறுவாளோ என்று தாயார் கேட்கும் பாடலாக அமைந்துள்ளது. நேசமுள்ளவர்களுக்கும் நினைப்பவர்களுக்கும் எளியன் என்பது முதலடியின் கருத்து. இதனால் எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியமே வெளியிடப்பட்டது. அத்தகைய திருக்குணம் வாய்ந்தவனும் இத்திருக்குணத்தை வடமதுரையில் பிறந்தருளிப் பிரகாசித்தவனும், அது தன்னை திருமாலிருஞ்சோலையிலே காட்டி அருள்பவன் என்று ஆழ்வார் சொல்கிறார். |
4 | பாரோர் புகழும் வதரி வடமதுரை ஊராய வெல்லாம் ஒழியாமே நானவனை ஓரானை கொம்பொசித் தோரானை கோள்விடுத்த சீரானைச் செங்கணெடியானைத் தேந்துழாய்த் தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் (சிறிய திருமடல், 74) | நான் அவனுடைய காளமேகத் திருவுருவைக் கண்டு களிக்கும் வகையில் ஊர் ஊராக சென்று வடமதுரை, திருவேங்கடமலை, திருக்கோவலூர், மதிள் சூழ்ந்த காஞ்சீநகரத்திலுள்ள ஊரகம், அப்பக்குடத்தான் ஸந்நிதி, திருவெள்ளறை, திருவெஃகா, திருவாலி, திருத்தண்கால், திருநறையூர், குட்டநாட்டுத் திருப்புலியூர், அழகிய தோட்டங்கள் சூழ்ந்த திருவரங்கம், திருக்கண்ணமங்கை, திருவிண்ணகர், அழகிய திருக்கண்ணபுரம், திருச்சேறை, தேரழுந்தூர், திருக்குடந்தை, சோளிங்கர், திருக்கடல்மல்லை, திருவிடவெந்தை, திருநீர்மலை, அழகிய திருமாலிருஞ்சோலை திருமோகூர், உலகத்தாரனைவரும் துதிக்கின்ற ஸ்ரீபதரிகாச்ரமம், வடதிசை மதுரை என்று பல திவ்யதேசங்களை குறிப்பிடுகிறார். |
நம்மாழ்வார்
1 | வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப் பெற, வாய்க்கும் கரும்பும் பெருஞ் செந் நெலும் வயல் சூழ் திருவாறன்விளை, வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த, வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே. (திருவாய்மொழி 7.10.4) | செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற திருவாறன்விளை திவ்யதேசத்தில் மிக்க கீர்த்தியை உடையவனும் மூவுலங்களுக்கும் ஸ்வாமியும் வடமதுரையில் அவதரித்தவனும் அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தை உடையவனுமான கண்ணனுடைய திருவடித் தாமரைகளை இடைவெளி இன்றி எப்பொழுதும் இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ என்று ஆழ்வார் பாடுகிறார். திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தி இல்லை என்றாலும், அங்கு நின்று அருளுகின்ற எம்பெருமான் திருவடிகளை இங்கே இருந்து நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ என்கிறார். நிச்சலும் எப்பொழுதும் என்று சொன்னது, தினமும் இடைவிடாது என்பதை தெரிவிக்கவே. உலகினர் மனோரதம் என்றும், அனுபவம் என்றும் இரண்டு விஷயங்களை, சொல்லி தனக்கு மனோரதம் ஒன்றே போதும் என்கிறார். |
2 | இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறும் இரும் சிறைப் புள், அதுவே கொடியா உயர்த்தானே! என்று என்று ஏங்கி அழுதக்கால், எதுவேயாகக் கருதுங்கொல் இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான், மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே? (திருவாய்மொழி 8.5.9) | ஒளி பொருந்திய சக்கரத்தாழ்வானை ஆயுதமாக உடையவனே! தனக்கு வாகனமாகவும், பெரிய சிறகை உடையவனுமான ஸ்ரீ கருடாழ்வாரையே கொடியாக கொண்டவனே ! இப்படி உன்னை காண ஆசைப்படுகிறேன் என்று பல காலமும் சொல்லி அழுதால், இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக தேன் வெள்ளம் பாய்கின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான் தன் திருவுள்ளத்தில் என்ன கொண்டு உள்ளாரோ என்று ஆழ்வார் பாடும் பாடல். இப்படி கூப்பிடும்போது, அவன் வாராமல் இருப்பதால், கூப்பிட்டு போகலாம் என்று நினைக்கிறாரோ, இல்லை அவன் உள்ளம் புண்படுகிறதோ என்று ஆழ்வார் எண்ணுகிறார். இவனிடம் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்த துன்பங்களையும் / எல்லாருடைய வேதனைகளையும் போக்கி, ஒருவர் தப்பாமல் அவர்களை ரக்ஷித்து அருள்வதற்காக வடமதுரையிலே திருஅவதாரம் செய்த ஆச்சர்ய குணங்களை கொண்ட கண்ணன் என்கிறார். நினைத்த இடத்தில நொடியில் சேர்க்கவல்ல கருடாழ்வானை படையாக கொண்ட எம்பெருமான் இன்னும் இங்கு சேராதது, என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும் என்று நினைப்பது போல் “இதுவோ பொருத்தம் ” என்கிறார். |
3 | பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்றே எழுவர், இருள் கொள் துன்பத்து இமை காணில் என்னே என்பாரும் இல்லை, அருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு அருள் கொளாளா உய்ய வல்லால் இல்லை கண்டீர் அரணே.(திருவாய்மொழி 9.1.3) | கையில் பொருள் இருப்பதைக் கண்டால், வணக்கம் என்று கூறி ஏதாவது ஒன்று பெற்று அகன்று போவார்; அறிவின்மையையும் துன்பத்தினையும் கொடுக்கும் வறுமையை கண்டால், அந்தோ என்று இரங்குவாரும் இல்லை; ஆகையால் கண்டவர்கள் அனைவரும் கலங்கும்படியான தொழில்களை செய்கின்ற அசுரர்கள் அழியும்படியாக வடமதுரையில் அவதரித்த ஸ்ரீ கண்ணன்பிரானின் னை அருளை பெறுவதற்கு அடியவர்களாகி வாழ்ந்தால் நலம், அப்படி இல்லை என்றால் பாதுகாப்பு வேறு இல்லை என்கிறார். |
4 | அரணம் ஆவார் அற்ற காலைக்கு என்று அமைக்கப் பட்டார், இரணங் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அஃதே, வருணித்து என்னே வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சரண் என்று உய்யப் போகில் அல்லால் இல்லை கண்டீர் சதிரே. (திருவாய்மொழி 9.1.4) | செல்வம் நீங்கி, வறுமை அடையும்போது புகல் ஆவார் என்று நினைத்து செல்வம் உள்ள காலத்தில், செல்வம் முதலியவைகளால் வசப்படுத்திக் கொள்ளப் பட்டவர்கள் கடனை திரும்ப பெற்றவர்கள் போல் ஒரு உதவியும் செய்ய மாட்டாத அற்பர்களாக நடந்து கொள்வர். ஆதலால் நன்றி மறந்தவர்களை பற்றி பேசி என்ன பயன்; வடமதுரையில் திரு அவதாரம் செய்த ஸ்ரீ கண்ணபிரானின் கல்யாண குணங்களே நமக்கு தஞ்சம் என்று நினைத்தும், கூறியும் உய்ந்து போங்கள் ; அப்படி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். |
5 | சதிரமென்று நம்மைத் தாமே சம்மதித்தின் மொழியார் மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்று உறுவர் அதி கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரைப் பிறந்தாற்கு எதிர் கொள்ளா உய்யுய்ய ல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே.(திருவாய்மொழி 9.1.5) | தங்களை தாங்களே இசைந்து இனிய வார்த்தைகள் பேசிய மகளரிடத்தில் இன்பம் அனுபவித்தவர்களே, அந்த இனிய அனுபவம் நீங்க, வேறு ஒரு துன்பத்தை அடைவார்கள்; ஆதலால், கண்டவர்கள் அஞ்சத்தக்க காரியங்களை செய்த அசுரர்களை, அழியும்படி செய்வதற்காக திருவடமதுரையில் திருஅவதாரம் செய்த கண்ணபிரானுக்கு அடியவர்களாகி போவதே இன்பம் ஆகும், மற்றதெல்லாம் இன்பம் இல்லை என்கிறார். சிற்றின்ப சுகம், இன்பம் என்று மயங்குகின்ற மயக்கமே அன்றி, இன்பம் இல்லை என்கிறார். |
6 | இல்லை கண்டீ ர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே தொல்லை யார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார் மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண்புகழே சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே. (திருவாய்மொழி 9.1.6) | இவ்வுலகத்தில் இன்பம் என்பது சிறிதும் இல்லை; நிலை நின்ற பேற்றினை நினையாமல், முன்பு இருந்த எத்தனை பேர் இறந்து போயினும் ஒரு பயன் இன்றி கழித்தார்கள்; ஆதலால், பழைய நகரமாகிய செழித்த வடமதுரையிலே திருஅவதாரம் செய்த கண்ணபிரானுடைய சீரிய கல்யாண குணங்களை சொல்லி உய்ந்து போவதை தவிர சுருங்க சொல்வது வேறு ஒன்றும் இல்லை என்று ஆழ்வார் கூறுகிறார். எல்லை இல்லாத பேரின்பமான பேற்றினை உணராமல் முன்பு உள்ளோர் பலர் முடிந்து போனார்கள்; ஆதலால் நீங்கள் அப்படி போகாமல், அடியவர்களை காப்பதற்கே அவதரித்தவனைப் பற்றி உய்யுங்கள், அதனை தவிர ஆத்மாவிற்கு வேறு நன்மை இல்லை என்கிறார் . |
7 | மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிருக்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ குற்றமன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான் குற்றிமில் சீர் கற்று வைதல் வாழ்தல் கண்டீர் குணமே . (திருவாய்மொழி 9.1.7) | வேறு வழிகளை தேடி அலைய வேண்டாம், இந்த பெரிய உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இறைவனைப் பற்றி சிந்தித்தால் ஆகிய ஒன்றே போதுமானதாகும்; ஆகையால் வடமதுரையில் அவதரித்த கண்ணபிரானின் குற்றம் இல்லாத கல்யாண குணங்களை நாள்தோறும் சொல்லிக்கொண்டு வாழ்வதே குணம் ஆகும். எம்பெருமானை பற்றுவது மிக எளிதானது, இனிமையானது என்கிறார். விஷ்ணு புராணத்தில், 5.13.13, ” நான் தேவன் அல்லன் ; கந்தர்வன் அல்லன் ; யக்ஷன் அல்லன்; அசுரன் அல்லன் ; உங்கள் பந்துவாய் பிறந்தவன் ; ஆதலால் வேறு நினைவு வேண்டாம் ” என்று கண்ணன் சொன்னதை இங்கே நினைவில் கொள்ளலாம். |
8 | வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போம் இதனில் யாதுமில்லை மிக்கதே. (திருவாய்மொழி 9.1.8) | மேல் பாசுரத்தில் கூறியபடி வாழ்வதே குணமானது; மாயவனாகிய எம்பெருமானுடைய திருவடிகளை துதித்து காலத்தை கழிக்க நினைக்க கூடியவர்களான பெரியோர்களுடைய வாழ்ச்சிக்கு துணை ஆவதற்காக வடமதுரை வந்து திருஅவதாரம் செய்தவனுடைய புகழையே ஆசைப்படும் துணையாக கொண்டு வாழ்வதே மேலான வாழ்வாகும். இதனைத்தவிர மேம்பட்ட வாழ்வு யாது ஒன்றும் இல்லை. |
9 | யாதுமில்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் மா துகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த தாது சேர் தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே. (திருவாய்மொழி 9.1.9) | பகவத் விஷயம் தவிர வேறு ஒன்றைப்பற்றிக் கொண்டு அதைக் காட்டிலும் மேலானது ஒன்றும் இல்லை என்று பலகாலும் அதையே சிந்தனை செய்யும் அளவில். காதுகளின் துளையை பெருக்க நினைத்து, மூளி ஆக்கி கொள்வதைப் போல், முறையாய் வாழ்ந்துகொண்டு இருக்கின்ற ஸம்ஸார வாழ்க்கையும் இழந்து விடுவர். பெரிய துகில் கொடிகள் கட்டப்பட்டு உள்ள மாடங்களை உடைய வடமதுரையில் திருஅவதாரம் செய்து தோளில் மாலைகளை சூடிக்கொண்டு இருக்கும் கண்ணபிரானைத் தவிர பாதுகாக்க வேண்டியது ஒன்று இல்லை என்று ஆழ்வார் சொல்கிறார். அதனில் மிக்கு யாதுமில்லை என்று படிக்க வேண்டும் என்று உரை ஆசிரியர் கூறுகிறார். இவனை விட வேறு ஒன்றினை பற்றியவர்கள் இருக்கின்ற வாழ்க்கையும் தொலைத்து, பிறகு இவன் அல்லது சரணம் இல்லை என்று ஆகிறார்கள். செல்வத்தைக் கொடுப்பதிலும் ஆபத்தை போக்குவதிலும் அந்த புருஷோத்தமனைத் தவிர ஆற்றல் உடையவன் வேறு யாரும் இல்லை. முதல் இரண்டு அடிகளுக்கு ‘கைவல்யம்‘ என்ற அடையத்தக்க ஒரு பொருளிலும் அர்த்தம் சொல்வதுண்டு. கைவல்ய ஸுகத்தை விரும்பி இந்த ஆத்ம அனுபவ சுகத்திற்கு மேம்பட்டது மற்றொரு இன்பம் இல்லை என்று துணிந்து, அதனை வளர்ப்பவர்கள், ஸாம்ஸார ஸுகத்தையும் இழந்து விடுவதை சொல்கிறார். ஆதலால், ஸ்ரீமதுரையிலே திருவவதாரம் பண்ணியதால் பெற்ற அழகை உடையவனான கண்ணனே அடையத் தகுந்தவன் என்கிறார். இப்பொருளில் “அது கருதி” என்றது கைவல்யத்தை தம் வாக்காலே சொல்லக் கூசி ‘அது ‘ என்றதாகக் கொள்ளவேண்டும். |
10 | கண்ணன் இல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான் திண்ணமா அம் உடைமை உண்டேல் அவனடி சேர்த்து உய்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே. (திருவாய்மொழி 9.1.10) | கண்ணபிரான் அல்லால் வேறு யாவரும் புகல் ஆவதற்கு இல்லை என்ற உண்மையை நிலைநிறுத்தவும் பூமியின் பாரத்தை போக்குவதற்கும் திருவடமதுரையில் திருஅவதாரம் செய்தான். மனிதர்களே, உங்களுடைய பொருள் ஏதாவது உள்ளதாக இருப்பதாக நினைத்து இருந்தால், அவைகளை அவன் திருவடிகளில் சமர்பித்துவிட்டு, உய்ந்து போவீர்கள் என்றும் வேறு ஒன்றும் யோசிக்க வேண்டாம் என்றும் சொல்லி உங்களாதாக நினைத்துக்கொண்டு இருக்கும் பொருட்கள் அனைத்துமே அவனதாகும் என்றும் சொல்லி பாடலை முடிக்கிறார். இறுதி அடிக்கு பொருளாக, உங்களுடைய பாரத்தில் நீங்கள் செய்ய வேண்டுவன அனைத்தும் அவன் பக்கத்தில் தான் உள்ளன, உங்கள் பக்கத்தில் ஒன்றும் இல்லை என்பதை குறிப்பிடுகிறார். பலன் கிடைப்பதற்கு தகுந்த சாதனைகளும் அவனை ஒழிய வேறு ஒன்று இல்லை என்கிறார். |
ஆதுமில்லை மற்றவனில் என்றதுவே துணிந்து தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன தீதிலாத வொண்டமிழ்கள் இவை ஆயிரத்துளிப் பத்தும் ஓதவல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே. (திருவாய்மொழி 9.1.11) | கண்ணபிராணக் காட்டிலும் துணை ஆகும் பொருள் வேறு ஒன்று இல்லை என்பதை துணிந்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணபிரானை திருக்குருகூரில் அவதரித்த சடகோபன் (நம்மாழ்வார்) அருளிச் செய்த குற்றமில்லாத ( அறநெறியை விட்டு விலகாத) ஆயிரம் தமிழ் பாசுரங்களுக்குள் இந்த பத்து பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்க வல்ல உபகாரகர்கள் முன்பே நம்மை அடிமை கொண்ட பெரியோர்கள் ஆவார்கள். |
சில புகைப்படங்கள்