A Simple Devotee's Views
அம்ருதவல்லி தாயார் ஸமேத உலகளந்தபெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திரு ஊரகம் | |||
மூலவர் | உலகளந்த பெருமாள் | |||
உத்ஸவர் | பேரகத்தான் | |||
தாயார் | அமுதவல்லித் தாயார் / அமிர்தவல்லித் தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | மேற்கு | |||
பாசுரங்கள் | 6 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 4 திருமழிசையாழ்வார் 2 | |||
தொலைபேசி | +91 94435 97107, +91 98943 88279 |
தொண்டை நாட்டு திருப்பதிகள் பற்றிய ஒரு சிறு முன்னுரைக்கு இங்கே செல்லவும், நன்றி
கோவில் பற்றி
கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளேயே உள்ளது.
காரகம், நீரகம், ஊரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச எம்பெருமான்களும் சேர்ந்து காஞ்சிபுரம், உலகளந்த பெருமாள் கோவிலில் எழுந்தருளி உள்ளனர். காரகம், நீரகம், கார்வானம் என்ற மூன்று திவ்யதேச பெருமான்களும் ஊரக திவ்யதேச எம்பெருமானான உலகளந்த பெருமாளின் பெருமை, திருகுணங்களுக்கு விளக்கமும் உருவமும் கொடுக்கிறார்கள்.
நீர்மை என்னும் எளிய திருக்குணத்தை திருநீரகப் பெருமாளிடம் காண்கிறோம். அதே எளிமை திருக்குணத்துடன் ஏழை அந்தணராக வாமனனாக அவதரித்து த்ரிவிக்ரமனாக உருவெடுத்த திருஊரகப் பெருமானிடம் சேவிக்கிறோம்.
நீரைக்கொடுக்கும் மேகத்தை போன்ற கருணையை, காரக பெருமானிடம் சேவிக்கின்றோம். மேகம், யாருக்கு, எப்பொழுது, எங்கே என்றல்லாம் கேட்காமல் மழை பொழிவதைப் போல், திருக்காரக எம்பெருமானான கருணாகர பெருமாள் கருணை மழையை எல்லோருக்கும் அளிக்கிறார். இதே போல் திருக்குணத்தை ஊரக எம்பெருமானான உலகளந்த பெருமாளிடம் நாம் பார்க்கிறோம். யார், எங்கே, சரணாகதி கேட்டாரா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல் எல்லோருடைய தலைகளிலும் த்ரிவிக்ரமனாக தன்னுடைய திருவடியைக்கொண்டு தீண்டி எல்லோருக்கும் மோக்ஷம் அளித்ததை, அந்த எம்பெருமானின் தனிப்பெருமையாக நமது ஆச்சாரியார்கள போற்றி உள்ளனர்.
கதாபுநச்சங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குச வஜ்ர லாஞ்சநம் |
த்ரிவிக்ரம த்வச்சரணாம்புஜத்வயம்
மதீய மூர்த்தாநமலங்கரிஷ்யதி
இதன் அர்த்தம் “த்ரிவிக்ரமா! மங்களகரமான ஸுதர்சன சக்கரம், கல்பக வ்ருக்ஷம், தாமரை போன்ற அடையாளங்களை உடைய உனது திருவடித்தாமரைகள் எப்போழுது என் தலையை அலங்கரிக்கப் போகிறது”.
கார்வானம் என்பது மேகம் இருக்கும் வானத்தைக் குறிப்பது. எங்கும் பரந்து விரிந்து உள்ள திருமால், விஸ்வம், விஷ்ணு போன்ற திருநாமங்கள் மூலம் வானத்தை தன்னுள்ளே கொண்டுள்ளார். த்ரிவிக்ரமன் இந்த மண்ணுலகத்தை ஒரு திருவடியாலும், வானத்தை இன்னொரு திருவடி மூலம் அளந்ததையும் ஊரக எம்பெருமானிடம் பார்த்து உள்ளோம்.
ஆக நீரகம், காரகம், கார்வானம், ஊரகம் என்ற இந்த நான்கு திவ்யதேசங்களும் சேர்ந்து இருப்பது நமக்கு எளிமை, கருணை, எங்கும், எல்லோருக்கும் என்று பாரபட்சம் இன்றி காக்கும் திருமாலின் திருக்குணங்களை நமக்கு தெரிவிக்கவே என்று கொள்ளலாம்.
பாதாள லோகத்தில் இருந்த மகாபலிக்கு உலகளந்த திருக்கோலத்தை எம்பெருமான் ஆதிசேஷனாகவே காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும். இங்கு எம்பெருமான் சர்ப்ப ரூபமாகவே காட்சியளிக்கிறார். சன்னதிக்கு எதிரில் உள்ள கொடிமரத்திற்கு அருகே இந்த சர்ப்ப ரூபம் உள்ளது. உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். இந்த ஆதிசேஷனுக்கு பாயசம் (திருக்கண்ணமுது) விஷேசம்.
இங்கு உலகளந்த பெருமாள், தனது வலது திருப்பாதத்தினை பூமியில் அழுத்தி வைத்துக்கொண்டு, இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித் தூக்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு
விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி மீதி ஓரடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.
ஸ்தல வரலாறு
வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் மூன்றடி மண் வேண்டிய எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்திற்கு அனுப்பினான். பாதாளம் சென்ற மாகபலிக்கு, உலகளந்த த்ரிவிக்ரமனின் நின்ற திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லையே, என்று வருந்தி, அந்த அவதார தரிசனத்தை எம்பெருமானிடம் காட்டி அருள வேண்டும் என்று பாதாள லோகத்திலேயே தவமிருக்க, அந்த தவத்திற்கு பலனாக இந்த காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம்,
ஆழ்வார்
ஊரகம், பேரகம் இரண்டும் சேர்ந்து ஒரு திவ்ய தேசம் தான் “மதில் கச்சி யூரகமே பேரகமே” என்பது
சிறிய திருமடலில் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்.
நம்மாழ்வாரின் ” நின்றவாறும் இருந்தாவறும் கிடந்தவாறும் ” (திருவாய்மொழி, 5.10.6) என்ற பாசுரம் இந்த திவ்யதேசத்திற்கு இல்லை. நம்பிள்ளை என்ற ஆச்சாரியார் ஈடு என்ற விளக்கத்தில், நின்றவாறும் என்பதற்கு திருவூரகத்தில் நின்றபடி என்று சொல்லி உள்ளார் என்பதை படித்து ரசிக்கலாம்.
ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்று ஒரே இடத்தில இன்று இருக்கும் நான்கு திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் ஒரே பாசுரத்தில் (8) மங்களாசாசனம் செய்துள்ளார்.
Google Map
திரு ஊரகம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திரு ஊரகம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம் சொல்வது