திருவேங்கடமுடையான் – நம்மாழ்வார் – திருவிருத்தம்

தொடக்கம்

பதின்மர் பாடும் பெருமாள் என்று திருவரங்கத்திற்கு ஒரு வாழ்த்து உண்டு. நம்மாழ்வாரே தனக்குத் தாய், தந்தை, குரு, தெய்வம் என்று இருந்த மதுரகவி ஆழ்வாரைத்தவிர மற்ற எல்லா (11) ஆழ்வார்களும் பாடிய திவ்யதேசம் திருவரங்கம். மதுரகவியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்களை தவிர மற்ற ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசம் திருவேங்கடம்.

திருவரங்கத்திற்கு 247 பாசுரங்களும், திருவேங்கடமுடையானுக்கு 204 (202 பாசுரங்களில் திருவேங்கடமுடையான் என்று நேரிடையாக சொல்லி இருக்கும். இரண்டு பாசுரங்களின் விளக்கத்தில் இவையும் திருவேங்கடமுடையானுக்கே என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளார்கள்.).

பொதுவாக முதலாழ்வார்களுக்கு வேங்கடமுடையானிடம் அதிக பற்று கொண்டு இருந்தார்கள் என்பதும் அவர்கள் அவனுக்கு நிறைய பாடல்கள் பாடினார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து திருவேங்கடமுடையானை முன்னிட்டு

  • பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதியில் இருந்து பத்து பாசுரங்களை முன்பு பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வார், பூதத்தாழ்வார், அவரின் இரண்டாம் திருவந்தாதியில் இருந்து திருவேங்கடமுடையானை பற்றி பதினோரு பாசுரங்களில் சொல்வதை இங்கே சுருக்கமாக பார்த்தோம்.
  • அடுத்த ஆழ்வாரான பேய்ஆழ்வாரின் திருவேங்கடமுடையான் பாசுரங்களை (19) இங்கே காணலாம்.
  • அடுத்து, திருமழிசை ஆழ்வார் திருவேங்கடமுடையானை பற்றி பாடல்களை (16) பார்த்தோம்.
  • திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் பிரபந்தத்தில் இருந்து இரண்டு பாடல்களை இங்கே பார்க்கலாம்.
  • அடுத்து குலசேகராழ்வாரின் பதினோரு பாடல்களை இங்கே கண்டோம்.
  • பெரியாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 7 பாசுரங்களை இங்கே பார்த்தோம்.
  • அடுத்து பெரியாழ்வாரின் புதல்வியாகிய ஆண்டாள் நாச்சியார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய 16 பாசுரங்களை இங்கே கண்டோம்.

இனி ஆழ்வார்களின் தலைவராக கொண்டாப்படும் ஸ்வாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரங்கள் காண்போம். நம்மாழ்வார் நான்கு பிரபந்தங்கள் இயற்றி உள்ளார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகள் ஆகும்.

ஸ்வாமி நம்மாழ்வார் மொத்தம் 37  திவ்யதேசங்களைப் பற்றி பாடியுள்ளார். அவைகளில் ஆழ்வாருக்கு திருவேங்கடமுடையானிடம் அதீத ஈடுபாடு. ஆழ்வார் முதலில் பாடிய திவ்யதேசம், திருவேங்கடமுடையானின் திருமலை ஆகும்.

இவற்றில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து சில பாசுரங்களை முன்பு சுருக்கமாக பார்த்து உள்ளோம். மீண்டும் அவற்றை பின்னர் பார்க்கலாம் இங்கு திருவேங்கடவன் மேல் பாடிய அனைத்து பாசுரங்களையும் ஒவ்வொரு ப்ரபந்தமாக பாப்போம். திருவிருத்தத்தில் உள்ள 8 பாசுரங்களை கீழே காண்போம். நன்றி.

திருவிருத்தம்

எண் பாடல் பொருள் உள்ளுறை பொருள்
1.காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்றன, இதெல்லாம் அறிந்தோம்
மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர் நம்பும் சேண்குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே. (1.8)
தலைவனின் இயல்புக்கு வேறுமாதிரியான தற்போதைய செயல்களும் சொற்களும், அவன் பொருள் சம்பாதிப்பதற்காக தலைவியை பிரிந்து திருவேங்கடம் செல்வதை அறிந்து, தலைவி, தோழியிடம் பாடுவது.
தலைவன் ஏழை இல்லை, இருந்தாலும், தேவகாரியமும் பித்ருகாரியமும் சுயமாக சம்பாதிப்பதை கொண்டு செய்யாவிட்டால் பயனளிக்காது.
‘பிரிந்து போக நினைத்ததால் தலைவன், புதிய செயல்களை செய்யவும் புதிய வார்த்தைகளைச் சொல்லவும் நேர்ந்தது’ என்று நாயகி தோழியிடம் சொல்லித் தன்னை விட்டு பிரிவது தகாது என்று சொல்லும் பாசுரம்.
பொருளின் பொருட்டுப் பிரியக் கருதி எங்கேயோ புதிதாகக் கற்று வந்த குணம் என்பதை, கற்ற திண்ணனவே என்று கூறுகிறாள். கல்நெஞ்சர் என்று சொல்ல நினைத்து குன்ற நாடர் என்கிறாள்.
ஒரு மலையின் மேல் நின்றும், ஒரு மலையை தாங்கியும் உயிர்களை காத்திடுவான் என்றும் நித்யஸூரிகள் விரும்பி, விரைந்து வந்து தொழுவதற்கு ஏற்றதான உயர்ந்த திருமலை என்றும் அங்கு சர்வ ஸுலபனாக எம்பெருமான் எழுந்தருளி உள்ளான் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் எம்பெருமானுடைய பிரிவை ஆற்றாது இருந்த காலத்தில், ஆழ்வாரை ஆற்றிவித்த பாகவதர்கள், திருமலையை இடமாகக் கொண்டு வாழ எண்ணம் கொண்டு , ஆழ்வாரிடம் விடைபெறும் போது ஆழ்வார் பாடிய பாடல் என்றும் கொள்ளலாம்.
பாகவதரோடு கூடி இருப்பதைத் தவிர, எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசத்துக்குப் போக நினைப்பதும் தவறு என்று பாகவதர்களுடன் கூடி இருக்கும் சிறப்பு இந்த பாட்டினால் வெளியிடப்பட்டது.
2மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோய் ஓ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர் நுமது வாயோ அது அன்றி வல்வினை எனும் கிளியும் எள்கும் ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவது அரிதே (1.10)
ஆச்சரியமான குணங்களை உடைய எம்பெருமானது வடதிருவேங்கட மலையை இடமாகவுடைய பூங்கொடி போன்ற இளம் பெண்களே, கொடிய தீவினையை உடைய நானும் நீங்கள் விரட்டும் கிளியும் தளரும்படி செய்தது உங்களது ‘ஆயோ’ என்கிற சொல்லோ, கோவைக் கனி போன்ற உங்களது சிறந்த அதரமோ, என்னுடைய காதல் நோயோ, நீங்கள் தாமாக அறியா விட்டாலும் நான் சொன்னாலும் கேட்பது இல்லை என்பதாலோ, உங்களுடைய வாயின் அழகோ என்னை உயிர்க்கொலை செய்கிறது. இவற்றில் இன்னது என்னை வருத்தும் என்பதை தெரிந்து கொள்வது அரிதாக உள்ளது. நீங்கள் சொல்லுங்கள்;
இது முறையிட்டுக் கூறும் வார்த்தை என்று தலைவன், தலைவி மற்றும் தோழியிடம் அவர்கள் கிளி முதலிய பறவைகள் வந்து தானியக் கதிர்களைக் கவராதபடி பாதுகாத்துக் கொண்டு இருக்கும் போது திருமலையில் பேசுவது போல் அமைந்துள்ள பாசுரம்.
நாயகன் தன்னுடைய கருத்தை தோழி தெரிந்து கொள்ளும்படி செய்வதாக அமைந்த பாடல் ஆகும். கேட்கின்றிலீர் என்று சொல்வதன் மூலம், தான் படும் வேதனையை கேட்கவாவது மாட்டீர்களா என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வாரைப் பிரிய விரும்பாத அடியவர், ஆழ்வாரின் வாய் மொழிகளில் ஈடுபட்டுச் சொல்லுகிற வார்த்தை இது. அற்புதனான எம்பெருமான் பரமபதத்தை விட்டுத் திருமலையில் வந்து எளிமையுடன் நிற்கிற எம்பெருமானை நாடுகின்ற ஆழ்வாரை அழைத்து அவரிடம் அன்பு மிகுதியால் அடியவர்கள் படும்பாட்டை விண்ணப்பம் செய்தாலும் ஆழ்வார் பரவசத்தால் கேட்காமல் இருப்பதாகவும், அதற்கு காரணம், ஆழ்வாருடைய திருமுக மண்டல மலர்ச்சியா, இல்லை, அவரை பிரிந்துபோக முடியாதபடி ஆழ்வாரும் பைங்கிளி வண்ணனான எம்பெருமானும் பேசும் சொற்களா. இல்லை அப்படிப்பட்ட சொற்களைக் கூறும் வாயிதழ்களா என்று பலவற்றை கூறி, இவற்றில் எது அடியவரின் வருத்தத்திற்கான காரணம் என்று ஆழ்வாரிடமே கேட்கும்படி அமைந்த பாடல் என்றும் கொள்ளலாம்.
3கயலோ நும் கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர், அயலோர் அறியிலும் இதென்ன வார்த்தை, கடல் கவர்ந்த புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத் தெம்மொடும்
பயலோ விலீர், கொல்லைக் காக்கின்ற நாளும் பலபலவே. (2.5)
கண்ணழகைக் கொண்டாடின நாயகனைக் குறித்துத் தோழி தலைவியின் கருத்தறிந்து உரைத்த பாசுரமிது. தலைவி மற்றும் தோழி அருகில் சென்று நேரடியாக பேச்சினை தொடங்காமல், தன் காதல் தோன்ற ‘இவ்விடத்தில் ஒரு மதயானை வரக்கண்டீரோ?’ என்று தலைவன் தொடங்குகிறான். இப்பாட்டு. தலைவன் அன்பு மிகுதி தோற்றும் விதமாகவும், தலைவியின் சார்பில் தோழி பதில் உரைக்கும் விதமாகவும் உள்ளது.
கயலோ நும் கண்களென்று களிறு வினவி நிற்றீர் ‘ என்பதை இரண்டு விதமாக பார்க்கலாம்; யானையை பற்றி பேச வந்தவர் ஏன் கண்கள் பற்றி பேசுகிறீர்கள், அயலார் என்ன நினைப்பர்’ என்று தோழி மறுத்து, புதியவராய் வந்த நீங்கள், பல கொல்லைகளை உடைய திருவேங்கட மலையிலே, கூட்டுப்பயிர் பார்ப்பவர் போல இங்கு எங்களுடன் நெடு நேரம் வீண் பேச்சுப் பேசி நிற்பது தகாது என்பது முதல் கருத்து. ‘கண்ணழகில் ஈடுபட்டே வந்திருக்கிறீர், ஏன் யானையை பற்றி பேசி எங்களையும் மகிழ விடாமல் செய்கிறீர்’ என்பது இரண்டாவது கருத்து.
‘நாங்கள் உங்களுக்கு உரியவர்கள்; நீங்கள் எங்களுக்கு உரியவர்’ என்கிற கருத்து, அயலோர் அறியிலும் இதென்ன வார்த்தை என்று சொன்னதன் மூலம் தெரிகிறது. நாங்கள் உமக்கு அயலார் அல்லோம், அயலார் வேறு உளர் என்பதும் தெரியவரும்.
கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே என்று சொன்னது, நாங்களும் பயிரை காப்பது நேற்று இன்று அல்ல; பல நாட்களாக தினந் தோறும் காத்து வருகிறோம், நீங்கள் வரவில்லை, எங்களுடன் கூட்டுப்பயிர் செய்ய வில்லையே என்பதை தெரிவிப்பதற்காக, தோழியானவள் இப்படி கூறித் தலைமகளின் காதலைத் தலை மகனுக்குக் குறிப்பு கொடுத்ததாக பாடல் உள்ளது.
ஒரு ஆசார்யன் அர்த்தம் கற்பிக்கைக்காக நாள் குறித்து சிஷ்யனிடம் சொல்ல, சிஷ்யன் அந்த நாள் தவறி, இன்னொரு நாள் வர, ஆசார்யன், அன்றே வரவில்லையே, இப்போது தனக்கு முடிவு வந்துவிட்டது, இருந்தாலும் இப்போதாவது வந்தீரே, என்று மகிழ்ந்து அர்த்தம் சொல்லி கொடுத்தார் என்பது உள்ளுறைபொருள்.
4இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல் அசைமின்கள் என்றால் அசையும் கொலாம், அம்பொன் மாமணிகள் திசைமின் மிளிரும் திரு வேங்கடத்துவன் தாள் சிமயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே. (4.1)தூது போகச் சொன்ன போது, போகாத மேகங்களைக் குறித்துத் தலைவி பேசும் பரசுரம் இது. திருவேங்கட மலையின் மேற் சென்று சேரும் பொருட்டுப் பிரயாணப்பட்ட மேகங்களை நோக்கித் தலைமகள் ‘என்னைப் பிரிந்து அங்குச் சென்று வசிக்கின்ற எனது தலைமகனுக்கு என் நிலைமையைச் சொல்லும் தூதராக வேணும்’ என்று வேண்ட, அதற்கு அவை உடன்படாததால் மீண்டும் அவற்றை நோக்கி, அவனுள்ள இடம் செல்லும் பாக்கியமுடைய நீங்கள், எனது தலையின் மேல் உங்கள் பாதத்தை வைத்தாவது செல்லுங்கள்’ என்று பிரார்த்திக்க, திருமலையின் தலை மேல் சென்று தங்குவதற்கு விரும்புகின்ற மேகங்கள் இவள் தலைமேல் தங்கி நிற்பதற்கு ஒப்புக்கொள்ளாத தன்மையைக் குறித்துத் தலைவி இரங்குகிறாள். திருமலை செல்லுவோரின் திருவடிகளை தம் தலைமேல் கொள்வது சிறப்பு என்பதை ஆழ்வார் சொல்கிறார். இங்கு திருச்சேறை எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் ‘தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலைமேலாரே” (பெரிய திருமொழி 7.4.1) என்ற பாடல் குறிப்பிடத்தக்கது.எம்பெருமானிடம் ஆழ்ந்த ஆழ்வாரின் நெஞ்சை மீட்கும் படி, கீழ் பாட்டில், ஆழ்வார் கேட்டுக்கொண்டதற்கு ‘இவர் நெஞ்சை மீளச் செய்வது அந்த எம்பெருமானுக்கே அரிதான ஒன்று ஆனதால், நம்மால் செய்ய முடியாது என்று அடியவர்கள் கைவிட, பின்பு ஆழ்வார் திருமலையை நோக்கி திவ்யதேச யாத்திரை செல்லும் சிலரைக் கண்டு ‘இவர்கள் நம் குறையை எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்து நம்மை அவனோடு சேர்த்து வைப்பதற்கு ஏற்றவர்கள்’ என்று கருதி அவர்களை ஆச்சார்யர்களாக வேண்டும் என்று கேட்க, அவர்கள் இவருக்கு ஆசார்யராவதற்கு உடன்படவில்லை. மாறாக அடியவர்கள், தங்கள் தலைகளின் மேல் ஆழ்வாரின் திருவடிகளை வைப்பதே தங்களுக்கு சிறந்த புருஷார்த்தமாகும் என்று ஆழ்வாரை வேண்டினார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
5ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.(5.10)
தலைவன் தலைவி இருக்கும் இடம் நோக்கி திரும்பி வருகையில் தேர்ப்பாகனிடம் கூறும் பாடல். பொருள் சேர்த்துவர தலைவியை பிரிந்த தலைவன், காரியம் முடிந்து தேரில் வருகிறான்; வரும்போது தான் காலம் கடந்து வருவதாக எண்ணி, தலைவி மிகவும் துயர் படுவாள் என்று எண்ணி, தேரை மிகவும் வேகமாக செல்லுமாறு கட்டளை இடும் பாசுரம். தன்னைப் பிரிந்து நந்திக்ராமத்தில் துடித்துக்கொண்டிருக்கின்ற பரதாழ்வானுடைய ஆற்றாமையைக் கருதி ஸ்ரீராமபிரான் பதினான்கு வருஷ காலம் சென்றதை ஒரு பகலில் வந்ததைப் போல என்று இங்கே நினைவில் கொள்ளலாம். தலைவியின் மேனி வெளுத்துப்போய் விடுவதற்கு முன் செல்லவேண்டும் என்று தோன்றினாலும், தான் விரைந்து சென்று சேராவிடில் ஆற்றாமை அதிகமாகி அவள் இறந்து விட்டால் அந்த பழி தமக்கு வந்து சேரும் என்பதும் தெரியவரும். எம்பெருமானது திருக்குழல் இயற்கையில் திவ்ய பரிமளம் உடையது மற்றும், செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி முதலிய நன்மலர்களை எப்பொழுதும் சூடிக்கொள்வதாலும் தேன் நவின்ற நீண்முடி என்கிறார். ‘தேன் நவின்ற” என்பதை முடிக்குச் சொல்லாமல், தேனாகச் சொல்லப்படுகிற எம்பெருமான், என்று அவனையே சொல்லலாம். ‘தேன் நவின்ற மாமலைக்கே’ என்று எடுத்துக்கொண்டால், ‘தென்னாதெனா வென்று வண்டுமுரல் திருவேங்கடம்’ என்று மலைக்கே சிறப்பாக கொள்ளலாம். விண்முதல் நாயகன் என்று சொன்னது, விண்ணுலகத்துக்கு முதன்மை ஆனவன் என்றும், உலகங்கள் எல்லாவற்றிற்கும் தலைவன் என்றும் கொள்ளலாம். கரிய நிறமுடைய எம்பெருமானது திருமுடியில் இருந்து திருவடி வரை தொங்குகின்ற முத்துமாலை, கரிய மலையின் உச்சி முதல் அடியளவும் இடையறாது பெருகுகின்ற வெள்ளத்திற்கு உவமையாக சொல்லப்பட்டது.   திருவேங்கடமுடையானின் சீலகுணமும் தரை காணமுடியாதபடி ஓடுவதாகவும் சொல்லலாம். பேறு பெறாமையால் வருந்துகின்ற ஆழ்வாருடைய ஆற்றாமையை உணர்ந்து, அன்புடைய அடியவர்கள் திவ்யதேச பயணத்தில் இருந்து விரைந்து வந்து, ஆழ்வாரை குளிர வைக்க வருவதை பாடுகிறார்.
எம்பெருமானையும், அவரின் அடியார்களையும், பிரிதாலாகிய துயரம் தீர, ஆழ்வாரைத் தேற்றுவதற்காக, ஆசை கொண்ட அடியவர்கள், அந்த ஆசையை செலுத்தவல்ல நெஞ்சை, விரைவாக செல்லத் தூண்டிய பாடலாகும்.
திருமலையில் எம்பெருமானின் சீலம் என்ற அருவியின் வெள்ளப் போக்கில் தவித்துக்கொண்டு, ஸ்ரீராமபிரானை திருமணம் செய்துகொண்ட சீதாபிராட்டி, மிதிலையை நினைக்காததைப் போல், ஆழ்வார் திருநகரியையும் மறந்து, ஆழ்வார் எழுந்தருளிய நிலையை அனுபவிக்க விழையும் அடியவர்களின் மனநிலையும் வேகத்தையும் சொல்கிறது.
6முலையோ முழுமுற்றும் போந்தில, மொய் பூங்குழல் குறிய
கலையோ அரை யில்லை நாவோ குழறும், கடல் மண்ணெல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே.(6.10)
தலைமகளின் இளமையை நோக்கிச் செவிலித்தாய், இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனோடு சேர்ந்த நாயகி, அவன் பிரிந்த நிலையில், ஆற்றாது, வருந்தி, வாய் பிதற்றிக் கண்ணீர் சொரிந்து, உடல் இளைத்து, வடிவம் வேறுபட, அந்த வேறுபாட்டினை கண்ட தாய், இதற்கு காரணம் என்ன என்று கவலைப்பட்டு, அவளது உயிர்த்தோழியைக் கேட்க, அவள் உண்மையான காரணத்தைக் கூறிட, அது கேட்ட தாய், இவளது இளமையை எண்ணி இரங்கிக் கூறிய பாடல்.
‘திருவேங்கடமலை எனது தலைவனது இருப்பிடமோ’ என்று பலகாலும் சொல்லிப் பழகுகின்ற வார்த்தை, இப்படி இளமைப் பருவமுடைய இவளிடம் உண்டாவதோ? என்று தாய் சொல்வதாக அமைந்துள்ள பாசுரம். எப்பொழுதும் திருவேங்கடவன் நித்யவாஸம் செய்யும் திருவேங்கடத்தையே சிறு வயது முதல் சொல்லிக் கொண்டு இருக்கிறாள் என்பது புரியும். இப்பொழுது இவள் எம்பெருமானின் திருநாமம் சொல்வது ஆச்சர்யம் இல்லை, இது இவளுடைய சுவாபம் என்று சொல்வது போல் முடிக்கிறார்.
ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட ஞானிகள், ‘எம்பெருமானைச் சேர உபாயமான, பக்தி முதலியன நிறையாமல் இருக்க, இவருக்கு ஏன் இந்த விரைவு, என்பது உள்ளுறை பொருள். எம்பெருமானைச் சேர்ந்து அனுபவிப்பதற்கு, பக்தி முதிர்ந்து, பேற்றுக்குச் சாதனமான, பரமபக்தியாக வளரவில்லை. சாதனம் ஒன்றும் இன்றியே இருக்கும் போது, விரைவை வேண்டுதல் தகுமோ?
இப்பாட்டில், ஆழ்வார் திருவவதரித்த பொழுதே தொடங்கி, எம்பெருமானுடன் அல்லது தரியாமை என்ற நிலை கொண்டுள்ளார் என்பது வெளிப்படும்.
7காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரர் செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் ஆனாள் கண்களாய துணைமலரே. (7.7)
தான் திருவேங்கட மலையில் கண்ட மங்கையின் கண்கள், தன்னை வருத்தத் தொடங்கிய அளவுக்கு, என் உயிர் ஈடாகாது என்று தலைமகன் தான் வலிமை இழந்ததை, நண்பனுக்கு கூறி வருந்துகிற பாடல்.
அசுரர்களை அழித்த பெரிய ஆச்சரியமான கருடனை, வழி நடத்துகிற திருமாலின்  திவ்ய தேசமாகிய திருவேங்கட மலையிலே, தலைவன் பார்த்த மலர் போன்ற கண்களானவை, செம்மையால் செங்கழுநீரையும், கருநிறத்தால் நீலோற்பல மலரையும், கூர்மையாலும் ஒளியாலும் வருத்துதலாலும், வேலாயுதத்தையும், குளிர்ச்சியாலும் வடிவத்தாலும், கயல்மீனையும், மற்றும் மருட்சி முதலிய பலவற்றால் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய பல பொருள்களையும் தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து தன்னை வருத்துதற்கு காரணமானவை. எனது உயிரைவிட மிக பெரியவை. இந்த மெல்லிய உயிரை மாய்ப்பதற்கு இத்தனை பெரிய முயற்சி கொள்ளத் தேவையில்லை என்று சொல்வது போல் உள்ளது.
ஆழ்வாருடைய ஞான விளக்கத்தை அடியவர் ஒருவர், மற்றொருவர்க்கு எடுத்து உரைக்க முயற்சி செய்தல்.
துஷ்டர்களை அழித்து கருட வாகனத்துடன் புருஷகாரம் செய்பவளான திருமகளுக்கு வசப்பட்டவனும், ஆத்மாக்களைப் பாதுகாக்கும் திருமாலின், போக ஸ்தலமான திருமலையில் ஈடுபாடுடையவர் ஆழ்வார். வேங்கடத்தை இடைவிடாது நினைப்பவர். ஆழ்வாரது சுத்த ஸ்வபாவமும், ஞான அனுஷ்டானங்களும் பாரதந்திரியமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அலர்மேல் மங்கைத் தாயாரைச் சொல்லி, அவளுடன் இவருடைய ஸ்வரூபத்துக்கு ஒப்பு சொல்லியது. தமக்கும் தம்மடியார்க்கும் துணையாகிற பரந்த ஞான வகைகளை சொல்லிற்று. அந்த ஞானம் செந்நிறத்தாகிய ரஜோ குணத்தைக் கடந்தமை சொன்னது. நீலத்தை வென்றது என்பது, தமோ குணத்தைக் கடந்தமை. முக்குணங்களையும் கடந்ததால் ஜட பொருள்களில் சேராததை சொன்னது. சஞ்சலத் தன்மை இல்லாமை சொன்னது. இப்படிப்பட்ட ஞானத்தின் மஹிமைக்கு எம்மை வசப்படுத்திக் கொள்ளுதல் ஒரு பெரிதன்று என்றதாயிற்று.
8உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பிலராய், இவளைப் பெருகின்ற தாயர் மெய்ந் நொந்து பெறார் கொல் துழாய் குழல் வாய்த்து உறுகின்றிலர் தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவளாகம், மெல்லாவி எரி கொள்ளவே! (9.1
)
தலைமகள், திருமாலாகிய தலைமகன் விஷயமாக, வேட்கை நோய் கொண்டு, மேனி மெலிந்து, வடிவு வேறுபட, அது கண்ட தாய் ‘இது முருகக் கடவுள் ஆவேசித்ததால் இருக்கும்’ என்று நினைத்து, பரிஹாரமாக வெறியாடுவித்தல், ஆடு பலிகொடுத்தல், கள் இறைத்தல், இறைச்சி தூவல், கருஞ் சோறு, செஞ் சோறு வைத்தல் முதலிய காரியங்களை இடைவிடாது ஒன்றன் மேல் ஒன்றாகச் செய்யத் தொடங்க, நோய் ஒன்றும் மருந்து வேறு ஒன்றுமாக, தான் காதலித்த நாயகனுக்கு உகந்தவைகள் ஆகாத அக்காரியங்களை நோக்கி, நாயகி மேன்மேலும் வருந்த, அது கண்டுத் தலைவியின் உள்ளதை அறிந்து, வெறி விலக்க வந்த தோழி, தாயின் காதுபட, இப்போது அவளுக்கு நேர்ந்துள்ள நோயின் ஸ்வரூபத்தையும், அதன் காரணத்தையும், அதனைத் தீர்க்க வழி என்ன என்பதையும் ஆராயாமல், இவள் தாய் ஓயாது நடத்துகிற வெறியாட்டு முதலிய காரியங்கள், மேன்மேலும் நடப்பதால், இவளை மேலும், மெய் நொந்து போகும்படி செய்கிறார்களே என்று வருத்தப்பட்டாள்.
எம்பெருமானது திருத்துழாயை முடியில் சூட்டுதலும், அவனது போகஸ்தானமான திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு போதலுமே, இந்நோய்க்கு ஏற்ற பரிஹாரமாயிருக்க அவற்றை செய்யவில்லேயே என்று இவளது உயிரை விறகாக்கி இவளுக்கு தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றதே ! என்ன பரிதாபம் !! என்கிறாள். இம்மகளுக்கு இந்த நோய் தீர்ந்தால் இவளை திருவேங்கடமலைக்கு அழைத்துக் கொண்டு வந்து ஸேவை பண்ணி வைக்கிறோம் என்று பிரார்த்தனை செய்து கொள்ளலாமே என்கிறாள்.
ஆழ்வாரை ஆசுவாச படுத்த வேண்டும் என்பதற்காக ஞானிகள் தங்கள் பரிவால் வேறு சில விதமான பரிஹாரங்களைச் செய்ய, இவரது தன்மையை அறிந்த அன்பர்கள் இவரது ஆற்றாமையைத் தணிக்கும் வழிகளை செய்யாமல், வேறு வழிகளில் செய்து என்ன பயன் என்று வெறுத்து உரைக்கும் வார்த்தையாம். பகவத் ப்ரஸாதமும் திவ்யதேச செல்லுகையுமே இவரது ஆற்றாமைக்குப் பரிஹாரம்; அவை செய்யாமையால் ஆழ்வாருக்கு தளர்ச்சி மேன்மேல் மிகுகின்றது

மீண்டும் இன்னொரு பதிப்பில் சந்திக்கலாம், நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email

Discover more from Vaishnavism

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading