063 திருகடல்மல்லை Thirukadalmallai

நிலமங்கைத் தாயார் சமேத ஸ்தலசயனப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம்திருக்கடல்மல்லை, மஹாபலிபுரம் , அர்த்த சேது
மூலவர்ஸ்தலசயனப்பெருமாள்
உத்ஸவர்உலகுய்யநின்றான்
தாயார்நிலமங்கைத்தாயார் (தனிக்கோயில் நாச்சியார்)
திருக்கோலம்கிடந்த திருக்கோலம் (ஸ்தல சயனம்)
திசைகிழக்கு
பாசுரங்கள்27
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 26
பூதத்தாழ்வார் 1
தொலைபேசி+91 – 44 – 27443245

கோவில் பற்றி

இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று குறிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆலயத்தில் ஸ்தல சயனப் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் தனது மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி என்ற தேவிமார்கள் எவரும் இல்லாமல், திருமார்பில் வக்ஷஸ்தல லக்ஷ்மி மட்டும் கொண்டு, தனது வலது, கீழ், மேல் என்ற இரண்டு திருக்கரங்களையும் மண்ணில் அழுத்தி வைத்து, ஆதிசேஷ பர்யங்கம் இல்லாமல், நிலத்தில் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த பெருமாளை தரிசித்தால் திருப்பாற்கடலில் உள்ள எம்பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்று நம்பப் படுகிறது.

உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு சிறு தாமரை பூவுடன் உள்ளார். அதை அவரே மூலவரிடம் சமர்பிக்கின்றார் என்று ஐதீகம்.

பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் நிலமங்கைத் தாயார் சந்நிதியும் ஆண்டாள் சந்நதியும் உள்ளன. கோவில் வெளிச்சுற்றில், ராமர், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார் , கருடன், ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர் என்று சந்நதிகள் உள்ளன.

ஒருகாலத்தில் ஏழு கோவில் நகரம் என்று ஏழு விஷ்ணு கோவில்களை கொண்டு இந்த நகரம் இருந்தது. பின்னர் கடலின் சீற்றத்தால் பல கோவில்கள் கடலுக்குள் அடித்துச் செல்ல, பிறகு மூன்று கோவில்கள் கட்டப் பட்டதாகவும், அவற்றிலும் இரண்டு கோவில்கள் மீண்டும் கடலில் மூழ்கிவிட்டதாவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது கோவில் இருந்த எம்பெருமான், சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இப்பொழுது இருக்கும் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி பூஜை, திருவாராதனம் முதலியவை நடைபெறுகின்றன.

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் எம்பெருமான் அலங்கார பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளுகிறார். பூதத்தாழ்வார் சன்னிதியில் அவருக்கு மரியாதை நடக்கும். தொடர்ந்து, சுவாமியின் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

புண்டரீக ரிஷி பாதம் பட்ட தீர்த்தத்தில், புஷ்கரணியில் மாசிமகம் அன்று தெப்பம் சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசை, சரவண நட்சத்திரம், திங்கட்கிழமை மூன்றும் சேர்ந்து வரும் அன்று மஹோதன்ய தீர்த்தவாரி என்று எம்பெருமான் கடலில் சென்று தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராகர் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று கடலுக்கு சென்று தீர்த்தவாரி வழங்குவார்கள். மேலும் அமாவாசை, மஹாளயம், உள்ளிட்ட புண்ணிய தினங்களில் திதி தர்ப்பணம் முதலியவை நம் முன்னோர்களுக்கு கொடுத்தால், அவை சிறந்த பலனை தரும் என்றும், கயா, காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களில் செய்ததற்கு ஈடாகும் என்றும் நம்பப் படுகிறது.

Google Map

திருகடல்மல்லை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருகடல்மல்லை பற்றி தினம் ஒரு திவ்யதேசம்

ஆதி வராக பெருமாள்

மாமல்லபுரம், பல்லவ அரசர்களால் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க பட்ட ஒரு நகரமாய் இருந்தது. இந்த ஸ்தல சயன பெருமாள் கோவிலைத் தவிர, சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராஹருக்காக ஒரு குகைக் கோவில் அமைத்தான். இது மாமல்லபுரத்தில் உள்ள இன்னொரு வைணவ கோவிலாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருவிடவெந்தை திருக்கோயில் வலைப்பதிவில் குறிப்பிட்டதுபோல் அரிகேசரிவர்மன் என்னும் மன்னனுக்கு காட்சி தந்த ஆதிவராஹ பெருமாள் கோவிலாக, மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு பின் புறத்தில், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில், குடவரை கோவிலாக, இந்த கோவில் வராஹ பெருமானுக்காக கட்டப்பட்டது. கடந்த பத்து நூற்றாண்டுகளில், மாமல்லபுரத்தில், கடலின் சீற்றத்திற்குத் தப்பித்த இரண்டு வைணவ கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்தலசயன பெருமாள் கோவில்.

இந்த திருக்கோவிலில் மூலவர் ஆதிவராஹர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். இங்கு வராஹப் பெருமான் பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் வலவெந்தை பெருமாள் ஆகிறார். இடது திருவடிகள் ஆதிசேஷன் மற்றும் ஆதிசேஷன் மனைவி மேலும் இருக்கிறது. எம்பெருமானின் இடது திருக்கரம் பூமிபிராட்டியின் மேல் அவரை ஆசுவாசப்படுத்தும் படியாக உள்ளது.

இப்பெருமாள் (ஏனப்பிரான்) வலது திருக்கரத்தை தமது திருமார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்து ஞானத்தமிழ் புரிந்த நான் என்று பூதத்தாழ்வார் தனது மூன்றாம் திருவந்தாதி முதல் பாசுரத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு அர்த்தம் கூட்டி காட்சி அளிக்கிறார்.

இந்த திருக்கோவிலில் இருந்து திருவிடவெந்தை கோவிலுக்கு செல்லும் சுமார் 15 கிலோமீட்டர் சுரங்கபாதையும், காஞ்சியில் உள்ள பரமேஸ்வர விண்ணகரம் கோவிலுக்கு செல்லும், சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உள்ள சுரங்கபாதையும் உள்ளன. அவை தற்சமயம் மூடப்பட்டு உள்ளன.

ஸ்தல வரலாறு

பாகவத புராணத்தில் புண்டரீக மஹரிஷியின் வரலாற்றைச் சொல்லும் போது இத்தல வரலாறும் இணைந்து வருகிறது. இந்த முனிவர் புஷ்பங்களைக் கொண்டு க்ஷீராப்தி நாதனை (திருப்பாற் கடல் எம்பெருமான்) பள்ளி கொண்ட கோலத்தை வழிபட எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர நீரைக் கைகளால் இறைக்க ஆரம்பித்தார்.

இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், இவருக்குக் காட்சி கொடுக்க எண்ணியவராய் ஒரு முதியவர் வேடம் கொண்டு இவரிடம் வந்து ஆகாரம் கேட்க, தாம் கொண்டுவந்த மலர்க்கூடையை அவரிடம் பாதுகாக்கும்படி கொடுத்துவிட்டு, தாம் சென்று ஆகாரம் கொண்டு வருவதாக சொல்லிச் சென்றார். அவர் ஆகாரம் கொண்டு வருவதற்குள் எம்பெருமான் மாமல்லைக்கடலில் ரிஷியால் கொடுக்கப்பட்டப் பூக்களையெல்லாம் சூடிக்கொண்டு ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் காட்சி அளித்தார். இதைக் கண்டு ரிஷி மிகவும் ஆனந்தம் அடைந்து, இந்த சிறுவனுக்காகவா நீங்களே நேரிடையாக வந்தீர்கள் என்றும், தங்களிடமேவா பூக்கூடையை கொடுத்து காக்கவைத்தேன் என்றும் வருந்தி, எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகில் அமரும் பாக்கியம் தமக்கு வேண்டும் என்று வேண்ட, எம்பெருமானும் அவ்வாறே அருளினார்.

அந்த ஸ்தலத்திலேயே சயன திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததால் ஸ்தல சயனப் பெருமாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே, எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பியபடி எம்பெருமான் அருகில் உள்ளார்.

இன்னொரு செவி வழி வரலாறும் சொல்லப்படுகிறது. மல்லேஸ்வரன் என்ற ஒரு அரசன் இருந்தான் என்றும் அவன் தினமும் மக்களுக்கு அன்னதானம் செய்து வந்தான் என்றும், நாளடைவில் அதனை நிறுத்தி விட்டதால், கோபம் கொண்ட மக்கள் அவனை ஒரு முதலையாக மாற சாபம் இட்டார்கள். பின் ஒரு நாள் புண்டரீக ரிஷி அங்கு வந்தபோது, அவருக்கு 1000 தாமரை மலர்களை பறித்துக் கொடுத்து அவரிடம் தனக்கு சாப விமோசனம் பெற்று தர வேண்டியதால், அவரும் கடலில் இருந்த ஸ்தல சயன பெருமாளுக்கு அந்த ஆயிரம் மலர்களை சார்த்தி வழிபட்டார் என்றும் எம்பெருமானும் கருணைகொண்டு மல்லேஸ்வரனின் சாபத்தை நீக்கினார் என்றும் சொல்வதுண்டு.

ஆழ்வார்

பூதத்தாழ்வார் அவதாரம் செய்தது இங்குதான். இவரைக் குறித்து திருக்குருகைப் பிரான் பிள்ளான் பாடும் போது, நன்புகழ்சேர் சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை பூதத்தார் பொன் அம் கழல் என்று திருகடல்மல்லையையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 2.6.4 ல் , கடல்மல்லைத் தலசயனத் துறைவாரை, கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குலதெய்வமே என்று இந்த எம்பெருமானை வணங்குபவர்கள் ஆழ்வாருக்கு குலதெய்வம் என்றும் 2.6.7ல், கடல் மல்லைத் தலசயனம், நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே என்றும் பாடி, பாகவத பக்தியின் பெருமைகளை இந்த திவ்யதேச எம்பெருமானை முன்னிட்டு பாடுகிறார்.

திருமங்கையாழ்வார் ஆதிவராஹ பெருமாளையும் கீழ்கண்டவாறு பாடி உள்ளார். ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில் கொண்டான், வானத்திலவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலங்கொள்ளக் கானத்தின் கடல் மல்லைத் தலசயனத் துறைகின்ற
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே
(பெரிய திருமொழி, 2.6.3) என்ற பாசுரத்தில், பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்று குறிப்பிட்டதோடு, நிலைமை மாறி அழகு அழிந்திருந்த பூமிப்பிராட்டியின் அழகை மறுபடியும் பழையபடியே நிலை நிறுத்தினான் என்பதை நிலமங்கை யெழில் கொண்டான் என்றும் சொல்லி உள்ளார்.

இப்படி ஸ்தல சயன பெருமாள் கோவில், ஆதிவராஹர் கோவில் என்று இரண்டு கோவில்கள் இருந்தும், இரண்டிற்கும் ஆழ்வார் பாசுரங்கள் இருந்தும் திருகடல்மல்லை என்று ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.

திருச்சந்தவிருத்தம், நூற்று பத்தாவது பாசுரத்தில், திருமழிசையாழ்வார் நீர்பாயல் என்று குறிப்பிட்டு உள்ளார், ஆனால் அந்த பாசுரத்தை, மேல் உலகில் உள்ள திருப்பாற்கடல் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: