A Simple Devotee's Views
வைகுண்டவல்லித்தாயார் ஸமேத வைகுண்டநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவைகுந்தவிண்ணகரம் | |||
மூலவர் | திருவைகுந்தநாதன் / தாமரைக்கண்ணுடைய பிரான் | |||
உத்ஸவர் | வைகுந்தநாதன் | |||
தாயார் | வைகுந்தவல்லி (தனிக்கோவில் நாச்சியார்) | |||
திருக்கோலம் | வீற்று இருந்த திருக்கோலம் | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 4364 275 478 |
திருநாங்கூர் பற்றி இங்கே காணலாம்.
கோவில் பற்றி
பரமபதத்திற்குச் சமமான ஸ்தலம். இந்த உலகத்தில் இருக்கும்போதே பரமபதநாதனை தரிசிக்க வாய்ப்பு நல்கும் திவ்யதேசம்.
108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :
விண்ணகரம் என்பது பரமபதம் அல்லது வைகுந்தத்தை குறிப்பது. இந்த விண்ணகரம் மட்டும் வைகுந்த விண்ணகரம் என்று வைகுந்தத்தை இரண்டு வார்த்தைகளாலும் குறிக்கின்றது. இதற்கு காரணம் இங்கு எழுந்தருளி உள்ள எம்பெருமான் பரமபதத்தில் இருந்து வந்தவன்.
மூலவர் வைகுந்தநாதன் தாமரை பீடத்தின் மீது வலது திருகாலினை மடக்கி வைத்து, இடது திருகாலினை கீழே தொங்கவிட்டு, இடது திருக்கரம் அனந்தாழ்வான் மீதும், வலது திருக்கரம் வலது திருகாலின் மீதும், பின் இரண்டு கரங்களில் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிக்கிறார். ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலம். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வைகுந்தவல்லி தாயாரும் காட்சி கொடுக்கிறார்கள்.
ஸ்தல வரலாறு
வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன்
எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் அங்குள்ளது போலவே, இங்கும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்து அருளி உள்ளான்.
ஹிம்சகன் என்ற கொடிய அரக்கனைத் திருத்துவதற்காக எம்பெருமான் இங்கு வரச் செய்து, இங்குள்ள திருக்குளத்தின் நீரை பருகவைத்து, அவனுடைய கெட்ட எண்ணங்களை போக்கினார். பிறகு பல தர்ம காரியங்கள் செய்து நிறைய புண்ணியத்தை சம்பாதித்தான்.
ஸ்வேதகேது என்ற ஒரு அரசன் நல்ல வழியில் ஆட்சி செய்து, பின் தன் மனைவியுடன் காட்டில் தவம் புரிந்து வைகுந்தம் அடைந்தான். இருந்தாலும் அவனுக்கு பரமபத நாதன் தரிசனம் கிடைக்கவில்லை. நாரதரிடம் விசாரித்ததில், தாங்கள் பூமியில் இருக்கும்போது தான தர்மம் மற்றும் இறைவனுக்கு பூஜை செய்யவில்லை; அதனால் இந்த திருத்தலத்திற்கு சென்று தவம் செய்ய, எம்பெருமான் அவர்களுக்கு ஸ்ரீவைகுந்த தரிசனத்தை இங்கேயே காட்டி அருளினார்.
ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி உள்ளார். நரசிம்மன், இராமன், கண்ணன் என்று எல்லோராகவும் இந்த எம்பெருமானை காண்கிறார்.
Google Map
திருவைகுந்த விண்ணகரம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
திருவைகுந்த விண்ணகரம் பற்றி தினம் ஒரு திவ்யதேசம்