062 திரு இடவெந்தை / THIRUIDAVENDHAI

அகிலவல்லி நாச்சியார் ஸமேத லக்ஷ்மிவராக சுவாமி திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருஇடவெந்தை திருவடந்தை நித்ய கல்யாணபுரி வராகபுரி
அசுரகுல கால நல்லூர் ஸ்ரீபுரி
மூலவர்லட்சுமி வராகப் பெருமாள்
உத்ஸவர்நித்யகல்யாண பெருமாள்
தாயார்கோமளவல்லி நாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்) அகிலவல்லி நாச்சியார்
திருக்கோலம்நின்ற திருக்கோலம்
திசைகிழக்கு
பாசுரங்கள்13
மங்களாசாசனம்திருமங்கையாழ்வார் 13
தொலைபேசி+91 44 – 24272235 / +91- 98405 99310 / +91- 98409 36927

கோவில் பற்றி

எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால் பெருமாளுக்கு நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர்.

நித்ய கல்யாண அவதாரத்தில் எழுந்தருளியிருப்பதாக ஐதீஹம். இவர் முகத்தில், தாடையில் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்தப் பொட்டு திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு வைக்கும் த்ருஷ்டி பொட்டு போல் இயற்கையாகவே உள்ளது என்பார்கள்.

இங்கு எம்பெருமான், ஒரு திருவடியை பூமியிலும் மற்றொன்றை ஆதிசேஷன் தலையினிலும் வைத்துக்கொண்டு, அகிலவல்லி நாச்சியாரை இடது
தொடையில் தாங்கிக்கொண்டு, அவர் மூலமாகவே, சரம ஸ்லோகத்தை இந்த உலகத்திற்கு உபதேசிக்கும் வராஹ மூர்த்தியாய் நின்று சேவை சாதிக்கிறார். ஆதிசேஷன் அருகில் அவரது மனைவியும் இருக்கிறார்.

360 கன்னியரை ஒன்றாக்கி ஒரே பெண்ணாகச் செய்தமையால் இங்குள்ள பிராட்டிக்கு அகிலவல்லி நாச்சியார் என்று பெயரும் உண்டு. 360 கன்னியரில் முதற்கன்னிக்கு கோமளவல்லி என்பது பெயர்.

எம்பெருமான் தினமும் ஒரு திருமணம் செய்து கொண்டதால், ஊருக்கு நித்ய கல்யாணபுரி என்றும் ஒரு பெயர் உண்டு.

எம்பெருமான் ஒருவனே நாயகன், நாம் எல்லோரும் நாயகிகளே என்று சொல்லும் வைஷ்ணவ தத்துவத்தின் பொருளாக, இவ்வுலகத்தில் பிறக்கும் எல்லாரையும் எம்பெருமான் ஏற்றுக்கொள்வதின் அடையாளமாக தினம் ஒரு திருமணம் செய்து நித்யகல்யாண பெருமாளாக உள்ளார் என்றும் சொல்வர்.

வராக அவதாரம் எடுத்தமையால் வராகபுரி என்னும் பெயருண்டு. அசுரகுல கால நல்லூர் என்பதே கல்வெட்டுகளில் காணப்படும் பெயர். ஸ்ரீயின்
அவதார ஸ்தலமாதலால் ஸ்ரீபுரி என்றும் இந்த ஊருக்கு பெயர் உண்டு.

இன்று கோவளம் என்பதே ஒரு காலத்தில்
பிராட்டியின் அவதார மகிமையைக் குறிக்கும் கோமளவல்லிபுரம் என்று வழங்கப்பட்டதாகும். இங்குதான் காலவரிஷி தவம் புரிந்தார்.

கோமளவல்லித்தாயாருக்கு தனி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், ரங்கநாதர் சந்நிதியும் உள்ளன.

யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பல்லக்கு ஒன்று இக்கோவிலில் உள்ளது. கொச்சி மகாராஜாவின் அரண்மனையில் ஒன்றும், இங்கொன்றுமாக
இந்தியாவிலேயே இந்த இரண்டு யானைத் தந்த பல்லக்குகள்தான் உள்ளதென தொல் பொருள் ஆய்வுத்துறையினர் கூறுகின்றனர்.

இது திருஷ்டி பரிகார ஸ்தலம், ராகு, கேது, சுக்கிரன் தோஷ பரிகார ஸ்தலம், மற்றும் திருமண தடை உள்ளவர்கள் பரிகார ஸ்தலம் ஆகும்.

ஸ்தல வரலாறு

க்ருத யுகத்தில், மேகநாதன் என்னும் அரசன் இருந்தான்.
அவன் புதல்வன் பலி மிகவும் நீதிமானாக அரசு நடத்தி வந்தான். அப்பொழுது மாலி, மால்யவான், ஸு மாலி என்னும் மூன்று அரக்கர்கள் தேவர்களுடன் யுத்தம் செய்ய பலியின் உதவியைக் கேட்டனர் பலி மறுத்தான்.
அரக்கர்கள் தேவர்களோடு யுத்தம் செய்து தோற்றுப் போய் மீண்டும் பலியிடமே தஞ்சம் புகுந்தனர்.

அரக்கர்களுக்காக பலி தேவர்களுடன் யுத்தம் செய்து வென்றான். தேவர்களைக் கொன்ற பாவம் போவதற்காக இவ்விடத்து வந்து திருமாலைக் குறித்து கடுந்தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு, வராஹரூபியாய் அவனுக்கு காட்சிகொடுத்து அவனுக்கு மோட்சம் நல்கி
சக்திவாய்ந்த வராஹ மூர்த்தியாய் இங்குள்ள வராஹ குளத்தில் நின்றருளினார்.

சரஸ்வதி நதிக்கரையில் குனி என்னும் ஒரு ரிஷி
தவஞ்செய்து சுவர்க்கம் பெற்றார். குனியின் மகளும் அவ்விதமே ஸ்வர்க்கம் செல்ல எண்ணி தவம் செய்யும் போது, நாரதர் வந்து, அவள் மணமாகாதவள், திருமணம் செய்தால் அன்றி ஸ்வர்க்கம் கிடைக்காது என்று சொல்லி, அங்குள்ள மற்ற முனிவர்களிடம் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டினார்.

அங்கு காலவரிஷி என்ற ஒரு ரிஷி அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு 360 கன்னிகைகளைப் பெற்றார். பருவமடைந்த இவர்களை திருமணம் செய்து கொடுக்கத் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், வாரகப்புரி என்னும் ஊருக்கு வருமாறும் அங்கு எழுந்தருளியுள்ள வராஹமூர்த்தி மிகப்பெரிய வரப்பிரசாதி என்றும் காலவரிஷிக்குச் சொல்ல அவரும் இங்கு வந்து வராஹமூர்த்தியைக் குறித்து கடும் தவம் செய்தார். இவரின் தவத்தை மெச்சிய ஸ்ரீமந் நாராயணன் ஒரு பிரம்மச்சாரி வடிவில் வந்து இம்முனிவரிடம் வர, ரிஷி அவரிடம் தனது பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டினார். எம்பெருமானும் அதற்கு சம்மதித்து, தினம் ஒரு கன்னிகையாக 360 பெண்களையும் ஒரு வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கடைசி தினத்தில் 360 கன்னியர்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே பெண்ணாக்கி அவரை இடப்புறம் ஏற்றுக் கொண்டார். அவரே திருவாகிய மஹாலக்ஷ்மி. தனது இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டு வராஹ ரூபியாக சேவை சாதித்தார். இடது புறம் திருவை வைத்து எம்பெருமான் சேவை கொடுத்ததால், இந்த திருத்தலம், திரு இட எந்தை என்று மாறி, திருவிடவெந்தையாயிற்று, காலப்போக்கில் மருவி திருவடந்தை என்று ஆயிற்று.

இந்த வராஹ மூர்த்தியை மாமல்லபுரத்திலிருந்து அரிகேசரிவர்மன் என்னும் மன்னன் தினமும் வந்து வணங்கி சென்று கொண்டிருந்தான். இம்மன்னன் தன் பொருட்டு தினமும் 12 மைல் வந்து சேவித்துச்
செல்வதைக்கண்ட எம்பெருமான் இவனது கனவில் தோன்றி உனக்காக மாமல்லையில் எழுந்தருளுகிறேன் என்று சொல்லி பிராட்டியை வலப்பக்கத்தில்
வைத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் எழுந்தருளினார். அந்த கோவில் மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

ஆழ்வார்

Google Map

திருஇடவெந்தை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

திருஇடவெந்தை பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது

திருமங்கையாழ்வார் 13 பாசுரங்கள் பாடியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d